இளங்குமரனின் பேரங்காடியில் தியாகராஜனுடன் பேசியவாறு இளங்குமரன் தனது கையினில் கொடுத்த தேன்மிட்டாயைப் பார்த்திருந்தாள் இளமயில்.
பள்ளிக் காலங்களில் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வரும் சமயங்களில் இருவருமாக இணைந்து தேன்மிட்டாய் வாங்கி உண்டவாறு மிதிவண்டியில் பேசியவாறே கடந்திருந்த நாள்களை எல்லாம் உள்ளம் நினைவுக்கூற, கண்கள் இளங்குமரனைத் தேடியது.
இவளிடம் தேன்மிட்டாயைக் கொடுத்து விட்டு வந்திருந்த வாடிக்கையாளரிடம் பேசிக் கொண்டிருந்த குமரனைப் பார்த்தவாறு, “ஏன் மாமா குமரனைப் படிக்க வைக்கலையா நீங்க? இந்தக் கடை ஏன்?” எனக் கேட்டாள் இளமயில்.
அவளது பார்வையின் திசை நோக்கி குமரனைப் பார்த்தவராய், “அவன் என்ன படிச்சிருக்கான்னு நினைக்கிற நீ?” எனச் சிரித்தவாறு கேட்டார் தியாகராஜன்.
அவரின் கேள்வியில் புருவத்தை உயர்த்தியவளாய், “அப்ப நீங்க சென்னை வந்த பிறகும் குமரன் அவன் ஆசைப்பட்டதைப் படிச்சானா? அப்புறம் ஏன் மெடிக்கல் ஷாப் வைக்காம இப்படிச் சூப்பர் மார்க்கெட் வச்சிருக்கான் மாமா?” எனக் கேட்டாள்.
“டாக்டருக்கு படிச்சவன் ஏன்மா மெடிக்கல் ஷாப் வைக்கப் போறான்” புன்னகையுடன் அவர் உரைக்கவும், “என்ன?” என்று ஆச்சரியத்தில் புருவத்தை உயர்த்தினாள் அவள்.
“ஆமா மா! அவனுக்கு டாக்டர் சீட்டே கிடைச்சிது! அதனால எஜூகேஷனல் லோன் வாங்கிப் படிக்க வச்சிட்டேன். சென்னை வந்த பிறகு ஒரு சின்ன மளிகைக்கடை வச்சிருந்தேன்மா. குமரனுக்கு அதை சூப்பர் மார்க்கெட்டா ஆக்கனும்னு ஆசை! அதான் இடம் பார்த்து இங்கே வச்சிக் கொடுத்துட்டான்” என்றவர் கூறிக் கொண்டிருக்கும் போதே, அங்கே வந்த இளங்குமரன்,
“என் கூட வா மயிலு! உனக்கு ஒன்னு காட்டுறேன்” என்றவாறு அவள் சம்மதிப்பதற்குள் அவளின் கைப்பிடித்து இழுத்தவாறு அழைத்துச் சென்றான்.
அந்தப் பேரங்காடியின் அருகே இருந்த மின் தூக்கியினுள் அவளை அழைத்துச் சென்றவன் முதல் மாடிப் பொத்தானை அழுத்தினான்.
மின் தூக்கியினுள் அவனது முகத்தைத் தான் பார்த்திருந்தாள் இளமயில். பெருமிதத்துடன் அவனை நோக்கின அவள் கண்கள். அவளின் பார்வையை எதிர்கொண்டவனாய் என்ன என்று புருவத்தை உயர்த்திச் செய்கையில் வினவினான். ஒன்றுமில்லை என்று அவள் தலை அசைத்த நேரம், முதல் மாடியில் மின் தூக்கி நின்று கதவு திறந்தது.
திறந்திருந்த மின்தூக்கியின் வழியாக வெளியே தெரிந்த கண்ணாடிக் கதவில், ‘அம்பிகா மருத்துவமனை’ எனப் பொறிக்கப்பட்டிருந்தப் பெயரைப் பார்த்து அவளின் கண்கள் ஒளிர்ந்தன.
அவளின் கைப்பற்றி உள்ளே அழைத்துச் சென்றான்.
“இன்னும் வெளில தெரியுற மாதிரி நேம் போர்ட் வைக்கலை மயிலு! அதுக்கு வேலை நடந்துட்டு இருக்கு” என்றவாறு உள்ளே சென்றவனாய்ச் சிறிதாகக் கிளினிக் போன்ற அமைப்புடன் வடிவமைக்கப்பட்டிருந்த மருத்துவமனையைச் சுற்றிக் காண்பித்தான்.
அவனது மருத்துவர் இருக்கையில் அவளை அமர வைத்தவன், “அடுத்த வாரம் தான் நம்ம கிளினிக் திறப்பு விழா பிளான் செஞ்சிருக்கோம். அப்பவே நம்ம கல்யாணத்தை வச்சிக்கலாமா?” நாற்காலியின் இருபுறமும் கைகளை ஊன்றியவனாய் ஆசையுடன் அவளின் கண்களைப் பார்த்துக் கேட்டான்.
“இ.. இளா ம..” மச்சான் என்று கூற வந்தவள் தலையை உலுக்கியவளாய், “குமரா! எனக்கு.. எனக்கு என்ன சொல்றதுனு தெரியலை” வெகு அருகில் அவன் முகத்தைக் கண்டவளுக்கு நெஞ்சம் படபப்பாகி வார்த்தைத் திக்கியது.
“நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்! இந்த இளா மச்சானைக் கட்டிக்கச் சம்மதம்னு மட்டும் சொல்லு போதும்” அவளின் உணர்வுகளை அவதானித்தவனாய் குமிழ்ச் சிரிப்புடன் உரைத்தான் அவன்.
“ம்ப்ச் நான் அதைச் சொல்லலைடா!” தன்னிலைக்கு வந்திருந்தவள் அவனின் கையைத் தட்டிவிட்டு தள்ளி நிற்க வைத்தவளாய்,
தனக்கான அவளின் மகிழ்வை ரசித்துப் பார்த்தவனாய், “ஆமா, திருமதி இளமயில் இளங்குமரன்னு சொன்னாலும் கெத்தா இருக்குல” என்று கண் சிமிட்டினான்.
அந்த இருக்கையில் இருந்து எழுந்தவளாய் அவனின் கைப்பற்றி அதே இருக்கையில் அவனை அமர வைத்தவள், அவனருகே நாற்காலிப் போட்டு அமர்ந்தாள்.
“சொல்லு குமரா! உனக்கும் வளருக்கும் என்ன பிரச்சனை? வளரைத் தானே கல்யாணம் செஞ்சிருந்த நீ? வளரை டிவோர்ஸ் செஞ்சிட்டியா என்ன?” எனத் தீவிரமான பாவனையுடன் அவள் கேட்க,
அவனின் கேள்வியில், ‘அப்ப இவன் வளரைக் கல்யாணம் செஞ்சிக்கலையா’ என்ற மைண்ட் வாய்ஸூடன் ஆமெனத் தலையசைத்தாள் இளமயில்.
“லூசு பொண்ணே! அவ என் ஃப்ரண்ட்டு! நானும் வளரும் ஒன்னா ஒரே காலேஜ்ல டாக்டருக்கு படிச்சோம். என் மேல வந்தது லவ் இல்லை அட்ராக்ஷனு அவ எப்பவோ புரிஞ்சிக்கிட்டா! அவளுக்குக் காலேஜ் ஃபைனல் இயர் படிக்கும் போதே கல்யாணம் ஆகிடுச்சு! இப்ப அவளுக்கு ஒரு பொண்ணு கூட இருக்கு” என்றவன்,
“நான் யாரையோ கல்யாணம் செஞ்சிக்கிட்டதா நினைச்சு தான் நீ என் மேல கோபப்படுறனு புரிஞ்சி தான் ரியாலிட்டிய ஃபேஸ் செய்யப் பயப்படுறனு சொன்னேன். நீயும் நானும் பெஸ்ட் ஃப்ரண்ட் இல்லையா மயிலு! எனக்கு யார் கூடவோ கல்யாணமே ஆகியிருந்தாலும் நீ என்னை எப்ப எங்கே பார்த்தாலும் ஒரு ஃப்ரண்ட்டா என்கிட்ட பேசனும்ன்றது தான் என்னோட எதிர்ப்பார்ப்பு!” சற்று கடுமையான குரலிலேயே உரைத்தான்.
ஏதும் உரைக்காது அமைதியாக இருந்தவள், “அப்ப உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா?” அதிர்ச்சியுடன் வினவினாள்.
“ஆமா மயிலு பொண்ணு! இன்னும் உன் மச்சான் சோலோ பாயா தான் சுத்திட்டு இருக்கேன்” மெல்லிய சிரிப்புடன் உரைத்தவன்,
சற்றுப் பயந்தவனாய், “ஹே மயிலம்மா! என்னடா? என்னாச்சு?” அவளின் கைகளைப் பற்றிக் கொண்டு அவன் கேட்க,
“நான் உன் மயிலம்மாவா இல்லடா! நான் என் காதலுக்குத் துரோகம் பண்ணிட்டேன் குமரா” கண்ணீர் தடத்துடன் வேதனை நிரம்பிய கரகரத்த குரலில் பெங்களூரில் வளர்மதியுடன் அவனைப் பார்த்தது முதல் அவளுக்குத் திருமணமானது வரை கூறி முடித்தாள் இளமயில்.
ஏற்கனவே தாயின் மூலம் இவளுக்கு மணமாகி விவாகரத்தும் ஆகியிருந்ததைக் கேட்டிருந்தவனுக்கு இப்பொழுது இச்செய்தி பேரதிர்ச்சியாய் இல்லையாகினும் அவளின் இந்த வேதனை அவனை வருத்தியது.
“லூசு! சரியான லூசுடி நீ! அப்பவே என்கிட்ட வந்து பேசியிருந்தீனா உனக்கு இந்தக் கஷ்டம் எதுவும் இல்லாம பார்த்திருப்பேன். அன்னிக்கு வளர்மதி கல்யாணத்துக்காகப் பெங்களூருக்கு வந்துட்டு கொஞ்ச நாள் இருந்துட்டு வந்தேன். அவ ஹஸ்பண்ட் அங்கே ஏதாவது வாங்கிட்டு இருந்திருப்பாரா இருக்கும். அதுக்குள்ள நாங்க பேசுறதைப் பார்த்துட்டு நீயா ஒன்னு கற்பனை செஞ்சிட்டுப் போயிருக்க” என்றவன் கவலையுடன் அமர்ந்திருந்தவளின் தோளைப் பற்றியவனாய்,
“எனக்கு உன்னோட பாஸ்ட் பத்தி எதுவும் தெரிய வேண்டாம் மயிலு. என் மயிலம்மா எனக்குப் பொண்டாட்டியாக வந்தா மட்டும் போதும்! இதுவரைக்கும் நீ பட்ட கஷ்டம்லாம் போதும். என்கிட்ட வந்துடுடா மயிலம்மா” அவளின் நெற்றியில் தனது நெற்றியை லேசாக முட்டியவாறு உரைத்தவனின் ஸ்வாசத்தை முகத்தில் தாங்கி அவ்வுணர்வை கண் மூடி உள்வாங்கியவள் சட்டெனக் கண்களைத் திறந்து அவனது தோளைப் பற்றித் தள்ளி நிறுத்தினாள்.
“இல்ல குமரா! நான் வேண்டாம் உனக்கு” என்றவளாய் விறுவிறுவென அங்கிருந்து கிளம்பி வெளியே வந்தவள் வாசலில் எதிர்பட்டவனின் மீது இடித்து நின்றாள்.
“சாரி சிஸ்டர்” என்றவன் விலகிய நேரம், இளமயிலின் அருகில் வந்து அவளின் கையினைப் பிடித்து நிறுத்திய இளங்குமரன், “டேய் மதி! இவ தான் இளமயில்” என்றான்.
மதியழகனின் இந்தப் பேச்சில் சட்டென இதழில் குறுநகை இழையோட, “ஓ நீங்க தான் அந்த மதியா? கௌசல்யா எப்படி இருக்கா?” என்று அவளைப் பற்றிச் சில நொடிகள் மதியிடம் பேசியவள், “கையை விடுடா” என்று குமரனின் காதோடு உரைத்தாள்.
“மதி! மயிலு என்னைக் கல்யாணம் செய்ய ஒத்துக்க மாட்டேங்கிறாடா! ஸ்கூல்ல அவ லவ் சொல்லும் போது நான் ஒத்துக்கலைனு கோபம் அவளுக்கு” என்று மதியிடம் அவன் கூற, “குமரா” என்று பல்லைக் கடித்தவாறு கோபத்துடன் உரைத்த இளமயில் கையை அவனது பிடியிலிருந்து உதறியவளாய்,
“இன்னும் கல்யாணம் ஆகாத உங்க ஃப்ரண்ட் என்னை இரண்டாம் திருமணம் செஞ்சிக்க நினைக்கிறாரு! அவருக்கேத்த பொண்ணா பார்த்துக் கல்யாணம் செஞ்சிக்கச் சொல்லி அட்வைஸ் செய்யுங்க மதி” என்றவளாய் அங்கிருந்து படிக்கட்டில் இறங்கியவள் விறுவிறுவென வாசலை அடைந்து தியாகராஜனிடம கூடக் கூறாது சாலையில் நடக்கத் தொடங்கியிருந்தாள்.
“மயிலு! மயிலு” என்றவாறு படிக்கட்டில் இறங்கிய இளங்குமரனையும் கோபமாய் வெளியே சென்ற இளமயிலையும் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் வேடிக்கைப் பார்க்க, “என்னடா ஆச்சு” என்று கேட்டவாறு அவனருகே வந்தார் தியாகராஜன்.
“ம்ப்ச் நீங்க சொன்னா மாதிரி ஒத்துக்க மாட்டேங்கிறாப்பா! எப்படி இவளை சம்மதிக்க வைக்கப் போறேனோ?” சலிப்பாக உரைத்தான் அவன்.
“இதுக்கே அசந்துட்டா எப்படி? பிடிச்ச பொண்ணைக் கல்யாணம் செஞ்சிக்கனும்னா கொஞ்சம் மெனக்கெட்டு தான் ஆகனும்” மெல்லிய சிரிப்புடன் மகனுக்கு ஊக்கம் கொடுத்தார் தியாகராஜன்.
ஹ்ம்ம் என்று பெருமூச்சு விட்டவனாய், “சரிப்பா! ரோடுல நடந்து போய்ட்டு இருப்பா! நான் அவளை வீட்டுல விட்டுட்டு வரேன்” என்று கிளம்பியவன் வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றான்.
மனமே ஆறவில்லை இளமயிலுக்கு. தானே தனது வாழ்வை இத்தனை சிக்கலுக்குள் ஆழ்த்தி விட்டோமே என நொந்து போனவளாய்,
‘எவ்ளோ பெரிய முட்டாள்தனம் செஞ்சி வச்சிருக்கேன். அப்பவே பெங்களூர்ல அவனைப் பார்த்து பேசியிருந்தா எந்தக் குற்றவுணர்வும் இல்லாம கல்யாணம் செஞ்சிருக்கலாமே! இப்ப அவனைக் கல்யாணம் செய்ய எனக்கு என்ன தகுதி இருக்கு?’ மனத்தோடு புலம்பியவாறே சாலையில் நடந்து சென்றிருந்தாள் இளமயில்.
நிஜத்தை எதிர்கொள்ளத் தைரியமற்று தான் செய்த செயலின் பலனாய் தனக்கு வாழ்வு அளித்திருந்த இன்னல்களை எண்ணி மனம் குமுறியவாறு சாலையில் நடந்து சென்றிருந்தவளின் அருகில் வண்டியை கொண்டு வந்து நிறுத்திய இளங்குமரன்,
அமைதியாக வண்டியின் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்தவளை வீட்டில் இறக்கி விட்டு, அவளுடன் சேர்ந்து இவனும் வீட்டிற்குள் நுழைந்தான்.
இளமயில் தனது அறைக்குள் செல்ல, இவனிடம் வந்த அம்பிகா, “என்னடா சொன்னா என் மருமக?” பூரித்த முகத்துடன் குசுகுசுவெனத் தழைந்த குரலில் கேட்டார்.
“ஹான் உங்க மருமகளா வர்றதுக்கு அவளுக்கு விருப்பமில்லைனு சொல்றா! அதான் நான் சொன்னேனே அவளை மலை இறக்கிறது கஷ்டம்னு! ஸ்கூல்ல அவ லவ்வை நான் ஏத்துக்காம போனதை வச்சி சும்மாவே ஒத்துக்க மாட்டானு நினைச்சேன். இப்ப அவளுக்கு டிவோர்ஸ் வேற ஆகிருக்கு. அந்தக் கல்யாணத்துல என்னாச்சோ என்ன பிரச்சனையோ?” என்றவாறு அமைதியானவன்,
தாயின் கண்களை நோக்கியவனாய், “பயமாயிருக்கு மா! இந்தத் தடவையும் அவளை மிஸ் செஞ்சிடுவேனோனு ரொம்பப் பயமாயிருக்கு” கரகரத்த குரலில் உரைத்தான்.
மகனின் இந்தப் பரிதவிப்பான கலங்கிய குரலில் கண்களில் நீர் சூழப்பட்டவராய் அவனது தலையை ஆதூரத்துடன் கோதியவர், “அம்மா இருக்கப் பயமேன்! ஆனாலும் அவளுக்குக் கொஞ்சம் நேரம் தரனும்லடா” என்றார்.
தாயின் கரங்களைப் பற்றியவனாய், “இல்லமா நேரம் கொடுத்தா இன்னும் என்னை விட்டுத் தூரமா போய்டுவாளோனு பயமா இருக்கு! அதுவுமில்லாம என்னால இப்படி இவ சம்மதிப்பாளா மாட்டாளானு இருதலைக்கொள்ளியா இருக்க முடியலைமா. நடக்கும் நடக்காதுனு ஏதாவது ஒன்னு தெரிஞ்சிட்டா நான் என் வேலைல மனசை கொண்டு போய் அடுத்த வேலையைப் பார்க்க போய்டுவேன். யூ ஆர் மை ஒன்லி ஹோப் மா! பிளீஸ் அவகிட்ட பேசி புரிய வைமா” என்றவன் கெஞ்சும் பார்வையுடன் தாயை நோக்கினான்.
சின்ன வயது இளங்குமரனைக் காண்பது போலவே அவருக்குத் தோன்ற, மகனின் கன்னத்தை ஆதூரத்துடன் தடவியவராய், “நான் பேசுறேன். கண்டிப்பாக உங்க கல்யாணம் நடக்கும். நீ கவலைப்படாம உன் வேலையைப் பாரு” என்று அனுப்பி வைத்தார்.
தனது அறைக்குள் சென்ற இளமயில் ஓய்வறைக்குள் சென்றவளாய் தண்ணீரைத் திறந்து விட்டு அப்படியே தரையில் மடிந்தமர்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
அவளுக்குத் தேநீர் தயாரித்து விட்டுக் காத்திருந்த அம்பிகா, கால் மணி நேரம் ஆகியும் அவள் வராதிருப்பதை எண்ணி வருந்தியவராய் அவளின் அறைக்குள் சென்று ஓய்வறையின் கதவைத் தட்டினார்.
அது வரை எண்ணங்கள் எங்கெங்கோ பயணிக்கக் கண்ணீர் புரண்டோட அமர்ந்திருந்தவள், விறுவிறுவெனக் கண்களைத் துடைத்துக் குரலைச் செருமிச் சரி செய்தவளாய், “என்ன அத்தை?” என்று சத்தமாய்க் குரல் கொடுத்தாள்.
“உனக்காக டீ போட்டு வச்சி ரொம்ப நேரம் ஆகுது. ஆறிடும் சீக்கிரம் வா மா!” என்று அழைத்தார்.
“இதோ வரேன் அத்தை” என்றவள் அடுத்தப் பத்து நிமிடத்தில் சமையலறையில் அவர் முன்பு சென்று நின்றாள்.
சிவந்து வீங்கிய விழிகளே அவள் அழுதிருக்கிறாள் என்று பறைசாற்ற, “என்னம்மா அழுதியா?” என நேரடியாகக் கேட்டார் அம்பிகா.
இல்லையெனத் தலை அசைத்தவள், அவரின் அழுத்தமான பார்வையில் ஆமாம் என்று அசைத்தாள்.
“என் பையனை உனக்குப் பிடிக்கலையா? அவன் கல்யாணத்துக்குக் கேட்டதை நினைச்சி தான் அழுதியா?”
இளங்குமரன் மூலம் இவர்களின் பள்ளிக்கால உரையாடல்களைக் கேட்டறிந்திருந்தாலும் இவளின் வாயிலிருந்து வார்த்தையை வர வைப்பதற்காகவே இவ்வாறு கேட்டிருந்தார் அம்பிகா.
தனது கை விரல்களைப் பார்த்தவாறே, “குமரனை எப்படி எனக்குப் பிடிக்காம போகும் அத்தை! முதல் கல்யாணமாவே குமரனை கல்யாணம் செய்யாம போய்ட்டேனேனு தான் அழுதேன்” என்றவள்,
“நீங்க ஏன் அத்தை எங்ககிட்ட சொல்லாம கொள்ளாம சென்னைக்கு வந்தீங்க? சென்னைக்கு வந்த பிறகு எங்களுக்கு போன் செஞ்சி பேசியிருக்கலாம் தானே. நம்ம இரண்டு குடும்பமும் தொடர்பிலேயே இருந்திருந்தா இந்தப் பிரச்சனை எல்லாம் வராமலேயே போய்ருக்கும்! நான் என் இளா மச்சானை கல்யாணம் செஞ்சி சந்தோஷமா வாழ்ந்திருப்பேன்” எனக் கூறி அழுதாள்.
அதிர்ந்தவராய் அவளைப் பார்த்தவர், “உங்கம்மா உன்கிட்ட எதுவும் சொல்லலையா மயிலு பாப்பா” எனக் கேட்டார்.
நெற்றிச் சுருங்க கேள்வியுடன் அம்பிகாவை ஏறிட்டவளாய், “அம்மா என்ன சொல்லனும்? அவங்க ஒன்னும் சொல்லலையே! அம்மாவும் நானும் தான் திட்டக்குடி வந்து உங்களை காணாம தேடினோம்” என்றாள்.
“நாங்க ஊரை விட்டு கிளம்பும் போது உங்கம்மாவோட ஸ்கூலுக்கு போன் செஞ்சி அப்ப அங்க இருந்த அட்டெண்ட்டர்கிட்ட இந்த விஷயத்தை மரகதத்துக்கிட்ட சொல்லிடுங்கனு சொல்லிருந்தேன்! ஆனா அவர் சொல்லாம விட்டுட்டாரு போல! அதான் நீங்க விஷயம் தெரியாம எங்களை பார்க்க வந்திருக்கீங்க போல! ஆனா நீங்க அப்படி வந்தது தான் தப்பா போயிடுச்சு” என்று பெருமூச்செறிந்தார் அம்பிகா.
“நீங்க எங்க வீட்டை பார்த்துட்டு நாங்க இல்லைனதும் முத்து வீட்டுக்கு போனீங்களா? அங்கே முத்து மனைவி செண்பகமும் உங்கம்மாவும் பேசினது எதுவும் தெரியாதா உனக்கு மயிலு?” எனக் கேட்டார்.
தெரியாது என்று தலையசைத்தவள், “நாங்க முத்து மாமா வீட்டுக்கு போனதும் நான் கௌசல்யாவைக் கூட்டிக்கிட்டு ஸ்கூலுக்கு போய்ட்டேன் அத்தை. எனக்கு குமரன் டுவெல்த் மார்க் தெரிச்சிக்கனும்னு அவ்ளோ ஆர்வம். அதான் அதை தெரிஞ்சிக்க போனேன்” என்றாள்.
ஹ்ம்ம் என்று பெருமூச்சு விட்டவராய், “முத்துக்கும் செண்பகத்துக்கும் குமரனை அவங்க பொண்ணு கௌசல்யாவுக்கு கட்டிக் கொடுக்கனும்னு ஆசை மயிலு. அப்ப நீயும் குமரனும் ஒன்னா படிச்சிட்டு இருக்கும் போதே ஒரு நாள் என்கிட்ட வந்து செண்பகம் பேசினாள். குமரனுக்கும் உனக்கும் தான் கல்யாணம் செய்து வைக்கனும்னு ஆசை எனக்கு மயிலு. ஆனா அந்த நேரம் பத்தாவது படிக்கிற வயசுல இந்தப் பேச்சு வேண்டாமேனு பொதுவாக செண்பகத்துக்கிட்ட சொல்லிட்டேன். ஆனாலும் ஊரை விட்டு போற அன்னிக்கு பையன் தான் காலேஜ் போக போறானே இப்பவாவது நம்பிக்கையா சொல்லிட்டு போலாம்லனு செண்பகம் கேட்டாள். செண்பகம் மனசுல ஆசையை வளர்த்துட்டு மகளை வச்சிக்கிட்டு காத்துட்டு இருக்க கூடாதேனு, காலேஜ் முடிச்சதும் குமரனுக்கு விருப்பம்னா மயிலை கட்டி வைக்கலாம்னு நினைக்கிறேன்னு சொன்னேன். அவ முகம் உடனே சுருங்கிப்போச்சு. சரி என் பொண்ணு கொடுத்து வச்சது அவ்ளோ தான்னு சொல்லிட்டு போய்ட்டா! முத்துவுக்கும் இதை கேட்டு அதிர்ச்சி தான் போல!”
“அடுத்த சில நாள்கள்ல நீயும் உங்கம்மாவும் வந்து நிக்கவும், செண்பகம் மனசு தாங்காம பேச்சு வாக்குல, உங்க பொண்ணுக்கு தான் குமரனை கட்டி வைக்கணும்னு காத்து கிடக்குறவ உங்ககிட்ட பேசாம இருப்பாளா! சென்னைல செட்டில் ஆனதும் போன் செஞ்சி பேசுவாங்கனு சொல்லிருக்கா”
“ஓ இது எனக்கு தெரியாது அத்தை! அப்ப நீங்க திரும்பவும் அம்மாவுக்கு போன் செஞ்சி பேசுனீங்களா?” எனக் கேட்டாள் இளமயில்.
ஆமென தலையசைத்த அம்பிகா, “உன் பையனுக்கு என் பொண்ணை கட்டி வைக்கிற ஆசையோட பேசுறனா இனி எனக்கு போன் செய்யாதனு சொன்னா உங்க அம்மா! நீங்க பத்தாவது படிக்கும் போதே பேச்சு வாக்குல நான் உங்கம்மாகிட்ட நம்ம பிள்ளைங்க ஆசைப்பட்டா கட்டி வைக்க மாட்டியா மரகதம்னு கேட்டிருக்கேன் மயிலு. அவங்க ஒத்துக்கிட்டா செய்து வைப்பேன்னு பெருந்தன்மையா அப்போ சொன்னவ, அன்னிக்கு போன்ல அப்ப வேற வழி இல்லாம பாதுகாப்பா கிடைச்ச குடும்பத்தை எதிர்க்க மனசில்லாம மண்டையை ஆட்டினேன்னு சொன்னா. ‘என்னை மாதிரி என் பொண்ணும் கஷ்டப்பட வேண்டாம்னு நினைக்கிறேன் அம்பி. இப்ப உங்க குடும்பம் இருக்க நிலைமைல இது சரி வராது. அவளாவது நிறைய வசதியுள்ள நல்ல இடத்தில் வாக்கப்பட்டு நல்லா இருக்கட்டும்னு நினைக்கிறேன் அம்பி. ப்ளீஸ் இனி எனக்கு போன் செய்யாதே! உன்கிட்ட பேசாம உன்னை விட்டு விலகி போறது எனக்கும் கஷ்டம் தான் அம்பி. ஆனா என் பொண்ணை உன் பையனுக்கு கட்டி வைக்கிற ஆசைல இருக்கிற உன்கிட்ட தொடர்ந்து பேசி நம்பிக்கையை கொடுக்க விரும்பலை அம்பி. அதனால இனி எனக்கு போன் செய்யாத அம்பினு’ சொல்லி என் பேச்சை கூட கேட்காம போனை வச்சிட்டா” என்றார்.
“சரி நடந்தது நடந்து போச்சு. அதை மறந்துடுவோம். இப்ப என் மகனை கட்டிக்கோ மயிலு” என்றார் அம்பிகா.
கண்களில் நீருடன் இல்லை எனத் தலையசைத்தவளாய், “குமரனுக்கு நான் வேண்டாம் அத்தை. பிளீஸ் அவனுக்கு வேற நல்ல பொண்ணா பார்த்துக் கல்யாணம் செஞ்சி வையுங்களேன்” கெஞ்சும் பார்வையுடன் கேட்டாள்.
“சரி நீயே பொண்ணு பார்த்துக் கட்டி வைக்கிறீயா அவனுக்கு?” எனக் கேட்டார்.
“ம்ப்ச் அத்தை! என் மனநிலை உங்களுக்குப் புரியுதா இல்லையா? பொண்டாட்டியோட அவன் வந்து நின்னிருந்தா கூட நான் சந்தோஷம் தான் பட்டிருப்பேன். எங்கிருந்தாலும் சந்தோஷமா வாழட்டும்னு அவனுக்காக வேண்டிக்கிட்டு இருந்திருப்பேன். இப்படி என்னைக் கல்யாணம் செய்றேன்னு சொல்லி வந்து நிக்கிறவனுக்கு எப்படி நான் வேற பொண்ணு பார்த்து கட்டி வைக்க முடியும். அதெல்லாம் பார்க்கிற சக்தி என் மனசுக்கு இல்லை. எனக்கு இரண்டாம் தாரமாவும் அவன் வேண்டாம். நீங்க எல்லாரும் என் கண்ணுல படாம எங்கேயாவது போய் வாழுங்க. அப்ப தான் நான் நிம்மதியா இருக்க முடியும்” என்றவளாய் தனது அறைக்குள் சென்று கதவைச் சாற்றிக் கொண்டாள் இளமயில்.