விசாரணை ஆரம்பிக்க பட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தார்கள். செத்து பிழைத்து இருக்கும் மகளை பார்ப்பதா அல்லது அவள் வாழ்வை மீட்பதா என்று தவித்து நின்றார்கள் சாலாவை பெத்தவர்கள்…
மகன் குடும்பத்தை காத்து நின்றவன், மருமகள் குடும்பம் உடையாமல் காத்தவள் யார் பக்கம் நிற்பது… எப்படியாயினும் மருமகள் பக்கம் அல்லவா நியாயம் உள்ளது. அதன் பொருட்டு எல்லோரும் சாலா பக்கம் தான்…
பிரகாஷ் கொலை செய்யும் அளவுக்கு செல்வான் என்று யாரும் நம்ப வில்லை. ஆனால், நடந்ததை அறிய காத்து நின்றார்கள்.
முதல் விசாரணை சாலா பக்கம் தான். அவள் எதையும் மறைக்க வில்லை. எந்த ஒன்றையும் மிகை படுத்தியும், குறைத்தும் சொல்ல வில்லை. நடந்தது என்னவோ அதை அப்படியே சொல்லி விட்டாள். பிரகாஷ், ஷாலினி உறவை அறிந்தது, பிள்ளைகள் எதிர்காலம் கருத்தில் கொண்டு அமைதி காத்தது, பிரகாஷ் மனைவியை ஒதுக்கி வைத்தது, படிப்பை முடிக்க மதுரை சென்றது, விடுமுறைக்கு சென்னை வந்தது, ஷாலினி கத்தியால் குத்தியது வரை சொல்லி விட்டாள். எதையும் மறைக்க வில்லை.
குறிப்பிட தக்கது என்னவென்றால் சாலா யாரையும் குற்றவாளியாக முடிவு செய்து சொல்ல வில்லை. நடந்தது என்னவோ அதை மட்டும் தான் சொன்னாள்.
அடுத்து பிரகாஷ். அவனுக்கும் இனி மறைக்கும் எண்ணம் இல்லை போல, தலையை குனிந்து கொண்டே உள்ளத்தை சொல்லி விட்டான். தன் அருகில் நின்று இருந்த லேடி போலீஸ் முகத்தில் தோன்றிய அருவருப்பு, இன்ஸ்பெக்டர் முகத்தில் இருந்த ஏளனம் எல்லாம் அவனை தலை நிமிர வைக்க வில்லை.
ஷாலினி மொத்தமாக ஒடுங்கி போனாள். இன்ஸ்பெக்டர் மேர்ப்பார்வையில் லேடி போலீஸ் விசாரணையை தொடங்கினார்கள். வாய் வார்த்தையாக யாரும் குத்தி கிழிக்க வில்லை. அவர்கள் முகத்தில் இருந்த ஒவ்வாமை, அருவருப்பு, பார்வையில் மரியாதை இன்மை எல்லாம் கீழாக உணர செய்தது.
பிரகாஷ் வீடு அவள் சொந்த தாய் மாமா குடும்பம் தான். அந்த வீட்டின் செல்ல சிட்டு தான் ஷாலினி. அவர்கள் வீட்டின் கடை குட்டியும் கூட…
ஆனால், சாலாக்கு சூழ்ந்து நின்ற சொந்தமும், ஆதரவும் ஷாலினிக்கு துளி கூட இல்லை. அவள் முகத்தை கூட யாரும் காண வர வில்லை. தந்தை கண்களில் நீரோடு தான் நின்று இருந்தார். கங்கா தான் அவ்வப்போது அவளை அடிப்பதும், தன் தலையில் அடிப்பதும், அழுவதுமாக இருந்தார்.
டிவி, பேப்பரில் ஒரு செய்தியாக வெளி வந்தது. பதினைந்து நாள் காவலில் வைக்க பட்டார்கள். ஒவ்வொன்றாக வெளி வர தொடங்கியது. பிரகாஷ், ஷாலினி உறவில் தொடங்கி, அவர்களின் வெளியூர் பயணம், புதிய வீடு, நகை என்று எல்லாம் எல்லோருக்கும் தெரிய வந்தது. கேஸில் இது ஒன்றும் முக்கியமில்லை. ஆனால், விசயம் பகிறப்பட்டது.
பாண்டியம்மாள் ஓடி வந்து சாலா முதுகில் ஒரு அடி வைத்தார்.
“கூறு கெட்ட கழுதை. பதினேழு வருசம் ஒருத்தன் கூட வாழ்ந்து இருக்க, அவன் எப்படி பட்டவன்னு உனக்கு அம்படலையாடி… புருசன் என்ன சொன்னாலும் தலையாட்டுவியோ… அப்படி என்ன புருசன் பித்து பிடிச்சு இருக்கு. இப்போ உங்களை ஒன்னும் இல்லாம ரோட்டுல விட்டுட்டான்…” என்று மேலும் கையை ஓங்க
“பிள்ளையார் பிடிக்க குரங்கான்னா கதையா ஊர்ல இல்லாத மருமகன்னு தலையில தூக்கி வச்சு ஆடினோம்… அதுக்கு நல்லா செஞ்சு விட்டான்…”
“விடுங்க அத்தை, அடுத்து என்னன்னு பார்ப்போம்…” என்று தேவி எடுத்து சொல்ல
“ஆமா, அடுத்து என்னத்த பாக்குறது. நாப்பது வயசுல இந்த அம்மாவ நான் வாழ வெட்டியா கூட்டி போகணுமாக்கும். காலம் போன கடைசில நல்ல விதி இல்லை எங்க தலையில… ஒன்னு பாதில போச்சு, ஒன்னு பாதில அத்துக்கு வந்து நிக்குது…” என்று மூக்கை சிந்த
“நான் யாருக்கும் பாரமா இருக்க மாட்டேன். என் உழைப்புல சொந்தமா கடை வச்சு இருக்கேன். அந்த வருமானம் போதும் எனக்கும், எம் பிள்ளைகளுக்கும்…” சாலா அழுத்தமாக சொல்ல.
தேவி அவளை உற்று பார்த்தாள். “எல்லாத்தையும் முன்னவே யோசிச்சு தான் கடை வச்சையா சாலா…”
“ஆமா மதினி. எனக்குன்னு ஒரு வருமானம் வேணும், அப்ப தான் எம் பிள்ளைகளை பார்க்க முடியும். இன்னைக்கு நான் நிலையா நிக்குறேன்…” தைரியமாக சாலா சொல்ல
“புருசனை நிலை நிறுத்த தெரியலை. இவ நிலையா நிக்குறாளாம். இவ அப்படியே பெரிய ஜான்சி ராணி, புரட்சி பண்றா… இந்த விவேகத்தை உன் புருசனை கைல போட்டுகிறதல காட்டி இருக்கணும். எவளோ ஒருத்திக்கு புருசனை தானம் பண்ணிட்டு வாழ வெட்டியா புரட்சி பன்றாளாம்…”
“அம்மா, பாப்பாவே நொந்து போய் கிடக்கு. நீ எதாவது மனசு நோகும் படி சொல்லாத…” என்றான் திருக்குமரன்.
“நீ போடா அங்குட்டு… கடைசி பிள்ளைன்னு காலேஜ் அனுப்பி வச்சோம். என்ன புரோஜனம்… ஒரு அறிவும் இல்லையே… புருசன் எங்க போறான், வாரான், சம்பளம் என்ன, வர செலவு, சேமிப்பு என்னன்னு இவ்வளவு பெரிய பொண்ணு யோசனை பண்ண வேணாம். புருசன் சிரிச்சா போதும், சாலான்னு சொன்னா போதும், ஊர் சுத்துன போதும்… அம்புட்டு தானா வாழ்க்கை. இப்போ மூக்கை சிந்தி, சந்தி சிரிச்சு நிக்கிறது யாரு…” பாண்டியம்மாள் விடவே இல்லை.
தாய் குணம் அறிந்து சாலா வாயை மூடி கொண்டாள். பாண்டியம்மாள்க்கு, எப்போதும் ஒரு பெருமை இருக்கும். மருமகன் பெரிய உத்தியோகம், சென்னை வாழ்க்கை, ஆணும், பெண்ணும் என்று இரு பிள்ளைகள் ஆக மகள் நிறைவாக வாழ்கிறாள் என்று பூரித்து இருந்தவர்களுக்கு, சாலா வாழ்க்கை பெரும் இடி தான்.
நாப்பது வயதாக போகிறது, வளர்ந்த இரு பிள்ளைகளை வைத்து கொண்டு வாழ வெட்டியா? சாலா மருத்துவமனையில் இருக்கும் போது பிழைத்து வந்தால் போதும் என்றவர்கள், இன்று இவள் வாழ்க்கையை எவ்வாறு சரி செய்வது என்று யோசித்தார்கள்.
விசாரணையில் ஷாலினி, “பழம் வெட்ட தான் கத்தி எடுத்தேன், அக்காவ கொலை பண்ற அளவுக்கு எல்லாம் நான் போக மாட்டேன். இது ஒரு ஆக்சிடன்ட், தெரியாம நடந்தது…” என்று உறுதியாக சொல்ல,
பிரகாஷ்க்கும் அதே நிலைப்பாடு தான்.
குற்றம் என்று வரையறுக்க முடியாத சூழல் தான். ஆனால், குற்றமில்லை என்று சொல்ல முடியாத படி முந்திய நிலை இருந்தது.
அது பிரகாஷ், ஷாலினி உறவு தான். வீடு வாங்கி கொடுத்து இன்னொரு குடும்பமாகவே வைத்து வாழ்ந்திருக்கிறான். இவர்கள் இருவரின் உறவும் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் தடையாக இருப்பது விசாலாட்சி மட்டும் தான். அதனால், அவளை கொலை செய்யும் சந்தர்ப்பமும் இருக்குறது…
கேஸ் யார் பக்கம் திருப்ப… சாலா நடிப்பது போல ஒன்றும் தோன்ற வில்லை. துரோகம் செய்த கணவனை சகித்து இரு பிள்ளைகள் உடன் தனியாக நிற்கிறாள். அவள் திட்டமிட்டாள் என்று சொல்ல முடியாது. கேஸ் கோர்ட் போக தயாரானது. இனி, இவர்கள் பாடு… ஆதாரங்களும், சாட்சிகளும் சரி பார்க்க பட்டு தயாரானது.
ஷாலினி தற்போது மிகவும் உடைந்த நிலையில் இருந்தாள். பிரகாஷ் நினைவு எல்லாம் இல்லை. பதினைந்து நாள் காவல், அவளுக்கு வேற உலகத்தை காட்டியது. அம்மா, அப்பாவை தவிர சொந்தம் என்று ஒருவரும் வர வில்லை. சொந்த அக்கா கூட எட்டி பார்க்க வில்லை.
ஜாமீன் கிடைத்தது. பிரகாஷ், ஷாலினி இருவரும் வெளி வந்தார்கள். ஷாலினியின் தந்தை,
“படுபாவி! எம் மக வாழ்க்கையை கெடுத்துட்டையே… உன்னை நம்பி தானடா உன் வீட்டுக்கு அனுப்பி வச்சேன்… நீயெல்லாம் நல்லா இருப்பியா… கேடுகெட்டவன், நடத்தை கெட்டவன்…” என்று கத்தி கொண்டே பிரகாஷ் சட்டையை கொத்தாக பற்றி அடித்து நொறுக்கி விட்டார்.
அவர் பக்கம் யாரும் உடன் இல்லை. பிரகாஷ் பக்க ஆட்கள் தான் அங்கு அதிகமாக இருந்தார்கள். ஆனாலும், யாராலும் ஒன்றும் சொல்ல முடியாமல் நிற்க,
பிரகாஷ் தாய் சுலோச்சனாக்கு தாங்க முடியவில்லை,
“போதும் நிறுத்துங்க… ரொம்ப ஒழுக்கமான பிள்ளையை பெத்து வச்சுட்டு எம் மகனை அடிக்கிறீங்களா… அடுத்தவ புருசன்னு தெரிஞ்சும் உங்க மக தான் பின்னாடி சுத்தி இருக்கா… அவ வயசுக்கு அவளுக்கு தகுந்த வேற ஒருத்தனை பார்க்க வேண்டி தான. கல்யாணம் ஆன பிள்ளைகாரன் தான் வேணுமா… உங்க வளர்ப்பு சரியில்லை…”
“நீங்க மட்டும் உங்க மகனை சரியா வளர்த்திங்ளா, அவ சின்ன பொண்ணு, அவளுக்கு என்ன உலக விவரம் தெரியும். அவளுக்கு நாலு நல்ல அறிவுரை சொல்லாம, பெரியவங்க எங்க கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லாம, இவனோட சபல புத்திக்கு எம் மகளை பழியாக்கிட்டான். உங்க மகன் மட்டும் நல்லா இருப்பானா… ரோட்டுல தான் போவான்…” மற்றொரு பக்கம் கத்திகொண்டிருந்தார் கங்கா.
“மொத கட்டி கொடுத்த இடத்துலையும் இந்த மாதிரி ஊர் மேஞ்சு திரிஞ்சு இருப்பா… அதான் அவன் தொரத்தி விட்டான். நாம தான் விவரம் இல்லாம இவ நல்லவன்னு வீட்டுக்குள்ள விட்டோம். நல்ல குணமா என் மகன் குடும்பத்தோட இருக்கவும், வளைச்சு போட பாத்திருக்கா… குருவி கூடு மாதிரி இருந்த எம் மகன் குடும்பத்தை நல்ல பாம்பு மாதிரி புகுந்து நாசம் பண்ணிட்டா… நாசமா தான் போவா….”
. சுலேச்சனா என்று அதட்டல் போட்டார் கணவர் நாராயணன்.
“மாறி மாறி குத்தம் சொல்வதால் என்ன ஆக போகுது. நம்ம வீட்டிலே ஆயிரம் பிரச்சனை இருக்கு, அதை சரி பண்ணுவோம்…” என்று இடத்தை விட்டு நகர,
“எம் மகளுக்கு ஒரு நியாயம் சொல்லிட்டு போங்க…” நின்றார் கங்கா.
“என்ன நியாயம் வேணும் உன் மகளுக்கு… பாவம் ஒன்னும் தெரியாத பிள்ளையை எம் மகன் எமாத்தினனாக்கும். உம் மக தெளிய கடைஞ்சவ, அதான் அடுத்தவ புருசனை மயக்கி வீடு, காரு, நகை எல்லாம் சேர்த்து வச்சு இருக்காளே… வேற என்ன வேண்டும். இதை வச்சு அம்மாவும், மகளும் வேற எமாந்தவன் எவனையாவது பிடி… யாருக்கு தெரியும் நீயே உம் மகளுக்கு சொல்லி கொடுத்து இருப்பா…”
“சுலோச்சனா…” என்று பெரிதாக கத்தினார் நாராயணன். சொந்த தங்கை குடும்பம் அல்லவா, மனம் துடித்தது.
அரவிந்தும் தாயை தான் அதட்டி கூட்டி கொண்டு நகர்ந்தான். வசந்த், விவேக் என்று எல்லோரும் இடத்தை காலி செய்தார்கள்.
எல்லோருக்கும் தெரியும் தவறு இருவர் பக்கமும் தா என்று… அதற்காக யார் என்ன நியாயம் செய்ய முடியும். கங்காவை பார்க்க பாவமாக தான் இருந்தது. சரியில்லாத பிள்ளை பெத்தால் அனுபவிக்க தான் வேண்டும் என்று நகர்ந்து கொண்டார்கள்.
அவர் சொல்வது போல ஷாலினிக்கு என்ன நியாயம் செய்ய முடியும். துரோகம், ஏமாற்றம் என்று எந்த வகையிலும் சேராது…
முறையாக வாழ்ந்து, இரு பிள்ளைகள் பெற்று, மனைவி என்று ஊர் முன் அங்கீகாரம் பெற்றவள் பக்கம் தான் நியாயம் நின்றது. யாருமே ஷாலினிக்கு ஆதரவாக வாய் திறக்க வில்லை.
“பார்த்தியா, பார்த்தியாடி… என்ன வார்த்தை சொல்றாங்க பார்த்தியாடி. இதை கேட்கவா உன்னை பெத்து, வளர்த்து, படிக்க வச்சேன்…”
“அம்மா…” ஷாலினிக்கு நெஞ்சு துடித்தது.
“மானம் இழந்து எல்லாம் என்னால வாழ முடியாது. என்னங்க, வாங்க குடும்பத்தோட செத்து போகலாம்…” என்று அழுகையில் கரைந்தவரை கணவர் தாங்கி கொண்டார்.
ஷாலினி ஒடுங்கி போனாள். இதையெல்லாம் அவள் யோசித்தது கூட இல்லை. இவர்கள் மூவரும் மட்டும் தனி என்றானது… உடன் வளர்ந்த அரவிந்த், விவேக் என்று யாரும் இவளை நிமிர்ந்து கூட பார்க்க வில்லை. இவள் அம்மா, அப்பா என்று யாரிடமும் ஒரு வார்த்தை பேச வில்லை. தங்கள் அண்ணனை கூட்டி செல்வதும், இவளை ஒதுக்கி வைப்பதுமாக தான் இருந்தார்கள்.
தன் குடும்பத்தோடு பிரகாஷ் வீடு சென்றான். சாலா அங்கு தான் இருக்கிறாள். அவர்கள் இருவருக்கும் அது தான் வீடு. அவர்கள் சொந்தமும் அங்கு தான் சென்றார்கள். ஆனால், ஷாலினிக்கு அது வீடு கிடையாதே. அத்தோடு அங்கு இனி இவள் நுழையவும் முடியாது.
நிதர்சனம் கொஞ்சம் புரிய ஆரம்பித்தது ஷாலினிக்கு… ஒரு வருடத்திற்கு மேலாக தன்னோடு இருந்தவன், இன்று ஒரு இக்கட்டில் தன் முகம் கூட பார்க்க வில்லை. அவன் தாய் அவ்வளவு பேசியும் ஒரு வார்த்தை மறுப்பு சொல்ல வில்லை. அத்தோடு அவன் தேடி சென்றது அவன் மனைவியை… இந்த போலீஸ், கேஸ், பிரச்சனை, அவமானம் எல்லாம் யாரால்… என்ன நடந்தாலும் என் மனைவி, பிள்ளைகள் என்று ஓடி விட்டானே…
அப்போ “என் இரவுகளின் ராணி, ரகசிய காதலி, ஹனி கேக்…” என்று செல்லம் கொஞ்சியது, “ஐ லவ் யூ, நீ தான் என் உலகம், நீ வந்த பின்னாடி தான் வாழ்க்கையை வாழ்கிறேன்…” என்று வசனமாக பிதற்றியது எல்லாம் என்ன?…
எதுவும் புரியாமல் நிலை குலைந்து நின்று விட்டாள். பதினேழு வருட தாம்பத்தியத்தையே தூக்கி எறிந்தவனுக்கு ஒரு வருட ரகசிய வாழ்க்கை எம்மாத்திரம். வெளியில் சொல்ல அசிங்க பட்டு மூடி மறைக்கும் உறவை, எவ்வாறு பிரகடன படுத்துவான்…
கட்டிய மனைவியும், பெத்த பிள்ளைகளையும் மறக்கும் ஒருவன், தன்னை மறக்க எவ்வளவு நாள் ஆக போகுது… எது அவன் மேல் நம்பிக்கையை கொடுத்தது.
நிலையில்லாத, கௌரவ படுத்த முடியாத உறவு. நான் பாதிக்க பட்டேன் என்று கூவி கூவி அழைத்தாலும் அங்கீகரிக்க முடியாத உறவு, இரவில் தொடங்கி இரவிலே முடிந்து விடும் உறவு, பொதுவில் சபை ஏறாது…
அதை அறியாமல் கட்டிய மனைவியை விட தன்னை தான் அதிகமாக நேசிக்கிறான் என்று இறுமாப்பு கொண்டாளே… தன்னை ரகசியமாக உறவு கொண்டாடுகிறான் என்று அறியாமல் தன்னையே சுற்றி வருகிறான் என்று பூரித்து போனாளே…
சாலாக்கு கூட இவ்வளவு வாங்கி கொடுக்க வில்லை, தனக்கு மட்டும் உடையும், நகையும் குவிக்கிறான் என்று பெருமை தான் மனமெல்லாம்… ஆனால், அவன் சரி காட்டிருக்கிறான். பொண்டாட்டிக்கு உரிமையை கொடுத்தவன், தனக்கு பொருளை கொடுத்து ஈடு கட்டி இருக்கிறான். தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டாள்.
என்னடா உங்க சமூக அமைப்பு. நானும், என் பெற்றோரும் ஒதுக்கபடுவோம். பிரகாஷ், அவன் குடும்பத்தோடு இனைந்து விடுவான்… ஷாலினி எழுந்து குளித்து, உடை மாற்றி, சாப்பிட்டாள். தன்னை நிதானமாக்கி கொண்டாள்.
பிரகாஷை விட்டு விடும் எண்ணம் இல்லை. இனி ரெண்டு தாரம் தான். ரெண்டாந்தாராமாக இருந்தாலும் அவன் மனைவி என்ற அடையாளம் வேண்டும்.
பிரகாஷ் வீடு வந்தான். அவன் உள் நுழையவும், ஓடி வந்து அடித்தான் குமரன். ஏற்கனவே நொந்து போய் வந்து இருப்பவன், சுருண்டு விழுந்தான். குமரன் ஆத்திரம் அடங்க வில்லை. மற்ற எல்லோரும் தான் தடுத்து பிரித்து விட்டார்கள். அவனிடம் எந்த எதிர்ப்பும் இல்லை. அமைதியாக அடியை ஏற்று கொண்டான்.
ஒரு பக்க தலையில் இரத்தம் வந்தது. கண் சொருக மயங்கியவனை கை பிடித்தான் அஜய். பெற்ற தகப்பன் முகம் பார்க்க வில்லை. ஆனாலும், இந்த மனசு கேட்க மாட்டாது.
குற்றவாளி, அதுவும் தன் தாய்க்கே குற்றம் புரிந்துள்ளான். அதில் பாதிக்கப்பட்டு நிற்கிறது தானும், தங்கையும் தான்… இருந்தும் தந்தை. அந்த உறவு அலாதியானது.
கை பிடித்து கூட்டி வந்து கட்டிலில் அமர வைத்தான். தன் மீதே கோபம். தாய்க்கு நியாயம் செய்ய வில்லை. ஆனாலும், தந்தையை விட முடியவில்லை. அதுவும் அடி வாங்கி விழும் போது மனது கேட்கவே இல்லை.
“அஜூ…” என்று தந்தை தொட வரும் போதே எழுந்து ஓடி விட்டான்.
குமரன் கொடுத்த அடியை கூட திடமாக ஏற்றவனால், மகனின் வேதனை நிறைந்த முகம். நெஞ்சை அறுத்தது. தொட்டு பார்க்க கூட மகன் விட வில்லையே…
ஷாலினி வீட்டார் முன் கத்தி கொண்டிருந்த சுலோச்சனா, சாலா வீட்டார் முன் வாய் திறக்க வில்லை. மகன் நிலை எண்ணி அழுகை தான் வந்தது.
சாலா கூடத்தில் அமர்ந்து இருக்க, மகள் அருகில் இருந்தாள். அடுத்து என்ன முடிவு என்று யாருக்கும் தெரியவில்லை. யார் ஆரம்பிப்பது என்று புரியாமல் பார்த்து நின்றார்கள்.
மகன் வாழ்க்கை, மகள் வாழ்க்கை என்பதை மனதில் கொண்டு தான் இரு வீட்டாரும் அமைதி காத்தார்கள்.
அறையை விட்டு வெளியே வந்த பிரகாஷ், நேரே சென்று சாலா காலில் தலை குனிந்து விழுந்து விட்டான். அவள் நகர முயலும் போதே, அவள் கால் இரண்டையும் கெட்டியாக பிடித்து கொண்டான். கண்களில் நீர் வடிந்தது. ஆனால், சாலா முகத்தில் ஒரு வேறுபாடும் இல்லை.