மறுநாள் விடியற்காலையில் இளமயில் கண் விழித்த போது, தாய் தனது குழந்தையை உடலுக்குள் பொத்தி வைத்து அடைக்காப்பது போல், ஒரு கையால் அவளது தலையையும், மறுகையால் அவளது இடையையும் தன்னோடு இறுக்கி அணைத்து தனது உடலுக்குள்ளேயே அடைக்காத்திருப்பவன் போல் ஒருக்களித்து அணைத்தவாறு படுத்திருந்தான் இளங்குமரன்.
அவனது அணைப்பில் இருந்து விடுபட மனமில்லாமல் அவனது மார்பின் மத்தியில் அழுத்தமாய் முத்தமிட்டவள் தானும் அவனை இறுக்கமாய் அணைத்தவளாய் கண்களை மூடினாள்.
அவளின் உதட்டசைவில் அவனது உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல் மேனி கூச, “என்னடா மயிலம்மா” என்றவனாய் தனது முகத்தை அவளது கழுத்து வளைவினில் புதைத்தான்.
அவனது மூச்சுக்காற்று தனது மேனியில் உரசவும் சிலிர்த்தெழுந்த மயிர் கால்களின் புல்லரிப்பில், மேலும் உதட்டை அவன் மார்போடு அழுத்தி அசைத்தவளாய், “இப்படியே உனக்குள்ளேயே புதைஞ்சி போய்டனும் போல இருக்கு இளா மச்சான்” என்றாள்.
கழுத்தோடு உரசியவனின் இதழ்கள் காதோடு உரசி முத்தமிட, கிறக்கமாய் அவள் காதினில், “காலைலயே உசுப்பேத்துறியே மயிலம்மா” என்றவனாய் காதிலிருந்து கன்னத்திற்கு தனது இதழை நகர்த்தியவன், அவளது இதழில் இளைபாறினான்.
மிக மென்மையாக இதழை உரசியவனின் செயலில் அவளுடலில் உணர்வுகள் கொந்தளிக்க, இதழ் முத்தத்தை தனதாக்கினாள் இவள்.
அவனின் முகம் முழுவதும் அவள் முத்தமிட, இருவரின் உணர்வுகளும் அடுத்த கட்டத்திற்கு நகரச் சொல்லி உந்தித் தள்ள, மெல்ல விலகியவளாய் அவன் இடையை வளைத்து அணைத்து மார்போடு சாய்ந்து கொண்டாள் அவள். அவளின் தலையை வருடியவனாய் உச்சியில் முத்தமிட்டவன் விட்டத்தைப் பார்த்தவாறு படுத்திருந்தான்.
அவன் மார்பில் சாய்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்க, “உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேன் தானே இளா மச்சான்” முகத்தை நிமிர்த்தி அவனது முகத்தைப் பார்த்தவளாய் கேட்டாள்.
“இல்லவே இல்லை! என் மனைவிக்கு எது பிடிக்கும் பிடிக்காதுனு அறிஞ்சி தெரிஞ்சி அதுக்கேத்த மாதிரி உன்னோட மனசையும் உடலையும் கையாளத் தெரியலைனா நான்லாம் என்ன புருஷன் மயிலம்மா?” என்று புருவத்தை உயர்த்தியவாறு உரைத்தவன் தனது பெருவிரலால் அவளது விழிநீரைத் துடைத்தவனாய், “சரி செஞ்சிடலாம். உன் இளா மச்சான் எல்லாத்தையும் சரி செஞ்சிடுவேன்” என்று அவளுக்கு நம்பிக்கையூட்டினான்.
காலை கல்லூரிக்குச் செல்ல கிளம்பி வெளியே வந்தவள், “இளா மச்சானுக்கு நான் தோசை ஊத்தி கொடுக்கிறேன் அத்தை” எனக் கேட்டு தானே தோசை வார்த்து இருவருக்குமாய் சேர்த்து ஒரே தட்டில் எடுத்துக் கொண்டு தங்களது அறைக்குள் எடுத்துச் சென்றவளை புன்னகையுடன் நிறைவாய் பார்த்திருந்தார் அம்பிகா.
அந்நேரம் சமையலறைக்குள் வந்த தியாகராஜன், “என்னமா நேத்து அப்படிச் சண்டை கோழியா போச்சு இந்தப் பொண்ணு! இன்னிக்குப் புருஷனுக்கு தோசை ஊத்தி எடுத்துட்டுப் போறா! அதுக்குள்ள சண்டை முடிஞ்சி போச்சா!” என ஆச்சரியமாகக் கேட்டவர், “நான்லாம் உன் கூட சண்டை போட்டா பல நாளுக்கு என்கிட்ட பேசாம இருப்பியேடி! அந்தப் பொண்ணுகிட்ட இருந்து கத்துக்கோ” என்றதும் அம்பிகா முறைத்த முறைப்பில், “சரி சரி தோசையை ஊத்து! சீக்கிரம் சாப்பிட்டுட்டு கடைக்குப் போகனும்” என்றவராய் அங்கிருந்து நகர்ந்தார். வாய்க்குள் சிரித்துக் கொண்டார் அம்பிகா.
அறைக்குள் வந்தவள் சட்டையை கால்சரைக்குள் நுழைத்து பெல்ட் அணிந்து கொண்டிருந்தவனின் வாய்க்கு அருகில் தோசையைப் பிட்டு எடுத்துச் சென்றாள்.
‘நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்’ என்று சொல்ல வந்தவன், அவள் முகத்தில் தெரிந்த அன்பில் கனிந்தவனாய் வாய் திறந்து வாங்கிக் கொண்டான். அடுத்த வாய் தோசை எடுத்து தானே உண்டவள் அதற்கடுத்து எடுத்து அவனுக்கு கொடுத்தாள். இப்படியே அவன் கிளம்புவதற்காக அங்குமிங்குமாக நகர்ந்த இடமெல்லாம் அவன் பின்னோடேயே நடந்து ஊட்டி விட்டவாறு தானும் உண்டு முடித்தவள் சமையலறை சென்று கைக்கழுவி வந்தாள்.
தனது ஈருருளியின் சாவியை அவள் கையில் எடுக்க, “இன்னிக்கு நானே உன்னை காலேஜ்ல டிராப் செய்றேன் மயிலு” என்றான்.
“சரி இளா மச்சான். அப்புறம் ஈவ்னிங் எப்படி நான் வர்றது?” என்று அவள் கேட்க,
“நானே வந்து கூப்டுக்கிறேன்” என்றதும், சரி என்று தலையசைத்தவளாய் அவனுடன் கிளம்பினாள்.
ஏனோ அவளை தனியே விட்டு நகரவே மனமில்லை அவனுக்கு. ஆனால் அவரவர் வாழ்வை அவரவர் தானே வாழ்ந்தாக வேண்டும். அதற்கான தைரியத்தை தான் அவளுக்கு வழங்க வேண்டுமே தவிர, தானே அவளை பொத்தி வைத்திருக்கக் கூடாது என்று அவன் எண்ணும் போதே, ‘இத்தனை நாளாக நீயா அவளைப் பொத்தி பாதுகாத்துட்டு இருந்த! அவ தனியா தான் இந்த உலகத்தை ஃபேஸ் செஞ்சிட்டு இருந்தா’ அவனது மனசாட்சி எடுத்துக் கொடுக்க, ‘இனி அவ அப்படி தனியாகவும் இருக்க வேண்டாம்! அதுக்காக என்னை ரொம்ப டிபெண்ட் செஞ்சும் இருக்க வேண்டாம். அவ தைரியமா சுதந்திரமா வாழனும்’ மனத்தோடு நினைத்துக் கொண்டவனாய் மகிழுந்தை இயக்கியவன் கல்லூரியை அடைந்ததும் அவளை நோக்கி திரும்பி நெற்றியில் முத்தமிட்டு, “லவ் யூ டா மயிலம்மா! ஈவ்னிங் பார்க்கலாம்” என்றான்.
அவனை வினோதமாகப் பார்த்தவளாய், “நான் தானே எப்பவும் லவ் யூ சொல்லுவேன். நீ சொல்ல மாட்டியே! இதென்ன புதுசா?” என்று அவள் கேட்க,
முறுவலித்தவனாய், “அன்பை சொன்னா அனுபவிக்கனும் ஆராயக் கூடாது பொண்டாட்டி” என்றவன் அவளின் மூக்கைச் செல்லமாய் பிடித்து ஆட்டியவனாய் நெற்றியில் முட்டியவாறு, “ஹேவ் எ நைஸ் டே” என்றான்.
அவளும் அவனது கன்னத்தில் இதழ் பதித்தவளாய், “லவ் யூ இளா மச்சான்” என்றவள் புன்னகையுடனேயே கல்லூரிக்குள் நுழைந்தாள்.
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு
அட சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு
மகிழுந்தில் இப்பாடல் ஒலிக்க, ‘எவ்ளோ உண்மையான வார்த்தைகள்! இப்படி அன்றாடம் பரிமாறப்படும் சின்ன சின்ன அன்பான வார்த்தைகள் கூட அவளை மகிழ்விக்கும் தானே’ மனத்தோடு சிந்தித்தவனாய் மகிழுந்தை இயக்கியவன் மருத்துவமனையை அடைந்தான்.
பேரங்காடிக்குச் சென்று தந்தையிடம் பேசிவிட்டு மருத்துவமனைக்குள் நுழைந்தவன், செவிலியரிடம், “நான் சொன்ன பிறகு பேஷண்ட்ஸ்ஸை உள்ளே அனுப்புங்க” என்றவனாய் தனது இருக்கையில் அமர்ந்தவன் கைப்பேசியில் அழைப்பு விடுத்தான்.
மறுபக்கம் அழைப்பு எடுக்கப்பட்டதும், “ஹலோ டாக்டர் சார்! எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டான்.
“ஹலோ புது மாப்ள! ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாளுனு சொல்றது மாதிரி கல்யாணமாகி ஒரு மாசத்துலயே மனோதத்துவ டாக்டர்க்கு போன் செஞ்சிருக்கியே! அதுக்குள்ள மோகத்திரை விலக்கிடுச்சா?” என்றவாறு அமர்க்களமாய் சிரித்தார் மனோதத்துவ மருத்துவர் ராமதாசன்.
இளங்குமரன் இளங்கலைப் பட்டப்படிப்பு பயின்ற கல்லூரியில் மனோதத்துவ மாணவர்களின் ஆசிரியராகப் பணிபுரிந்திருந்த ஐம்பது வயது ராமு டாக்டருடன் நெருங்கிய நட்பு உருவாகியிருந்தது குமரனுக்கு.
அவ்வப்போது தன்னிடம் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு ஏதேனும் மனோரீதியாக சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தால் இவருக்கு அழைத்து தான் ஆலோசனைக் கேட்பான் இளங்குமரன்.
அவரின் பேச்சில் வெட்கப்புன்னகை சிந்தியவனாய், “பொண்டாட்டி மேல மோகம் தாண்டிய காதல் இருக்கும் போது இந்த மோகம்லாம் ஆயுசுக்கும் தீராது டாக்டர்” என்று சிரிப்புடன் உரைத்தான்.
“ஹ்ம்ம் கல்யாணமானதும் நல்லா பேச கத்துக்கிட்ட மேன்” என்று மேலும் அவனைக் கேலிச் செய்தவராய்,
“வாட் ஸ் ஈட்டிங் யுவர் மைண்ட் இளா! ஸ்பிட் இட் அவுட் (உன் மூளைக்குள்ளே என்ன ஓடுது சொல்லு)” எனச் சட்டென சீரியஸ் மோட்க்கு தாவினார்.
“எனக்கு ஒரு கேஸ் பத்தி பேசனும் சார்” என்றவனாய், இளமயில் கூறியதை அப்படியே இவரிடம் கூறியவன், “என்னோட பேஷண்ட் ஒருத்தரோட கேஸ் இது டாக்டர். நான் அலசி ஆராஞ்சு பார்த்த வரைக்கும், செக்ஸ் உறவை நினைத்தாலே வரும் அதீத பயம், நடுக்கம், மயக்கத்துக்கு ஜெனோஃபோபியானு (genophobia) சொல்லுவாங்கனு படிச்சேன். அதே மாதிரி செக்ஸ்ஸை பிடிக்காம செக்ஸ்ஸை நினைத்தாலே வரும் அருவருப்பு ஒவ்வாமை உணர்வை செக்ஸ்வல் அவெர்ஸன் டிஸ்ஆர்டர்னு (sexual aversion disorder) சொல்றதா படிச்சேன். இந்த கேஸ்ல இது ஜெனோஃபோபியாவா இல்லை செக்ஸ்வல் அவெர்ஷன் டிஸ்ஆர்டரானு குழப்பம் இருக்கு டாக்டர். அப்புறம் இதை ட்ரீட் செய்றதுக்கு சைக்கோதெரபி (psychotherapy) சிலது பார்த்தேன் லைக் சிபிடி தெரபி, ரிலாக்சேஷன் எக்ஸ்சசைஸ், பிரெத் கண்ட்ரோல் எக்ஸ்சசைஸ்லாம் இருக்குனு படிச்சேன். இது எந்தளவுக்கு ட்ரீட் செய்யும்னு தெரியனும் டாக்டர்” என்றான் இளங்குமரன்.
“டேய் குமரா! நீ போஸ்ட் கிராஜூவேஷன் (post graduation) பல்மோனாலஜி (pulmonology) படிச்சியா இல்ல சைக்காலஜி (psychology) படிச்சியா? இவ்ளோ டீடெய்ல்ஸ் சொல்றியேடா” என்று சிரித்தவராய்,
“பேஷண்ட் உனக்கு ரொம்ப தெரிஞ்சவங்க போலயே” என்று மெல்ல கேட்டார்.
‘ஆஹா கண்டுபிடிச்சிட்டாரே’ என்று மனத்தோடு நினைத்தாலும் அவரிடம் ஏதும் கூறவில்லை அவன்.
“ஓகே யெங் மேன்! உன் கேள்விக்கு வரேன். நீ சொன்னது வச்சி பார்க்கும் போது இது ஜெனோஃபோபியாவா இருக்க வாய்ப்பில்லை. மேபி அந்த டைம்ல அவங்களுக்கு ஜெனோஃபோபியா இருந்திருக்கலாம். அதாவது செக்ஸ்னு நினைச்சாலே பயம். அதுக்கு தன்னால் உடன்பட முடியாதுன்ற பயம். தன்னால சரியா பெர்பார்ம் செய்ய முடியாதோன்ற பயத்தை தான் ஜெனோஃபோபியானு சொல்லுவாங்க. மோஸ்ட்லி இந்த பிரச்சனை ஆண்களுக்கு தான் வரும். ஏன்னா பெர்பார்ம் செய்ய போறது ஆண்கள் தானே. தன்னால தனது மனைவியை திருப்திப்படுத்த முடியாதோன்ற பயம் நிறைய ஆண்களுக்கு இருக்கு. அது தனக்கு அவமானமா போய்டும்ற எண்ணம் ஆண்களை மேலும் பலவீனமாக்கிடும். ஆக நீ சொன்ன கேஸ்ல அந்த பொண்ணுக்கு செக்ஸ்னா பயம் இல்லை. புனிதமான தாம்பத்தியமா அதை ஏத்துக்குது அவ மனசு. சோ உன்னோட கேஸ்ல அந்தப் பொண்ணுக்கு இருக்க பிரச்சனை செக்ஸ்வல் அவெர்ஸன் டிஸ்ஆர்டர் (sexual aversion disorder). அதாவது செக்ஸ்ஸை பத்தி நினைச்சாலே உண்டாகும் ஒவ்வாமை உணர்வு. எதனால இந்த உணர்வு அவங்களுக்கு வருதுனு முதல்ல அந்தக் காரணத்தை கண்டுபிடிச்சிட்டா இதை ட்ரீட் செஞ்சி குணப்படுத்திடலாம்” என்றவராய்,
“உன் கேஸ்ல அந்த காரணம் தெள்ளத்தெளிவா தெரியுது. செக்ஸ் நெருக்கத்துல அவங்க மூளைக்குள்ளே வந்து போகும் கசப்பான நினைவுகள் தான் அவங்களுக்கு ஒவ்வாமை உணர்வை கொடுக்குது. சோ அந்த நினைவுகளை அழிக்க நாம ட்ரீட் செய்யனும்” என்றார்.
“இஸ் இட் பாசிப்புள் டாக்டர்” என்று வியப்புடன் கேட்டிருந்தான் இளங்குமரன்.
“யாமிருக்க பயமேன் குமரா” அட்டகாசமாய் சிரித்தவராய் அவர் கூற,
“டாக்டர் காமெடி செய்யாதீங்க. நிஜமாவே இந்த நினைவுகள் அவங்களுக்கு வராம தடுக்க முடியுமா? அப்படி ஒரு வழி இருந்தா உலகத்துல வாழுற பல பெண்களோட மனசுல ஆறாத வடுவாய் படிஞ்சிருக்கும் கசப்பான நினைவை சரி செஞ்சிடலாமே” என ஆர்வத்துடன் கேட்டிருந்தான் இளங்குமரன்.
“பாசிப்பில் (possible) இளா! ஆனா அவங்க நாம சொல்ற ட்ரீட்மெண்ட்டை சரியா கடைப்பிடிக்கனும். அப்ப தான் அது பாசிப்பில்” என்றார் அவர்.
“என்ன ட்ரீட்மெண்ட் டாக்டர் அது?” என்றவன் கேட்க,
“நீ சொன்னியே சிபிடி! அதே சைக்கோதெரபி தான் இதோட பெஸ்ட் சொல்யூசன். ஆனா இது கிரிட்டிக்கல் கேஸ்க்கு வொர்க் அவுட் ஆகுறது கொஞ்சம் கஷ்டம் தான். இந்த மாதிரி மினிமல் இன்பாக்ட் இருக்கிற கேஸ்க்கு வர்க் அவுட் ஆகும்” என்றார்.
“ஓ ஓகே” என்றவன் யோசனையாய் சொன்னதும்,
“ஆக்சுவலி இது எந்த மாதிரியான சைக்கலாஜிகல் பிரச்சனைனாலும் சரி செய்யும் லைக் சாதாரண பயம், ஸ்ட்ரெஸ், எதிர்மறை சிந்தனைகள், anxiety மாதிரி எதுனாலும் சரி செய்யக்கூடிய ட்ரீட்மெண்ட். அதனால மன்த்லி ஒன்ஸ் இந்த தெரபியை கிளாஸ் மாதிரி நான் எடுக்கிறேன். அந்தந்த மாசம் எனக்கு வர பேஷண்ட்ஸ்கு இது பயன்படும்னா இதுல கலந்துக்கச் சொல்வேன். நீயும் உன் மனைவியும் வாங்களேன். கண்டிப்பாக இது உங்களுக்கு உபயோகமானதா இருக்கும்” என்றவர் அழைக்கவும்,
தனது பேஷண்ட் யாரென அவர் கண்டுகொண்டதை உணர்ந்தவனாய் எந்தவித மழுப்பலும் இல்லாமல் இயல்பான அழைப்பாக இதை ஏற்றுக் கொண்டு, “கண்டிப்பாக வரோம் டாக்டர். என்னிக்கு இந்த செஷன் பிளான் செஞ்சிருக்கீங்க?” எனக் கேட்டான்.
“இந்த மாசத்து செஷன் வர்ற சனி ஞாயிறு வச்சிருக்கேன். கண்டிப்பாக நீங்க வரனும்” என்று அழைப்பையும் விடுத்தார்.
“ஷ்யர் டாக்டர். தேங்க்யூ சோ மச்” என்று நன்றி பகர்ந்தவனின் மனம், பிரச்சனைக்கான தீர்வு கிடைத்ததில் அத்தனை ஆசுவாசமாக உணர, மூளை அடுத்தடுத்த திட்டங்களை வகுத்தன.
சிறிது நேரம் கண்களை மூடி ஆழ்ந்த மூச்செடுத்து நிதானித்தவனாய் செவிலியரை அழைத்தவன் சிகிச்சைப் பெற வந்திருப்பவர்களை உள்ளே அனுப்புமாறு உத்தரவிட்டான்.
மாலை ஐந்து மணியளவில் மனைவியை அழைக்கச் சென்றவனின் மகிழுந்தில் உற்சாகமாய் ஏறிய இளமயிலை கண்டு சிரித்தவனாய், “ஹோப் யூ ஹேட் எ குட் டே (இன்றைய நாள் நல்ல நாளாக இருந்திருக்கும் என நம்புகிறேன்)” கண் சிமிட்டி கேட்டவாறு வண்டியை இயக்கவும்,
“இன்னிக்கு என் புருஷன் உடம்புல ஆவி எதுவும் புகுந்துடுச்சா?” கண்களில் ஆச்சரியம் பொங்கக் கேட்டவளைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தவனாய், “ஏன் அப்படிக் கேட்குற?” எனக் கேட்டான்.
“பின்னே காலைல லவ் யூ சொல்றது என்ன! ஈவ்னிங் வந்து பிக்அப் செஞ்சிட்டு இன்னிக்கு நாள் எப்படி போச்சுனு கேட்குறது என்ன! இப்படி நீ இதுவரை செய்யாததுலாம் செஞ்சி என்னை ஆச்சரியப்படுத்துனா சந்தேகம் வரும் தானே” என்றவள் உரைக்கவும்,
“சும்மா தான்” என்றவன் இழுக்க,
“சும்மா முழுப்பாத நீ! நேத்து நான் சொன்ன விஷயத்தை வச்சி பரிதாபமாவோ அனுதாபமாவோ இதெல்லாம் நீ செய்றனா, அப்படி ஒன்னும் நீ எனக்கு செய்ய தேவையில்ல. அந்த விஷயத்தைலாம் மறந்து என் வாழ்க்கையை நான் வாழ பழகி பல வருஷமாச்சு. பத்து வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு இன்சிடென்ட் என் இளா மச்சான் கூட என்னை வாழ விடாம பாதிக்குதேங்கிற ஆதங்கம் தான் எனக்கு அதிகமா இருக்கு. அதனால என்னை நார்மல் ஆக்குறேன்னு நீ இப்படி நடந்துக்கிறதை நிறுத்து” படபடவெனப் பொரிந்தவள்,
அவனை நோக்கித் திரும்பியவளாய், “நீ நீயா இரு இளா மச்சான். கல்யாணமான இந்த ஒரு மாசத்துல என்னிக்காவது நீயா வந்து லவ் யூ சொல்லிருக்கியா இல்ல இன்னிக்கு நாள் எப்படி போச்சுனு கேட்டிருக்கியா? உனக்கிருக்க வேலைக்கிடையில் இதெல்லாம் நீ கேட்கனும்னு நானும் எதிர்பார்க்கலை மச்சான். ஆனால் இப்படித் தொடர்ந்து நீ கேட்டுப் பழக்கப்படுத்தினா, நான் எதிர்பார்க்க ஆரம்பிச்சிருவேன். ஒரு நாள் மிஸ் ஆனாலும் மனசு ஏமாந்து போய்டும். அதனால நீ நீயா இரு இளா மச்சான்” என்றவள் முடிக்கும் போது வீட்டு வாசலில் நின்றிருந்தது மகிழுந்து.
“ஹ்ம்ம் நல்ல தெளிவு தான் மயிலம்மா நீ” என்று சிரித்தான் அவன்.
வீட்டிற்குள் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவளாய், சமையலறைக்குள் நுழைந்தவள், “அத்தை! இன்னிக்கு காலேஜ்ல ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்துச்சு. நான் சொல்லுவேனே அந்த ஃபர்ஸ்ட் இயர் திவாகர் பையன்” என்று தனது தாயுடன் அவள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டவன்,
‘நான் கேட்டப்போ டயலாக்கா விட்டுட்டு இப்ப அம்மாகிட்ட பேசுற பேச்சைப் பாரேன்’ என மனத்திற்குள் அங்கலாய்த்துச் சிரித்துக் கொண்டவனாய் மாமியார் மருமகளின் அன்பான உறவை எண்ணி மகிழ்வுற்றவாறு தனது வேலையைப் பார்க்கச் சென்றான் இளங்குமரன்.