தேவி பின் வாங்க வில்லை. சாலாவுடன் மதுரைக்கு செல்வதில் உறுதியாக நின்றாள். பாண்டியம்மாள் எதோ சொல்ல வர,
“விடு பாண்டி… மருமக போய் வரட்டும். கொஞ்ச நாளுக்கு சாலாக்கு துணைக்கு இருக்கட்டும். சாலா வும் நம்மளை விட தேவிகிட்ட நெருக்கம் அதிகம். உன்னால ரெண்டு நாள் கூட அங்க தாக்கு பிடிக்க முடியாது…” என்று கணவர் அழுத்தமாக சொன்ன பின், வேற வழி இல்லாமல் அமைதியாகி கொண்டார் பாண்டியம்மாள்.
சாலா பொருட்களை எடுத்து வைக்க உள்ளே செல்ல, பின்னாடியே வந்தது சித்ரா தான். திரும்பி கேள்வியாக சாலா பார்க்க,
தன்னை நிலைப்படுத்தி, கலங்கிய கண்களில் நீர் வெளிவராமல் தடுத்து, ஒரு பெருமூச்சில் தன்னை அடக்கிய சித்ரா.
“அக்காவ நல்லா பார்த்துக்கோங்க. எனக்கு தெரியும் நீங்க அவளை நல்லா தான் பார்ப்பீங்க. ஆனாலும் சொல்ல தோணுச்சு. இனி அவ அங்க தான் எனக்கு தெரியும். இனி இங்க வரமாட்டா… என்னால புரிஞ்சுக்க முடியுது…” என்று சொல்லும் போதே கண்களில் நீர் கட்டி நின்றது.
“சித்ரா…” என்று சாலா அவளை தொட, பட்டென்று கட்டி கொண்டாள்.
பொங்கி எழுந்து ஒரு கேவல் வெளி வர துடித்தது. அடக்கி கொண்டாள். அடக்கி தான் ஆக வேண்டும். இஷ்டப்படி உணர்வுகளை கூட ஒரே குடும்பத்தில் வெளிபடுத்த முடியாது.
“சித்ரா அழுகாத… மதினிய நான் பார்த்தபேன். நீ கவலையை விடு…” வெறும் வாய் சொல்லாக தான் சாலா சொன்னது.
உண்மையில் தேவியின் மன வலியை எவ்வாறு போக்க முடியும். ஒன்று காலத்தையே மாற்ற வேண்டும், இல்லையேல் காலம் தான் மாற்ற வேண்டும்.
கண்களை அழுந்த துடைத்த சித்ரா,
“எல்லாம் சரியா வரும்ன்னு தான் நினைச்சோம். என் சொந்த அக்கா, அவளுக்காக ஒரு குழந்தை பெத்து கொடுக்க போறேன். அவ்வளவு தான் நான் யோசிச்சேன். பெரிய யோசனை எல்லாம் இல்லை. ஒரே வீடு, ஒன்னாவே இருக்க போறோம், வேற என்ன வேண்டும். மத்தவங்க சொல்லும் போதும் எளிதா தான் தெரிஞ்சது. ஆனா…”
“தாம்பத்திய உறவு எனக்கு சரியா தெரியலை. என் வயசுக்கு வாழ்க்கையை விட்டு கொடுத்து தவமா நிக்க முடியுமானு நான் நினைக்கல. சத்தியமா சாலா… காவ்யா எனக்கு பொறக்குற வரை மாமாவ என் புருசன்னு நான் நினைச்சதே இல்லை. ஒரே மாசத்துல பிள்ளை தங்குணதும் எனக்கு விடுதலை தான். அப்படி தான் இருந்துச்சு. அக்கா கூடவே தான் இருப்பேன். அதுக்கப்புறம் தான் என் மனசு தடுமாறி போச்சு…” என்று நிலம் பார்த்தவள்,
“குழந்தை பிறந்ததும் எனக்குள்ள ஏதோ ஒரு உணர்வு… மாமாவா பாக்குற பார்வை மாறிடுச்சு. குழந்தையை தூக்கிட்டு என்னோடு சேர்ந்து நிக்கும் போது இது என் குடும்பம், எனக்கானதுனு எண்ணம். மாமா பக்கத்துல வந்தாள் பயந்து போற நான்… அப்புறம் அவர் வருகையை எதிர்பார்க்க ஆரம்பிச்சேன். அவரை தேடினேன், அவர் கைக்குள்ள இருக்க ஆசைப்பட்டேன்…” கண்ணீர் வழிந்த வண்ணம் தான் இருந்தது.
“அத்தோடு இருந்தா பரவாயில்லாம இருக்கும். ஆனா, பொம்பளை புத்தி பின் புத்தி தானா. என் புருசன்கிட்ட எனக்கான அங்கீகாரத்தை எதிர் பார்த்தேன். அவருக்கு எல்லாமா நான் இருக்கணும்ன்னு பேராசை. என் அக்காவுக்காகன்னு தொடங்கிய என் வாழ்க்கை எங்க, எப்படி என் மனசு மாறி போச்சுன்னு தெரியலை சாலா. நான் செய்யிறது சரின்னும் தோணும், தப்புன்னும் தோணும். தேவி முகம் பார்க்கும் போது எல்லாம் குற்ற உணர்வு கொள்ளும். ஆனாலும் மனசு உன் புருசன் தான்ன தப்பு என்னன்னு கேட்கும்…” முகத்தை துடைத்து கண்ணீரை அடக்கினாள்.
சாலா பார்த்தவாறு தான் நின்று இருந்தாள். தேவி மூலம் தான் சித்ரா பழக்கம் என்றாலும் இவர்களுக்கிடையே நல்ல நட்பும் உள்ளது. கல்யாண பேச்சு ஆரம்பத்திலேயே தடுத்தது சாலா தான். அதெப்படி ஒரு கணவனை இருவர் பங்கு கொள்ள முடியும்… ஆனால் சித்ரா கேட்க வில்லை. வயதுக்கு மீறிய பக்குவத்தில் இருந்தாள். என் அக்காக்காக என்று குடும்பம் சொன்னதற்கு எல்லாம் தலையாட்டினாள்.
ஆனால் நடந்தது, கிட்டத்தட்ட பதினாறு ஆண்டுகள் கடந்து போனது. உண்மையில் அதுவே பெரிய விசயம். சாலாவால் ஒரு வாரம் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை. தேவி சொன்னது போல அவர்களே சம்மதித்து, முன் நின்று நடத்தி வைத்த திருமணம் என்பதால் முடிந்தளவு இழுத்து பிடித்து கொண்டு போயிருக்கிறார்கள்.
சித்ரா மனதிலே இவ்வளவு என்றால் தேவியின் மனதை என்னவென்று சொல்ல… யார் பக்கமும் நியாயம் சொல்ல முடியாது, யார் பக்கமும் குத்தம் சொல்ல முடியாது. ஆனால் நடந்தது தான் என்ன?…
“இரண்டாவது பிள்ளை, மூணாவது பிள்ளைக்கு எல்லாம் என் மனசு ரொம்ப மாறி போச்சு. என் குடும்பம்ன்ற எண்ணம் என்னை ஆட்டி வச்சது. நீயும், உங்க அக்காவும் விசேஷம், கோவில் திருவிழா, ஏதாவது முக்கியம்ன்னா வருவீங்க தானா… நீங்க எல்லாம் புருசன், பிள்ளைன்னு போக வர இருக்கும் போது என் வாழ்க்கை எனக்கு வித்தியாசமா இருக்கும். ஒரு பூ வாங்கினாலும், புடவை வாங்கினாலும் எனக்கு மட்டும் தான்னு எடுக்க முடியாது. தனியா சர்ப்ரைஸ் எதுவும் கிடையாது. ஒரு ஆளுக்கு வாங்கி ஒரு ஆள விடமுடியாது இல்லையா… அவ்வளவு ஏன் மன்ஸ்கு விட்டு சண்டை கூட போட முடியாது. ஏன்னா… நாங்க போடுற சண்டைக்கு மதிப்பு இருக்காது. தேவி கூட சண்டையா சாப்பாடு போடவும், துணி துவைக்கும் சித்ரா இருக்கா… அதே மாதிரி தான் எனக்கும்… எல்லாம் எனக்கு அழுத்தம் கொடுத்தது. யாரும் கட்டாயபடுத்தாம நானே சரின்னு சொல்லி நடந்த கல்யாணம். என்னால எதிர்க்கவும் முடியலை. என்னன்னு எதிர்க்க முடியும். என் அக்கா புருசனை தானே நான் கட்டி இருக்கேன்…”
“சித்ரா, உம் மனசுல இவ்வளவு விசயம் இருந்ததா…” சாலா அதிர்ச்சியோடு கேட்க.
நாங்க ரெண்டு பேரும் அக்கா தங்கச்சி இல்லையா. எங்களால சக்களத்தி சண்டை கூட போட முடியாது. ஆனாலும் எம் மனசு என்னவோ எதிர் பார்க்குது. அது தப்பு தான். ஆனாலும் என்னால போராட முடியலை…” என்றவாறு தன் கழுத்தில் கிடந்த தாலியை தூக்கி காட்டியவள்,
“இது கொடுக்குற சொந்தமும், வயித்துல சுமக்கிற பிள்ளை கொடுக்குற பாசமும் பங்கு போட முடியாதுன்னு எனக்கு தெரியலை… ரொம்ப ஈசியா முடிவு எடுத்தேன், காலத்துக்கும் சுமக்க முடியாம தள்ளாடி நிக்குறேன்…”
“நீ சந்தோஷமாகவே இல்லையா சித்ரா…” படபடப்பாக வந்தது சாலாக்கு.
“சந்தோசமா இல்லாமையா மூணு பிள்ளை பெத்தேன்…”
“அப்புறம்…” சாலா குரலில் லேசான கோபம் எட்டி பார்த்தது. ஏனெனில் வாக்கு வாதம் செல்லும் பாதை அப்படி…
அது எவ்வாறு என்றால் முடிந்தளவு தேவியை தான் வீட்டில் தள்ளி வைத்து பார்த்து இருக்கிறாள். அதற்காக சண்டையும் போட்டு இருக்கிறாள். கோவில், கல்யாணம், விசேஷம், வளைகாப்பு என்று எந்த நல்ல காரியத்துக்கும் தேவியை முன் நிறுத்த மாட்டார்கள். சித்ரா தான் முன் நிற்பது.
அஞ்சனா வயித்தில் இருக்கும் போது கூட தாய்மாமன் வீட்டு தங்க வளையல் போட்டது சித்ரா தான். முதல் பானையில் பொங்கல் வைப்பது, முதல் நாத்து நடுவது, விசேஷங்களில் முன் நின்று பழம் தட்டு வாங்குவது என்று வெள்ளாமை, விளைச்சல் எல்லாம் முன் நிற்பது சித்ரா தான்.
இவர்களில் பௌர்ணமி கோவில் என்று மாதம் மாதம் வரும். அப்போது எல்லாம் பெண்கள் மற்ற பெண்களுக்கு வளையல், குங்குமம், பூ, இனிப்பு, பழம், தேங்காய் எல்லாம் வழங்குவார்கள்.
இதுவரை பாண்டியம்மாள், மீனாட்சி, விசாலாட்சி என்று கொடுத்து வந்தவர்கள். சித்ரா வந்த பின் அவள் தான் மாதம் மாதம் கொடுப்பது. தேவி கொடுத்தது இல்லை, அவள் கொடுத்தாலும் வாங்க மாட்டார்கள். சுமங்கலி என்று இல்லாமல் கன்னி பெண்களுக்கும் கொடுக்க படும் என்பதால் தேவி கையால் யாரும் தொட மாட்டார்கள்.
அவ்வளவு ஏன் சொந்தத்தில் பெண் பார்க்க, பூ வைக்க, ஜாதகம் பார்க்க போன்ற பேச்சு வார்த்தையில் தேவி நிற்க மாட்டாள். கோவிலுக்கு தேவி செல்வாள் தான். அதுவும் சித்ராக்கு குழந்தை பிறந்த பின் அங்கும் செல்வதில்லை. திரு குமரன் உடன் அவள் கலந்து கொள்ளும் ஒரே இடம் சாவு வீடு மட்டும் தான். அங்கு யாரும் முக்கி முனங்க மாட்டார்கள்.
அப்புறம் எவ்வாறு சித்ரா ஒதுக்க பட்டாள். புரியாமல் விசாலாட்சி பார்க்க, சித்ரா பக்கம் வேறு நியாயம் நின்றது.
“ஒத்த கருவறையில் ரெண்டு பிள்ளைகள் இருக்குற மாதிரி, ஒத்த படுக்கையை ரெண்டு பேரும் பகிர்ந்துக்க முடியாதுனு தெளிவா புரிஞ்சது. மாமாவ அக்கா புருசனா பார்த்த வரைக்கும் ஒன்னும் தெரியலை. அவளோட இருக்க போறோம், அவ வாழ்க்கையை பங்கு போட்டுக்க போறோம். அவ்வளவு தான்… சின்ன வயசுல டிரஸ், பூ, வளையல் எல்லாம் மாத்திகிறது இல்ல. அக்காக்கு கல்யாணம் ஆகுற வரை நாங்க ரெண்டு பேரும் ஒரு படுக்கை தான். என்ன வித்தியாசம் இருக்க போகுது ன்னு முட்டாள் தனமா, என் வயசுக்கு மீறி முடிவு எடுத்தேன். ஆனா, வயித்துல பிள்ளையோ டு நான் நிக்கும் போது மாமா அக்கா ரூம்ல போய் கதவ அடைச்சா எனக்கு எவ்வளவு வலிக்கும்… அதுக்கு எல்லாம் யாரும் மதிப்பு கொடுக்கல. பிள்ளைக பெருசாகவும், விவரம் தெரியவும் தான் மாமா தேவி அக்கா அறைக்கு செல்றது இல்லை…” சித்ரா சொல்ல, சாலா மனம் தேவிக்காகவும் வருந்தியது.
பிள்ளைகள், புருசன் என்று சித்ரா ஒரு அறையில் இருந்தால் அங்கு தேவி நிலை… சொல்வதற்கு ஒன்றும் இல்லை வலி தான். சித்ராவின் பதிலில் சாலா வின் மனதில் சுள்ளென்று ஒரு கேள்வி…
“ஒரு புருசனை பங்கு போட்டுக்க தானே ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணீங்க…” கடுப்பாக சாலா கேட்டாள். பின்ன எத்தனை முறை சொல்லி இருப்பாள்.
“ஆமா, இல்லைன்னு சொல்லலை. ஆனா, பங்கே போட்டுக்க முடியாத உறவு தான் தாம்பத்தியம்ன்னு தெரியாம போச்சே…” என்றாள் சித்ரா அழுகையோடு.
“அத்தைக்கு எப்பவும் தேவி வேலை செஞ்சா தான் திருப்தி. அவங்க மருமகன்னு சொல்றதும் தேவிய தான். குறை சொல்லி, திட்டிட்டே இருந்தாலும் சொம்பு தண்ணி கூட தேவி கையில தான்…” சித்ரா சொல்ல, சாலாக்கு அது தெரியும்.
சாலா அடிக்கடி தாய் வீடு வர மாட்டாள். மீனாட்சி வந்தாலும் இழுத்து பிடித்து வேலை செய்ய மாட்டாள். என் வீட்டு வேலையே எனக்கு கொள்ளாது என்பாள். சித்ராக்கு எந்த வேலையும் சரியாக செய்ய தெரியாது. பாண்டியம்மாள் கை வசம் என்பது தேவி மட்டும் தான்.
சும்மா எல்லாம் இல்லை. அவ்வளவு பேச்சு வாங்குவாள். ரொம்ப சுத்தமாக இருக்க நினைக்கும் பாண்டியம்மாக்கு, தேவி தான் வசபடுவாள்.
“முத்தையா மாமாக்கு சொல்லவே வேண்டாம். அத்தைக்கும் மேல, அவர் வாயில இருந்து வாராது எல்லாம் தேவி மட்டும் தான். ரசம் வச்சாலும் தேவி கை மனம் தான். வெள்ளாமைக்கு காசு வந்தா முதல் கணக்கு பாக்குறது தேவி தான். இல்லையில்லை தேவி மட்டும் தான். மாமா கூட தலையிட மாட்டார். வீட்டு நிர்வாகம் எல்லாம் தேவி அக்கா தான். அப்போ நான் அங்க யாரு?…”
இதுவும் உண்மை தான். குமரன், தேவி திருமணம் நடந்து எட்டு ஆண்டுகளுக்கு பின் தான் சித்ரா திருமணம் நடந்து. தேவிக்கு திருமணத்தின் போதே மீனாட்சிக்கு பூ வைத்து முடித்து விட்டார்கள். சாலாவும் சின்ன பெண் என்பதால் எல்லாம் தேவி வசம் தான். விடுக்கென்று கோபித்து கொள்ளும் சாலாக்கும், வெடுக்கென்று பேசும் பாண்டியம்மாளுக்கும் ஒத்து போகாது.
“குமரன் மாமா சொல்லவும் வேண்டாம். அவருக்கு எப்பவும் தேவி தான். அதுவும் என்னை அவளோடு தான் கம்பேர் பண்ணி சொல்றது. இயல்பா வர கோபத்தை கூட என்னால வெளிப்படுத்த முடியாது. உடனே சொல்லுவாங்க தேவி மாதிரி இல்லன்னு. அவர் மனசுல நான் இல்லை, பிள்ளை பெற மட்டும் தானான்னு ஒரு கோபம், இயலாமை. நியாயமான என் மனம் என்னை சுடும். தேவி வாழ்க்கையை தான வாழ்கிறா, அப்புறம் என்ன அவளுக்கு மேல ஒரு எதிர்பார்ப்பு. சொந்த அக்கா வாழ்க்கையை தட்டி பரிச்சுட்டு, முழுசா நீயே வச்சுக்க நினைக்கிறன்னு. ஆனாலும், என்னால மாமாவ விட்டு கொடுக்க முடியலை. அவர் மனசுல நான் நிறைஞ்சு இருக்கணும்ன்னு ஆசை. முதல் நாள் ராத்திரி அக்கா கூட இருந்துட்டு அடுத்த நாள் என் கிட்ட வந்தா, மனசு முல்லா குத்தும். ஆசையா ஏத்துக்க முடியாது. என்னை நெருங்கின மாதிரி, எனக்கு முத்தம் கொடுத்த மாதிரி… எப்படி என்னென்னமோ வந்து போகும்…”
“உதிரி தள்ள முடியாம மூணு பிள்ளை. அத்தோடு அவர் தான் என் புருசன். இது தான் என் குடும்பம். ஊர் முன்ன பந்தாவா புருசன், பிள்ளைன்னு நின்னு என்னாக போகுது. என் புருசன் மனசுல நான் ரெண்டாவது, மாமியார், மாமனார் மனசுலையும் தேவி தான் முதல் நான் ரெண்டாவது தான். தேவிய மதினின்னு சொல்ற நீ என்னை என்னைக்காவது சொல்லி இருக்கியா…”
இதற்கு என்ன சொல்ல, தேவி மருமகளாக வரும் போது சாலா பதினைந்து வயது பெண். மீனாட்சியும் சென்று விட தேவி மட்டும் தான் துணை. இரட்டை ஜடை போடுவது, முந்திரி கொத்து செய்வது, மேக்கப் போடுவது, முதல் முதல் தாவணி, சேலை கட்டி பார்ப்பது, பூ கட்டி பழகுவது என்று சாலாவின் எல்லாமும் தேவியிடம் வந்தது தான். அவளுக்கு தேவி எப்பவும் ஸ்பெஷல். சித்ரா, சாலாவை விட இரண்டு ஆண்டுகள் மட்டும் பெரியவள் என்பதால் பேர் சொல்லி தான் அழைப்பது. மீனாட்சிக்கு தேவியிடம் கூட ஒரு பயம் இருக்கும், சித்ரா குரலை கூட ஒசர விடமாட்டாள். என் பிறந்த வீடு என்ற கர்வம் எப்போதும் மீனாட்சியிடம் இருக்கும்.
சித்ராக்கு கண்களில் நீர் நிற்காமல் வழிந்தது. சாலா முகத்தை கூட பார்க்க வில்லை.
“எல்லோருக்கும் நான் ரெண்டாவது தான். என்னை பெத்தவங்ககளும் அப்படி தான நினைச்சாங்க… அதான்… நான்…” சொல்ல வார்த்தை வர வில்லை.
“என்ன சித்ரா…” படபடப்பாக சாலா கேட்க.
“அதான் என் பிள்ளைகளுக்கு நான் ரெண்டாவதா இருக்க முடியாது. எம் பிள்ளைகளுக்கு நான் மட்டும் தான் தாயா இருக்கனும். அம்மான்னா அது நான் மட்டும் தான்…” நெஞ்சில் அடித்து கொண்டாள் சித்ரா.
“எம் பிள்ளைகளை என் கையிலே வச்சு கிட்டேன். என்னால எம் பிள்ளைகளை விட்டு கொடுக்க முடியலை. அக்காக்கு ஒரு பிள்ளை வேணும்ன்னு அவ புருசனை கல்யாணம் பண்ணி, ஒன்னுக்கு மூணு பிள்ளை பெத்தும் பொம்பளை மனசு ஒரு பிள்ளையையும் விட்டு கொடுக்க மனசு வரலை பாரேன். நான் கெட்ட பொண்ணு தான… எல்லாத்தையும் பங்கு போட்டாச்சு, எம் பிள்ளைகளை பங்கு போட முடியலை. சுயநலம் தான். ஆனா, எனக்கு வேற வழி இல்லை. எங்க அக்கா பாவம். குடும்பத்துக்கு ஒரு வாரிசு வந்துருச்சு. எல்லோருக்கும் சந்தோசம். ஆனா எங்க அக்காக்கு ஒரு வாரிசு இல்லை. அம்மா, அப்பாவா நாங்க மட்டுமே இருந்துட்டோம். அவளை நினைச்சு எனக்கு வலி தான் ஆனா பிள்ளைகளை விட முடியலை…” சித்ரா அழுக.
நெஞ்சில் கை வைத்து நின்ற சாலா கண்களிலும் நீர் கொட்டியது.
பதினாறு வருசம் சித்ரா போராடியும் புருசன் மனதில் ஒரு நிலையான இடம் இல்லை. இருபத்தி இரண்டு வருசமாக ஒத்தை பிள்ளைக்கு தேவி போராடியும் அம்மா என்ற வார்த்தையை தேவி கேட்க வழி இல்லை. என்ன வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
“சித்ரா தொடர்ந்தாள், எங்க அக்காக்கு புரிஞ்சு போச்சு. ரெண்டு பக்கமும் கயிற புடிச்சு இழுத்தா கயிறு அந்து தான் போகும். அதான் அவ பக்க கயிறை என் பக்கம் விட்டுட்டா… நம்ம தான் தங்கச்சி ய உள்ள இழுத்து விட்டோம். அவ வாழட்டும்ன்னு எனக்காக தான் போறா…”
வேற என்ன செய்வாள் பாவம். எப்படியாயினும் தேவி தான் வெளியேற வேண்டும். மூன்று பிள்ளைகள் உடன் இருக்கும் சித்ரா வெளியேற முடியாது. அது நியாயமும் ஆகாது. தேவிக்கு என்ன பிள்ளையா, குட்டியா… அவள் தானே ஒதுங்க வேண்டும். ஒதுங்கி கொண்டாள்.
“சித்ரா அழுகாதா, இனி மதினி என் பொறுப்பு…” பெயருக்கு சொல்லி வைத்தாள்.
குமரன் என்ன சொல்லியும் தேவி கிளம்பி விட்டாள். தங்கையிடம் தலையசைத்து விடை பெற வந்தவள்,
“நல்ல படியா வாழு… உம் பிள்ளைகளை நல்லா பார்த்துக்க… நல்லா இரு…” சித்ராக்கு அழுகை பொங்கியது, அக்காவை கட்டி கொள்ள தோன்றியது. அடக்கி கொண்டு நின்றாள்.
ஒரு பொண்ணுக்கு புகுந்த வீடு, பிறந்த வீடு தாண்டிய அடுத்த வீடு சுடுகாடு தான். தன் தலையில் வேற ஒன்னு எழுதி இருக்கிறது போல…
மதுரை செல்லும் பஸ்ஸில் ஏறி உள்ளே சென்றாள். பஸ்ஸில் இளையராஜா பாடல் ஒலித்து கொண்டு இருந்தது.
தேவி வாழ்க்கையில் இந்த பாட்டை மட்டும் கேட்கவே மாட்டாள். காதை பொத்தி கொண்டு ஓடி விடுவாள்.
“அம்மா எனும் வார்த்தை தான் பல அர்த்தம் தருகிற வாக்கியம்..
எல்லோருக்கும் வாய்க்குமா அதை காதால் கேட்கிற பாக்கியம்…”
உறைந்து நின்ற தேவியை, “மதினி ஏன் நிக்கிரீங்க போய் உட்காருங்க…” என்ற சாலா மூவர் அமரும் இருக்கையில் பிள்ளைகள் உடன் அமர்ந்து கொள்ள, பாடல் தொடர்ந்தது,
“பிள்ளை ஒன்று வேண்டும் என்று எத்தனையோ தாய் குலம்!..
கோவில் குளம் சாமி என்று சுற்றி வந்து வேண்டிடும்…
சுற்றி வந்த போதிலும் பெற்றெடுக்க கூடுமோ!
முக்குளிக்கும் யாருமே முத்தெடுக்க ஆகுமோ!…”
பொங்கி வரும் கண்ணீரை அடக்கி தேவி திரும்பி பார்க்க, சாலா உறக்கத்திற்கு விழுந்த மகளை மடியில் சாய்த்து தட்டி கொடுத்தாள்.
கொதிக்கும் மனதையும், எறியும் வயிற்றையும் கையால் அடக்கி கொண்டு கண்களை மூடி கொண்டாள். அதை மீறியும் கண்ணீர் வெளி வந்தது. பாட்டு காதில் நுழைந்தது.
பெண்ணை ஒரு தெய்வமாய் பேசுகின்ற காரணம், அவள் வாங்கும் தாய்மை தான்!….