அவளின் கண்களில் அவ்வளவு காதல். காதலோடு சேர்ந்து மன்னிப்பையும் சேர்த்து யாசகமாய் கேட்டது.
“நீ எதையும் பத்தி யோசிக்காம தூங்கு” என்றவளின் அருகில் படுத்திருந்த தணலனை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்…
இரவு நீண்ட நேரம் ஏதோ சிந்தனையில் இருந்த தணலன், விடி விளக்கின் வெளிச்சத்தில் மெல்லிய ஒலி கேட்க மெல்ல திரும்பி யமுனாவை பார்த்தான்…
அழுதுக் கொண்டே உறங்கியிருப்பாள் போல விழிகள் முடியிருந்தது. ஆனால் உதடுகளோ எதையோ முணுமுணுத்துக் கொண்டேயிருந்தது…
என்ன சொல்கிறாள் என்று காதை கூர்மையாக்கி அவளின் உதட்டின் அருகில் கொண்டு சென்றான். “நான் தப்பான பொண்ணு இல்லை. நான் தப்பான பொண்ணு இல்லை அத்தான்” என உதடுகள் ஓயாமல் இதையே முணுமுணுத்துக் கொண்டேயிருந்தது.
“யமுனா. யமுனா” என அழைத்துக் கொண்டே அவளின் கையினைப் பிடித்ததும் தான் தாமதம் சட்டென்று எழுந்து அமர்ந்தான்.
வேகமாக லைட்டை ஆன் பண்ணியவன் யமுனாவின் அருகில் செல்ல, யமுனாவின் உடலோ காய்ச்சலில் கொதித்துக் கொண்டிருந்தது.
“யமுனா. யமுனா” என்றவனின் குரல் கூட அவளின் செவியில் விழவில்லை. மெல்ல அவளின் கன்னத்தினை தட்டி எழுப்பி அமர வைத்தான்.
“அத்தான். நான்” என்பதற்குள் அவளின் முதுகோடு தன் கரத்தினை கொடுத்து மெதுவாக அமர வைத்து, காய்ச்சல் மாத்திரை தேடி எடுத்துக் கொண்டு வந்தவன் அவளிடம் தண்ணீரையும், மாத்திரையையும் கொண்டு வந்து நீட்டினான்…
“குடி யமுனா” என நீட்டிய டம்ளரை வாங்கி பருகியவள், மெல்ல கண்களை மூடி தூங்க ஆரம்பித்தாள். விழிகள் உறங்கவில்லை என்பதை அவளின் கருமணிகள் காட்டிக்கொடுத்தது…
சிறு சிரிப்புடன் அவளின் அருகில் சென்று படுத்தான். அடுத்த இரண்டு நாட்கள் அவளை அக்கறையோடு பார்த்துக் கொண்டான்.
இரண்டு நாட்களுக்கு பின் சனிக்கிழமை அன்று, நிறை யமுனா தணலன் மூவரும் மட்டும் காரைக்குடியில் பிரபலமான கோயிலுக்கு சென்றனர்…
அங்கிருந்த கருவறையில் நீண்ட நேரம் கண்களை மூடியபடி நின்றுக் கொண்டிருந்தான் தணலன். அவனின் முகத்தில் அப்படியொரு அமைதியும், தெளிவும் இருந்தது.
காணாமல் போன அன்று அவனிடம் இருந்த அமைதியும், தெளிவும் இன்று தெரிந்தது…
ஐயர் வந்ததும் கண்களை திறந்தவன், தட்டில் தட்சணையிட்டு அம்மன் பெயரில் பூஜை செய்திருந்த அர்ச்சனை தட்டையும் வாங்கிக் கொண்டான்…
அதில் இருந்த குங்கமத்தை எடுத்தவன் இயல்பாய் நிறையின் நெற்றியில் வைத்து விட்டான். யமுனாவும் அர்ச்சனை தட்டில் இருந்த குங்குமத்தை எடுப்பதற்காக நீட்டிய கரங்களை தணலன் அழுத்தமாக பிடித்துக் கொண்டான்…
‘ஏன்’ என்ற கேள்வியுடன் அவனை ஏறிட்டுப் பார்க்க, அவனோ இயல்பாய் யமுனாவின் நெற்றியில் குங்குமம் வைத்தவன் உச்சிவகுட்டிலும் குங்குமம் வைத்து விட்டான்.
ஒரு நிமிடம் என்ன நடந்தது என்பதையே உணர முடியாத பேதையாய் அசைவற்று நின்று விட்டாள் யமுனா. தன் நெற்றியில் குங்குமம் வைத்தாரா? இதன் அர்த்தம் என்ன? என்னை ஏற்றுக் கொண்டாரா? இல்லை மன்னித்து விட்டாரா? என தவித்து நின்றவளின் கரங்களோடு கரம் கோர்த்து நின்றான்..
‘இனி எந்நிலையிலும் உன்னை கைவிடமாட்டேன்’ எனபதாய். பிரகாரத்தை சுற்றி முடித்தவர்கள் தெப்பக்குளத்தின்படிக்கட்டில்அமர்ந்திருந்தனர்…
“நான் காணாமல் போன அன்னைக்கு இந்தக்கோயிலுக்கு தான் வந்திருந்தேன்” என்ற தணலனை தான் இருவரும் திரும்பி பார்த்தனர்…
“இந்தக்கோயிலுக்கா?”
“ம்ம். ஆமா. ஏனோ மனசே அன்னைக்கு சரியில்லை. திக்கற்றவங்களுக்கு தெய்வமே துணைங்கிற மாதிரி அன்றைய நாள் முழுவதும் இங்கே தான் இருந்தேன். இந்த தெப்பகுளத்துல தான் ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்தேன். அன்னைக்கு கோயில்ல விசேஷம் போல் அவுங்க கொடுத்த அன்னதான சாப்பாடு தான் சாப்பிட்டேன்” என்ற தணலனை பேரதிர்ச்சியுடன் கண்கள் விரிய பார்த்தாள்.
எவ்வளவு பெரிய பணக்காரன்? இவர் நினைத்தால் எத்தனையோ பேருக்கு சாப்பாடு போடலாம். ஆனால் இவரே கையேந்தி சாப்பிட்டுருக்கிறார் என்பதை நினைக்கும் போது உள்ளுக்குள் பெரும் வலி தோன்றியது.
எவ்வளவு கஷ்டங்கள் மனசில் இருந்தாலும் இந்தக்கோயில்ல ஒரு வித அமைதியும், தெளிவும் கிடைச்சது. ஏனோ மனசு தடுமாறும் வேளையில் எல்லாம் இங்கே கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போக ஆரம்பிச்சேன்.
அதுக்கப்புறம் என் வாழ்க்கையில் எல்லாமே நல்லதே நடக்கிறது மாதிரி ஒரு உணர்வு.
“அன்னைக்கு நீ என்னால பட்ட கஷ்டத்துக்கு என்னை மன்னிச்சிடு யமுனா” என்றவனின் வார்த்தையில் மேலும் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள் யமுனா…
அதுவே அதிர்ச்சி என்றால் அடுத்த பேரதிர்ச்சி அவள் தலையில் இடியாய் வந்து விழுந்தது.
“என்னை மன்னிச்சிருங்க” என்ற நிறையின் குரலில் சட்டென்று திரும்பி பார்த்தாள் யமுனா. நிறையின் மன்னிப்பு அவளுக்கு பிரமிப்பாக இருந்தது.
“மன்னிப்பா எதுக்கு நிறை?” என தணலன் தான் தன் திருவாய் திறந்து கேட்டான். யமுனா தான் பேச்சற்ற பாவையாக அமர்ந்திருக்கிறாளே… தகப்பனும் மகளும் கொடுத்த அதிர்ச்சியில் இருந்தே அவள் இன்னும் மீளவில்லை.
“நான்தான் உங்களை புரிஞ்சுக்காம பேசிட்டேன். நடந்துக்கிட்டேன். நீங்கதான் எங்க அம்மாவை கொன்னுட்டீங்கன்னு நினைச்சிட்டேன். உங்களை எவ்வளவு கஷ்டப்படுத்த முடியுமோ? அந்தளவுக்கு கஷ்டப்படுத்தியிருக்கேன். என்னை மன்னிச்சிருங்க” என்ற நிறையை இருவருமே சற்றும் புதிராக பார்த்தனர்…
“நிறை மன்னிப்பெல்லாம் தேவையில்லை. ஆனா எப்படி இந்த மாற்றம்?” என்ற யமுனாவை நிமிர்ந்து பார்த்தாள்…
“அம்மா ஏன் இறந்து போனாங்கன்னு அப்பாக்கிட்ட கூட மறைச்சிட்டீங்கள்ல” என்ற நிறையை யமுனா விக்கித்து பார்த்தாள்…
ஆம் கங்காவின் ரிப்போர்ட்டை தன் கபோர்டில் மறைத்தே வைத்திருந்தாள். அவள் இறந்தபின்பு அதைப்பற்றி தணலனிடம் சொல்ல யமுனாவிற்கு மனமில்லை.
நிறை அவளுக்கு தேவையான உடையை யமுனாவின் கபோர்டில் தேடும் பொழுதுதான் கங்காவிற்கு இருக்கும் நோயை பற்றி அறிந்து கொண்டாள். அதைப்பற்றி மோகனாவிடம் கேட்க, அவருக்குமே அதைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை என்பது புரிந்தது.
எந்த விஷயம் தணலனுக்கு தெரியக்கூடாது என்று எண்ணினாளோ? அதையே நிறை கூறியதும் திகைப்புடன் திரும்பி தணலனை தான் பார்த்தாள்…
தணலனும் நிறையின் வார்த்தையில் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீ என்ன சொல்ல வர்ற நிறை. எனக்குப் புரியலை. கங்கா எதுனால இறந்து போனா?”
“நீங்க இருங்கப்பா. நான் உங்களுக்கு காட்டுறேன்” என்ற நிறை தெப்பக்குளத்தில் இருந்து வேகமாக நடந்து கோயிலுக்கு வெளியேவந்தாள். காருக்குள் வைத்திருந்த பைலை எடுத்துக் கொண்டு நேராக தணலன் முன்பாக நீட்டினாள்…
அவள் நீட்டிய பைலை வாங்கியவன் ஒவ்வொரு பேப்பராக படிக்க ஆரம்பித்தவனுக்கு, முகத்தில் ஓராயிரம் கலவையான உணர்வுகள்…
கண்கள் சட்டென்னு கண்ணீரில் கசிந்தது. “கங்கா” என்ற மனதோடு அழைத்தவனின் அருகில் சென்று அமர்ந்தாள் யமுனா…
“அத்தான்” என்ற யமுனாவை கலங்கிய விழிகளுடன் ஏறிட்டுப் பார்த்தான்…
“என் கங்கா இவ்வளவு கஷ்டம் அனுபவிச்சிருக்கா. நான் அவளுக்காக எதுவும் செய்யலையே”.
“உங்களை மாதிரி ஒருத்தர் கிடைச்சதே அவளுக்கு அதிஷ்டம் தான் அத்தான். அவ்வளவு கஷ்டத்துலையும் நீங்க அவளை தாங்கியிருக்கீங்க?. எவ்வளவு செலவு பண்ண தயாரா இருந்தீங்க. ஆனா அவ தான் யாருக்கும் கஷ்டம் கொடுக்கக்கூடாதுன்னு அவளோட முடிவை அவளே தேடிக்கிட்டா” என்ற யமுனாவின் விழிகளிலும் கண்ணீர் நிறைந்து இருந்தது.
“அம்மாவை நீங்க கொலை பண்ணலைன்னு சந்தோஷப்பட்டாலும், உங்களை மனப்பூர்வமா ஏத்துக்க எனக்கு இன்னும் கொஞ்ச நாளாகும். அதுவரைக்கும் காத்திருப்பீங்கள்ல” என்ற நிறையை ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்…
அவளின் இந்த மனமாற்றமே போதுமானதாக இருந்தது யமுனாவிற்கு. இன்னும் சில காலங்களில் தன்னை நன்றாக புரிந்து கொள்வாள் என்றே நம்பினாள்…
“சரி வாங்க போகலாம்” என்ற நிறை முன்னால் சென்றிட, அவளின் பின்னால் போய்க்கொண்டிருந்த யமுனாவின் கைகளை அழுத்தமாக பிடித்தான் தணலன்.
அவனின் பிடியில் மெல்ல திரும்பி பார்த்தாள் யமுனா. “என்னாச்சி அத்தான்?”
“என்னையும் மன்னிச்சிடு யமுனா. கல்யாணம் ஆன நாள்ல இருந்து உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். இனி நமக்காக நாம வாழ ஆரம்பிக்கலாம்.நாம கணவன் மனைவியாய் நம்ம வாழ்க்கையை தொடரலாம்” என்ற வார்த்தையில் இதயத்தில் மெல்லிய மழைச்சாரல் வீச ஆரம்பித்தது.
அன்று முழுவதும் ஒரு வித படபடப்புடன் சந்தோஷமான முகத்துடன் அலைந்தாள் யமுனா. மோகனாவிற்கு அவளின் பூரிப்பான முகத்தைப் பார்த்ததில் இருந்து அவ்வளவு நிம்மதி.
இரவு அனைவரும் சாப்பிட்டு முடித்து உள்ளே நுழைய, யமுனாவோ ஏதோ சிந்தனையில் நின்று கொண்டிருந்தாள்…
“என்னாச்சி யமுனா தூங்கலை?”
“ம்ஹும்.. தூக்கம் வரலை” என்றவளுக்கு கோயிலில் வைத்து அவன் சொன்ன வார்த்தையே மீண்டும் மீண்டும் செவியில் வந்து மோதியது…
“என்ன நான் சொன்னதை பத்தியே யோசிச்சிட்டு இருக்கீயா?”
“ம்ம். ஆமா” பட்டென சொன்னவள், சொல்லிய பின்பு தான் அதன் அர்த்தத்தை உணர்ந்து நாக்கை சிறிதாக கடித்தாள்…
“நாம கணவன் மனைவியாய் வாழலாம்னு சொன்னேன்.. அதுக்காக இன்னைக்கே எல்லாம் நடக்கணும்னு சொல்லலையே. உன்னோட மனசுக்கு எப்போ நம்ம வாழ்க்கையை தொடங்கலாம் என தோணுதோ? அப்பவே நாம நம்ம வாழ்க்கையை தொடங்கலாம்” என கட்டிலில் சென்று படுத்துக் கொண்ட தணலனை தான் முறைத்துப் பார்த்தாள் யமுனா.
“இதுக்கு மேல ஒரு பொண்ணு எப்படி சொல்வாளாம்? சரியான மடசாம்பிராணியா இருக்காரே. இப்படியே போனா இவரு சன்னியாசம் தான் போகணும்” என்றவள் அங்கு கட்டிலில் படுத்திருந்த தணலனின் நெஞ்சில் தலை வைத்து படுத்திருந்தாள்… வாயோ முணுமுணுத்துக் கொண்டேயிருந்தது.
அவளின் செய்கையே அவள் உள்ளத்தையும் எடுத்துரைத்தது. இதழ்களில் சிறு கள்ள புன்னகையுடன் அவளின் மோவாயை பற்றி நிமிர்த்திட, இதழ்களில் தோன்றிய படபடப்பும், விழிகளின் சிமிட்டலும் ஒரு வித போதையை ஏற்றியது தணலனுக்கு…
அவளின் மெல்லிய சிவப்பு நிற அதரங்களை, தன் வலிய அதரங்களால் மென்மையாக கொய்ய ஆரம்பித்தான்.
இணைந்த இரு இதயங்களின் சங்கமம் அங்கு அழகாக அரங்கேற ஆரம்பித்தது.
இதழ்களாலும், உடல் மொழியால் மட்டுமல்ல மனதாலும் அவளை ஆழ ஆரம்பித்தான்.
விட்டுக் கொடுத்து வாழும் உறவுகளுக்கிடையே பிரிவினை என்றுமே வராது. நீயா? நானா? என்ற போட்டியை விட உனக்காக நானும், எனக்காக நீயும் விட்டுக் கொடுக்க வேண்டும் என முயற்சித்தாலே கணவன் மனைவிகளுக்கிடையே புரிதலும் அன்பும் வந்துவிடும்…
எப்பொழுது தணலனுக்காக யமுனாவும், யமுனாவிற்கு தணலனும் விட்டுக் கொடுக்க ஆரம்பித்தார்களோ? அப்பொழுதே அவர்களின் உறவு பலமாக ஆரம்பித்து விட்டது. அவர்களின் அன்பிற்கு அச்சாரமிட ஆரம்பித்தது அவர்களின் தாம்பத்ய உறவு.
விட்டுக் கொடுத்து வாழும் உறவுகள் கிடைத்து விட்டால் இல்லறம் என்றுமே துறவறமாகாது.