கல்லூரிப் பணியாளர் அறையில் அமர்ந்திருந்தாள் இளமயில்.
“எனக்கு வாழ்க்கைக் கொடுப்பியா மயிலம்மா” என்று இளங்குமரன் கேட்டதையே நினைத்துக் கொண்டிருந்தாள்.
காலை அவளைக் கல்லூரியில் இறக்கி விட்டு அவன் அவ்வாறு கேட்டதும் பேரதிர்ச்சி தான் இளமயிலுக்கு.
‘அப்ப அவனுக்குக் கல்யாணம் ஆகலையா?’ மனத்தோடு யோசித்தவாறே ஏதும் பதிலிறுக்காது அவள் அமைதியாக நின்றிருக்க,
“உன் மௌனத்தைச் சம்மதமாக எடுத்துக்கட்டுமா மயிலம்மா?” என்று கேட்டான்.
அவனின் பாவப்பட்ட 90’ஸ் கிட் என்ற வார்த்தையில் பழைய துள்ளலான இளமயில் வெளிவந்திருக்க, “நான் உனக்காகச் சொன்ன அந்தக் கம்பராமாயணப் பாட்டு ஞாபகம் இருக்கா குமரா?” எனக் கேட்டாள்.
தான் அந்நாள்களை நினைவில் வைத்திருக்கிறோமா என்றறிய கேட்கிறாளோ, ஆனால் அந்தப் பாட்டுச் சுத்தமாக நினைவில் இல்லையே என்று எண்ணியவாறே, “ஓ நல்லா ஞாபகம் இருக்கே” என்றான் அவன்.
“அந்தப் பாட்டு எந்த அணினு சொல்லு! நான் உன்னைக் கல்யாணம் செஞ்சிக்கிறேன்” அடக்கப்பட்ட சிரிப்புடன் கூறியிருந்தாள்.
“என்னது அணியா? அணினா டீம் தானே? கிரிக்கெட் அணி ஃபுட்பால் அணி மாதிரி புலவர் அணி கவிஞர் அணினு எதுவும் இருக்கா என்ன?” என்று அவன் புரியாது கேட்க,
இடம் பொருள் பாராது கலகலவென வாய்விட்டுச் சிரித்திருந்தாள் இளமயில்.
அவளின் சிரிப்பைப் பார்த்தவனுக்கு தான் ஏதோ முட்டாள்தனமாக கேட்டுவிட்டிருந்தது புரிந்தாலும், தனது தோழியை மீட்டெடுத்த பூரிப்பில் கனிவாய் பார்த்திருந்தான் அவன்.
“குமரா, நான் சொன்னது தமிழ் இலக்கண அணி” சிரிப்புடனேயே கூறியிருந்தாள்.
“யம்மா மயிலம்மா! எனக்கும் தமிழுக்கும் காத தூரம்னு தெரிஞ்சே இப்படி என் வாழ்க்கைல விளையாடுறியேமா” அப்பாவியான குரலில் அவன் கூற,
மீண்டும் வாய்விட்டுச் சிரித்தவளாய், “அதெல்லாம் செல்லாது! உன்னை என்ன தமிழ்ல பி எச்டியா படிக்கச் சொன்னேன்! கண்டுபிடிச்சிட்டு வந்து சொல்லு. அப்புறமா கல்யாணம் செஞ்சிக்கலாமா வேண்டாமானு யோசிச்சு சொல்றேன்” என்றவளாய் கல்லூரிக்குள் சென்றாள்.
‘அய்யோ அது என்ன செய்யுள் பாட்டுனே மறந்து போச்சே எனக்கு! அந்தப் பாட்டைக் கண்டுபிடிச்சு அது என்ன அணினு கண்டுபிடிக்கிறதுக்குள்ள எனக்கு முடி நரைச்சிடும் போலயே’ என்று புலம்பியவனாய்க் கிளம்பினான் இளங்குமரன்.
அன்று அவள் கண்ட அக்காட்சி இப்பொழுது கண்ணுக்குள் வந்து போனது.
இளமயில் மருந்தியல் இளங்கலை படிப்பை முடித்திருந்த சமயம் அது.
ஒரு மருத்துவ நிறுவனத்தில் புதிதாகத் தயாரிக்கும் மருந்துகளைப் பரிசோதிக்கும் பணிக்கான நேர்முகத் தேர்வுக்காகப் பெங்களூருக்குச் சென்றிருந்தாள் இளமயில்.
அவள் படிப்பை முடித்து விட்டு பங்கேற்ற முதல் நேர்முகத் தேர்வு என்பதால் அவளுக்கு அத்தேர்வு மிகக் கடினமாகவே இருந்தது.
நேர்முகத் தேர்வை முடித்து விட்டு, மிகுந்த மனச்சோர்வுடன் அந்த நிறுவனத்தின் அருகிலிருந்த பேரங்காடிக்குச் (mall) சென்று மேல் தளத்திலிருந்த உணவிடத்தில் ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்தாள்.
படிப்பை முடித்தவுடன் எவ்வாறேனும் பணியில் சேர்ந்திட வேண்டுமென முடிவு செய்து ஆசையாக வந்தவளுக்கு இந்த நேர்முகத் தேர்வு மருந்தியல் குறித்தான அவளின் அறியாமையை எடுத்துக் கூறி அவளின் நம்பிக்கையை இழக்கச் செய்திருந்தது.
தனக்கிருக்கும் அறிவுத்திறனை வைத்து எந்த நேர்முகத் தேர்விலும் தன்னால் வெற்றிக்கொள்ள இயலாதென்ற முடிவுக்கே வந்திருந்தாள் இளமயில்.
அவள் அந்த மேஜையில் அமர்ந்த சமயம் அவளின் கைப்பேசி அலற, எடுத்துப் பார்த்தவள் அதை இயக்கியவளாய், “சொல்லுமா? சாப்பிட்டியா?” எனச் சோர்வான குரலில் கேட்டிருந்தாள்.
சென்னையில் ஓர் அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக அச்சமயம் பணியில் இருந்தார் மரகதம்.
“என்னம்மா போன விஷயம் என்ன ஆச்சு? இன்டர்வியூலாம் நல்லபடியா முடிஞ்சிதா?” என்றவர் கேட்க,
“அட நீ வேறம்மா! ஏன்டா இன்டர்வியூக்கு வந்தோம்னு ஆகிடுச்சும்மா. அவங்க கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் தெரியலைமா. ஒரு மாதிரி அவமானமா போய்டுச்சு” கரகரப்பான குரலில் இளமயில் கூற,
“இது தானே உன் முதல் இன்டர்வியூ! போகப் போக வர அனுபவத்துல இன்னும் நல்லா படிச்சிட்டுப் போனா உன்னாலயும் சக்ஸ்சஸ் ஆக முடியும் மயிலு” என்று மகளுக்கு ஊக்கமளித்திருந்தார் மரகதம்.
வயது முதிர்ச்சியுடன் அனுபவ முதிர்ச்சியும் சேர்ந்து மரகதத்திடம் அமைதியையும் மென்மையையும் கொண்டு வந்திருந்தது.
“ஹ்ம்ம் நிறையக் கத்துக்கனும்மா! இங்கே வேலைக் கிடைச்சிட்டா, உன்னை வேலையை விடச் சொல்லிட்டு இங்கே என் கூடவே கூட்டிட்டு வந்துடலாம்னுலாம் பிளான் செஞ்சேன்! எல்லாம் பிளாப் ஆகிடுச்சு” பெருமூச்சுடன் உரைத்தவளை இடையிட்டவராய்,
“கல்யாணம் செஞ்சி புருஷன் கூட ஊரைச் சுத்த வேண்டிய வயசுல என்னைக் கூடக் கூட்டிட்டு ஊரு ஊரா சுத்துறேன்னு சொல்லிட்டு இருக்க” என்றவர்,
“இப்ப நீ ஓகே சொன்னாலும், எங்க ஸ்கூல் தமிழ் பேராசிரியர் பையனை உடனே உன்னைப் பொண்ணு பார்க்க வர சொல்லிடுவேன். அவனுக்கு உன்னை அவ்ளோ பிடிச்சிருக்கு. நாம தேடினாலும் இப்படிப் பையன் கிடைக்காது மயிலு. ஏன் கல்யாணமே வேண்டாம்னு இப்படி அடம் பிடிக்கிறியோ” என்று கவலையுடன் உரைத்தார்.
“அம்மா.. ம்மஆஆஆ. நீ பேசுற எதுவும் கேட்க மாட்டேங்குதும்மா! இங்க சிக்னல் பிராப்ளம் போல! நான் அப்புறம் பேசுறேன்” என்று கைப்பேசியை சற்றுத் தள்ளிப் பிடித்தவளாய் இளமயில் உரைக்க,
“ஆமாடி ஆமா நான் கல்யாணம் பத்தி பேசினா உனக்குப் போனு வேலை செய்யாது. சிக்னல் கிடைக்காது. இல்லாத எல்லாப் பிரச்சனையும் வரும்!” என்று கடுப்பாக உரைத்தவராய் கைப்பேசியை வைத்திருந்தார் அவர்.
தனது கைப்பேசியைப் பார்த்து, “ஹப்பாடா” என்று பெருமூச்சு விட்டவள், “எப்படித் தான் எந்த விஷயத்தைப் பேசினாலும் கடைசில கல்யாணத்துல வந்து நிக்கிறாங்களோ” என்று வாய்விட்டே புலம்பியவள்,
“முதல்ல ஏதாவது சாப்பிடுவோம். அப்பத் தான் நான் நானா இருப்பேன்” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டவளாய் அங்கு விற்கப்பட்ட காரசாரமான ஹைத்ராபாத் பிரியாணியை வாங்கி வந்து, ‘கல்யாணம் சமையல் சாதம்’ என்று பாடியவாறு ரசித்து ருசித்து உண்ண ஆரம்பித்தாள்.
“செக் செக்” என்ற மைக் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தவள், தூரமாய் ஒரு சிறிய மேடையில் சின்ன இசை கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து, “ஓ பாட்டு பாடப் போறாங்கப் போல” என்று நினைத்துக் கொண்டாள்.
முதல் சில நாழிகைக் கன்னடப் பாடல்களை அக்குழுவினர் பாடிக் கொண்டிருக்க, ‘இப்ப தான் பெங்களூருல இருக்கேன்ற எண்ணமே வருது’ என்று எண்ணியவளாய் கைகளைக் கழுவி விட்டு வந்து அமர்ந்தவளின் செவியைத் தீண்டியது அடுத்து அவர்கள் பாடிய தமிழ்ப்பாட்டு.
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புதுத் தாளம் போட்டு
புதுசா புதுசா அதைக் காதில் கேட்டு
புழுவாய்த் துடித்தாள் இந்த மின்னல் கீற்று
“வாவ் தமிழ்ப் பாட்டு” என்றவளாய் அவளும் மெல்லிய குரலில் வாயசைத்துப் பாட ஆரம்பித்தாள்.
உள்ளத்தை உன் கையில் அள்ளித் தந்தேனே
நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானா
இந்த வரிகளில் அவளின் நினைவுகள் தானாகவே இளங்குமரனிடம் சென்று நின்றது.
‘அது எப்படிடா எந்த லவ் சாங் கேட்டாலும் மனசுக்குள்ள வந்து நின்னுடுற’
‘ஹ்ம்ம் நான் தான் உன்னை நினைச்சிட்டு இருக்கேன். நீ இன்னும் என்னை நினைச்சிட்டு இருக்கியா? ஏனோ உன்னைப் பத்தி சோசியல் மீடியால தேட கூடப் பயமா இருக்குடா! உன் பொண்டாட்டியோடவோ இல்ல காதலியோடவோ ஃபோட்டோ போட்டு இருந்தீனா அதைப் பார்க்கிற தைரியம் கூட எனக்கில்லைடா! நான் உன்னை அந்தப் பதினாறு வயசு இளங்குமரனாவே மனசுல வச்சிக்கிறன். வளர்ந்த இளங்குமரனை எனக்குப் பார்க்க வேண்டாம்’ மனத்தோடு மானசீகமாக இளங்குமரனிடம் பேசிக் கொண்டிருந்த இளமயிலின் பார்வையில் விழுந்தாள் வளர்மதி.
நெற்றி வகுட்டில் குங்குமமும் கழுத்தில் புது மஞ்சள் தாலியும், அவளுக்கு இப்பொழுது தான் திருமணமாகி இருக்க வேண்டுமெனக் காண்பவர்கள் எண்ணுமளவிற்கு முகத்தில் பொலிவும் தேஜஸூமெனப் புதுப் பெண்ணாய் மிளிர்ந்தாள் வளர்மதி.
சிரித்த முகமாய்க் கைப்பேசியில் எதையோ பார்த்தவாறு தனியாக அமர்ந்திருந்த வளர்மதியை, அவளின் எதிர்புறமாக மூன்று மேஜை இருக்கைகள் தள்ளிச் சற்றுத் தூரமாக அமர்ந்திருந்த இளமயில் பார்த்திருந்தாள்.
அன்று பள்ளியில் தாவணியில் ஒற்றைப் பின்னலுடன் வந்தது போலவே இப்பொழுதும் புடவை அணிந்து ஒற்றைப் பின்னலுடன் அதே ஒல்லியான தேகத்துடன் இருந்தவளை அடையாளம் காண இளமயில் பெரியதாக யோசிக்கத் தேவையே இல்லாத வண்ணம் இருந்தாள் வளர்மதி.
‘வளருகிட்ட போய்ப் பேசுவோமா? இளா மச்சான் பத்தி அவ எதாவது கேட்டா என்ன சொல்றது? இல்ல ஒரு வேளை வளரு இளா மச்சான் கூடக் காண்டேக்ட்ல இருந்தா?’ நினைக்கும் போதே அய்யய்யோ என்றிருந்தது இளமயிலுக்கு.
‘வளரு கூடக் கான்டேக்ட்ல இருந்தா! வளரு இன்னும் இளா மச்சானை லவ் பண்றதா சொல்லிருந்தா, மச்சான் வளரை தானே கல்யாணம் செஞ்சிருப்பாங்க’ நெஞ்சம் தூக்கி வாரிப்போட்டது இளமயிலுக்கு.
‘வேண்டாம் மயிலு! வளருக்கிட்ட பேசவும் வேண்டாம். வளரு யாரை கல்யாணம் செஞ்சிக்கிட்டானு தெரிஞ்சிக்கவும் வேண்டாம். இங்கிருந்து நீ கிளம்புறது தான் உனக்கு நல்லது மயிலு’ என்று இளமயிலின் மனசாட்சி அவளுக்கு எச்சரிக்கை விடுக்க,
அங்கிருந்து கிளம்பலாமென அவசரம் அவசரமாகத் தனது பையைத் தோளில் போட்டவாறு எழுந்தவள், வளர்மதியின் மேஜையில் உணவுத் தட்டை வைத்தவாறு வந்து நின்ற இளங்குமரனைக் கண்டாள். கன்னத்தில் மச்சத்துடன் சற்று ஆஜானுபாகுவான தேகத்துடன் இனங்கண்டுக்கொள்ளத் தடுமாறுமளவு வளர்ந்திருந்தான் இளங்குமரன்.
வளர்மதியிடம் ஏதோ இளங்குமரன் கூற, அதற்கு வெட்கப்பட்டுச் சிரித்தவளாய் இளங்குமரனின் தோளில் அடித்த வளர்மதியின் செயலைக் கண்ணுற்றவாறு நின்றிருந்த இளமயிலுக்கு ஒரு நிமிடம் உலகமே தட்டாமாலைச் சுற்றுவது போல் தலைச்சுற்ற அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டு மேஜையில் அமர்ந்து விட்டாள்.
நெஞ்சம் விம்மிக் கொண்டு வர, விழிகளைச் சிமிட்டி மீண்டுமாய் அவர்களைப் பார்த்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்க, மூளையோ, ‘கிளம்பிடு மயிலு! இங்க இருக்காத! போயிடு மயிலு’ கூறியவண்ணம் இருந்தது.
வளர்மதியின் எதிர் இருக்கையில் அமர்ந்த இளங்குமரனின் முதுகைப் பார்த்தவாறு அமர்ந்திருந்த இளமயில், மீண்டுமாய் அங்கிருந்து நகர எழவும் அவளைப் பார்த்து விட்டாள் வளர்மதி.
“ஹே அந்தப் பொண்ணு.. மயிலு மாதிரி இருக்கா?” என்று குமரனைப் பார்த்துக் கூறியவாறு மீண்டுமாய் இளமயில் இருந்த இருக்கையை வளர்மதி பார்க்க, அங்கே இளமயில் இல்லை.
தன்னை வளர்மதி பார்த்து விட்டதை உணர்ந்ததும் அருகில் இருந்த தூணின் பக்கம் மறைவாய் நின்றுக் கொண்டாள் இளமயில்.
இருவருமே தன்னிடம் வந்து பேசினால் சர்வ நிச்சயமாகத் தன்னால் அவர்களை எதிர்கொள்ள இயலாதென நம்பினாள் இளமயில்.
வளர்மதி இளங்குமரனிடம் தன்னைப் பார்த்ததைப் பற்றிக் கூறியதையும், இளங்குமரன் எழுந்து நின்று ஆர்வத்துடன் தன்னைத் தேடுவதையும் தூணின் மறைவிலிருந்து பார்த்திருந்தாள் இளமயில்.
அவர்கள் இருவரும் இவளைத் தேடுவதை நிறுத்திவிட்டு உணவை உண்ணுவதில் மூழ்கிய பிறகே, தூணில் இருந்து பின்னோக்கிச் சென்றவளாய் அந்தப் பேரங்காடியை விட்டு வெளியே வந்தாள்.
நில்லாமல் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்தவண்ணம் தான் தங்கியிருந்த விடுதி அறைக்கு வந்து சேர்ந்தவள், குளியலறைச் சென்று தண்ணீரைத் திறந்து விட்டு கதறி அழுதிருந்தாள்.
வாழ்வில் என்றைக்கும் கண்ணீர் சிந்திடவே கூடாது என்று வைராக்கியமாய் இருந்தவள் அன்று அதனை முறியடித்தவளாய் அழுதிருந்தாள். அதன் பிறகான அவளின் வாழ்வு அழுகைக்கு பஞ்சமில்லாமல் தான் சென்றிருந்தது.
‘ஏதாவது அதிசயம் நடந்து நீ எனக்குக் கிடைச்சிட மாட்டியானு காத்துட்டு இருந்தேனே மச்சான்! என் காதலை விட அவ காதல் உனக்கு உசத்தியா போய்டுச்சுல’ எனக் கூறி அழுதிருந்தாள்.
நமக்கு வேண்டியதை அடைய, நாம் முயற்சி மேற்கொள்ளாமல் வாழ்வு தானாக எவ்வித அதிசயத்தையும் நிகழ்த்தி அடைய செய்திடாது என்று அப்பருவத்தில் அறியாத பேதையாய் குமரனை அடைய முயற்சி செய்யாது போயிருந்தாள் அவள்.
‘வேறொருத்தியோட புருஷனைக் காதலிக்கிற அளவுக்கு நான் கெட்டவ இல்லை. நீ வேண்டாம் எனக்கு. உன் நினைவுகளும் வேண்டாம் எனக்கு’ உறுதிப்பூண்டவளாய் சென்னை சென்றதும் முதல் வேலையாக அவன் நினைவாய் தன்னிடம் இருந்த பொருள்கள் அனைத்தையும் ஒரு பெட்டியில் அடைத்து பரண் மீது போட்டவள் தனது மனத்தையும் பூட்டி விட்டாள்.
மனத்தின் மூலைக்குள் அவனின் மீதான காதலையும் நினைவுகளையும் அமிழ்த்திக் கொண்டாள் இளமயில். அவை வெளியேறத் துடிக்கும் நேரங்களில் எல்லாம் அவன் வளர்மதியின் கணவன் என்ற எண்ணத்தைக் கொண்டு அணைக்கட்டி மீண்டுமாய் மூலைக்குள் முடக்கிடுவாள் அவனின் நினைவுகளை.
தனது தாயின் வற்புறுத்தலில் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டவள், தனது வாழ்நாளில் என்றுமே இளங்குமரனைச் சந்தித்திடக் கூடாது என்ற வேண்டுதலுடன் வாழ்ந்திருந்தாள்.
இன்று
கைப்பேசியின் அழைப்பொலியில் பழைய நினைவுகளில் இருந்து நிகழ்விற்கு வந்தவளாய் தவறிய அந்த அழைப்பைப் பார்த்தாள்.
ஏதோ வங்கியின் அழைப்பாக இருக்க அதனைப் பார்த்து விட்டு வைத்தவளின் எண்ணங்கள் முழுவதும் இளங்குமரனே சுழன்று வந்தான்.
‘வளர்மதியை கல்யாணம் செஞ்சிக்கிட்டவன் ஏன் என்கிட்ட இப்படிக் கேட்டான்?’
‘ஒரு வேளை இவனும் என்னை மாதிரி விவாகரத்துச் செஞ்சிட்டானா?’ நினைக்கும் போதே நெஞ்சம் அதிர,
‘நான் என்ன ஆப்ஷனா அவனுக்கு? என் அன்பு அவ்ளோ இளக்காரமா போச்சா அவனுக்கு?’ நெஞ்சம் விம்மிக் கொண்டு வர, அவளின் மனசாட்சியோ, ‘நீயா ஏதாவது நினைச்சிக்கிட்டு கவலைப்பட்டுக்கிட்டு கிடக்காத’ என்று வலியுறுத்தியது.
‘ம்ப்ச் நான் உண்டு என் வேலை உண்டுனு இருந்தேன். இப்ப நெக்ஸ்ட் பீரியட் கிளாஸ் எடுக்கக் கூட மனசில்லாமல் இருக்கேன். இவன் என் வாழ்க்கைல வந்தாலே நான் நானாக இல்லாமல் ஆகிடுறேன். மனசுல கூடுதல் பாரதத்தை ஏத்தி விட்டுட்டுப் போய்டுறான். இவன் என் வாழ்க்கைல வராமலே இருந்திருக்கலாம்’ வழமையாகப் புலம்பும் அதே வார்த்தைகளை இன்றும் கூறியிருந்தாள்.
வகுப்பெடுக்கும் விருப்பமே இல்லாமல் வகுப்பிற்குள் நுழைந்த இளமயில் தனது நாற்காலியில் அமர்ந்து அனைத்து வகுப்பிலும் எடுக்கப்படும் வழமையான செயலாய், வருகைப் பதிவேட்டில் இருந்த மாணாக்கர்களின் பெயர்களை அழைத்துப் பதிவேட்டில் அவர்களின் இருப்பைக் குறித்துக் கொண்டாள்.
அன்றைய நாளுக்கான பாடத்துக்கு மாணாக்கர்கள் ஆர்வமுடன் காத்திருக்க, நெற்றியைத் தேய்த்தவாறு அமர்ந்திருந்த இளமயிலோ,
“இன்னிக்குப் பாடத்தை அசைன்மெண்ட்டா தரேன்” என்று அதற்கான தலைப்புகளை அவள் கூறிக் கொண்டே வர,
“மேம் நீங்க தானே நேத்து வாழ்க்கைக்குத் தேவையான முக்கியமான டாபிக்லாம் எக்ஸ்பிளைன் செய்யாம அசைண்ட்மெண்ட்டா கொடுத்தனால தான் அந்தந்த வயசுல தெரிஞ்சிக்க வேண்டிய நிறைய விஷயங்கள் தெரியாமலே போய்டுதுனு சொன்னீங்க” என்று வகுப்பிலிருந்து ஒரு மாணவனின் குரல் ஒலிக்கவும், மற்ற அனைவரும் கூட்டாக, “ஆமா மேம்” என்று ஒலியெழுப்பிக் கூச்சலாய் பாடம் எடுக்குமாறு கேட்டனர்.
மென்னகைப் புரிந்தவளாய், “செக்ஸ்னா என்னனு இங்க யாருக்குத் தெரியாது? கையைத் தூக்குங்க. ஒருத்தருக்கு தெரியலைனாலும் நான் கிளாஸ் எடுக்கிறேன்” என்று அவள் கேட்டதும், ஒட்டு மொத்த வகுப்பும் தங்களுக்குத் தெரியாது என்று கையைத் தூக்க,
“அடேய் பசங்களா இதை நான் நம்பனுமா?” என்று கேட்டு வாய்விட்டுச் சிரித்திருந்தாள் இளமயில்.
அவளின் சிரிப்பில் மொத்த மாணாக்கர்களும் சிரித்திருந்தனர்.
“ஹ்ம்ம் எப்படியும் ஓர் ஆர்வத்துல இந்த வயசுல ஓரளவுக்குச் செக்ஸ்னா என்னனு எல்லாருக்குமே இலைமறைக்காயாகவாவது தெரிஞ்சிருக்கும் தானே. இந்த அசைண்ட்மெண்ட் எழுதும் போது இன்னும் விரிவாக உடற்கூறுகள் மூலமாக உங்க எல்லாருக்கும் புரியும். அதனால அதை விளக்காம இந்த தலைப்புலேயே உங்க வாழ்க்கைக்கு உதவுற மாதிரி சில விஷயங்களை நான் சொல்றேன்” என்றவள் கரும்பலகையின் முன் நின்று விளக்க ஆரம்பித்தாள்.