மருந்து என்றாலே ஒரு ஒவ்வாத தன்மை தானே பலருக்கும். அஜய் மட்டும் விதி விலக்கா என்ன? அதுவும் ஒவ்வொரு நேர உணவையும் திருவிழா தருணமாக கொண்டாடி மகிழ்ந்தவன் ஆகிற்றே. காலைக் காஃபியில் ஆரம்பித்து ஒவ்வொன்றும் ரசித்து, ருசித்து உண்பவன்.
ஆனாலும் மனைவிக்காக என்று மனதைக் கடினப்படுத்தி அந்த ஒரு வாரமும் அவள் சொன்னதெல்லாம் செய்தான் தான். அம்ருதாவும் அவனை எச்சரித்தே தான் ஒவ்வொன்றையும் செய்தாள்.
“அஜ்ஜூ, இது எல்லாம் டிரை தான் பண்றோம். நிரந்தர தீர்வு கிடையாது. முதல்ல உனக்கு குறைச்சிடலாம்னு ஒரு நம்பிக்கை வர்றதுக்கு தான். அதுக்கப்புறம் வேற என்ன சரியா வருதுன்னு பார்க்கணும்.
தலை வலிக்கும். டயர்ட்டா இருக்கும். மேனேஜ் பண்ணிப்பியா? ஆஃபிஸ் வேற போகனுமே” என்று கவலையாகக் கேட்டாள்.
“என்ன பண்றது? வேற வழி இல்லையே…ஏதாச்சும் செஞ்சு தான் ஆகனும். பரவாயில்லை நான் பார்த்துக்கிறேன். பழமா சாப்பிடறது கடி தான், அட்லீஸ்ட் வாழைப்பழம், பலாப்பழம்னு சாப்பிட்டாக் கூட பரவாயில்ல, கொஞ்சம் பசி தாங்கும்” என்று எப்போதும் போல் கலாய்க்க,
“அஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜூ” என்று அம்ருதாவால் கத்த மட்டுமே முடிந்தது.
“அதெல்லாம் இல்ல, பழங்கள்ல கூட தண்ணீப்பழம், மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு இந்த மாதிரி சாப்பிட்டா ரொம்ப நல்லது. வாழைப்பழம் எல்லாம் ஒரு ரெண்டு நாள் கழிச்சு சாப்பிடலாம். அன்னிக்கு வெறும் வாழைப்பழம் மட்டும் தான் சாப்பிடனும்” என்று கிளிப்பிள்ளைக்குக் கூறுவது போல் பாடம் படித்தாள்.
“சரி வை, தின்னு தொலையுறேன். ஏன்டி நாள் முழுசும் எப்டி வெறும் பழமா சாப்பிட முடியும்?” என்று வேறு கேட்டு வைத்தான்.
ஆர்த்திக்கு மட்டுமே வீட்டில் சமையல் நடந்தது அந்த ஒரு வாரமும். அஜய் எழும் முன்னரே மகளுக்கு ஏற்ற எளிதான உணவுகளை சமைத்து எடுத்து வைத்து சமையலறை கூட சுத்தம் செய்து விடுவாள் அம்ருதா. பின்னே, வாசனை கூட நாசியில் ஏறி பசியைத் தூண்டுமே.
கணவனோடு சேர்த்து, அவனுக்கு என்ன கொடுத்தாளோ அதையே தான் அம்ருதாவும் சாப்பிட, அஜய் கூட சொல்லிப் பார்த்து ஓய்ந்து விட்டான்.
“அம்மு, நீ எப்பவும் போல என்ன வேணுமோ செஞ்சு சாப்பிடு. எனக்காக நீ ஏன் பட்டினி கிடக்குற?”
“பரவாயில்ல அஜ்ஜூ. ஒரு வாரம் தானே ஒன்னும் ஆகாது. அதோட அப்பப்ப இப்படி இருந்தா தான் உடம்புக்கும் நல்லது. வயிறு சுத்தமாகும். பசின்னா என்னன்னு தெரியும்”
“அது சரி, நீ ஏற்கனவே கரெக்ட் வெயிட்ல தான் இருக்க…என் கூட சேர்ந்து எல்லாம் பண்ணேன்னா அப்புறம் பாதியா கரைஞ்சு போயிடப் போற. தேடி தான் கண்டு பிடிக்கணும். ஆருக்கு எப்படியும் சமைக்கிற அதையே சேர்த்து செஞ்சிட வேண்டியது தானே”
“ம்ப்ச் விடு அஜ்ஜூ…என்னையப் பத்தி கவலைப்படாதே. இப்ப இந்த மாதிரி சொல்லுவ. அப்புறம் பசில கடுப்பாகி எனக்கு பழமா கொடுத்துட்டு, அம்மாவும் பொண்ணும் நல்லா மொக்குறீங்க அப்டின்னு பிளேட்ட திருப்பிடுவ.
நீங்க சாப்பிட்டத பார்த்துத் தான் நான் டெம்ப்ட் ஆகிட்டேன்னு கதைய விடுவ. போதும், ஏற்கனவே எல்லாரும் நான் தான் உன்னைய கெடுத்து வைச்சிருக்கேன்னு சொல்றாங்க. இது வேறயா…” என்ற படபடத்தவளை ஆழ்ந்து பார்த்தான்.
“என்ன பார்வை வேண்டிக் கிடக்கு” என்று அதற்கும் சலித்தாள் மனைவி.
“இல்லை, இப்ப எல்லாம் நீ என்கிட்ட எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழற அம்மு”
“ஏன் எரிஞ்சு விழறேன்னு உனக்குத் தெரியாதா?”
அம்ருதாவின் அருகில் அமர்ந்து, அவள் கையில் வைத்திருந்த பழங்கள், கத்தி எல்லாவற்றையும் வாங்கி உணவு மேசையில் வைத்தவன், அவள் கைகளைப் பிடித்துக் கொண்டவன்,
“லுக் அட் மீ அம்மு” என்க, பிடிவாதமாக அவன் புறம் திரும்பாமல் இருந்தாள்.
“வாட் இஸ் ஈட்டிங் யூ? இந்த மூஞ்சில சிரிப்பைப் பார்த்தே பல வருசம் ஆகிடுச்சு”
“ஆமா, இப்ப இருக்கிற நிலைமைக்கு சிரிப்பு ஒன்னு தான் குறையா இருக்கு”
“எஸ் டார்லிங், கொஞ்சமா சிரிச்சா தான் உன் மூஞ்சி பாக்குற மாதிரி இருக்கும்”
இப்போது அவன் புறம் திரும்பி, அவனை நன்றாக முறைத்தாள்.
“அப்படி ஒன்னும் நீ கஷ்டப்பட்டு எம்மூஞ்ச பார்க்க வேண்டாம். அப்புறம் எதுக்கு லுக் அட் மீன்னு வேற சொல்ற?”
“ஹாஹா, இதுக்கு தான். இப்பப் பாரு, நான் ஒழுங்கா சொன்னா நீ முறுக்கிட்டு போற, கலாய்ச்சா தான் நான் எதிர்பார்க்குற ரியாக்ஷன் வருது” என்று கண் சிமிட்டினான்.
“ப்ளீஸ் அஜ்ஜூ. என்னால முடியல, மண்டை வெடிச்சிரும் போல இருக்கு, அதுவும் நீ எனக்கு தெரியாம வேற அதையும் இதையும் பண்ணி வைக்கிறத பார்த்தா எனக்கு பிபி ஏறி நான் போய் சேர்ந்துடுவேன் போல”
“ம்ப்ச், இந்த விஷயத்துக்கு இவ்ளோ டென்ஷன் தேவையான்னு மொதல்ல அமைதியா யோசி அம்மு”
“எனக்கு தேவை தான் அஜ்ஜூ. எனக்கு ரொம்ப கவலையா இருக்கு…உன்னைப் பத்தி, நம்மளப் பத்தி…ஆரு பத்தி… ஏன் நீ மட்டும் டென்ஷனா இல்லையா?”
“நான் டென்ஷனா இருக்குறேன், இல்லைன்றது வேற விஷயம் அம்மு. அதை நம்மள எவ்ளோ அஃபெக்ட் பண்ண விடுறேன் அப்டின்றது தான் முக்கியம். நீ எவ்ளோ ரிலாக்ஸ்டா, நார்மலா இருக்கியோ அது தான் நான் எப்படி இருப்பேன்றது தீர்மானிக்கிற விஷயம். அதிக பட்சம் என்னாகிட போகுது நீயே சொல்லு?”
“போய் சேர்ந்துட்டா பரவா இல்லையா?”
“அது தான் விதின்னா என்ன பண்ண முடியும்? எல்லாரும் ஒரு நாள் போக வேண்டியது தானே? ஆனால் நான் போய் சேர்ந்துட்டாலும், நீ ராணி மாதிரி இருப்ப அம்மு டார்லிங்.
பக்காவா இன்சூரன்ஸ், இன்வெஸ்ட்மென்ட், ஏன் உயில் கூட ரெடி. ஒரு குறை இருக்காது உனக்கு. இதெல்லாம் கூட ஒரு சேஃப்டிக்குத் தான்.
நீ இப்ப சுயமா உன் கால்ல தான் நிக்குற. என்னை நம்பி நீ இல்லை. ஆருவையும் என்னைய விட நீ நல்லா வளர்த்திடுவ. சோ, உனக்கு எந்தக் கவலையும் வேண்டாம்.
இப்படி நடந்திடுமோன்னு அதையே நினைச்சிட்டு இருக்கிற ஒவ்வொரு நிமிஷத்தையும் நரகம் ஆக்கிக்கனுமா? நீயே சொல்லு”
“பணம் மட்டும் இருந்தா போதுமா? நீ வேண்டாமா எனக்கு? இப்படி எல்லாம் பேச உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா அஜ்ஜூ” என்றவள் படக்கென அவனிடம் இருந்து கைகளை உருவ முயன்றாள்.
“ம்ப்ச், என்ன அவசரம் உனக்கு?” என்றவன், இந்த முறை அழுத்தமாகவே பிடித்துக் கொண்டான்.
“நடைமுறைய பத்தி யோசி அம்மு. என்ன ஆனாலும் வாழ்க்கை அது பாட்டுக்கு போய்ட்டு தான் இருக்கும். நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது. இன்னிக்கு மட்டும் தான் நிஜம். அதுல மனசுக்கு ஏத்த மாதிரி வாழ்ந்துட்டு போவோமே.
வாயைக் கட்டி, வயித்தக் கட்டி நூறு வருஷம் நல்லா இருந்து நான் என்ன சாதிக்கப் போறேன்? இல்லை எல்லாம் சரியா இருக்குறவங்க கடைசி வரைக்கும் ஆரோக்கியமா சந்தோஷமா தான் இருக்குறாங்களா என்ன?. நமக்குன்னு என்ன இருக்கோ அது தான் நடக்கும். நம்ம மூனாவது மனுஷங்க மாதிரி அதை வெளில இருந்து வேடிக்கை பார்த்து கடந்து போக கத்துக்கிட்டோம்னா வாழ்க்கை நிம்மதியா இருக்கும்.”
“என்னால முடியல அஜ்ஜூ. இந்த சித்தாந்தம் எல்லாம் எனக்கு ஒத்து வராது. நம்மை மீறி நடக்குற விசயங்கள் வேற, அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது. ஆனா அதுக்காக யாராச்சும் கண்ணைத் தெறந்துட்டே குழில விழுவாங்களா?
இறப்புன்றது கூட ஒரு விடுதலை அஜ்ஜூ. அது எல்லாருக்கும் ஈசியா நினைச்ச மாதிரி கிடைச்சிடாது. உன் வழிக்கே வர்றேன்…செத்துட்டா பரவாயில்லை..ஆனா காலம் பூரா படுக்கைல கிடக்குற மாதிரி ஒரு நிலைமைல கொண்டு நிறுத்திட்டா என்ன பண்ணுவ அஜ்ஜூ? அதுக்கும் இன்சூரன்ஸ் பிளான் வைச்சிருக்கியா?” என்று காட்டமாக வினவ,
“ஹ்ம்ம்ம், பாயின்ட்…ஒரு வேளை அப்படி ஆச்சுன்னா என்ன அம்மு பண்ணுவ?” என்று அப்பாவியாக அவளிடமே கேள்வியைத் திருப்பிப் போட்டான்.
“என்ன பண்ணுவேன்? எங்கயாச்சும் கேர் ஹோம்ல போய் சேர்த்து விட்டுட்டு போய் கிட்டே இருப்பேன். வேற என்ன பண்ண முடியும்? நீ தானே சொன்ன…என்ன ஆனாலும் வாழ்க்கை அது பாட்டுக்கு போகும்னு?” என்றவள் ஆராய்ச்சியாக கணவனைப் பார்த்தாள்.
எப்படியாவது அவன் பார்வையில் மாற்றம் வராதா என்ற நப்பாசையில், காயப்படுத்தும் என்று தெரிந்தே வார்த்தைகளை விட்டாள்.
ம்ஹூம். அவள் எதிர்பார்த்த எதிர்வினை தான் ஒன்றும் இல்லை. காயப்பட்டவனோ, அதை வெளிப்படுத்தாமல்,
“அடிப்பாவி, ஒரு குடும்ப குத்து விளக்கு செய்ற வேலையாடி இது. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்னு அத்தை உனக்கு சொல்லிக் கொடுக்கலையா” என்று விளையாட்டாகவே கேட்டான்.
“ம்ப்ச், வேற வேலை இல்லையா எங்களுக்கு. முன்னாடி குடிகாரக் கணவர்களைத் திருத்துறது தான் பொண்ணுங்க கடமைன்னு போச்சு. இப்ப ஃபுட்டி, சோசியல் மீடியா அடிக்ஷன், வீடியோ கேம் அடிக்சன்னு டிரெண்ட் மாத்தி வைச்சாச்சு. சோ குடும்ப குத்து விளக்குன்னா, நல்லா நாலு குத்து குத்துறவங்கன்னு நாங்களும் மாற வேண்டியது தான்” என்று உதட்டைச் சுழிக்க, அஜய் கலகலவென்று நகைத்தான்.
“வாவ், அம்மு. சும்மா பின்னி பெடல் எடுக்குற. என் கூட சேர்ந்து நல்லா டெவலப் ஆகிட்ட…உன்னையப் போய் உங்க வீட்ல அமைதின்னு சொல்றாங்க”
“பின்ன, உன் கூட குப்பை கொட்ட இந்த திறமை கூட இல்லைன்னா எப்புடி?” என்று தலையில் அடித்துக் கொண்டவள்,
“அஜ்ஜூ, எப்பவும் மாதிரி இப்பவும் டைவர்ட் பண்ணிட்ட. சீக்கிரம் கிளம்பு. காலங்காத்தால எதுக்கு வெட்டிப் பேச்சு” என்று அவனைக் கிளப்ப முயன்றாள்.
அவளை ஒரு பக்கமாக தன் மடியில் அமர்த்திக் கொண்டவன்,
“எல்லாம் புரியுதுடா. உன்னைய சியர் அப் பண்ண தான் அப்டி பேசினேன். பீ ஹாப்பி. இத பாசிட்டிவ்வா அப்ரோச் பண்ணா பெட்டர்னு தோனுது. நான் உனக்காக தான் எல்லாம் யோசிக்கிறேன். அதர் வைஸ் ஐ டோண்ட் கேர். அது உனக்கே தெரியும். நீ என் கூட இருந்தாவே போதும். நீ இப்படி என்னைய ஒதுக்கி வைக்காத” என்க,
“நான் என்ன உன்னைய ஒதுக்கி வைக்கிறேன்?” என்று புரியாமல் கேட்டாள்.
“நான் என்ன சொல்றேன்னு உனக்கே தெரியும் அம்மு. நீ எந்நேரமும் என்னைய ஒரு நோயாளி மாதிரி தான் நடத்துற.
கடைசியா எப்ப நமக்கு நடுவில ரிலாக்ஸ்டா ஒரு கான்வர்சேஷன் இருந்துச்சு சொல்லு?
எங்க ஆரம்பிச்சாலும், இந்த டாப்பிக்ல வந்து தான் முடியுது. உன் கிட்ட என்னால எதையும் கேட்கக் கூட பயமா இருக்கு. லெட்ஸ் பீ அ நார்மல் கப்பிள் அம்மு. அது மட்டும் தான் சொல்றேன். எனக்காக நீ உன்னைய வருத்திக்கிறது பார்த்து எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று சற்று தீவிரமாகவே பேசினான்.
“என்னோட நிலைமை உனக்கு புரியலையா அஜ்ஜூ. ஐ ஆம் டெரிஃபைட். பயம்…பயம்…பயம் மட்டும் தான் இருக்கு இப்போ. அப்புறம் கவலை. இது ரெண்டு தவிர எனக்கு வேற ஏதாவது உணர்ச்சி இருக்கான்னு எனக்கே தெரியலை.
என்னையப் பொருத்த வரைக்கும் நமக்கு, நம்ம நெருங்கின சொந்ததுக்கு நம்ம தர்ற பெரிய பொக்கிஷம் நல்ல உடல் நலம் மட்டும் தான். அதுக்கு நீ ஒரு வழி பண்ற வரைக்கும் நான் இப்படி பைத்தியம் பிடிச்ச மாதிரி தான் இருப்பேன்.
நீ என்னையக் கூப்பிட்டு சிரி, சந்தோஷமா இருன்னு சொன்னா எல்லாம் எதுவும் மாறாது” என்று அவள் நிலையை தெளிவாகவே கூறி விட்டாள்.
மனைவியை கையணைப்பில் வைத்திருந்தவன், எதுவும் பேசவில்லை. அவள் கன்னத்தில் முத்தமிட்டு, முதுகில் தட்டிக் கொடுத்தவன்,
வாடிய முகத்துடன் செல்லும் கணவனைப் பார்க்க, அம்ருதாவுக்கு கண்ணீர் பொங்கியது. அவளுக்கு மட்டும் ஏக்கம் இல்லையா என்ன? எல்லாவற்றையும் பயம் என்னும் மேகம் மறைத்து அவளை மிகுந்த மன அழுத்தத்திற்குள்ளாக்கியது. இப்படி எல்லாம் பேச வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை. பேசியதும் அவனை விட அதிகமாக வருந்துவதும் அவள் தான்.
அஜய்க்கும் மனைவியை தெரியுமே. அவள் முயற்சி புரியாமல் இல்லை. ஆனால்…இது இயலாமை என்பது அவளுக்குப் புரிய வேண்டுமே.
சரி, அவள் சொல்வதை செய்து விட்டாலாவது மனைவி முகம் மலர்கிறதா பார்க்கலாம் என்ற முடிவுடன், பல்லைக் கடித்துக் கொண்டு தான் அந்த வாரத்தைக் கடத்தினான்.
பசிக்கும் போதெல்லாம் தண்ணீர் மட்டும் தான் குடித்தான். அவள் தந்த உணவுப் பட்டியலைத் தவிர வேறு எதையும் திரும்பிப் பார்க்கவில்லை. தினமுமே தீரா தலைவலி. அப்படி ஒரு சோர்வு வேறு. வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
அம்ருதாவுக்கும் அதே நிலைமை தான். அதுவும் ஒவ்வொரு நாளும் ‘பேக்’ செய்யும் போது, இன்னும் கடினமாக இருந்தாலும், கணவனுக்காக வைராக்கியமாக இருந்தாள்.
அவளைப் பார்க்க பார்க்க, அஜய்க்கு குற்ற உணர்வு தான் அதிகரித்ததே தவிர, அது ஒன்றும் ஊக்கம் தரவில்லை. எப்படியோ இருவரது கடின முயற்சியின் பலனாக, அந்த வார இறுதியில் கிட்டத்தட்ட நாலரை கிலோ எடை குறைந்திருந்தான். அவனுக்கு இதுவே சாதனை தான்.
அப்பொழுது தான் அம்ருதாவின் முகத்தில் சிரிப்பே வந்தது. அந்த சிரிப்பு எது வரை நீடித்தது என்றால், அஜய் அவளிடம்,
“அம்மு டார்லிங், இது ஒரு பிக் மைல் ஸ்டோன். இத நாம செலிபிரேட் பண்ணியே ஆகனும். ஒரு வாரமா சாதத்தை கண்ணுல பார்க்காம, இருட்டிட்டு வருது. இன்னிக்கி சண்டே லஞ்ச்சுக்கு மட்டன் பிரியாணி பண்றியா? நான் பிரியாணி சாப்பிட்டு மூனு மாசம் கிட்ட இருக்கும்ல ப்ளீஸ்” என்று கேட்கும் வரை மட்டுமே.
அவனை வருத்தமாகப் பார்த்தவள்,
“அஜ்ஜூ, நீ என்கிட்ட கேட்டு நான் நோ சொல்றது எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு உனக்குப் புரியுதா இல்லையா?” என்றாள்.
“ம்ப்ச், ஒரு நாள் தானே அம்மு?”
“அதான்….ஒரு நாள் தான். ஒரு வாரம் பட்ட கஷ்டம் ஒரு நாள்ல பிரயோஜனம் இல்லாம போயிடும். பிரியாணின்னு ஆரம்பிப்ப…அப்புறம் அதுக்கு ஒரு கிரேவி, சாப்பிட்டப்புறம் இனிப்பா ஏதாவது வேணும்னு லிஸ்ட் பெருசா போகும்.
ஒரு வாட்டி சாப்பிட்டுட்டு திருப்பி கேட்குறப்போ, நீ சாப்பிட்டது போதும்…எழுந்திரின்னு நான் சொல்ல முடியுமா? அது உன்னை விட எனக்குத் தான் அஜ்ஜூ கஷ்டம். நீ என்னைய புரிஞ்சுக்கவே மாட்டியா?” என்க, அவன் எதுவும் பேசாமல் எழுந்து மாடிக்குச் சென்று விட்டான்.
வீட்டு மாடியில், புதிதாக தோட்டம் அமைத்திருந்தான். ஒரே இடத்தில் அமர்ந்து, அலைபேசியிலேயே நேரம் செலவழிக்காமல் வேறு பயனுள்ள வகையில் கொஞ்சம் உடலுழைப்பிற்கான வாய்ப்பாக இருக்கட்டும் என்று சில வாரங்களுக்கு முன்னர் ஆரம்பித்திருந்தான்.
அம்ருதாவிற்குப் பிடிக்கும் என்று ஒரு ஊஞ்சல் கட்டி, அதன் இரு பக்கமும் ஜாதி மல்லி கொடி படர வைத்திருந்தான். காய்ந்த இலைகளை எடுத்து, புதிதாக படர ஆரம்பித்த தளிர்களை கம்பியை சுற்றி கட்டி வைக்க ஆரம்பித்தான்.
சில நிமிடங்களிலேயே காலடித் தடம் கேட்க, கையில் மோருடன் நின்றிருந்தாள் அம்ருதா.
அதை வாங்கியவன் ஊஞ்சலில் அமர, கணவன் பக்கத்தில் அமர்ந்தவள்,
“கோவமா?” என்க,
“எனக்கு எதுக்கு கோவம்?” என்று பட்டென பதில் வந்தது.
“உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?”
“தெரியாது அம்மு. உனக்கு என்னையப் பத்தி தெரியலை”
“என்ன தெரியலை? எல்லாம் தெரியும்”
“தெரிஞ்சா, நீ என்னைய இப்டி ட்ரீட் பண்ண மாட்ட”
“எப்டி ட்ரீட் பண்றேன்?”
“அதான் அன்னிக்கே சொன்னேனே…ஒரு பேஷண்ட் மாதிரி…சில சமயம் குழந்தை மாதிரி. ஐ ஆம் யுவர் ஹஸ்பண்ட்…ட்ரீட் மீ லைக் ஒன். ட்ரீட் மீ லைக் அ மேன்.
எனக்கு புரியுது நீ என்னோட நல்லதுக்கு தான் சொல்ற அப்டின்னு. ஆனா ஒன்னு புரிஞ்சுக்கோ ஃபுட் இஸ் ஹைலி பெர்சனல் (உணவு ஒருவரது சொந்த விஷயம்). இவ்ளோ கஷ்டப்பட்டு உழைக்கிறதே இந்த ஒரு சாண் வயித்துக்கு தான். அதுக்கு இங்க வழி இல்லைன்றப்போ விரக்தியா தான் இருக்கு.
சுத்தி சுத்தி எங்க ஆரம்பிச்சாலும் இதுல வந்து நிக்கிறது எனக்கு மூச்சு முட்டுது அம்மு. வீட்டுக்கு வர்றதுக்கே வெறுப்பா இருக்கு. எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியல…நீ சொல்றதெல்லாம் என்னால முடிஞ்ச அளவு செய்றேன். ஆனால் என்னால முடியல.
உன் கிட்ட ஒவ்வொரு விஷயமும் கேட்குறதுக்கு முன்னாடி எனக்கு எவ்ளோ தயக்கமா இருக்கு தெரியுமா? நான் கேட்டு இல்லைன்னு சொல்றது உனக்குக் கஷ்டம்னு சொல்ற. ஆனா எந்த ஒரு விஷயத்தை வேணாம் பண்ணக் கூடாதுன்னு சொல்றீயோ, அதை தான் பண்ணனும்னு அப்படி ஒரு வெறி வருது. என்னைய என்ன பண்ண சொல்ற?”
அதற்கு பதிலளிக்கும் முன் ஆர்த்தி வந்து விட்டாள் பெற்றோரைத் தேடி.
“குட் மார்னிங் குட்டி, என்ன சீக்கிரம் எழுந்துட்ட? சன்டே தானேடா இன்னும் கொஞ்சம் தூங்க வேண்டியது தானே” என்றவன், மகளை மடியில் இருத்தி உச்சி முகர்ந்தான்.
“குட்மார்னிங் பா,வெளியே ஏதோ சத்தம் கேட்டுச்சு. அதான் எழுந்துட்டேன்” என்றவள், அம்ருதாவிடம்,
“மா, பசிக்குது. எனக்கு இன்னிக்கு பூரி பண்ணித் தர்றீங்களா? ரொம்ப நாள் ஆகிடுச்சு, இப்ப எல்லாம் ரொம்ப போரிங் ஃபுட் தான் தர்றீங்க” என்று குறை படித்தாள்.
“வா, கீழ போகலாம்” என்று மகளைக் கூட்டி செல்ல, அஜய் டம்ளரை அவள் கையில் கொடுத்து விட்டு, மீண்டும் ஜாதி மல்லிக் கொடியை கவனிக்கலானான்.
அங்கு வைத்திருந்த ரோஜா, மல்லிச் செடிகளுக்கும் உரம் வைத்து சீர் செய்தவன், எல்லாச் செடிகளுக்கும் நீர் பாய்ச்சி, சிறிது நேரம் மூச்சுப் பயிற்சி செய்து முடித்த போது கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்திருந்தது.
காற்றோட்டமாக, இளங்காலை வெயிலில் செடி கொடிகளுடன் நேரம் செலவிட்டது சற்று இதமான மன நிலையைத் தந்திருந்தது. மகள் உண்டு முடிக்கட்டும் என்று இன்னும் சிறிது நேரம் மேலேயே இருக்கலாம் என்று அமர்ந்து விட்டான்.
சற்று நேரத்தில் பசி வயிற்றைக் கிள்ள, அதற்கு மேல் தாமதிக்காமல் கீழே வர, அம்ருதா சங்கடமாகப் பார்த்தாள்.
“பாப்பா சாப்பிட்டாளா? எனக்கு என்ன பிரேக்ஃபாஸ்ட் அம்மு? பசிக்கிது”
“ம்ம்ம், ஆரு சாப்டுட்டா. நீங்க ஆம்லெட் சாப்பிடுறீங்களா? இன்னிலேர்ந்து ‘பேலியோ (paleo)*’ டயட் டிரை பண்ணலாமா?. அரிசி, பருப்பு, தானிய வகைகள் அப்புறம் ரொம்ப பிராஸஸ் பண்ண ஐட்டம்ஸ் எல்லாம் தவிர்த்துட்டு, காய்கறி, பழங்கள், நட்ஸ், முட்டை, இறைச்சி, மீன் எல்லாம் சாப்பிடலாம்”
“அப்ப இன்னிக்கும் சோத்த கண்ணுல காண்பிக்க மாட்ட. சோறு, இட்லி, தோசை எல்லாம் மறந்திட வேண்டியது தான்…சுத்தி வளைச்சு அது தானே சொல்ல வர்ற?”
வயிற்றுக்கு வஞ்சகம் இல்லாமல் உண்டு பழகியவன். அதுவும் காலை நேர உணவு கண்டிப்பாக தென்னிந்திய உணவு வகைகள் வேண்டும் என்று எதிர்பார்ப்பான். பசியும் பொறுக்க முடியவில்லை. இயல்புக்கு மாறாக எல்லாம் கோபமாகத் தான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது சில தினங்களாக.
முயன்று அதை அடக்கியவன்,
“சரி அதே பண்ணலாம். தள்ளு நானே பண்ணிக்கிறேன்” என்றவன், மடமடவென இரண்டு முட்டைகளை அடித்து, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, குடை மிளகாய், கொத்து மல்லி, கருவேப்பிலை எல்லாம் பொடியாக நறுக்கி, வதக்கி அடித்து வைத்த முட்டையில் கலந்து ஆம்லெட் செய்தான்.
அது வெந்து கொண்டிருக்கும் போதே ஆரஞ்சு பழங்களைப் பிழிந்து சாறெடுத்து அம்ருதா கையில் ஒரு கோப்பையைக் கொடுத்து தனக்கு ஒன்று எடுத்துக் கொண்டான்.
எல்லாவற்றையும் தயார் செய்து, அவன் உணவு மேசைக்கு வர, அவள் அடுப்பருகிலேயே நிற்க,
“வா, என்ன அங்கேயே நிக்குற? நீ சாப்பிட்டியா?” என்றான்.
“ம்ஹூம், இனிமே தான்”
“பரவாயில்லை வாடி, நான் ஒன்னும் உன் பூரிக்கிழங்கை பங்கு கேட்க மாட்டேன்” என்று விட்டு, ஆம்லெட்டை உள்ளே தள்ள ஆரம்பித்தான்.
அவள் நம்பாமல் மெதுவாக வந்து அமர, வேகமாக உண்டு முடித்தவன்,
“நான் கொஞ்சம் வெளில போய்ட்டு வரேன் அம்மு” என்று கிளம்பி விட்டான்.
எல்லாம் புதிதாக இருந்தது அம்ருதாவிற்கு. எங்கே போனாலும் அம்ருதா வேண்டும் அவனுக்கு. அவள் சாப்பிடும் வரை காத்திருப்பான். நன்றாக சமைக்கத் தெரிந்தாலும், அம்ருதாவிற்கு எல்லா உதவியும் செய்தாலும், அவள் கையால் உண்டால் தான் திருப்தி என்பான்.
இன்று எல்லாமே தலை கீழ். அவளுக்குப் புரிகிறது தான். பசி தான் பல நேரம் கோபமாக, எரிச்சலாக வெளி வருகிறது. அவளுக்கும் வேறு என்ன வழி இருக்கிறது. அடுத்து மதிய உணவுக்கு என்ன குண்டு வெடிக்குமோ என்று சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.
ஒவ்வொரு நாளும், மூன்று வேளையும், வீட்டில் என்ன சமைப்பது என்பது பல பெண்களின் சிந்தனை நேரத்தை சிறைப்படுத்தும் ஒரு விஷயம். அதுவும் வீட்டில் இருப்பவர்களுக்கு பல்வேறு உணவுக்கட்டுப்பாடுகள் இருந்தால் கேட்கவே வேண்டாம். அதுவே ஒரு முழு நேர வேலை ஆகி விடும். விருப்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், சம்பளம் இல்லாத, பாராட்டுகள் இல்லாத, குறைகள் மட்டுமே பூதக் கண்ணாடியில் பார்க்கப்படும் ஒரு வேலை. அம்ருதா மட்டும் அதிலிருந்து எங்கணம் தப்புவது?
வீட்டில் இருந்தால் ஏதாவது தேவை இல்லாத பேச்சு வரும் என்று வேகமாக வெளியில் வந்து விட்டவனுக்கு எங்கு செல்வது என்று கூட தெரியவில்லை. திருமணத்திற்குப் பின்னர் நண்பர்கள் கூட்டம் எல்லாம் திசைக்கொன்றாக சிதறி விட்டது. கிருபா மட்டுமே அருகில் இருக்கிறான். அவனை விடுமுறை நாட்களில் தொந்திரவு செய்வது போல் இருக்கும். அவன் மனைவி சந்திரவதனாவும் அதைப் பெரிதாக விரும்ப மாட்டாள்.
சில நிமிடங்கள் காரில் அமர்ந்து யோசித்தவன் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அமர்ந்து விட்டான்.
குறிப்புகள்:
*பேலியோ (paleolithic diet) : விவசாயம் கண்டுபிடிப்பதற்கு முந்தைய கற்காலத்தை, `பேலியோலித்திக்’ என்பார்கள். அப்போது சாப்பிட்டதைப் போல அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களைத் தவிர்த்து, நல்ல கொழுப்பு அடங்கிய முட்டை, மீன், இறைச்சி, விதைகள், கொட்டைகள், போன்றவற்றை உண்பதே பேலியோ டயட்.