ஒரு வாரத்திற்கு முன்பு பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்தான் இளங்குமரன்.
இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்பு முடிந்ததும் அரசு மருத்துவராய்ப் பணியாற்றிக் கொண்டிருந்த இளங்குமரன், முதுகலைப் பட்டப்படிப்பு படிப்பதற்காக அப்பணியை ராஜினாமா செய்து விட்டுக் கல்லூரியில் சேர்ந்து படித்து முதுகலைப் பட்டம் பெற்ற பின்பு தான் இப்பொழுது சொந்த மருத்துவமனை வைத்திருக்கிறான்.
அவன் முன்பு பணியாற்றிய அந்த அரசு மருத்துவமனையின் மூலமாகத் தான் இம்மாநாட்டிற்கு இவனுக்கு அழைப்பு வந்திருந்தது.
மூன்று நாள்கள் அங்குத் தங்கியிருந்து பல்வேறு தலைப்புகளில் பல மருத்துவர்கள் தங்களது உரையை வழங்கியிருக்க, உணவும் மனநலமும் என்ற தலைப்பில் இவனைப் பேச அழைத்திருந்தனர்.
“உணவும் மனநலமும் என்ற தலைப்பில் பேச வருகிறார் டாக்டர் இளங்குமரன்” என்ற அறிவிப்பில் அந்த அரங்கத்தின் மூலையில் பணியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த அர்ஜூன் சட்டென மேடையை நோக்கித் திரும்பினான்.
“மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது, இராமர் கறி சாப்பிட்டாரா இல்லையானு உணவை வைத்தே அரசியல் நடந்துட்டு இருக்க இந்த நேரத்துல, இந்த ஆர்கனைஸருக்கு என் மேல என்ன கொலைவெறினு தெரியலை, இப்படி ஒரு தலைப்பை எனக்குக் கொடுத்திருக்காரு” சிரித்தவாறே தெளிந்த ஆங்கிலத்தில் இவ்வாறாகத் தனது பேச்சை அவன் தொடங்கவும் அரங்கத்திலிருந்த அனைவரும் சிரித்திருந்தனர்.
புன்னகைப் புரிந்த அர்ஜுனின் பார்வை முழுவதும் இளங்குமரனிடம் தான் இருந்தது.
“எந்த வம்புலயும் சிக்காம எப்படிப் பேசுறாருனு பார்க்கலாம்னு நினைச்சி கொடுத்திருக்காங்கனு பாசிட்டிவ்வாவே இதை எடுத்திருக்கிறேன் நான். அப்படியே வம்பு வந்தாலும் பிரச்சனை இல்லைங்க. அதுவே என்னைப் பிரபலம் ஆக்கிடும். இப்பலாம் நெகட்டிவ் மார்க்கெட்டிங் மூலமாகப் பிரபலமாகுறவங்க தானே அதிகம்” என்றதும் மேலும் பலர் சிரித்திருந்தனர்.
“சரி நம்ம டாபிக்கு வருவோம். உணவும் மனநலமும். உணவிற்கும் மனத்திற்கும் சம்பந்தம் உண்டானு கேட்டீங்கனா, ஆமா உண்டு. எப்படிச் சம்பந்தம் உண்டுனு ஒரு சிம்பிள் எக்ஸ்சாம்பிள் சொல்றேன். காலைல பொங்கல் சாப்பிட்டா என்னாகும்?” என்றவன் கேட்டதும்,
பார்வையாளர்களில் சிலர், “நல்லா தூக்கம் வரும் டாக்டர்” என்றனர்.
“இந்தத் தூக்கம் உங்க மூளையின் செயல்பாட்டைச் சுணங்க செய்து காலையில் நீங்க திட்டமிட்ட மாதிரி உங்க வேலையை முடிக்க விடாம செஞ்சா என்னாகும்?” எனக் கேட்டான் இளங்குமரன்.
“செம்ம கடுப்பாகும் டாக்டர்” என்று பலரும் சிரித்தவாறு கூறவும்,
“அப்ப உணவுக்கும் உணர்வுக்கும் சம்பந்தம் இருக்கு தானே” என்று சிரித்தான் இவன்.
“இது சும்மா உங்களுக்குப் புரியறதுக்காகச் சொன்னேன். ஆனால் உண்மையாகவே ஒவ்வொரு உணவுக்கும் நமது உடலில் ஆற்றலை பெருக்கவும் குறைக்கவும் செய்யும் வல்லமை இருக்கு. அது சைன்டிபிக்கா நிரூபிக்கவும் பட்டிருக்கு” என்றான்.
இளங்குமரனின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த அர்ஜூனின் கண்களோ, அரங்கின் மேடையில் வைக்கப்பட்டிருந்த மருத்துவர்களின் பெயர்ப்பலகையைப் பார்த்தன.
“ஏன்ப்பா இந்தப் பொண்ணுகளுக்குலாம் கல்யாணம் ஆகிடுச்சா இல்லையானு மிஸ் ஆர் மிஸஸ்னு போட்டிருக்க அவங்க பேருலயே கண்டுபிடிக்க முடியுற மாதிரி ஆண்களுக்கு ஏன் எதுவும் வைக்காம போய்ட்டாங்க. எங்க பார்த்தாலும் மிஸ்டர் அர்ஜூன் மிஸ்டர் அர்ஜூனு பார்த்து உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா இல்லையானு தெரிஞ்சிக்க நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா?” என்று தனது மனைவி அர்ச்சனா தன்னிடம் காதலை மொழிந்த போது உரைத்தது இப்பொழுது நினைவினில் வந்து அவனை முறுவலிக்கச் செய்திருந்தது.
‘அச்சுமா சொன்னது சரி தான்’ என்றெண்ணிக் கொண்டவனாய்,
‘இப்ப இவருக்குக் கல்யாணம் ஆகிடுச்சா இல்லையானு எப்படிக் கண்டுபிடிக்கிறது’ என்று யோசித்தவாறே இளங்குமரனின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
“இரவும் பகலும் நம்ம உடலுக்குள்ள நடக்கும் அனைத்து இயக்கங்களையும் நம்ம மூளை தான் கட்டுப்படுத்துது. அந்த மூளை செயல்படுவதற்கான ஆற்றல் உணவிலிருந்துதான் கிடைக்குது. ஆக, நாம என்ன சாப்பிடுறோம் என்பது மனநலத்துக்கு ரொம்ப முக்கியம்”
“என்னதான் உடல்நலம் நன்றாக இருக்க ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டாலும், மனநலம் நன்றாக இருந்தால்தான் சந்தோஷமா வாழ முடியும். உணவு வகைகளில் மனஅழுத்தத்தைப் போக்கும் உணவுகள்னே சிலது இருக்கு. சிவப்பு அரிசியில் உள்ள ரைபோப்பிளேவின் என்ற விட்டமின் ‘பி’, மூளை செல்களின் ஆற்றலை வெளிப்படுத்துது. இது நம்ம மனம் அமைதியடையவும், கற்கும் திறன், ஞாபக சக்தி மேம்படவும் உதவுது. வாழைப்பழம் மனஅழுத்தத்திற்கு நல்லது. கருப்பட்டியில் விட்டமின் ‘பி 6’ மற்றும் ‘பி 12’ இருக்குது. இதை வெதுவெதுப்பான பாலில் கலந்து குடிச்சா மனச்சோர்வு நீங்கி உற்சாகமா இருக்க முடியும்.
இதே போல மனப்பதற்றத்தை கட்டுப்படுத்தும் குணம் தயிருக்கு உண்டு. அதனால தான் எக்ஸாமுக்கு போகும் போது தயிருல சர்க்கரை கலந்து சாப்பிடுற பழக்கத்தை நம்முடைய முன்னோர்கள் ஏற்படுத்தி வச்சிருக்காங்க. அதே மாதிரி தயிர் தொடர்ந்து சாப்பிட்டால் நினைவு திறனும் மேம்படும்”
இவ்வாறாகத் தொடர்ந்து ஒரு மணி நேரம் பேசியவன் தனது உரையை நிறைவு செய்த பொழுது, பலத்த கைத்தட்டல்கள் அரங்கில் எதிரொலித்தன.
மதிய உணவிற்காக அந்த மாநாடு நடந்து கொண்டிருந்த ஐந்து நட்சத்திர விடுதியின் உணவகத்திற்குச் சென்று அவன் அமர்ந்ததும், அவனருகே வந்து கையைப் பிடித்துக் குலுக்கி, “அருமையான பிரசன்டேஷன் டாக்டர்” என மனதாரப் பாராட்டினான் அந்த ஐந்து நட்சத்திர விடுதியின் மேலாளரான அர்ஜூன்.
“ஐம் அர்ஜூன்! இந்த ஹோட்டல் மேனேஜர். ரொம்ப உபயோகமானதா இருந்துச்சு உங்க பேச்சு” எனப் புகழ்ந்தவாறு தன்னைத் தானே அறிமுகம் செய்து கொண்டவனாய், “நான் உங்க கூட லன்ச் ஜாயின் செஞ்சிக்கலாமா?” எனக் கேட்டான்.
“ஓ ஷ்யர்” என்றவாறு சிரித்த முகமாய் வரவேற்ற இளங்குமரனின் உள்ளமோ, ‘யாரு இவரு? நமக்குத் தெரிஞ்சவர் மாதிரி இல்லையே? நம்ம பேச்சுப் பிடிச்சி தான் பேச வந்திருக்காரா?’ என்று சிந்தித்திருந்தது.
“உங்க பெயரைப் பார்த்ததும் தமிழ் ஆளுனு ஒரு சந்தோஷம். எனக்குச் சென்னை தான். அப்பா அம்மாலாம் அங்கே தான் இருக்காங்க. மனைவிக்கு இங்கே தான் வேலை அதனால மேரேஜூக்கு பின்னாடி நானும் அப்படியே இங்கே வேலை மாத்திட்டு வந்துட்டேன்” என்று அர்ஜூன் கூறியதைக் கேட்டவனாய்,
“எனக்கும் சென்னை தான்ங்க. அம்மா அப்பாலாம் சென்னைல தான் இருக்காங்க” என்றான் இளங்குமரன்.
“ஓ அப்ப மனைவியும் அங்கே தான் இருக்காங்களா?” என்று இயல்பாய் கேட்பது போல் அர்ஜூன் கேட்க,
“இல்லைங்க இன்னும் மேரேஜ் ஆகலை” என்றான் இளங்குமரன்.
அர்ஜூனின் முகம் சட்டெனப் பொலிவிழந்து நெற்றி யோசனையில் சுருங்கியது.
இளமயிலை இளங்குமரன் மணந்திருப்பான் என்ற நம்பிக்கையில் பேச வந்தவனுக்குப் பெருத்த ஏமாற்றம்.
‘கல்யாணம் ஆகலையா? அப்ப மயிலு இவரை இன்னும் கல்யாணம் செஞ்சிக்கலையா?’ என்று எண்ணியவனாய் மேலும் பேசாது அமைதியாக இருந்தான்.
இருவருமாகத் தங்களது குடும்பத்தைப் பற்றிய பரஸ்பர உரையாடலுடன் அங்கே தாங்களே பரிமாறிக் கொள்ளும் முறையில் வைத்திருந்த உணவினை எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்து உண்ணத் தொடங்கியிருந்தனர்.
“என்ன அர்ஜூன்? திடீர்னு சைலண்ட் ஆகிட்டீங்க?” என்று இளங்குமரன் கேட்கவும்,
‘கேட்கலாமா? வேண்டாமா?’ என்று மனத்திற்குள் போராட்டம் நடத்தியவனாய்,
“இளமயிலை தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்டான் அர்ஜூன்.
ஆச்சரியத்தில் விழிகள் விரிய அர்ஜூனைப் பார்த்த இளங்குமரன், “ஓ மயிலோட ஃப்ரண்ட்டா நீங்க? என்னைப் பத்தி உங்ககிட்ட சொல்லிருக்காளா அவ?” என்று மகிழ்வுடன் கேட்டான் இளங்குமரன்.
“உங்களுக்காகத் தாங்க மயிலு என்னை டிவோர்ஸ் செஞ்சதே! அப்புறம் எப்படி உங்களை எனக்குத் தெரியாம இருக்கும்” என்று அர்ஜூன் சொன்னதும், “என்ன?” என்று அதிர்ந்தே விட்டான் இளங்குமரன்.
“ஆமா டாக்டர்! மயிலுக்கு என்னைக் கல்யாணம் செஞ்ச பிறகும் மனசாலயும் உடலாலயும் என் கூட ஒன்றி வாழ முடியலை. அவ மனசால என்னை ஏத்துக்கவும் முடியாம ஒதுக்கவும் முடியாம ரொம்பப் போராடினா! அதான் பரஸ்பரம் பேசி விவாகரத்து வாங்கிட்டோம்” என்ற அர்ஜூனை வியப்பு மேலிடப் பார்த்தான் இளங்குமரன்.
‘எனக்காகவா? என்னை மறக்க முடியாமலா அவளோட கல்யாண வாழ்க்கையையே முறிச்சிக்கிட்டு இப்படித் தனிச்சி வாழ்ந்துட்டு இருக்கா?’ நெஞ்சம் முழுவதும் ஒரு விதமான வலியை உணர்ந்தான் அவன்.
“இப்படி ஒரு காதல் ஒரு ஆணுக்குக் கிடைக்கக் கொடுத்து வச்சிருக்கனும் டாக்டர். எனக்கு நிஜமாவே மயிலு உங்களைப் பத்தி சொல்லும் போது பொறாமையா இருந்துச்சு. அவளுக்கு உங்க நினைவோட வாழ்ந்தால் கூடப் போதும். ஆனால் உங்க காதலை மனசுல வச்சிக்கிட்டு வேறொருத்தர் கூட வாழ்க்கையைப் பகிர்ந்துக்கிட்டு வாழ முடியாதுனு சொல்லிட்டா! அப்புறம் ஏன் என்னைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டேனு அவகிட்ட நிறைய சண்டை போட்டிருக்கேன். மயிலால எனக்கும் என் குடும்பத்திற்கும் நிறைய மன வேதனை இருந்துச்சு தான் டாக்டர். ஆனா இதுல மயிலு மேல தப்பு இல்லைனு போகப் போக புரிஞ்சிது. அவ என் கூட வாழனும்னு நிறைய முயற்சி செஞ்சா. ஆனா உங்களோட நினைப்பை வச்சிக்கிட்டு அவளால என் கூட வாழ முடியலை. உங்களுக்குப் புரியுது தானே” என்றவனாய் இளங்குமரனின் கண்களை அவன் பார்க்க,
“எங்களுக்கு விவகாரத்து ஆகி ஏழு வருஷம் ஆகுது. அடுத்த இரண்டு வருஷத்துலேயே இரண்டாவது கல்யாணம் செஞ்சிக்கிட்டேன் நான். எனக்கு இப்ப மூனு வயசுல ஒரு பொண்ணு இருக்கா. மயிலுக்கும் உங்களுக்கும் கல்யாணமாகியிருக்கும்னு நினைச்சி தான் உங்ககிட்ட பேச வந்தேன். ஆக்சுவலி உங்க மேல அவளுக்கிருந்த ஒன் சைட் லவ் பத்தி என்கிட்ட சொல்லிட்டு, தனியா வாழுறேன்னு சொல்லி என்கிட்ட டிவோர்ஸ் கேட்டா. இல்ல அப்படி வாழுறதுக்கு என் கூட இப்படியே லைஃப் லாங் இருந்துட்டு போனு கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். அப்புறம் தான் உங்களை தேடிப் பிடிச்சி கண்டிப்பாக கல்யாணம் செஞ்சிக்கிறதா என்னை கன்வின்ஸ் செஞ்சி டிவோர்ஸ் பேப்பர்ல சைன் வாங்கினா! அவளுக்கு அவளால என் வாழ்க்கை பாழா போகுதேனு குற்றவுணர்வு! அதனாலேயே கட்டாயப்படுத்தி டிவோர்ஸ் வாங்கிட்டா!” என்று பெருமூச்சு விட்டவனாய்,
“ஆயுசுக்கும் ஒருத்தரோட நினைவோட மட்டுமே வாழ்ந்துட்டு போறேன்னு தனிச்சி வெறுமைல வாழுறது கொடுமை இல்லையா? ப்ளீஸ் அவளைக் கல்யாணம் செஞ்சிக்கோங்க டாக்டர்” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அவனது பணிக்கான அழைப்பு வந்துவிட,
“நெக்ஸ்ட் டைம் மயிலோட கணவனாகத் தான் உங்களை நான் பார்க்க விரும்புறேன்” என்றவனாய் கிளம்பிச் சென்றான் அர்ஜூன்.
அன்று அர்ஜூனைச் சந்தித்துப் பேசியவைப் பற்றி இன்று இவ்விரவில் மொட்டை மாடியில் நின்றிருந்த இளங்குமரன் தரையில் அமர்ந்திருந்த இளமயிலிடம் கூற, அவனின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவும் கூசியது அவளுக்கு.
தலையைக் குனிந்தவாறு அமைதியாய் அமர்ந்திருந்தவளின் கண்களில் மேலும் கண்ணீர் பெருக, அவளின் அருகில் அமர்ந்து தோள்களைச் சுற்றி கைப் போட்டவனாய், “ஏன் இப்ப அழற மயிலு? என்னைத் தவிர யாரையும் மனசுல நினைக்க முடியாம தானே அர்ஜுனுக்கு டிவோர்ஸ் கொடுத்த நீ?” என்றதும் விலுக்கென நிமிர்ந்து அவனை அவள் பார்க்க,
அவளின் பார்வையை எதிர்கொண்டவனாய், “அர்ஜூன் சொன்னாரு. கல்யாணத்துக்குப் பிறகும் என்னை மறக்க முடியாம மனசாலயும் உடலாலயும் அவரைக் கணவரா ஏத்துக்க முடியாம தான் நீ டிவோர்ஸ் கொடுத்தனு சொன்னாரு”
“இந்தளவுக்கு உன் மனசுல என்னை வச்சிருக்க நீ ஏன் இப்படி என்னை அவாய்ட் செய்றனு கோபம். அதான் உன் மனசை உனக்கே புரிய வைக்கத் தான் இரண்டு நாளாகப் பேசாம நான் அவாய்ட் செஞ்சேன்” என்றவன் மேலும் தொடர்ந்து,
“ஆனாலும் நான் உன்னைக் காயப்படுத்துவேனோன்ற பயம் உனக்கு இருக்கும்னு எனக்குத் தோணாம போச்சு மயிலு. இதுக்கு என்ன மாதிரியான பிராமிஸ் செய்றதுனு எனக்குத் தெரியலை மயிலு. பிராமிஸ் செய்றதை விட வாழ்ந்து காண்பிக்கிறது தான் சரியா இருக்கும். இருக்கிறது ஒரே வாழ்க்கை. வா வாழ்ந்து பார்த்துடலாம் மயிலம்மா! எனக்கு என் மயிலம்மா வேணும்” என்றான்.
கண்களில் நீருடன் அவனைப் பார்த்தவள் அப்படியே அருகில் அமர்ந்திருந்தவனின் தோளில் தலையைச் சாய்த்துக் கொண்டாள்.
“கணவன் மனைவி இரண்டு பேரும் சண்டை போடாம மனசைக் காயப்படுத்திக்காம வாழ முடியுமா குமரா? அர்ஜுனே என்னை எத்தனை தடவை காயப்படுத்திருக்காரு தெரியுமா? ஆனால் அது என் மேல் தான் தப்பு! நான் உன்னைக் காதலிச்சதை அவர்கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லியிருக்கனும். ஆனா முழுசா அவரை கணவனாக ஏத்துக்கிட்டு வாழ்ந்துடலாம்னு நினைச்சி தான் அந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன் குமரா! அதுக்கான முயற்சி எல்லாமே செஞ்சேன் குமரா!
ஆனா அவரோட வாழ முடியாம என்னையும் கஷ்டப்படுத்திக்கிட்டு அவரையும் கஷ்டப்படுத்தி அவரோட வாழ்க்கையையும் சேர்த்துக் கெடுத்துட்டு இருக்கேன்னு கல்யாணமான ஒரு மாசத்துலயே எனக்கு புரிஞ்சிது.
கல்யாணத்துக்குப் பிறகு என்னோட காதலைப் பத்தி தெரிஞ்சி ரொம்ப மனசொடஞ்சி போய்ட்டாரு. எனக்கு டிவோர்ஸ் கொடுக்க அதுக்குப் பிறகு அவர் சம்மதிச்சாலும், ஒரு குடும்பத்தோட வலிக்கும் வேதனைக்கும் நான் காரணமாகிட்டேனேனு மனசு ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு குமரா.
நான் அவருக்குச் செஞ்ச பாவத்துக்குத் தான் அம்மாவும் இல்லாம யாருமில்லாத அனாதையா கடவுள் என்னைத் தவிக்க விட்டுடாருனு நான் அடிக்கடி நினைச்சிப்பேன்”
“ஹே ஏன் இப்படிலாம் பேசுற?” என்று குமரன் அவளை அதட்ட,
“இல்ல குமரா! யோசிச்சி பாரு! ஆசை ஆசையாகக் கட்டிக்கிட்ட பொண்ணு வேறொருத்தனை காதலிச்சி மறக்க முடியாம தவிக்கிறானு சொன்னா அவருக்கு எப்படி இருக்கும்? ஆனால் அப்ப கூட, பரவாயில்லை, உன் மனசு மாறுற வரைக்கும் நான் காத்துட்டு இருக்கேன்னு தான் சொன்னாரு அவரு!
டிவோர்ஸ் செஞ்சா அவர் வாழ்க்கை என்னாகும்னு ஒரு பக்க குற்றவுணர்வு இன்னொரு பக்கம் என் மனசுக்கும் காதலுக்கும் நான் உண்மையா இல்லங்கிற குற்றவுணர்வு, இரண்டுக்கும் இடையில் தள்ளாடிட்டு என்னை நானே கஷ்டப்படுத்திக்கிறதை பார்த்து தான் அர்ஜூன் எனக்கு டிவோர்ஸ் கொடுத்தாரு.
ஆனாலும் கண்டிப்பாக உன்னை நான் கண்டுபிடிச்சி கல்யாணம் செஞ்சிப்பேன்னு சொன்ன பிறகு தான் டிவோர்ஸ் கொடுத்தாரு”
“நான் வளர்மதியை கல்யாணம் செஞ்சிக்கிட்டேன்னு நினைச்சி தானே நீ என்னை தேடவேயில்லை. அதை ஏன் நீ அவர்கிட்ட சொல்லலை! எனக்கு கல்யாணமாகிடுச்சுனு நீ நினைச்சி வச்சிருந்ததை சொல்லிருந்தா, அவர் டிவோர்ஸ் கொடுக்க மாட்டாருனு பயந்துட்டியா?” எனக் கேட்டான்.
ஆமென தலையசைத்தவள், “அதுவும் இல்லாம கல்யாணமானவரை நினைச்சிக்கிட்டு கட்டின புருஷனை தவிக்க விடுறேன்னு அவர் என்னை தப்பா நினைச்சிடுவாரோனு ஒரு மாதிரி அசிங்கமா ஃபீல்லாச்சு குமரா. ரொம்ப ரொம்ப நல்லவர். அவர் பார்வையில நான் தரம் தாழ்ந்து போறதை விரும்பலை. அதே சமயத்துல அவர் கூட இருந்து அவர் வாழ்க்கையை கெடுக்கவும் நான் விரும்பலை. எங்க இரண்டு குடும்பத்து ஆளுங்ககிட்டயும், எங்க இரண்டு பேருக்கும் ஒத்து வரலை பிரிஞ்சிட்டோம்னு அந்தப் பழியையும் அவரே ஏத்துக்கிட்டாரு. அப்படிப்பட்ட நல்லவரை கல்யாணம் செஞ்சி நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ற குற்றவுணர்வு இன்னும் போகலை குமரா” எனும் போதே குரல் விம்மியது அவளுக்கு.
“அவரோட இரண்டாவது கல்யாணத்துக்கு நான் போனேன். அப்ப மனசுக்கு கிடைச்ச நிம்மதிக்கு அளவே இல்லை தெரியுமா. இப்பவும் எனக்காக அவர் உன்கிட்ட பேசிருக்காருனு கேட்கும் போது என்ன சொல்றதுனு தெரியலை”
அவனது தோளில் சாய்ந்தவாறு அமர்ந்து கூறிக் கொண்டிருந்தவள், மாடிப்படியில் ஏதோ அரவம் கேட்டு சட்டென நகர்ந்து அமர்ந்தாள்.
இவர்கள் இருவரும் எழுந்து நிற்க, படிக்கட்டு வழியாக மேலேறி வந்தார் அம்பிகா.
“ஏன் அத்தை கால் வலி வச்சிட்டு நீங்க மேல வந்தீங்க? கூப்பிட்டிருந்தா நாங்க வந்திருப்போம்ல” எனக் கேட்டாள் இளமயில்.
“பரவாயில்ல மயிலு பொண்ணு. எவ்ளோ நேரம் தான் வீட்டுக்குள்ளயே இருக்கிறது. இப்படிக் காத்தாட வந்தா தான் மனசுக்குக் கொஞ்சம் நிம்மதியா இருக்கு” என்றவராய்,
“சரி இரண்டு பேரும் சேர்ந்து என்ன முடிவு செஞ்சிருக்கீங்க?” எனக் கேட்டார்.
“அம்மா! மயிலு என்னைக் கட்டிக்கிறதா சொல்லிட்டா” என்று தாயைக் கட்டிக் கொண்டு இளங்குமரன் கூறியிருந்த நொடி, இளமயில் கண்கள் விரிய, இல்லை என வாய் திறக்க முனைந்த போது அங்கே வந்த தியாகராஜன்,
“எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா மயிலு! எங்க பையன் கல்யாணத்தைப் பார்க்க இன்னும் இரண்டு வருஷம் காத்திருக்கனுமோ இல்லனா இப்படியே பிரம்மசாரியாவே இருந்துடுவானோனுலாம் ரொம்பவே மனசு கஷ்டமா இருந்துச்சு மயிலு. இதையெல்லாம் சொல்லி உன்னைக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைக்க மனசில்லை மயிலு பாப்பா! இப்ப நீயே ஒத்துக்கிட்டது எவ்ளோ சந்தோஷமாயிருக்கு தெரியுமா? எப்பமா கல்யாணம் வச்சிக்கலாம்” இளமயிலின் கைகளைப் பற்றியவராய் அவளது தியாகு மாமா ஆத்மார்த்தமாய்ப் பேசி ஆர்வத்துடன் கேட்ட பிறகு இவர்களின் மனம் நோகும் வண்ணம் கல்யாணம் வேண்டாம் என்று கூறும் தைரியம் வரவில்லை அவளுக்கு.
“உங்க விருப்பம் போலச் செய்யுங்க மாமா” என்றவளாய் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
இப்பொழுது நிஜமாவே இளங்குமரனுக்கு நெஞ்சம் உற்சாகத்தில் விம்மியடங்கியது.
ஏதோ விளையாட்டாய் தாயிடம் அவ்வாறு கூறியவன் இவள் உடனே சம்மதிப்பாள் என்றெல்லாம் நினைத்திருக்கவில்லை.
“ஹே நிஜமாவா மயிலு?” என்று மீண்டுமாய் அவன் கேட்க,
“அடேய் நீ இப்படித் திரும்பத் திரும்பக் கேட்டு ஓகே சொன்னவளையும் வேண்டாம்னு சொல்ல வச்சிடாத” என்று பதறியவராய் உரைத்த அம்பிகா,
“ஏங்க அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணம் வச்சிக்கலாம். நாளைக்கே ஜோசியரைப் பார்த்து நாள் குறிச்சிடலாம்” என்றார்.
அடுத்தடுத்த திட்டங்களைத் தியாகராஜனும் அம்பிகாவும் துரிதகெதியில் நிகழ்த்த, குன்றத்தூர் முருகன் கோவிலில் முருகனின் ஆசியுடன் எளிமையாய் நடந்தேறியது அவர்களின் திருமணம்.
இளமயிலின் இதயத்தில் மட்டுமே இருந்த இளங்குமரன் அவளின் சரிபாதியாக மாறியிருந்தான்.