நிறை சொன்ன வார்த்தையில் அதிர்ந்தது தணலன் மட்டுமல்ல… அங்கிருந்த சுற்றமும், உறவினர் கூட்டமும் தான்…
“என்ன நிறை இப்படி சொல்லுற?” என் கடின குரலில் கேட்ட சௌந்தரவள்ளியை திரும்பி ஒரு பார்வை பார்த்தாள் நிறை… அவளின் பார்வையில் அப்படியொரு கோபம் கனன்று கொண்டிருந்தது…
“நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு ஆளாளுக்கு என்னையே பார்த்து முறைக்கிறீங்க??… நான் சொன்னதுல என்ன தப்பு… அவுங்க என் அப்பா கூட ஒரே ரூம்ல ஒன்னா தங்குறது எனக்குப் புடிக்கலை” என உறுதியான குரலில் சொல்லி முடித்தவள் கையை கட்டிக் கொண்டு அழுத்தமாக தணலனை பார்த்தாள்…
அவள் சொல்லிய வார்த்தையை ஜீரணிக்கவே ஒரு நிமிடம் தேவைப்பட்டது தணலனுக்கு… கணவன் மனைவி பிரிந்திருப்பது வாழாமல் இருப்பது, இதெல்லாம் சினிமாக்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் வேண்டுமென்றால் சரியாக வரலாம்…
ஆனால் நிஜமோ வேறு கணவன் மனைவி பிரிந்து வாழ்வது என்பது இயலாத ஒன்று… அதுவும் ஒரே வீட்டில் இருப்பவர்கள் பிரிந்து வாழ மாட்டார்கள்… அப்படி வாழ்ந்தார்கள் என்றால் கண்டிப்பாக ஊரும், உறவும் அவர்களின் வாழ்க்கையை கேலி பண்ணியே சிரிக்கும்…
நிறையை பார்த்துக் கொண்டிருந்தவனின் முகத்தில் ஏராளமான கவலை ரேகைகள்… இப்பேற்பட்ட பிரச்சினை வரும் என்று அவன் கனவில் கூட எதிர்பார்த்ததில்லை…
தேவாவின் உதட்டில் சிறு கள்ள புன்னகை ஒன்று தவழ, அதை யாருக்கும் தெரியாமல் மறைத்துக் கொண்டிருந்தாள்… நிறையோ தன் அத்தையின் பிடிவாதத்தை கொண்டு பிறந்தாள் போல.. எதற்கும் மசிந்து கொடுக்கமாட்டேன் என பிடிவாதமாக நின்று கொண்டிருந்தாள்…
“சரி நான் உங்க அப்பா கூட அவர் ரூம்ல தங்கிக்கலை” என்ற யமுனாவின் வார்த்தையில் குண்டூசி கீழே விழுந்தாள் கூட கேட்கும் போல, அப்படியொரு நிசப்தமாக இருந்தது அவ்விடமே…
சட்டென தணலன் திரும்பி, யமுனாவை பார்க்க, அவளும் அவனை தான் திரும்பி பார்த்தாள்… இருவரின் விழிகளும் ஒன்றையொன்று மோதிக் கொண்டது... அவனின் விழிகளில் கலக்கமும், அவள் இதழ்களில் சிறு புன்னகையும் தோன்றியது…
“யமுனா என்ன பேசுற நீ?? அவதான் சின்ன பொண்ணு” என்ற வருத்தமான குரலில் கேட்ட சௌந்தரவள்ளியை பார்த்து மென் புன்னகை ஒன்று புரிந்தவள், “அத்தை இதுல எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை… அவர் கூட ஒரே ரூம்ல தங்குறது தான் நிறைக்கு பிரச்சினைன்னா பரவாயில்லை… நான் அவர் கூட தங்கிக்கலை” என மெல்லிய குரலில் சொன்னவளை அதிர்ச்சியுடன் பார்த்தாள் நிறை…
“தான் சொன்னதை கேட்டதும், தாம்தூம் என்று குதிப்பார்கள் அனைவரும், யமுனா ஒன்று மூஞ்சை தூக்கிக் கொண்டு போவாள்… இல்லையென்றால் அழுவாள்” என நிறை எதிர்பார்க்க… ஆனால் இங்கு நடப்பதெல்லாம் தலைகீழாக இருந்தது…
தன்னிடம் சண்டை போட வேண்டியவள், சமாதானமாக பேசியதை கேட்கும் பொழுது அவளையும் அறியாமல் இனம் புரியாத பயமும், குற்றவுணர்ச்சியும் நிறைக்கு ஏற்பட்டது…
கலக்கத்துடன் தேவாவை பார்க்க, , “நான் பார்த்துக் கொள்கிறேன்” எனும் விதமாக தேவா கண்ணை சிமிட்டியதும் சற்று பதட்டத்துடன் தன் தந்தையை தான் பார்த்தாள்…
அவனுக்குமே யமுனா சொன்ன வார்த்தையில் சற்று வியப்பு தான்… அவளை பற்றி நன்றாக அறிந்தவன் என்பதால் அவளின் பதிலை சட்டென அவனால் ஏற்க முடியவில்லை…
அவன் தன்னை பார்ப்பதை உணர்ந்தவள் சற்று தலையை குனிந்து கொள்ள, அவனும் சட்டென தன் தலையை திருப்பிக் கொண்டான்… இருவரின் மௌன பரிபாஷைகள் சிறு பெண்ணான நிறைக்கு புரியவில்லை என்றாலும், தேவாவிற்கு நன்றாக புரிந்தது…
“அதான் யமுனாவே சொல்லிட்டாளே வேற ரூம்ல தங்கிக்கோ யமுனா” என சொல்லிவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து செல்ல ஆரம்பிப்பதற்குள் யமுனா அடுத்த சொல்லிய வார்த்தையில் நிறை அதிர்ச்சியில் உறைந்து நிற்க, தணலன் இதழில் சிறு புன்னகை ஒன்று உதிர்த்தது…
யாரும் அடக்கமுடியாத நிறையையே ஒரே வார்த்தையில் அடக்கிவிட்டாளே என சற்று நிம்மதியும் சேர்ந்து ஏற்பட்டது… எந்தவித ரசபாசமும் இல்லாமல் அழகான தீர்வு ஒன்றை கண்டவளை பார்த்து சிறு புன்னகை தோன்றியது…
அமிர்தாவினால் தணலனை சட்டென மறக்க முடியவில்லை… அறியா வயதில் நம் மனதில் விதைப்பது ஆணிவேராக வளர்ந்து நிற்பதை போல் அவளின் இளம் பருவத்தில் தணலன் மேல் ஒரு வித பரிதாபம் ஏற்பட்டது…
தணலனின் முதல் மனைவி இறந்து ஐந்து வருடங்கள் கடந்து விட்டது.. நிறைக்கு ஆறு வயதாக இருக்கும் பொழுது தான் தணலனின் முதல் மனைவி இறந்து போனது… அன்று அவன் அழுத அழுகையும், தவிப்பும் ஹாஸ்பிடலில் அவன் கதறிய கதறலை நேரில் பார்த்த அமிர்தாவிற்கு அவன் மீது ஈரக்கம் வந்தது…
முதலில் பாவமாக பார்த்த தணலனின் மீது காதல் வந்தது நிறைக்கு உடல்நிலை சரியில்லாத போது தான்…
ஷ்ரவனுக்கும், நிறைக்கும் ஒன்று போல் அப்பொழுது உடல்நிலை சரியில்லை என்று இருவரையுமே ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணியிருந்தார்கள்…
இருவரையும் ஒன்று போல் ஹாஸ்பிடலில் வைத்திருப்பதால் தேவாவும், தணலனும் தான் மாறி மாறி ஹாஸ்பிடலில் தவம் கிடந்தனர்…
ஷ்ரவன்க்கு உடல்நிலை சரியில்லை என்பதால் பார்ப்பதற்காக வந்திருந்தாள் அமிர்தா… அவள் கண்ணில் கண்ட காட்சி ஏனோ மனதை உருக்கி, அதுவரை தணலனின் மீதிருந்த ஈரக்கம் காதலாக மாறியது… பதினாறு வயதில் காதலில் விழுந்தாள்…
நிறைக்கு குளூக்கோஸ் ஏறிக் கொண்டிருந்ததால் அவளை கட்டிலில் படுக்க வைத்திருந்தனர்… ஷ்ரவனோ தன் தந்தையின் அருகாமையை எண்ணி அழ, மூன்று வயது சிறுவனை தன் தோளில் தட்டிக் கொடுத்தபடி தூங்க வைத்துக் கொண்டிருந்தான் தணலன்…
அவனின் அன்பான அரவணைப்பும், குழந்தைகள் மீது அவன் கொண்ட பாசமும் இவளுக்கு அவன் மீது காதலை வரவழைத்து விட, சாதாரணமாக தணலன் செய்யும் ஒவ்வொரு செய்கையிலும் ஈர்க்கப்பட்டு, அன்று முதல் அவனை மனதில் நினைக்க ஆரம்பித்தாள்…
இன்று அதே காதல் தான் வயது வித்தியாசம் பார்க்காமல் தன் அண்ணனிடம் காதலை தெரிவித்து, அவனும் தன் தங்கையின் விருப்பம் என தணலனுடனான திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய சென்று விட்டான்…
அவர்களின் வயது வித்தியாசம் கூட அவன் கண்ணுக்கும் பெரிதாக தோன்றவில்லை… அங்கு தான் மணிவண்ணன் தவறிவிட்டான்… தன் தங்கையிடம் எடுத்துச் சொல்லி புரிய வைத்திருக்க வேண்டும்… ஆனால் அவனோ, தணலன் அமிர்தாவை நன்றாக பார்த்துப்பான் என்ற நம்பிக்கையில் மட்டுமே திருமண பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது…
இனி திருமணம் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதை அறிந்த அமிர்தாவிற்கு காதல் கொண்ட உள்ளம் வலிக்க ஆரம்பித்தது… அவளால் சட்டென தணலனை மறக்கவே முடியவில்லை…
அதன் விளைவு அவன் ஆபீஸ்க்கே சென்று பேச வேண்டுமென்று முடிவெடுத்தாள்.. “இளங்கன்று பயமறியாது” என்பதை போல் தணலனின் ஆபீஸிற்கு சென்று ஒரு நாள் பார்க்க முடிவெடுத்தாள்…
காலேஜில் ப்ராஜெக்ட் ஒர்க் (திட்டவேலை)நடந்து கொண்டிருப்பதால் அவளால் சட்டென தணலனை பார்க்க போக முடியவில்லை…இரண்டு வாரங்கள் கடந்து விட்டது தணலனை பார்ப்பதற்கே…
திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய இரு முக்கிய நகரங்களுக்கு இடையே உள்ள நகரம் காரைக்குடியாகும்…
கல்வி, சுகாதாரம், ஆட்டோமொபைல் டீலர்கள், ஜவுளி வியாபாரிகள், நகைகள், மென்பொருள், வன்பொருள், வீட்டு உபயோகத்திற்கு அனைத்து பொருட்களும் அங்கு தாராளமாக கிடைக்கும்… இதில் அத்தனையும் வழி வழியாக தணலன் வீட்டில் செய்து வரும் வியாபாரமாகும்…
இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், அன்று தணலனை பார்ப்பதற்காக அவனின் ஆபீஸிற்கே சென்றாள்… காரைக்குடியில் உள்ள வேலங்குடி கிராமத்தில் அவன் இருப்பதாக தகவல் வந்தது...
“போகலாமா?? வேண்டாமா??” என மனம் ஒற்றையா? இரட்டையா போட்டாலும்… இன்று விட்டால் மறுபடி அவனிடம் பேசமுடியாது என நினைத்தவள்… பஸ் பிடித்து காரைக்குடியில் இருந்து வேலங்குடி கிராமத்தை நோக்கி சென்றாள்…
மதிய வேளை என்பதால் அங்கு வேலை செய்பவர்கள் அனைவரும் சற்று ஓய்வெடுக்க கிளம்பி விட்டனர்… அது இன்னமும் வசதியாக போனது அமிர்தாவிற்கு…
அப்பொழுது தான் சாப்பிட்டு முடித்து கைகழுவி விட்டு தோப்பினை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வையில் விழுந்தாள் அமிர்தா,..
அவளை பார்த்ததுமே அதிர்ச்சி எல்லாம் ஆகவில்லை… அவனை பொறுத்தவரை அவள் சிறு பெண்… “தன் அண்ணனின் வாழ்க்கையை பற்றி கேட்க வந்திருக்கிறாள்” என்று மட்டுமே நினைத்தான்…
“வா அமிர்தா… சாப்பிடுறீயா??”
“இல்லை அத்தான்… இப்போதான் சாப்பிட்டு வந்தேன்”
“அப்போ இளநீயாவது குடி.. இரு இளநீ எடுத்துட்டு வர சொல்றேன்”
“இல்லை அத்தான் வேண்டாம்… நான் உங்ககிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்”
“ம்ம்… சொல்லு… என்னாச்சி? அத்தானை பத்தி ஏதாவது சொல்லணுமா?”
“இல்லை.. இல்லை அத்தான் அண்ணா நல்லா இருக்காங்க… நான் அவரை பத்தி பேச வரலை.. என்னை பத்தி பேச வந்திருக்கேன்” என்றதுமே ஒரு நிமிடம் நின்று அவளை உற்றுப் பார்த்தான்…
ஒரு வித பதட்டமும், பயமும் அவளுக்கு இருப்பதை அவள் முகமே காட்டிக் கொடுத்தது…
“என்னாச்சி அமிர்தா?? வேற யாராவதுனால உனக்குப் பிரச்சினையா?? என்ன இருந்தாலும் சொல்லு… நீ என் வீட்டுப் பொண்ணு.. உனக்கு ஒரு பிரச்சினைன்னா அப்படியே விட்ற மாட்டோம் நாங்க” என இன்றைய தலைமுறைகளின் பிரச்சினையை மனதில் வைத்துக் கொண்டு பேசியவனை கண்டு அவசரமாக தடுத்தாள்…
“இல்லை அத்தை எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை… நான் உங்ககிட்ட மட்டும் தான் பேச வந்தேன்” என்றவளை புரியாமல் பார்த்தான்…
சட்டென அமிர்தாவின் விழிகளில் கண்ணீர் நிறைந்திட, “ஏன் அத்தான் என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னீங்க??” என்ற வார்த்தையில் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி வெளிப்பட்டது தணலனிடத்தில்… அவள் சொல்லிய விஷயமே அவனுக்குப் புதிது தான்…
“கல்யாணமா??” என ஒரு வித அதிர்வுடன் கேட்டவனை அழுது கொண்டே பார்த்தவள், “என்னை கல்யாணம் பண்றதுக்கு ஜாதகம் ஒத்து வரலைன்னு சொல்லி அனுப்பிட்டீங்க… அண்ணாவையும் அசிங்கப்படுத்தி அனுப்பிட்டீங்க… எல்லாரும் வீட்டுல கோபமா இருக்காங்க” என்றவளின் மீது இரக்கம் வரவில்லை… கோபம் தான் வந்தது...
அதுவும் தன்னை கல்யாணம் பேச மணிவண்ணனை அனுப்பி வைத்திருக்கிறாள் என்பது இன்னும் பலமடங்கு கோபத்தை கொடுத்தது…
இவளுக்குத் தான் புத்தியில்லை… அவருக்கு எங்கே போய்விட்டது? என மனதில் நினைத்தவாறே எதிரில் இருந்தவளை உணர்ச்சியற்ற முகத்துடன் பார்க்க… அவளோ தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்…
“அமிர்தா என்னை பாரு” என அழுத்தமாக சொன்னவனின் வார்த்தையில் நிமிர்ந்து மெல்ல பார்க்க,
“உனக்கும் எனக்கும் கல்யாணம் பேசுன விஷயமே எனக்கு இப்போ தான் தெரியும்… அது மட்டுமில்லாமல் உன்னோட வயசு என்ன??” என சற்று கோபத்துடன் கேட்டவனை கண்டு பயத்துடனே,
“பத்தொன்பது” என்றவளை சலிப்புடன் ஒரு பார்வை பார்த்தான்…
“என் பொண்ணு வயசு என்ன??” என்ற அடுத்த கேள்வியில், “என்ன சொல்வதென்றே தெரியாமல் தடுமாறி நின்றாள் அமிர்தா”
“ம்ம்… சொல்லு.. என் பொண்ணு வயசு என்ன?” என்றவனிடத்தில் மெல்லிய குரலில், “11” என்றிட…
“இப்போ சொல்லு… உனக்கும் என் பொண்ணுக்கும் என்ன வித்தியாசம்? என நிதர்சன வாழ்க்கையின் அடிப்படையை சட்டென சொன்னவனை பார்த்தவளின் அழுகை கூட நின்றது…
“இல்லை அத்தான் நான் உங்களை??” என்றவளை பார்த்து மென் புன்னகை ஒன்று புரிந்தான்…
“எனக்கு புரியாமல் இல்லை அமிர்தா… நானும் உன் வயசை கடந்து தான் வந்திருக்கேன்… நீ என்னை காதலிக்கக்கூடாதுன்னு நான் சொல்லலை… ஆனா நிதர்சனமா வாழ்க்கையில் இது நடக்கவே நடக்காது என்று சொல்றேன்… எனக்கு உன்னை பார்த்தா என் பொண்ணு மாதிரி தான் இருக்கு”
“இல்லை அத்தான்” என ஏதோ சொல்ல வந்தவளை கை நீட்டி தடுத்து நிறுத்தியவன்…
“அமிர்தா… ப்ளீஸ் இனிமேல் காதல், கண்ட்ராவின்னு சொல்லிட்டு என்னை பார்க்க வராதே… இதை நீ அட்வைசா எடுத்துக்கிட்டாலும் சரி… எச்சரிக்கையா எடுத்துக்கிட்டாலும் சரி… என்னை பொறுத்தவரைக்கும் நீயும் என் பொண்ணும் எனக்கு ஒன்னுதான்… நாளைக்கு ஏதாவது பிரச்சின்னைன்னு நீ சொன்னா… உனக்காக நான் முன்னாடி வந்து நிற்பேன்.. ஏன்னா நீ எங்க வீட்டுப் பொண்ணு… இந்தக்காதல் கத்தரிக்காய் எல்லாம் தூக்கிப் போட்டுட்டு நல்லா படி… படிச்சி ஒரு வேலைக்கு போகும் போது நீ இதெல்லாம் நினைச்சிப் பார்த்தா உனக்கே சிரிப்பு தான் வரும்… போ” என சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு செல்ல முயன்றவன்… சட்டென திரும்பி,
“அப்புறம் சொல்ல மறந்துட்டேன்… எனக்கு இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் கண்டிப்பா நீ வந்திடு” என்றவனின் வார்த்தையில் உச்சகட்ட பேரதிர்ச்சி தான் அமிர்தாவிற்கு…
“பொண்ணு அதுக்குள்ள முடிவாகிருச்சா??” என தனக்குள் அதிர்ச்சியை உள்வாங்கியபடி கேட்டவளை கண்டு நீண்ட ஒரு பெருமூச்சொன்றை விட்டவன்…
“ஆமா.. முடிவாகிருச்சி… யமுனா தான் பொண்ணு” என்றவனை பார்த்து தன் முட்டைக்கண்ணை பெரிதாக விரித்து பார்த்தாள் அமிர்தா…