தேவி மாலையில் சீக்கிரமாக வீடு திரும்பி விடுவாள். பிள்ளைகள் இருப்பதால் இரவு வரை வேலையை இழுத்து பிடிக்க மாட்டாள். அன்றும் அவசரமாக படியில் இறங்கி வரும் போது, அவர்கள் கடையில் வேலை செய்யும் பெண், படியில் மெதுவாக இறங்கி கொண்டு இருந்தாள்.
“ என்ன ஷீலா?…”
“அது வந்து அக்கா, இப்போது தான் நாப்பது நாள். அதான் மெதுவா இறங்குறேன்…” தயங்கியே பதில் சொல்ல,
“அப்படியா, சந்தோசம்… நல்லா இரு…” என்றவள் மெல்ல ஷிலாவின் கை பிடித்து மெதுவாக படியில் இறக்கி விட்டாள். யாரும் செய்வது தானே என்று சாலா கண்டு கொள்ள வில்லை.
மறுநாள் கடை திறக்கும் போது ஷீலாவும் வந்துவிட,
“என்ன ஷீலா வாந்தி எல்லாம் வருதா… மயக்கம் இருக்க, சாப்பிட என்ன ஒப்புது?…” என்று சகஜமாக கேட்பது போல தான் தேவி கேட்டது.
ஆனாலும் சாலாக்கு என்னவோ ஒன்று உறுத்தியது. அடுத்து மூவரும் படிகளில் ஏற சகஜமாகவே தேவி, ஷீலாவின் உணவு பையை வாங்கி கொண்டாள்.
மற்ற இருவரும் ஆச்சர்யமாக பார்த்தார்கள். சாப்பாட்டு பையை கூட தூக்க முடியாத கர்ப்பிணி யார்?… தேவி அந்த கடையின் இன்னொரு முதலாளி. அவளே முன் வந்து செய்வது?… சாலா கூர்ந்து பார்த்தாள்.
ஷீலா க்கு அதிக அழுத்தம் இல்லாதா வேலையை கொடுக்க சொன்னாள் தேவி. அடிக்கடி அவளோடு பேசினாள். எல்லாம் குழந்தையை பற்றி தான்.
இவர்கள் கடையில் இரண்டு ஆண்களும் உண்டு. பெண்கள் கடை என்பதால் பாதுகாப்புக்கு. அவன் முத்து பாண்டி, அவனுக்கு தான் பெண் குழந்தை பிறந்தது இருந்தது. மரியாதை கருதி தன் மனைவி, பிள்ளையை கடைக்கு அழைத்து வந்தான்.
சாலா கையிலும், தேவி கையிலும் பிள்ளையை கொடுத்தான். சாலா இயல்பாக தூக்கி கொஞ்சி பிள்ளைக்கு என்று புதிய ஆடை, மற்ற பொருட்களை கொடுக்க. தேவி மடியை விட்டு இறக்கவே இல்லை. அவர்கள் போகும் வரை அவள் கையில் தான் வைத்து இருந்தாள்.
அந்த குழந்தையின் தாயிடமும், “ பாப்பா எத்தனை மாசத்துல பொறந்துச்சு, நல்ல வலியா? பிள்ளை வலி எப்படி இருக்கும்? நீ எப்படி கையில் வாங்குன? தாய் பால் எப்போ குடுத்த?…” விடாமல் தொடர் கேள்வி தான்.
பெற்றவளுக்கு தன் பிள்ளை பெருமை ஓயுமா? அவளும் சலிக்காமல் தன் பிரசவ கதையை சொல்ல, ஆசையாக கேட்டு கொண்டாள் தேவி. அவர்கள் சென்ற பின் சாலா பார்வை தேவியையே வட்டமடிக்க, தேவி அடிக்கடி தன் சேலை முந்தானையை முகர்ந்து பார்த்து கொண்டாள்.
“என்ன மதினி, சேலையை மோந்து பாக்குறீங்க?…” கேட்காமல் இருக்க முடியவில்லை.
“அது வந்து…” என்று தயங்கியவள், “பச்சை பிள்ளை வாசம் சாலா. பெத்தவ மேல மட்டும் தான் வீசும். எம் மேலயும் வாடை அடிக்குது. ஆசையா இருக்கு…” என்று சொல்ல, சாலா கண்களில் மலுக்கென்று கண்ணீர் எட்டி பார்த்தது.
இதை எப்படி மறந்தேன்? தேவிக்கு பதினெட்டு வயதில் தொடங்கிய ஏக்கம் நாற்பத்தி மூணு வயதிலும் மறைய வில்லை, மாற்றமும் இல்லை. இதற்கு என்ன செய்ய இயலும்.
அடுத்தடுத்து ஷீலாக்கு கவனிப்பு கூடியது. தேவியின் கை மனத்தில் புளி குழம்பு, மாவடு, ஈரல் கூட்டு வர தொடங்கியது. மற்றவர்கள் பேசும் அளவுக்கு தேவியின் செயல் இருந்தது.
“தேவி அக்காக்கு பிள்ளை இல்லையில, அதான் பிள்ளைதாச்சி மேல ஒரே கரிசனம்…” என்று பேச்சு பரவியது.
தேவி இருக்குமிடத்தில் தான் ஷீலாவை வேலைக்கு என்று வைத்து கொள்வாள். அவள் பிள்ளை தாங்கி கையை வயிற்றில் வைத்து நடப்பதை அவ்வளவு ரசிப்பாள். கால் வீக்கம், முக வீக்கத்தையும் ஆசையாக பார்ப்பாள்.
சாலாவும் கவனித்து கொண்டு தான் இருந்தாள். கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருந்தது. பிள்ளை ஏக்கம் இன்றும் வரை இருக்கிறதா? சரிதான், குமரனுக்கு தான் பிள்ளை வந்ததே தவிர தேவிக்கு இல்லையே. சித்ரா பிள்ளைகள் மூவரும் தேவியை பெரியம்மா என்று தான் அழைப்பார்கள். அவர்களை குளிக்க வைத்து, உணவு ஊட்டி, தூக்கி வளர்த்ததும் தேவி தான். அப்படி இருந்தும் அவருக்கான பிள்ளை ஏக்கம் குறையவே இல்லை.
தாங்கள் எல்லாம் எவ்வளவு பெரிய பிழை செய்து இருக்கிறோம். பிள்ளை இல்லை என்று சித்ரா உடன் திருமணம். ஒன்னுக்கு மூன்று பிள்ளைகள், பிள்ளை ஏக்கம் தீர்ந்தது. யாரும் அடுத்து தேவிக்கு என்ன என்று யோசிக்க வில்லை. அதான் வீட்டில் மூன்று பிள்ளைகள் இருக்கிறதே! வேற என்ன என்று விட்டு விட்டார்கள்.
சாலா தலையை பிடித்து கொண்டாள். இதற்கு தீர்வு என்ன… இந்த வயதில் குழந்தை சாத்தியமா!… அதற்கு தேவி, குமரன் முடிவு என்ன? குமரனுக்கு தேவி மீது பிடித்தம் அதிகம். அதன் பின் சித்ரா, அவள் பிள்ளைகள்?…
தற்போது வளர்ந்து நிக்கும் மருத்துவத்தில் தேவி பிள்ளை பெறுவது கஷ்டம் என்ற போதும் முடியாததல்ல. ஆனால் சித்ரா, அவளால் எப்படி ஏற்க முடியும். அவளின் ஒரு ஆதாரம் பிள்ளைகள் தான். அதை வைத்து தான் அந்த வீட்டில் தன்னை நிலை நிறுத்தி கொண்டு இருக்கிறாள். தேவி கர்ப்பம் அவள் வாழ்க்கையை பாதிக்காது, ஆனால் அவள் மனதை பாதிக்கும். முன்பு தேவி அனுபவித்த அத்தனை வலியையும் சித்ரா அனுபவிக்க நேரும்.
எதையும் யோசிக்காமல் தேவியிடமே கேட்டும் விட்டாள். ஒரு விரக்தி சிரிப்பு சிரித்த தேவி,
சாலா, என் கர்ப்பம் செத்தது. அதுல கனி நிக்காது…” என்றவள்,
“அப்புறம் ஏன் இந்த தவிப்பு, ஆசை, எதிர்பார்ப்பு எல்லாம். சின்ன வயசுல தாயை இழந்த குழந்தைக்கு, எத்தனை ஆதரவும், அன்பும் கிடைத்தாலும் கடைசி வரை அந்த குழந்தைக்கு தாயிக்கான ஏக்கம் இருக்கும், வாய்ப்பு இல்லன்னு தெரிஞ்சும் தாய் பாசத்தை அறிய துடிக்கும். அப்படி தான் எனக்கும்… ஒரு குழந்தையை என்னால சுமக்க முடியலன்னு ஏக்கம், ஆதங்கம் எனக்கு காலத்துக்கும் இருக்கும். அந்த ஏக்கத்தோட வாழ பழகிட்டேன் தவிர இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை தட்டி பறிக்க மாட்டேன் சாலா…”
“மதினி…” கண்களில் நீர் திரள தேவி கைகளை பற்றி கொண்டாள் சாலா.
“நான் அப்படி என்னை பெரிய பாவம் பண்ணேன் சாலா. பெண்ணுக்கு தாய்மை தான் உரியதுன்னா அதை அந்த கடவுள் எனக்கு குடுத்து இருக்கலாம் தான. கடவுள் ஏன் எனக்கு கருணை காட்டல. எத்தனை கோவில், விரதம் எந்த சாமியும் எனக்கு துணை நிக்கல…”
இதற்கு சாலாக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. ஆறுதல் கூட சொல்ல முடியா வலி தேவி உடையது. ஏதாவது ஒன்றை செய்ய தான் வேண்டும் என்று தோன்ற, நினைவில் வந்ததென்னவோ சாரு பாலா தான்.
முதலில் தேவி ஒப்பு கொள்ளவே இல்லை. இத்தனை வருட மன காயம் யாரோ ஒருவர் எப்படி சரிசெய்ய முடியும். தனக்கு என்ன பைத்தியமா? மன தத்துவ நிபுணரை பார்க்க, சாலா விடவில்லை. போதும் இந்த வலி, இனி குறைக்க தான் வேண்டும்.
தன்னை விட சிறிய பெண்ணாக இருந்த சாரு பாலவை ஆச்சர்யமாக பார்த்தாள் தேவி.
பிரச்சனையை பேசாமல் இனிமையாக பேச்சை ஆரம்பித்து, தேவியையும் பேச வைத்தாள். கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்தம் வெளி வர ஆரம்பித்தது.
“சோ, குழந்தை இல்லன்னு சொல்லி உங்க தங்கச்சிய கட்டி வச்சுட்டாங்க…”
“ஆமா…”
“உங்களுக்குக் விருப்பம் தான்…” சாரு தூண்டில் போட,
தேவி, “விருப்பமில்லை. ஆனா நான் சம்மதிச்சு தான் நடந்தது…”
“ஒரு வேளை நீங்க சம்மதிக்கலனா?…”
“என்னை அத்து விட்டுறுப்பாங்க…” விரக்தியாக வந்தது வார்த்தை.
“உங்களை நினைச்சு தான் உங்க தங்கச்சி, உங்க புருசனை கட்டிகிட்டாங்க…” வார்த்தை கொஞ்சம் வலிக்க,
“அவளுக்கும் புருசன் தான்…”
“தாலி கட்டுனா புருசன் தான். நான் சொல்றது உங்களுக்கு புருசானா இருக்கும் போதே உங்க தங்சச்சிய கல்யாணம் கட்டிட்டாங்க…”
“ஆமா, எனக்கு குழந்தை இல்லை. அத்தோடு குறை எனக்கு தான்…” தயங்கி தான் தேவி பேசியது.
“உங்களுக்கு குழந்தை இருந்தா, வேற கல்யாணத்துக்கு வாய்ப்பு இல்லை…”
“ஆமா…”
“அப்ப தாம்பத்தியத்தை தீர்மானிக்கிறது குழந்தை தான். நீங்க அம்மாவான தான் உங்க புருசனுக்கு பொண்டாட்டியா இருக்க முடியும்…”
அமைதியாக இருந்தாள் தேவி. உண்மையில் இந்த கேள்வி அனைத்தும் அவள் மனதிலும் இருக்கிறது தானே… விடை சொல்ல தான் ஆள் இல்லை.
“சரி நம்ம பாயிண்ட்டுக்கு வருவோம். கல்யாணம் ஆச்சு, குழந்தை இல்லை. குழந்தைக்காக வேற ஒரு கல்யாணம் அவசியம்ன்னு உங்களுக்கு தோணுதா?…”
தேவி கண்களில் நீர், “இல்லை…”
சாருவிடம் ஒரு சிரிப்பு. “அப்புறம் ஏன் ரெண்டாம் கல்யாணத்துக்கு சரின்னு சொன்னீங்க…”
தேவிக்கு பதில் இல்லை. அமைதியாக அமர்ந்து இருந்தாள்.
“இந்த வலி வேணாம் தேவி. தூக்கி போட்டுடலாம். காயத்தை சீல் பிதுக்காம மருந்து கட்ட முடியாது…”
ஒரு பெரிய மூச்சை எடுத்து தன்னை நிலை படுத்தி கொண்டாள்.
“குழந்தைக்காக தானே கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. அடுத்த தலைமுறை வாரிசு வேணும் தான. வாக்கப்பட்டு வார பொண்ணு அந்த குடும்பத்தை தழைய தான் செய்யணும் தவிர, தடையாக இருக்க கூடாது. வாரிசு இல்லாமல் எப்படி இங்க வாழ்றது. என் புருசன் பேர் சொல்ல பிள்ளை வேணாமா… வம்சம் விருத்தி அடையனும் தான…”
“இதையெல்லாம் யார் சொன்னது?…”
“என்னை சுத்தி இருக்கவங்க தான்.”
“குழந்தை இல்லாம வாழ முடியாத?…” சாரு கேட்க.
“குழந்தை இல்லாம எப்படி வாழ முடியும்?”
“ வாழத்தான் வேண்டும். நமக்கான வாழ்க்கையை தான நாம வாழ வந்திருக்கோம். குழந்தை நமக்கான பொறுப்பு. கடவுள் உங்களுக்கு அந்த பொறுப்பை கொடுக்கல. வேற என்ன பொறுப்பு கொடுத்து இருக்கார். பாருங்க…” சாரு சொல்ல, தேவிக்கு குழப்பம்,
“ஆனாலும் குழந்தை இல்லாம எப்படி?…”
“மொத அந்த கேள்வியை கேள்வி குறி ஆக்காமா, நீங்க பதில் எழுதுங்க… எனக்கு ஒரு விசயத்துக்கு உண்மையா பதில் சொல்லுங்க. உங்க கணவர், குழந்தைக்காக எனக்கு இரண்டாம் கல்யாணம் வேணாம்னு சொல்லி இருந்தா, நீங்க என்ன சொல்லி இருப்பீங்க?…”
“என்ன சொல்லி இருப்பேன். சரின்னு சொல்லுவேன்… எனக்காக நிக்குறார்ன்னு சந்தோச படுவேன்…”
“யார் சொன்ன என்னங்க, கட்டுனவன் துணை நிக்குறான் தான…” என்று சாலா சொல்ல,
ஆச்சர்ய முக பாவனை காட்டிய சாரு, “அட என்னங்க இப்படி சொல்றீங்க. அப்புறம் உங்க வம்சம், வாரிசு, தலைமுறை எல்லாம் என்ன ஆகிறது. உங்க எதிர்காலம் எங்க?”
“ஆனா, புருசனே குழந்தை இல்லன்னா சரின்னு சொல்லும் போது மனைவி என்ன சொல்ல முடியும்…” தேவி சொல்ல,
“ அப்படியா சரிதான். புருசன் சொல்லும் போது பொண்டாட்டி கேட்க தான் வேண்டும். ஆனா ஏன்?…” சாரு விடவில்லை.
“ காலத்துக்கும் அவங்க தான் ஒருத்தருக்கொருத்தர் துணை. அவங்களுக்கு பிள்ளை இல்லாதது பெரிய குறையா தெரியாத போது…” என்று இழுக்க,
அவ்வளவு தான் சிம்மிள். இதுல எங்க இருந்து உங்க வம்சம், குலம், வாரிசு, எதிர்காலம் எல்லாம் வருது. குழந்தை இல்லையா? ஆமா இல்லை. அப்படியே முடிச்சு விடுங்க. அதுக்கு ரொம்ப யோசிச்சு, ஏங்கி, அழுது, உங்களுக்கு நீங்களே அழுத்தம் கொடுக்காதீங்க…” என்ற சாரு, தேவியை ஒரு வட்டத்துக்குள் இழுத்து வந்தாள்.
“உங்க கணவர் உங்களுக்காக நிக்கலயா தேவி. நீங்க அடுக்குன இத்தனை காரணத்துக்கும் உங்க கணவன் உடன் இருந்தால் கடந்து விடலாம்னு நின்னைச்சீங்களா தேவி?…” என்று சாரு கேட்க.
ஆமாம் என்று தலையசைத்து கண்ணீரை கொட்டி விட்டாள்.
சித்ராக்கு முன் அவர்களது எட்டு வருட தாம்பத்தியம். பிள்ளை இல்லை என்ற ஒற்றை சொல்லில் உதறி தள்ளி விட்டான். அத்தோடு மடிந்து போனவளை, குழந்தை தான் வாழும் வாழ்க்கையின் அடையாளம், வாரிசு தான் வாழ்க்கை, பிள்ளை இல்லா வாழ்வு என்ன வாழ்க்கை , பிள்ளை தான் மரியாதை , கௌரவம், வாழும் முறை என்று இவள் வாழும் சமூகம் சொல்லி, நாலு பக்கமும் அழுத்தம் கொடுக்கும் போது தன்னில் தான் குறை என்று உணர்ந்து, நல்ல மருமகளாக, நல்ல மனைவியாக அந்த வீட்டின் அடுத்த தலைமுறைக்கு வழி விட்டு நிற்க வேண்டும். இது தான் ஒரு பெண்ணுக்கு சமூகம் வகுத்த இலக்கணம்.
அதை மாற்றாமல் தன் கையாலேயே தன் கணவனுக்கு, உடன் பிறந்தவளை மனம் முடித்து வைத்தாள். அது எப்படி என்றால் உயிரோடு இருக்கும் போதே உடலில் தோலை உரித்தால் எப்படி வலிக்குமோ அப்படி இருந்தது.
பழைய ரணத்தை கீறிய வலி தேவிக்கு. அழுகட்டும் காயம் ஆறும் என்று விட்டு விட்டாள் சாரு பாலா.
“அப்புறம் அது என்ன கர்ப்பிணி பெண்களுக்கு உங்க கிட்ட பயங்கர சலுகையாம்… சாலா சொல்லி கேள்வி பட்ட எனக்கு வருத்தம். அவசரப்பட்டு குடும்பக்கட்டுப்பாடு பண்ணிட்டேன்…” கேலியாக அடுத்த பக்கம் கேள்வியை திருப்பினாள்.
அழுது ஓய்ந்து போய் கிடந்த தேவி, “அது என்னால அம்மா ஆக முடியாம போச்சுல, அதான்…”
“ஒரு குழந்தையை தத்து எடுக்கலாமா? நீங்க அம்மா ஆகிடுவீங்க…”
“இல்லை சாரு. தாய்மைன்றது சாதாரண விசயம் கிடையாது. அது ஒரு வரம், எல்லாருக்கும் கிடைக்காது. தாயா என்னால உணர முடியாது. தாய்மை உணர்வை என்னால உணர முடியலை. அதான் தாய்மையை உணர்ற யாராவது பார்த்தா, எம் மனசு என்னை மீறி அவங்க பின்னாடி போயிடும்…”
“ஏன் அப்படி சொல்றீங்க தேவி?…”
அதற்கு ஒரு காரணம் இருந்தது. வர்சன் பிறந்து நான்கு வயது இருக்கும். ஆண் வாரிசு என்று செல்லமும் அதிகம். அப்போது அவர்கள் வீட்டில் ஸ்டீல் ஃபேன் ஒன்று இருந்தது. ஓடும் காத்தாடியில் வெளியே கை வைத்து ஊ என்று கத்தி விளையாடி கொண்டு இருந்தான்.
அப்போது தான் வேலை முடிந்து வீடு வந்த தேவி, மகனை கண்டு அதிர்ந்து போனாள். எங்கே கையை அல்லது ஒரு விரலை தெரியாமல் உள்ளே விட்டால் விரலே இல்லாமல் போகும் என்பதால் அவசரமாக ரசம் பிள்ளையை தூக்கியவள், பதட்டத்தில் பிள்ளை முதுகில் ஒன்று போட்டாள்.
“ கையை உள்ளே விடுவியா? கை பொனா என்ன ஆகிறது…” என்று சத்தம் போட
எப்போதும் தூக்கி கொஞ்சும் பெரியம்மா, இன்று அடிக்கவும், பெரும் குரலில் கத்த தொடங்கினான். பிள்ளை சத்தத்தில் பதறி அடுத்து ஓடி வந்த சித்ரா, விசயம் தெரிந்து கத்த தொடங்கினாள்.
யார் சமாதானமும் எடுபட வில்லை. நோஞ்சானாக இருக்கும் மகனின் அழுகை தான் முன் நின்றது.
“ சித்ரா, பிள்ளை கையை கொடுக்க போகுதுன்னு பயத்துல தான் தேவி கை நீட்டி இருக்கும். விடு பிரச்சனை பண்ணாத…”
“பிரச்சனை பண்ணலங்க. அவனே முடியாதவன், எப்படி அழுகிறான் பாருங்க. கை நீட்டாமா அரட்டி விடலாம் தான…”
பாண்டியம்மாள் தான், “ஏண்டி, நீ எல்லாம் பிள்ளையை அடிச்சதே இல்லையா… தேவிய தொட்டது உனக்கு குத்தமா…”
“அதுக்கில்லை அத்தை. பிள்ளை அழுகவும் என் மனசு பதறி போச்சு. பெத்தவா நான் அடிக்கிறது வேற… அக்கா கை நீட்டவும் பயந்துட்டேன்.” என்று சித்ரா விளக்கம் கொடுத்தும்.
“ அவ தான் பிள்ளையை பாக்குற. உம் பிள்ளைகளுக்கு சேவை செய்யும் போது அவ வேணும், தப்புன்னு கண்டிக்க கூடாதா?…”
கண்டிக்கலாம் தான். ஆனா, வேற ஒருவர் கை நீட்டும் போது மனசு பதறியது. தேவி கோபமாக பிள்ளையை அடிப்பது சித்ராக்கு சுத்தமாக பிடிக்க வில்லை. இவள் அடிப்பது வேறு, வேற யாரும் கை நீட்டினால் வலித்தது. அதை சொல்லியும் விட்டாள்.
அது தேவியை பெரிய அளவில் தாக்கியது. மடி தாங்கி, கரு சுமந்து, வலி கண்டு பெரும் பிள்ளையை தாயால் மட்டும் தான் உணர முடியும். தான் பிள்ளையை சுமக்காததால், தன்னால் தாய்மையை உணர முடியவில்லை. தனக்கு தாய்மை உணர்வும் இல்லை.