தணலனிடம் தன் முடிவை இறுதியாக சொல்லிவிட்டு சென்றவளின் மனதில் சில நிமிடங்கள் ஒரு வித அமைதி குடியேறியது…
எப்பொழுதும் அந்த மனதினை அலைபாய விடாமல் அவளின் சூழ்நிலை அவளை கட்டிப்போட்டு தடுத்து நிறுத்தியது…
அவள் பார்த்த சில நொடிகளில் புரிந்து கொண்டாள், தணலன் செல்வாக்கு மிகுந்தவன் என்று.. அவனின் செல்வாக்கிற்கு தான் ஈடில்லை என்ற உண்மை நெற்றிப் பொட்டில் அடித்தாற் போன்று உண்மையை உணர்ந்தவளுக்கு இது எட்டாக்காய் என புரிந்தது…
அதையும் தாண்டி அவளுக்கு தணலனனின் மீது சிறு ஈர்ப்பு கூட வரவில்லை.. இரண்டு நாட்களில் ஒருவரின் மேல் ஈர்ப்போ, காதலோ ஏற்படும் என்பதெல்லாம் பார்க்கும் சினிமாக்களில் வேண்டுமென்றால் பொருந்தலாம்…
தன் தாய், தந்தையரின் காதல் வாழ்க்கையினால் இன்று வரை தங்களை ஏற்றுக்கொள்ளாத உறவுகளுக்கிடையில் வாழ்ந்து வரும் கங்காவிற்கு ‘காதல்’ என்ற வார்த்தை கசப்பை தான் தந்தது…
தன்னை ஒருவன் காதலிக்கிறான் என சொன்னவுடன், ஈஈஈ என பல்லை இழிக்கும் ரகம் அவளில்லையே. தந்தையில்லா பெண் குழந்தையின் பொறுப்புகள் அதிகம் என்று அவள் பலதடவை உணர்ந்திருக்கிறாள்... அதனாலேயே தணலனனின் நினைவுகளை அடியோடு மறந்து விட்டாள்…
ஆனால் அவனை மறக்காமல் சுற்றிக் கொண்டிருப்பது யமுனா தான்… ஏனோ அப்படி ஒரு சம்பவத்திற்கு பிறகு அவளால் பால் பாக்கெட் போடும் வேளைக்கு செல்ல முடியவில்லை.
மோகனா கேட்டதற்கு ‘தன்னால் காலையில் எழுந்து செல்ல முடியவில்லை’ என்ற பதிலையே கொடுத்தாள். மோகனாவும் அதன்பிறகு வற்புறுத்தவில்லை…
ஆனால் தணலனின் நியாபகம் அவ்வப்பொழுது யமுனாவிற்கு வந்துக் கொண்டேதானிருக்கும். ரோட்டில் செல்லும் பொழுது யாராவது தணலன் போல் இருந்தால் அவள் தலை தானாக திரும்பி அவர்களை தான் பார்க்கும்…
“என்றாவது ஒரு நாள் தன் கண் முன்னாடி வந்திட மாட்டானா? தாங்க்ஸ் என்ற வார்த்தையை சொல்லிவிட மாட்டோமா?” என தவிப்பு யமுனாவிற்கு இருந்துக் கொண்டேயிருந்தது…
இன்றோடு மூன்று மாதங்களை கடந்து விட்டது தணலன் கங்காவிடம் தன் காதலை சொல்லி…
தணலன் கங்காவை பார்க்கும் நேரமெல்லாம் அவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பான்.. ஆனால் கங்காவோ அவனை பார்க்கும் சூழ்நிலை வந்தால் கூட தவிர்த்து விடுவாள்…
எந்தவொரு சூழ்நிலையிலும், அவள் தணலனை நேருக்கு நேராக சந்திப்பதை கூட விரும்பவில்லை…
தணலன் எங்கு இருந்தாலும் கங்காவின் மேல் ஒரு பார்வை இருக்கும்.. அவள் கடந்து செல்லும் நேரம், அவளைப் பார்த்துக் கொண்டிருப்பான்.. ஆனால் அவளுக்கு எந்தவித இடைஞ்சலோ, தொந்தரவோ கொடுத்ததில்லை…
சதீஷ் கூட தணலனை ஆச்சர்யமாக பார்த்தான்..
ஆனால் அவனையும் மீறி விதி அவர்களை ஒன்றாக்கும் நாள் வந்தது… கங்காவின் மனதில் சிறு சலனத்தை உண்டாக்கிய நாளும் அதுவாக அமைந்தது…
************************
ஜோசியரிடம் பேசிவிட்டு வந்த தேவாவின் மனமோ உலைக்களமாக கொதித்துக் கொண்டிருந்தது.. ஒரு மனம் வேதனையில் உழன்று தவிக்க, மறு மனமோ அதீத பாரத்தை சுமந்து கொண்டு வந்தது..
காரைக்கூட அவளால் நிலையாக ஓட்ட முடியவில்லை.. ஒரு ஓரத்தில் வண்டியை நிப்பாட்டிவிட்டு கண்களை மூடி அமர்ந்தவளின் இதயத்தில் சொல்லொண்ணா வேதனை படர ஆரம்பித்தது…
“தணலாஆஆஆ” என்றவனை ஒரு நிமிடம் கூட பிரிந்திருக்க வேண்டுமென அவள் நினைத்ததில்லை… தன் தம்பியின் மீது அதீத அன்பை வைத்திருந்தாள் என்றால் மிகையாகாது…
அவன் படிக்கும் வயதில் இருந்தே அவனை கண்காணிப்பதே அவளின் மிக முக்கிய வேலையாக இருந்தது…
அவளின் கல்யாண வாழ்க்கை தொலைந்து நிற்பதற்கு கூட தணலன் தான் காரணம்.. ஆனால் அதைக்கூட அவள் எங்கும் வெளிப்படுத்தியதில்லை…
சற்று நேரத்திற்கு முன்பாக நடந்த நிகழ்வுகள் அனைத்தும் கண்முன்னால் உலாவ ஆரம்பித்தது…
ஜோசியரின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவளுக்கு அவரின் முகமாற்றம் நன்றாக தெரிந்தது…
“ஜோசியரே” என தாழ்ந்த குரலில் அழைத்த தேவாவை, பார்த்தவருக்கு…
“இதை இவள் எப்படி தாங்குவாள்?” என்ற எண்ணம் மேலோங்கிட, மறைக்கவும் மனமில்லாமல் போனது…
“நான் சொல்றதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு எனக்குத் தெரியலைம்மா?” என பீடிகையுடன் ஆரம்பிக்க தேவாவின் இதயமோ வேகமாக துடிக்க ஆரம்பித்தது,..
அவளைப் பொறுத்தவரை அருணேசனின் வார்த்தை ஒவ்வொன்றும் கல்வெட்டில் பதிக்கப்பட்ட வார்த்தையாகும்…
அவர் சொல்லிய வார்த்தை எதுவுமே இதுவரை பலிக்காமல் இருந்ததில்லை.
“சொல்லுங்க ஜோசியரே”
“தணலன் தம்பிக்கு மரணகண்டம் இருக்கும்மா” என்ற வார்த்தையில் தலையில் இடிவிழுந்தாற் போன்று ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்து விட்டாள்…
“என்ன சொல்லுறீங்க ஜோசியரே?” என கரகரத்த குரலில் கேட்க
“ஆமாம்மா… தம்பி ஜாதகத்துல மரணகண்டம் இருக்கு. அதுதான் தம்பிக்கு, வியாபாரத்துலையும், சொந்த வாழ்க்கையிலையும் அடிமேல அடி விழுது”…
“ஜோசியரே!! ஏதாவது பரிகாரம் இருந்தா கூட சொல்லுங்க. நான் கண்டிப்பா பண்றேன்.. அது எவ்வளவு கஷ்டமான பரிகாரமா இருந்தாலும் பரவாயில்லை” என கலங்கிய குரலில் சொன்ன தேவாவை விரக்தியாக ஒரு பார்வை பார்த்தார்…
“பரிகாரம் செய்ய வேண்டியது நீங்க இல்லை. தணலன் தம்பிதான்” என தீர்க்கமாக சொன்னவரை பார்த்தவளின் விழிகளோ சற்று தடுமாறியது…
தணலன் அதிகமாக கோயில்களுக்கு எல்லாம் செல்வதில்லை. குடும்பத்துடன் செல்லும் நேரம் சிறிது நேரம் அங்கிருப்பானே தவிர, ஆன்மீகத்தில் அதீத நம்பிக்கை கூட அவனுக்கு கிடையாது…
“அப்பேற்பட்டவனை பரிகாரம் செய் என சொன்னால் அதற்கும் வரமாட்டேன் என்று சொல்லிவிடுவானே” என தவிப்புடன் அவரை ஏறிட்டுப் பார்த்தாள்…
“கண்டிப்பா அவன் தான் செய்யணுமா ஜோசியரே? நான் பரிகாரம் செய்யக்கூடாதா?” என தயக்கத்துடன் கேட்க,
“அவரால் மட்டுந்தான் அந்த பரிகாரம் செய்ய முடியும். செய்யணும்.. அதை செய்தா மட்டுமே தணலனோட உயிரை காப்பாத்தலாம்” என உறுதியாக கூறினார்…
“சரி ஜோசியரே… நான் அவனை எப்படியாவது பரிகாரம் செய்ய வைக்கிறேன். என்ன பரிகாரம்?”
“அவர் கையாலே ஒரு பொண்ணு கழுத்துல தாலி ஏறணும். அந்தப் பொண்ணுக்கு தாலிபாக்கியம் நிறைஞ்சு இருக்கணும்… இன்னும் மூணே மாசத்துல அது நடக்கணும். இல்லன்னா உங்க தம்பியை யாராலையும் காப்பாத்த முடியாது”
அவர் சொல்லிய வார்த்தையில் உறைந்து நின்றாள் தேவா. தாலியா? இன்னொரு கல்யாணமா? அதுவும் தணலனா? நடக்குமா!!. சாத்தியமா? என நினைத்த தேவாவிற்கு தலையே தட்டாமாலை போல் சுற்ற ஆரம்பித்தது…
“வேற வழியே இல்லையா?” என தயக்கத்துடன் கேட்ட தேவாவை அழுத்தமாக பார்த்தவர்,
“ஒரு பொண்ணோட தாலி பாக்கியம் மட்டுமே உங்க தம்பியோட உயிரை காப்பாத்துங்க” என கணீர்க்குரலில் தீர்க்கமாக சொல்லியவரை பார்த்துக் கொண்டே எழுந்து சென்றவளின் சிந்தனையெல்லாம் தணலனை பற்றியது மட்டுமே…
காரை ஓட்டிக்கொண்டு எப்படியோ வீடு வந்து சேர்ந்த தேவாவிற்கு “இந்த விஷயத்தை யாரிடமும் பகிர தோன்றவில்லை”. தன் அறையிலேயே முடங்கி விட்டாள்…
அன்று முழுவதும் அதைப் பற்றிய நினைவிலேயே இருந்தாள். இரவு உணவை கூட அவளால் சாப்பிட முடியவில்லை...
சாப்பாட்டை தவிர்த்து தன் அறையிலேயே உலாவிக் கொண்டிருந்தவளுக்கு, கதவு தட்டும் சத்தத்தில் எரிச்சல் மேலோங்கியது…
“ம்மாஆஆ. நான் தான் சாப்பாடு வேண்டாம்னு சொன்னேனே? ஒரு தடவை சொன்னா கேட்க மாட்டீங்களா” என எரிந்து விழ,
“அக்கா நான் தான் வந்திருக்கேன்” என்ற தணலனின் குரலில் உள்ளமோ வெகுவாக தவிக்க ஆரம்பித்தது…
“ம்ம்ம்.. உள்ளே வா” என்ற மெல்லிய குரலில், கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த தணலனனின் முகமோ அதீத சோர்வை தத்தெடுத்தது…
“என்னாச்சி தணலா? இவ்வளவு டயர்டா இருக்க?”
“ஒன்னுமில்லை அக்கா… கொஞ்சம் டயர்டா இருக்கு. வேற ஒன்னுமில்லை. நீ ஏன்க்கா சாப்பிட வரலை?”
“பசிக்கலை தணலா நீ போய் சாப்பிடு. நிறையும் ஷ்ரவனும் சாப்பிட்டாங்களா?”
“அவுங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு அம்மா ரூம்ல தூங்குறாங்க. நீதான் மனசுல எதையோ போட்டு உலாத்திக்கிட்டு இருக்க.. என்கிட்டையாவது சொல்லுக்கா என்ன பிரச்சினை? மாமா நியாபகமா?” என தான் மனதில் வைத்திருந்த காரணத்தை வாய்விட்டே கேட்டு விட்டான்…
“இல்லடா… அவரோட நியாபகம் எல்லாம் இல்லை. எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. நீ போய் ப்ரீயா இரு” என்ற அக்காவிடம் கவலை தோய்ந்த முகம் இவனுக்கும் கவலையை கொடுத்தது…
திரும்பி தன்னறைக்கு போக முயன்றவனின் செவியில் விழுந்த வார்த்தையில் அப்படியே நின்றிருந்தான்…
“என்னக்கா கேட்ட?”
“இந்த அக்காவுக்காக ஏதாவது செய்வீயா தணலா”
“நீ சொல்லுக்கா என்னால முடிஞ்சா நான் கண்டிப்பா செய்வேன். அது என் உயிரை கொடுக்கிற விஷயமா இருந்தாலும் சரிதான்” என்றவனின் வாயைப் பொத்தியவள்,
“உன்னால கண்டிப்பா முடியும்.. நீ உன் பிடிவாதத்தை விட்டு இறங்கி வந்தா போதும் ” என கரகரத்த குரலில் சொல்லிட,
“அப்படி என்ன கேட்கப் போற அக்கா என்கிட்ட?”
“நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்” என தலையில் இடியாய் இறக்கிய தமக்கையை கண்கள் இடுங்க பார்த்தான். கண்களில் அப்படியொரு கோபம், வலி இரண்டுமே கலந்திருந்தது…
“கங்காவை நான் அவ்வளவு சிக்கீரத்துல மறந்துருவேன்னு உனக்கு யாருக்கா சொன்னா?”
“ஆறு வருஷமா நீ அவளை நினைச்சிக்கிட்டே வாழ்ந்தது போதும் தணலா” என்றவளின் குரல் கோபத்தில் சற்று உயர்ந்து ஒலித்தது…
“ஆறு வருஷமில்ல அறுபது வருஷமானாலும் அவளை என்னால மறக்க முடியாது”
“ஓஹ்ஹ்ஹ்.. அப்போ இறந்து போனவளுக்காக… உயிரோடு இருக்கிற எங்களை தவிக்க விடப்போற அப்படித்தானே” என சுள்ளென்று எரிந்து விழ,
“இப்போ நான் இருக்கிறது தான் எல்லாருக்கும் கஷ்டமா இருக்குன்னா. நானும் கங்கா போன இடத்துக்கே” என சொல்லி முடிப்பதற்கு முன்பே கன்னத்தை தாங்கியபடி நின்றான் தணலன்…
எதிரில் இருந்த தன் தமக்கையை கலங்கிய விழிகளுடன் பார்க்க, “நானும் பார்க்கிறேன்… என்னடா நினைச்சிக்கிட்டு இருக்க உன் மனசுல? உன்னை பத்தி மட்டும் நினைக்கிறீயே தவிர… எங்களை பத்தியெல்லாம் ஒரு நிமிஷம் நினைச்சி பார்த்தீயா? நிறையை பத்தி நினைச்சி பார்த்தீயா? சாகப்போறானாம் சாக… செத்துத்தொலை. போ என் கண்ணு முன்னாடி நிக்காதே” என கண்களில் கண்ணீர் வடிய அழுது கொண்டே சொன்ன தேவாவைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது…
“ஆனா அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் நல்லா கேட்டுக்கோ… நீ கல்யாணத்துக்கு சம்மதிக்கலைன்னா நாளைக்கு இந்த வீட்டுல என் பொணம் தான் வந்து விழும்… இது ஷ்ரவன் மேல சத்தியம்” என்ற மிரட்டலாக வெளிவந்த வார்த்தையில் விக்கித்து நின்றான் தணலன்…
தேவாவின் பிடிவாதத்தை பற்றி அறிந்தவனுக்கு, அவளின் வார்த்தையை பற்றியும் நன்றாக தெரியும்…
“சொன்னதை கண்டிப்பாக செய்து முடிப்பாள்… அய்யோஓஓ” என்றானது தணலனனின் நிலைமை… இரவெல்லாம் கண் விழித்து கிடந்தவன் அடுத்த நாள் காலை கல்யாணத்திற்கு சம்மதித்திருந்தான்…
தணலனனின் சம்மதம் கிடைத்த அடுத்தநாளே ஏகப்பட்ட ஜாதகங்களை கொண்டு வந்து நீட்டினார் கல்யாண ப்ரோக்கர்.. ஆனால் எந்த ஜாதகமும் தணலனின் ஜாதகத்தோடு ஒத்துப் போகவில்லை. அதுவே பெரும் கவலையை கொடுத்தது தேவாவிற்கு…
அமிர்தாவின் ஜாதகத்தை கொண்டு வந்த பொழுதும், அடுத்த நிமிடமே ஜாதகத்தை ஜோசியரிடம் காண்பித்தாள்… அவளின் ஜாதகமும் பொருந்தி வரவில்லை…
மாதங்கள் கடந்த நிலையில் ஒரு நாள் ஜோதிடரே தேவாவை அழைத்து வர சொல்லி ஆள் அனுப்பியிருந்தார்…
உள்ளே நுழைந்த தேவாவை சிரித்த முகத்துடன் வரவேற்றார் ஜோசியர்…
“ஆமாம்மா தாலிபாக்கியம் நிறைஞ்ச பொண்ணுதான். ஆனா” என இழுத்தவரை கண்டு,
“அப்புறம் என்ன ஜோசியரு! அந்தப் பொண்ணு யாரா இருந்தாலும் பரவாயில்லை. என் தம்பிக்கு அவதான் பொண்டாட்டி”
“உன் தம்பியோட முதல் மனைவியோட தங்கச்சியா இருந்தாலும் பரவாயில்லையா?” என கேட்டவரை கண்டு விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள் தேவா.
“என்ன சொல்றீங்க யமுனாவா?”
“ஆமாம்மா.. இன்னைக்கு தான் அந்தப் பொண்ணுக்கு வரன் பார்க்க சொல்லி அவுங்க அம்மா ஜாதகத்தை கொண்டு வந்தாங்க.. அந்தப் பொண்ணோட ஜாதகத்துல தாலிபாக்கியம் நிறைஞ்சு இருக்கு.. அதுனால தணலன் தம்பியோட ஜாதகத்தோட பொருத்தம் பார்த்தேன் மா… பத்துக்கு ஒன்பது பொருத்தம் இருக்கு. இவுங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணினா கண்டிப்பா வாழ்க்கை அமோகமா இருக்கும்மா” என ஜோசியர் சொல்ல, சொல்ல தேவாவின் முகத்தில் சிந்தனை ரேகை படர ஆரம்பித்தது…
“என்னம்மா? இவ்வளவு யோசனை?”
“இல்லை நாங்க அவுங்க கூட அவ்வளவா பழக்கம் வச்சிக்கிறது இல்ல.. கங்கா இறந்து இந்த ஆறு வருஷத்துல எந்த நல்லது கெட்டது கூட அவுங்களை நாங்க சேர்த்துக்கிட்டது இல்லை. அதான் யோசிக்கிறேன்”
“நீங்க யோசிக்கிற ஒவ்வொரு நிமிஷமும் தணலன் தம்பிக்கு ஆபத்து தான். எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நடத்தி முடிச்சிருங்க… அதுவும் ஒரே வாரத்துல” என்றதும் வேண்டா வெறுப்பாக வீட்டை விட்டு வெளியே வந்தாள்…
வீட்டில் அனைவரிடமும் தணலனுக்கு பார்த்திருக்கும் பெண் யமுனா என்ற சொல்ல அனைவருக்குமே சற்று அதிர்வு தான்…
வேதவள்ளி வாய் விட்டே கேட்டு விட்டார்?
“என்ன தேவா இப்படி சொல்லுற? கங்கா இறந்து ஆறு வருஷமா நாம அவுங்களோட பேச்சு வார்த்தை கூட சரியா வச்சிக்கிறது இல்லையே”
“அதுக்காக அப்படியே இருந்திட முடியுமா ஆச்சி? ஆயிரம் தான் இருந்தாலும் அவுங்களோட உறவு நம்ம நிறைக்கு எப்பவும் வேணும்” என்றவளின் பதிலில் அனைவரும் அமைதியாக நின்றிருந்தனர்…
அடுத்த நாளே மோகனாவை பார்த்து தணலனுக்கு யமுனாவை பெண் கேட்டு நின்றாள் தேவா…
முதலில் யோசித்த மோகனாவிற்கு, தணலனின் குணமும், தன் பேத்தியின் நல்வாழ்விற்காகவும்… கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்ள மாட்டேன் என்ற யமுனாவையும் மிரட்டி சம்மதிக்க வைத்தார்…
அத்தனையும் சொல்லி முடித்த தேவாவை ஆச்சர்யத்துடன் பார்த்தார் வேதவள்ளி…
“நீங்கதானே ஜோசியர் சொன்னீங்க? என் தம்பி உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லைன்னு… நீங்க சொன்ன மாதிரியே என் தம்பிக்கு கல்யாணம் முடிச்சிட்டேன். அதுவும் நீங்க சொன்ன பொண்ணையே… ஆனா என் தம்பி இப்போ உயிரோட போராடிட்டு இருக்கான். இப்போ சொல்லுங்க என் தம்பிக்கு என்ன பதில்?”
“இன்னும் உயிர் இந்த உலகத்தை விட்டு போகலையேம்மா. அந்தப் பொண்ணோட தாலி பாக்கியம் தான் உன் தம்பியோட உயிரை இன்னும் காப்பாத்திட்டு இருக்கு” என்றவரை எரிக்கும் பார்வை பார்த்தவள் வேதவள்ளியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்…
“தணலனுக்கு இவ்வளவு பெரிய ஆபத்துன்னு ஏன் யார்க்கிட்டையும் சொல்லலை தேவா?”
“நீங்க யாரும் தாங்கமாட்டீங்கன்னு தான் ஆச்சி சொல்லலை” என்ற தேவாவை புரியாத புதிராக பார்த்தார்...
“என்ன ஆச்சி பார்க்குறீங்க?”..
“ஒன்னுமில்லை. ஹாஸ்பிடல் போகலாம்”
“ம்ம்ம்” என்றவள் நேராக ஹாஸ்பிடல் வாசலில் காரை நிறுத்தினாள்…
உள்ளே நுழைந்தவள் தணலனனின் நிலையை பற்றி விசாரிக்க, “ஆப்ரேஷன் செய்வதற்காக கொண்டு சென்றிருக்கின்றனர்” என்ற தகவல் மட்டுமே கிடைத்தது…
வரவேற்பறையில் இருந்த சேரில் ஆளாளுக்கு ஓரிடத்தில் அமர, தேவாவும் அலைச்சலின் மிகுதியில் ஒரு சேரில் சென்று அமர்ந்தாள்…
சில நிமிடங்கள், மணித்துளிகளாய் மாறிட ஐசியூவின் வாசலில் எரிந்து கொண்டிருந்த சிவப்பு நிற விளக்கு சட்டென அதன் ஒளியை இழந்து பச்சை நிறத்திற்கு மாற ஆரம்பித்தது…
‘ஆப்ரேஷன் முடிந்து விட்டது’ என அறிவிப்பதற்காகவே அந்த ஒளிவிளக்கு எரிய விடப்பட்டிருந்தது…
டாக்டர் வெளிவருவதற்கு முன்பே கதவு திறக்கும் ஓசை கேட்டு, யமுனாவும், நிறையும் ஓடிச்சென்று டாக்டரின் முன்பாக நின்றனர்…
இருவரின் முகத்திலும் தவிப்பும், பய ரேகைகளும் அதிகமாக இருந்தது… அவர்களின் கேள்வியில் தணலனின் மீது வைத்திருந்த அதீத அன்பு தான் வெளிப்பட்டது…
“ஆப்ரேஷன் நல்லபடியா முடிஞ்சது… ஒரு மூணு நாள் அவரை அப்சர்வேஷன்ல தான் வச்சிருப்போம்… அப்புறம் நார்மல் வார்டுக்கு மாத்திடுவோம். பேஷண்டை யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம் ” என எச்சரிக்கும் குரலில் சொல்லிவிட்டு செல்ல முயன்றிட,
“டாக்டர் ” என அழுத குரலில் அழைத்த யமுனாவை தான் திரும்பி பார்த்தார்…
“இப்போ அவர் எப்படி இருக்கார்னு பார்க்கலாமா?” என கண்கள் முழுவதும் ஏக்கத்துடன் கேட்டவளை கண்டு மறுக்க தோன்றாமல்,
“ம்ம்ம்… போய் பாருங்க. ஐசியூ வார்டுக்கு போறதுக்கு நர்ஸ் வேற டிரஸ், மாஸ்க் கொடுப்பாங்க” என சொல்லிவிட்டு சென்றிட,
கண்களில் கண்ணீருடன் அங்கிருந்த நர்ஸின் பின்னால் நுழைந்தவளுக்கு, பேஷன்ட்க்கு இன்ஃபெக்ஷன் ஆகாத ஒரு ஆடையை அவளுக்கு மாற்றிவிட, முகத்தில் கண்கள் மட்டுமே வெளியே தெரிந்தது…
ஆடையை மாற்றிக் கொண்டே உள்ளே நுழைந்தவளின் விழிகளில் கண்ணீர் சொரிந்துக் கொண்டேயிருந்தது…
ஓப்பன் ஹார்ட் சர்ஜரி என்பதால் அவனின் இதயப்பகுதியில் நடந்த அறுவை சிகிச்சை நன்றாக தெரிந்தது. கையில் குளூக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது…
நாசியோ சீரான மூச்சுக்காற்றை வெளியேற்றிக் கொண்டிருக்க, “நான் யமுனா வந்திருக்கேன் அத்தான்” என திருவாய் மலர்ந்து ஒற்றை வார்த்தை கூறுமுன்பே துக்கம் தொண்டையை அடைக்க, அழுதுகொண்டே வெளியேறி விட்டாள்…
அவளால் அப்பேற்பட்ட நிலைமையில் தணலனை பார்க்க முடியவில்லை… அவள் பார்த்து ரசித்த கம்பீரமான நடை இன்று அசையாமல் படுத்திருப்பதை பார்க்க முடியவில்லை…
அவளைப் பார்த்தாலே சிறு புன்னகை உதிர்க்கும் இதழ்கள் இன்று அழுந்த மூடியிருப்பதை அவளால் கண்கொண்டு ஜீரணிக்க முடியவில்லை…
ஒட்டுமொத்தமாய் அவள் ரசித்து, ரசித்து அவள் மனதில் தேக்கிவைத்த காதல் இன்று வெளிப்பட, சட்டென அறையை விட்டு வேகமாக வெளியேறி விட்டாள்…
அவள் வெளிவந்த பின்பு நிறை, தேவா, சௌந்தரவள்ளி, வேதவள்ளி என அனைவரும் தக்க பாதுகாப்புடன் ஐசியூ வார்டில் இருந்த தணலனை பார்த்துவிட்டு வந்தனர்…
கிட்டத்தட்ட பதினைந்து நாள் சிறைவாசமாய் மருத்துவமனையில் இருந்த தணலன் டாக்டரின் பல அறிவுரையின் படி, அன்று வீட்டிற்கு செல்ல அங்கு யமுனா இல்லாத வீடு தான் அவனை வரவேற்றது…