விசாலாட்சி ஒரு நிமிடம் புரியாமல் முழித்தாள், அழைத்தது அவள் முதல் கொழுந்தன் தான்.
“என்ன… என்ன சொல்றீங்க?”
“ஆமாங்க அண்ணி, அண்ணன் முகம் சரியில்லைன்னு அம்மா போய் பார்த்து இருக்காங்க. ஒரு அசைவும் இல்லாம படுத்து இருந்துருக்கான். தொட்டு எழுப்பியும் எழுந்துகல, பயந்து போய் கத்தவும் தான் நாங்க எல்லாம் போய் பார்த்தோம். தென்னைக்கு வாங்கி வச்சு இருந்த மருந்தை குடிச்சு இருக்கான் போல, விசயம் சிரியஸ்ன்னு சொல்றாங்க…”
அடுத்து தாமதிக்க என்ன இருக்கு, பேருக்கு குளித்து உடை மாற்றி அம்மாவும், மகனும் கிளம்பி விட்டார்கள். இனி மகன் தான் துணை.
திருச்சி பஸ்ஸில் ஏறிய பின்னும் தாயும், மகனும் பேசி கொள்ள வில்லை. அவரவர் சிந்தனை தான் இருந்தார்கள். சாலா தான் உள்ளுக்குள் மருகி போனாள்.
கணவன் செய்த துரோகத்தை கடக்க முடியாமல் தான் ஒதுங்கி கொண்டாள். தவிர, அவன் சாகணும் என்று எண்ணவில்லையே…
அஜய் கண் மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டான். அவன் எண்ண ஓட்டம் என்னவென்றே தெரியவில்லை. அடுத்த மூணு மணி நேரமும் நரகம் தான். யாருக்கு போன் செய்தாலும் எடுக்க வில்லை. காலை உணவு, டீ, காபி கூட கிடையாது. அடித்து பிடித்து ஓடி வந்தார்கள் தாயும், மகனும்.
குடும்பத்தில் அனைவரும் அங்கு தான் இருந்தார்கள். ஒத்த தற்கொலை முயற்சியில் ஓட்டு மொத்த ஆட்களையும் குற்ற உணர்ச்சியில் ஆட்படுத்தி விட்டான்.
“வந்துட்டான்… ஒத்த மகன், அப்பனுக்கு கொல்லி போட…” சகுந்தலா சொல்ல,
இறுகி போனான் அஜய்.
“இதோ வந்துட்டாள்ள முதலாளி அம்மா. பெரிய புரட்சி பெண். ரெண்டு காச பார்த்ததும் கட்டுன புருசன் கண்ணுக்கு தெரியலை. இவ புருசனை வேணாம்னு, இவ மதினிகாரி ஒருத்தி புருசனை வேணாம்னு, ரெண்டு பேரும் ஆட்டம் போடுறீங்க. பொம்பளை காரியத்தனம் குடும்பம் விளங்குமா?… ஊருல எந்த ஆம்பளையும் பண்ணாததா… நீ ஒழுங்கா இருந்தா, எம் மகன் ஏன் வேற வீடு பார்க்க போறான்…”
“சகுந்தலா” என்று நாராயணன் கத்த,
“நீங்க சும்மா இருங்க. இவளுக்கு என்ன குடும்பம் வேணாம்னு உதறி போனவா… நான் தான் பிள்ளையை இழந்து நிக்கனும். மூணு மாசத்துக்கு ஒரு தடவை விழுந்துக்குவா, இவ வைத்தியதுக்கு எம் மகன் எம்புட்டு செலவு செஞ்சான். கணக்கா பார்த்தான். பிள்ளைகளுக்கு எம்புட்டு செஞ்சான். எவ்வளவு பெரிய ஸ்கூல்ல போட்டான். அவன் நல்லா சம்பாரிச்ச வரைக்கும் புருசன், அப்பான்னு மரியாதை இருந்துச்சு. இன்னிக்கு நொடிஞ்சு போகவுவம் சோத்துல கறிவேப்பிலை மாதிரி தூக்கி போட்டாங்க…”
ஏதோ காசுக்காக தான் பிரகாஷ் உடன் இருந்தது போலவும், காசு இல்லாததால் மதிக்காதது போலவும் பேசினார் சகுந்தலா… சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் வாயை மூடி கொண்டாள் சாலா.
பிரகாஷை பார்க்க கூட விடவில்லை. சீரியஸ் கண்டிசன் எனவும் சாலாக்கு அவள் அக்கா மீனாட்சி நினைவு தான் கொன்றது. அதே போல ஒரு நிலையில் விதி நிற்க வைத்து விட்டது. பெண்ணுக்கு முதுகெலும்பு இருக்க கூடாது. அதுவும் நாப்பது வயதை தொட்ட குடும்ப பெண்ணுக்கு முதுகெலும்பு என்ற ஒன்று அறவே கூடாது.
மூன்று நாட்கள் முழு போராட்டம் தான். சாலா, அஜய் இருவரையும் வீட்டுக்கு யாரும் கூப்பிட வில்லை. இது உங்கள் பொறுப்பு என்று காட்டினார்கள். அந்த மருத்துவமனை வளாகத்திலேயே தங்கள் தேவையை முடித்து கொண்டார்கள். நான்கு நாட்களுக்கு பின் பிரகாஷ் கண் திறந்தான். மகனை பார்த்ததும் கண்களில் நீர் வடிந்தது. அஜய் முன் சென்று தந்தையின் கையை பிடித்து கொண்டான்.
பிரகாஷ் கண் விழித்த பின் தான் சகுந்தலா வாய் ஓய்ந்தது. சாலா தள்ளியே நின்று கொண்டாள். பாவம், சாவை தொட்டு வந்தவன் என்று மனம் இறங்கினாலும், நெருங்க மட்டும் வரவேயில்லை.
சாக துணிந்து விட்டான் என்று எழுபத்தி ஐந்து சதவீதம் நம்பினாலும், மீதி இருபத்தி ஐந்து சதவீதம் ஒரு அவநம்பிக்கை. இதுவும் அவனின் திட்டமாக இருக்குமோ என்று ஒரு ஆராய்ச்சி பார்வையை தவிர்க்க முடியவில்லை.
முழுதாக பத்து நாள்களுக்கு பின் தான் எழுந்து அமர்ந்தான். அஜய் முழுவதும் தந்தையோடு தான். அவன் தந்தையை முழுதாக நம்பினான். சாவை முழுதாக தொட்டு தான் மீண்டு வந்தார்.
குடும்பத்தார் வரவு குறைந்தது. முழுதாக சாலா, அஜய் மட்டும் தான் இருக்க வேண்டியதாகி போனது. சகுந்தலா நேராகவே சொல்லி விட்டார்.
“நீங்க தான் பார்க்கணும். உங்களுக்கு தான் சம்பாதிச்சு வச்சு இருக்கான். உங்களுக்கு தான் செய்யவும் செஞ்சான். அவன் குடும்பம்ன்னு சொத்து எல்லாம் உங்களுக்கு தான வரும்…”
விசாலாட்சி மாமியார் உடன் முழுதாக ஒதுங்கி கொண்டாள். எல்லாம் தெரிந்தும் அவரே பேசும் போது ஊர் என்ன சொல்லும்?… ஒரு மாதத்திற்கு பின் வீடு திரும்ப வேண்டும். இவனை எங்கு அழைத்து செல்ல, சாலா தலையை பிடித்து கொண்டாள்.
ஆட்டத்தின் போக்கை முழுதாக மாற்றி விட்டான். உண்மையிலேயே அவன் சாக போனானா அல்லது நடிப்பா என்று தெரியவில்லை. ஆனால், சூழல் அவனுக்கு சாதகமாக நின்று விட்டது. இனி சாலாவின் நியாயம் எடுபடாது. மனைவி , பிள்ளைகள் தான் முக்கியம் என்று செத்து பிழைத்தான் என்ற சொல்லே நிலை நிற்கும்.
அஜய் மட்டும் தான் முழுதாக பிரகாஷை பார்த்து கொண்டது. வெளி வேலைகள் மட்டும் சாலா பார்த்து கொண்டாள். அவளுக்கு என்னவோ கணவனை நெருங்க முடியவில்லை. உண்மையில் நெஞ்சு வலித்தது. கணவன் காயத்தில் மனைவி ஆறுதல் அடைகிறாள் என்று தான் இவள் வீட்டார் நினைப்பது.
உண்மையில் அப்படியல்ல. தனிமை, பிரிவு, ஏக்கம், வலி எல்லாம் இவளுக்கும் உரியது தான். அது வேரின் அழுகையாக மாறி போனது.
பிரகாஷ் பார்வை மகனை சுற்றியே வந்தது. பிள்ளைகளை யோசித்தாவது தப்பு செய்யாமல் இருந்து இருக்கலாம் என்று நினைத்தான். ஆண் நர்ஸ் உடன் இருந்த போதும் மகன் கையில் தான் சௌகரியம். தோலில் போட்டு வளர்த்த மகன் தன்னை சுத்தம் செய்யும் போது நெஞ்சு குத்தும்.
வளர்ந்து பெரிய மையன் என்ற நிலை வரும் வரை மகனை குளிக்க வைத்தது பிரகாஷ் தான். இன்று அதே மகன் தன்னை தாங்கும் போது மனம் பாரமாக அழுத்தியது. அவனுக்கு என்று நான் என்ன வைத்துள்ளேன்.
அன்று அஜய் தந்தையை பாத்ரூமில் இருந்து கை தாங்கலாக பிடித்து கொண்டு வந்தான். பிரகாஷ் முழு பாரமும் அஜய்க்கு கஷ்டமாக இருந்தது. மகனின் வலியை முகம் காட்ட, சாலா உடன் வந்து விட்டாள். வேற யார் செய்வது? அடித்து வெறுத்து கொண்டாலும் குடும்பம் துணை நிற்கும். ஒரு கஷ்டத்தில் சொந்தம் துணை நிற்கும் தான், கடைசி துணையாக வரை வருவது குடும்பம் மட்டும் தான்.
அந்த படி விசயம் கேள்விபட்டு சொந்தங்கள் எல்லாம் ஓடி வந்தார்கள். வீட்டில் இருந்தும் ஒரு வாரம் உணவு வந்தது. நாளுக்கு மூன்று தடவை கை மாத்த ஆள் வந்தது. ஆனால் ஒரு மாதம் எனும் போதும் வரவு குறைந்து விட்டது. அவரவருக்கு ஆயிரம் வேலை.
அதை முழுதாக புரிந்து கொண்டார்கள் மூவரும்… மருத்துவமனையில் இருந்து வெளியேறும் நாளில் மொத்த குடும்பமும் வந்தது. சாலா வேறெந்த முடிவும் எடுத்து விட கூடாதே. பரபரப்பாக செயல் பட்டார்கள். வாடகை கார் வந்தது, நேராக மதுரைக்கு தான். குத்துகல் மாதிரி மனைவி, பிள்ளைகள் இருக்கும் போது தம்பிகள், தம்பி மனைவிகள் பார்பார்களா?…
நிதர்சனம் பிரகாஷ் பொட்டில் அடித்தது. தாய்க்கு பின் உணவு என்ற ஒன்றை, அடிப்படை தேவையை எதிர்பார்க்கும் ஒரே இடம் மனைவி மட்டும் தான். இன்றும் அவனுக்கு சம்பாத்தியம் இருக்கிறது. ஆனால், அதை கொண்டு ஒரு புரோஜனமும் இல்லை.
மதுரை வரும் வழியில் எல்லாம் தாய் முகமே பார்த்து வந்தான் அஜய். அவனுக்கு பெரும் மன கஷ்டம். இனி தந்தையை தனியே விட முடியும் என்று தோன்றவில்லை. அதே நேரம் அவரின் வரவு தாயை எந்தளவு காயப்படுத்தும் என்று கணிக்கவும் முடியவில்லை. தந்தை மேல் உள்ள பாசத்தில், தாயை கஷ்டபடுத்த கூடாதில்லையா?…
மகனை கண்டு சாலா முகத்தில் ஒரு சிறு புன்னகை, ஒரு ஆறுதல். மகன் தனக்காக பார்க்கிறான் என்று… அவன் நிறைய கஷ்டபடுகிறான் என்று புரிந்தது. அம்மாவா? அப்பாவா? என்று தடுமாறுகிறான். இதற்கு மேலும் மகனை கஷ்ட படுத்த கூடாது என்றே நினைத்தாள்.
பிரகாஷ்க்கு மட்டும் உள் மனம் அமைதியாக இருந்தது. ரொம்ப எளிதாக தன் குடும்பத்தை உதாசின படுத்தினான். இன்று அதே குடும்பம் கை வர செத்து பிழைத்தான். உயிர் தப்பியது கடவுள் செயல். இனி வாழ்க்கையில் நிதானம் வேண்டும் என்று நினைத்தான். சாலாவை பார்வையால் கூட தொடர வில்லை. அப்படியே அடங்கி நடப்பது என்று முடிவெடுத்து இருந்தான்.
தேவி தனியாக வீடு பார்த்து கொண்டு இருந்தாள். சாலா மூலம் பிரகாஷ் இனி தன் குடும்பத்தோடு தான் என்று அறிந்த பின், அந்த வீட்டில் தான் அந்நியம். கணவன், மனைவி, பிள்ளைகள் என்று குடும்பமாக இருக்கும் வீட்டில் தேவி பானக துரும்பு. அது புரிந்ததால் வேற வீடு பார்த்து கொண்டாள். பிரகாஷ் வரும் போதே வெளியேறி விட நினைத்தாள். ஆனால், ஒரு போதும் கணவன் வீடு போவோம் என்ற நினைவு கண் முன் வரவில்லை.
சாருபாலாவின் ஆலோசனைக்கு பின் ஒரு தெளிவு வந்தது. தனியாக எப்படி வாழ்வது என்ற எண்ணம் போய் தனியாக வாழ்வது என்று துணிந்து நின்று விட்டாள்.
பிரகாஷ் வீடு வந்த பிறகு, தேவி வெளியேற, சாலா கொஞ்சமும் விட வில்லை. தன்னை நம்பி வந்த ஆதரவற்ற பெண்ணை, தன் சூழ்நிலையால் ஒதுங்க செய்வது நியாயம் கிடையாதே… ஆனால், தேவி சொல்லி விட்டாள்.
“ சாலா, இம்புட்டு வருசத்துல எனக்கு இப்போ தான் வாழ ஆசை வந்துருக்கு… எனக்காக நான் வாழணும்ன்னு நினைக்கிறேன். யாரோட கைலையும் நிக்காம, எனக்காக நான் சுதந்திரமா வாழணும். என் முடிவ நான் எடுக்கணும். உனக்கு உதவி செய்ய தான் நான் வந்தேன். இனி என் உதவி உனக்கு இப்போ தேவையில்லை. வேற யாருக்காவது பயன்படட்டும். எனக்கான குடும்பத்தை, நான் கட்டமைக்க விரும்புகிறேன்…” என்று தேவி தெளிவாக சொன்ன பின், மறுத்து பேச முடியாமல் போனது விசாலாட்சிக்கு.
உண்மையில் தேவியின் முடிவை மனமுவந்து ஆதரிக்க வேண்டும். ஆனாலும் சாலா விடவில்லை. தன் அருகிலே குடி வைத்து கொண்டாள். அத்தோடு தனி என்று ஆனா பின் வருமானமும் தனியாக தானே வைக்க வேண்டும். தேவி வருமானம் தேவிக்கு உரியதாக மாற வேண்டும் என்று நினைத்தாள் சாலா.
பிரகாஷை பார்க்க சாலா வீட்டு ஆட்களும் வந்து விட்டார்கள். மகள் கணவன் உடன் ஒன்று சேர்ந்தது கொள்ளை நிம்மதி முத்தையா தம்பதிகளுக்கு…
பாண்டியம்மாள் என்னவோ அடக்கியே வாசித்தார். தேவி தனியே சென்று விட்டாள் என்று அறிந்தும் வாய் மூடி இருந்தது சாலாக்கு அதிசியமாக இருந்தது. அதை தனியே இருக்கும் போது தந்தையிடம் கேட்கவும் செய்தாள்.
“என்னவோ தெரியலை தாயி… ஒரு நாள் ராத்திரி ஒரு மணிக்கு எந்திருச்சு நெஞ்சுல அடிச்சு, அடிச்சு அழுதா உங்கம்மா. என்னன்னு பதறி போய் கேட்டேன்…”
“என்னவாம் அப்பா…”
“ உங்க அக்கா கனவுல தென்பட்டுச்சாம்…” சொல்லும் போதே முத்தையா கண்களிலும் நீர் நிறைந்தது.
“மீனாட்சியா?…”
“ம்ம், பசிக்குதுத்தான்னு சொல்லி வெளி திண்ணையில் உட்கார்ந்துச்சாம். உங்க அம்மை ஓடி போய் வட்டி நிறைக்க சோறு போட்டு ஓடி வர, கைல தட்ட வாங்காம அழுதுட்டே போயிருச்சாம்…”
சாலா கண்களிலும் நீர் வந்தது. இறந்தவர்கள் கனவில் வருவது போல வேற யாராவது சொல்லி இருந்தால் நல்ல கதை என்று நினைத்து இருப்பாள். அதே தன் இரத்த உறவு எனும் போது கனவில் கூட கண்டு விட மாட்டோமா என்ற ஏக்கம் தான் முன் நின்றது.
“ஒரு நாளும் என் கனவுல அம்படல அப்பா…”
“என்னவோ அதுக்கு ஒரு மன குறை போல. அது பிள்ளையை நாங்க பார்க்கல தான. ஏதேதோ யோசனை, அதான் வாய மூடியாச்சு. மீனாட்சி சாகும் போது பசியோடு தான் செத்துச்சு. அந்த நினைப்பு தான் அறுக்குது. சம்பந்தம் பண்ற அளவுக்கு பிள்ளைக நிமிர்ந்தாச்சு, இனி நீங்க பாருங்க. நாங்க எதிலையும் தலை கொடுக்க வேணாம். நூத்துல ஒரு வார்த்தை நீ சொன்னது தாயி. தேவி மன காயம் தான் எம் மூத்த மகளை காவு வாங்கிருச்சுன்னா. அந்த நினைப்பு அறுக்குது…”
சித்ரா பார்வை தன் அக்காவையே பின் தொடர்ந்தது. அவளுக்கு தெரியும், இது அவள் வாழ்க்கை … என்று சாலா கணவன் இனி மதுரை தன் என்ற பேச்சு அடிபட்டதோ. அப்போதிருந்து சித்ராக்கு பயம் நெஞ்சை கலக்கியது. மீண்டும் தேவி வந்து விடுவாளோ. புருசன், மூணு பிள்ளைகள் எனும் தன் கூடு களைந்து விடுமோ என்ற பயம் இருந்தது.
அதே நேரம் நியாய மனம் சுட்டி காட்டும். பாவம் தேவி, அவள் எங்கே போவாள். அவளுக்கு என்று யார் இருக்கிறார்கள். அடுத்த வீட்டில் ஒண்டி வாழ்கிறாள். அவளுக்காக என்று வந்துவிட்டு, அவள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, அவளை ஒதுங்கி போக சொல்வது என்ன நியாயம்.
மனம் எடுத்து சொன்னாலும், நிதர்சனம் வேறாக இருந்தது. காதலோடு, ஆசையாக குமரன் தேவியை பார்க்கும் பார்வையை சித்ராவால் சகிக்க முடியவில்லை. தேவிக்கும் அதே நிலை தான் என்றாலும், அவள் தானே சித்ராவை உள் இழுத்து விட்டது. அப்போ தேவி தான் சித்ரா வாழ்க்கைக்கு பொறுப்பு.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தேவி தனியே வீடு பார்த்து சென்று விட்டாள் என்று தெரிந்தும் குமரன் வாய் திறக்க வில்லை. எப்போது தேவி வருவாள் என்று நச்சரிச்சபவன், விசயம் தெரிந்தும் அமைதியாகி விட்டான்.
அதன் காரணம் அடுத்த அரைமணி நேரத்தில் தெரிந்தது. முத்தையா,
“தேவி தனியா இருக்கும். கொஞ்ச நாள் கூட நாங்க இருக்கட்டுமா… இனி சாலாவும் இங்க தானும் போது அடிக்கடி மதுரை வர மாதிரி தான் இருக்கும்…” என்க.
குமரன், “வேணாம் ப்பா, அப்புறம் தோட்டத்தை யார் பாக்குறது. தேவி துணைக்கு நான் இருக்கேன். யார் இருந்தாலும் நான் இருக்குற மாதிரி வராது. வாரத்துல நாலு நாள் அங்க இருந்தா, மூணு நாள் இங்க இருக்கேன்…” என்று எளிதாக தீர்வு சொல்ல.
நெஞ்சில் கை வைத்து அதிர்ந்து நின்றது தேவியும், சித்ராவும் தான்.