கங்கா தான் அழுதே ஓய்ந்தார். ஷாலினி முகம் அமைதியாக இருந்தாலும், உள்ளுக்குள் புயல் அடித்தது. வெறும் உடல் தேவையை கொண்டு மட்டும் இவள் பிரகாஷை நாடா வில்லை. அவனை நிரம்ப பிடித்தது. ஒரு நாளில் அத்தனை முறை அவன் முகத்தை ரசிப்பாள். உள்ளங்கையில் வைத்து தாங்கினான். அவள் கேட்டது எல்லாம் வாங்கி குவித்தான்.
ரொம்ப நம்பிக்கை பிரகாஷ் மீது அவளுக்கு… ஆனால், வந்ததில் இருந்து ஒரு முறை கூட அவளை நிமிர்ந்து பார்க்க வில்லை. அவன் பார்வை முழுவதும் சாலா மீது தான் இருந்தது. கடைசியில் என் மனைவி, பிள்ளை என்று ஒதுங்கி கொண்டதோடு நல்லவன் என்ற பட்டத்தையும் தக்க வைத்து கொண்டான். ஆனால், ஷாலினி தான் அடுத்தவள் புருசனை அபகரித்தவள், குடி கெடுத்தவள், நடத்தை கெட்டவள் என்ற பட்டத்தோடு தலை குனிந்து நிற்கிறாள். பிரகாஷ் துணை நின்றாள், இதை எல்லாம் எளிதாக கடந்து இருப்பாள். ஆனால், அவனும் ஒதுங்கி நின்று மொத்த தப்பையும் இவள் மீது திருப்பி விட்டான். இன்று நிதர்சனம் வலித்தது.
தீனதயாளன் தீர்ப்பு சொன்னதோடு பஞ்சாயத்தையும் முடித்து வைத்தான். யாரையும் இருக்க விட வில்லை. குடும்ப பிரச்சனை சபை ஏறியதே அசிங்கம். இதை ஊர் பார்க்க பேச வேண்டுமா… கணவன், மனைவியாக பேசி திர்த்து கொள்ளட்டும்.
சுலோச்சனா மட்டும் சாலா அருகில் வந்து, “சாலா, எம் பிள்ளை மேல இந்த ஒன்னா தவிர வேற என்ன தப்பு இருக்கு. நீ பழைய படி அவன் கிட்ட பேசு, வேலைக்கு போகாம மொத மாதிரி அவன் கூடவே இரு சாலா. இனி உன்னை விட்டு தப்பு பண்ண மாட்டான். எனக்கு தெரியும் நீ தான் அவனுக்கு மொத… அவன் ஷாலினி பின்னாடி போனது தான உனக்கு பிரச்சனை. பார்த்தியா அந்த ஷாலினி வந்து நிக்குறத, அப்பவும் எம் மகன் என்ன சொன்னான், எம் பொண்டாட்டின்னு உன் பக்கம் தான் நிக்கிறான். புத்தியோட சரிகட்டி வாழ பாரு…” என்று சொல்ல, சாலா மெளனமாக தான் நின்றாள்.
எல்லோரும் வெளியேற சாலா தனித்து நின்றாள். இந்த கோவிலில் வைத்து தான் அவளுக்கு பூ வைத்தார்கள். இங்கு தான் அவனை கணவனாக மனதில் வாரினாள். குளத்தின் அருகில் சாலா நிற்க,
“சாலா…” தயங்கியே வந்தான் பிரகாஷ்.
நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள், “சாலா, என் பக்க விளக்கம் எல்லாம் சொல்லிட்டேன். பிளீஸ் சாலா, எனக்கு ஒரு வாய்ப்பு கொடு. எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு, நீ எனக்கு எவ்வளவு முக்கியம்ன்னு… இனி என் மனசு ஷாலினி பின்னாடி ஒரு நாளும் போகாது சாலா. நீ என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துகிறேன். ஆனா, ஒன்னு சாலா, காலத்துக்கும் எனக்கு நீ மட்டும் தான். அதிலிருந்து இனி நான் மார மாட்டேன்…”
“நடந்த தப்புக்கு என்னால விளக்கம் கொடுக்க முடியாது. மன்னிப்பு மட்டும் தான் கேட்க முடியும். நாம் வாழ்ற வாழ்க்கை தான் உனக்கு மாற்றம் தரும். எனக்கு நம்பிக்கை இருக்கு என் காதல் மேல இல்லை. ஆனா, உன் காதல் மேல நம்பிக்கை இருக்கு. என்னை விட்டு உன்னால ரொம்ப நாள் இருக்க முடியாது…” என்னவோ பிரகாஷ் சொல்லி கொண்டு இருக்க,
“அதனால் தான் ரொம்ப ஈசியா தப்பு பண்ணிட்டீங்கல்லா…” என்று சாலா கேட்க.
“என்ன சாலா சொல்ற, எனக்கு புரியலை…”
“உங்களுக்கு நல்லா தெரியும். என் புருஷன் தான் என் உயிர்ன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். என்னால உங்களை விட்டு கொடுக்கவே முடியாது. நீங்க இல்லாம என்னால வாழ முடியாது. நீங்க எனக்கு மூச்சு காத்து மாதிரி, சுவாசம் இல்லாம உயிர் எப்படி இருக்கும்…”
“உங்க மேல நான் வச்சு இருந்த காதல் தான் உங்க நம்பிக்கை. நீங்க தப்பே பண்ணினாலும் நான் உங்களை விட்டு போக மாட்டேன்னு அப்படி ஒரு நம்பிக்கை. பொதுவா எல்லா மனைவிகளும் அப்படி தான. புருசன் தப்பா போனா ஒரு பொண்டாட்டி என்ன செய்வா?… ஒன்னு அனுசரிச்சு வாழணும், இல்லன்னா திருத்தி வாழணும். ஆனா, பிரிவுன்னு ஒன்னை எடுக்க பெரும்பாலும் யாரும் முயல மாட்டாங்க. ஏன்?..”
பிரகாஷ் புரியாமல் மனைவி முகம் பார்த்தான்.
சமூகம், பொருளாதாரம், பிள்ளைகள் எல்லோருக்கும் முன்னாடி புருசன். அந்த ஒத்த வார்த்தையே போதும், உறவை தாங்கி பிடிக்கும். என் புருசன் அந்த வார்த்தைக்கு மதிப்பு தெரியுமா… தன்னோடு ஒரு அங்கமாக நினைச்ச புருசனை விட்டு கொடுக்க முடியாம தான். தனக்கு தானே ஒரு முக முடி போட்டு என் புருசன் திருந்திட்டாங்கன்னு தன்னையே ஏமாத்தி ஒரு வாழ்க்கை வாழ்றாங்க…”
“ஊர் என்ன சொல்லும், சொகுசு பார்த்து சேர்ந்துகிட்டா… ஆம்பிளை தப்பு பண்ணாலும் பொண்டாட்டி விட்டு போகலை. அது தான் தப்பு பண்ற ஆம்பளைகளுக்கு வசதின்னு பலரும் பேசுவாங்க. தன்னோடு காதலை மறக்க முடியாம, தனக்காக தன்னோடு போராட முடியாம தான் ஒரு பொண்ணு அனுசரிச்சு போறா…”
“இது பெரும்பாலான ஆம்பளைக நம்பிக்கை. நான் என்ன பண்ணினாலும் எம் பொண்டாட்டி என்ன விட்டு போக மாட்டான்னு… நீங்களும் அந்த வகை தான். நீங்க எனக்கு தாலி கொடி சொந்தம் தான். அதை வச்சு தான் உறவா, உயிரா நினைச்சேன். கணக்கில்லாத அன்பு எனக்கு உங்க மேல… அதை ஒரு வார்த்தையில சொல்லவே முடியாது. ஆனா உணர முடியும். நீங்க ஏங்க உணராம போனீங்க…”
“சாலா…” பிரகாஷ்க்கு வலித்தது.
“ஆபீஸ் விட்டு வரும் போது நீங்க காபின்னு கேட்காமவே உங்க கையில தருவேன் தானே, அங்க என் காதலை நீங்க உணரலையா… பண கஷ்டம்ன்னு நிக்கும் போது நீங்க சொல்லாமவே என் நகையை தூக்கி கொடுத்தேன்னே, அதுல என் அன்பை உணரலையா… உங்களை தான் நான் கட்டிகிட்டேன், உங்க வீட்டு ஆட்களை நான் ஏன் பார்க்கணும்ன்னு சொல்லாம, உங்களுக்காக, உங்க முகத்துக்காகவே இழுத்து போட்டு வேலை செய்வேனே, அதுல என் அன்பை நீங்க உணரல…”
நான் எடுக்குற துணியில் இருந்து வாங்குற பூ வரைக்கும் உங்களுக்காக மட்டும் தான். காலையில எந்திரிச்ச உடனே பாத்ரூம் போவீங்க. சின்ன முக சுளிப்பு கூட இருக்க கூடாதுன்னு உங்களுக்கு கால் மணி நேரத்துக்கு முன்னாடியே சுத்தமாம் பண்ணி வைப்பேன். ஹாப்பியா நாள் தொடங்க. நீங்க நினைக்கலாம் இது எல்லாம் வீட்டுல இருக்குற பொம்பளைங்க எல்லாரும் செய்யிற வேலை தானன்னு… ஆமா, ஆனா யாருக்காக செய்றோம்ன்னு ஒன்னு இருக்கு தான…”
“நான் செய்ற, செஞ்ச எல்லாமே என் புருசனை சார்ந்து தான். அதுவும் ஒரு நாள், ரெண்டு நாள் இல்லை. பதினெட்டு வரும், முழுசா உங்களுக்காக மட்டுமே வாழ்ந்து இருக்கேன். ஆனா, நீங்க சொல்றீங்க, உங்களுக்கு நேரம் ஒதுக்கல, உங்களை கவனிக்கலன்னு… உங்க மக வயசு என்ன?… வெறும் பன்னிரண்டு வயசு தான். பாப்பா இந்த மஞ்சள் கலர் உனக்கு அழகா இருக்கும்ன்னு சொன்னா, “நோ ம்மா, என் டிரஸ் என் சாய்ஸ்…” ரொம்ப கேஷுவல சொல்ற. இந்த விசாலாட்சி பெத்த பிள்ளைக கிட்ட பாடம் படிக்கிறேன். நான் பெத்த பிள்ளை கிட்ட இருக்குற விரிவான மனப்பான்மை எனக்கு ஏங்க இல்லாம போச்சு…” கண்களில் நீர் துருத்தியது.
“உங்க வாழ்க்கை உங்க விருப்பப்படி, உங்க பிள்ளைக வாழ்க்கை அவங்க விருப்பப்படி. இந்த பைத்தியகாரி மட்டும் என் வாழ்க்கை என் குடும்பம்ன்னு ஏன் நினைச்சேன். எனக்கே புரியலை. நான் ஆசைப்பட்ட சேலை எடுக்க முடியாம போச்சுன்னு வருத்தப்படாம என் புருசன் ஆசை பட்ட டிரஸ் போட்டு இருக்கார்ன்னு பெருமை பட்டு இருக்கேன்…” கைகளால் கண்களை துடைத்து கொண்டவள்.
“எவ்வளவு முட்டாள் நான்… ஹால்ல உட்கார்ந்து நீங்க சிரிச்சா, கிட்சன்ல இருக்குற என் முகத்துல சிரிப்பு எட்டி பார்க்கும். உங்க சந்தோசம் தான் என் சந்தோசம், உங்க வலி, என் வலி, உங்க முகம் சோர்ந்து எனக்கு சிரிப்பே வராது. காலையில நீங்க சரியா சாப்பிடலைன்னா அன்னைக்கு முழுக்க எனக்கு வேலையே ஓடாது. ராத்திரி நீங்க சாப்பிட்டா மட்டும் தான் நிம்மதி. இப்படி என்னோட ஒவ்வொரு நிமிசமும் உங்களுக்கானது மட்டும் தான்…”
“அவ்வளவு ஏன் கொஞ்ச நேரத்துக்கு முன்ன, ஊர் முன்னாடி நீங்க கால்ல விழுந்திங்க பாருங்க, அப்ப கூட எவ்வளவு மரியாதையா வாழ்ந்த மனுசன், எப்படி தரம் தாழ்ந்து போனாரேன்னு என் கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வழியுது…”
“சாலா, என்னை மன்னிச்சிடு. இதை தவிர எனக்கு வேற வார்த்தை சொல்ல தெரியலை…” பிரகாஷ் கண்களிலும் நீர் கொட்டியது.
“இப்பவும் நான் ஏமாளி தான் இல்லா…” விரக்தியாக கேட்க.
“விசாலாட்சி…” என்றான் புரியாமல்.
“நான் தான் சொன்னேன்ல என் வாழ்க்கையே உங்களுக்கானது தான். உங்க முகத்தை பார்த்தே உங்க நினைப்ப சொல்ற எனக்கா புரியாது. நீங்க செஞ்சது தப்புன்னு உங்களுக்கு தெரியும். அதை நினைச்சு குற்ற உணர்ச்சி இருக்கு. அது எதனால், உங்களையே சுத்தி வந்த உங்க பொண்டாட்டி பிரிஞ்சு போனதால, உங்க பிள்ளைக ஒதுங்கி நிக்கிறதால, உங்க கௌரவம், மானம், மரியாதை, அந்தஸ்து போனதால வந்த குற்ற உணர்ச்சி. நம்மளை மட்டுமே நினைச்சு வாழ்ந்து வந்த ஒரு பைத்தியத்துக்கு துரோகம் பண்ணிட்டோம்ன்னு வருத்தபடலையே…”
“போலீஸ் ஸ்டேசன் வரை போய், ஊர் முன்னாடி அசிங்க படுத்தி, அவமான பட்டு, சொந்தம் எல்லாம் ஒதுக்கி வச்ச பின்னாடி உங்க தப்பை உங்களுக்கு உணர வச்ச அப்புறம் உங்க கிட்ட இருந்து ஒரு மன்னிப்பு வரும். அப்படி எல்லாம் உங்களை இழுத்து பிடிச்சு எனக்கு என்ன ஆக போகுது. நீங்க தான் என்னைக்கோ என்னை புதைச்சுட்டீங்களே…”
“தப்பு பண்ணிட்டேன், மன்னிச்சுருன்னு நீங்க நிக்குரீங்க. விசாலாட்சி புருசன் தப்பே பண்ணி இருக்க கூடாதுன்னு நான் நினைக்கிறேன். ரெண்டும் வேற… என் காதலை, அன்பை உணராத நீங்க, எப்படி உங்க தப்பை உணருவீங்க, அப்படி உணரும் போது தான் விசாலாட்சி வலி தெரியும். அந்த வலிய உணர நாளாகும்…” என்றவள், நிமிர்ந்து நின்றாள். முகம் ஒரு தெளிவாக இருந்தது.
“இன்னைக்கு நான் சொல்றேன். விசாலாட்சி ஜெய பிரகாஷ் சொல்றேன். நல்ல கேளுங்க, எந்த வாழ்க்கை உங்களுக்கு மூச்சு முட்டுதுன்னு சொன்னீங்களோ, அந்த வாழ்க்கையில இருந்து உங்களை விடுவிக்கிறேன். யாருக்காக நீங்க உங்க வாழ்க்கையை விட்டு ஓட்டுறேன்னு சொன்னீங்களோ, அவங்களுக்காக தான் இனி நான் ஓட போறேன். எந்த வாழ்க்கை உங்களுக்கு சுமையா இருக்கோ, அந்த வாழ்க்கை இனி என் தோல்ல வச்சு நான் சுமக்குறேன்…”
“விசாலாட்சி…” என்று அதிர்ந்து போய் நெஞ்சில் கை வைத்தான் பிரகாஷ்.
“ஆடுங்க, எவ்வளவு தூரம் உங்களால ஆட முடியுமோ, அவ்வளவு ஆடுங்க. உங்க இரத்தம் சுண்டி போற வரைக்கும் உங்க ஆட்டம் இருக்கும் தானே. எல்லா மனுசங்களும் அடங்குறதுக்கும் ஒரு நேரம் வரும். உன் ஆட்டமும் ஒரு நாள் அடங்கும்… அன்னைக்கு விசாலாட்சிய தேடாதீங்க…”
“நீங்க என்னை பத்தி சொன்ன அத்தனை குறைகளோட இருக்குவ தான் விசாலாட்சி. அது தான் என் அடையாளம். அன்பு வைக்கிறது என் குணம் அது மாறாது. நான் அன்பு வச்ச ஆள் தான் தப்பு, என் அன்பு தப்பு கிடையாது. என்னை நம்பி எம் பிள்ளைக இருக்காங்க, எனக்கான ஓட்டம் இனி தான்…” என்று தெளிவாக சொன்னவள், ஒரு அடி முன்னே சென்றாள்.
“கட்டில்ல வர உறவு மட்டும் தாம்பத்தியம் இல்லை. நமக்கான பொறுப்புகள் மறைந்து, கடமைகள் தளர்ந்து, கூனு விழுந்த முதுகும், நரைச்ச மண்டயும், சுருங்கி போன உடலும்மா ஒரு காலம் வருமே… அங்கேயும் கூட நிக்க உடன் வருமே ஒரு உறவு. புருசன், பொண்டாட்டின்ற உறவு, நடுங்குற கையை தொட்டு நான் இருக்கேன்னு கூட நிக்கிற வாழ்க்கை துணை தோல்ல சாயிற சுகம் தான் உண்மையான தாம்பத்தியம்… அந்த ஒரு வாழ்க்கையை தான் எனக்காக, நான் உங்களோடு வாழ நினைச்சது…”
. “நம்மளை பெத்தவங்களும், நாம பெத்தவங்களும் ஒரு நாள் மாறி போவாங்க. காலத்துக்கும் கை பிடிக்க போறது கட்டுன உறவு தான். புருசன், பொண்டாட்டி வர செலவு கணக்கு பாக்குற மாதிரி. நான் தினமும் ராத்திரி உட்கார்ந்து உங்களுக்காக இவ்வளவு தியாகம் செய்தேன், இவ்வளவு விட்டு கொடுத்தேன்னு அதனால் எனக்கு நீங்க உண்மையா இருக்கணும்ன்னு எடுத்து சொல்றத தாம்பத்தியம். அது வாழணும், உணரணும். யாரும் சொல்லாமவே என் பொண்டாட்டி வாழ்றது எனக்காகன்னும், என் புருசன் கஷ்ட படுறது எங்களுக்காகன்னு ஒரு கணவனும், மனைவியும் ஒருத்தருக்கொருத்தர் உணர்ந்து வாழ்வாங்க பாருங்க அது தான் தாம்பத்தியம்…”
நீங்க யாருக்கும் பதில் சொல்ல வேணாம். தினமும் எந்திருச்சு கண்ணாடி பாக்குறீங்க தான, நேருக்கு நேர் உங்களை பார்த்தே கேளுங்க, நீங்க வாழ்கிற வாழ்க்கைக்கு அர்த்தம் என்னன்னு… ஆனா நான் நிப்பேன். எனக்கு நான் உண்மையா, நேர்மையா வாழ்கிறேன்னு நிப்பேன். பத்து வருசம் கழிச்சு கூட என் வாழ்க்கையை திரும்பி பார்த்தா, அதுல உண்மையும், நேர்மையும் இருக்கும். உங்க வாழ்க்கையை நீங்க திரும்பி பார்த்தா என்ன இருக்கும். கெட்ட எண்ணம் கொண்டவங்களுக்கு தான் வாழ்க்கைன்னா… பூமியில சாமி எதற்கு… நான் கும்புடர்து சாமிய தான். திக்கற்றவனுக்கு தெய்வம் தான் துணை…” என்றவள் கணவனை திரும்பியும் பார்க்காமல் சென்று விட்டாள்.