தேவி, குமரன் திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் வரை பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லை. குழந்தை இல்லை என்ற ஏக்கம், எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த போதும் அழுத்தம் இல்லை.
தேவி பக்கா மனைவி, மருமகள் என்ற வட்டத்தில் நின்று கொண்டாள். எத்தனுக்கு எத்தன் என்பது போல பாண்டியம்மாளை சமாளிக்கும் ஒரே ஆள் தேவி மட்டும் தான். அவளை முன்னிட்டு குடும்பத்தில் எந்த பிரச்சனையும் வராது. நாத்தனார், அவர்கள் கணவன், பிள்ளைகள் என்று எல்லோரையும் கட்டி இழுத்து விடுவாள். ஒரு குடும்பத்தின் மரியாதை, கௌரவம், வளமை, செழிப்பு, வளர்ச்சி எல்லாம் மருமகள் கையில் தான். அத்தோடு அடுத்த தலைமுறைக்கான நல் வாழ்வும் அந்த வீட்டின் பெண்கள் கையில் தான் என்று சொல்லி வளர்க்க பட்ட பெண்.
அதனால் தான் குழந்தை இல்லை என்ற விசயத்தை சகஜமாக கடந்து செல்ல முடியவில்லை. குழந்தை என்பது தங்களின் அன்பின் ஆதாரம் தானே தவிர, வாழ்வின் ஆதாரம் இல்லை என்பதை பெண் மனமே ஏற்க வில்லை. தனக்கு ஒரு குழந்தை இல்லையே?… என்பதே பெரிதாக தெரிந்தது.
ஊர் உறவுகளும் இதை ஒரு பெரிய குறையாக, வாழ்க்கையை இழந்தது போல, குழந்தை இல்லாமல் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையே கிடையாது என்பது போல பேச ஆரம்பிக்க, பெரிய மன அழுத்தம் தேவிக்கு. இதில் குமரனையும் சேர்த்து குறை சொல்ல… தன்னால் தான் கணவனுக்கு கெட்ட பேர், தன்னால் குடும்பம் தழையாமல் போய்விட்டது. ஒரு பெண்ணாக குடும்பத்தை கட்டி காக்க வில்லை என்று தன்னையே குறைவாக எண்ணி கொண்டாள்.
அடுத்தடுத்து மருந்து, ஸ்கேன், மாத்திரை, கோவில், விரதம், பரிகாரம் என்று மூன்று ஆண்டுகளும் ஒற்றை பிள்ளையே மந்திரம் என்று அலைந்து திரிந்த போதும் மசக்கை என்ற ஒன்று தேவிக்கு கிட்டவே இல்லை.
பாண்டியம்மாள் ஆரம்பித்து விட்டார். குழந்தை, குழந்தை என்று தேவிக்கு அழுத்தம் தாங்க வில்லை. ஒரு கட்டத்தில் தேவியே ஒதுங்கி கொள்கிறேன் என்று சொல்லும் அளவுக்கு குத்தி குடைந்து விட்டார். வீடு, காடு, விசேஷம், கூட்டம் என்று ஒன்று விடாமல் தேவி குறையை தான் அலசுவார். யாரும் தன் மகனை குறை சொல்ல கூடாது அல்லவா…
சாலாவின் திருமணம் வரை பேச்சோடு மட்டும் நிறுத்தி இருந்த பாண்டியம்மாள். விசாலாட்சி ஒரே மாதத்தில் நல்ல சேதி சொல்ல பேய் பிடித்தது போல மாறி விட்டார். வாரிசு , வாரிசு என்று மூன்று முறை மந்தையில் தேவியை நிற்க வைத்து அவளுக்கு இருக்கும் குறையை ஊர் முன் பேசு பொருளாக மாற்றி விட்டார்.
குழந்தை இல்லையா பரவாயில்லை சேர்ந்து வாழுங்கள் என்று யார் சொல்ல முடியும். குழந்தைக்காக, குழந்தைகளை மட்டும் வைத்தே குடும்பத்தை கட்டமைக்கும் சமுதாயத்தில் தேவியின் எதிர்பார்ப்பு மனதோடு மட்டும் தான். சரியில்லாத வாழ்வாக இருந்தாலும் பிள்ளைகளுக்காக மட்டும் குடும்பத்தை இழுத்து செல்லும் தன் போன்ற பெண்களை பார்த்து வளந்தவளுக்கு, குழந்தை இல்லாதது ஒரு குறை தான். ஆனால், அது மட்டுமே கணவன், மனைவிக்காக நிறைவான தாம்பத்திய வாழ்க்கைக்கு முதலாகாது என்ற பெரிதான யோசனைகள் எல்லாம் இல்லை. குழந்தை இல்லாமல் குடும்ப வாழ்க்கை எப்படி?… என்ற கேள்வி தான் முன் நின்றது.
தேவியின் பெற்றோர்கள் தான் சித்ராவை, குமரனுக்கு முடிக்க சொல்லி பேசி வந்தார்கள். வெட்டி விடும் முடிவில் இருந்த பாண்டியம்மாக்கும் இந்த யோசனை சரியாக தோன்றியது. ஏனெனில் தேவியின் பொறுப்பு, வேலை, கச்சிதம் எல்லாம் வேற யாருக்கும் வரும் என்று நம்பிக்கை இல்லை.
தடுமாறிய குமரனை தாயே சரி கட்டி விட்டார். ஒரே குடும்பத்தில் ஒருவனுக்கு இரு மனைவிகள் எனும் போது ஊரே யோசனை சொல்லியது. தவறோ என்று நினைத்த தேவியிடம்,
“இப்பவும் நடக்கிறது தான். இந்த குடும்பத்தை வளர வைக்க தான் மருமகளா நீ வந்த, இப்போ நீயே தடையா இருக்கலாமா?… வாரிசுக்கு வழி விடு தேவி. அது தான் ஒரு பொண்ணுக்கு அழகு…”
“ நம்ம ஆளுகளுக்கு இது ஒன்னும் புதுசு கிடையாதே. குழந்தை இல்லாமா இரண்டாம் திருமணம் எல்லாம் நடக்கிறது தான்…”
“உன்னை ஒதுக்கி வைக்கலையே. நீ தான் மூத்த மருமக, உன் தங்கச்சியே வாரதால சக்களத்தி சண்டை எல்லாம் வாராது. ரெண்டு பேரும் ஒத்துமையா இருப்பீங்க…”
“இதுல என்ன தப்பு இருக்கு, எங்க பெரியப்பாக்கு ரெண்டு சம்சாரம் தான். பேரன், பேத்தி எடுத்து இப்போ வரை ஓத்துமையா இருக்காங்க. ரெண்டு பேரையும் சரிசமமா தான் நடுத்துவாங்க. உங்க வீட்டுலயும் கஷ்டம் தான… சீர் செஞ்சு கட்டி கொடுக்குற அளவுக்கு என்ன இருக்கு. உன் வாழ்க்கையை பங்கு போட்டு குடுக்குறதால குடும்பத்துக்கு நல்லது நடக்கும்ன்னா செய்யிறதுல தப்பு இல்லை…”
“நானும் நிறைய பேர பார்த்துடேன். பிள்ளை யாருக்கு பிறந்ததுன்னு தெரியாத அளவுக்கு ஒத்துமையா இருக்காங்க. இப்பவும் பல இடத்துல ரெண்டு தாரம் இருக்கு…”
“உன் கூட பொறந்த அக்காக்கு நீயே யோசிக்கலன்னா எப்படி… உடன் பொறப்பு ஒருத்தருக்கொருத்தர் அனுசரிச்சு இருப்பீங்க…”
பலவாறு ஊர் சொல்ல, தப்பு என்று சொன்னது விசாலாட்சி, மீனாட்சி மட்டும் தான்.
“ அம்மா, ரெண்டு பொண்டாட்டி எல்லாம் நல்லாவா இருக்கு. அவரசபடாத இன்னும் கொஞ்ச நாள் பாப்போம்…” என்று மீனாட்சி சொல்ல.
“எப்போ உன் மகனுக்கு சம்மந்தம் பண்ண பின்னாடியா?…” இடக்காக பாண்டியம்மாள் கேட்டார்.
“வாடகை தாய் மூலம் பார்ப்போமா அத்தை. இப்போ எல்லாம் சாதாரணமா தான் நடக்குது. அதுல ஒன்னும் தப்பு இல்லை…” மாமியார் குணம் தெரிந்தும் பிரகாஷ் தயங்கி சொல்ல.
“அது ஆகாத பேச்சு மாப்பிளை. ஒரு சொம்பு தண்ணி கூட அடுத்த வீட்டுல வாங்க மனசு வராது. சொந்தம் தவிர வேற எங்கேயும் கை நனைக்க மாட்டேன். அடுத்த வீட்டு திண்ணையில் உட்கார யோசிக்கிற எனக்கு, என் வீட்டு வாரிசு, எவளோ ஊர், பேர் தெரியாத வயித்துலய…” முகம் சுளித்து மருமகனை பார்த்து பேச, அடுத்த ஒரு வார்த்தை பேச வில்லை பிரகாஷ்.
சாலா ஏதோ சொல்ல வர, “அக்கா, தங்கச்சி ரெண்டு பேரும் பதறி அடிச்சு ஓடி வந்த காரணம் எனக்கு தெரியும். பிள்ளை இல்லாத சொத்து, உங்க ரெண்டு பேருக்கு மட்டும் தான்னு நெனைப்பு இருந்துச்சோ…” என்று வார்த்தையை விட அதன் பின் ஒருத்தரும் வாய் திறக்க வில்லை. வந்த வழி சென்று விட்டார்கள்.
இரண்டாம் திருமணம் என்பதால் யாருக்கும் சொல்லாமல் கோவிலில் வைத்து நடத்தி கொண்டார்கள். மீனாட்சி, விசாலாட்சி என்று யாரும் வர வில்லை. இரு மனைவிகளுடன் வாழ குமரனும், பங்கு போட்டு கொள்ள தேவியும், கட்டி கொள்ள சித்ராவும் தயாராக இருக்க யார் என்ன சொல்ல இயலும். ஊர், உறவுகளும் அங்கீகரித்து தான் சென்றார்கள்.
தேவி அதே அறையில் இருந்து கொள்ள, சித்ராக்கு மட்டும் தனி அறை கொடுக்க பட்டது. நெஞ்சை அழுத்தும் வலி இருந்த போதும் அதை அடக்கி கொண்டு தான் நடமாடினாள். சித்ராவும் அக்காவோடு தான் சுற்றி கொண்டு இருந்தாள்.
காவ்யா பிறக்கும் வரை பெரிதாக குடும்பத்தில் பிரச்சனை இல்லை. சித்ராவின் முதல் முகவு உலகிற்கு வந்ததும், கை கொள்ள சந்தோசம் தேவிக்கு தான். பிள்ளையை காண குமரன் வர, ஆசையாக பிள்ளையை தூக்கி காட்டினாள் தேவி.
அவர்களின் இத்தனை வருட தவம் அல்லவா… தேவி கையில் இருக்கும் தன் குழந்தையை வாங்கியவன், ஒரு பூரிப்போடு நகர்ந்து அருகில் சோர்ந்து போய் படுத்து இருக்கும் சித்ராவிடம் கொண்டு சென்றான்.
“சித்து, நம்ம பாப்பா பாரு. அப்படியே என்னை மாதிரி தான். கலர் மட்டும் உன்னை மாதிரி…” தந்தையான சந்தோசத்தில் குமரன் பேச,
பிள்ளை பெற்ற பூரிப்போடு சித்ராவும், குமரன் தோலில் சாய்ந்து கொள்ள, அவளை அணைத்து நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தான். தன்னை தந்தையாக்கி பெருமை படுத்தியவள் இவள் தானே…
ஆனால், இதை எல்லாம் பார்த்து இருந்த தேவிக்கு தான் உள்ளே நொறுங்கியது. “பிள்ளையை நீயா சுமந்தாய், உன்னோடு தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள…” மனமே கேள்வி கேட்க அடக்கி கொண்டாள்.
அடுத்தடுத்து சொந்தமும், உறவும் சித்ராவை கொண்டாடி தீர்த்தார்கள். இவர்களின் வம்சத்திற்க்கு வாரிசு வந்து விட்டது அல்லவா… சித்ரா முகத்தில் ஒரே பெருமையும், பூரிப்பும் தான். பிள்ளை பெற்றவளுக்கு புது சேலையும், குழந்தைக்கு நகையும் வந்து குவிந்தது. வீம்பாக ஒதுங்கி இருந்த அத்தைமார்கள் கூட சித்ராக்கு, குழந்தைக்கு என்று நிறையவே வாங்கி வந்தார்கள்.
ஒரே வீடு என்பதால் இதில் எல்லாம் பாதிக்கப்பட்டது தேவி தான். தன் ஏமாற்றத்தை , வலியை அடக்கியே தான் ஆக வேண்டும். அவளுக்கும் இந்த ஆசைகள் எல்லாம் கொட்டி கிடந்ததே… இப்போது சித்ரா அனுபவிக்கும் எல்லாம் இவளின் நீண்ட நாள் கனவு.
என்ன தான் அழுகையை அடக்கினாலும், முகம் செத்து கிடந்தவளை அறிந்து கொண்டார் பாண்டியம்மாள்.
“ ஏண்டி வயித்தெரிச்சல் புடிச்சவளே!… இம்புட்டு வருசம் கழிச்சு ஒத்த பிள்ளை வந்ததுக்கு சந்தோச படாம, மூஞ்சி சுண்டி திறியிற…” என்று எகிறியவர்,
“பின் பக்கம் சித்ரா தீட்டு துணி, பிள்ளை துணி இருக்கு, துவச்சு போடு…” என்று காட்டமாக சொல்ல,
“நானா…” அதிர்ந்து போய் தேவி கேட்க.
“ஆமா நீ தான். வேற யார் செய்வா… உன் கூட பொறந்தவ தானே… செய்யலாம், தப்பில்லை. அப்படி செஞ்சாலாவது உன் வயித்துல ஒரு புழு, பூச்சி வருதான்னு பார்க்கலாம்…” என்று எகத்தாளமாக சொல்லி சென்றார்.
யாரும் ஒதுக்க வில்லை தான். ஆனாலும், ஒதுக்கி வைக்க பட்டாள் தேவி.
தலை நிக்காத குழந்தையை அணைத்து பிடிக்க தேவிக்கு தெரிய வில்லை. பெற்றவள் என்றாலும் சித்ராக்கும் தெரிய வில்லை தான். சித்ராக்கு சொல்லி கொடுத்தவர்கள் தேவிக்கு சொல்லி கொடுக்க வில்லை.
மூன்று மாத குழந்தையான காவ்யாவை, இசக்கு பிசக்காக தேவி தூக்கி வைக்க, குழந்தைக்கு உறை விழுந்து விட்டது. அதில் குழந்தை அலறி துடிக்க பதறி போனாள் தேவி. எத்தனை சமாதானமும், தாலாட்டும் எடுபடவே இல்லை.
சித்ராக்கு உயிரே இல்லை. பல் கொடுத்தாலும் குடிக்க வில்லை. பயந்து போய் சித்ராவும் சேர்ந்து அழ, பக்கத்து வீட்டு அலமு அத்தை தான் சேதி அறிந்து,
“சித்ரா, குழந்தைக்கு உறை விழுந்து இருக்கும். சேலை எடுத்து வா…” என்று பிள்ளைக்கு உறை எடுத்து பின் தான் குழந்தைக்கு அழுகை குறைந்தது.
“கை மாத்தி தூக்குனா, பிள்ளையை தூக்க தெரியாம அழுத்தி பிடிச்சா, இந்த மாதிரி உறை விழும். அதுக்கு தான் தலை நிக்கிற வரை பெத்தவ சூட்டுல தான் பிள்ளை இருக்கணும்…” என்று பொதுவாக தான் சொன்னார்.
ராத்திரி முழுக்க பிள்ளை சிணுங்கி கொண்டே இருக்க, சித்ராக்கு தூக்கமே இல்லை. பயந்து போய் பிள்ளையையே பார்த்து கிடந்தாள்.
மறுநாள் காலையில் தேவி ஆசையாக பிள்ளையை தூக்க…
“உனக்கு பிள்ளையை தூக்கி வைக்க தெரியலை. கொஞ்ச நாளைக்கு நீ பிள்ளையை தொடாத…” என்ற சித்ரா, அவள் கையில் இருந்த பிள்ளையை வாங்கி கொண்டாள்.
சித்ரா சொன்னது என்னவோ சாதரணமாக தான். ஆனால், வார்த்தை தாக்கியது தேவிக்கு. அதுவும் கையில் இருந்த பிள்ளையை வாங்கி கொண்டது, நெஞ்சை அறுத்தது. என்ன முயன்றும் கண்ணீர் வெளி வந்து விட,
அதை பார்த்து இருந்த குமரன், “ என்ன சித்ரா இது… தேவிய பிள்ளையை தூக்க கூடாது ன்னு சொல்ற?…”
“ஐயோ! தூக்க கூடாதுன்னு சொல்லலைங்க… பிள்ளை வளரட்டும், அக்காக்கு சரியா பிடிக்க தெரியலை…” என்று சித்ரா சொன்ன போதும்,
“உனக்கு மட்டும் சரியா தூக்க தெரியுமா?… எங்க அம்மா சொல்லி தான உனக்கும் தெரியும். நீ பண்றது சரியில்லை…” என்றவன்,
“என்ன சொல்லி நீ இந்த வீட்டுக்குள்ள வந்த நியாபாகம் இருக்கா… தேவிய வச்சு தான் உனக்கு இந்த வாழ்க்கை…” கட்டமாக குமரன் சொல்ல, அவன் வார்த்தையில் அடிபட்டாள் சித்ரா.
குழந்தை பிறந்ததில் இருந்து உள்ளங்கையில் வைத்து தாங்கி கொண்டிருந்தவன். தேவியை ஒரு சொல் சொன்னதும், வரிந்து கட்டி சண்டைக்கு வந்தான். அக்கா கணவன் என்ற நிலை மாறி தன் கணவன் என்று அவனின் மேல் ஆசையை வைத்த மனம் வேற ஒன்றை எதிர்பார்த்தது போல…
“மதினி, மதுரை வந்துருச்சு இறங்குங்க…” என்ற சாலா பையை தூக்க,
ஒரு பெரு மூச்சு விட்டு தன் துக்கத்தை எல்லாம் அடக்கி கொண்டு நாற்பத்தி மூணு வயதில் வேற ஒரு புது வழியை நோக்கி இறங்கினாள். அடுத்து என்ன என்ற பெரிய எதிர்பார்ப்பு எல்லாம் இல்லை. இருக்க இடம், ஏதோ ஒன்று உண்ண உணவு, விதி வந்தால் இறப்பு… இதை எண்ணி தான் தேவி மதுரை வந்தாள்.
பிரகாஷ், மன தத்துவ நிபுணர் முன் அமர்ந்து இருந்தான். சாரு பாலா, அவனுக்கு நன்கு தெரிந்த அறிமுகமான நபர் தான்.
விசாலாட்சி, தான் உண்டு, தன் பிள்ளைகள் உண்டு என்று அவள் வழியில் சென்று விட்டாள். பிரகாஷ் என்ற ஒருவன், அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை. பிள்ளைகளும் தாயை ஒட்டி தான். மன்னிப்பு கேட்டும் சமாதானமாக வில்லை. வேற எப்படி சமாதானம் செய்ய என்றும் தெரிய வில்லை. சுய பரிசோதனை அவசியம் என்று தோன்ற வந்து விட்டான்.
நல்ல நண்பன் என்று நினைத்தவன் இன்னொரு முகம் இப்படியா?… என்று அதிர்ந்தாலும், எதையும் வெளி காட்டாமல், அவன் சொல்வதை மெளனமாக கேட்டாள் சாரு பாலா.
பிரகாஷ் எதையும் மறைக்க வில்லை. தன் மனநிலை முதற்கொண்டு எல்லாவற்றையும் சொல்லி விட்டான்.
சாருபாலா, “நீ மட்டும் இல்ல பிரகாஷ். இப்போ இருக்குற பல பேர் இதுல தான் சிக்கி இருக்காங்க. அதுவும் உன்னை மாதிரி வெளிநாட்டு கம்பெனில வேலை பாக்குற பலரும் இந்த மாதிரியான வாழ்க்கையை தான் கடை பிடிக்கிறாங்க. கட்டுப்பாடு இல்லாத சுதந்திரம், கேள்வி கேட்காத உறவு, வீக் எண்ட் பார்ட்டி, நினைக்கிறது எல்லாம் கிடைக்கும் வாழ்க்கைன்னு ஒரு சூழலுக்குள்ள தான் சிக்கி இருக்காங்க. காலம் கடந்து தான் புத்தி வருது. ஆனா, அப்போ வாழ்க்கை கையை விட்டு போயிருது…”
“இங்க இருக்கிற யாரும் அவங்களுக்காக வாழ்கிறது இல்லை. அடுத்தவங்களை பார்த்து தான் கட்டமைக்கிறாங்க… வெளிநாட்டுகாரங்கட்டா வேலை பார்த்தா, அவங்களை மாதிரியே மாறனுமா என்ன?…”
“அப்படி இல்லை சாரு. உனக்கு புரியாது. பிஸ்னஸ் பார்ட்டில சோசியல் டிரிங்க்ஸ் அவசியம். கட்டி பிடிக்கிறது, முத்தம் கொடுக்கிறது தப்பு சொல்ல முடியாது. ஒரு வித அன்போட வெளிப்பாடு… அங்க வந்து நான் மட்டும் தனின்னு ஒதுங்கி நிக்க முடியாது… ஊரு போல தான் வாழணும்… நான் கொஞ்சம் அதிகமா போய்ட்டேன் போல… ஆனா நான் என்ன பண்ண, என்னை சுத்தி எல்லாரும் அப்படி தான் வாழ்றாங்க…” என்று சாலா, தீனாவிடம் சொன்னது போல பழைய பல்லவியை பாடியவன்,
“நாம இருக்கிறது மாடர்ன் சொசைட்டில சாரு. நான் தினமும் அதை தான் பார்க்கிறேன். அதை வாழ்ந்து பார்த்தா என்னன்னு ஒரு எண்ணம். என் கூட வேலை பாக்குற பலரும் அப்படி தான். யாரும் மாட்டிகல, யாருக்கும் தப்பாவே தோணலை…”
“ உலகம் சீர் கெட்டது தான் பிரகாஷ். அதுனால நானும் கெட்டு போவேன்னு சொல்றத சரியா?… என்னை சுத்தி எல்லோரும் நல்லவங்களா இருக்கணும், அப்ப தான் நானும் நல்லவனா இருப்பேன்… இது என்ன லாஜிக்?…”
“ ஒரு லிட்டர் பால்ல ஒரு சொட்டு விசம் கலந்தா பால் முழுக்க விசமாகிடும். அதே பால்ல கொஞ்சம் தயிர் கலந்தா , பால் முழுக்க தயிராகிடும்… நாம எதை தேர்ந்தெடுக்கிறோமோ, அது தான் நம்ம வாழ்க்கை… நீ போன பாதை தப்பு. அந்த தப்புக்கு, காரணமும் சொல்லாத, விளக்கமும் தேடாத… தப்பை முழு மனசா ஒத்துக்கோ…” என்றவள்,
“அத்தோடு தப்பு பண்ணது நீ, வலிய அனுபவிச்சது உன் மனைவி. வலியோட வீரியத்தை பொறுத்து தான் மன்னிப்பு கிடைக்கும். அவ மனசு ஆறணும், ரணம் குறையனும். மன்னிப்பு கூட வலியை கிளறி விடும்… அப்புறம் ஒரு விசயம்…”
“அஞ்சு பிறந்த போது என்ன சொன்ன?…”
பிரகாஷ் தயக்கமா பார்த்தான்.
“என் மக கலெக்டர் ஆகணும்ன்னு சொன்ன நியாபகம் இருக்கா… உன் மக கலெக்டர் ஆகணும். உன் பொண்டாட்டி வீட்டு செலவுக்கு உன் கையை எதிர்பார்க்கும். இது தான் உன்னோட மாடர்ன் சொசைட்டி…”
“மொத ஒன்ன புரிஞ்சுக்கோ பிரகாஷ். உன் தப்ப முழுசா உணர்ந்தா, அதுக்கான தண்டனையை ஏத்துக்கோ… மன்னிப்பை எதிர்பார்க்காத… அத்தோடு மாடர்னிசம்ன்னா வெஸ்டர்ன் கல்சர் கிடையாது. நம்ம கல்சர்ரை சரி பண்றது…” பிரகாஷ் ஆழ்ந்து பார்த்தான்.
“மாடர்ன் இந்தியாவோடு தந்தை யார் தெரியுமா?… ராஜாராம் மோகன் ராய். எதனால?… பெண்கள் உடன் கட்டை ஏறும் வழக்கத்தை தடுத்ததால… பாரதியார், பெரியார், காந்தின்னு இவங்க கொண்டு வந்தது தான் மாடர்ன் கல்சர். இங்க பெண் விடுதலைன்னு ஒன்னா தூக்கி பிடிச்சதே உன்னை மாதிரி ஒரு ஆண் தான். இப்போ நீங்க தூக்கி பிடிக்கிறது குப்பை. கூடிய சீக்கிரம் நாறி போகும்…”
“நாளைக்கு இந்த குப்பையில தான் உன் பிள்ளைக ரெண்டு பேரும் காலெடுத்து வைக்க போறாங்க. உன் மகனை விடு, உன் மகளை யோசிச்சையா?… ஷாலினியோட மாடர்ன் கல்சர் பிடிச்சு வரவேற்ற நீ… நாளைக்கு இதே மாதிரி உன் மகளை வரவேற்பையா?… உன் தப்புக்கு நீ சொன்ன காரணத்தை, நாளைக்கு உன் பிள்ளைகள் சொன்ன ஏற்று கொள்வியா?… இல்லை நாகரீக சமூகம் இப்படி தான்னு விட்டு தள்ளுவியா?…” என்ற சாருவின் கேள்வி, பிரகாஷ்க்கு செருப்பால் அடித்தது போல இருந்தது.
“ இப்போ சொல்லு பிரகாஷ். உன் பிள்ளைகளுக்கு நீ என்ன மாதிரியான எதிர்காலத்தை வச்சு இருக்க. இது தான் உன் பிள்ளைகளுக்கு நீ காட்டுற முன் உதாரணம். உன்னை மன்னிச்சு வீட்டுக்குள்ள விட முடியுமா?…” சாரு பாலாவின் சரமாரி கேள்விகளுக்கு பதில் தெரியாமல் திகைத்து நின்றான் பிரகாஷ்.