மீனாட்சி உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஏதோ இரண்டு நாளில் வீடு திரும்பி விடுவாள் என்று இருந்த மணிமாறன், பிள்ளைகளுக்கு கொஞ்சம் பயம் பிடித்து கொண்டது. அடுத்தடுத்து பார்க்க வர, யாரையும் அண்ட விடவில்லை மீனாட்சி. சாலாவுடன் மட்டும் தான் பேச்சு வார்த்தை…
காலையில் நன்றாக இருந்தால், மதியத்திற்கு மேல் சுருண்டு விடுவாள். எதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை. சாலா தான் மதுரை பெரியாஸ்பத்திரிக்கு தூக்கி போகலாம் என்று யோசனை சொன்னது. எல்லா நவீன கருவிகளும் அங்கே வந்து விட்டதே…
“ சாலா… என்னைய எங்கையும் தூக்கி போகாத, நான் பிழைக்க மாட்டேன். என்னை வீட்டிலேயே போடுங்க. போற உசுரு சொந்த வீட்டுல போய் சேராட்டும்…” மீனாட்சி சோர்ந்து போய் பேச,
“ பைத்தியம் மாதிரி பேசாத. உனக்கு ஒன்னும் இல்லன்னு பெரிய டாக்டர் சொல்லிட்டாங்க…” சாலா ஆற்றுபடுத்த,
“எம் உடம்பு எனக்கு தெரியாதாடி… அரளி விதை சுருட்டி பிடிச்சு… சாகணும்ன்னு தான் குடிச்சேன். கல்யாணம் ஆன புதுசுல அடிச்சா கூட புரிதல் இல்லைன்னு சொல்லலாம். சம்மந்தம் பண்ற வயசுல அடி வாங்கி… முடியலை, என்னத்த நான் வாழ்ந்தேன். கட்டுன புருசனுக்கும், பெத்த புள்ளைக்கும் வேண்டாதவளா போய்ட்டேன். இனி வாழ்ந்து என்னத்துக்கு?…” மீனாட்சி அழுக, சாலாவும் உடன் சேர்ந்து அழுதாள்.
“அடியே கிறுக்கு புடிச்சவளே!… சின்னது தொட்டு இன்னுமும் நான் அழுதா கூட சேர்ந்து அழுகுற…” ஒளி மங்கும் முகத்தில் சின்ன சிரிப்பு.
மணிமாறன் மகன்கள் உடன் வந்தவர், சாலாவை நிறுத்தி அவள் கையில் கட்டு பணத்தை கொடுத்தார்.
“காட்டு பத்திரத்தை அடகு வச்சுட்டேன். எந்த ஆஸ்பத்திரிக்கு தூக்கி போயிம் காப்பாத்திபிடு தாயி…” மனுசன் குரல் உள்ளே போனது.
விரக்தியாக பார்த்தாள் சாலா. “உங்க திருப்திக்கு வேணா கொண்டு போங்க. ஆனா, காப்பாத்த முடியாது…” என்று பெரிய டாக்டர் சொல்லி விட்டார். ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் தூக்கி செல்கிறார்கள்.
அருண் கண்கள் கலங்க சாலாவை பார்த்து நின்றான்.
“எனக்கு இத சொல்லலாமா தெரியலை. நீ பத்து மாசம் கை குழந்தை, நாலு பல்லு எட்டி நிக்கும். அப்பவே ரொம்ப சேட்டை, தாய் பால் குடிக்கும் போது உங்கம்மாவ இரத்தம் வார அளவுக்கு கடிச்சு வச்சுருவ… இவனுக்கு தாய் பால நிப்பாட்டுன்னு நான் கத்துவேன். ஆனாலும், நீ பசியில அழுதா தாங்க மாட்டா அந்த பைத்தியக்காரி. பிள்ளை பசி தாங்காதுன்னு இரத்தம் வந்தாலும் உனக்கு பசியாத்துவா… இன்னைக்கு அவ பேச்சு உனக்கு கௌரவ குறைச்சலா இருக்கு…” மகனை எரிச்சலாக பார்த்தவள், கிளம்பி விட்டாள்.
எல்லாவற்றையும் முடித்து கொண்டு வெளியில் வர, தயாராக நின்றது ஆம்புலன்ஸ். அதை பார்த்ததும் சாலாக்கு மூச்சு அடைத்து போனது. என்னவோ பயம், அதில் ஏற பிடிக்க வில்லை. அந்த சத்தம் நெஞ்சை உலுக்கியது. சாலா அதில் ஏற வில்லை. யார் சொல்லியும் கேட்காமல் வீட்டுக்கு கிளம்பி விட்டாள்.
மீனாட்சிக்கு, அம்மாக்கு தேவையான உடை எடுத்து வர சென்றே விட்டாள். மணிமாறன், பாண்டியம்மாள், தந்தை முத்தையா ஆகியோர் தான் மீனாட்சி உடன் சென்றது.
சாலா வீடு வர, அவள் பெரிய மதினி உண்டு கொண்டு இருந்தாள். அதை பார்த்து சாலாக்கு கோபம் தான். ஒரு வார்த்தையும் அக்காவை பற்றி கேட்க வில்லையே. தற்போது சண்டை போடும் மன நிலை இல்லாமல் அறைக்கு சென்று விட்டாள். குளித்து கிளம்பியவள் தலையை கூட துவட்டும் எண்ணம் இல்லாமல் ஈர தலையோடு கட்டிலில் விழுந்தாள்.
அக்கா உயிர் பிழைக்க மாட்டாள் என்பதே அவள் மனதை அறுத்தது. இனி எல்லாம் கடவுள் கையில் தான். மேலே ஓடும் ஃபேனை பார்த்தவள் கண்களில் இருந்து இரு பக்கமும் கண்ணீர் வழிந்தது. இனி கிளம்ப வேண்டும்.
அண்ணன் திருக்குமரன் உடன் கிளம்பி விட்டாள். நல்ல மழை வெளுத்து வாங்கியது, ரோடு எல்லாம் சேரும், செகதி தான். கரண்ட் வேறு இல்லை, கும்மிருட்டும், ஆந்தை சத்தமும் அவளுக்கு நல்லதாகவே பட வில்லை. தனக்கு தெரிந்த தெய்வம் அத்தனைக்கும் வேண்டுதல் பறந்தது.
ராத்திரி ஒரு மணிக்கு தான் மழையில் நனைந்து கொண்டு அண்ணனும், தங்கச்சியும் வந்து சேர்ந்தார்கள். அவ்வளவு பெரிய மருத்துவமனையில் அவர்களை தேடி செல்ல, எங்கோ ஒரு மூலையில் வைத்து இருந்தார்கள்.
இவர்கள் இருவரும் வழி மாறிய குழந்தையை போல் தேடி செல்ல, பாண்டியம்மா வந்து கொண்டு இருந்தார்.
“அம்மா…” என்று ஒத்தை வார்த்தை தான்.
“ சாலா, அக்கா பேச்சு மூச்சு இல்லாம கிடக்கா. எம் பிள்ளை ஒத்த வார்த்தை பேசலை. நீ சொன்ன, இங்க கொண்டு வந்தா அக்கா பொழப்பான்னு… டாக்டரு கைய விரிச்சுட்டாரு, எம் பிள்ளை எனக்கு முந்தியே கண்ணை மூடுதே…” நெஞ்சில் அடித்து தாய் ஒரு பக்கம் அழுக,
ஏதோ ஒரு நம்பிக்கையில் ஓடி வந்த அண்ணனும், தங்கச்சியும் மூச்சே இல்லாமல் நின்று விட்டார்கள். முத்தையா ஒரு பக்கம் வாயில் துண்டை வைத்து அழுது கொண்டிருந்தார். மணிமாறன் நிலமை சொல்வதற்கு ஒன்றும் இல்லை. கண்ணில் மட்டும் தான் உயிர் இருந்தது.
இருவரும் உள்ளே சென்று பார்க்க, நாப்பது வயசு பெண், பத்து வயது பெண் போல சுருண்டு கிடந்தாள். நல்ல வளத்தி, உடல் எடை கொண்டவள் இந்த ஐந்து நாளில் மடங்கி போனாள்.
“மீனா…” மெல்ல அழைத்து பார்க்க, ஒரு சத்தமும் இல்லை.
திருக்குமரன் கண்களில் நீர் கொட்டியது. உடன் பிறந்த தங்கை கொஞ்சம், கொஞ்சமாக உயிரை விட்டு கொண்டு இருக்கிறாள். யாரோடு போராடி மீட்க…
மீனாக்கு பேச்சு மூச்சே இல்லை. ஏதேனும் ஒரு அற்புதம் நடந்து விடாதா… வாசலில் காவு கிடந்தார்கள். அடுத்த ஒரு மணி நேரத்தில் மீனாக்கு பக்கத்து பெட்டில் இருந்த ஒரு பெண் இறந்து வெளியில் கொண்டு வர, அங்கு அமர்ந்து இருந்தவர்களுக்கு நெஞ்சை அடைத்து கொண்டது.
இனி முடியாது, கத்தி அழ ஆரம்பித்தாள் விசாலாட்சி. யாரும் ஆறுதல் சொல்லும் நிலையில் இல்லை. அதிகாலை இரண்டு மணிக்கு மீனாட்சிக்கு விழிப்பு தட்ட, ஒரே பரபரப்பு தான். கண் விழித்தாள், ஏதோ ரெண்டு வார்த்தை பேசினாள்.
எல்லோரும் நம்பிக்கையாக பார்க்க, டாக்டரிடம் நல்ல பதில் ஒன்றும் வரவில்லை. அணைய போகும் விளக்கின் பிரகாசம் போல… மீனாட்சியை சுற்றி இருக்கும் வயர்களை எல்லாம் எடுத்தார்கள். முத்து போல முழித்து பார்த்தாள்.
“மாமா… சாலா, மாமனை எங்கடி?…” மீனாட்சி முனங்கினாள். இப்போது டாக்டர் உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.
“அவங்க வீட்டுகாரர் யாருங்க. நீங்க அவங்க கூடவே இருங்க…” நர்ஸ் சொல்லி சென்றார்.
மணிமாறன் உள்ளே சென்றார். இத்தனை ஆண்டுகள் உடன் வாழ்ந்தும் காட்டாத அன்பை, இன்று கண்களில் கண்ணீராக வெளி படுத்தினார்.
“மீனா… என்னை ஒத்தையில விட்டு போயிடாத. உம் மாமனை உனக்கு தெரியாதா… நீ சொல்றத எல்லாம் கேக்குறேன். வந்துடு மீனா, சின்னவன் நீ இல்லாம இருக்க மாட்டான் தெரியும் தான… எங்க மூணு பேரையும் அனாதையா விட்டுடாத…” மனைவியின் கையை கண்ணில் ஒட்டி கொண்டு கதறி அழ,
கெடா மீசையும், வெள்ளை வேட்டியுமா திரியிற இந்த மனுசன், இம்புட்டு பாசத்தை எங்க வச்சு இருந்தாரு… பார்த்து நின்றாள் விசாலாட்சி.
“மாமா… நான் இனி அம்புட்டு தான். எம் பிள்ளைகளை விட்டுடாத. எனக்கு கொடுப்பணை இல்லை போல… மூச்சு விட முடியலை மாமா…” திணறி தான் மீனாட்சி பேசினாள்.
காலை ஆறு மணி வரை ஏதோ திணறி கூட பேசி கொண்டிருந்தாள். சாலாக்கு அதிர்ச்சி, ஏதோ நன்றாகி விடுபவள் போல விட்டு விட்டு பேசினாள். அங்கிருக்கும் மருத்துவர்களுக்கு தெரியும் நிலவரம். ஒன்றும் சொல்லாமல் ஒதுங்கி நின்றார்கள். அருண் குமார், பிரபாகரன் இருவரும் தாயை காண வந்தார்கள்.
மீனாட்சி மூச்சை பலமாக இழுத்து விட்டாள். மகன்கள் உள்ளே வந்தார்கள். தாயின் கண்களில் ஒரு பரவசம், கண்ணீர் பொங்கியது. பிள்ளைகளை தனியாக விட்டு போகும் பயம் தெரிந்தது. மகன்கள் அருகில் நெருங்கி வந்தார்கள்.
“அம்மா…” ஒற்றை சொல்லில் அழைத்து பார்க்க, சத்தமாக ஒரு விக்கல் வந்தது. அடுத்த நொடி அசைவு இல்லை, எல்லாம் முடிந்து விட்டது.
கத்தி, கதறி அழுது புரண்டார்கள். இந்த நொடி வரை பேசி கொண்டு இருந்தவள், காற்றோடு போயாச்சு… அப்பா, மகன் மூவரும் கட்டி கொண்டு அழுது கதறினார்கள்.
விசாலாட்சிக்கு அழுகை எல்லாம் வர வில்லை. அப்படியே மடங்கி அமர்ந்தாள். கண்கள் மீனாட்சி உடலையே பார்த்து கிடந்தது.
போஸ்மார்ட்டம் பண்ண வேண்டும். தமையன் தலை தாங்கி பிடிக்க, கணவன் காலை பிடித்தார். சற்றும் நகர்த்த வில்லை, அவள் காலையே கட்டி அழுது கறைந்தார். அடுத்தடுத்து சொந்தங்கள் வந்து குவிந்தது. பிரபாகரன், சாலா மடியில் தான் மடங்கி போனான்.
நான்கு மணி போல உடலை தந்தார்கள். சாலா அருகில் கூட செல்ல வில்லை. யார் யாரோ வந்து பேசினார்கள். மீனாட்சி உடல் கணவன் ஊர் நோக்கி சென்றது. நெஞ்சை பிடித்தாள் சாலா. நேற்று உயிரோடு வந்தவள். இன்று வெறும் உடலாக ஊர் செல்கிறாள்.
பிரகாஷ் கிளம்பி கொண்டு இருந்தான். ஐந்து நாளாக மனைவி போனை எடுக்க வில்லை. என்னவோ பயம், தன் தப்பு தெரிந்து விட்டதோ… முதலில் மனைவியை காண வேண்டும். அப்போது தான் தாயிடம் இருந்து போன் வர, முதலில் அதிர்ந்தாலும், சின்ன ஆசுவாசம். தான் இன்னும் மாட்ட வில்லை. ஷாலினியை அழைத்து கொண்டு மதுரைக்கு புறப்பட்டான்.
மீனாட்சி சொன்ன வார்த்தை சாலாவின் நெஞ்சில் நிற்க, அக்கா வீட்டை தாண்டும் முன் வண்டியில் இருந்து இறங்கி கொண்டாள். இன்னும் மீனா உடல் வந்து சேர வில்லை. சரியாக உணவு, மாத்திரை எடுத்து கொள்ளாததால் பின் முதுகு வலியும், இடது காலும் சுருண்டு கொண்டது. கொஞ்சம் சாய்த்து தான் நடந்தாள். தலை பின்னி இரண்டு நாள் ஆனதால் இழுத்து கொண்டை போட்டு இருந்தாள். உந்தி உந்தி நடந்து அவளது சித்தப்பா பழனி சாமியிடம் சென்றாள்.
“சித்தப்பா… அக்காவ வீட்டுல வைக்க சொல்லுங்க. வண்டில இருந்து நேர சுடுகாடு கொண்டு போக போறாங்களாம். நீங்க கொஞ்சம் பேசுங்க சித்தப்பா… இருவது வருசம் செண்டு கட்டுன வீடு, ஒரு நாளும் படுத்து தூங்கல. ஒரு அரை மணி நேரம் அந்த புது வீட்டுல போட்டு தூக்குங்க சித்தப்பா…” அழுது கொண்டே சாலா சொல்ல.
“அட யாரும்மா நீ, சுத்தம் கூறு இல்லாம பேசுரையே… புது வீட்டுல மொத மொதல்ல பொணத்தவா இறக்கி வைக்க…” அவர் ஒரு அதட்டல் விட.
“ அதானே, எம் தம்பி கஷ்டப்பட்டு கட்டுன வீடு. அவ திமிரெடுத்து செத்தா, நாங்களா பொறுப்பு. நடு காட்டுல செத்தவளுக்கு வீடு ஒன்னு தான் கேடு…” என்றார் மணிமாறன் அக்கா கண்ணகி.
“இங்க பாரு மாமா… அவளலாம் இங்க தூக்கி வர கூடாது. தலை தாங்கி நின்னா வீடு விளங்காது. ரெண்டு ஆம்பிளை பிள்ளைக இருக்கு, நல்லா வாழ வேணாம். பொணத்த நடு வீட்டுல போடணுமாக்கும்” எறிந்து விழுந்தார் கண்ணகி.
வாயடைத்து போனாள் விசாலாட்சி. பொணமா?… யார் பொணம்?… மீனாட்சியா?. ஐயோ! மீனா நீ வாழ்ந்த வாழ்க்கை அம்புட்டு தானா…
பிரகாஷ் வந்து இறங்கியவன், பிள்ளைகள் அருகில் சென்று நின்று கொண்டான். ஷாலினியும் உடன் தான் இருந்தாள். சாலா பார்த்தாலும் எதுவும் கவனத்தில் கொள்ள வில்லை.
மருமகனை பார்த்து முத்தையா எழுந்து நின்றார். எந்த இடத்திலும் மருமகனுக்கு மரியாதை கொடுக்கணுமாம்… விரக்தியாக பார்த்தாள் விசாலாட்சி.
அழுகை சத்தம் பலமாக கேட்க, சாலா மனது அதிர்ந்தது. வந்து விட்டார்கள், எட்டி நடை போட்டு ரோடுக்கு போனாள். ரோட்டை ஒட்டி தான் வீடு. அவள் வளர்த்த மாடு, கன்று, ஆடு , கோழி எல்லாம் நிற்க. மீனாட்சி உடல் அங்கு நிற்க வில்லை. வெள்ளை நிற ஆம்புலன்ஸ் முன்னே வர, பின்னவே தாயின் கதறல் கேட்டது.
இருவது வருசம் வாழ்ந்த வீட்டில், இருவது நிமிடம் கூட நிறுத்தாமல் வண்டி வீட்டை கடந்தது. என்னவோ ஒரு ஆவேசம் விசாலாட்சிக்கு, வண்டியின் குறுக்கே போய் தடுக்க பார்க்க, யார் யாரோ கையை பிடித்து இழுத்து கொண்டு போனார்கள். அவர்கள் உறவினர் சத்தம் குடுத்தார்கள். தடுமாறியது ஆம்புலன்ஸ்,
“நிக்காதீங்க, போங்க போங்க… நேர சுடுகாடு தான். இங்க வைக்க கூடாது…” யாரோ சத்தம் குடுக்க, வண்டி கடந்து சென்றது.
“ஐயோ! மீனா…” கத்தி கதறி அழுதாள் சாலா. வீட்டிலிருந்த சொந்தங்கள் எல்லாம் சுடுகாடு நோக்கி செல்ல, அந்த ரோட்டிலே மடங்கி போனாள் பெண்.
மனைவி அருகில் வந்த பிரகாஷ், “சாலா, என்ன கோலம் இது… காலை நொண்டி அடிச்சு நீ ஓடனுமா, உன் தலையை பாரு. மொத எழுந்திரு ரோட்டுல உட்கார்ந்து இருக்க, என்ன சேலை இது… அது என்ன பொணத்து மேல கிடந்த பூ எல்லாம் உம் மேல… மொத நீ வா…” என்று கையை பிடித்து எழுப்ப.
மெல்ல எழுந்தவள், அவன் கையில் இருந்த தன் கையை எடுத்து விட்டு, வண்டி போன பாதையில் நடக்க தொடங்கினாள்.
ஒன்னாக உடன் வளர்ந்த உடன் பிறப்பு உயிரற்ற உடலாக முன்னே செல்லும் போது, கதறி அழுகாமல் ரோடு பார்த்து ஒதுங்கவா தோன்றும். தங்கையின் கணவன் என்று எத்தனை பார்த்தாள். அந்த எண்ணம் கூட இவன் மனதில் இல்லையே…
“ஷாலு, நீ பிள்ளைகளை பாரு. நான், சாலா கூட போறேன்…” பிரகாஷ் வேக எட்டுகளில் மனைவியை தொடர்ந்தான்.
சுடுகாடு போகும் பாதையில் இருக்கும் ஒத்தை புளிய மரத்தில் தான் மீனாட்சியை கிடத்தி இருந்தார்கள். பெண்கள் ஒரு பக்கம் ஒப்பாரி வைத்து கொண்டு இருக்க, ஓடி வந்தாள் சாலா. இனி என்று பார்க்க போறேன் இந்த முகத்தை… மீனாட்சியை கட்டி கொண்டு சாலா அழுக, பிரகாஷ் வந்து துணை நின்றான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆள் வந்து தூக்கி செல்ல, விடவே முடியவில்லை விசாலாட்சிக்கு. பிரகாஷ் தூக்கி தள்ளி நிறுத்த, திரும்பி பார்க்க கூடாது என்றாலும் திரும்பி தான் நின்றாள் சாலா. இனி என்றும் காண முடியாத அந்த உருவத்தை இமைக்காமல் கண்ணில் சேர்த்தாள்.
வீடு வந்தவள் தலையில் யாரோ நீரை ஊற்ற, மீனா சேலை ஒன்றை அணிந்து கொண்டாள். அக்கா படுத்து இருந்த அந்த அறைக்கே சென்று படுத்து கொண்டாள். புது வீடு காட்டுவதால், புழக்கம் எல்லாம் அந்த ஓட்டு வீட்டில் தான். புருசன், பிள்ளைகள் என்று எதையும் நினைக்காமல், கண் மூடி படுத்து கொண்டாள்.
சொந்தங்கள் யாரும் இழவு வீட்டில் இருக்க கூடாது என்று அவரவர் வீடு செல்ல, பிரகாஷ் பிள்ளைகளை அழைத்து கொண்டு திருச்சி சென்று விட்டான். சாலா வர மாட்டாள், அந்த சூழலில் தன் பிள்ளைகளை விட மனதில்லை.
மீனாட்சி பெற்றோருக்கு அங்கு இருக்க விருப்பமே இல்லை. தன் பிள்ளையே இல்லை , இனி என்ன ஒட்டு உறவு… அன்று விசேஷ வீட்டில் அழுது கொண்டு வெளியேறிய மீனாட்சியை, கணவனோ, பிள்ளைகளோ பின் தொடர்ந்து வந்தால் கூட நொடி நேர முடிவு மாறி இருக்கும். அவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டது, தான் யார் அவர்களுக்கு என்று எண்ணம் உதிக்க, எடுத்த முடிவு அலங்கோலம் தான்.
அரை மயக்கத்தில் கிடந்த சாலாவை, திருக்குமரன் எழுப்பி சென்று விட்டான். சந்தோசத்திலும், சோகத்திலும் கூடிய சொந்தங்கள் களைந்து சென்று விட, அப்பா, மகன்கள் மூவர் மட்டுமே அந்த வீட்டில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கிடந்தார்கள்.
உணவு மறந்து மூன்று நாள் ஆனது. இறந்ததை விசாரிக்க வரும் மக்கள் கூட இவர்கள் நலன் கேட்க வில்லை. தாய் இல்லா வீட்டின் நிலவரம் அறிய தொடங்கினார்கள்.