தியாகராஜன் இது வரை மகனை அடித்தது இல்லை எனலாம். அவரின் அதட்டலிலேயே பயந்து அவரின் பேச்சைக் கேட்டிடுவான் இளங்குமரன்.
அன்றிரவு இளமயில் நெற்றியில் இருந்த காயத்தைப் பார்த்தவருக்குக் கோபம் கட்டுக்கடங்காமல் பொங்கி வர, அவனை அடிக்கக் கை ஓங்க, வீட்டைச் சுற்றியே ஓடிக் கொண்டிருந்தான் அவன். இவரும் அவனை விடாது துரத்திக் கொண்டிருந்தார்.
இளமயிலின் அன்னை மரகதம் தான் இளங்குமரன் முன் வந்து நின்று அவனின் தந்தை அவனை அடிக்காமல் தடுத்திருந்தார்.
“அண்ணே! விசாரிக்காம பிள்ளைய அடிக்க வர்றீங்களே! என் பொண்ண லேசுல நினைச்சிடாதீங்க. போற இடமெல்லாம் ஒரண்டை இழுத்துட்டு வராம இருக்க மாட்டா. அவ மேல தான் தப்பு இருக்கும்” என்றார் மரகதம்.
பின் மாலை பொழுதில் மரகதத்தையும் மயிலையும் சென்று பார்த்த அம்பிகா, இரவு உணவை இங்கேயே உண்ணுமாறுக் கூறி அவர்கள் இருவரையும் கையோடு தங்களின் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார்.
அலுவல் பணி முடிந்து வீட்டிற்கு வந்த தியாகராஜன் மயிலின் நெற்றியில் இருந்த காயத்தைக் கண்டதும், “மயிலு பாப்பா! என்னம்மா என்னாச்சு?” எனத் தாடையைப் பற்றி அவளின் நெற்றியின் காயத்தை ஆராய்ந்தவாறு கேட்க, “இளா மச்சான் கீழே தள்ளி விட்டுட்டாங்க அங்கிள்” என்று அவள் அவனைப் போட்டுக் கொடுக்க, மகனை அடிக்கக் கை ஓங்கி விட்டார் அவர்.
மரகதம் தனது மகளையும் விசாரிக்குமாறு உரைத்ததும், தியாகராஜன் நடந்ததைப் பற்றி இளமயிலிடம் கேட்க, முந்தைய நாள் அவன் தன்னைத் திருடி எனக் கூறியது முதல் இன்று காலை மிதிவண்டியிலிருந்து கீழே விழ வைத்தது வரை அனைத்தையும் போட்டுக் கொடுத்து விட்டாள் இளமயில்.
“குமரா! என்ன பழக்கம் இது! தெரியாதவங்க மேல முழுசா விசாரிக்காம பழிப் போடுறது பாவச்செயல்! அவங்க செஞ்சங்களா இல்லையானு தீர்க்கமாகத் தெரியாம ஒருத்தங்க மேல பழிப் போட்டுப் பேசுறது ரொம்பத் தப்பு குமரா” என்று சற்றுக் கடுமையான குரலில் கூறியிருந்தார்.
“சாரிப்பா! இனி அப்படிச் செய்ய மாட்டேன்” தலையைக் குனிந்தவாறு உள்ளே போன குரலில் உரைத்தவன்,
பிறகு தலையை நிமிர்த்தி ஆக்ரோஷமாய், “எனக்கு மச்சான்னு கூப்பிட்டா பிடிக்காதுனு சொன்னா இவ வேணும்னே அப்படிக் கூப்பிடுறாப்பா” என்று அவளைப் போட்டுக் கொடுத்தான்.
“எனக்கு மயிலுனு கூப்பிட்டா பிடிக்காதுனு சொன்னாலும் கேட்காம அப்படியே கூப்பிட்டு வெறுப்பேத்துறான் அங்கிள் இவன்” என்று அவனைப் போட்டுக் கொடுத்தாள் இவள்.
அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர் இருவரையும் தன்னருகில் அழைத்தார்.
அவரின் இருப்பக்கமும் இருவரும் வந்து நிற்க, அவர்களின் தோள்களில் கைகளைப் போட்டவராய்,
“பெயருங்கிறது வெறும் பெயர் மட்டும் இல்லை பிள்ளைங்களா! அது ஒரு மொழியோட அடையாளம்! கூட்டத்துல ஒருத்தரைத் தனிச்சு அடையாளம் காண்பிக்க மட்டுமே பெயர் இல்லைங்கிறதை முதல்ல புரிஞ்சிக்கோங்க. நாம கூப்பிடுற மாமா மச்சான்கிற உறவுமுறையும் வெறும் உறவு பெயரில்லை. அது ஒரு மொழியின் உணர்வு!
ஒரு மொழி எப்ப அழியுது தெரியுமா? அந்த மொழியைப் பேசக்கூடிய கடைசி மனிதன் இறக்கும் போது அந்த மொழி அழியுது. மொழியும் மனிதர்களும் வேறு வேறல்ல. மச்சான்ங்கிற உறவுமுறை அழைப்பே இல்லாமல் போகும் போது இப்படி ஒரு சொல் தமிழில் இருந்ததுங்கிற அடையாளமே இல்லாமல் அந்தச் சொல்லே அகராதியில் இருந்து காணாமல் போய்டும். இப்படித் தான் பல தமிழ்ச்சொற்களைக் காணாமல் ஆக்கி வச்சிருக்கோம். இதுல இருக்கிற பெயரையும் ஒழிச்சிக்கட்ட தான் இப்படிச் சண்டைப் போட்டுட்டு இருக்கீங்க இரண்டு பேரும்” என்றவராய் அவர்களைக் கண்டனத்துடன் பார்த்தார் தியாகராஜன்.
“குமரா ஒரு நோட்டு பேனா எடுத்துட்டு வா” என்றவர் தனக்கருகே ஒரு மேஜையை இழுத்துப் போட்டார்.
ஏன் திடீரென இதைக் கேட்கிறாரென அனைவரும் அவரைக் கேள்வியுடன் பார்க்க, குமரன் அவரிடம் புத்தகத்தை வழங்கியதும், “பிள்ளைங்களா இங்க பாருங்க” என்று மேஜையின் மீது புத்தகத்தைத் திறந்து எதையோ எழுத ஆரம்பித்தார்.
“உங்க இரண்டு பேருக்கும் வச்சிருக்கிறது அழகான தமிழ் பெயர்கள். இந்தப் பெயரில் இருக்கும் இலக்கணம் தெரியுமா உங்க இரண்டு பேருக்கும்? யாருக்குத் தூயத் தமிழ்ப்பெயர் இருந்தாலும் அந்தப் பெயரின் பொருளை மட்டும் தெரிஞ்சிக்காம அதில் இருக்கும் இலக்கணத்தையும் அவங்க தெரிஞ்சிக்கனும்”
“இளங்குமரன்! இளமயில்! இரண்டு பெயருக்கும் பொருள் என்ன சொல்லுங்க?” என அவர்களைப் பார்த்துக் கேட்டார்.
“என்றும் இளமையாக இருக்கும் குமரன்னு அர்த்தம்பா” என்றான் குமரன்.
“இளமையான மயில்” என்றாள் இளமயில்.
“அருமை! இரண்டு பேருக்குமே ஒரே அர்த்தம் தான். அப்புறம் ஏன் இளங்குமரன்! இளமயில்னு இருக்கு? இளங்குமரன்ல இருக்கிற ங் ஏன் இளமயில்ல வரலை?” எனக் கேட்டார்.
“தெரியலை” என உதட்டைப் பிதுக்கினர் இருவரும்.
“உங்க இரண்டு பெயருமே பண்புத்தொகைகள்” என்றவர் கூறியதும்,
“பண்புத்தொகைனா என்ன அங்கிள்?” எனக் கேட்டாள் இளமயில்.
“நிறம், அளவு, குளிர், வெப்பம் போன்று ஏதாவது ஒரு பண்பு தொக்கி நிற்கும் ஒரு பெயர்ச்சொல்!
இளமை + குமரன் என்பதுதான் இளங்குமரன். ஈறுபோதல் விதிப்படி மை விகுதி கெட்டு, இளம் குமரன் என்று நின்று, இனமிகல் விதிப்படி ம் என்ற மெய்யானது வருமொழி குமரனுக்கேற்ப ங் ஆவதால் பிறந்தது இளங்குமரன்.
இந்த ஈறுபோதல், இனமிகல் எல்லாம் பண்புப்பெயர் புணர்ச்சி விதிகள்!”
இருவரும் புரியாது திருதிருவென முழிக்க, மேலும் விரிவாக இதைப் பற்றி விளக்கிக் கூறியவராய்,
“இளமயில்ல ஏன் ங் வரலை?
மயிலு பாப்பா! ஏன் வரலைனு நான் சொன்ன விதிகள் எல்லாம் போட்டு எழுதிக் காண்பிப் பார்ப்போம்” என்றவாறு புத்தகத்தை அவளிடம் கொடுத்தார்.
“இளமை + மயில்” என்று சொன்னவாறே புத்தகத்தில் எழுதினாள் இளமயில்
“ஈறுபோதல் விதிப்படி மை விகுதி கெட்டுப் போச்சு. இள மயில்” என்று சொன்னவாறு எழுதியவள்,
“ஏன் அங்கிள் இங்கே இனமிகல் ரூல்ஸ் வரலை?” எனக் கேட்டாள்.
அவளுக்கு அவரின் மயிலு பாப்பா என்ற அழைப்பு மிகவும் பிடித்திருந்தது.
தனக்கு மிகவும் பிடித்த ஆசிரியரிடம் நற்பெயர் வாங்க வேண்டுமென்ற ஆர்வமும் ஆசையுமாய் அந்தப் பாடத்தை ஈடுபாட்டுடன் கவனித்துப் படித்து நல்ல மதிப்பெண் பெறுவோம் அல்லவா! அத்தகைய மனநிலையில் தான் இருந்தாள் இளமயில்.
தியாகராஜனை மிகவும் பிடித்திருந்தது அவளுக்கு. தியாகராஜனுக்குத் தாய் மொழி பற்று அதிகம். நிறையப் புத்தகங்கள் வாசிப்பார். அவரின் மீதான பிடித்தம் தமிழ் மொழியின் மீதான பிடித்தத்தை ஏற்படுத்தியிருந்தது இளமயிலுக்கு.
“மச்சான்னு உறவுமுறை பெயருலாம் வழக்கொழிஞ்சி போய்ட்டு இருக்க இந்தக் காலத்துல மயிலு பாப்பா அப்படிக் கூப்டுறது ஒன்னும் தப்பில்லை குமரா. இனி அவ அப்படித் தான் கூப்பிடுவா. அவகிட்ட சண்டை போட்டீனா பிச்சிருவேன் சொல்லிட்டேன்” என்றவராய் இளமயிலிடம் திரும்பியவர்,
“மயில் பாப்பா! உன்னை யாராவது மயில் பேரு வச்சி கிண்டல் செஞ்சாங்கனா, பண்புத்தொகைனா என்னனு தெரியுமானு கேளு. இது கூடத் தெரியாம என் பெயரைக் கேலி செய்ய வந்துட்டீங்களானு கேளு சரியா” என்றவர் சொல்லி முடிக்கும் முன்,
“அய்யோ அண்ணா அவ அப்படியே சொல்லி வைப்பாண்ணா! கொஞ்சம் கூடப் பயமே இல்லாம அவளை வளர்த்து வச்சிருக்காரு அவங்க அப்பா! இது வரைக்கும் அவ கண்ணுலருந்து ஒரு துளி கண்ணீர் வந்ததில்லை தெரியுமாண்ணா! அவ்ளோ அகராதி பிடிச்சவ இவ” என்றார் மரகதம்.
“ஆமாப்பா! கீழே விழுந்து நெத்தியிலருந்து ரத்தம் கொட்டுது! அப்பவும் ரத்தத்தைப் பார்த்து பயந்து அழாம என்னை அடிக்கத் துரத்துட்டு வந்தா தெரியுமா. இதுவே நம்ம கௌசல்யாவா இருந்திருந்தா அங்கேயே அழுது ஊரை கூட்டியிருப்பா” என்றான் இளங்குமரன்.
“இங்கே வாடா மயிலு பாப்பா” என்று தன்னருகே அவளை அழைத்து மடியில் அமர்த்திக் கொண்டவராய்,
“மயிலு பாப்பா எப்பவுமே இப்படித் தைரியசாலியாய் தான் இருக்கனும் சரியா!” என்று அவளின் தலையை வருடியவராய் மரகதத்தை நிமிர்ந்து பார்த்தவர், “மயிலு அப்பா! ரொம்ப சரியா தான் மயிலை வளர்ந்திருக்காரு. பொம்பிளை பிள்ளையை இப்படித் தைரியமா தான் வளர்க்கனும் தங்கச்சி” என்றவர் கூறிக் கொண்டிருக்கும் போதே,
“எல்லாரும் சாப்பிட வாங்க” என்று அழைத்தார் அம்பிகா.
மறுநாள் பள்ளி சென்றதும் முதல் வேலையாகத் தனது தமிழ் ஆசிரியரைப் பார்த்து இந்தக் கேள்வியினைக் கேட்டுத் தெளிவுப் பெற்றவள் அன்று மாலை இதைக் கூறுவதற்காகவே குமரன் வீட்டிற்குச் சென்றாள்.
“என்னம்மா குமரனைப் பார்க்க வந்தியா?” என்று அம்பிகா கேட்க,
“இல்ல ஆன்டி! அங்கிளைப் பார்க்க வந்தேன்” என்றாள் இளமயில்.
“அவர் வர இன்னும் நேரமாகுமே!” என்று அவர் கூறவும்,
“பரவாயில்ல ஆன்டி! நான் வெயிட் செஞ்சி பார்த்துட்டு போறேன்” என்றவளாய்,
“இளா மச்சான் எங்கே?” எனக் கேட்டாள்.
“அவன் ஸ்கூல்லருந்து வந்த உடனே அவனோட முத்து மாமா கடைக்குப் போய்டுவான்மா. சின்ன வயசுலருந்தே இருக்கப் பழக்கம் அது. அவனுக்கு அந்தக் கடை வைக்கனும்னு தான் ஆசையாம். அதனால படிச்சா அது தான் படிப்பேன்னு சொல்லுவான். பத்தாவது முடிச்சதும் பதினொன்னாவதுல சயின்ஸ் க்ரூப் தான் எடுப்பேன்னு சொல்லுவான்! ஆமா உனக்கு என்ன மேல படிக்க ஆசை மயிலு” எனக் கேட்டார் அம்பிகா.
“ஹான்” எனத் திருதிருவென அவள் முழிக்க, வீட்டினுள் நுழைந்த மரகதம்,
“அட நீங்க வேறக்கா! அவளுக்கு அப்படிலாம் எந்த ஆசையும் இல்லை. டீச்சர் பிள்ளை மக்குங்கிற மாதிரி தான் என் மவ” என்று அவர் கூறவும்,
“ம்மாஆஆஆ நான் ஒன்னும் மக்குக் கிடையாது. பத்து ரேங்க்குள்ள எடுத்துடுவேனாக்கும்” தலையைச் சிலுப்பிக் கொண்டு உரைத்தாள் இளமயில்.
அவளின் முகப்பாவனைப் பார்த்துச் சிரித்தவராய், “சரி சொல்லு மயிலு! உனக்கு என்ன படிக்க ஆசை?” எனக் கேட்டார் அம்பிகா.
“இது வரைக்கும் அப்படி எதுவும் ஆசை இல்லை அம்பி ஆன்டி! இனி அப்படி எதுவும் ஆசை வந்தா சொல்றேன்” என்று அவள் கூறவும் சிரித்தவராய், “அடுத்த வருஷம் பத்தாவது படிக்கப் போறம்மா. அது முடியுறதுக்குள்ள கண்டு பிடிச்சிடு சரியா! அப்ப தான் பதினொன்னுல என்ன க்ரூப் எடுக்கனு ஒரு தெளிவு இருக்கும்” என்றார் அம்பிகா.
“அதான் அங்கிள் இருக்காங்களே! அவங்க என்னை கைட் செய்வாங்க” என்று கண்கள் மின்ன உறுதியாய் கூறிய மகளைக் கண்கலங்க பார்த்திருந்தார் மரகதம்.
அவள் தனது தந்தையின் இன்மையை உணர்கிறாளெனப் புரிந்தது அவருக்கு. ஆனால் தந்தைக்காகக் கூட அழாத இந்தப் பெண்ணை எல்லாம் எதில் சேர்ப்பது என்று தான் புரியவில்லை அவருக்கு. இத்தனை பாசம் இருந்தும் எப்படி இவளால் வைராக்கியத்துடன் அழாமல் இருக்க முடிந்தது என்ற கேள்வி அடிக்கடி வரும் அவருக்கு.
மகளுக்கு ஏதேனும் மனநோய் வந்து விட்டதோ என்று பயந்து மனநிலை மருத்துவரிடம் கூட அழைத்துச் சென்று விட்டார். மற்றவர் முன் அழக்கூடாது என்கின்ற அவளின் வைராக்கியம் தான் அவளை அழாமல் வைத்திருக்கிறது என்று மனநல மருத்துவர் கூறியதைக் கேட்டுக் குழம்பித் தான் போனார் மரகதம்.
அப்படியென்றால் தனிமையில் அழுவாளா என்று மரகதம் கேட்டதற்கு, ஆமாம் என்று தலையசைத்த மருத்துவர், ‘அது அவளின் தலையணை மட்டுமே அறிந்த ரகசியம்’ என்பதோடு முடித்துக் கொண்டார்.
மகளை எண்ணி பெருமூச்சு விட்டவராய் மரகதம், அம்பிகாவிற்குச் சமையலில் உதவ அடுக்களைக்குள் செல்ல, பணி முடிந்து வந்த தியாகராஜன், “மயிலு பாப்பா! இப்ப வலி பரவாயில்லையா?” என்று அவளின் தலையை வருடியவாறு கேட்டார்.
“ம்ம்ம் ஆமா பரவாயில்லை அங்கிள்” என்றவள், “ஆமா நேத்து உறவுமுறை அழைப்புப் பத்தி அவ்ளோ சொன்னீங்கல! நான் உங்களை அங்கிள் ஆன்டினு கூப்பிடுறதுக்கு நீங்க ஏன் எதுவும் சொல்லலை. அப்படிப் பார்த்தா நான் உங்களை மாமா அத்தைனு தானே கூப்பிடனும்” என்றவள் கேட்க, சிரிப்புடன் தலையசைத்தவராய், “உனக்கு எப்படிப் பிடிக்குதோ அப்படிக் கூப்பிடுமா” என்றார்.
“நான் ஏன் என் பேருல ங் வரலைனு கண்டுப்பிடிச்சிட்டேனே” குதூகலத்துடன் உரைத்திருந்தாள் இளமயில்.
“சூப்பர் மயிலு பாப்பா! என்னடா கண்டிப்படிச்ச! சொல்லு பார்ப்போம்?” எனக் கேட்டார்.
“ஏன்னா நம்ம தமிழ் இலக்கணத்துல இளங்குமரன் பெயருல ங் வரதுக்கு இனமிகல்னு விதி சொன்னீங்கல மாமா, அந்த விதி என் பெயருக்கு பொருந்தலை. அதனால் ங் வரலை” என்றவள் கூறவும்,
“புரியலையே!” என்பது போல் வேண்டுமென்றே அவர் தலையசைக்க,
“அய்யோ மாமா! புரியலையா!” என்று உதட்டைப் பிதுக்கியவள், “இருங்க நான் புரியுற மாதிரி விளக்குறேன்” என்றவளாய் தனது புத்தகத்தைத் திறந்து எழுத ஆரம்பித்தாள்.
இள + மயில்
இ ள் அ + ம் அ யில்
இள + குமரன்
இ ள் அ + க் உ மரன்
“இங்க பாருங்க மாமா! என் பேருல ம் வர இடத்துல இளா மச்சான் பேருல க் வருது. அந்த இடத்துல வல்லின மெய் க், ச், த், ப் வந்தா தான் இனமிகல் விதி வருமாம். எனக்கு ம் வரனால இந்த விதி வரலையாம். அதனால் இளமயில்னு வந்துடுச்சாம்! என் தமிழ் ஐயா சொல்லிக் கொடுத்தார்” என்றாள்.
அவளை அப்படியே அள்ளிக் கொஞ்ச வேண்டும் போல் தோன்றியது அவருக்கு. இருபக்கக் கன்னத்தையும் கிள்ளி முத்தமிட்டவராய்,
“எனக்கிருக்கும் தமிழ் ஆர்வத்தை நான் என் மகன்கிட்டயும் என் தங்கச்சி பொண்ணுக்கிட்டயும் கடத்த முயற்சி செஞ்சேன். ஆனா அது நடக்கவே இல்லை. உனக்கிருக்க ஆர்வத்தைப் பார்த்து எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமாடா மயிலு பாப்பா” என்று அவளின் தாடையைப் பிடித்துக் கொஞ்சினார் அவர்.
“உங்களுக்கு நான் எது செஞ்சா சந்தோஷமா இருக்கும்னு சொல்லுங்க மாமா! நான் அதைச் செய்றேன்” என்றவள் கூறவும் சந்தோஷம் மேலிட மென்மையாக அணைத்துக் கொண்டார்.
“நீ நல்லா படிக்கனும். அது தான் இப்போதைக்கு உன் மாமாவுக்கு வேணும். அதிலும் தமிழ்ல நல்ல மார்க் வாங்கனும். குமரனுக்குத் தமிழே வராது! தப்பும் தவறுமா எழுதுவான். நீ அப்படிலாம் இல்லாம நல்லா தமிழ் படிக்கனும் சரியா” என்றவர் மொழிந்ததற்குச் சரியென மகிழ்வாய் மண்டையை ஆட்டியிருந்தாள் இளமயில்.
அவளின் ஆர்வம் கண்டு தன்னிடம் இருக்கும் தமிழ் புத்தகங்களில் அவளின் வயதிற்கேற்றவைகளை அவள் வாசிக்கக் கொடுத்தனுப்பினார்.
இப்படியே தமிழ் மீது பெருத்த பற்று உண்டாகியது அவளுக்கு.
தமிழ் மீதான பற்று அவன் மீதான பற்றாய் உருமாறிய நாளும் வந்தது அவளின் வாழ்வில்! அதுவே அவனின் பிடித்தமான படிப்பைத் தானும் படிக்கலாமே என்ற எண்ணத்தை அவளுக்குள் தோற்றுவித்திருந்தது.
*****
இன்று
அங்கு அந்த மருந்தியல் கல்லூரி கட்டிடத்திற்குள் (pharmacy college) நுழைந்த இளமயில் தனது பணியாளர் அறைக்கு (staff room) சென்று, அன்று தான் எடுக்க வேண்டிய பாடக்குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தாள்.
ஆம் இளமயில் மருந்தியல் படிப்பைத் தான் படித்திருந்தாள்.
மருத்துவத்திற்கு இணையான நான்கு வருட மருந்தியல் இளங்கலை கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு அடுத்து இரண்டு வருடம் முதுகலை படிப்பையும் முடித்துவிட்டு இப்பொழுது இளங்கலை மருந்தியல் கல்லூரியில் கடந்த ஐந்து வருடங்களாக விரிவுரையாளராய் பணியாற்றிக் கொண்டிருக்கிறாள் இளமயில்.
அன்று அவள் எடுக்கவிருந்த பாடமான இனப்பெருக்கத் தொகுதி (Reproductive system) பற்றித் தான் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள் இளமயில்.
இத்தனை வருடங்களில் பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதி பற்றிய பாடத்தைக் கற்றப் போதும், அதனை ஆசிரியராக மாணாக்கர்களுக்கு கற்பித்தப் போதும் ஒவ்வொரு முறையும் அவனை நினைக்காமல் இருந்ததில்லை.
அதிலும் இன்று அவனையே நேரில் கண்டுவிட்டு வந்ததில் இதனை வாசிக்கும் போது அவள் இதழில் குறுஞ்சிரிப்பு அப்படியே தேங்கி நின்றது.
“மயிலு! பொண்ணுங்க வயசுக்கு வரதுனா என்ன?” பருவ வயதில் அவளிடம் அவன் கேட்ட அக்கேள்வியும் அதன் பின்பான நிகழ்வுகளும் இன்றும் அவளின் நினைவினில் பசுமையாகத் தேங்கியிருந்தன.
இளமயிலின் இதயத்திலே இளங்குமரன் மீதான மையல் உருவான நிகழ்வு அது!