“அத்தான்” என்றவள் தடுமாறி நின்ற வேளையில், தணலன் கண்களில் கண்ணீர் வந்துக்கொண்டேயிருந்தது. மனதில் இருக்கும் ஆறாத ரணம் கண்ணீராய் வெளிப்பட்டது..
“அத்தான்.. உங்க மனசை திடமா வச்சிக்கோங்க. நீங்களே இப்படி கலங்கினா எப்படி” என அவனை சமாதானப்படுத்த முயன்றாள்..
சட்டென அவளின் புறம் திரும்பியவன் யமுனாவின் தோள்பட்டையை அழுத்தமாக பற்றினான். அவன் பற்றிய வேகத்திலும், அழுத்தத்திலும் தோள்பட்டை இரண்டும் வலிக்க ஆரம்பித்தது. இருந்தாலும் பொறுத்துக் கொண்டாள் அவனுக்காக..
“எப்டி திடமா இருக்க முடியும்? சொல்லு யமுனா. கங்கா செஞ்ச தப்பால நீ, நான், நிறை எல்லாருமே கஷ்டப்பட்டுட்டு இருக்கோம். அதை எப்படி என்னை மறக்க சொல்லுற. மறந்து மன்னிக்குற மாதிரி தப்பையா கங்கா செஞ்சிருக்கா?” என்றவனின் குரலில் அவ்வளவு வலி, வருத்தம், காயங்களும் கலந்து இருந்தது.
“அத்தான்.. கங்காவோட நிலைமை அப்படி” என்றவளை திரும்பி பார்த்த பார்வையில் கப்பென வாயை மூடிக்கொண்டாள் யமுனா. தணலன் கண்களில் அவ்வளவு கோபமும், கனலும் கலந்து இருந்தது..
“என்ன நிலைமை? ஹான் என்ன நிலைமை கேட்குறேன்? அவளுக்கு மட்டுந்தான் கஷ்டமா? யாருக்குத்தான் இந்த பூமியில் கஷ்டமில்லை. ஆனா உன் அக்கா பண்ணது எவ்வளவு பெரிய தப்பு.. நான் அவளுக்கு என்ன தப்பு பண்ணினேன்?”..
“அவளை என் கண்ணுக்குள்ள வச்சி தாங்குனது தப்பா? என்னை நம்பி வந்த பொண்ணு எந்த சூழ்நிலையிலும் கண் கலங்காம பார்த்துக்கணும்னு நினைச்சது தப்பா? என்னை பத்தி ஒரு நிமிஷம் அவ சிந்திச்சு பார்த்தாளா? என்னை விடு நிறையை பத்தி யோசிச்சாளா?” என ஆத்திரத்துடன் கேட்ட தணலனின் பேச்சில் பேசாமடந்தையாகி நின்றாள் யமுனா..
“என்னால முடியலை யமுனா. அவ பண்ணின ஒரு தப்பால இப்போ எத்தனை பேர் வாழ்க்கையை இழந்து நிக்கிறோம்.. தேவா அக்காவால மாமாவோட வாழ முடியலை. நிறைக்கு உன்னை அம்மாவோட ஸ்தானத்துல வச்சி பார்க்க முடியலை. என்னால கங்காவை மறந்து உன்னை ஏத்துக்க முடியலை”..
“ப்ச்ச்.. எங்க எல்லாரையும் விடு. உனக்கென்ன தலையெழுத்தா யமுனா? என்னை மாதிரி ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கனும்னு.. ஹான் சொல்லு. பதினோரு வயசு பொண்ணுக்கு அப்பா நான். எனக்கு இரண்டாந்தாரமா வாக்கப்படணும்னு உனக்கென்ன தலையெழுத்தா?”.
“நான் ஒரு இதய நோயாளி. நாளைக்கே எனக்கு ஏதாவது ஆகிட்டா.. நீ ஒரு வித” என சொல்லி முடிப்பதற்குள் சட்டென அவன் வாயை தன் கரங்கள் கொண்டு மூடினாள்…
“இதுக்கு மேல எதுவும் பேசவேண்டாம் அத்தான். போய்ப் படுங்க.. ரொம்ப பேசிட்டீங்க” என்றவளின் அதட்டலான வார்த்தையில் அக்கறையும் கலந்து வந்தது.
நிறை பேசிவிட்டு சென்ற வார்த்தைகளில் இருந்து மனதில் பாறாங்கல்லை ஏற்றி வைத்தாற் போன்று கனத்து வலிக்க ஆரம்பித்தது தேவாவிற்கு..
தான் தூக்கி வளர்த்த பெண்? தன்னைக் எதிர்த்து கேள்வி கேட்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாள்..
இதுவரை தன்னை யாரும் எதிர்த்து பேசுவதற்கே தயங்கும் நிலையில், தன்னை எதிர்ப்பது மட்டுமின்றி.. தன் தவறையும் சுட்டிக்காட்டியவள் மீது பெருங்கோபம் வந்தாலும்.. ஏனோ அவளை தண்டிக்கவோ, திட்டவோ மனதிற்கு தைரியமில்லை..
அதற்கு முக்கிய காரணம், அவள் மீது தான் வைத்த பாசம் என்பது புரிந்தது. கண்மண் தெரியாமல் ஒருவர் மீது வைக்கும் அளவற்ற அன்பும், பிற்காலத்தில் ஒருவருக்கு துன்பத்தையே தரும் என்பதை மிகவும் தாமதாக உணர ஆரம்பித்தாள் தேவா. உணர வைத்திருந்தாள் தேவாவின் பிரதிபிம்பமான நிறை என்றால் மிகையாகாது..
தோட்டத்தில் உலாத்திக் கொண்டிருந்தவளுக்கு தூக்கம் என்பது சிறிதும் வரவில்லை. மனதில் ஒரு வித அழுத்தமும் அவளை தூங்கவிடவில்லை..
நடந்து, நடந்து கால்கள் வலித்தாலும் உறக்கம் என்பது கிஞ்சித்தும் அவளை நெருங்கவில்லை. மனதின் வலி அவளை தூங்கவிடவில்லை..
“என்ன தூங்க தோணலையா? இல்லை தூக்கம் வரலையா?” என பக்கவாட்டில் கேட்ட குரலில் சட்டென திரும்பி பார்த்தவளின் முகமோ கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது.
“உன்னை யாரு உள்ளே விட்டது?”
“யாரு உள்ளே விடணும். நான் இந்த வீட்டோட மாப்பிள்ளை. தி கிரேட் தேவசேனாவோட ஒரே புருஷன்” என்றவனின் வார்த்தையில் முறைத்துப் பார்த்தாள் தேவா.
“என்ன திமிரா?”
“உன்னை விடவா எனக்கு திமிர் அதிகமா இருக்கப் போகுது?” என ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கியவனின் பார்வையில் சட்டென விழிகளில் கோபத்தை காண்பிக்க முடியாமல் தடுமாறி நின்றாள்..
அவனைக் காதலித்த பொழுதில் அவள் விரும்பும் செயல்களில் இதுவும் ஒன்று. ஏனோ பல தடவை அவனை அவமானப்படுத்தி இருக்கிறாளே தவிர, அவனை இந்த நொடி வரை வெறுத்ததில்லை.
இன்றளவும் அவனின் மேல் இருக்கும் காதல் அப்படியே அவளுக்குள் உறைந்து நிற்கின்றது. அவளின் பார்வையிலேயே அதை உணர்ந்தவன் மெல்ல அவளை நெருங்கி நின்றான்.
அவன் தன்னை நெருங்கி வருவதைக்கூட அவளால் தடுக்க முடியவில்லை. அவளின் கண்களை நேருக்கு நேராக பார்த்துக் கொண்டே “ஐ லவ் யூ டி” என்றவாறே அவளின் இடுப்போடு தன் கரங்களால் சுற்றி வளைத்தவன், அவளின் கண்களை தவிர வேறெங்கும் பார்க்கவில்லை.
“மணி என்ன பண்றீங்க? விடுங்க” என சிணுங்கலாக கூறிட..
“நீ என் உயிருன்னு ஏன்டி உனக்குப் புரியமாட்டேங்குது. உன் திமிரையும் நான் ரசிக்கிறேன்னு உனக்குத் தெரிஞ்சும். ஏன்டி என்னை தேடி வரமாட்டேங்குற” என்றவனின் வார்த்தையில் பழைய ரணங்களும் கீறிவிட.
அதுவரை இருந்த மாயவலை அறுந்து விழ, சட்டென அவன் மார்பில் கை வைத்து தள்ளினாள்.
“இப்போ ஏன் தேவையில்லாத பேச்சு பேசிட்டு இருக்கீங்க? ஷ்ரவனை பார்க்கணும்னா பார்த்துட்டு போங்க” என முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு திரும்பி நின்று கொண்டாள்..
“நான் அவனோட அம்மாவை தான் பார்க்க வந்தேன்” என்றவனை திரும்பி எரிக்கும் பார்வை பார்க்க,
“அதான் பார்த்துட்டீங்கள்ல போங்க போய் தூங்குற வழியை பாருங்க”
“எல்லாரையும் ரொம்ப பயமுறுத்திட்ட?” என லேசான புன்னகையுடன் சொல்லிட..
“எனக்குத் தெரியலை மாமா. சட்டுன்னு வேர்த்து கீழே விழுந்திடுவேன்னு நானே எதிர்பார்க்கலை மாமா. மனுஷங்க வாழ்க்கையே இவ்ளோ தான் இல்லையா மாமா.. இதுல எவ்வளவு வலி, கஷ்டம்”..
“ம்ம்.. ஒத்துக்க வேண்டிய உண்மை தான் தணலா. ஆனா உன்னை நம்பி வந்தவளுக்கு நீ பண்ணது துரோகம் தான் தணலா” என்ற மணியை கண்கள் இடுங்க பார்த்தான்
“என்ன மாமா சொல்றீங்க? எனக்குப் புரியலை”
“யமுனாவைப் பத்தி யோசிக்கவே இல்லையா? நீயும் உன் பொண்ணும் மட்டுமே உலகம்னு நினைச்சிட்டீயா தணலா.. அப்படி நினைக்கிறவன் எதுக்கு யமுனா கழுத்துல தாலி கட்டுன? அந்தப் பொண்ணை உன் உறவுக்காரங்க எல்லாரும் என்ன பாடுபடுத்துனாங்க தெரியுமா?” என கோபத்தில் அழுத்தமாகவும், அதே சமயம் கணீர்க்குரலிலும் கேட்ட மணியின் குரலில் குழப்ப முகத்துடன் பார்த்தான்..
“யமுனாவுக்கு என்னாச்சி மாமா? யமுனா எங்கே?” என வேகமாக எழுந்து கொள்ள முயன்றவனின் தோளில் கை வைத்து அமர்த்தி உட்கார வைத்தான் மணி.
“அவளுக்கு உடம்புக்கு எதுவுமில்லை. ஆனா மனசை எல்லாரும் சேர்ந்து உடைச்சிட்டாங்க” என சொல்லும் போதே மணியின் குரல் தழுதழுத்தது..
ஏதோ நடக்கக்கூடாது நடந்திருக்கிறது என்பது மட்டும் நன்றாக புரிந்தது. ஆனால் என்ன நடந்தது? யமுனாவிடம் இதைப்பற்றி கேட்டால் வாயே திறக்கமாட்டாள் என்பது தணலனுக்கு புரிந்தது.
“என்னாச்சி மாமா? யாருமே எதுவும் என்கிட்ட சொல்லலை. நீங்களாவது சொல்லுங்க யமுனாவுக்கு என்னாச்சி” என்றவனை அழுத்தமாக பார்த்துக் கொண்டே நடந்தவற்றை ஒன்றுவிடாமல் சொல்ல ஆரம்பித்தான்..
தணலன் ஆப்ரேஷன் முடிந்த விஷயமும், ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கும் விஷயமும் ஊரெங்கும் காட்டுத்தீயாய் பரவ ஆரம்பித்தது.
மணியின் குடும்பத்திற்கும் காலை வேளையில் தான் தணலன் பற்றிய செய்தி தெரிய வந்தது. “அச்சோ அத்தானுக்கு என்னாச்சி? நேத்து தான் கல்யாணமாச்சி” என அமிர்தா மணியை பார்த்தாள்..
அப்பொழுதுதான் எழுந்து வந்து சோபாவில் அமர்ந்த மணிக்கு இப்பொழுதே இந்த நொடியே அவனை பார்க்க வேண்டுமென்று தோன்றிட.. அணிந்திருந்த ட்ராக் பேன்ட் மற்றும் டீஸர்ட்டுடன் பைக்கை எடுக்க முயன்றவனின் முன்பாக வந்து நின்றார் மணியின் தாய் கவிதா.
“எங்கே போற மணி?”
“அம்மா தணலனை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி வச்சிருக்காங்க.. நான் போய் பார்த்துட்டு வர்றேன்மா” என பைக்கின் கிக்கரை உதைத்து தள்ள முயற்சிப்பதற்குள் பைக்கின் சாவியை வேகமாக உருவி எடுத்தார் கவிதா.
“அம்மாஆஆ என்ன பண்றீங்க?. சாவியை கொடுங்க”
“என்னடா மச்சான் மேலே புதுசா பாசம் பொங்குது போல. எட்டு வருஷமா உன்கூட வாழ முடியாதுன்னு போன அவளோட தம்பிக்காக நீ பரிதாபப்படுறீயா?. உன் மனசுல நீ என்ன தான் நினைச்சிட்டு இருக்க? என் சொந்த பேரனை கூட மூணாவது மனுஷி மாதிரி கொஞ்சிட்டு இருக்கேன். நம்மளுக்கு தேவையாடா இந்த வாழ்க்கை. எத்தனை தடவை உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன். இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோன்னு. நீ அதுக்கும் ஒத்துவரமாட்டேங்குற” என மூச்சு விடாமல் தன் மனக்குறையை சொல்லிவிட்டு வேகமாக வீட்டுக்குள் சென்றவரை பார்த்து பெருமூச்சு விட்டபடி நின்றிருந்தான் மணி வழக்கமான புலம்பல் தான்..
“அண்ணா” என்ற அமிர்தாவின் குரலில் வேகமாக திரும்பி பார்த்தான்.
“இந்தா இன்னொரு கீ.. நீ வண்டியை எடுத்துட்டுப் போ அண்ணா. அத்தானை பார்த்துட்டு வந்திடு” என்றதுமே உடனே கிளம்பி சென்று விட்டான் மணி..
வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்த மணிக்கு அங்கு அவன் பார்த்த சூழ்நிலையே வேறுவிதமாக இருந்தது. பார்க்கும் அவனுக்கே மனமெங்கும் வலிக்க ஆரம்பித்தது..