அன்று பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள். பிரகாஷ் முன்னதாகவே கிளம்பிவிட்டான். மும்பை வந்ததில் இருந்து ஊருக்கு ஒரு முறை கூட செல்லவில்லை. அவனை அங்கு தேடவும் யாரும் இல்லை.
அவனுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது, தன்னை யாரேனும் அழைக்க வேண்டும் என்று… தாய் தினமும் பேசுவார். ஆனால் ஒரு முறை கூட ஊருக்கு வா என்றோ, அல்லது நாங்கள் உன்னை பார்க்க வரவா என்றோ கேட்க வில்லை. பொதுவாக வார்த்தைகள் வரும்,
“உன்னை பார்க்க மனசு அடிக்குது பிரகாஷ். உங்க அப்பா, உன் பேச்சே கூடாதுன்னு சொல்லிட்டார். நான் ஏதாவது என் மகன்னு சொன்னேன், அவ்வளவு தான் வீட்டுல பிரளயம் தான் வரும். வயசான காலத்துல ஓடியும் வர முடியலை…” என்று ஏதாவது காரணம் தான் சொல்லுவார்.
புது இடத்தில் வேலை அதிகம். அவன் நினைத்தால் வந்து இருக்கலாம். ஆனாலும், மனைவி, பிள்ளைகள் தன்னை தேட வேண்டும் என்று ஆசைப்பட்டான். தன்னுடைய பிரிவு, குடும்பத்தில் ஏதேனும் மாற்றத்தை கொண்டு வரும் என்று நம்பினான். தன்னுடைய தப்பும் மன்னிக்க படும் என்ற எதிர்பார்ப்பு. அதன் தொட்டு தான் குடும்பத்தை விட்டு ஒதுங்கியே இருந்தது.
ஆனால், இன்று மகன் வாழ்க்கையில் முக்கிய நாள், நன்றாக படிப்பவன் என்று தெரியும், இருந்தும் தந்தையாக ஒரு பதட்டம். அஜய்க்கு டெல்லி அகாடமியில் படிக்க ரொம்ப ஆசை. அங்கு மதிப்பெண் மட்டுமே பேசும். படபடப்போடு தான் அஜய் இருந்தது.
காலையிலே பிரகாஷ் வந்து விட, யாரும் பெரிதாக கண்டு கொள்ள வில்லை. அதே நேரம் ஏன் வந்தாய்? வராதே? என்ற பேச்சுக்களும் இல்லை. சாலா ஒரு தலையசைப்பில் ஒதுங்கி கொண்டாள். அஞ்சனாவிடம் ஒரு புன்னகை மட்டும் தான். வீட்டின் மாப்பிளை என்ற வகையில் கவனித்து கொண்டது தேவி தான்.
காலை பத்து மணிக்கு தேர்வு முடிவுகள் வெளி வந்தது. பள்ளியின் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று இருந்தான். அஜய் ஆசைப்பட்ட படிப்பில் இனி எளிதாக உள்நுழையலாம். பிரகாஷ்க்கு ஒரே பெருமை. தன் வீடு, உடன் பிறப்பு, சொந்தம், நண்பர்கள் என்று போன் பேசியே மாய்ந்து போனான்.
விசாலாட்சிக்கு கண் கலங்கியது. ஒரு சந்தோசமான குடும்ப சூழலை தாங்கள் கொடுக்க வில்லை, நிறைய அழுத்தமும், வலியும் தான் கொடுத்தது. வளரிளம் பருவத்தில் நம்பிக்கையில்லா குடும்ப சூழலில் நின்று மகன் சாதித்து கொண்டான். பெருமையாக இருந்தது.
சாலா வீட்டு ஆட்கள் எல்லாம் வந்து விட்டார்கள்.
“எங்க வம்சத்திலே யாரும் இம்புட்டு மார்க் எடுக்கல. எம் பேரன் ஜெயிச்சு புட்டான்…” பாண்டியம்மாள் பெருமை பேச
“ஐயனாருக்கு கிடா நேந்து விடணும்…” என்று முத்தையா சொல்லி கொண்டு இருந்தார்.
பிரகாஷ் உடன் பிறப்புகள் போனில் விசாரித்து வாழ்த்து சொன்னார்கள்.
பிரகாஷ் விலையுயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசளித்தான். அதன் விலையே ரெண்டு லட்சத்தை தொடும். மகனின் முகத்தில் வரும் சந்தோசத்தை ஆவலாக எதிர்பார்க்க,
சின்ன சிரிப்பில் தேங்க்ஸ் சொல்லி மகன் முடித்து கொண்டான். பிரகாஷ் முகம் சீராகவே இல்லை. அஜய்க்கு ஆறு வயதில் ஸ்கேட்டிங் சேர வேண்டும் என்று ஆசையாக கேட்ட போது, முதலில் சாலா ஒத்து கொள்ளவே இல்லை.
பிரகாஷ் தான் மனைவியை சமாளித்து ஸ்கேட்டிங் பயிற்சியில் சேர்த்து விட்டான். அன்று இரவு ஸ்கேட்டிங் ஃபோர்ட் ஒன்றை தந்தை வாங்கி வர, அதை பார்த்த சந்தோசத்தில் அஜய் ஐம்பது முத்தம் கொடுத்தான் தந்தைக்கு…
ஓரளவு வளர்ந்த பின் தான் முத்தம் கொடுப்பது இல்லை. ஆனால், அப்பா என்று ஆசையாக கட்டி கொள்வான். தன் உயரத்தில் வளர்ந்து நிக்கும் மகனை அணைக்கும் போது தந்தையாக பிரகாஷ் பூரித்து போவான். அப்படி ஒரு நிகழ்வை எதிர்பார்த்து பிரகாஷ் நிக்க, ஒற்றை நன்றியில் மகன் ஒதுங்கி கொண்டான்.
பதினெட்டு வயதாக போகுது. மகன் வளர்ந்து விட்டான் வேற ஒன்றும் இல்லை என்று பிரகாஷ் தன்னையே சரி கட்டி கொள்ள, சாலாவை அணைத்து இருந்தான் அஜய்.
தேவி கேசரி செய்து எடுத்து வர, தேவி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டான். தேவி தான் முதலில் ஊட்டி விட்டது. அடுத்து சாலா, தாத்தா, பாட்டி என்று ஒவ்வொருவராக இனிப்பு ஊட்டி விட்டார்கள். பிரகாஷ் ஒதுங்கியே தான் நின்றான். அவனை தேடுபவர் யாருமில்லை.
முத்தையா, பாண்டியம்மாள், குமரன் எல்லாம் மாப்பிள்ளை என்று மரியாதையாக தான் பேசினார்கள். ஆனாலும் பிரகாஷ் பார்வை மனைவி, பிள்ளைகளை தான் வட்டமிட்டது. அதுவும் அவன் செல்ல மகள், அப்பா கிட்ட கூட வரவில்லை. அவன் மடியை விட்டு இறங்காத மகள், என்ன வாங்கி வந்தாய் என்று கையை பார்க்கும் மகள். இன்று தள்ளியே நின்று கொண்டாள்.
அடுத்து வந்தது யார் என்றால் மணிமாறன்.
“ரொம்ப சந்தோசமய்யா! நல்லா வரணும். காச, காசுன்னு பார்க்காம கொட்டி படிக்க வச்சதுக்கு மதிப்பை தேடி கொடுத்துட்டா…” என்று அவனின் தோலில் தட்டி பேசியபடி, ஒரு இரண்டாயிரம் தாள் எடுத்து அஜய் கையில் கொடுக்க,
காலில் விலுந்து அஜய் ஆசிர்வாதம் வாங்க, அதிர்ந்து போன மணிமாறன், தன் திகைப்பில் இருந்து வெளி வந்து,
“நீ நினைச்ச மாதிரி நல்லா வருவ, நல்லா வாழ்வ…” என்று வாழ்த்தி தோல் தொட்டு தூக்கி விட்டவர். அஜய் முகத்தை ஆசையாக வருடி விட்டார்.
தேங்க்ஸ் பெரியப்பா என்ற அஜய் தன் பெரியப்பனை அணைத்து கொண்டான்.
இதையெல்லாம் நெஞ்சில் எரிமலை வெடிக்க பார்த்து இருந்தான் பிரகாஷ். பிள்ளைகள் சாலா வளர்ப்பாக இருந்தாலும், பிரகாஷ் வாரிசு என்று தான் நிரூபிக்கும். அதிலும் அஜய்க்கு மணிமாறன் குடும்பம் மொத்தமாக செட் ஆகாது.
விவசாய பின்னணியில் ஆடு, மாடு என்று வாழ்பவர்களை பார்த்து முகம் சுளிப்பான். அதிலும் மணிமாறன் பக்கம் போக கூட மாட்டான். எப்போதும் அழுக்கு வேட்டி சட்டையில், பால் கறப்பதால் விளக்கெண்ணெய் வாடையில் இருப்பவன் அருகில் கூட செல்ல மாட்டான். பெரியம்மா வீடு என்று லீவுக்கு கூட செல்ல மாட்டான். சாலா சொன்னால் கூட,
“போம்மா, அங்க ஏசி இல்லை. வீடு சுத்தமே இருக்காது. பெட் இல்லாம எனக்கு துக்கம் வராது. மாட்டு சானி எனக்கு வாந்தி வரும்…” என்று ஒதுக்கி கொள்வான்.
அப்படி சொல்லிய மகன், இன்று பெரியப்பா என்று அனைத்து கொள்கிறான். இன்றும் அதே கைலி வேட்டி, பழைய சட்டையில் தான் வந்து இருந்தார். ஆனால், அன்று இருந்த மகன் இன்று இல்லை.
கஷ்டம் நிறைய போதானை சொல்லும், அதை புரிந்து கொண்டு வாழ்வை கட்டமைப்பவர் சிலர் தான். அஜயும் புரிந்து கொண்டான்.
மரியாதை என்பது நாம் வாழும் வசதியான வாழ்க்கையோ, உயர்ந்த பதவியோ கிடையாது. மரியாதை என்பது நாம் வாழும் முறையில், கடைபிடிக்கும் கொள்கையில் கிடைப்பது.
தன் தாய் எல்லாவற்றிலும் துணையாக தந்தைக்கு உடன் நிற்க. அப்பன் மனம் மாறி, ஒழுக்கம் கேட்டு போனான். ஆனால், மனைவி இறந்த பின்னும் அதே வயதில் இருந்தும் மனைவியின் நினைவுகள் மட்டும் போதும் என்று பிள்ளைகளுக்காக, ஒரு தாயின் பொறுப்பையும் சேர்த்து சுமக்கும் மணிமாறன் , அஜய் கண்களுக்கு உயர்ந்தவனாக, பண்புமிக்கவனாக தெரிந்தான். படிப்பு இல்லாவிட்டால் என்ன படிப்பு கத்து கொடுக்கும் ஒழுக்க விதியை காத்து நிற்கிறார். வசதி இல்லாவிட்டால் என்ன வாழும் வாழ்க்கைக்கு, இறந்த மனைவிக்கு நேர்மையாக இருக்கிறார். சக மனிதனை மதிக்க வேற என்ன வேண்டும்.
“ஒழுக்கம் உயினினும் ஓம்பப்படும்…” என்று சொல்லி வழிகாட்டிய தந்தையின் வாழ்க்கை முறை பெற்றவர் மேல் மதிப்பிழக்க செய்தது.
பிரகாஷ்க்கு தாங்கவே முடியவில்லை. பார்வை எல்லாம் மனைவி, பிள்ளைகள் மீது தான். நான் இல்லாமல் என் குடும்பம் இயங்குது. நான் அவர்களுக்கு தேவையே இல்லையோ!… நெஞ்சு வலித்தது. நான் செய்தது தவறு என்று எப்போதும் ஒப்பு கொண்டு மன்னிப்பு கேட்பவன். இன்று தான் செய்த தவறின் ஆழத்தை உணர்ந்தான்.
அவன் கண் முன்னே அவன் குடும்பம் தனித்து நிற்கிறது. ஒருகாலத்தில் சுமையாக தெரிந்த குடும்பம். இதை விட்டு சுதந்திரமாக பறக்க ஆசைப்பட்டான். குடும்ப சுமை மூச்சு முட்டுது என்றான். சுகமான, அழுத்தம் பொறுப்புகள் இல்லாத லேசான வாழ்க்கை வேண்டும் என்றான்.
இந்தா பிடித்து கொள் என்று ஆசைப்பட்ட வாழ்க்கையை கடவுள் தூக்கி கொடுத்து விட்டார். ஆனால், ஆசைப்பட்ட படி வாழ தான் முடியவில்லை. அவனுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது, இன்றைய நிலைக்கு அவன் என்ன செய்தாலும் யாரும் கேட்க போவதில்லை. அவன் இஷ்டப்படி ஆடலாம். ஆனால், மனம் வரவில்லை.
எப்போதும் போல தன் முகம் பார்க்கும் மனைவியையும், கட்டி அணைக்கும் பிள்ளைகளையும் மனம் தேடியது. வாழ்க்கை எதுவென்று புரிந்தது.
அஜய் எடுத்த மார்க்கை குறித்து சாலாவுடம் பேசி கொண்டு இருந்தான். பள்ளியில் இருந்து வர சொன்னார்கள். அஜய், சாலாவோடு கிளம்பினான். ஒரு வார்த்தைக்கு கூட தந்தையை அழைக்க வில்லை.
முன்ன மாதிரி இருந்தால் பிரகாஷ் தான் முன் நிற்பான். அவன் குடும்பம் அவன் கை பிடியில் நிற்கும். கணவனை முன் நிறுத்தி அவனுக்கு பின் தான் சாலா நிற்பாள். மகனின் பேச்சு எல்லாம் தந்தையோடு தான். முடிவும் தந்தை கையில் தான். எல்லாத்தையும் கொட்டி கவிழ்த்து விட்டான்.
நெஞ்சில் லேசாக வலி வர, “ கொஞ்சம் படுக்கணும் சாலா… ஒரு மாதிரி இருக்கு…” என்று மனைவியிடம் தான் வந்து நின்றான்.
சாலா அமைதியாக ஒரு அறையை காட்டி விட்டு ஒதுங்கி கொண்டாள். பிரகாஷ் மெல்ல மெத்தையில் படுத்து கொண்டு விட்டத்தை பார்த்தான். இது மனைவி அறை இல்லை என்பது தெளிவாக தெரிந்தது.
அறை முழுக்க மகன் பொருட்கள் தான். கட்டிய பொண்டாட்டி அறையில் கொஞ்ச நேரம் உறங்கும் அருகதை இல்லை போல… உறக்கமும் வராமல் சோர்வாக இருக்க, மாத்திரை எடுக்க வேண்டும். வெளியில் வந்தான்,
“சாலா, மாத்திரை போடணும். கொஞ்ச நேரம் தப்பி போனா கூட ஒரு மாதிரி படபடப்பு, மயக்கமும் வரும். இப்படியே விட்டா நெஞ்சு வலி கூட வருமாம்…”
சாலா ஒன்றும் விசாரிக்க வில்லை. மதிய உணவு கொண்டு வந்த வைத்தாள். பெரிய ஏமாற்றம் பிரகாஷ் முகத்தில்.
மாலையில் வெளியில் செல்வதாக சொல்லி வந்து விட்டான். ஆனால், எங்கு செல்வது என்று தெரியவில்லை. சும்மா கோவில், பார்க் என்று சுற்றி வந்தான். எதுவும் ரசிக்க வில்லை.
இரவு வீடு திரும்பும் வழியில், ஒரு பெண் எதிற்பட்டாள். அவன் நண்பனின் மகள் தான். படித்து விட்டு வேலைக்கு முயன்று கொண்டு உள்ளாள். அவளும் இவனை கண்டு விட்டு மாமா என்று முன் வந்தாள்.
அப்போது தான் அஜய் தன் நண்பர்களை பார்த்து விட்டு வீடு வந்தவன், தந்தை ஒரு பெண்ணோடு பேசுவதை கண்டு முகம் இறுகியது. நேராக அவர் முன் வந்து நின்றான்.
திரும்பி பார்த்த பிரகாஷ் அதிர்ந்து போனான். அந்த பெண்ணோடு வேலை விசயமாக தான் பேசி கொண்டு இருந்தான். அஜய் விட நான்கு வயது மூத்த பெண்.
ஆனால், மகன் பார்த்த பார்வையில் என்ன இருந்தது. நிச்சயம் சந்தேகம், ஆராய்ச்சி, நம்பிக்கையின்மை கலந்து இருந்தது.
அவசரமாக பிரகாஷ், “அஜூ, இது யார் தெரியுமா? நம்ம சேகர் மாமா பொண்ணுடா. வேலை தேடுறாங்க, சொல்லிட்டு இருந்தேன்…” என்றான் பிரகாஷ்.
மனம் வேதனையில் மண்டியது. இந்த வயதில் தந்தையை பார்த்து மகன் தான் பயப்பட வேண்டும். ஆனால், இங்கு மகனை பார்த்து தந்தை பயந்து போய் நான் ஒன்றும் செய்ய வில்லை என்று விளக்கம் கொடுக்கிறான்.
அஜயின் பார்வை மாற வில்லை. நம்பாமல் தான் பார்த்தான். அந்த சந்தேக பார்வையில் பிரகாஷ் தான் மனதில் செத்தான்.
இரவு உறக்கமும் வரவில்லை. தனியாக படுக்கை, அங்கிருக்கும் செல்பில் புத்தகங்களை பார்த்தான். ஏதோ ஒரு புத்தகத்தை எடுக்க, கீழ விழுந்தது போட்டோ ஆல்பம்.
என்னவென்று பிரகாஷ் பார்க்க, அது அஞ்சுவின் விசேஷ ஆல்பம். ஒவ்வொன்றாக பிரித்து பார்த்தான். பெரிதாக அழைத்து செய்யாததால், பெரிய ஆல்பம் எல்லாம் இல்லை. ஆனால் பிரகாஷ்க்கு என்னவென்று புரிந்தது.
காலையில் சுடிதாரில் இருந்த மகள் கண்ணுக்குள் நின்றாள். அம்மு குட்டி…. வாய் முணுமுணுக்க, அடுத்து இருக்க முடியவில்லை.
இரவு பத்து மணிக்கு ஊருக்கு செல்வதாக கிளம்பி விட்டான். கேள்வியாக பார்த்தாலும் யாரும் வற்புறுத்த வில்லை. இருந்தால் இரு, போனால் போ… அவ்வளவு தான்.
காலம் கடக்க எல்லாம் மாறும் என்ற பிரகாஷ் மனநிலைக்கு சவுக்கடி விழுந்தது. நடக்கும் போதே கண்ணில் கண்ணீர் வந்தது. ரோட்டை பார்க்க முடியவில்லை. பஸ்ஸில் ஏறி அமர்ந்த பின்னும் துளி துளியாக கண்ணீர் வந்த வண்ணம் தான் இருந்தது.
மற்றவர்களின் வித்தியாசமான பார்வை கூட அவனை அசைக்க வில்லை.
அதிகாலை ஐந்து மணி இருக்கும், அப்போது தான் சாலா எழுந்தாள். தொடர்ந்து கால் வர, என்ன அவசரமோ என்று எடுத்து காதில் வைக்க, ஜெயபிரகாஷ் தற்கொலை செய்து கொண்டான், மருத்துவமனையில் இருக்கிறோம் என்று செய்தி வந்தது.