சித்ராக்கு தனிப்பட்டு தேவியிடம் எந்த விரோதமும் கிடையாது. அக்காவை விட ஒரு படி மேல் என்ற எண்ணமும் கிடையாது. ஆனால், என் கணவன் என்ற உரிமை மட்டும் அதிகமாக இருந்தது. எனக்கும் கணவன் என்ற மனப்பான்மை தான் இல்லை.
அப்படி ஒரு மனப்பான்மை நம் சமூகத்தில் எந்த பெண்ணுக்கும் வராது. என் புருசன், என் பிள்ளை, என் குடும்பம் என்ற மனப்பான்மை தான் இயல்பாக இருக்கும். அதை சித்ரா உணராமல் எடுத்த முடிவு , அவளையே காயப்படுத்தி கொண்டு இருந்தது. தேவிக்கும் அதே எண்ணம் தான். என்ன ஒன்று தான் சம்மதித்து தன் தங்கை உள் நுழைந்த வாழ்க்கை என்ற நினைவு முன் நிற்க, சித்ரா போல மருகி நிற்காமல், ஏற்று கொள்ள பழகி கொண்டாள்.
முத்து மாதிரி வரிசையாக மூன்று பிள்ளையை பெற்றவள் என்ற சலுகை இருந்தாலும், கோவில், விசேஷம் என்று குமரன் மனைவியாக முன் நின்றாலும் தன் கணவன் மனதில் தனக்கான இடம் என்ன? அந்த நினைவில் தான் செயல் மாறுபட்டு போனது.
குமரன் பார்வை தேவியையே வட்டமிட, அதை தவித்து போய் பார்த்தாள் சித்ரா. கிராமத்தில் ஒரு சொல்வாடை உண்டு. கட்டுபெட்டி மாதிரி என்று, அந்த சொல் தேவிக்கு சிறப்பாக பொருந்தும். உயரம், எடை, நிறம் எல்லாம் கட்டுக்கோப்பாக இருக்கும். மாநிறம் தான், கெண்டை காலை தொடும் அடர்ந்த முடி, நீள் வட்ட முகம், விரிந்த புருவம் என்று நேர்த்தியாக இருப்பாள். சித்ராவையும் குறை சொல்ல முடியாது. நல்ல சிவந்த நிறம், கொழு கொழு உடல் வாகு, சிரித்த முகமாக தான் இருப்பாள்.
பூசிய உடல் மூன்று பிள்ளைக்கு பின் பெருத்த உடலாக போனது. அவளே நினைத்தாலும் உடல் எடையை குறைக்க முடியவில்லை. சித்ரா பிள்ளைகள் உடன் பெரும்பாலும் வீட்டில் இருப்பதால், காட்டு வேலை எல்லாம் தேவி கை வசம் தான். எத்தனை சிரமமான வேலை என்றாலும் கட்டு குழையாமல் இருப்பாள் தேவி.
அதை ஒரு முறை குமரன் சொல்ல, பெண்கள் இருவர் மனம் தான் புண்ணனானது.
“தேவிய பாரு சித்ரா. உனக்கு மூத்தவ தான, உடம்ப எப்படி கட்டு கோப்பா வச்சு இருக்கான்னு… நீயும் இருக்கியே மூச்சு விட கூட சிரமப்பட்டு. இன்னும் ரெண்டு வருசம் போனா, நிலைபடிய இடிச்சு தான் கட்டணும்…” என்று நக்கல் செய்து குமரன் சொல்ல,
அது சித்ராவை சீண்டி விட்டது. அவளே தன் உடல்வாகு நினைத்து கவலை தான். அதை தேவியோடு ஒப்பிட்டு சொல்ல, சுள்ளென்று பதில் கொடுத்தே விட்டாள்.
“ஆமா, நான் குண்டா தான் இருக்கேன். ரெண்டு வருசத்துக்கு ஒருக்கா, வயித்துல பிள்ளையை கொடுத்தீங்க, வேற எப்படி நான் இருப்பேன். மூணு பிள்ளை பெத்த உடம்பு, கட்டு குழையாமவா இருக்கும். தேவிக்கென்ன பிள்ளையா, குட்டியா… வயிறு வீங்கி பிள்ளை பெத்த தான் உடம்பு ஊதும். மசக்கை கண்ட தான் முகம் வாடும். அவளுக்கு என்னை மாதிரி ஒன்னும் இல்லை. அப்ப அவ அப்படித்தான் இருப்பா…” என்று சித்ரா சொல்ல, அப்போது தான் காட்டு வேலை முடித்து உள்ளே வந்த தேவி காதில் தெளிவாக விழுந்தது.
மிக சிரமப்பட்டு முகம் மாறாமல் காத்து, அறைக்கு வந்து விட்டாள் தேவி. அக்காவை கண்டதும் பயந்து போனாள் சித்ரா. ஏதேனும் சொல்லுவாள் என்று பார்க்க, அமைதியாக கடந்து விட்டாள் தேவி. என்ன சொல்ல முடியும்.
அறைக்குள் வந்து அங்கிருந்த கண்ணாடியில் தன் வயிற்றை அமுக்கி பார்த்தாள். தட்டையான வயிறு வெறும் கூடாக இருந்தது. இந்த உலகத்தில் வலி வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு இனம் உண்டு என்றால், அது பெண் இனம் தான்.
பெண்ணாக பிறந்த அனைவரும் பிள்ளை வலியை ருசிக்க தான் ஆசைப்படுவார்கள். தலை பிரசவம் மறுபொறப்பு என்றாலும் அதை வேண்டாம் என்று சொல்லும் பெண் உண்டா… முதல் பிரசவ வலியில் பிள்ளையே வேண்டாம் என்று கதறி அழுபவர்களும், அடுத்த மூன்று ஆண்டுகளில் அடுத்த பிள்ளைக்கு வயிற்றை ஆசையாக தடவி கொள்வார்கள்.
அந்த ஆசை எல்லாம் தேவிக்கும் உண்டு தானே. பெண்ணில் அவள் என்ன விதி விளக்கு. மசக்கை மயக்கமும், பிள்ளை வாந்தியும், பிரசவ வலிக்கும் தவம் கிடந்தாள். ஆனாலும் விதி கோலம் வேறல்லவா… என்னவோ சொல்வார்கள், கோவில் வாசலில் பத்து பேர் தட்டை தூக்கி பிச்சை எடுத்தாலும், ஒன்பது பேருக்கு காசு விழுந்து ஒருவருக்கு விழ வில்லை என்றால் என்ன செய்ய இயலும். அந்த நிலையில் தான் தேவி நின்றாள்.
பிள்ளைக்காக மடி தாங்கி நின்றாள். கடவுள் அல்லவா கர்ப்பத்தை அடைத்தது. குறை தந்த கடவுளை தான் சாட வேண்டும். உன் தட்டில் காசு இல்லை என்று தானம் கேட்பவரை குற்றவாளியாக்குவது நியாயமாகுமா!…
சித்ராக்கு அன்று முழுவதும் வேலையே ஓட வில்லை. குத்தி காட்டவோ, சொல்லி காட்டவோ வார்த்தை விட வில்லை. கணவனின் வாயை அடைக்க தான் வாய் விட்டாள். அது உடன் பிறந்தவளை காயப்படுத்தும் என்று நினைக்க வில்லை.
ஒரு பெருமூச்சு விட்டு திரும்பி பார்க்க, குமரன் பார்வை தேவியை விட்டு மாற வில்லை. சிவப்பு கலர் செட்டி நாட்டு காட்டன் சேலையில் பம்பரமாக சுழன்று கொண்டு இருந்தாள். சாலா கொஞ்சம் விட்டு கொடுத்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.
எதுவென்றாலும் தேவியை முன் நிறுத்தி கொண்டாள். அவளே எல்லாம் செய்யும் படி கொண்டு வந்தாள். வேலை செய்வதற்கு யாராவது ஆர்வமாக இருப்பார்களா?… தேவி இருந்தாள். ஒதுங்கியே இல்லை இல்லை ஒதுக்கப்பட்டு பழகியவள். அவளே முன் நின்று எல்லாம் செய்யும் போது ஆசையும், ஆர்வமுமாக செய்தாள்.
அஞ்சு பாத்ரூம் சென்றாலும் உடன் சென்று அவள் தேவை பார்த்து கவனித்து கொண்டாள். ஒரு சிறு ஆச்சர்யம் பாண்டியம்மாக்கு. நாத்தனார் பிள்ளைக்கு இப்படி விழுந்து விழுந்து செய்ற…
விசேஷம் முடிந்து கிளம்பும் போது, குமரன் வார்த்தையாகவே கேட்டு விட்டான்.
“ எப்போ வீட்டுக்கு வருவ தேவி?… நியில்லாமல் வீடு வீடாவே இல்லை. வெறுக்குன்னு இருக்கு…” என்று குமரன் சொல்ல, தேவி முகத்தில் மாற்றமில்லை. சித்ரா முகம் மாற தொடங்கியது.
மனைவி, பிள்ளைகள் என்று தாங்கள் உடன் இருந்தும் கணவன் மனம் தேவியை தான் நாடுகிறது. அப்போ உனக்கு மூன்று பிள்ளை பெத்து உன்னோடு வாழும் நான் உனக்கு ஒன்றுமே இல்லையா… இது தான் சித்ராவின் பெரிய மனகுறையாக நின்றது.
குமரன் கேட்க, மற்றவர்கள் பார்த்து தான் நின்றார்கள். தேவியும் அவனுக்கு மனைவி தானே, அதுவும் முதல் மனைவி. இதில் என்ன தவறு என்று மற்றவர்கள் பார்க்க, சாலாக்கு புரிந்தாலும், இதில் என்ன சொல்ல இயலும்.
தேவி கணவன் முகமெல்லாம் பார்க்க வில்லை, எதார்த்த நடையாகவே,
“ இப்போதிக்கு இல்லை. வயசுக்கு வந்த பொம்பளை பிள்ளையை வச்சு கிட்டு சாலா வேலைக்கு போக முடியாம அவஸ்தை படுறா. அவளை பார்க்க வேணாம். மெதுவா வாரேன்…” என்றவள், நின்று கூட பதில் சொல்லாமல்
“அஞ்சு பால் சூடு ஆறி இருக்கும் எடுத்து குடி. மிளகு தூள் போட்டேன்னு குடிக்கமாட்டா…” தனக்குள் பேசியபடி நகர்ந்து விட்டாள்.
“ மருமக சொல்றது சரி தான. சாலா பிள்ளைக ரெண்ட வச்சு வேலைக்கு போக முடியாம அவஸ்தை படுது. துணைக்கும் ஆள் இல்லை. தேவி இல்லன்னா என்ன வேலையை எல்லாம் நாம பார்த்துபோம்…” என்று முத்தையா சொல்லி விட, வேற பேச முடியாமல் குமரன் கிளம்பி விட்டான்.
மொத்த துணிகளை எல்லாம் சாலா வீட்டில் வைத்து தான் பில் போட்டு கடைக்கு அனுப்புவாள். அதில் பளிச்சென்று திக் ஆரஞ்ச் நிறத்தில் ஒரு சேலை இருக்க, தனியே எடுத்து பார்த்தாள். எந்த வேலைப்பாடும் இல்லாமல் வெறுமையாக இருந்தாலும், துணி நல்ல மெருதுவாக இருந்தது. பலர் விரும்ப மாட்டார்கள் என்று தோன்ற தனியே தூக்கி வைத்தாள்.
அதை பார்த்த தேவி, “ஏன் தனியா வச்ச சாலா?…”
“சாமியார் கலர்ன்னு யாரும் எடுக்க மாட்டாங்க. ரொம்பவும் பளிச்ன்னு இருக்கு, விரும்ப மாட்டாங்க மதினி…” என்று சாலா சொல்ல, அதை கையில் எடுத்தாள் தேவி.
படிப்பு பத்தாவது வரை தான் என்றாலும், அடுத்து தையல் பழகி இருந்தாள். தேவிக்கு ஒரு யோசனை தோன்ற, செயல் படுத்த தொடங்கினாள். வீட்டிலே இருக்க, பொழுதும் போகும் அல்லவா…
அடுத்து நான்கு நாட்கள் கடந்து இருக்கும். சாலா கையில் அந்த புடவையை கொடுத்தாள் தேவி. அதிர்ச்சி கலந்து ஆச்சர்யமாக பார்த்தாள் சாலா.
முழு ஆரஞ்ச் வண்ணத்தில் கருப்பு வண்ண கற்கள் பதித்து இழை, கொடி படர்ந்தது போல சேலையின் ஓரத்தில் கை வேலைப்பாடு செய்ய பட்டு இருக்க, பார்த்தவள்,
“ மதினி, ரொம்ப அழகா இருக்கு. நீங்களா பண்ணிங்க…” என்று கேட்க.
“ஆமா, இப்பதான் கிராமத்திலும் பதினெட்டு முடியாம கல்யாணம் பண்ண கூடாதுன்னு சட்டம் இருக்கே. பத்தவதுல நின்ன என்னை, எங்கப்பரு தான் தையல் கிளாஸ் சேர்த்து விட்டார். அப்ப பழகுனது தான். வீட்டுல என் துணி, அத்தை துணி எல்லாம் நான்தானே தைப்பேன்…” என்று தேவி சொல்ல, சாலா பார்வை சேலையை விட்டு நகரவில்லை.
கிடைக்காத கலர் கருப்ப, ஆரஞ்ச் சேர்ந்த கலவை. நன்றாக இருந்தது. இதனோடு கருப்பு கலர் ஜாஸ்மின் பிளவுஸ் சேர்த்து வைத்தால் பிரமாதமாக இருக்கும்.
“ சூப்பர் மதினி. இந்த மாதிரி பிளைன் சேலை வாங்கி நாமளே ஸ்டோன் வொர்க் பண்ணி சேல்ஸ் பண்ணா, வியாபாரமும் லாபம் தான் செலவு மிச்சம். நீங்க இந்த மாதிரி பண்ணி தாரீங்களா?” என்று சாலா கேட்க.
தேவிக்கு ஆச்சர்யம் தான். பொழுது போகாமல் தான் செய்தது இவ்வளவு மதிப்பு மிக்கதா!…
சாலாக்கு ஒரு திருப்தி. மத்திய வயதில் இருக்கும் தன் மதினிக்கு என்ன செய்ய போறோம். வீட்டு வேலையே பிரதானம் என்பது போல சமைக்க, துவைக்க, கழுவ என்று தான் தேவி இருந்தாள். அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும். ஆனால் என்ன செய்ய என்ற சாலாவின் யோசனைக்கு விடை கிடைத்தது போல இருந்தது.
“மதினி நாளைக்கு இருந்து நீங்க என் கூட கடைக்கு வாங்க. அங்க இந்த மாதிரி சேலை நிறைய இருக்கு. உங்க ஐடியா எல்லாம் சொல்லுங்க. ஒரு முயற்சி செஞ்சு பார்ப்போம்…”
“நானா! எனக்கு இதெல்லாம் ஒத்து வராது சாலா. நான் படிக்காதவ, விவரம் எல்லாம் எனக்கு தெரியாது. தேவையில்லாம உனக்கு கஷ்டத்தை கொடுக்க போறேன். நான் வரல…”
“மதினி வீட்டுல சும்மா தான இருக்கீங்க. ஒரு வாரம் என் கூட வாங்க. உங்களுக்கு ஒத்து வரலைன்னா விட்டுடலாம்…” என்று சாலா சரிகட்ட
தேவிக்கு தயக்கம் தான். அவளுக்கு வீட்டு வேலை தவிர, தனக்கு எதுவும் தெரியாதே என்ற பயம் இருந்தது. ஆனால் சாலா விடவில்லை. மறுநாள் இருந்து தேவி கூடவே எழுந்து வேலை செய்து, பிள்ளைகளை பார்த்து, கையோடு தேவியை இழுத்து கொண்டு தான் கடைக்கு சென்றாள்.
தேவிக்கு பயமும், தயக்கமும் மிகுந்து இருந்தது. முதலாளி உறவினர் என்று கொஞ்சம் மரியாதை தான். பெண்களுக்கே உரிய விதவிதமான சேலை வகையில் இருக்கும் ஆர்வம், தேவியை தொற்றி கொள்ள, ஒட்டி கொண்டாள்.
தேவியோடு சேர்ந்து அவள் வழிகாட்டுதலில் இருவர் துணைக்கு இருக்க, சேலைக்கு கை வேலைப்பாடு செய்ய ஆரம்பித்தாள். ஒரு நாளில் ஒரு சேலையை முடித்து விடுவாள். நல்ல திறமை மிக்க பெண். அவள் வேலை முடித்ததும், கடை பெண்கள் பாராட்ட, கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும், மகிழ்ச்சியாக இருந்தது. நாப்பதி மூணு வயதில் கிடைக்கும் ஒரு பாராட்டு, அங்கீகாரம்.
ஒரு வாரம் கடந்த பின் சாலாவும் கேட்க வில்லை. தேவியும் பதில் சொல்ல வில்லை. தொடர்ந்து கடைக்கு செல்ல ஆரம்பித்தாள். தயக்கத்தோடு தான் வெளி உலக மக்களை எதிர் கொண்டாள். ஆனால் நாள் போக போக தன்னை போல தான் பலரும். தன்னை விட அதிகமாகவே கஷ்டப்படும் மக்களும் இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.
பிரகாஷ் தனக்கு கொடுத்த பிளாட்க்கு வந்து கதவை திறந்தான். வீடு என்னவோ போல இருந்தது. வீட்டிற்க்கு என்ன தேவை, என்ன வாங்க வேண்டும் என்று கூட தெரியவில்லை. ரொம்ப சோர்வாக இருந்தான். புன்னகை முகமாக காபி கொடுக்கும் மனைவியையும், ஓடி வந்து மடியில் அமரும் மகளையும், பள்ளி கதை சொல்ல ஆர்வமாக இருக்கும் மகனையும் மனம் எதிர்பார்த்தது.
இரண்டு படுக்கையறை கொண்ட வீடு . ஹாலில் தான் உபயோகம். நிறைய முறை நினைத்து இருக்கிறான் சாலா வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று… இன்று புரிந்தது, வீட்டு வேலை எவ்வளவு கடினம் என்று, லேசாக எடை போட்டான். பால் காய வைத்த குடிக்க கூட முடியாமல் கிடந்தான்.
கண் மூடி அரைமணி நேரம் படுத்தவன், வேற வழி இல்லாமல் எழுந்து காபி போட சென்றான். உடல் எடை குறைந்து, சோர்ந்து போய் இருந்தான். குடும்ப பிரச்சனையால் இருக்கும் என்று நினைத்தவன் கண்டு கொள்ள வில்லை. தொடர் சோர்வும், அழுத்தமும் வாட்ட, பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லை.
அன்று மதியம் உணவு முடித்து வெளி வரும் போது லேசான கிறுகிறுப்பு வர, அவசரமாக அங்கிருந்த சேரில் அமர்ந்து கொண்டான். இது வேற என்னவோ என்று பயம் வந்தது. நாற்பத்தி ஐந்து வயது தான். உடல் தள்ளாட தொடங்கியது. குடும்பமும் உடன் இல்லை என்ற பயம் வர, டாக்டரை தேடி ஓடினான்.
ஏதேதோ டெஸ்ட் எடுத்தார்கள். அரண்டு போய் அமர்ந்து இருந்தான் ஜெயபிரகாஷ். ரிசல்ட்டும் வந்தது, சுகர் என்றார்கள்.
ஐயோ! நெஞ்சில் கை வைத்து கொண்டான். உணவில் கட்டு கோப்பு தான். அது எல்லாம் சாலா கவனித்த வரை மட்டுமே. வயது மறந்து இரண்டு வருடம் கண்டபடி ஷாலினி உடன் ஆட்டம் போட்டான். இதோ சுகர் வந்து நின்றது. அடுத்து என்ன என்று பார்க்க, கிட்னி நீர் தேக்கம், அல்சர் என்று சொன்னார்கள்.
ஒரு பை நிறைய மருந்து மாத்திரை வீடு வந்து சேர்ந்தது. அவசரமாக தாய்க்கு அழைத்து சொல்ல,
“ஏண்டா பயப்படுற… உங்க அப்பாக்கு, எனக்கு எல்லாம் சுகர் இருக்கு. சாப்பாடு மட்டும் அளவா எடு. வாழை தண்டு சூப் சேர்த்துக்க கல்லு இருக்காது…” என்று அம்மா அட்வைஸ் தான் பண்ணினார். உடன் வந்து பார்த்து கொள்வதாக சொல்ல வில்லையே. அதில் கொஞ்சம் வருத்தம் தான்.
கண்ணாடியில் மீண்டும் தன்னையே பார்த்து கொண்டான். கண்ணத்து, எலும்பு தூக்கி, கழுத்து நரம்பு வெளி தெரிந்தது. இனி தாமதிக்க வில்லை. உடனே சாலாக்கு அழைத்து விட்டான்.