யமுனாவோடு அறைக்குள் நுழைந்த நிறைக்கு பேச்சில்லை.. மூச்சே வரவில்லை. ஏனோ மனதில் ஒரு வித பயம் கவ்விக் கொண்டது முதன்முறையாக..
இதுவரை அன்பை மட்டும் செலுத்தி வருபவர்களையே பார்த்து வளர்ந்தவளுக்கு, யமுனாவின் கண்டிப்பு சற்று பயத்தைக் கொடுத்தது..
“பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை சிறு கண்டிப்புடன் வளர்ப்பது. தங்கள் பிள்ளைகளின் மேல் பாசம் இல்லாமலோ, அன்பு வைக்கத் தெரியாமலோ இல்லை.. பிள்ளைகள் தப்பு செய்தால் கண்டிப்பதற்கு பெற்றவர்கள் இருக்கிறார்கள்.. என பயம் இருக்கும் குழந்தைகள் தவறு செய்ய யோசிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்”..
இப்பொழுது அதே நிலையில் தான் யமுனாவும் இருந்தாள். அவளால் நிறைக்கு அன்பை செலுத்தி அவளை திருத்த முடியும் என்ற நம்பிக்கை படிப்படியாக என்றோ குறைந்து விட்டது.
திருமணம் முடிந்து இந்த பதினைந்து நாட்களில் ஒரு முறை கூட அவள் வேறு யாரையும் பற்றி சிந்திக்கவில்லை. அவளின் தேவைக்கு மட்டுமே பேசினாள். தன் தந்தை என்ற ஒற்றை உறவு மட்டும் போதும் என்று நினைப்புடன் தான் இருந்தாள்..
ஆனால் யமுனாவால் அப்படி இருக்க முடியவில்லை.. அவளுக்கு நிறையை நிறைய மாற்ற வேண்டியிருந்தது.. இதற்கு முன்பு மாற்றியிருக்கலாம். ஆனால் அதுக்கான உரிமை அவளிடம் இல்லை.
வீடு தேடி செல்பவர்களை உதாசீனப்படுத்திய சம்பவங்கள் மோகனாவிற்கும், யமுனாவிற்கும் நிகழ்ந்தது. வீட்டில் நிறையை வைத்துக் கொண்டே ‘இல்லை’ என்று சொல்லிவிட்டனர் தணலன் வீட்டினர் ஒரு முறை..
அன்று மனம் உடைந்த மோகனா தன் பேத்தியை தூரத்தில் இருந்து பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டார்.. அவள் மீது கொள்ளை கொள்ளையாக அன்பு வைத்திருந்தனர் மோகனாவும், யமுனாவும்..
ஆனால் அன்பு மட்டுமே வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்பதை சமீபகாலமாக புரிந்து கொண்டாள் யமுனா. சிறு கண்டிப்புடன் கூடிய பாசம் மட்டுமே நிறையை மாற்றும் என்பதையும் உறுதியாக நம்பினாள்..
நிறையை பற்றிய சிந்தனையில் கட்டிலின் ஒரு ஓரத்தில் யமுனா அமர்ந்திருக்க, அவளுக்கு இடதுபக்கமாக ஒரு ஓரத்தில் நிறை அமர்ந்திருந்தாள்.. அவ்வப்பொழுது யமுனாவை பார்த்துக் கொண்டே, அவளின் முகத்தில் தோன்றிடும் திவீர முக பாவனையில் சற்று பயம் கொடுத்தது.
“எப்பொழுதும் போல அதிரடியாகவும், திமிராகவோ பேசுவதற்கு தோன்றவில்லை”. அதனால் சற்று அமைதியாக அமர்ந்திருந்தாள்.
சிறிது நேரத்தில் வெளியே வந்த யமுனா மோகனாவை தான் நாடி சென்றாள்.. அவரோ சத்தமே இல்லாமல் கொல்லைப்புறத்தில் அமர்ந்திருந்து அழுதுக் கொண்டிருந்தார்..
“தன் பெண்ணின் கல்யாண வாழ்க்கையை தானே சீரழித்து விட்டோமே?” என மனதுக்குள் நினைத்து நினைத்து அழுதுக் கொண்டேயிருந்தார்..
“ம்ம்மா. வீடுன்னு இருந்தா ஆயிரம் பிரச்சினை இருக்கத்தான் செய்யும்.. அதுக்காக எல்லாம் என்னால் பட்டினி இருக்க முடியாது. போம்மா. போய் எடுத்துட்டு வா.. இல்லன்னா விடு நானே பார்த்துக்கிறேன்” என வேகமாக அடுப்படியை நோக்கி செல்ல, அவளுக்குப் பின்னாலேயே எழுந்து மோகனாவும் சென்றார்..
வேறு வழி, அவளின் பின்னால் செல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கு. பூரி சுடுவதற்காக அனைத்தும் தயார் நிலையில் இருந்ததால் சிக்கீரமாகவே பூரி தயாரித்து எடுத்தார்…
“இந்தா சாப்பிடு போ” என்றவள் ஒரு தட்டில் மூன்று பூரிகளை எடுத்து வைத்து விட்டு, நேராக எடுத்துச் சென்று நிறையின் முன்பாக நீட்டினாள்.
மற்ற நேரமாக இருந்திருந்தால் தட்டு பறந்திருக்கும். ஆனால் இப்பொழுது இருக்கும் கடினமான சூழ்நிலை நிறையை அப்படி செய்ய விடவில்லை.
எதுவும் பேசாமல் அமைதியாக தட்டை வாங்கியவள், வேண்டா வெறுப்பாக உண்ண ஆரம்பித்து விட்டாள்.. தணலனுக்கு தயாரித்து வைத்திருந்த கஞ்சியும், சற்று ஒரைப்புடன் கூடிய துவையலையும் எடுத்துக் கொண்டு அடுத்ததாக தனதறைக்கு நுழைந்தாள் யமுனா.
கட்டிலில் அமைதியாக படுத்திருந்தவனின் உடலோ சற்று அலர்ந்து போய்விட்டது.. அவனின் உடல் இருக்கும் சூழ்நிலையில் நன்றாக தூங்கி, ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
ஆனால் நேரமும், காலமும் அவனின் உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கு ஓய்வும் கொடுக்க மறுத்தது. அடுக்கடுக்காக பிரச்சினைகள் அவனை மையப்புள்ளியாய் வைத்து வந்துக் கொண்டிருக்க.. இதில் அவனுக்கு ஏது ஓய்வு?. சற்று சலிப்புடன் தான் உள்ளே வந்து படுத்தான்.
“அத்தான்” என்ற குரலில் மெல்ல எழுந்து அமர்ந்தவனின் முன்பாக நீட்டிய உணவை ஒரு வெறுப்புடன் தான் பார்த்தான்.. அவனின் மனதிற்கு சாப்பாடு என்ற ஒன்று தொண்டையில் இறங்கும் என்று தோன்றவில்லை.
“எனக்கு வேண்டாம் யமுனா. நீ போய் சாப்பிடு”
“என் மேலே கோபமா அத்தான்” என மெல்லிய குரலில் கேட்ட பெண்ணவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தான்..
என்னவென்று சொல்வான்? அவள் மேல் கோபம் என்பதை விட, குற்றவுணர்ச்சி தான் அவனை அதிகமாக கொல்லுகிறது என்பதை.
“இல்லை யமுனா” என்றவனின் முகத்தில் தோன்றிய ஒவ்வொரு உணர்வுகளையும் தனக்குள் படிக்க ஆரம்பித்தாள்..
“இப்போ நடந்த சண்டையை வச்சி நீங்க வருத்தமா இருக்கீங்கன்னு புரியுது. நானும் அதிகமாக பேசியிருக்க கூடாது.. உங்களை ரொம்ப காயப்படுத்துற மாதிரி பேசிட்டேனா அத்தான்” என வருத்தமாக சொன்னாள்..
“இல்லை யமுனா நான் தான் இந்தக்கல்யாணம் பண்ணியிருக்கவோ கூடாது. இந்தக் கல்யாணம் நடந்ததில் இருந்தே பிரச்சினை தான். அதுவரைக்கும் நீ, அத்தை, நிறை எல்லாரும் நிம்மதியா சந்தோஷமா தானே வாழ்ந்திருப்பீங்க. எப்போ நான் தாலி கட்டினேனோ அப்போ ஆரம்பிச்சது பிரச்சினை” என்றவனின் குரல் வேதனை நிரம்பி வழிந்தது
“இல்லை அத்தான். நீங்க ஒன்னும் கட்டாயக் கல்யாணம் பண்ணலையே. என்னோட விருப்பத்தோட தான் இந்தக் கல்யாணம் நடந்தது. எனக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம் தான்” என்றவளை புருவம் இடுங்க பார்த்தான்..
“ஏன் யமுனா பொய் சொல்லுற?. உன் வயசுப் பொண்ணுங்களுக்கு கல்யாணம் முடிஞ்சதும் ஆயிரம் கனவுகள் இருக்கு. புருஷனோட வெளியே போகணும். புருஷன் கை கோர்த்து ஊரையே வலம் வரணும். இப்படி சின்ன சின்ன ஆசைகளும், சந்தோஷங்களும் இருக்கும். அதுல நீ எதையும் அனுபவிக்கலையே யமுனா. எல்லாத்துக்கும் காரணம் நான் உன் கழுத்துல கட்டுன தாலி மட்டுந்தானே” என வருத்தம் நிறைந்த வேதனையாக பேசியவனின் குரலே கரகரத்து ஒலித்தது..
“அத்தான். நீங்க இதெல்லாம் தான் சந்தோஷம்னு நினைக்குறீங்கன்னா. இனிமேல் நாம அப்படியே இருக்கலாம்.. நீங்க நான் நிறை எல்லாருமே சந்தோஷமாக வெளியே போகலாம்.. நீங்க இப்போ இருக்கிற சூழ்நிலையை மனசுல வச்சிட்டு பேசுறீங்க? ஆனா நான் இனிமேல் வர்ற காலம் நம்மளுக்கானதா இருக்கணும்னு பேசுறேன். அதுக்கு இப்போ சாப்பிடுங்க. தெம்பா இருங்க. உடம்பை பார்த்துக்கோங்க” என்றவள் ஸ்பூனில் எடுத்து கஞ்சியை அவனுக்கு புகட்டினாள்..
ஏனோ அந்த நிமிடம் இருவரும் மட்டுமே இந்த உலகத்தில் இருப்பதாய் தோன்றியது. அவளின் செய்கைக்கு உடன்பட்டு சாப்பிட்டு முடித்தவன். “நீ சாப்பிட்டீயா யமுனா?”
“இல்லை இனிதான் சாப்பிடணும். அம்மாவும் நானும் சேர்ந்து சாப்பிட்டுக்கிறோம்.. அப்புறம் கோயிலுக்கு போயிட்டு வரலாமா?” என சற்று தயங்கியவாறே கேட்டாள்..
“போகலாம் எனக்கும் மனசுக்கு என்னமோ மாதிரியிருக்கு” என்றவனின் குரலில் அவ்வளவு வலி..
“எல்லாமே சரியாகிடும் அத்தான். ஒரே நாள்ல எல்லாம் மாறணும்னா எப்படி. கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் சரி பண்ணிடலாம்” என்றவள் வெளியே போக அங்கு கைகளை பிசைந்து கொண்டு நின்றாள் நிறை..
“என்னாச்சி நிறை?”
“இல்லை குளிக்கணும். டிரஸ் வேணும்” என மெல்லிய குரலில் முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டு பதில் சொன்னவளை பார்த்து பெருமூச்சுதான் விட்டாள்..
தனதறைக்கு சென்ற யமுனா அங்கிருந்த அலமாரியை திறக்க, அதில் ஒரு அடுக்கு முழுவதும் நிறைக்கு தேவையான ஆடைகள் தான் இருந்தது. அதை சிறு புருவ முடிச்சுடன் தான் பார்த்தான் தணலன்.
அதிலிருந்து ஒரு பெரிய கவுன் ஒன்றை எடுத்தாள்.. அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கவுன் பார்ப்பவர்களின் கண்களை பறிக்கும் விதமாக இருந்தது. நிச்சயமாக அதன் விலை ஐயாயிரத்தை தாண்டும் என்பதில் சந்தேகமில்லை.
“இவ்வளவு விலை கொடுத்து எடுக்க வேண்டுமா?” என்று தோன்றினாலும்.. எப்பொழுது எடுத்த ஆடை இது? என்ற எண்ணமும் தோன்றியது..
ஆடையை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியே சென்ற யமுனா அங்கிருந்த நிறையிடம் கொடுத்தாள்.
அடர்ஊதா நிறத்தில் வெள்ளை நிற கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த கவுனை பார்த்ததுமே நிறைக்குப் பிடித்து போனது..
தணலனின் சிந்தனை தான் அவளுக்கும் தோன்றியது. சிறு யோசனையுடன் யமுனாவை பார்த்தாள்..
அவளின் சிந்தனை படர்ந்த முகத்தைப் பார்த்தே அவளின் உணர்வுகளை புரிந்துக் கொண்டாள் யமுனா.. “இது உனக்காக எடுத்ததுதான். இதை முன்னாடி கொடுத்தா நீ வாங்கிக்க மாட்ட. அதான் இப்போ கொடுக்கிறேன்.. என்னோட அலமாரியில் முதல் அடுக்கு முழுக்க உனக்கான டிரஸ் இருக்கு. எந்த டிரஸ் வேணுமோ எடுத்துப் போட்டுக்கோ.. இன்னும் கொஞ்ச நேரத்துல கோயிலுக்குப் போறோம். வந்ததுக்கப்புறம் வேற டிரஸ் மாத்திக்கோ” என்றவள் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
அவர்கள் இருவரும் பேசியது உள்ளிருந்த தணலன் செவிகளில் விழுந்தது. ஏனோ வாழ்க்கையே துலாபாரம் போல் இருந்தது. எந்தப்பக்கமும் தன் நிலையை இருக்கவிடாமல் அங்குமிங்கும் ஊசலாடிக் கொண்டிருப்பதைப் போல் உணர்ந்தான்..
அனைவரும் தயாராகி வர மோகனாவும் அவர்களுடன் புறப்பட்டார்.. ஏனோ தன் பெண்ணின் வாழ்க்கைக்காக வேண்டிக் கொள்வதை விட அவருக்கும் வேறொன்றும் தோன்றவில்லை.
“கார் யார் ஓட்டுவது?” என சிந்தனையுடன் தணலன் வெளியே வர.. அங்கு டிரைவர் இடத்தில் வேறு ஒருவர் அமர்ந்திருந்தார்..
தணலன் திரும்பி யமுனாவை பார்க்க, “தப்பா நினைச்சிக்காதிங்க அத்தான்.. உங்களுக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க.. அதான் கார் நீங்க ஓட்ட வேண்டாம்.. இவர் எனக்கு தெரிஞ்ச அண்ணா தான். நல்லா மெதுவா கார் ஓட்டுவாரு. அதான் கூப்பிட்டேன்” என்றவளிடம் மறுத்துப் பேச தோன்றாமல் தலையை மட்டும் ஆட்டினான்..
நால்வரும் புறப்பட்டு சென்றது காரைக்குடியில் மிகவும் பிரபலமான ஸ்ரீஆயிரம் கண்ணுடையாள் கோவிலுக்குத் தான்..
ஏனோ மனதில் உள்ள சஞ்சலம் தீரவே அழைத்து வந்தாள் போல. அந்தக் கோயிலின் வாயிலை மிதித்ததும் ஒரு வித அமைதியும், மனநிறைவும் தோன்றியது..
அனைவரும் இறங்கிட நிறையும் அவர்களுடன் இறங்கினாள்.. கோவிலுக்கு செல்வதற்காக அனைவரும் செருப்பை காரினுள் கழற்றிவிட்டதால் தணலனும் நிறையும் முன்னால் கோவிலுக்குள் சென்று விட்டனர்..
போகும் இருவரையும் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் நிறை. “கங்கா உயிரோடு இருந்திருந்தால் தானும், தன் அம்மாவுடன் இப்படித்தான் அலைந்திருப்போம்” என்ற ஏக்கம் அவளுக்குள் தோன்றிட.. விழிகளில் லேசான கலக்கத்துடன் கூடிய தவிப்பும் தென்பட்டது..
வரும் பொழுது அர்ச்சனை கூடையுடன், மூன்று முழ மல்லிகைப்பூவும் இருந்தது. காலையில் நடந்த பிரச்சினையில் பக்கத்து வீட்டில் வாங்கிய பூவை கூட மறந்து வந்துவிட்டனர்..
வாங்கி வந்த பூவை நிறைக்கும், யமுனாவிற்கும் சரிசமமாக பங்கீட்டு கொடுத்தார் மோகனா. நிறைக்கு முதலில் பூவை வைத்துவிட்டு, யமுனாவிற்கு மோகனாவே பூவை வைத்து விட்டார்.. நால்வரும் ஒன்றாக சேர்ந்து சன்னிதானத்தில் முன்பு நின்றனர்..
அன்று வார நாட்கள் என்பதால் கோயிலில் அவ்வளவாக கூட்டமும் இல்லை. சத்தமும் இல்லை. ஒரு வித அமைதியுடன் காணப்பட்டது..
தணலனுக்கு அந்த அமைதி தான் மிகவும் பிடித்திருந்தது. கோயிலுக்கு வருவதற்கே யோசிப்பவன், அன்று கங்காவிற்காக வந்தான். இன்று யமுனாவிற்காக வருகிறான்.
வருடங்கள் பல கடந்தாலும் அவனால் கங்காவை என்றும் மறக்க இயலாது என்பது நிதர்சனமான உண்மை. அதே சமயம் அவளை நம்பி வந்த யமுனாவை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதும் தவறு என்று புரிந்தது..
நீண்ட நேரம் அந்தக் கோயிலில் தான் இருந்தனர்.. அனைவரிடத்திலும் ஒரு வித அமைதி தான் குடிகொண்டது..
கோயிலில் இருந்து வீட்டுக்கு வந்தாலும் அந்த அமைதி அனைவரிடத்திலும் இருந்தது.. அந்த நாளே ஒரு வித அமைதியான விடியலாய் முடிந்து விட்டது..
அடுத்த நாள் காலை எழுந்த யமுனா வீடெங்கும் சல்லடை போட்டு தேடிக் கொண்டிருந்தாள் தணலனை தேடி.. அவன் எங்கும் இருப்பதற்கான அடையாளமே இல்லை.
மோகனாவிடம், நிறையிடமும் விசாரித்துப் பார்த்துவிட்டாள்.. இருவருக்குமே தெரியவில்லை என்ற பதில் தான் வந்தது..
தணலனை தேடி சலித்தவள், தணலன் வீட்டிற்கும் சென்றாள் அங்கு இருக்கிறானா? என்பதை தெரிந்து கொள்வதற்காக.. அங்கும் அவன் வரவில்லை என்ற தகவல் தான் கிடைத்தது .
கிட்டத்தட்ட காலைக்கதிரவன் எழும் போது ஆரம்பித்த தேடல், அந்தகாரம் சூழும் இருள் வந்தும் தணலனை தேடும் பணி மட்டும் இன்னும் முடியவில்லை.. தணலனை தேடித் தேடி தளர்ந்து விட்டாள் யமுனா..