சாலா, தன் மாமனார் வீட்டுக்கும் தகவல் கொடுத்து விட்டாள். இவர்கள் பக்கம் பெரிதாக தான் எடுத்து செய்வார்கள். ஆனால், அதில் சாலாக்கு விருப்பமில்லை. முன் எப்படியோ, இப்போது பார்வை எல்லாம் பிரகாஷ் கொண்டு தான் இருக்கும்.
பிள்ளைக்கு தகப்பன் என்ற முறையில் அவன் வருவான் என்பதை விட அவன் செயல் தான் பெரிதாக அலச படும். அவளும், அவள் பிள்ளைகளும் எந்த தவறும் செய்ய வில்லை தான். ஆனாலும் அவனை கொண்டு விமர்சிக்க படுவதை விரும்ப வில்லை. ஏற்கனவே பிள்ளைகள் நிறைய பட்டு விட்டார்கள். மேலும் அவர்களை வதைக்க விரும்பவில்லை. அதிலும் அஜய், பன்னிரண்டாவது, அவனின் படிப்பு முக்கியம்.
பாண்டியம்மாக்கு இதில் குறை தான். பெண் வயிற்று ஒத்தை பேத்தி அஞ்சு மட்டும் தான். ஊர் மெச்ச சீர் செய்ய அவ்வளவு ஆசை. தாங்கள் காலத்தில் தானே செய்ய முடியும். மகனின் பிள்ளைகள் வளர்ந்து நிக்கும் போது செய்ய தோது படாது என்று ஒரு எண்ணம்.
நாராயணன், சகுந்தலா இருவரும் முறையாக பேத்தியை காண வந்தார்கள். கல்லு வைத்த குட்டி ஆரம், புத்தாடை, இனிப்பு, பழம் என்று குறையில்லை. சாலாவும் நிறைவாக செய்து பார்த்து கொண்டாள். சிறு பிள்ளை என்பதால் விழாவாக செய்ய அவர்களுக்கும் விருப்பமில்லை. சகுந்தலா பேத்தியை தொட்டு தொட்டு பார்த்து கொண்டார்.
மகனை பற்றிய பேச்சு கூடாது என்று கணவர் சொல்லி தான் அழைத்து வந்தார். பேத்திக்கு செய்த நாராயணன், கையோடு வீட்டு பத்திரத்தையும், கொஞ்சம் இடத்தையும் மருமகள் கையில் கொடுத்து விட்டார்.
கொஞ்சம் தயக்கமாக இருந்த போதும் தவறாமல் வாங்கி கொண்டாள் விசாலாட்சி. சென்னை வீடு பற்றி யாரும் வாய் திறக்க வில்லை. சகுந்தலா மருமகளை வாய் வார்த்தையாக ஒன்றும் சொல்ல வில்லை. ஆனால், குத்தலாக பார்வை பார்த்தார். அதாவது, என் மகன் வேண்டாம். அவன் மூலம் வரும் சொத்து மட்டும் வேண்டுமோ!…
சமீபமாக விசாலாட்சி சகஜமாக கடக்கும் பார்வை தான். “புருசன் வேண்டாம், அவன் பிள்ளைகள் மட்டும் வேணும்… உலகத்துல தப்பு செய்யாத புருசன் யார் இருக்கா, மன்னிப்பு கேட்டா போய் வாழ வேண்டி தானா… புருசன் இல்லாமையா பிள்ளை வந்துச்சு… அவனை வச்சு தான நல்லா வாழ்ந்தீங்க, இன்னைக்கு ஒரு கஷ்டம்ன்னா ஒதுங்கி போறதா?…” இந்த மாதிரி பல பேச்சுக்களை நேரடியாக, மறைமுகமாக கேட்டு பழகி விட்டது.
யார் கையும் எதிர்பார்க்காமல் சொந்த காலில் நின்று தன்னை நிரூபித்த போதும், விசாலாட்சிக்கு விமர்சனம் மட்டும் குறையவே இல்லை. அதை அவள் காது கொடுத்து கேட்பதும் இல்லை. அவளின் மிக பெரிய விமர்சகரே அவளின் தாய் தான். அதையே கணக்கில் கொள்ள வில்லை. நீங்கள் எல்லாம் யார் எனக்கு?…
சகுந்தலா கொதித்து கொண்டு தான் இருந்தார். தன் மகனுக்கு ஒரு வார்த்தை சொல்ல வில்லையே. அவனே வேண்டாம் என்றால் நாங்கள் எல்லாம் எதற்கு? எங்கள் உறவு மட்டும் வேண்டுமோ? மருமகளை பேசி கிழிக்க வாய் துடித்தது, கணவரை மனதில் கொண்டு அமைதி காத்தார்.
“சின்னதுல கூட தெரியலை. பெரிய பொண்ணானதும் நம்ம அஞ்சு முகம் அப்படியே பிரகாஷ் மாதிரி தான் இருக்கு. மூக்கு எல்லாம் அச்சுல வார்த்த மாதிரி தான்…” சகுந்தலா தொடங்கி விட்டார்.
சாலா வாயே திறக்க வில்லை. மாண்டியம்மாளும்,
“ஆமா மதினி, அஜய் தான் மாப்பிளை மாதிரி இருந்தான். இந்த சின்ன குட்டியும் அப்படியே அவங்க அப்பா மாதிரி தான் இருக்கு…”
“எங்க அஜய் அப்படியே அவங்க அப்பன் தான். பேச்சு கூட அவனை மாதிரி தான். நிமிர்ந்து நடக்குற நடையும் அவனை மாதிரி தான்…” என்று சகுந்தலா மேலும் சொல்ல,
நாராயணன், “இதுல என்ன இருக்கு சகு. அவன் பிள்ளைக அவனை மாதிரி தான் இருக்கும். என்னவோ அதிசியம் மாதிரி பேசுற…”
“சும்மா தாங்க சொன்னேன்…”
“நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். நாம வந்தது பேத்தியை பார்க்க, அந்த வேலையை மட்டும் பாரு. பிள்ளைக்கு உளுந்து களி செய்யணும்ன்னு சொன்ன தான, போய் என்னன்னு பாரு…” என்று விரட்டி விட்டார்.
மனைவி ஆதங்கம் புரியுது தான். அதற்காக மகன் செஞ்ச தப்பை நியாயப்படுத்த கூடாது அல்லவா… கொஞ்சம் அழுது மன்னிப்பு கேட்ட உடன் பெத்தவள் மனம் மாறி விட்டாள். அதே மனப்பான்மையை மருமகளிடம் எதிர்பார்க்க கூடாதல்லவா… விசாலாட்சி வலியை புரிந்து கொள்ள முடியும். ஆனால் உணர முடியாதல்லவா…
ஜெயபிரகாஷ் தங்கள் மகன் தான் மாற்றமில்லை. அவன் பிள்ளைகளுக்கு தந்தை தான் அதிலும் மாற்றமில்லை. ஆனால், விசாலாட்சிக்கு கணவனா? அது தானே மாறி போனது. வலி அவளோடது, முடிவும் அவளிடமே…
சகுந்தலா இருந்த வரை மருமகளிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை. ஏதோ ஒன்றை சாடி கொண்டு தான் இருந்தார்.
ஒரு வாரம் முடிந்த பின் பிள்ளையை பள்ளிக்கு அனுப்ப சாலா நினைத்திருந்தாள். ஆனால், பாண்டியம்மாள் சொல்லி விட்டார்.
“தலை முட்டு வீட்டுக்கு ஆகாது சாலா. ஒதுக்கி வச்சு தான் ஆகணும்…”
“அப்போ நீங்க மட்டும் செய்ங்க அம்மா. வேற யாரும் பங்காளி முறையில் கூட வேணாம். நாள் பார்த்து தாய்மாமன் முறை செய்ங்க…” என்று சாலா சொல்ல,
“என்ன இருந்தாலும் ஒத்தை பொம்பளை பிள்ளை. மாப்பிள்ளைக்கு ஆசை இருக்கும் தான…” பாண்டியம்மாள் இழுக்க,
“எம் பிள்ளைக்கு நான் மட்டும் போதும், அவ பெரிய பொண்ணானதும் அவ உறவு முறையை அவளே தீர்மானிப்பா…”
“சுத்த கூறு கெட்டவளா இருக்கியே… அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்ன்னு காலம் கெடக்க, விவஸ்தை கெட்ட பேச்சு தேவையா?…”
“அம்மா…” சாலா ஒரு அதட்டல் போட,
“பின்னே என்னடி, நீ கால்ல விழுந்து புருசன் சரணம் பாடும் போதே கதி இப்படி… இன்னைக்கு ஒண்டி கட்டை, எத்தன நாளுக்கு வெளி சாப்பாடு எடுக்க. வீட்டு சாப்பாட்டுக்கு மனம் ஏங்குச்சு. குடி இருக்க ஒருத்தி ரெடியா இருக்கா. பார்த்துக்க…” உடைத்து பேசிவிட்டார் தாய்.
“பிறந்த வீட்டு உறவும் வேணாம்னு நான் ஒதுங்கி போக வைக்காதீங்க…” கறாராக சாலா சொல்லி விட்டாள்.
அதன் பின் தான் முத்தையா மனைவியை அடக்கினார்.
“நான் பெத்த கழுதை, எனக்கு பாடம் சொல்லுது…” முறுக்கி கொண்டார் பாண்டியம்மாள்.
பிரகாஷ் தம்பிகள் இருவரும் போனில் மட்டும் கேட்டு கொண்டார்கள். பிள்ளைகளுக்கு விடுமுறை இல்லை, ஒரு நாள் வந்து பார்ப்பதாகவும் சொன்னார்கள். விழா தான் வைக்க வில்லையே.
சாலா அதற்கும் தலையாட்டி, நல்ல முறையில் பேசி தான் வைத்தாள். இதுவே பிரகாஷ் கூட இருந்தால், இந்நேரம் பறந்து வந்து இருப்பார்கள். வீடு அமர்க்களம் பட்டு இருக்கும். வீட்டின் ஒற்றை பெண் பிள்ளை என்று தலையில் தூக்கி வைத்தார்கள். இன்று எங்கே போனது அந்த பாசம் எல்லாம்…
என்ன செய்ய தகப்பன் சரியில்லை. அவன் ஒழுங்காக இருந்திருந்தால் கிடைக்கும் மரியாதை கிடைக்கும். என்ன தான் சாலா கணவன் வேண்டாம் என்றாலும் அவனை கொண்டு தான் இவர்களை பார்ப்பார்கள். குடும்ப தலைவனுக்கு கிடைக்கும் மரியாதை தானே, அவன் குடும்பத்திற்கும் கிடைக்கும்.
அதனால் தான் சாலா ஓடி தன்னை நிலைபடுத்தியது. அண்ணனாக பிரகாஷ் எவ்வளவு செய்தாலும், இன்று அவன் பிள்ளைகள் யாரிடமும் கை நீட்ட வில்லை. தகப்பன் சரியில்லை கஷ்ட ஜீவனம் என்று ஏளன, பரிதாப, அனுதாப பார்வையை தன் பிள்ளைகள் பக்கம் திருப்பாமல் சாலா காத்து கொண்டாள்.
ஆனாலும் உறவு முறையில் விட்டு கொடுக்காமல், இரத்த உறவுகளுக்கு ஒரு வார்த்தை சொல்லி விட்டாள். ஆசையில் வந்து பிள்ளையை பார்ப்பதும், தேவையில்லாத அலைச்சல் என்று ஒதுங்குவதும் அவர்கள் விருப்பமே…
அடுத்து ஒரு நல்ல நாளில் சாலாவின் குடும்பம் மட்டும் முறைக்கு தண்ணி ஊற்றி கொண்டார்கள். ஏழு பேர் கணக்காக சாலா, தேவி, சித்ரா, பாண்டியம்மாவுடன், தாத்தாவும், தாய்மானும் சேர்ந்து கொண்டார்கள்.
வீட்டிற்க்கு பின் பக்கம் வைத்து தான் நீர் ஊற்றினார்கள். முதலில் தேவி உள்ளே நுழைய பாண்டியம்மாள் அனுமதிக்க வில்லை. அவருக்கு பிள்ளை இல்லாதவ தலைக்கு தண்ணி ஊற்ற விருப்பமில்லை.
“அவளே மலட்டு சிறுக்கி. அவ என் பேத்திக்கு தண்ணி ஊத்துனா, நல்லாதா நடக்கும்…”
“ஏன், இவ்வளவு நாளும் அஞ்சுவ பார்த்தது மதினி தான். அவ தான் மொத நிக்கணும்…”
“அடியே கூறு கெட்டவளே!… கை ராசி, முக ராசின்னு எதுக்கு சொல்றாங்க. எல்லாம் காரணம் இருக்கு. நல்லா வாழ்ந்தவங்க தான் வாழ்த்தனும்…”
“அப்போ நீ நல்லா வாழ்ந்தியா ம்மா?…” சாலா கேட்க.
“ஆமா, பின்னே என் வீட்டுல அன்னதுக்கு குறை இல்லை. நாலு பேருக்கு அள்ளி கொடுத்த கை தான் இது. ஆணுக்கு ஆணும், பொண்ணுக்கு பொண்ணும் நிறைவா பெத்து வளர்த்தேன். கூன், குருடு, சொட்டை, சோடைன்னு ஒன்னு சொல்ல முடியாது…” என்றவர்,
“உனக்கு புரியாது சாலா. மரம் செழிச்சு வளர்ந்த மட்டும் பத்தாது, முத்து முத்தா காய் காய்க்கணும். அவ பட்ட மரம், ஒத்த காட்டு சிறுக்கி. அவளை முன்ன நிக்க வைக்காத…”
சாலா அமைதியாக தாயை பார்த்தாள். “எம் புருசன் என் கூட இல்லை. அப்ப நானும் முன்ன நிக்க கூடாதா? சித்ரா ரெண்டாம் தாரம் தானே, அவ முன்ன நிக்கலாமா?…”
“இது வேற சாலா…”
போதும் நிறுத்து… நீ என்ன நல்லா வாழ்ந்த, உன்னை முன்ன நிக்க வைக்க. உன் கண் பார்க்க, உன் பேர பசங்க ரெண்டும் அனாதையா நிக்குது. அவங்களை என்னன்னு நீ பார்த்தியா. உன் கை அள்ளி குடுத்த கையா?… சொந்த பேரங்களுக்கு கூட அள்ளி நீட்டாத கை உன்னது. உன் கண்ணு முன்னாடி தானே உம் மக செத்தா, அதை நீ இன்னும் உணரலயா?… உன் முன்னாடி தானே என் வாழ்க்கை நாறி போய் ஊர் பஞ்சாயத்து வரை போய் அசிங்க பட்டு, வாழ்ந்த ஊரை விட்டு ஓடி வந்து, நாய் படாத பாடு படுறேன்…”
“எங்களோட இந்த நிலைக்கு காரணம் நீ தான். உன் நினைப்பு தான். வாழ வந்த பிள்ளையை வாழ விடலை நீ… அதான் ஒருத்தி வாழமவே போய்ட்டா, நான் வாழ வெட்டியா நிக்கிறேன்…”
“ஏம்மா, உன் பேத்தி தீட்டு துணிய துவைக்க, கூட இருந்து பார்த்துக்க, ராத்திரி துணைக்கு இருக்க, சமச்சு போடன்னு எல்லாம் அவங்க தான் பாக்குறாங்க. அது உனக்கு பெரிய விஷயமில்லை. அதுல உனக்கு குறை இல்லை. பிள்ளை இல்லாதவ, செஞ்சா புண்ணியம். அப்படி தானே, அவங்க முன்ன நின்னு தலைக்கு தண்ணி ஊத்த கூடாதா…”
“உனக்கு புரியுதா இல்லையா… நீ பேசுறது செய்றது எல்லாம் எங்க தலையில தான் விடியுது. நான் ஆசைப்பட்டு எந்த வாழ்க்கை வாழ்றேன்னு நினைக்கிறாயா… படுத்தா தூக்கம் இல்லை, பசிச்சு சாப்பிட்டு பல நாள் ஆச்சு. செத்து பிழைகிறேன். ரெண்டு பிள்ளை இருக்குன்னு வைராக்கியமா ஓடுறேன். எங்களுக்கு மேலும் சாபத்தை தேடாத… உன் உறவே வேணாம், எம் பிள்ளைகளுக்கு நான் இருக்கணும்…” என்று சாலா கொட்ட,
“அதுகில்லை சாலா. பெரியவங்க சொன்னது…” பாண்டியம்மாள் தொடங்கும் போதே,
பாண்டி விடு. நம்ம பிள்ளை சொல்றது சரி தான். என்னவோ சொல்ல முடியலை. சாலா போக்குல விடு. உம் பேத்திக்கு நீ செய்யிறது மட்டும் செய்…” என்று முத்தையா சொல்லி விட,
சாலா நகர்ந்தாள். நகரும் முன் ஒரு நிமிடம்,
“அம்மா, தொங்க தொங்க தாலியும், கை நிறைய காசும், பேர் சொல்ல வாரிசும் இருக்குறது மட்டும் நிறைவான நல்ல வாழ்க்கை கிடையாது. சுமங்கலி, பிள்ளைதாச்சி மட்டும் வரம் வாங்கி வந்தவங்க கிடையாது. யரோட கண்ணிருக்கும் காரணமில்லாம, யார் வாயித்தெரிச்சலையும் கொட்டிக்காம, யாருக்கும் தீங்கு செய்யாம வாழ்கிற வாழ்க்கை தான் நல்ல வாழ்க்கை. அது தான் ராசியான வாழ்க்கை. நாளைக்கு செத்து மேல போன பின்னாடி கடவுள் நம்ம கிட்ட கேக்குற நீதியும் அது மட்டும் தான். செத்த உடம்பு மேல போகும் போது நீ சொன்ன எதுவும் கூட வாராது. நீ செஞ்ச தானமும், காத்து நின்ற தர்மமும் கூட வரும். உன் தலைமுறையும் நல்லா இருக்கும். தலைநிமிர்ந்து நீங்க வாழ்ந்தீங்க, உம் பிள்ளைக நாங்க தலை குனிஞ்சு போனோம். உன் மருமக மலடின்னா, உம் மக வாழ வெட்டி. இனி உலகம் அப்படி தான் பார்க்கும். இனி உன் மருமக கூட மகளையும் சேர்த்து வச்சு பாரு…” தெளிவாக சொல்லி தான் சாலா சென்றாள்.
தேவி முன் நின்றாலும், முதல் தண்ணி ஊத்தியது பாண்டியம்மாள் தான். அடுத்து சாலா, அப்புறம் தேவி, சித்ரா என்று வரிசையாக வந்தார்கள். தேவி, குமரனோடு சேர்ந்து எல்லாம் நிக்க வில்லை.
தாய்மாமன் முறைக்கு சீராக தட்டை தூக்கி கொடுக்க முன் வந்தது சித்ரா தான். சொந்தத்தில், கோவில் எதிலும் அவளே முன் நின்றதால் அந்த பழக்கத்திற்கு வந்து விட்டாள். சாலா தன் மதினி முகம் பார்க்க, தேவி சாந்தமாக தான் இருந்தாள். எந்த மாறுதலும் இல்லை.
உண்மையில் தேவிக்கு ஆறுதல் தான். வேற எந்த சொந்த பந்தங்கள் விசேசத்திலும் தேவி நிற்க, பாண்டியம்மாவே விட மாட்டார். இன்று சொந்த பேத்திக்கு உடன் நின்று எல்லாம் செய்தது தேவி தான். பாண்டியம்மாள் பார்த்து தான் நின்றார்.
சித்ரா எப்போதும் போல வாயே திறக்க வில்லை. ஆனாலும் மனதில் ஒரு குறை தான். சாலா, தன்னை விட்டு தேவியையே பிடித்து கொண்டு இருக்கிறாள் என்று… வீட்டு ஆளாக உபசரித்தாள், நன்றாக பார்த்தாள். ஆனால், நொடிக்கு ஒரு வாய் மதினி என்று தேவியை அழைப்பது போல தன்னை கண்டு கொள்ள வில்லை. தேவியை முன் நிறுத்தி தான் செய்கிறாள். தான் எப்போதும் இரண்டாவது தானா…
சாலா அப்படி நினைக்க வில்லை. சித்ராவை ஒதுக்கும் எண்ணமில்லை. தேவியை ஒதுக்கி விட கூடாது என்பது தான் எண்ணம். அது சித்ராக்கு வேறாக தெரிந்தது. அடுத்த வீட்டில் ஒன்றும் சொல்ல முடியாது. தன்னில் இருந்து மாறட்டும் என்று தான்.
தாய் மாமன் முறையில் குமரன் உடன் நிற்பது சித்ரா என்பதால், தேவியை தன் கையில் பிடித்து கொண்டாள் சாலா. ஆனால், முன் போல மனம் கசந்து ஒதுங்கி போக தேவி தான் பழைய மாதிரி இல்லையே. குமரனையே நேராகவே தான் பார்த்தாள். தம்பதியாக குமரன், சித்ரா நிற்பதை பல முறை பார்க்க நேரும் போதெல்லாம் நெஞ்சில் சுறுக் என்று வலிக்கும். இன்று இல்லை, சாதாரணமாக கடந்தாள்.