“இரண்டு மாசமா நாள் தள்ளிப் போயிட்டு இருக்கே மயிலம்மா! ஒரு செக்கப்புக்கு போய்ட்டு வந்துடலாமா?” தேனிலவுக்குச் சென்று வந்த ஆறாம் மாதத்தில் இவ்வாறு கேட்டிருந்தான் இளங்குமரன்.
“ஏன் நீயே செக் செய்ய மாட்டியா? நீ ஜெனரல் சர்ஜனாவும் தானே ட்யூட்டி பார்க்கிற” கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தவளாய் கேட்டாள் இவள்.
“இல்ல மயிலம்மா! உன் விஷயத்துல நான் டாக்டராவே செக்கப் செஞ்சாலும் உன் புருஷனா பதட்டத்தோட தான் செய்வேன். அதான் என்னோட கைனிக் டாக்டர் ஃப்ரண்ட்கிட்ட உன்னைக் கூட்டிட்டு போகலாம்னு நினைச்சேன்” என்றான்.
கட்டிலில் அமர்ந்திருந்தவனின் அருகில் அமர்ந்தவளாய், “இளா மச்சான்! இன்னும் இரண்டு மாசம் போகட்டுமே! இருக்குனு நினைச்சி எதிர்ப்பார்ப்போட பார்த்துட்டு இல்லைனு ஆகிட்டா கஷ்டமா இருக்குமேனு யோசனையா இருக்கு” என்றாள்.
அவளின் உள்ளங்கையைப் பற்றி வருடியவனாய் அமைதியாக அவன் இருக்க, “என்ன ஓடுது உன் மனசுக்குள்ள? இப்பவே டெஸ்ட் எடுக்கலாம்னு நினைக்கிறியா?” எனக் கேட்டாள் இவள்.
இல்லை எனத் தலையசைத்தவனாய், “நான் ஒன்னு சொல்லுவேன்! தப்பா நினைச்சிக்கக் கூடாது” என்று பீடிகையுடன் ஆரம்பித்தான்.
“ஓஹோ தப்பா நினைக்கிற மாதிரிலாம் கூட உனக்குப் பேசத் தெரியுமா? சொல்லுக் கேட்போம்” என்று கேலியாய் சிரித்தாள் இவள்.
“ஓவர் நக்கலாகிடுச்சு உனக்கு” என்று சிரித்தவனாய், அவளை நோக்கித் திரும்பி அமர்ந்து கண்களைப் பார்த்து, “உள்ளே கரு வளரும் போது உன் கூட இணைஞ்சி இருக்கிறது கருவைப் பாதிச்சிடக் கூடாதேன்ற பயமும் பதட்டமும் வந்து புருஷனா என்னை உன் கூட முழு மனசா இணங்க விடாம செய்யுது மயிலம்மா” என்றான்.
“ஓஹோ அதான் நேத்து ஒரு மாதிரி குழப்பத்துலேயே என் மேல புரண்டுட்டு இருந்தியா?” எனச் சிரித்தவளாய், “சரி அப்ப இரண்டு மாசத்துக்கு என்கிட்ட வராதே!” வாய்க்குள் சிரித்தவாறு உரைத்திருந்தாள்.
“ஹான்… அது முடிஞ்சா நான் ஏன் இப்படி உன்கிட்ட புலம்பிட்டு இருக்கப் போறேன்” என்று வாய்க்குள் முனகினான் இவன்.
அவனின் கூற்றில் வாய்விட்டுச் சிரித்தவளாய், “சரி இப்ப நான் ஒன்னு கேட்பேன் நீ தப்பா நினைக்காம கோபப்படாம பதில் சொல்லனும்” என்றவள் கூறவும்,
“கேளு மயிலு” என்றான்.
“உன்னை என்னை விட்டு தள்ளி இருக்க விடாம செய்றது நானா இல்ல என்னோட உடம்பா?” எனக் கேட்டாள்.
அவளின் கேள்வியில் இவன் அவளைத் தீப்பார்வைப் பார்த்து வைக்க, “கோபப்படாம பதில் சொல்லனும்னு சொன்னேன்” என்று அழுத்தமாய் உரைத்தாள் இவள்.
“என்னடி நினைச்சிட்டு இருக்க நீ? உன்னோட முட்டாள்தனமான கேள்விக்குலாம் என்னால பதில் சொல்லிட்டு இருக்க முடியாது” என்றவனாய் விறுவிறுவென வெளியே சென்றிருந்தான்.
அடிவயிற்றில் இருந்து சுறுசுறுவெனக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது அவனுக்கு.
‘என்ன நினைச்சிட்டு இருக்கா இவ என்னைப் பத்தி? இனி அவ பக்கமே போகக் கூடாது’ மனத்தோடு புலம்பிக் கொண்டவனாய் மருத்துவமனை நோக்கி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.
அன்றைய நாள் முழுவதும் இருவருக்குமே மனம் ஒரு நிலையில் இல்லாமல் வேலையே ஓடவில்லை.
மாலை அவள் கல்லூரி விட்டு வெளியே வந்த பொழுது ஈருருளியில் அவளுக்காக வெளியே காத்திருந்தான் இளங்குமரன்.
அவனைக் கண்டதும் கண்கள் மின்ன விறுவிறுவென வண்டியினருகே சென்றவள் அவன் பின்னோடு அமர்ந்து கொண்டாள்.
அவள் அமர்ந்ததுமே வண்டியை இயக்கியிருந்தான் இவன். இருவருமே ஒரு வார்த்தையும் பேசிக் கொள்ளவில்லை.
எங்குச் செல்கிறோமென அவளும் கேட்கவில்லை. இவனும் கூறவில்லை. மெல்லிய காற்றின் தழுவலில் மனத்தின் பாரம் கரைந்து மனம் இறகாய்ப் பறப்பது போன்ற உணர்வில், காலையில் இருந்து இருந்த அழுத்தம் முற்றிலுமாய் நீங்க, பெரும் நிம்மதியுடன் இணையரின் அண்மையைச் சுகித்தவண்ணம் பயணித்திருந்தனர் இருவரும்.
சாமி தரிசனம் முடிந்து கோவிலின் வெளியே சுற்றுப்பிரகாரத்தில் மலைப்பாங்கான அமைப்பில் மலையின் காற்று உடலைத் தழுவும் யாருமில்லாத தனித்த இடத்தில் அமர்ந்தனர் இருவரும்.
“நான் என் ஃப்ரண்ட்க்கிட்ட நாளைக்கு அப்பாய்ட்மெண்ட் வாங்கிட்டேன். நாளைக்குச் செக்கப்புக்குப் போகலாம்” என்றான் இளங்குமரன்.
“நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லலை இளா மச்சான்” என்றவாறு அவனை அவள் நோக்க,
அவளை முறைத்தவனாய், “நான் சொல்லாம உனக்குத் தெரியாதா?” எனக் கேட்டான்.
“நீ சொல்லேன்” கெஞ்சும் பார்வையுடன் அவள் கேட்க, ஆழ்ந்த பெருமூச்சை விட்டுத் தன்னைச் சமன்படுத்தியவனாய்,
“உடம்புல என்ன இருக்கு மயிலு? அது வெறும் சதைப்பிண்டம்! காதலும் ஆசையுமோட உணர்வுபூர்வமா கலக்கும் போது உருவாகும் உணர்ச்சியில் இணையும் போது தான் நிறைவு உண்டாகும் மயிலம்மா!
உன் உடம்புங்கிறதே நீயும், நான் உன் மேல வச்சிருக்க அன்பும் காதலும் தானே மயிலம்மா! வெறும் உடல் இச்சைக்காக விலகி இருக்க முடியலைனு சொன்னா அதை எங்கே வேணாலும் எப்படி வேணாலும் தீர்த்துக்கலாமே! எனக்கு என்னோட உடல் இச்சையும் கூட என் மனைவியோட இணையும் காதலான தாம்பத்தியத்துல தான் முழுமையடையும்” என்றவன்,
“போதுமா விளக்கம்” என்று கடுகடுவெனக் கேட்க, கண்களில் கண்ணீருடன் அவனது புறங்கையைப் பற்றி முத்தமிட்டாள் இவள்.
“ஹே கோயிலு” என்று இவன் கையை இழுத்துக் கொள்ள, அவனது புஜத்தைப் பற்றியவளாய் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“மனசு நிறைஞ்சி கெடக்கு இளா மச்சான். நான் ஏன் இந்தக் கேள்வி கேட்டேன் தெரியுமா? நேத்து எப்பவும் போலச் செக்ஸ் பத்தி நான் பாடம் எடுக்கும் போது அதைக் கேட்ட ஒரு பிரபொசர் மேடம், இப்படியாப்பட்ட ஆண்களே இப்ப இல்லைங்கிற மாதிரி சொல்லிட்டாங்க. ஆண்களுக்கு மனைவினாலே அவளோட உடலும் கூடலும் தான் மனசுக்கு வரும்ங்கிற மாதிரி சொல்லிட்டாங்க. காதலோ அன்போ இல்லாத கூடல் அசிங்கம் அருவருப்பு தானே இளா மச்சான். இவங்க கிட்ட என்னனு பேசி புரிய வைக்குறதுனு விட்டுட்டாலும் உள்ளுக்குள்ளே ஒரு கேள்வி மனசை துளைச்சிக்கிட்டே இருந்துச்சு. அதே நேரத்துல நீயும் என்னை விட்டு விலகி இருக்க முடியலைனு இந்தக் காரணத்தைச் சொல்லவும் இப்படிக் கேட்டுட்டேன்” என்றாள்.
“ஊரு உலகத்துல இருக்கிறவங்க பேசுற பேச்சுக்குலாம் என்னை நல்லா வச்சி செய்றடி நீ” அவளின் தலையில் முட்டியவனாய் சிரித்தான் இவன்.
“சோ சாரி இளா மச்சான். இப்ப நீ வந்து என்னைக் கூப்பிடாம இருந்திருந்தாலும் நானே நேரா ஹாஸ்பிடல் வந்து உன்னைப் பார்த்து சாரி கேட்டிருப்பேன்”
“நாளைக்கு எத்தனை மணிக்கு அப்பாய்ண்ட்மெண்ட்?” எனக் கேட்டாள்.
அவன் நேரத்தை கூறவும், “ஓகே! ஆனா எக்ஸ்பெக்டேஷன் எதுவும் வச்சிக்க வேண்டாம் மச்சான்! பாசிட்டிவ் ஆர் நெகட்டிவ் எது வந்தாலும் உனக்கு நான் இருக்கேன் எனக்கு நீ இருக்கச் சரியா! இந்த மனநிலையிலேயே நாளைக்குப் போவோம்” என்றவளாய் அவனது கரங்களை இறுகப் பற்றினாள்.
அவளின் கரங்களை அழுத்தியவனாய், “உனக்கு நீயே சொல்லிக்கிறியா?” எனச் சிரித்தான் இவன்.
“ஆமா ஒரு மாதிரி படபடப்பா கொஞ்சம் டென்ஷனா தான் இருக்கு” என்றாள் இவள்.
அவளின் தோளைச் சுற்றி வளைத்தவனாய் தட்டிக் கொடுத்தான்.
தாய் தந்தையரிடம் இதைப்பற்றி ஏதும் கூறாமலேயே தான் அவளை அழைத்துச் சென்றான்.
பரிசோதனையின் முடிவு எதிர்மறையாக வர, சட்டென இருவரின் முகமும் சோர்ந்து போனாலும் உடனே தங்களை மீட்டவர்களாய் மருத்துவரிடம் நாள் தள்ளிப் போனதற்கான காரணத்தைக் கேட்டு அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளத் தொடங்கினர்.
ஒரு வருடம் கருத்தரிப்பதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டு அதற்கேற்றவாறு வாழ்வுமுறையை மாற்றியமைத்து வாழ்ந்த பிறகே அவளின் வயிறு நிறைந்து இரட்டை சிசுக்கள் வளருவதாய் அந்த நற்செய்தி இவர்களின் செவியைத் தீண்டி மனத்தை நிறைத்திருந்தது.
உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாகப் பணியில் இருந்து விடுப்பெடுத்து முழு ஓய்வில் இருந்தாள் இளமயில்.
பத்து மாதங்கள் கழித்து ஆணும் பெண்ணுமாய் இரட்டையர்களை ஈன்றெடுத்திருந்தாள் இளமயில்.
பெரும் மகிழ்வுடன் அந்நாளைக் கொண்டாடித் தீர்த்தனர் அக்குடும்பத்தினர்.
அடுத்த மூன்று மாதத்தில் குமரன் குன்றம் கோவிலில் முருகனுக்கு முன்பாகவே குழந்தைகள் இருவருக்கும்,
முத்தமிழ் குமரன்
வள்ளி மயில்
எனப் பெயரிட்டிருந்தனர்.
இளமயில் இளங்குமரனின் இரட்டையர்களின் வளர்ச்சியுடன் தாங்களும் வளர்ந்தவர்களாய் இன்பமாய் நகர்ந்தது காலம்.
பத்து வருடங்களுக்குப் பிறகு!
இளங்குமரன் சூப்பர் மார்க்கெட் இரண்டு மாடிக் கட்டடமாய் விரிவாக்கம் செய்யப் பெற்று உயரமாய் நின்றிருந்தது. முதல் மாடியில் ஃபேன்ஸி பொருள்களையும், இரண்டாம் மாடியில் ஃபர்னிச்சர் பொருள்களையும் விற்பனைக்கு வைத்திருந்தனர்.
அந்தப் பேரங்காடியினருகில் அதே போன்று இரு மாடிக் கட்டடமாய் உயர்ந்து நின்றிருந்தது அம்பிகா மருத்துவமனை.
மருத்துவமனையின் வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும், வலது புறம் இளமயில் மருந்தகம் என்ற பெயர்ப்பலகையுடன் மருந்தகக் கடை இருக்க, அதனைப் பார்த்தவாறு உள்ளே சென்ற நோயாளியான அறுபது வயது மதிக்கத்தக்க தாத்தாவுடன் வந்திருந்த பதின்மூன்று வயது பேத்தி, அங்கு வரவேற்பறையின் சுவற்றில் பெரியதாக மாட்டப்பட்டிருந்த அந்தப் பலகையைப் பார்த்தாள்.
அம்பிகா மருத்துவமனை என்று எழுதப்பட்டு அதன் கீழே நிறுவனர் டாக்டர் இளங்குமரன் தியாகராஜன் என்றிருக்க, அதன் கீழே CEO இளமயில் இளங்குமரன் என்று அந்தப் பலகையில் பொறிக்கப்பட்டிருந்தன. அதன் கீழே வரிசையாகப் பல்வேறு துறையின் தனித்த மருத்துவ வல்லுநர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு அதனருகே வாரத்தின் எந்நாள்களில் அவர்களைச் சந்திக்க முடியும் என்கின்ற கிழமையும் நேரமும் குறிப்பிடப்பட்டிருந்தன.
அந்தத் தாத்தா வரவேற்பாளினியிடம் சென்று, “குமரன் தம்பியைப் பார்க்க அப்பாய்ண்ட்மெண்ட் வேணும்மா” எனக் கேட்டார்.
“இன்னிக்கு டாக்டர் இளங்குமரன் அவருக்கு ஏதோ அவசர வேலை இருக்குனு சொல்லி, அவரோட காலை அப்பாயிண்ட்மெண்ட்டை எல்லாம் இன்னொரு சீனியர் டாக்டரான பிரகாஷைப் பார்க்கச் சொல்லிருக்காரு சார். டாக்டர் பிரகாஷூக்கு அப்பாயிண்ட்மெண்ட போடுறேன். வெயிட் பண்ணுங்க சார்” என்றார் வரவேற்பாளினி.
“இல்லம்மா எனக்குக் குமரன் தம்பி அப்பாய்ண்ட்மெண்ட் தான் வேணும். குமரன்கிட்ட பத்து வருஷமா ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்கேன். நல்ல கைராசியான டாக்டர். அவரைத் தவிர யார்க்கிட்ட பார்த்தாலும் எனக்குத் திருப்தி வராதுமா. அந்தத் தம்பி எப்ப வருவாங்களோ அந்த நாளுக்கு அப்பாய்ண்ட்மெண்ட் தாங்க. நான் அப்ப வந்து பார்த்துக்கிறேன்” என்றவராய் மறுநாளைக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு பேத்தியின் கையைப் பிடித்தவாறு வெளியே செல்ல,
அதே நேரம் இங்கே அந்தக் கைராசியான டாக்டர் இளங்குமரனோ பள்ளித் தலைமையாசிரியர் முன்பு பதட்டத்துடன் அமர்ந்திருந்தான்.
“என்னாச்சு வள்ளிப் பாப்பாவுக்கு? எதுக்கு எனக்குப் போன் செஞ்சி வர சொன்னீங்க மேடம்?” எனக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அந்த அறையினுள்ளே நுழைந்தனர் இரட்டையர்களான பத்து வயது வள்ளிமயிலும் முத்தமிழ் குமரனும்.
பிள்ளைகளைக் கண்டதும் பதட்டத்துடன் அவர்களின் அருகே சென்று அவர்களின் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்தவனாய் வள்ளியின் உடலைப் பார்வையால் ஆராய்ந்தவன் கழுத்திலும் நெற்றியிலும் கை வைத்து பரிசோதித்தவாறு, “வள்ளிப் பாப்பா உடம்புக்கு என்ன?” என்று கேட்டிருந்தான்.
காலை எட்டு மணியளவில் மகனையும் மகளையும் தியாகராஜனுடன் பள்ளிக்கு அனுப்பி விட்டு, தனது கல்லூரி ஆண்டு விழாவிற்காகக் கிளம்பியிருந்த இளமயிலைப் பத்து மணியளவில் கல்லூரியில் இறக்கி விட்டு, மருத்துவமனை நோக்கி வந்திருந்த போது, இளங்குமரனுக்கு அழைத்து வள்ளியின் தந்தை தானே எனக் கேட்டு அவனை உடனே பள்ளிக்கு வருமாறு கூறியிருந்தனர் பள்ளி நிர்வாகத்தார்.
தனது பெண்ணிற்குத் தான் உடல்நிலை ஏதும் சரியில்லையோ என்ற பதட்டத்தில் மருத்துவமனையில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க வேறு மருத்துவரை ஏற்பாடு செய்து விட்டு இங்கே வந்திருந்தான் இளங்குமரன்.
“உங்க பொண்ணு அடிச்ச பையனுக்குத் தான் சார் உடம்புக்கு முடியலை. அந்தப் பையனுக்குத் தான் நீங்க ட்ரீட்மெண்ட் செய்யனும்” என்ற தலைமை ஆசிரியரை நோக்கித் திரும்பியவனாய் எழுந்து நின்றவன், “என்னது அடிச்சாளா? யாரை? எதுக்கு?” எனக் கேட்டான்.
அறையினுள்ளே உள்ளங்கையில் கற்கள் தேய்த்த சிராய்ப்புக் காயத்துடன் கண்களில் கண்ணீருடன் வள்ளியின் வயதையொத்த பையன் ஒருவன் வரவும், அவனருகில் அமர்ந்து மருத்துவராய் அந்தப் பையனை ஆராய்ந்த இளங்குமரன், “வள்ளிப் பாப்பா இங்கே வா?” என அழைத்தான்.
“எதுக்குமா இந்தத் தம்பியை அடிச்ச?” எனக் கேட்டுக் கொண்டே அவனது கையில் இருந்த காயத்தை மெல்ல வருடி ஊதிவிட்டான்.
“அவன் என்னைப் பார்த்து மயிலு மயிலு மயிலம்மானு கிண்டல் செஞ்சி பாடினாம்ப்பா! அதான் கோபத்துல தள்ளி விட்டுட்டேன்ப்பா! கீழே இருந்த கல்லுல அடிப்பட்டுருச்சு அவனுக்கு” என்றாள்.
‘அம்மாவுக்குப் பொண்ணு தப்பாம பொறந்திருக்கியே!’ என்று மனத்தோடு பேசியவனாய்,
“என் பொண்டாட்டிக்கிட்ட நான் பாட வேண்டிய பாட்டெல்லாம் நீ ஏன் தம்பி என் பொண்ணுக்கிட்ட பாடி, இப்படி வாங்கிக் கட்டிட்டு இருக்க” எனச் சிரித்தவாறு கேட்டான்.
இளங்குமரன் தன்னை அடித்து விடுவானோ என்று பயத்தில் நின்றிருந்த அந்தச் சிறுவனைப் பார்த்த தலைமை ஆசிரியர்,
“என்ன சார் பேச்சு இது? உங்கப் பொண்ணைக் கண்டிக்காம சிவாவை ஏன் விசாரிச்சிட்டு இருக்கீங்க?” என எரிந்து விழுந்தார்.
தலைமை ஆசிரியரை ஒரு பார்வை பார்த்தவன் அந்தச் சிறுவனின் தலையை வருடியவனாய், “உன்னோட பேரு சிவாவா தம்பி?” எனக் கேட்டான்.
“ஆமா அங்கிள். மை நேம் இஸ் சிவகணேசன்” என்றான் அவன்.
“நைஸ் நேம்” என்றவாறு முறுவலித்த இளங்குமரன், “உனக்கு அந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்குமா? இல்ல என் பொண்ணைப் பிடிக்குமா?” எனக் கேட்டான்.
“இல்ல அங்கிள்! நேத்து டிவில இந்தப் பாட்டுப் பார்த்தேனா, இன்னிக்கு வள்ளியை அவளோட ஃப்ரண்ட்டு மயிலுனு கூப்பிடுறதைப் பார்த்ததும் எனக்கு இந்தப் பாட்டு ஞாபகம் வந்துச்சு அங்கிள். அதனால நான் பாட்டுக்கு பாடிட்டே போனேனா, ஏன்டா என்னைப் பார்த்து பாடுறனு அவளா வந்து தள்ளி விட்டுட்டா அங்கிள்” என்றான் சிறுவன் சிவகணேசன்.
“பாருங்க சார். ஒன்னும் செய்யாத பையனைத் தள்ளி விட்டுட்டு நான் தான் தள்ளி விட்டேன்னு நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு எப்படி வந்து சொல்றா பாருங்க சார் உங்கப் பொண்ணு” குற்றம் சாட்டினார் தலைமை ஆசிரியர்.
“உண்மையைப் பேசுறவங்க நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு தான் பேசுவாங்க மேடம். அவ நான் செய்யலைனு பொய் சொல்லிருந்தா தான் தப்பு மேடம்” என்றவன்,
“வள்ளிப் பாப்பா! இங்கே வா” என்று அழைத்தான். அவளுக்காகத் தான் வாங்கி வைத்திருந்த தேன் மிட்டாயை அவளிடம் கொடுத்து சிவகணேசனிடம் கொடுக்கச் சொல்லி மன்னிப்புக் கேட்கச் சொன்னான்.
முகத்தைத் தூக்கி வைத்தவளாய், “சாரி” என்றவாறு அவனிடம் அவள் தேன் மிட்டாயைக் கொடுக்க, “நானும் சாரி வள்ளி மயிலு” என்றவனாய் அதனை வாங்கி உண்டிருந்தான் சிவகணேசன்.
“அவ்ளோ தான் மேடம். பிராப்ளம் சால்வ்டு!” என்றவனாய் சிவகணேசனைக் கையில் தூக்கிக் கொண்டு அந்தப் பள்ளியில் இருந்த மரத்தடிக்குச் சென்று அமர வைத்தான்.
“முத்து! அப்பா கார்ல இருக்க ஃபர்ஸ்ட் எய்ட் கிட் எடுத்துட்டு வாப்பா” என்று அனுப்பினான்.
இவள் முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு தந்தையைப் பார்த்திருந்தாள்.
அவளைக் கண்டும் காணாதவனாய் சிவகணேசனிடம் அவனின் தாய் தந்தையரைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தான் இளங்குமரன்.
அந்தத் தலைமை ஆசிரியர் இவர்களின் வகுப்பாசிரியரை அழைத்து இவர்களைக் கண்காணிக்குமாறு கூறி அனுப்பி வைத்தார்.
அந்த வகுப்பாசிரியர் பிரேமிடம் நடந்ததை உரைத்த இளங்குமரன், சிவகணேசனின் பெற்றோர்களின் கைப்பேசி எண்ணைக் கேட்டு வாங்கித் தனது கைப்பேசியில் சேமித்துக் கொண்டிருந்த நேரம் முதலுதவிப் பெட்டியுடன் வந்தான் முத்தமிழ் குமரன்.
தனது வாகனத்தில் இருந்த முதலுதவிப் பெட்டியில் இருந்த களிம்பினை எடுத்து அந்தச் சிறுவனுக்குத் தடவிய இளங்குமரன், கையில் ஊசியை எடுத்த மறுநொடி விறுவிறுவென ஓடியவளாய் முத்தமிழின் பின்னே மறைந்து நின்று கொண்டாள் வள்ளி மயில்.
“அந்தப் பயம் இருக்கட்டும்” என்றவாறு மகளைப் பார்த்துச் சிரித்தவனாய் ஊசியை உள்ளே வைத்தவன்,
தன்னைக் கண்ணீர் கண்களுடன் பார்த்திருந்த சிவகணேசனை நோக்கி, “உனக்கும் ஊசினா பயமா? ஆனா அங்கிள் உனக்கு ஊசிக் குத்தப் போறதில்லை” என்றவனாய் கைகளைக் கழுவி விட்டு வந்தவன், மேலும் சில தேன் மிட்டாய்களைக் கொடுத்து அச்சிறுவனைச் சமாதானம் செய்தான். அவனின் பெற்றோருக்கு அழைத்து நடந்ததை உரைத்து மன்னிப்புக் கோரி, அடுத்த இரண்டு நாள்களில் காய்ச்சல் அல்லது இன்பெக்ஷன் போன்று ஏதேனும் அவனுக்கு வந்தால் தனது மருத்துவமனைக்கு அழைத்து வருமாறு உரைத்து விட்டு இணைப்பைத் துண்டித்தவன், மகனையும் மகளையும் அணைத்து முத்தமிட்டு விட்டு வகுப்புக்குச் செல்லுமாறு உரைத்தவன், அந்த வகுப்பாசிரியரிடம் பார்த்துக் கொள்ளுமாறு உரைத்து விட்டுக் கிளம்பினான்.
அன்றிரவு கல்லூரி விழா தாமதமாக முடிந்திருக்க, ஒன்பது மணியளவில் மனைவியைக் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்த இளங்குமரன், குளித்து முடித்து வந்த மனைவியிடம் பள்ளியில் நடந்தவற்றை உரைத்திருந்தான்.
முகப்பறையில் தாத்தா பாட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்த மகளை அழைத்துத் தன் முன்னே நிற்க வைத்த இளமயில்,
“என்ன வள்ளி இது? அப்படி என்ன இந்த வயசுல கோபம் உனக்கு? கோபம் வந்தா இப்படித் தான் தள்ளி விடுவியா? அந்தப் பையனுக்கு எங்கேயாவது பெரிசா அடிப்பட்டிருந்தா என்னாவாகியிருக்கும்” என்று மகளைத் திட்டவும்,
“விடுடா மயிலு” எனத் தியாகுவும்,
“நீ செய்யாததையா உன் பொண்ணு செஞ்சிட்டா?” என்று குமரனும்,
“சின்னப் பொண்ணு ஏதோ விளையாட்டா செஞ்சிருப்பா?” என்று அம்பிகாவும் கூற,
“நீங்கல்லாம் கொடுக்குற செல்லத்துல தான் இவ இப்படிச் சேட்டை செஞ்சிட்டு இருக்கா!” என்று கோபத்துடன் உரைத்தவள்,
“அவன் உன் அண்ணன் தானே! அவனால என்னிக்காவது ஏதாவது பிரச்சனை வந்திருக்கா? நீ மட்டும் எப்படி ஏதாவது ஒரு பிரச்சனையை இழுத்திட்டு வர” என்று அவளின் முன் மண்டியிட்டவாறு கேட்டிருந்தாள்.
முத்தமிழின் காதினில் எதையோ கூறிய இளங்குமரன், தாயிடம் போகுமாறு அனுப்பி வைத்தான்.
தாயின் கரத்தைப் பற்றிய முத்தமிழ், “வள்ளிப் பாப்பா வேணும்னே செய்யலைமா! இனி பாப்பா அப்படிச் செய்ய மாட்டா! சொல்லு வள்ளிப் பாப்பா, இனி அப்படிச் செய்ய மாட்ட தானே!” எனக் கேட்டிருந்தான்.
இது வரை உம்மென்ற முகத்துடன் தாயைப் பார்த்திருந்த வள்ளி மயில் தமையனின் கேள்வியில், “ஆமா ஆமா இனி அப்படிச் செய்ய மாட்டேன்மா” என்றவளாய் தாயையும் தந்தையையும் மாறி மாறிப் பார்க்க,
இளங்குமரன் வாயைசைத்து சாரி கேட்குமாறு வள்ளியிடம் செய்கையில் உரைக்க, தாயின் கரங்களைப் பற்றியவளாய், “சாரிமா! இனி இப்படிச் செய்ய மாட்டேன்” கண்களைச் சுருக்கியவாறு உரைத்தாள் வள்ளி மயில்.
கணவனை முறைப்பாய் ஒரு பார்வைப் பார்த்த இளமயில், மகளையும் மகனையும் அணைத்து முத்தமிட்டவளாய், “சரி இரண்டு பேரும் போய்த் தூங்குங்க” என்று அனுப்பி வைத்தாள்.
“மயிலு பாப்பா! குணத்துலயும் சேட்டையிலயும் என் பேத்தி அப்படியே உன்னை மாதிரி, பொறுமையிலும் படிப்புலயும் என் பேரன் அப்படியே உன் புருஷன் மாதிரி” என்று சிரித்தார் தியாகராஜன்.
“அந்த முருகன்கிட்ட நான் என்ன கேட்டேனோ அப்படியே கொடுத்திருக்காரு மாமா” என்றவாறு சிரித்தாள் அவள்.
இவர்களை மென்னகையுடன் பார்த்திருந்த அம்பிகா, “காலேஜ் ஃபங்ஷன் முடிய இவ்வளோ நேரம் ஆகிடுச்சா? எதுவும் அங்கே சாப்பிட்டியா? இல்ல தோசை ஊத்தி தரட்டுமா?” எனக் கேட்க,
“அங்கே சாப்பிட்டேன் அத்தை. ஆனாலும் வயிறு நிறையலை. தோசை தாங்க அத்தை” என்றவள்,
“இன்னிக்கு ஃபங்ஷன்ல என்னாச்சு தெரியுமா?” என்றவளாய் அம்பிகாவுடன் பேசியவாறே சமையலறை நோக்கிச் சென்றாள்.
‘ஆரம்பிச்சிட்டாளா? மாமியாரும் மருமகளும் பேச ஆரம்பிச்சிட்டா இந்த உலகத்தையே மறந்துடுவாங்களே! நாம தூங்கப் போவோம்’ மனத்தோடு பேசியவனாய் படுக்கையறைக்குள் நுழைய, தியாகராஜனும் அவரது அறைக்குள் நுழைந்தார்.
படுக்கையறையில் பிள்ளைகள் இருவரும் உறங்காது தலையணையை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தவன், அவர்களைக் கண்டித்தவனாய் படுக்கச் செய்து தட்டிக் கொடுத்தான்.
இளங்குமரன் அருகில் அவன் மீது கால் போட்டவளாய் வள்ளி மயில் படுத்திருக்க, அவளின் அருகில் படுத்திருந்தான் முத்தமிழ். ஒருக்களித்துப் படுத்தவாறு இருவரைச் சுற்றியும் அணைத்தவாறு கையைப்போட்டு தட்டிக் கொடுத்துப் படுத்திருந்தான் இளங்குமரன்.
கண்கள் லேசாய் சொருகிய வேளையில் அவனது இடையில் ஏற்பட்ட குறுகுறுப்பில் முழித்தவன் இடையில் இருந்த மனைவியின் கரத்தின் மீது தனது கரத்தை வைத்து அழுத்தியவனாய் தனது முதுகில் முகத்தைப் பதித்திருந்தவளை கழுத்தைத் திருப்பிப் பார்த்தவன், லேசாய் உடலைத் திருப்பி மல்லாந்து படுத்தான். அவனின் மார்பில் தலையை வைத்தவளாய் வயிற்றைச் சுற்றி கையைப் போட்டவள், அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவளின் முதுகை வருடியவனாய், “எதுக்காம் இந்த முத்தம்?” மென்னகையுடன் கேட்டிருந்தான்.
“பார்மஸில ஏதாவது செய்யலாம்னு இருந்தவளை, சைக்காலஜில பி எச்டி படிக்க வச்சி டாக்டர் ஆக்கினதுக்காக! மத்தவங்களுக்குக் கவுன்சிலிங் செய்யப் படிக்க வச்சி நிறையப் பேருக்கு என்னை உதவ வச்சதுக்காக, இது வரைக்கும் கிளாஸ்ல மட்டுமே பாடம் எடுத்துட்டு இருந்தவளை பெரிய கிரைவுடு முன்னாடி பேச முடியும்னு நம்பிக்கை கொடுத்து இன்னிக்கு பேச வச்சதுக்காக” என்று ஒவ்வொன்றுக்கும் அவனது முகத்தில் முத்தம் பதித்தவளாய் அவள் உரைத்திருக்க, “எல்லாத்துக்கும் காரணம் உன்னோட உழைப்பும் முயற்சியும் தன்னம்பிக்கையும் தான். நான் ஒன்னுமே செய்யலை மயிலம்மா” என்றவனாய் அவளின் தலையை வருடினான்.
“நீ இப்படி என் கூட இருக்கிறது தான் என்னோட பலம் இளா மச்சான்”
மேலும் அவனைத் தன்னுடன் இறுக்கி அணைத்தவளாய், பிள்ளைகளின் மீது கைப்போட்டு அவர்களின் முதுகை வருடியவள், “எனக்கு முத்துவைப் பார்க்கும் போதெல்லாம் உன்னைச் சின்ன வயசுல பார்த்த மாதிரியே இருக்கு இளா மச்சான்” என்றாள்.
“எனக்கும் தான் வள்ளியைப் பார்க்கும் போதெல்லாம் சின்ன வயசு மயிலைப் பார்த்த மாதிரியே இருக்கும்” என்று சிரித்தான் அவன்.
“சரி தம்பி உருண்டுடப் போறான்! நீ அந்தப் பக்கம் போய்ப் படு” என்று அவன் கூறவும் எழுந்து நின்றவள் குனிந்து இளங்குமரனின் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு விட்டு மறுபக்கம் சென்று படுத்தாள்.
தனது கையை மனைவி வரை நீட்டி அணைத்தவனாய் ஒருகளித்துப் படுத்தவாறு மயிலின் கண்களை அவன் நோக்க, அவளும் ஒருக்களித்துப் படுத்தவாறு அனைவரின் மீதும் கையைச் சுற்றிப் போட்டவளாய் அவனைப் பார்த்தவள், “லவ் யூ இளா மச்சான்” என்றிட,
புன்முறுவலுடன், “லவ் யூ டா மயிலம்மா” என்றான் அவன்.
தனது இதயத்திலே இன்றியமையாதவனாய் இயைந்திருந்த இளங்குமரனுடன் அன்பும் அறனும் கூடிய இல்வாழ்வை நன்மக்கட்பேற்றுடன் பெற்று இன்பமாய் வாழ்ந்திருந்தாள் இளமயில்.
இனி வரும் காலங்களிலும் இருவரும் இனிய இல்லறத்துடன் இன்புற்று வாழ்ந்திருக்க வாழ்த்தி விடைபெறுவோம் நாமும்!