கங்கா மோகனாவின் வீட்டிற்கு வந்திறங்கினாள் எப்பொழுதும் போல் நிறையுடன் யமுனா விளையாட ஆரம்பிக்க அதையே ஒரு வித ஏக்கத்துடன் பார்க்க ஆரம்பித்தாள் கங்கா.
அவளின் ஏக்கமான பார்வையை பார்த்த யமுனா அவளின் அருகில் வந்து அமர்ந்தாள். யமுனாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு வந்து நின்றாள் நிறை…
“சித்தி சாய்ந்தடம்மா சாய்ந்தாடு விளையாடுவோமா?” என்ற நிறையினை தோளில் சுமந்து கொண்டு மெல்ல மேலும் கீழும் ஆட்டிட, கிளிப்பிள்ளை அவளோ கிளுக்கென சிரித்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தியது…
“யமுனா எனக்கொரு சத்தியம் பண்ணுவீயா?”
“சத்தியமா? இப்போ எதுக்கு க்கா கேட்குற?” என்ற யமுனாவின் கையினை எடுத்து தன் தலையில் வைத்தாள்..
அவளின் செய்கையை சற்று திகைப்புடன் பார்த்தாள் யமுனா. “அக்கா என்ன பண்ற? விடு கையை” என கங்காவின் கையுடன் சிக்கித் தவிக்கும் தன் கரத்தினை உருவ முயற்சிக்க, அவளோ விடாப்பிடியாக பிடித்து வைத்திருந்தாள்…
“என் மேல சத்தியம் பண்ணு. அப்போ தான் நான் உன்னை விடுவேன்”
“ப்ச்ச்.. என்ன சத்தியம் அதைச் சொல்லு முதல்ல. அப்புறம் நான் பண்றேன்” என சற்று எரிச்சல் மிகுந்த குரலில் கூறினாள்…
“நான் ஒரு வேளை செத்துப் போயிட்டாலும் என் பொண்ணை நீ உன் பொண்ணா பார்த்துக்கணும். அவளுக்கு ஒரு அம்மாவா நல்லது கெட்டது எல்லாமே நீதான் சொல்லிக் கொடுக்கணும்” என்ற கங்காவினை புருவம் சுருக்கிப் பார்த்தாள்.
“என்ன பேசுற அக்கா நீ? என்னைக்கும் நிறை எனக்குப் பொண்ணுதான். அவளுக்கு நல்லது கெட்டது எல்லாமே நான் சொல்லிக் கொடுப்பேன். ஆனா நீ இந்த மாதிரி இன்னொரு தடவை பேசாதே. நிறையை பத்திரமா பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு. இது சத்தியம் போதுமா” என்ற யமுனாவின் தலையை கோதிவிட்டாள்…
“நீயும் எனக்குப் பொண்ணு மாதிரி தான் யமுனா. நீ எங்கே இருந்தாலும் சந்தோஷமா வாழணும். தணலன் மாதிரி ஒரு வாழ்க்கை துணை உனக்கு கிடைக்கணும்” என வேண்டுதலை மனதில் வைத்தாள்…
கங்காவின் யோசனை படர்ந்த முகத்தை பார்த்த யமுனா, “அக்கா நீ எதையும் மனசுல போட்டு யோசிக்காதே. போ போய் ரெஸ்ட் எடு” என்றவளின் வார்த்தையில் வீட்டினுள் சென்றாள்.
கங்காவும் நிறையும் ஒரே அறையில் தூங்கிட, மோகனாவும் யமுனாவும் ஒரே அறையில் தூங்கினார்கள்…
இரவு நேரம் கழிவறை செல்வதற்காக எழுந்த யமுனாவின் விழிகளில் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்த கங்கா தான் கண்ணுக்குள் தெரிந்தாள்…
“அக்கா இன்னும் தூங்காம என்ன பண்ற?”
“தூக்கமே வரலை யமுனா. அதான் கொஞ்ச நேரம் இப்படி நடமாடிட்டு போகலாம்னு வந்தேன்”
“ஏன்க்கா அத்தான் நினைப்பா இருக்கா?. நான் வேணும்னா அத்தானுக்கு போன் பண்ணி சொல்லவா?”
“ஹேய் லூசு. அதெல்லாம் இல்லை. அவர் மீட்டிங்குக்கு போயிருக்காரு. நாளைக்கு வந்திருவாங்க” என யமுனாவை சமாதானப்படுத்தி விட்டு தன்னறைக்கு சென்று கதவை அடைத்து விட்டாள்…
கங்கா என்னதான் சமாதானம் கூறினாலும் யமுனாவிற்கு கங்காவின் மேல் சிறிது சந்தேகம் வந்தது.
தணலன் கோயம்புத்தூருக்கு சென்று ஒரு வாரத்திற்கு மேலாக கடந்து விட்டது. சென்ற இடத்தில் வேலை சரியாக முடிவடையாத நிலையில் அவனாலும், தேவாவாலும் உடனே வரமுடியவில்லை.
அன்றும் இரவு நேரம் கங்கா தூங்காமல் முழித்திருந்தாள். அவளின் செய்கையை உன்னிப்பாக யமுனா கவனிக்க ஆரம்பித்தாள். கங்காவின் செய்கையில் நிறைய மாற்றங்கள் தெரிந்தது.
கங்கா எதையோ மனதுக்குள் வைத்து கொண்டு மருகி தவிக்கிறாள் என்பது மட்டுமே யமுனாவிற்கு புரிந்தது. இரவு நேரத்தில் கங்கா எதையோ மறைத்து பின்னால் எடுத்துச் செல்வதை பார்த்த யமுனாவிற்கு அவளின் சந்தேகம் எல்லாம் ஊரஜிதமானது…
கங்கா மெல்ல ரிப்போர்ட்டை பின்பக்கம் இருந்த கிணற்றின் பக்கத்தில் குழி தோண்டி புதைத்து வைத்துவிட்டாள்…
யாரும் தன்னை பார்க்கவில்லை என்றெண்ணியவள் வேகமாக அங்கிருந்து தன்னறைக்கு சென்று விட்டாள். அவள் சென்ற சில நிமிடங்களில் யமுனா வேகமாக அங்கிருந்த ரிப்போர்ட்டை எடுத்தாள்.
அதில் இருந்ததை வாசித்துப் பார்த்தவளுக்கு தலையே தட்டாமாலை சுற்றுவது போல் இருந்தது.
“மறுபடியும் ஒரு மரண போராட்டமா?” என தவிப்புடன் கங்காவை பார்க்க அவளின் அறைக்குச் சென்றாள். கங்காவோ நல்ல நித்திரையில் இருந்தாள்.
இந்த ரிப்போர்ட்டை பற்றி அத்தானுக்கு தெரியுமா? தெரிந்திருந்தால் கங்காவை இப்படி விட்டுருப்பாரா? மேற்கொண்டு சிகிச்சை அல்லவா தொடங்கியிருப்பார்? என யோசித்துக் கொண்டே அன்று இரவு முழுவதும் தூங்காமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
அடுத்த நாள் காலையே டாக்டரை பார்ப்பதற்காக வேக வேகமாக புறப்பட்டு வெளியே மருத்துவமனைக்கு சென்று விட்டாள்.
டாக்டரை சந்தித்து யோசனையை கேட்க, “சிகிச்சை ஆரம்பிக்க வேண்டுமென்றால் நோயாளியின் முழு ஒத்துழைப்பு வேண்டும். அப்பொழுது தான் சிகிச்சை முழுமை பெறும். ஆனால் கங்காவோ மேற்கொண்டு சிகிச்சை செய்யவே அஞ்சுகிறாள். இப்படியே போனால் கங்காவின் முடிவு மிக சிக்கீரமாக வந்துவிடும்” என டாக்டர்கள் கையை விரித்துவிட, இதைப்பற்றி கண்டிப்பாக தணலனிடம் பேசியே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தாள்…
அன்று நிறையும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் தான் இருந்தாள். நேராக வீட்டிற்கு வந்தவள், வேகமாக கங்காவின் கையை பிடித்து இழுத்து ஒரு அறைக்கு சென்று கதவை பூட்டினாள்.
அவளின் செய்கையில் திகைத்து நின்றது கங்கா தான். “யமுனா என்ன பண்ற?”
“நீ என்ன பண்ணி வச்சிருக்க அக்கா?” என ரிப்போர்ட்டினை தூக்கி அவள் முன்னால் வீசிட, அதைப் பார்த்த கங்காவிற்கு சற்று திகைப்பு தான்.
ஆனாலும் மனதில் எப்படியும் சாகத்தான் போகிறாம் என்று ஒரு வித அலட்சியம் வந்தது. “சரி இந்த ரிப்போர்ட்டை வச்சி என்ன பண்ணப் போற?” என்ற கங்காவின் குரலில் இருந்த பேதம் நன்றாக புரிந்தது.
“அவருக்கு இதைப்பத்தி ஒன்னும் தெரியாது யமுனா. அவருக்கு மட்டுமல்ல யாருக்குமே இதைப்பத்தி எதுவும் தெரியாது. நானும் யார்க்கிட்டையும் சொல்லப்போறது இல்லை. நீயும் சொல்லாதே” என கண்டிப்பான குரலில் கூறிய கங்காவினை அழுத்தமாக பார்த்தாள் யமுனா…
“கண்டிப்பா நான் அத்தான்க்கிட்ட சொல்லத்தான் போறேன். நீ ட்ரிட்மெண்ட் பண்றதுக்கு ரெடியா இரு” என எச்சரிக்கும் குரலில் சொல்லிவிட்டு வெளியே செல்ல முயன்றாள் யமுனா…
“நீ உன் அத்தான்க்கிட்ட சொன்னா, அப்புறம் இந்த கங்காவோட பொணத்தை தான் நீங்க எல்லாரும் பார்க்க வேண்டியது இருக்கும். நியாபகம் வச்சிக்கோங்க” என உறுதியாகவும், அழுத்தமாக சொல்லிய கங்காவினை கோபத்தில் அடிப்பதற்காக கையை ஓங்கிவிட்டாள் யமுனா.
“என்ன பேசுற க்கா நீ? யாரைப் பத்தியும் கவலைப்படாம பேசுற?. உன்னை நம்பி நிறை இருக்கா. அத்தான் இருக்காரு. இதெல்லாம் உனக்கு நியாபகத்திலேயே இல்லையா?” என கெஞ்சும் குரலில் கேட்க ஆரம்பித்தாள்…
“என்னால முடியலை யமுனா. நானும் எவ்வளவு தான் போராடுவேன். ஒவ்வொரு தடவை சிகிச்சைக்கு போகும் போதும் உடம்பு ரணமா வலிக்குதுடி. மறுபடியும் அதே மாதிரி சிகிச்சைன்னு நினைச்சாலே தாங்க முடியலை. இதுக்கு நான் செத்தே போயிடுறேன்னு சொல்லத் தோணுது. உனக்கொன்னு தெரியுமா? எனக்கு ட்ரிட்மெண்ட் கொடுக்க வந்த டாக்டரோடு என்னை சம்பந்தப்படுத்தி பேச ஆரம்பிச்சிட்டாங்க. எல்லாம் இந்த நோயால தான். நான் தப்பான பொண்ணுன்னு என் காது பட பேசுறாங்க. என்னால முடியலை” என ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள் கங்கா..
ஜன்னலில் இருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நிறைக்கு அவர்கள் பேசிக்கொள்வது கேட்கவில்லை என்றாலும் தன் தாயை யமுனா கொடுமைப்படுத்துவதாக தான் தெரிந்தது.
“சரி அக்கா சொல்றவங்க என்ன சொன்னாலும், அத்தான் உன்னை நம்புறாரு. உன் மேல உயிரே வச்சிருக்காரு. யாரோ ஏதோ சொன்னாங்கன்னு நீ இப்படி பண்ணலாமா? ப்ளீஸ்க்கா ட்ரிட்மெண்ட்க்கு ஒத்துக்கோ”
“என்னாலையும் யார்க்கிட்டையும் எதையும் மறைக்க முடியாது. நான் இப்போவே அத்தான் கிட்ட சொல்லத்தான் போறேன்” என்றவள் வேகமாக தன் போனை எடுக்க. அதை சுக்குநூறாக உடைத்து எறிந்தாள் கங்கா.
“நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். நீ பண்றதை தான் பண்ணுவேன்னு சொன்னா என்ன அர்த்தம்?. என் வாழ்க்கையில தலையிட உனக்கென்ன உரிமை இருக்கு?” என வெடுக்கென்று கேட்ட கங்காவின் வார்த்தையில் கண்ணீரே வந்துவிட்டது யமுனாவிற்கு.
யமுனாவின் கலங்கிய விழிகளை பார்த்த பின்பு தான், தான் உரைத்த வார்த்தையின் வீரியத்தையே அறிந்தாள் கங்கா.
“சாரி. சாரி யமுனா” என்பதற்குள் அவ்விடத்தை விட்டு அகன்று விட்டாள் யமுனா. ஆனால் தணலனிடம் இதைப்பற்றி பேச வேண்டும் என உறுதியாக இருந்தாள்…
ஆனால் அடுத்த நாளே கங்கா, தூக்கில் தொங்கியவாறே தன் முடிவை தானே தேடிக்கொண்டாள் யாருமே எதிர்பார்க்காத வண்ணம்… தணலன் வரும் நேரம் பார்த்தது கங்காவின் தூக்கில் தொங்கிய சடலத்தை தான்.
தணலன் சில்லு சில்லாய் உடைந்து போனான். கங்காவுடன் வாழ வேண்டும் என அவன் பல கனவுகள் கண்டிருக்க, அவளின் முடிவில் இடியென அமர்ந்து விட்டான்.
கங்காவின் சடலத்தை பார்த்து அவன் அழுத அழுகை பார்ப்பவர்களின் மனதையே கலங்கும் வண்ணம் இருந்தது.
தன் பழைய நினைவுகளை நினைத்துக் கொண்டிருந்தவன் யமுனா அறைக்குள் வந்ததை கூட உணரவில்லை.
அன்றைய நாள் முழுவதும் ஒரு வித அமைதியிலேயே தணலனுக்கு கழிந்தது