தேவி கொஞ்சம் அங்கு பொருந்தி கொண்டாள். வெளிமாநிலம் கூட கிடையாது பக்கத்து ஊர் தான். ஆனாலும் சூழல் அவ்வளவு வித்தியாசமாக இருந்தது. இவளும் காட்டு வேலை, வீட்டு வேலைக்கு ஓடி பழகியவள் தான். வேக நடையும், ஓட்டமும் பழக்கம் தான்.
ஆனால், இங்கு எல்லாம் ஒரே பரபரப்பு தான். நேரம் பார்த்து எழுவது, சாப்பிடுவது, ஓடுவது என்று மக்கள் நில்லாமல் ஓடி செல்கிறார்கள். அந்த ஓட்டத்தை தேவியும் பழகினாள்.
தேவி வீட்டோடு தான் இருந்தாள். வீட்டு வேலைகள், சுற்றுப்புற வேலைகள் என்று இழுத்து கட்டி செய்தாலும் நேரம் ஓட வில்லை. அதனால் மதிய நேரம் நல்ல ஓய்வு. மதிய தூக்கம் எல்லாம் தேவிக்கு பழக்கமே கிடையாது. கொஞ்சம் ரசித்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.
அத்தோடு அஞ்சு கொஞ்சம் தேவியை நெருங்கினாள். சாலாவின் கை பக்குவம் ஒரு மாதிரி சுவை என்றால், தேவியின் கை பக்குவம் ஒரு மாதிரி சுவை மிகுந்தது. தன் வீட்டில் நெய் சோறு இருந்தாலும், பக்கத்து வீட்டு பழைய சோறு மணக்கும் என்பது போல, சாலாவின் கை பக்குவத்தில் வளர்ந்தவர்களுக்கு தேவியின் செக்கு நல்லெண்ணெய் சமையல் வாசம் இழுத்து கொண்டது.
அன்று மதியத்திற்கு மேல் வானம் இருட்டு கட்டி தூறல் போட, துணிகளை எடுக்க வெளியே வந்தாள் தேவி. காய்ந்த துணிகளை அவசரமாக அள்ளி போட்டு கொண்டே உள்ளே வர, எதிர்த்த வீட்டில் ஒரு காட்சி.
தூறல் விழுவதால் வெளியே ஆள் நடமாட்டம் இல்லை. ஆனால், எதிர்த்த வீட்டின் கேட் அருகே ஒரு பெண் மழைக்கு ஒதுங்கி நின்று இருந்தாள். அவளின் இரு கைகளிலும் ரெண்டு கட்டை பை இருக்க, அங்கிருந்த ஒரு சிறு மேடையில் தன் குட்டி மகளை நிறுத்தி வைத்து இருந்தாள்.
தூறலில் நனையாமல் இருக்க சின்ன துண்டை வைத்து மகளை போர்த்தி இருந்தாள். தன் முட்டை கண்ணை உருட்டி கொண்டு விழும் தூறலை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த குழந்தையை பார்த்ததும் தேவிக்கு உருகி விட்டது. அந்த குழந்தைக்கு எப்படியும் இரண்டு வயது இருக்கும்.
வெளி கேட் திறந்து வெளியே வந்த தேவி.
“இந்தாம்மா பொண்ணு… இங்க வா, நல்ல தூற விழுது. எங்க எங்க வீட்டுல வந்து இரு…” என்று சத்தமாக அழைத்து கூப்பிட.
அந்த பெண் சந்தேகமாக தேவியை பார்த்தாள்.
“உன்னை தான்… ஏன் பேந்த முழிச்சு நிக்குற?… உள்ள வா, கை பிள்ளையை வச்சு எம்புட்டு நேரம் மழையில வாம்மா…” என்று கேட்டை நன்றாக திறந்து விட,
அப்புறம் தான் அந்த பெண் பிள்ளையோடு பைகளை தூக்கி கொண்டு உள்ளே வந்தாள்.
“வா, வா… வந்து உட்கார்…” என்று உள்ளே கை காட்ட
“வேணாம் அக்கா, நான் வெளி வராண்டாவிலே இருந்துகிறேன்…”
“உம் பேர் என்னம்மா?…”
“கண்மணி”
“ உன் மகளா?… ரெண்டு வயசு இருக்குமா?…”
“ஆமா க்கா எம் பிள்ளை தான். சாகித்யா, ரெண்டு வயசு தான். நீங்க உள்ளே போங்கக்கா, தூறல் விட்டதும் நான் போயிடுவேன்…”
மெல்ல சிரித்த தேவி. “நான் உன்கிட்ட பொருள் வாங்க தான் கூப்பிட்டேன்…” என்று சொன்னதும், சிரித்த அந்த பெண்,
“அப்படியா அக்கா, நான் என்னவோன்னு நினைச்சேன். இந்தாங்க, பாருங்க சோப்பாயில், துணி துவைக்க, பாத்திரம் விலக்க, கம்பி கரையை போக்க கூட வச்சு இருக்கேன்…” என்று ஒவ்வொன்றாக எடுத்து காட்ட ஆரம்பித்தாள்.
பின்னே வாசலோடு தான் அனுப்பி விடுவார்கள். தேவி வீட்டின் உள் வரை அழைத்தாள் சந்தேகம் வர தானே செய்யும்.
தேவியும் ஒன்று இரண்டு வாங்கினாள். கிராமத்து பெண் என்பதால் சகஜமாக பேசி கண்மணியோடு கலந்து விட்டாள். அடுத்த கொஞ்ச நேரத்திலேயே சூடாக இஞ்சி டீ போட்டு கண்மணிக்கு கொடுத்தவள். சாதத்தில் கோழி குழம்பு விட்டு பிசைந்து பிள்ளைக்கு ஊட்ட தொடங்கினாள்.
தேவியை ஆச்சர்யமாக கண்மணி பார்த்தாள். பிள்ளையை தூக்கி கொண்டு பொருள் விக்க வந்தால் பரிதாபப்பட்டு பொருள் வாங்குவார்கள், வாடிக்கையாக பேசுபவர்கள் பிள்ளைக்கு என்று சாக்லெட், பிஸ்கெட் கொடுப்பார்கள் தான். ஆனால், யாரும் சோறு ஊட்டி விட மாட்டார்கள்.
கண்மணி வியந்து பார்க்க, புரிந்து கொண்ட தேவி,
“எனக்கு குழந்தை இல்லை. அதான் சின்ன பிள்ளைகளை பார்த்த ஆசைபடுவேன்…” என்று தேவி சொன்ன பின், கண்மணி தடுக்க வில்லை.
நம்மவரில் இருக்கும் ஒரு நல்ல குணம் இது. பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளையை கொஞ்சம் விட்டு கொடுப்பார்கள். தேவிக்கு இது எப்போதும் இருக்கும் பழக்கம் தான்.
குழந்தை இல்லை என்று கோவில் குளம் செல்லும் போது ஒரு சித்தர் சொன்னது. பிள்ளையை சுமப்பவர்களுகும், சிறு பிள்ளையை வைத்து கொண்டு சிரமபடுபவர்களுக்கும் உதவி செய்தால். அந்த உதவி கடவுளுக்கு செய்வது போல், கடவுள் மனம் இறங்குவார் என்று சொல்லி விட. அப்போதிருந்து கர்ப்பிணி, கை பிள்ளையின் தாய் என்று யாரை பார்த்தாலும் ஓடி செய்வாள் தேவி. அப்படியாவது தனக்கு பிள்ளை வரம் கிடைக்காதா என்று ஒரு வேண்டுதலாகவே செய்வாள். தற்போதும் மாற்றி கொள்ள முயலவில்லை.
பிள்ளைக்கு உணவு ஊட்டிய கையில் குழம்பு வாசம் தூக்கியது. மோர்ந்து பார்த்து கொண்டாள். சித்ரா பிள்ளை பெற்ற புதிதில், அவளுக்கு சீராக நிறைய கோழி வந்தது. பிள்ளை பெத்தவளுக்கு என்று கொத்து கறி வைத்து கொடுப்பார்கள். அதன் மேல் ஒரு ஆசை தேவிக்கு.
சித்ரா உறங்கி கொண்டு இருக்க, குழம்பை இறக்கிய உடன் தேவி தட்டை தூக்கி கொண்டு வந்தாள். குழம்பு வாசம் வீட்டை தூக்க சித்ரா எழும் வரை பொறுமை இல்லை. தட்டில் சோறு போட்டு குழம்பை ஊற்ற,
“அடியே! என்ன பண்ற… இது பச்சை உடம்பு காறிக்கு வச்ச குழம்பு. அவ சாப்பிடாம நீ மொத சாப்புடுற…” என்று பாண்டியம்மாள் அதாட்ட,
“ இல்லை அத்தை வேலை முடிஞ்சு வந்தேன். பசிக்குது…”
“என்னத்த வேலை. பால் குடுக்குற வயிறு எப்படி பசிக்கும் தெரியுமா?… தீயா காந்தும். அவ வயித்தை பார்க்காம, உன் பாட்டை மட்டும் பாக்குற…” என்று கோபமாக எல்லாம் இல்லை,சித்ராவை கவனிக்காமல் உனக்கு என்ன உணவு என்பதாக தான் கேட்டார்.
ஆனாலும் தேவிக்கு வலித்தது. சுண்ட காய்ச்சிய பால், வெந்தய களி, மருந்து குழம்பு, பால் பிஸ்கெட், கொத்து கறி, இரட்டை கரு முட்டை, ஆட்டு கால் சூப் என்று பச்சை உடம்பு காரிக்கு பார்த்து பார்த்து செய்ய, தேவிக்கு உடன் பிறந்தவள் தான், பொறாமை என்று இல்லை. ஆனாலும் வலி, ஏக்கம், தண்ணிறக்கம், அழுகை என்று நெஞ்சு ஆறாது.
அடுத்த மூன்று மாதத்தில் உருட்டி வைத்த வெண்ணெய் போல சித்ரா திரண்டு வர, ஆசையாக பார்ப்பாள் தேவி. பிள்ளையை மடியில் வைத்து ஊஞ்சலாடும் சித்ராவை ஏக்கமும், ஆசையுமாய் தேவி பார்ப்பாள். இது எல்லாம் அவளுக்கு நிறம்ப பிடிக்கும். ஆனால், இவள் பார்வையை பாண்டியம்மாள் பார்த்தால் போதும் ஒரு ஆட்டமே ஆடி விடுவார். தவமிருந்து வந்த வாரிசு என்று அவ்வளவு கவனம் இருக்கும்.
ஒரு பெருமூச்சு வந்தது தேவிக்கு. எத்தனையோ இந்த மாதிரி கடந்து வந்து விட்டாள். அப்போதெல்லாம் மனம் கசந்து அழுவாள், இல்லை துக்கத்தை விழுங்கி கொண்டு கடந்து விடுவாள். ஆனால் துணிந்து என்றும் நின்றதில்லை. அந்த மாதிரி தோன்றியது கூட கிடையாது. அவள் பார்த்து வளர்ந்த சமூகமும் அப்படி தான்.
மற்றவர்கள் சொல்லும் போது வெகு எளிதாக இருந்தது. ஆனால் நிதர்சனம் வேறாக இருந்தது.
வீட்டில் தேவி இருப்பதால் அஞ்சனா நேராக வீட்டுக்கு தான் வந்து விடுவாள். அஜய் மட்டும் தான் அம்மாக்கு உதவியாக கடைக்கு செல்வது. அன்று அஞ்சுக்கு உடை மாற்றி விடும் போதே, தேவி கவனித்து விட்டாள். பிள்ளை ஆடையில் வேற ஏதோ ஒன்று என்று… ஆனால், உறுதியாகவும் சொல்ல முடியவில்லை.
சாலா வந்த உடன் அவளிடமும் சொல்லி விட. சாலாவும் பிள்ளையை ஆராய்ந்தாள். சாத்தியக்கூறு ஆம் என்றது… தேவி சொல்லி விட்டாள், அஞ்சுவின் பதினொரு வயதிலேயே இது பற்றி பாடம் எடுத்ததாள்.
“அஞ்சு அப்படி ஏதாவது உனக்கு தெரிஞ்சா, பக்கத்து வீட்டு பாட்டி கிட்ட போய் சொல்லு…” என்று தேவி சொல்ல
“ஏன் மதினி?…”
“அப்புறம் நம்ம ரெண்டு பேர்ட்டையும் சொல்லட்டுமா? என்னத்த கொடி கட்டி வாழ்ந்தோம். நம்ம ரெண்டு பேர் எல்லாம் வேணாம்…” தேவி கறாராக சொல்ல.
“இது எல்லாம் சும்மா. அஞ்சு உடனே வீட்டுல தான் சொல்லணும். அத்தை, அம்மா யார் இருந்தாலும் வீட்டுல சொல்லிடு…” சாலா தைரியமாக தான் இருந்தாள். எதிர்பார்த்தது தான், பதட்டம் எல்லாம் இல்லை. பெண்ணாக பிறந்தால் அந்த வயதில் கடக்க தான் வேண்டும்.
அவர்கள் நினைத்தது போலவே அடுத்த மூன்று நாளில் அஞ்சு பெரிய பெண்ணாகி விட்டாள். விடுமுறை தினம் என்பதால் இருவருமே வீட்டில் தான் இருந்தார்கள். அஞ்சு முதலில் சொன்னது தேவியிடம் தான்.
சாலா தைரியமாக பிள்ளையை வழிநடத்த, முனுக்கென்று கண்ணீர் வழிந்தது தேவிக்கு தான். பிள்ளையை குளிக்க வைத்து, உடை மாற்றி என்று எல்லாம் செய்தது தேவி தான்.
சாலாக்கு பெரிதாக செய்ய விருப்பம் இல்லை. இதை ஒரு சாதாரண நிகழ்வாக கடக்க தான் நினைத்தாள். ஆனாலும், தாய்மாமனுக்கு சொல்ல வேண்டும் அல்லவா… தாய் வீட்டுக்கு முறையாக அழைத்து சொல்லி விட,
தேவி வந்தவள், “உன் புருசனுக்கும் சொல்லு சாலா?…”
“என்ன?… அவருக்கா?…” அதிர்ந்து போய் சாலா கேட்க.
“ ஆமா, அவருக்கு சொல்லாம எப்படி!… போன் போட்டு ஒரு வார்த்தை சொல்லு. நீ தான் சொல்லணும்…” கண்டிப்பாக தேவி சொன்னாள்.
பிரகாஷ் மும்பை கிளம்பி விட்டான். பிறந்த இடம், வாழ்ந்த இடம், பொண்ணு எடுத்த இடம் என்று எங்கும் முகம் கொடுக்க முடியவில்லை. எங்கு சென்றாலும் அவர்கள் பார்வையே காட்டி கொடுத்தது. சொந்த வீட்டை காலி செய்து போகிறான்.
வீட்டை பற்றி என்ன முடிவு எடுக்க, சாலாவிடம் தான் கேட்க வேண்டும். கேட்கும் துணிச்சல் தான் இல்லை. நீ யார் என்ற பார்வையிலேயே தள்ளி நிறுத்தி விடுகிறாள்.
நெஞ்சை அடைத்தது. சொந்த வீடு அல்லவா, வெளியேற மனம் வரவே இல்லை. இந்த வீடு சாலாவின் கனவு. குடும்பம், பிள்ளைகள் என்று நாள் ஓடிய பின் , இரவு பத்து மணிக்கு மேல் தங்களுக்கான தனிமையில் சாலாவின் வாயில் இருந்து வரும் வார்த்தை எல்லாம் சொந்த வீடு வங்க வேண்டும் என்பது தான்.
அவ்வளவு சுத்தமும், நேர்த்தியும் இருக்கும். இவனும், பிள்ளைகளும் வெளியில் சென்று விடுவார்கள், சாலா மட்டும் தான் வீட்டோடு இருப்பது. அதனால் தான் என்னவோ வீடு அவளின் உணர்வுகளோடு கலந்தது. அப்படி உருவாக்கிய வீடு, கேட்பார் இன்றி போட்டு கிளம்பியாச்சு.
பிரகாஷ்க்கு கனெக்சன் ஃப்ளைட் தான். பெங்களூர் போய் மாற வேண்டும். பெங்களூர் விமான நிலையத்தில் அடுத்த ஃப்ளைட்க்கு இவன் காத்திருக்க, சற்று தள்ளி டெல்லி ஃப்ளைட்க்கு ஷாலினி காத்து இருந்தாள்.