அன்று காலையில் இருந்தே மிகவும் சோர்வுடன் இருந்தாள் கங்கா. வகுப்பில் நடப்பதை கவனிக்க முடியாதபடி அவளின் வயிற்றுவலி அவளை பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தது…
எப்பொழுது வரும் மாதாந்திர பிரச்சினை என்றாலும், அவளால் சில நேரம் தாங்கிக் கொள்ளவே முடிவதில்லை. சரியாக சாப்பிடக்கூட முடியாமல் அவதிப்படுவாள்… வயிற்று வலியோடு, இடது மார்பிலும் வலி அதிகமாகவே இருக்கும்…
ஏனோ உடலின் சோர்வு அவளின் மனதிலும் தெரிய, மதிய உணவைக்கூட தவிர்த்து விட்டாள். மதிய இடைவேளைக்குப் பிறகு ஆசிரியர் யாரும் வராததால், பாதி நேரம் பெஞ்சின் மேல் தலை கவிழ்ந்தவாறே படுத்திருந்தாள்…
ஏதாவது வயிற்றிற்குள் போனாலே வாந்தியாக வெளிவந்து விடும். அதனாலேயே சாப்பாட்டை தவிர்த்து தண்ணீர் மட்டுமே இது போன்ற சமயங்களில் அருந்திக் கொள்வாள்…
மோகனா பல நேரங்களில் கண்ணும், கருத்துமாய் பார்த்துக் கொண்டாலும் அவளின் இந்த வயிற்று வலியும், ஒரு பக்க மார்பகத்தின் வலியும் அவளுக்கு மாதாந்திர பிரச்சினையை ஒட்டி வந்துவிடும்…
அதீத வயிற்று வலி அவளுக்கு பயங்கர சோர்வை உண்டாக்கியது… அவளின் அவதியான நிலையை காலையில் இருந்தே பார்த்துக் கொண்டிருந்த அவளின் தோழி ரேவதிக்கே பாவமாகி விட்டது…
“என்னாச்சி கங்கா? ரொம்ப வலிக்குதா? பெர்மிசன் கேட்டு வீட்டுக்குப் போறீயா?” என கரிசனையுடன் கேட்டவளை கண்டு ‘இல்லை’ எனும் விதமாய் தலையாட்டினாள்…
“இன்னும் கொஞ்ச நேரம்தானே பொறுத்துப்பேன்” என்றவளுக்கு ‘பொறுத்துக்கொள்ள முடியுமா?’ என்ற சந்தேகம் தான் எழுந்தது…
“ப்ச்ச்… உன் முகத்தை பார்த்தாலே தெரியுது. உன்னால பொறுத்துக்க முடியலைன்னு. அப்புறம் ஏன்டி இவ்வளவு வற்புறுத்திக்கிற?. வா மேம் கிட்ட நான் உனக்காக பெர்மிசன் கேட்குறேன்” என எழுந்த தோழியின் கையைப் பிடித்து தன்னருகில் அமர வைத்தவள்,
“இல்லைடி… நான் பார்த்துக்கிறேன். வலி எப்பவும் இருக்கிறது தான்” என்றவளுக்கே ஏன் இவ்வளவு வலி? எல்லா பெண்களுக்கும் இவ்வளவு வலி இருக்குமா? என்ற கேள்வி எப்பொழுதும் போல் அவள் மனதில் உதிக்காமல் இல்லை…
“கங்காவிற்குமே ஏதாவது சூடாக குடித்தால் நன்றாக இருக்கும் என்று தான் தோன்றியது.
“சரி வா போகலாம்” என தோள்பையினுள் இருந்த தன் பர்ஸை எடுத்துக் கொண்டு இருவரும் கேன்டீனை நோக்கி சென்றார்கள்…
அதிக கூட்டமும் இல்லாமல், அதே சமயம் காலியாகவும் இல்லாமல் ஒரு வித சலசலப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது கேன்டீன்…
“இரு நான் உனக்கு காஃபியும், தொட்டுக்கிறதுக்கு பிஸ்கட்டும் வாங்கிட்டு வர்றேன்” என்றவள் முதலில் பில் போடும் இடத்தில் சென்று பணத்தை கொடுத்து டோக்கன் வாங்குவதற்காக நின்றாள்…
“ப்ரீயா? ஏன் உங்க முதலாளி கேன்டீனை காலி பண்ணிட்டு போகப்போறாரா என்ன?” என சிறு நக்கல் தொணியில் கேட்க,
“இல்லைம்மா. இந்த காலேஜ்ல படிக்கிற சீனியர் தணலன் அவருக்கு பிறந்தநாள் அதுக்காக, அவர் ட்ரீட் கொடுத்திருக்கார். அட்வான்ஸ் அமௌன்ட் பே பண்ணிட்டாரு.. மீதியை கேன்டீன் சாத்தும்போது வந்து வாங்கிக்க சொல்லியிருக்காங்க” என்றதும் இரு காஃபியும், இரு மஷ்ரூம் பப்ஸும் பெற்றுக் கொண்டு கங்காவின் முன்பு சென்று அமர்ந்தாள்…
காஃபியை கங்காவின் பக்கம் நீட்டியவள் கூடவே பப்ஸையும் நீட்டினாள்… இரண்டையும் மாறி மாறி பார்த்தவள் ரேவதியை முறைத்துக் கொண்டே,
“நான் காஃபி தானே கேட்டேன்… எதுக்கு பப்ஸும் சேர்த்து வாங்கிட்டு வந்திருக்க?” என்றவள் பப்ஸிற்கான காசை தன் பர்ஸினுள் விட்டு எடுப்பதற்குள் அவளின் கைப்பிடித்து தடுத்து நிறுத்தியிருந்தாள் ரேவதி…
இது வழக்கமாக நடக்கும் ஒன்று என்பதால் அவள் பெரியதாக கண்டுகொள்ளவில்லை…
இருவரும் காஃபி குடித்து விட்டு, வெளியே செல்வதற்கு முயன்றிட, அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தான் தணலன்…
தணலன் கங்காவை கவனிக்கவில்லை. ஆனால் கங்கா அவனை தான் பார்த்தாள்… ரேவதியுடன் நடந்தவாறே ஓரப்பார்வையில் லேசாக தணலனை பார்க்க, ஒருவித ஈர்ப்பு விசையில் சட்டென திரும்பி தணலன் பார்க்க, ரேவதி தான் அவனை பார்த்து சிரித்தாள் கங்கா அவன் பார்ப்பதற்குள் முகத்தை திருப்பிக் கொண்டாள்…
அவனும் லேசான புன்னகை ஒன்றை சிந்தியவாறே டேபிளில் சென்று அமர, “கங்கா சீனியர்க்கு பொறந்தநாளுன்னு சொன்னேன்ல.. அவர் போறாரு. வா விஷ் பண்ணிட்டு போகலாம்” என அவளின் கைப்பிடித்து நேராக கொண்டு சென்று நிறுத்தியதோ தணலன் முன்புதான்…
“ஹேப்பி பர்த்டே சீனியர்” என ரேவதி இயல்பாக தணலனுக்கு கை நீட்டினாள்… தணலனும் அவளின் வாழ்த்தை கைகுலுக்கி பெற்றவன்.. அருகிலிருந்த கங்காவை பார்த்தான். அவன் விழிகளோ கங்காவை பார்த்து தான் தவம் இருந்தது…
ஒரு பார்வை தன்னை பார்த்து வாழ்த்திட மாட்டாளா? என உள்ளம் லேசான படபடப்புடன் தவிக்க ஆரம்பித்தது…
“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என தமிழில் மெல்லிய குரலில் சொன்னவளின் வாழ்த்தை பெற்றவனின் அகத்தோடு சேர்ந்து முகமும் மலர, “தாங்க்ஸ்” என்றவனுக்கு வானமே தன் வசப்பட்ட உணர்வு…
ஏனோ அவளின் ஒற்றை வார்த்தையில் உயிர்பெற்று வாழத் தோன்றியது… ஏற்கனவே வயிற்று வலியில் அவதிப்பட்டு வந்த கங்காவிற்கு காஃபி குடித்து விட்டு பப்ஸ் சாப்பிட்டதால் வயிற்றை புரட்டிட, கேன்டீனில் இருந்த வாஷ்பேஷனில் தன் வாயைப் பொத்திக் கொண்டே ஓடினாள்..
அதுவரை வானத்தில் பறந்து கொண்டிருந்த தணலனின் மனது சட்டென இயல்புக்கு வந்தது.. கங்காவின் பின்னால் செல்ல முயன்ற கால்களை கஷ்டப்பட்டு தடுத்து நிறுத்தினான்…
“ஸாரி சீனியர்.. காலையில் இருந்தே அவளுக்கு உடம்பு சரியில்லை” என பொதுவாய் சொன்னவள் கங்காவின் பின்னால் ஓடினாள்…
அதற்குள் சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுத்த கங்காவிற்கு கண்களை சுழற்றிட, தன்னருகில் வந்து கொண்டிருந்த ரேவதியின் மேலே சாய்ந்தவாறே மயங்கி விழுந்தாள்…
அதுவரை கடினப்பட்ட கால்கள் வேகமாக கங்காவை நோக்கிச் செல்வதற்குள், அங்கிருந்த இரண்டு மூன்று பெண்கள் கங்காவை தாங்கி அருகிலிருந்த சேரில் அமர வைத்தனர்…
“கொஞ்சம் பார்த்துக்கோங்க. நான் மேடம்க்கிட்ட லீவுக்கு பெர்மிசன் வாங்கிட்டு வந்திடுறேன்” என வகுப்பறையை நோக்கி ஓடியவள்.. பத்து நிமிடத்தில் கங்காவின் தோள்பையினை எடுத்துக் கொண்டு வந்தாள்…
அவர்கள் செய்வதை வெறுமென வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தணலனுக்கு அதுவரை இருந்த உற்சாகமெல்லாம் வடிந்தது போன்று இருந்தது…
காலேஜினுள் வெளியே இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஒன்றை பிடித்த ரேவதி, கங்காவை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு செல்வதை கையாளாகாதனத்துடன் பார்த்துக் கொண்டு நின்றான்…
“அவளுக்கு என்னவாயிற்று?” என கேட்பதற்கு உள்ளம் பதைபதைத்து போனது..
அதுவரை பிறந்தநாள் உற்சாகத்தில் இருந்தவனின் மகிழச்சியெல்லாம் வடிந்தாற் போன்று உணர்ந்தான்…
“என்ன மச்சி அப்படி பார்த்துட்டே நிக்குற?”
“இல்லைடா.. அவளுக்கு உடம்பு சரியில்லை என்னாச்சின்னு தெரியலை” என்றவனின் தோளில் கை வைத்த சதீஷ்…
“டேய்ய்… சாதாரண வாந்தி மயக்கமா தான்டா இருக்கும்.. ஹாஸ்பிடல் போய் ஒரு ட்ரிப்ஸ் ஏத்துனா சரியாகிடும்… நாளைக்கு காலேஜ் வந்திடுவா. நீ வா” என்றவனின் பேச்சையே காதில் வாங்கிக் கொள்ளாமல், வாசலையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு நின்றான் தணலன்…
வீட்டிற்கு ஆட்டோவில் வந்து இறங்கிய கங்காவை பார்த்து சற்று பதறித்தான் போனார் மோகனா…
அருகிலிருந்த ரேவதியிடம் என்னவென்று விசாரிக்க, “யமுனாவின் பிரச்சினையை பற்றி சொன்னவள்… ஹாஸ்பிடல் கூப்பிட்டு போங்கம்மா. ரொம்ப டயர்டா தெரியுறா” என அறிவுறுத்தி விட்டு வந்த ஆட்டோவிலேயே ஏறி காலேஜிற்கு சென்றாள்…
யமுனாவை அழைத்துக் கொண்டு மோகனா ஹாஸ்பிடலுக்கு சென்று ஒரு ஊசியையும் போட்டவர், மாலை வேளையும் அவளை விட்டுப் பிரியாமல் தான் இருந்தார் கங்கா பள்ளிக்கூடம் விட்டு வரும்வரை…
அவள் வந்த பின்பு அவள் வசம் கங்காவை ஒப்படைத்து விட்டு சென்றார்…
“கங்காவிற்கு என்னவாயிற்று?” என்ற காரணம் யமுனாவிற்கு சரியாக புரியவில்லை என்றாலும், தன் அக்காவிற்கு உடல் சரியில்லை என்று மட்டும் புரிந்தது…
இரண்டு நாட்கள் முழுதாக விடுமுறை எடுத்தவள் மூன்றாவது நாள் காலேஜ் செல்வதற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள்…
அன்று காலேஜுக்கு தயாராகிக் கொண்டிருந்த கங்காவிற்கு, யமுனாவின் சோர்ந்த முகம் தான் கண்ணில் பட்டது… காலையிலேயே இவள் ஏன் சோர்ந்து தெரிகிறாள்? என புருவம் சுருக்கி பார்த்தாள்…
“என்னாச்சி யமுனா? ஏன் டல்லா இருக்கிற?”
“அந்த அண்ணாவை நான் பார்த்தேன் க்கா.. ஆனா பேச முடியலை. பைக்கை எடுத்துட்டு சர்ருன்னு போயிட்டாங்க” என்றவளை புருவம் இடுங்க பார்த்தாள்…
“எந்த அண்ணா யாரை பார்த்த?” என கேட்டவளை சிறு முறைப்புடன் பார்த்தாள் யமுனா…
“அதான்க்கா என்னை காப்பாத்தினாரே அவரை” என்றதும் தான் சட்டென நியாபகத்திற்கு வந்தது. மூன்று மாதங்களுக்கு மேல் ஆனதால் அந்தச் சம்பவமே கங்காவின் நினைவுகளில் இருந்து அகல ஆரம்பித்தது…
“ஓஹ்ஹ்… அவரா? ப்ச் யமுனா இன்னமும் நீ அதையே நினைச்சிட்டு இருக்கீயா? அவரைப் பார்த்தா தாங்க்ஸ் சொல்லுன்னு சொன்னேன்… அதுக்காக அவரை எப்போ பார்ப்பேன்னு எதிர்பார்த்துக்கிட்டே இருக்க சொல்லலை” என சற்று கடுமையான குரலில் கேட்ட தமக்கையை பரிதாபமாக பார்த்தாள்…
“ஏன்க்கா நான் அவருக்கு தாங்க்ஸ் சொல்லக் கூடாதா?” என கேட்டவளின் குரலே சற்று கரகரத்து ஒலிக்க ஆரம்பித்தது…
“ப்ச்ச்.. யமுனா இதுக்கெல்லாம் பீல் பண்ணுவாங்களா?… நாம யாருக்காவது நன்றி சொல்லணும்னா மனசார அவுங்களை ஒரு நிமிஷம் நினைச்சி தாங்க்ஸ்னு சொல்லு.. அது அவுங்களைப் போய் சேரும்” என்றவளை சிறு புன்னகையுடன் பார்த்தவள்,
“நாம கடவுளுக்கு தாங்க்ஸ் சொல்லுவோமே அப்படியா அக்கா” என கண்கள் விரிய கேட்ட யமுனாவை பார்த்தவளின் செய்கையில் சிறு சிரிப்பு தோன்றிட…
“ஆமா அப்படித்தான்” என்றவள் சற்று சோர்ந்தவாறு அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தாள்…
“என்னாச்சி க்கா காலேஜ் போகலை?”
“போகணும் டா” என்றவளுக்கு அன்று தான் நடந்து கொண்ட விதம் தான் கண் முன்னால் வந்துக் கொண்டிருந்தது…
ஏனோ தான் மயங்கி விழும் வேளையில், தன்னை தவிப்புடன் பார்த்த தணலனின் முகம் அவளின் நெஞ்சில் நீக்கமற இடம் பிடித்தது..