“இந்த ஒரு வாரமா எந்த மருந்து அதிகமாக சேல் ஆகிருக்கு? அது எவ்ளோ ஸ்டாக் இருக்கு” என்று பணியாளரிடம் கேட்டவளாக கணிணித் திரையில் மருந்து பொருட்களின் இருப்பினையும் விற்பனையையும் கணக்கிட்டுக் கொண்டிருந்தாள் இளமயில்.
திட்டக்குடியில் முத்து மாமாவை சந்தித்தப்போது தானும் மருந்தகப்படிப்பைப் பயின்று கல்வியாளராய் இருப்பதை உரைத்தவள், மருந்தகக்கடை வைப்பதே தனது வாழ்வின் லட்சியம் எனவும் அதற்கான உரிமத்தை (license) தான் வாங்கி வைத்திருப்பதாகவும் சில மாதங்களுக்குப் பிறகு அக்கடைக்கான பணியைத் தொடங்கலாமெனத் திட்டமிட்டிருப்பதாகவும் உரைத்தாள்.
அதனைக் கேட்டு அகமகிழ்ந்து போன இளங்குமரன், அங்கிருந்து வந்த மறுநாளே தனது மருத்துவமனையிலேயே ஒரு சிறிய அறையை இளமயிலின் மருந்தகக்கடைக்காக ஒதுக்கிக் கொடுத்திருந்தான்.
அடுத்த ஒரு வாரத்தில் பணி நிறைவடைந்து மருந்தகக் கடையாக அச்சிறிய அறை உருமாறியிருக்க, தனது சேமிப்புப் பணத்தைக் கொண்டே பல்வேறு நிறுவனங்களை அணுகி மருந்து கொள்முதல் செய்திருந்தாள் இளமயில்.
இதோ இப்பொழுது அக்கடை திறந்து ஒரு வாரமான நிலையில், எந்தவிதமான நோய்க்குரிய மருந்துகள் இங்கு விற்பனையாகின்றன, எந்தெந்த மருந்துகள் நிறைய வாங்க வேண்டும், எந்தெந்த மருந்துகளைக் குறைவாக கொள்முதல் செய்ய வேண்டுமென்ற கணக்கீட்டில் ஈடுபட்டிருந்தாள் இளமயில்.
காலை கல்லூரி வேலைக்குச் செல்லும் நேரம், கடையைக் கவனித்துக் கொள்ள பணியாளரை நியமித்திருந்தாள். மாலை கல்லூரி விட்டு வந்து அத்தையுடன் அரட்டை அடித்துக் கொண்டே தேநீர் அருந்தி புத்துணர்வாகிக் கடைக்கு வருபவள், இரவு இளங்குமரனுடனும் தியாகுவுடனும் சேர்ந்து வீட்டிற்கு கிளம்பிச் சென்றிடுவாள்.
மாலை நேர மருத்துவ ஆலோசனை நேரத்தில் இளங்குமரனைச் சந்திக்க முன்னேற்பாடு செய்து வந்திருந்த நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தான் இளங்குமரன்.
அன்றைய நாளுக்கான மருத்துவ வேலைகள் முடிந்த பிறகு வெளியே வந்த இளங்குமரன், கணிணி முன்பு தீவிர யோசனையுடன் அமர்ந்திருந்த இளமயிலிடம் வந்தான்.
“ஜோதி, நீங்க இன்னும் கிளம்பலையா? நேரமாகிடுச்சே” என்று அந்த மருந்தகக்கடையின் பணியாளரிடம் கேட்டவாறு இரவு ஒன்பது என்று காண்பித்த கடிகாரத்தைப் பார்த்தான்.
அவள் பிரச்சனையைத் தெரிவித்ததும், தனது கைப்பேசியை எடுத்து ஏதோ எண்ணை அழுத்தியவனாய் காத்திருந்தவன், அங்கே அழைப்பு ஏற்கப்பட்டதும், “அடேய் கௌசல்யா புருஷா! என்ன சாஃப்ட்வேர்டா செஞ்சி கொடுத்திருக்க நீ? என் பொண்டாட்டி இங்கே மண்டயைப் பிச்சிக்கிட்டு இருக்கா?” என்று கேட்கவும் கலகலவென வாய்விட்டு சிரித்தாள் இளமயில்.
“டேய் மயிலு புருஷா! கௌசல்யா புருஷன்னு என்னை கேலி செய்றியா நீ! பொண்டாட்டிக்கு ஒன்னுனதும் எகிறி குதிச்சிக்கிட்டு ஓடி வர உனக்கு தான்டா இந்தப் பட்டப்பேரு சரியா இருக்கும்” என்று இளங்குமரனை வம்பிழுத்தான் அவன்.
அதற்கும் இதழ்விரிய சிரித்தவளாய், “மதி அண்ணா! என் புருஷனைக் கிண்டல் செய்றது இருக்கட்டும். உங்க சாஃப்ட்வேர் என்னைக் குழப்பிட்டு இருக்கு. அதுக்கு கொஞ்சம் ஹெல்ப் செய்யுங்க” என்றாள்.
“சொல்லு தங்கச்சி” என்று அவன் சீரியஸ் மோட்க்கு தாவ, இவளும் பிரச்சனையைக் கூறி கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அடுத்த அரை மணி நேரம் இருவருமாக கைப்பேசியில் பேசியவாறே பிரச்சனை என்னவென ஆராய்ந்து கொண்டிருக்க, தியாகராஜன் பேரங்காடி வேலையை முடித்தவராய் மருத்துவமனைக்கு வந்து எட்டிப் பார்த்தார்.
“அஞ்சு நிமிஷம் மாமா! இதோ வந்துடுறோம்” என்று அவரிடம் கூறியவள் அடுத்த சில நொடிகளில், “புரிஞ்சிடுச்சு மதி அண்ணா. நான் தான் தப்பா பார்த்திருக்கேன். தேங்க் யூ சோ மச்” என்று கைப்பேசியை துண்டித்தாள்.
அவளின் கைப்பையை தனது தோளில் மாட்டியவனாய் கையைப் பிடித்து எழுப்பி இழுத்த இளங்குமரன், “வா! வா! அப்பாக்கு பசிச்சிருக்கும்! கீழே வெயிட் செஞ்சிட்டு இருக்காங்க” என்றான்.
“பேக் கொடு இளா மச்சான்! அதை ஏன் நீ தூக்கிட்டு இருக்க” என்று அவள் அவனது தோளிலிருந்த பையை இழுக்க, “ஏன் அதுல என்ன இருக்கு! பொண்டாட்டியையே தலைல தூக்கி வச்சி கொண்டாடுறவன், பொண்டாட்டி பையைத் தூக்க சங்கடப்படுவேனா என்ன?” அவளிடம் பையைக் கொடுத்தவாறு சிரித்தவனாய் உரைக்க, “ஸ்ஸ்ஸ்ஸ் ஹப்பபாஆஆ உச்சி குளிர்ந்து போச்சுப்பா” என்றவள் சொன்னதும், கலகலத்துச் சிரித்தவனாய் அவளுடன் இணைந்து வெளியே வந்தவன் மருத்துவமனையின் கதவைப் பூட்டினான்.
இருவருமாக கீழே வர, தியாகராஜனும் பேரங்காடியின் இரும்பு இழுப்புக் கதவை அடைத்துவிட்டு காத்திருந்தார். தனது இருச்சக்கர வாகனத்தை பழுது பார்க்கக் கொடுத்திருந்ததினால் மகனுடன் செல்வதற்காகக் காத்திருந்தார்.
மகிழுந்தின் கதவு வழியாக முகத்தில் அடித்து வீசிய மென் தென்றல் காற்றை உள்ளுக்குள் சுவாசித்த இளமயிலின் மனம் நிறைந்திருந்தது.
முன்பு அவள் வாழ்ந்திருந்த தனிமையான வாழ்விற்கு நேர்எதிர்பதமாக வாழும் இக்குடும்பத்துடனான வாழ்வு பெரும் வரமாய் தோன்றியது அவளுக்கு.
மூவருமாக வீட்டிற்குச் சென்றதும் தங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு உணவுண்ண அமர்ந்தனர்.
அவர்களுக்கு அம்பிகா இரவுணவைப் பரிமாற, “மயிலு நீ தங்கியிருந்த வீட்டு ஓனர் போன் செஞ்சாரு! அந்த வீட்டு வாடகைக்கு ஆளு வந்துட்டாங்களாம். அதனால அங்கிருக்க பொருட்களை எல்லாம் வந்து எடுத்துட்டு போகச் சொன்னாரு. உனக்கு போன் செஞ்சாராம் நீ எடுக்கலையாம். அதனால் எனக்குச் செஞ்சதா சொன்னாரு” என்றான் இளங்குமரன்.
சட்டென அவளின் முகம் சுருங்கிக் போக, “அம்மாவோட ஞாபகங்கள் முழுக்க நிறைஞ்சிருக்க வீடு அது குமரா! இவ்ளோ சீக்கிரம் அந்த வீட்டுக்கு வாடகைக்கு ஆளுங்க வருவாங்கனு நினைக்கலை” என்று பெருமூச்சு விட்டவளாய்,
“நாளைக்கு ஒரு நாள் நான் அங்கே தங்கிக்கட்டுமா?” என்றவாறு அனைவரின் முகத்தையும் பார்த்தாள்.
“அது என்ன நான்னு சொல்ற? நாமனு சொல்லு!” என்று இளங்குமரன் சொல்லவும்,
“இல்ல குமரா! நாளைக்கு கவர்மெண்ட் ஹாலிடே எனக்கு! அதான் நாள் முழுக்க அங்கே இருந்துடலாம்னு நினைச்சேன். அப்படியே பொருட்களை பேக் செஞ்சா மாதிரியும் இருக்கும்” என்றாள்.
“ஓ ஓகே” என்று நெற்றிச் சுருங்க யோசித்தவனாய், “காலைல கொண்டு போய் உன்னை அங்கே டிராப் செஞ்சிட்டு நைட் அங்கே உன் கூட வந்து தங்கிக்கிறேன்! ஓகே வா” என்று கேட்டான்.
தியாகராஜனும் அம்பிகாவும் இது தான் சரி என உடனே சம்மதிக்க, இவளும் தலையை ஆட்டினாள்.
மறுநாள் காலை அவளின் வீட்டில் இறக்கி விட்ட இளங்குமரன், அவளுடன் வீட்டிற்குள் சென்றான்.
முகப்பறையில் இருந்த தாய் தந்தையரின் படத்தைப் பார்த்தவாறு நின்ற இளமயில், “ம்மா நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நீ ஆசைப்பட்ட மாதிரியே நல்ல கணவன், மாமியார், மாமனார்னு நல்ல வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கேன். நீ இப்ப ஹேப்பி தானே” என்று கேட்டாள்.
சத்தமாய் பேசியிருந்த அவளின் பேச்சில் அவளருகில் தோளில் கைப்போட்டவனாய் வந்து நின்றான் இளங்குமரன்.
“ஆஹா! இது அம்மா சொல்ற மாதிரி இல்லையே! நீ ஆசைப்பட்டு சொல்றா மாதிரி இருக்கே” என்று அவனது சட்டையின் பொத்தான்களைத் திருகினாள்.
“ஆசைப்படுறதுல தப்பில்லையே” என்றவன் கண்களைச் சிமிட்ட, அவன் மார்போடு முகத்தைப் புதைத்துக் கொண்டவளாய் வாயை அசைத்து, “எனக்கும் ஆசையா தான் இருக்கு இளா மச்சான்! ஆனா என்னமோ ஒரு பயம், தயக்கம்” என்றாள்.
அவளைத் தன்னோடு இறுக்கி அணைத்தவனாய், “மயிலு பொண்ணுக்கு குழந்தை பெத்துக்கிறதுல பயமா இல்லை குழந்தைப் பெத்துக்கிற பிராசஸ்ல பயமா?” என்று அவளின் காதோடு மெல்லிய குரலில் கேட்கவும்,
“அச்சோ போ மச்சான் நீ!” முகம் செவ்வானமாய் சிவக்க, குழையும் குரலில் உரைத்தவளாய் மேலும் அவன் மார்போடு முட்டிக் கொண்டு முகத்தைப் புதைத்தாள்.
“ஹே நிஜமா தான் கேட்குறேன் மயிலம்மா! இந்த விஷயத்துலயும் நான் உன்னை காயப்படுத்திடுவேன்னு பயப்படுறியோனு தெரிஞ்சிக்க தான் கேட்குறேன்” என்றான் அவன்.
மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தவளாய், “அதான் என்னை விட்டு இன்னும் ஒதுங்கி இருக்கியா?” எனக் கேட்டாள்.
“எங்கே ஒதுங்கி இருக்கேன். இதோ எந்நாளும் இப்படி ஒட்டிக்கிட்டு தானே இருக்கேன்” இருவரும் கட்டிக்கொண்டு நின்ற நிலையைக் காட்டியவனாய் அவன் கூற,
“என்னைக் காயப்படுத்திலாம் ஒரு விஷயத்தை நீ செய்ய மாட்டனு இப்ப உன் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு இளா மச்சான். அந்தப் பயத்தை நீ முதல்ல உதறித் தள்ளு” என்றாள்.
அவளின் நெற்றியில் முத்தமிட்டு தன்னோடு அணைத்துக் கொண்டவனுக்கு, அவனது மருத்துவத்தோழி, “முதல்ல பொண்டாட்டிகிட்ட மனசு விட்டு பேசுடா! நீயா ஒன்னு கற்பனை செஞ்சிக்கிட்டு ஒதுங்கி நிக்காத” என்று கூறியது எத்தனை சரியானது என்று தோன்றியது.
“சரி நீ கிளம்பு மச்சான். நான் எல்லாத்தையும் பேக் செய்றேன். பேக் செஞ்சதை நம்ப வீட்டுக்கு கொண்டு போறதுக்கு சாய்ந்திரமா ஆளுங்களை அனுப்பி வை” என்றவளாய் இளங்குமரனை அனுப்பி வைத்தாள்.
மதியம் இவளுக்கான உணவைக் கொண்டு வந்தவராய், சிறிது நேரம் இவளுடன் இருந்து உரையாடியவாறு உதவி செய்துவிட்டு மாலை வீட்டிற்கு சென்றார் அம்பிகா.
இரவுணவை தாய் தந்தையருடன் உண்டு விட்டு அவளுக்கான உணவை இந்த வீட்டிற்கு எடுத்து வந்து கொடுத்தான் இளங்குமரன்.
“அம்மாவும் நானும் சேர்ந்து வாழ்ந்த பிறகு நானும் என் தனிமையும்னு வாழ்ந்த வீடு இது குமரா! இப்ப உன் கூட உன் மனைவியா இந்த வீட்டுல இருக்கிறது எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா” அவனுடன் அளவளாவியவாறே உணவை உண்டாள்.
பாத்திரங்களைக் கழுவி வைத்து விட்டு வந்து இளமயில் கட்டிலைப் பார்க்க நல்ல உறக்கத்தில் இருந்தான் அவன்.
கட்டிலில் அவனருகில் படுத்தவளாய் உறங்கும் அவனையே பார்த்தவாறு உறங்கியிருந்த இளமயில், சிறிது நேரத்திலேயே கண் விழித்தவளாய் அவனின் இடையோடு இரு பக்கமும் கையிட்டு இறுக்கி அணைத்து அவன் மார்போடு தலை சாய்த்துக் கொண்டாள்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவன் அவளின் செயலில் விழிப்பு பெற்றவனாய் அவளை அணைத்துக் கொண்டு, “என்னாச்சுடா மயிலு?” எனக் கேட்டான்.
“ஹ்ம்ம் ஒன்னுமில்லை. ஒரு மாதிரி லோன்லி ஃபீல் ஆகிடுச்சு. சாரி உன் தூக்கத்தை டிஸ்டர்ப் செஞ்சிட்டேனா?” அவன் மார்பில் படுத்திருந்தவளாகக் கேட்டிருந்தாள்.
“இல்லடா! தூங்கு! நான் தான் கூட இருக்கேனே” என்றவனாய் அவளின் தலையை வருட, “எனக்கு தூக்கம் வரலை மச்சான்” என்று சிணுங்கினாள்.
“ஏன் தூக்கம் வரலை?” என்றவன் கேட்க,
“தெரியலை” என்றாள் அவள்.
“நான் தூங்க வைக்கவா?” என்று கேட்டவனைப் புருவத்தை உயர்த்தியவாறு எப்படி என்பது போல் நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
அவளைத் தீண்டித் தூண்டி அவள் மீதான தனது அன்பையும் காதலையும் விருப்பத்தையும் ஒவ்வொரு முத்தத்திலும், தொடுதலிலும் அவளை உணரச் செய்து முன்னேறினான் அவன்.
நொடிகள் நிமிடங்களாக உடலெங்கும் பரவிய அவனது முத்தங்களில் புல்லரிக்க, உள்ளம் அவன் மீதான பெருங்காதலில் திளைத்திருக்க, உணர்ச்சிகள் ததும்ப உணர்வாய் அவனை உள்வாங்கியிருந்தவள் மூளைக்குள் வந்து போன நினைவுகளில் கண்களில் நீர் பொங்கச் சட்டென எழுந்து அமர்ந்தாள்.
“அதெல்லாம் ஒன்னுமில்லடா மயிலம்மா! இருவரின் மனசும் உடலும் உடன்பட்டு ஒன்றாக இணைந்து நடக்கும் தாம்பத்தியம் தான் புனிதமானது. அது தான் கணவன் மனைவிக்கான உறவை மேம்படுத்தும்னு நம்புறவன் நான். வெறும் உடலும் உடலும் இணையும் செக்ஸ்ல எனக்கு உடன்பாடு இல்லைடா. என்னிக்குமே உன் இளா மச்சான் உன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பான்” என்றவன் சொன்ன நொடி கண்களில் கண்ணீர் சூழ அவனது கன்னத்தில் முத்தமிட்டவளாய், “லவ் யூ இளா மச்சான்” என்றவள் மெல்லிய விசும்பலுடனேயே உறங்கிப் போனாள்.