எந்த ஒரு முக வேறுபாடும் இல்லாமல் தான் சாலா கணவனை பார்த்தாள். பிரகாஷ் கண்களில் நீர் கொட்டியது. அதை உணர்ந்தும் சாலா முகத்தில் எந்த உணர்வும் தோன்ற வில்லை.
“இது எல்லாம் உன் திட்டமா?…” என்ற பாவனை தான் மிகுந்து இருந்தது.
“சாலா, நான் தப்பு பண்ணிட்டேன். எல்லா விவரமும் தெரிஞ்சும் நான் விழுந்துட்டேன். கொஞ்சமும் யோசிக்கலை… என் சபலம் தான். நான் மன்னிப்பு எல்லாம் கேட்க போறது இல்லை… நீ குடுக்குற தண்டனையை ஏத்துகிறேன்…” அழுத முகமாகவே சொன்னவன்,
“ஆனா, ஒன்னு நிச்சயம் சாலா. நான் என்னைக்கும் உன் இடத்துக்கு அவளை கொண்டு வர நினைச்சது இல்லை. ஆரம்பத்துல நான் விலகி தான் ஓடினேன். ஆனா, எங்கயோ… என் தப்பு தான்.. நான் தான் முழு குற்றவாளி… எம் பிள்ளைக மேல சத்தியமா சொல்றேன் சாலா, உன்னை விட்டு விலகனுன்னோ, உன்னை ஒதுக்கி வைக்கணுன்னோ ஒரு நாளும் நினைச்சதில்லை. கூடிய சீக்கிரம் எல்லாத்தையும் விட்டு விலக தான் நினைச்சேன். அதுக்குள்ள என்னன்னவோ ஆகி போச்சு…”
“சாலா, நீ நம்புறைய சாலா. நான் போய் உன்னை கொலை பண்ற அளவுக்கு போவேனா… நீயும், பிள்ளைகளும் தான் என் உலகம் சாலா…”
“காசு போன போய்டு போகுது சாலா… நான் சம்பாரிப்பேன், இனி எவ்வளவும்… நீ என்னை சொன்னாலும் கேக்குறேன் சாலா. உன் வார்த்தைக்கு கட்டுபடுறேன். நான் என்ன பண்ணனும் சாலா…” உருகி தான் பேசினான்.
ஆனால், சாலாவிடம் ஒரு அசைவும் இல்லை. அவனை விட்டு எழுந்தவள் உள் அறைக்கு சென்று படுத்து கொண்டாள். தளர்ந்த நடையோடு பிரகாஷ் வேற ஒரு அறைக்கு செல்ல,
சுலோச்சனா, “அஜு கண்ணா, உன் அப்பா கூட இருடா… ரொம்பவும் நொந்து போய் இருக்கான். ஏதாவது பண்ணிக்க போறான்…” என்று பேரனிடம் சொல்ல.
அஜய் பார்த்த பார்வையில் வாய் மூடி கொண்டார். மெல்ல பாண்டியம்மாள் அருகே வந்தவர்,
“போன மாசம் தான் பிரகாஷ் ஜாதகம் பார்த்தேன் சம்மந்தி. ஏழரை நாட்டு சனி நடக்குதாம். இப்படி ஏதாவது ஒன்னு வந்துட்டே இருக்குமாம்… நான் பயந்து கிடந்தேன். அதுக்கு தக்க நடந்து போச்சு…”
“என்ன சம்மந்தி சொல்றீங்க ஏழரை சனியா?…” என்று பாண்டியம்மாள் இழுக்க
“ம்ம்… ஆமா. வீட்டவே ஆட்டி படைக்கும், குடும்பம் சிதையும்ன்னு சொன்னாங்க. உயிர் போற அளவுக்கு எல்லாம் பிரச்சனை வருமாம். நேர காலம் தான் ஆட்டி படைக்குது… வேற என்னத்த சொல்ல, நல்ல பொறுப்பா, குடும்பம், பொண்டாட்டி, பிள்ளைகன்னு இருந்தவன் இப்படி வழி மாறி போவானா… சாலான்னா அவனுக்கு உசுரு…” என்று சுலோச்சனா சொல்ல
“ம்ம் நிசம் தான் சம்மந்தி. பேறுகாலத்துக்கு கூட தாய் வீட்டுல விடமாட்டாக. நம்ம பேரனுக்கு கூட சாலா இங்க தான இருந்தா, நல்ல பாசமா இருந்த மனுசன் தான். இப்படி வழி மாறி போனாங்களே…” மூக்கை சிந்தினார் பாண்டியம்மாள்.
“நேரம் காலம் தான் சம்மந்தி. இறப்பு கூட நேரும்ன்னு சொன்னாங்க… நாமளும் போலீஸ் கேஸ்ன்னு இழு பட்டோம். பிள்ளைகளும் பாடு பட்டாங்க. இனி நல்லது தான் நடக்கும் பாருங்க…”
“என்ன இருந்தாலும் மாப்பிள்ளை கிட்ட இருந்து இப்படி ஒரு காரியத்தை எதிர்பார்க்கல சம்மந்தி. நாங்க என்னமோ நினைச்சோம். பெரிய மாப்பிள்ளைக்கு கூட இந்த மனுசன் இம்புட்டு மரியாதை கொடுத்தது இல்லை. சின்ன மாப்பிள்ளைன்னா தலையில தூக்கி வைக்காத குறை தான்…” என்று சாடி விட்டார் பாண்டியம்மாள்.
“எல்லாத்துக்கும் அந்த சண்டாள சிறிக்கி தான் காரணம். அவ வாரத்துக்கு முந்தி வர ஒரு பிரச்சனையும் இல்லை. நல்லா தான் இருந்தாங்க. இந்த ஒரு தப்பை வச்சு மட்டும் சொல்லாதீங்க. அதுக்கு முன்னால எம் மகன் உங்க மகளை தாங்குவான்… என்னமோ நேர காலம். அதுக்குன்னு நடந்தத பேசி என்ன ஆக போகுது. அடுத்து என்னன்னு பாப்போம்…”
“என்னத்தை பார்க்க…”
“அப்புறம் இப்படியே இருந்தா பிரகாஷ் மேல தான் கேஸ் நிக்கும். அந்த கேடுகெட்டவ எப்படியோ போகட்டும். இவனையும் அப்படி விட முடியுமா… அப்புறம் பிள்ளைக நிலமை என்ன?… சாலா பிள்ளைகளை வச்சுட்டு தனியாவே இருப்பாளா?… பெரியவங்க நாம தான் நாலையும் யோசிக்கணும்…” என்று சுலோச்சனா சொல்ல
யோசனையானது பாண்டியம்மாள் முகம்.
இவர்கள் பேச்சு வார்த்தையை எல்லோரும் கேட்டு கொண்டு தான் இருந்தார்கள். அவர்கள் முகமும் யோசனையை காட்டியது. யாருக்கும் என்ன முடிவு எடுக்க என்று தெரிய வில்லை.
பிரகாஷை முழுமையாக கெட்டவன் என்று ஒதுக்கவும் முடியவில்லை. சாலாவின் நியாத்தை விடவும் முடியவில்லை.
அடுத்தடுத்து நாட்கள் கடந்தது. பிரகாஷ் தினமும் போலீஸ் ஸ்டேசன் சென்று வந்தான். வேலையில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்கள். முறையாக காரணம் சொல்லி சேர வேண்டும். அதுவும் தன் பக்கம் தவறு இல்லை என்ற பட்சத்தில் தான்.
ஒரே வீட்டில் இருந்தும் மனைவி முகம் கொடுக்க வில்லை. பிள்ளைகள் நெருங்க கூட இல்லை. அம்மா தான் சில வார்த்தைகள் பேசினார். அப்பா,
“நல்ல வேலை, சம்பாத்தியம், பொறுப்பான மனைவி, அருமையான மகன், மகள் எல்லாம் நிறைவா இருந்தும் வாழ தெரியலையே உனக்கு… நம்ம பரம்பரையிலே யாருக்கும் இந்த பழக்கம் இல்லையே… எம் மூத்த மகனா தலை நிமிர்ந்து நிக்க வச்சவன் நீ… இன்னைக்கு இந்த வயசுல சொந்தம் முன்னாடி தலை குனிய வச்சுட்ட… இத்தனை வருசம் உன் கூட வாழ்ந்து, நம்ம குடும்பத்துக்கு நல்லது, கெட்டதுன்னு உனக்கு துணை நின்ன உம் பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணிருக்க… ஒரு வீட்டுக்குள்ள துரோகம் பண்ண உன்னால எப்படி முடிஞ்சது பிரகாஷ்…”
தலை நிமிரவே இல்லை மகன். மகனின் ஒதுக்கம் எந்தளவுக்கு பாதிச்சதோ, அதற்கு குறையாமல் தந்தையின் வார்த்தைகள் காயத்தை கொடுத்தது.
“எம் மகன் பார்த்துக்குவான், தைரியமா உன் மகளை அனுப்பி வை கங்கான்னு சொன்ன என் வார்த்தை பொய்யா போச்சு. எனக்கு எப்பவும் தப்பு தப்பு தான். அதுக்கு எந்த காரணமும் சொல்லாத… உங்க அம்மா மாதிரி உன் தப்புக்கு சப்பை கட்டுகட்ட மாட்டேன். உன் உப்பு பெறாத காரணம் எல்லாம் உங்க அம்மாக்கும், உன் மாமியார்க்கும் தான் சரியா இருக்கும். அஜய் நீ பெத்த பிள்ளை தான, அவன் முகத்தை உன்னால நேருக்கு நேர் பார்க்க முடியுமா?… என்னால உன்னை என்னைக்கும் மன்னிக்க முடியாது. நான் சாகுற வரைக்கும் எம் மூஞ்சில முழிக்காத…” என்ற தந்தையின் சொல் கொல்லாமல் கொன்றது.
இன்னும் இருவது நாளில் கேஸ் கோர்ட்க்கு வருது. அதற்கு முன் சாலாவை வாபஸ் வாங்க வைக்க முயன்று கொண்டு இருந்தார்கள். நாலா பக்கமும் அழுத்தம் கொடுத்தார்கள்.
பிரகாஷ் செய்ததை யாரும் சரி என்று சொல்லவில்லை. அதே நேரம் ஜெயிலுக்கு அனுப்பி வைப்பதும் முறையாக தெரியவில்லை. சரி செய்ய கூடிய தவறு என்பதால் சரி செய்யவே நினைத்தார்கள். எல்லா தப்பையும் முழுதாக ஷாலினி பக்கம் திருப்பி விட்டார்கள். மன்னிக்க முடியாத இடத்தில் ஷாலினியும், மன்னிக்க கூடிய இடத்தில் பிரகாஷையும் வைத்து கொண்டார்கள்.
“இங்க பாரு சாலா. கோர்ட்டு வரைக்கும் போன உம் புருசன் முழுசா அவ பக்கம் போயிடுவான். நீயும், உம் பிள்ளைகளும் தான் ஒத்தையில கெடக்கணும். உம் காலம் இதோட முடியலை. உம் மகனுக்கு, மகளுக்கு சம்மந்தம் பண்ணனும். என்ன இருந்தாலும் ஒரு பொண்ணு புருசன் கூட இருந்தா தான் மரியாதை…”
“அந்த மனுசன் பண்ணது தப்பு தான். நான் சரின்னு சொல்லலை. அதுக்கு உறவா வெட்டி விட்டா போதுமா… ஊர் உலகத்துல எந்த ஆம்பிளை தான் சரியா இருக்கான். ஏதோ தப்பு நடந்து போச்சு, புருசன் மன்னிப்பு கேட்டா, அடுத்து என்ன வாழ்க்கைன்னு பார்க்காம, இழவு விழுந்த மாதிரி இடிஞ்சு போய் இருக்க…”
சாலாவிடம் எந்த மாற்றமும் இல்லை. இறுகிய முகம் இளகவும் இல்லை.
“பத்து பேர் கூட போற ஆம்பளையை கூட எம் புருசன் தங்கம்ன்னு சொல்றாங்க. மாப்பிள்ளை ஒரு தப்பு பண்ணதுக்கு உச்சி ஏறி நிக்கிறவ… சட்டையையில கூட அழுக்கு ஒட்டாத மனுசன் கௌரவம் பார்க்காம காலை புடிச்சாக… நான் ஆம்பிளை அப்படி தான் போவேன்னு நின்னா பொட்டச்சி நீ என்ன பண்ண முடியும். வாழ்க்கையில எல்லோரும் ஏதோ ஒரு இடத்துல எல்லாரும் தடுமாறி நிக்கிறாது தான். அதையும் சரி கட்டி, அனுசரிச்சு தான் ஒரு பொம்பளை போகணும்… வீம்பு பண்ணவும், பிடிவாதம் பிடிக்கவும் உனக்கு வயசா?… சம்மந்தம் பண்ற வயசுல மகன் வச்சு இருக்க…” அருகிலே அமர்ந்து குத்தி கொண்டே இருந்தார் பாண்டியம்மாள்.
“இங்க பாரு சாலா, உன்னை பொண்ணு பார்க்கும் போது எங்க யாருக்கும் விருப்பம் இல்லை. சொத்து இருந்தாலும் படிச்ச குடும்பமா இல்லையேன்னு யோசனை தான் உங்க மாமனாருக்கு… ஆனா, பிரகாஷ் தான் கட்டுன உன்னை மட்டும் தான்னு நின்னான். அவனா மாறுவான்… அந்த ஷாலினி தான் சரியில்லை. அவ புருசன் விரட்டி விடும் போதே நாம யோசிச்சு இருக்கணும். அப்படி பார்த்த தப்பு உம் மேல தான். நாங்க எல்லாம் ஒதுங்கி நிக்கும் போது நீ தான் ஆதரவு கொடுத்த… நாய்க்கு தெரியுமா செக்கு எது சிவலிங்கம் எதுன்னு அவ கேடுகெட்ட புத்திய காட்டிடா…” என்ற சுலோச்சனா மருமகள் முகம் பார்க்க, அங்கு ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.
“இப்ப வரைக்கும் அந்த கங்கா உன் மாமனாருக்கு போன் பண்ணிட்டே தான் இருக்கா… எதுக்கு? ஊர் முழுக்க பேர் கெட்டு போச்சு. எப்படியாவது நம்ம பிரகாஷ் கூடவே சேர்த்து வைக்க தான். உன் கோபத்தை பார்த்து நீ வாழ மாட்ட, உன் இடத்துக்கு அவ வர பாக்குறா… புத்தியோட வாழ பாரு, உம் பிள்ளைக திக்கு தெரியாம நிக்குது. ஊர்ல பல ஆம்பிளைக இப்படி தான். ஆனா யாரும் திருந்துறது இல்லை. எம் மகன் மலை மாதிரி… இம்புட்டு பேர் பார்க்க அவன் உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டான். இதுக்கும் மேல உனக்கு என்ன வேணும்…”
சுலோச்சனா பேச பேச பதட்டம் கூடியது பாண்டியம்மாள்க்கு… இப்போதைக்கு மகள் இடத்தை தக்க வைக்கவே நினைத்தார். சம்மந்தி நகர்ந்ததும்…
“இங்க பாரு சாலா, ஆம்பிளைக்கு ஆயிரம் வாசல். உம் புருசன் மனசு வெறுத்து மறுபக்கம் சாஞ்சு போடாம… நம்ம பக்கம் இது எல்லாம் சகஜம் தான… உங்க அண்ணனே ரெண்டு பொண்டாட்டிகாரன் தான். உங்க தாத்தாக்கு ரெண்டு பொண்டாட்டி. இங்க எல்லாரும் உன் பக்கம் தான் நிக்குறாங்க சாலா. அவங்களே வெறுத்து போற அளவுக்கு நடக்காத…”
“உம் புருசன் தான் இனி தப்பு நடக்காதுன்னு சொல்றாங்க தான… நீ வெளியேறுனா, உள்ள நுழைய ஒருத்தி ரெடியா இருக்கா. இத்தனைக்கும் அவ சொந்தமும் வேற… அப்படி இருந்தும் எல்லாரும் உனக்காக தான் நிக்குறாங்க. என் ராசாத்தி அம்மா சொல்றத கேளு சாமி. வக்கத்த சென்மம் பொம்பளை சென்மம் அவளுக்கு எதுக்கு வைராக்கியம். உம் புள்ளை முகத்தை பாரேன், அப்பன பார்த்து துடுச்சு போய் இருக்கான். அவங்க பொழப்யையும் கெடுக்காத… என் சாமி, ஆம்பிளை துணை இல்லாம வாழ்றது அம்புட்டு லேசு பட்ட காரியம் இல்லை. நாலு காச பார்த்து நாம நிப்போம்ன்னு நீ நினைக்கலாம். ஆனா, ஒன்னும் காரியம் ஆகாது சாலா…”
தாயை பார்த்தவள், “அப்போ நான் தான் விட்டு கொடுத்து போகணும் அப்படி தான… ஏன்னா நான் பொம்பளை, என்ன தப்பு செஞ்சாலும் அவங்க நிமிர்ந்து நிக்கலாம் ஏன்னா அவங்க ஆம்பிளை…” ஆதங்கமாக சாலா கேட்க.
“ஆமா, ஒரு பொம்பளை தான் விட்டு கொடுத்து போகணும். அப்ப தான் குடும்ப வண்டி ஓடும். அவன் பத்து பொம்பளைகளை பார்ப்பான், நாம அப்படி திரியிய முடியுமா… படிக்காத நானும் ஒரு ஆம்பிளை கையால தான் தலைகுனிஞ்சு தான் தாலி வாங்குனேன். படிச்ச நீயும் ஒரு ஆம்பிளை கையால தலைகுனிஞ்சு தான் தாலி வாங்குன… இதுல என்னடி மாறிச்சு. நாகரீகம் வந்துச்சுன்னு ஆம்பிளை யாரும் பொம்பளை கையால தாலி வாங்கலையே. யாரும் படிச்சாலும், பட்டம் வாங்கினாலும், சொந்த காலுல நின்னாலும் நாம இப்படி தான். ஒரு பொம்பளை பொம்பளையா தான் இருக்கணும். ஆம்பிளை திமிரு உனக்கு எதுக்கு?… நாளைக்கு நீ என் கூட வார, கேஸ் வாபஸ் வாங்குற. என்னமாது வீம்பு புடிச்சா என்னை உசுரோட பார்க்க முடியாது…” என்று கத்தி விட்டு சென்றார் பாண்டியம்மாள்.
“இந்த ஒரு தப்பை மட்டும் வச்சு பிரகாஷை எடை போடாதீங்க அண்ணி. அவனுக்கு ஒரு வாய்ப்பு குடுங்க… நிச்சயம் திருந்துவான். பிள்ளைக பாவம், அவங்க முகத்தை பாருங்க…” என்று ஜமுனா பிரகாஷ் தங்கை ஒரு பக்கம் பேச ஆரம்பித்தாள்.
தலையை கையில் தாங்கி சுவற்றில் சாய்ந்து அமர்ந்து விட்டாள் சாலா. எல்லோரும் அவளுக்கு ஆதரவாக தான் நின்றார்கள். ஷாலினி பற்றிய பேச்சை கூட யாரும் எடுக்க வில்லை. அதே நேரம் பிரகாஷை ஆதரிக்கவும் இல்லை.
அவர்கள் சொல்வது ஒன்று தான். ஒரு வாய்ப்பு கொடு, மன்னித்து விடு, உன் பிள்ளைகள் வாழ்க்கை, உன் வாழ்க்கை…
“அப்பம்மா சொன்னாங்க. அப்புறம் அப்பா நம்மகிட்ட வரவே மாட்டாங்களாம். டாடி என் டாடி தான… நான் தான டாடி செல்லம்…” என்று ஏக்கமாக அஞ்சு கேட்க. மனம் பொறுக்கவில்லை சாலாக்கு.
வெளியில் வந்து மகனை தேட, பால்கனி கம்பியை பிடித்த படி மொட்டை வெயிலில் வானம் பார்த்து நின்றான். அவன் வயதிற்கான பக்குவம் தொலைகிறதோ என்ற பயம் தாய்க்கு…
மறுநாள் காலையில் சாலா கிளம்பி விட்டாள். நாலா பக்கமும் ஆட்கள் சூழ்ந்து நின்றார்கள். கேஸ் வாபஸ் பெற்று விட்டாள். அதன்பின் தான் எல்லோருக்கும் நிம்மதி.
வாபஸ் பெரும் போது அங்கிருந்த லேடி போலீஸ்,
“எதிர் பார்த்தது தான். உன்னை மாதிரி நிறைய பேரு புகார் கொடுப்பாங்க. அப்புறம் பிள்ளைகளுக்காக, குடும்பம் உடைய கூடாது, என் புருசன் திருந்திட்டார்ன்னு வாபஸ் வாங்கிட்டு போயிடுவாங்க. எப்படியோ நல்லா இருந்தா சரி தான்…”
மெளனமாக வெளியேறி விட்டாள் சாலா. வீட்டில் எல்லோருக்கும் அவ்வளவு சந்தோசம். சுலோச்சனா தான்,
“ஏதோ குடும்ப சண்டை. நாம பேசி சரி பண்ணியாச்சு. இனிமே ஒழுங்கா வாழ்ற வழியை பாருங்க. பெத்தவங்களா நடந்துகோங்க… கண் திருஷ்டி மாதிரி கழியட்டும். பிரகாஷ் ஒரு நாள் குடும்பமா திருவேடாகம் போய் வா…” இன்னும் ஏதேதோ சொன்னார்.
சாலா எதையும் காதில் வாங்க வில்லை. உள்ளே சென்று அடைந்து கொண்டாள்.
அஜய் தன் தாயை தேடி உள்ளே செல்ல, தலை குனிந்து அமர்ந்து இருந்தாள். ஓடி வந்து அம்மாவின் மடியை கட்டி கொண்டான்.
“அஜய்…”
“சாரிம்மா, நிஜமா சாரி. எனக்கு தெரியும். நான் தப்பு பண்ணிட்டேன்…”
“விடு அஜய். நீ எதுவும் பண்ணலை…”
“இல்லைம்மா, என்னால முடியலை. அப்பா… அவரை அப்படி பார்க்க என்னால முடியலை. எனக்கு கஷ்டமா இருக்கு. அப்பா அழும் போது தாங்க முடியலை… நான் தப்பு தானே…”
“இல்லை கண்ணா. நீ தப்பு இல்லை. உன்னை யோசிச்சேன், உன் மனதை யோசிக்கல…”
“சாரிமா, எனக்கு இங்க இருக்க முடியலை. எல்லோரும் ஒரு மாதிரி பாக்குறாங்க. நாம மதுரைக்கே போயிடலாம்… அப்பா… போலீஸ்… அது தான் வேண்டாம். நாம போகலாம், பிளீஸ்…”
“போகலாம் அஜய். இப்போ நீ போ… அம்மா கொஞ்ச நேரம் தனியா இருக்கனும்…” என்ற தாயை பார்த்தவன் தயங்கிய படியே வெளியேற,
“அஜய்…”
“அம்மா…”
“உன் உண்ணாவிரதத்தை முடிச்சுக்கோ…”
“அம்மா…” என்றான் அதிர்ந்து
“நான் உன்னை பெத்தவடா… போ, போய் சாப்பிடு…” என்றவள் கண் மூட,
“சாலா…” என்று தவிப்பாக தேவி அழைக்க,
“எனக்காக நான் எதையும் செய்ய முடியாது போல மதினி…” என்றாள் விரக்தியாக
பிரகாஷ், வசந்தை அழைத்து பேசி கொண்டிருந்தான்.
“வசந்த், கேஸ் எல்லாம் முடிஞ்சதா…”
“முடிஞ்சதுடா இனி எந்த பிரச்சனையும் இல்லை.”
“அது வந்து ஷாலினிக்கும் கேஸ் இல்லை தான…”
“டேய்…” என்று வசந்த் அலற
“ஐயோ! அதில்லைடா, என்னால தான் அவளும் உள்ள வந்தா… நான் முழுசா ஒதுங்கிட்டேன். ஆனாலும், ஷாலினி இந்த கேஸ்ல வேண்டாம். அவ வாழ்க்கையை அவ பார்க்கட்டும்…”
நன்பணையே பார்த்து நின்றவன், “சாலா கிட்ட ஒரு வார்த்தையாவது பேசினையா?…”
“இல்லை…”
“மொத அங்க பேசுடா…” எறிந்து விழுந்தான் வசந்த்.
பிரகாஷ்க்கு கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனாலும், உள்ளே சென்றான்.
சாலா பெட்டியை அடுக்கி கொண்டு இருந்தாள்.
“சாலா…” என்று ஆரம்பிக்க, நிமிர்ந்து பார்த்தவள்,
“நான் காலேஜ் தேர்ட் இயர் படிக்கும் போது ஒரு புராஜெட். நான் ஆங்கில இலக்கியம் என்றதால, ஒரு புக் ஆராஞ்சேன். அது என்னன்னா…”
பிரகாஷ் புரியாமல் பார்த்தான்.
“ஒரு பொண்ணு, அவளுக்கு வெளிநாட்டு வாழ்க்கை மேல அவ்வளவு ஆசை. அதுக்காக தான் வெளிநாட்டுக்கு வேலைக்கு போற மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டுற. அப்புறம் வெளிநாடு போவாங்க… அங்க போனா அவ புருசன் அவளை சரியா கவனிக்காம வேலை வேலைன்னு ஓடி அவளை சரியா கவனிக்காம விட்டுடுவான். மனைவி கிட்ட முகம் கொடுத்து கூட பேச மாட்டான்.அவனுக்கு வெளிநாட்டு கல்சர் மோகம், ஆசை எல்லாம் இருக்காது. சுத்த இந்தியானா தான் இருப்பான். அவ பெருசா எதிர் பார்த்த வெளிநாட்டு வாழ்க்கை சலிப்ப கொடுக்கும், விரக்தியாகும். புருசனை நெருங்க கூட முடியாது. அப்ப தான் பக்கத்து வீட்டு ஆள் கூட பழக்கம் ஏற்படும். அவன் அந்த ஊர் ஆள். அந்தப் பழக்கம் இல்லை மீறிய உறவா மாறிடும். ரொம்ப தூரம் போன பின்னாடி தான் உணர்வு வரும்…”
பிரகாஷ் நடுங்கும் மனதை அமைதி படுத்தி கேட்டு கொண்டு இருந்தான்.
“மனைவியோட எல்லை மீறிய வாழ்க்கை தெரியாம, தன் வேலையில் ஜெயிச்ச பின்னாடி, மனைவி பக்கம் திரும்புவான். அவளுக்கு புடிச்ச மாதிரி நடந்துப்பான். அவ எதிர்பார்ப்பை எல்லாம் நிறைவேத்துவான். இது எல்லாம் அவளுக்கு குற்ற உணர்ச்சியை தூண்டி, அழுத்தம் கொடுக்கும். அந்த அழுத்தம் நாள் போக தாங்க முடியாம, கோபம் பெருகும். வழி தவறி போன தன் மேல, வழி வகுத்த கணவன் மேல… அவன் சரியா தன்னை கவனிக்காம விட்ட தால தான், தப்பு பண்ணினோம்ன்னு ஒரு எண்ணம். அது அழுத்தம் கொடுக்க, தாங்க முடியாம புருசனை கொன்னுடுவா…”
“என்ன…” அதிர்ந்து போனான் பிரகாஷ்.
“ம்ம், கத்திய வச்சு. அதுவும் எப்படி அக்னியை வளம் வந்து கை பிடிச்ச ஏழு முறைக்கும் ஏழு தடவை கத்தியால் குத்தி கொன்னுவா…”