இளமயில் ஜீன்ஸ் டாப் அணிந்து தலை முடியை குதிரை வாலாகத் தூக்கி வாரிக் கொண்டிருந்த சமயம், அறைக்குள் நுழைந்த இளங்குமரனின் கண்கள் வியப்பில் விரிய, “வாவ் மயிலு! இந்த டிரஸ்ல செம்மயா இருக்க” என்றவனாய் அந்த ஆளுயரக் கண்ணாடியின் முன் சென்று நின்றவாறு மேலும் கீழுமாய் அவளைப் பார்த்தான்.
அவனின் பாராட்டுதலில் மலர்ந்து சிரித்தவளாய், “நிஜமாவே நல்லா இருக்கா?” தனது குர்தியை இருபுறமும் பிடித்துக் குழந்தை போல் ஆட்டிக் காண்பித்தவளாய் கேட்க,
“ரொம்ப அழகா இருக்கடா மயிலம்மா! எப்பவுமே புடவை சுடிதார்ல பார்த்துட்டு ஜீன்ஸ்ல இன்னும் அழகா இருக்க! அடிக்கடி இப்படி டிரஸ் செய்யலாமே” என்றான்.
“அதெதுக்கான அக்கேஷன் (occasion) வரும் போது தானே இப்படி டிரஸ் செய்ய முடியும்” என்றவள், “இன்னிக்குப் போகுற இடதுக்கு கேஸ்வல் டிரஸ் ஓகேனு சொன்னதால தான் இதை உடுத்தினேன்” என்றாள்.
“அக்கேஷன் தானே! அதை நாமளே உருவாக்கிட்டாப் போச்சு. இனி மாசத்துக்கு இரண்டு மூனு தடவை இப்படி அக்கேஷன் உருவாக்கிடலாம்” என்றவனாய் கண்ணாடி முன் நின்று தன்னைச் சரி பார்த்தவன், “கிளம்பலாமா?” எனக் கேட்டான்.
அவனின் இடையைக் கட்டிக் கொண்டவளாய், “நீயும் என் டிரஸ் கலர்ல டிரஸ் செய்யலாம்ல” கண்களைச் சுருக்கிக் கொண்டு கெஞ்சும் பார்வையுடன் அவள் கேட்க,
தனது ஆடை இருக்கும் கப்போர்ட்டை திறந்தவன் அவளைப் போன்று ப்ளூ ஜீன்ஸ் மற்றும் அவளது குர்தியின் சந்தன நிறத்திற்கேற்ற டீசர்ட்டைத் தேடி எடுத்தான்.
அவனையே கண் கொட்டாமல் பார்த்திருந்தவள், அவன் உடுப்பை மாற்ற தொடங்கவும் வெட்கத்துடன் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
ஆடையை மாற்றி விட்டு அவளைப் பார்த்தவன், “மேடம் தரைல என்ன ஆராய்ச்சி செஞ்சிட்டு இருக்கீங்க?” எனக் குறும்புப் புன்னகையுடன் கேட்டான்.
நிமிர்ந்து அவனைப் பார்த்தவளின் கண்கள் ரசனையாய் அவன் மீது படர, தலையைச் சாய்த்துக் கண் சிமிட்டிவாறு,
“மையோ, மரகதமோ, மறி
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு! என்பது ஓர்
அழியா அழகு உடையான்”
என்றவளை, நாணப் புன்னகையுடன் பார்த்திருந்தான் இளங்குமரன்.
“என் கண்ணுக்கு வைக்கிற மையாகக் கண்ணுக்குள் இருக்கும் நீ!
என் அம்மா மரகதம் போல என்னைப் பார்த்துக்கிற நீ!
பரந்து விரிந்த கடலைப் போல என் மனசுக்குள்ள பரந்து விரிஞ்சிருக்கிற நீ!”
என்னைக்கும் என் மனசுல அழியா அழகனா நிறைஞ்சி இருக்கிற நீ”
பருவ வயதில் தன்னை ரசித்துப் பார்த்தவளாய் இவ்வரிகளை விளக்கி அவள் கூறிய இக்கவிதை நினைவிற்கு வர, இப்பொழுதும் அதே மாறாத ரசனைப் பார்வைப் பார்த்திருப்பவளை எண்ணி உவகையில் பொங்கியது அவனுள்ளம்.
“ஆல்வேஸ் என் இளா மச்சான் அழகோ அழகு தான்” என்று திருஷ்டி கழித்தவள் அவனை லேசாய் அணைத்தவாறு மார்பில் சாய்ந்தவளாய் ஒரு சுயமியை எடுத்தாள்.
பின்பு அவனிடம் கைப்பேசியைக் கொடுத்தவளாய் இருவரையும் இணைத்து சில தற்படங்களை எடுக்கச் செய்தாள்.
கைப்பேசியை வாங்கிப் பார்த்தவளின் அகமும் முகமும் நிறைய, அவனை இறுக்கி அணைத்து அவனது கன்னத்து மச்சத்தில் முத்தமிட்டவளாய், “லவ் யூ இளா மச்சான்” என்றாள்.
அவனும் அவளின் கன்னத்தில் இதழ் பதித்தவனாய், “லவ் யூ டா மயிலம்மா” என்றவன்,
“ஆமா அன்னிக்கு இந்தச் செய்யுள் பாட்டுக்குத் தானே அணி கேட்ட நீ?” எனக் கேட்டான்.
அவனும் சிரித்தவனாய், “உவமை அணி தானே அது?” எனக் கேட்டான்.
இல்லையெனத் தலையசைத்தவளாய், “உவமையும் உருவகமும் ஒரே மாதிரி தான் தெரியும் மச்சான். ஆனா இரண்டும் வேற வேற” என்றவளைப் புரியாத பார்வையுடன் அவன் நோக்க,
“நீ என்னத்தை தான் படிச்சி ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தியோ?” அவனின் இரு பக்கக் கன்னத்தையும் பிடித்து ஆட்டியவளாய் அவள் கேலிச் செய்ய,
“எனக்குத் தான் தமிழ் பாடம் ஒழுங்கா வராதுனு உனக்கு தெரியும்ல! அதுவுமில்லாம நான் லெவன்த் டுவெல்த்ல தமிழ்க்குப் பதிலா ஃப்ரண்ச் சப்ஜெட் எடுத்தேன்” என்றான்.
“ஓ” என்றவள், “நான் சொன்ன கவிதை வேணா உவமைனு சொல்லலாம். ஆனால் அந்தச் செய்யுள் பாட்டு உருவக அணி இளா மச்சான்” என்றவள்,
“உவமை அப்படிங்கிறது இது போல் அதுனு சொல்றது. உருவகம் அப்படிங்கிறது இது தான் அதுனு சொல்றது.
மதிமுகம் (மதி போன்ற முகம்) – இது உவமை அணி.
முகமதி (முகம்தான் மதி) – இது உருவக அணி.
வேல்விழி (வேல் போன்ற விழி) – இது உவமை அணி
விழிவேல் (விழிதான் வேல்) – இது உருவக அணி.
பச்சை மாமலை போல் மேனி – இது உவமை அணி.
மையோ மாமலையோ மறிகடலோ – இது உருவக அணி
மை போன்ற மேனினு சொல்லியிருந்தால் இது உவமையணி ஆகிருக்கும். ஆனால் மையோனு சொல்லும் போது அவன் மேனிதான் மைனு சொல்லிட்டாங்க. அதனால இது உருவக அணி”
நீண்ட விளக்கம் அளித்தவளைப் பார்த்துக் கொட்டாவி விட்டவனாய்,
அவளின் காதோடு இதழ் பொருத்தியவனாய், “எந்தப் பக்கம் அதிகமாக இருக்குனு உன் மச்சானை முழுசா பார்த்துச் சொன்னேனா குறைக்க வசதியா இருக்கும்” என்று மெல்லிய குரலில் அவன் கூறவும்,
வெட்கம் பிடிங்கித் தின்ன, “பேட் பாய் ஆகிட்ட நீ” என்றவளாய் அவன் மார்போடு முகத்தைப் புதைத்தாள்.
ஹா ஹா ஹா என வாய்விட்டுச் சிரித்தவனாய், “பொண்டாட்டிக்கிட்ட புருஷன் பேட் பாயா தான் இருக்கனுமாம்” ஹஸ்கிக் குரலில் கூற,
“அய்யோ போதும் மச்சான்” கூச்சத்துடன் அவனின் அணைப்பில் இருந்து விலகி வெளியே ஓடியவளை அவனின் சிரிப்பு சத்தம் தொடர்ந்திருந்தது.
தாய் தந்தையரிடம் மதிய உணவை தாங்கள் வெளியே உண்டு கொள்வதாக உரைத்து விட்டு மகிழுந்தை இயக்கியவனின் அருகில் அமர்ந்தவளாய், “நிஜமாவே இந்தப் பிரபொசர் நம்மளை விருந்துக்குத் தான் கூப்பிட்டாரா இல்ல அன்னிக்கு வளரைப் பார்க்க போன மாதிரி இதிலும் ஏதாவது பிளான் வச்சிருக்கியா மச்சான்?” எனக் கேட்டாள்.
தன்னைக் கண்டுகொண்டாளே என அசட்டுச் சிரிப்பு சிரித்தவன், அன்று அவரிடம் பேசிய அனைத்தையும் விளக்கியவனாய் தெரபிக்காகச் செல்வதாக உரைத்தான்.
மென்னகைப் புரிந்தவளாய், “எனக்காக நீ எடுக்கிற முயற்சிலாம் பார்க்க எவ்ளோ சந்தோஷமா இருக்குத் தெரியுமா” கண்கள் மின்ன உரைத்தவளைப் பார்த்துப் புன்னகைத்தவன், “பின்னே நம்ம மூனு குழந்தைங்க பிளான் என்னாகுறது?” குறும்புச்சிரிப்புடன் உரைத்தான்.
அவளின் கையை எடுத்து தனது மார்பு மீது வைத்தவனாய், “எல்லாம் சரியாகிடும்டா மயிலு! சரி செஞ்சிடுவான் உன் இளா மச்சான். நீ இப்படியே ஹேப்பியா இருந்தா போதும் எனக்கு” என்றான்.
“நீ என்கிட்ட இப்படி அன்பை கொட்டிட்டே இருந்தாலே போதும்! நான் சந்தோஷமா தான் இருப்பேன்” என்றவளாய் புன்னகைத்தாள் அவள்.
பெரிய வில்லா போன்ற தனித்தனி வீடுகள் கொண்ட காலனி போன்ற அமைப்பில் இருந்த அந்தக் குடியிருப்பின் நுழைவாயிலுக்குள் வண்டிச் செல்லவும், பச்சை பசேலெனப் புற்களும் மரங்களுமாய் அமைந்திருந்த அந்த வளாகத்தினுள் இருந்த பூங்காவையும் இடங்களையும் பார்த்தவாறே, “செம்மயா இருக்குல இந்த இடம்” என்றாள்.
இருவருமாக இணைந்து மரங்களுக்கு இடையில் தனி வீடாக இருந்த வீட்டின் வாசலுக்குச் சென்று அழைப்பு மணியை அழுத்த, “வெல்கம் ஹோம் புதுப் பொண்ணு! புது மாப்ள” என்றவராய் கதவைத் திறந்தார் மனோதத்துவ மருத்துவர் ராமதாசன். ஐம்பது வயதினரான அவர் முப்பது வயது மதிக்கத்தக்கவராய் இருந்தார்.
சிரித்த முகத்துடனான அவரின் இந்த வரவேற்பில், இதழ் விரிய சிரித்தவளாய் இளங்குமரனின் முழங்கையைப் பற்றியவாறு அவனுடன் உள்ளே நுழைந்தாள் இளமயில்.
ராமதாசனின் மனைவி லட்சுமி வந்து புன்னகையுடன் அவளின் கைகளைப் பற்றியவராய், “வெல்கம் மா” என்றவர் அவர்களை அமரப் பணித்தார்.
கணவரை விட மிக இளமையாக இருந்தார் லட்சுமி.
“இரண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர் மாதிரி சேர்ந்து பார்க்க அவ்ளோ பாந்தமா இருக்கீங்க” என்று லட்சுமி புகழ்ந்து கூறவும், முகத்தில் நாணமும் மகிழ்வும் போட்டிப்போட சிவந்தவளாய், “தேங்க்ஸ் மா” என்றாள்.
“உன் புருஷனுக்கு ஃபர்ஸ்ட் இயர்ல வந்த ஒரு பேப்பரை நான் தான் எடுத்தேன் மா. வெரி வெல் பிஹேவ்டு பிரைட் ஸ்டூடன்ட் அவன். அந்தக் காலேஜ்ல அவனைப் பிடிக்காத ஆளே இல்லை தெரியுமா” என்று இளங்குமரனின் புராணத்தை ராமதாசன் கூறவும்,
பெருமைப் பொங்க அவனைப் பார்த்தவளாய், “இளா மச்சான் அப்படி இல்லாம இருந்தா தான் அதிசயம் சார்” என்றாள்.
“ஓஹோ கதை அப்படிப் போகுதோ! உங்களோடது லவ் மேரேஜா என்ன?” ஆர்வமாய் லட்சுமி கேட்க,
என்ன கூறவென அவன் அவளைப் பார்க்க, அவளும் அவனைப் பார்த்தவளாய் ஆமெனத் தலையசைக்க, பெரியவர்கள் இருவரும் சிரித்தவாறு கண்களால் பேசிக் கொண்டனர்.
அச்சமயம் வாசலில் அழைப்பு மணியொலிக்க, அடுத்தத் தம்பதியர் வந்திருந்தனர்.
இவ்வாறாக அன்றைய பயிற்சி வகுப்புக்கு ஐந்து ஜோடிகள் வந்திருக்க, அனைவருக்கும் குடிக்கப் பழச்சாறு கொடுத்து சிறிது நேரம் பேசிவிட்டுப் பயிற்சி இடத்திற்கு அழைத்துச் சென்றார் ராமதாசன்.
அவர்கள் இல்லத்தின் பின் வாசலுக்கு வெளியே பெரிய திறந்த வெளி பூங்கா போன்ற இடம் இருக்க, சுற்றிலும் மரங்களும் பூச்செடிகளுமாய், அதில் புறாக்கள் இங்குமங்குமாய்ப் பறந்து திரிந்து கொண்டிருக்க, உடலைத் தழுவிய மென் காற்றும், செடியிலிருந்து வந்த பூ வாசமும் அந்த இடத்தை ரம்மியமாக உணரச் செய்தன.
அந்த இடத்தின் நடுவில் பளிங்குத் தரையில் மெத்தை விரிக்கப்பட்டிருக்க அதில் அனைவரையும் அமரச் செய்தார்.
அனைவரும் அவரவர் துணையுடன் ஜோடியாகச் சம்மணமிட்டு அமர்ந்தனர்.
அறிமுகப்படலமாய் அனைவரும் அவரவரின் பெயர், ஊர் மற்றும் பணி பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
“ஓடிட்டே இருக்க வேண்டிய காலகட்டத்துல இருக்கோம். நம் இருப்பைத் தெரியப்படுத்திட்டே இருந்தா தான் நமக்கான வாய்ப்புகள் தொடர்ந்து வரும்னு ஓடிட்டே இருக்கோம். ஆனா அந்த ஓட்டத்தில் நம்ம நலனையும் நம்மளோட உறவுகளின் நலனையும் பேண மறந்திடுறோம்”
“உங்களுக்கான நேரம்னு தனியா இப்படி அமைதியாக உட்காருவதற்கு என்னிக்காவது நேரம் ஒதுக்கிருக்கீங்களா? அதாவது இப்படிக் கைல போன் இல்லாம, டிவியைப் பார்க்காம, முகத்தைப் பார்த்து நேராக உட்கார்ந்து தொடர்ந்து ஒரு மணி நேரம் கடைசியாக எப்ப பேசுனீங்கனு யோசிச்சு பாருங்க” என்றதும் அனைவரின் முகத்திலும் யோசனை ரேகைகள்.
மயிலுக்கும் குமரனுக்குத் திருமணமாகி சில நாட்கள் தான் ஆகிறது என்பதாலும் இருவருமே பெரியதாகக் கைப்பேசியைப் பயன்படுத்துபவர்கள் இல்லை என்பதாலும் இப்பிரச்சனை அவர்களுக்கு வரவில்லை. முடிந்த வரை இருவருமே மற்றவருக்கான நேரத்தை வழங்கியிருந்தனர்.
மேலும் தொடர்ந்தவராய், “உங்க உறவுகளுக்கு நேரத்தை ஒதுக்குறது இருக்கட்டும். உங்களுக்காகனு தினமும் அரை மணி நேரமாவது ஒதுக்கி இருக்கீங்களானு யோசிங்க!” என்றவர்,
“இப்படி நாம எதுக்காக உழைக்கிறோம் யாருக்காக உழைக்கிறோம்னே தெரியாம ஓடிட்டு இருக்கிறது தான் பல வகையான மனநோய்க்கு நம்மளை ஆளாக்கிடுது” எனறார்.
“மனநோயா?” என்று ஆச்சரியமாகக் கேட்டார் ஒருவர்.
“மனநோய்னா என்ன நினைச்சீங்க! புத்தி பேதலித்த நிலையில் இருப்பதா? சாதாரணமாக வரும் மன அழுத்தமான ஸ்ட்ரெஸ் கூட ஒரு மனநோய் தான்” என்றவர் மேலும் தொடர்ந்தவராய்,
“ஏன் எதுக்குனே தெரியாம மனசு எப்பவுமே எதையாவது நினைச்சி கவலைப்பட்டுக்கிட்டே இருக்குமே. இப்ப கரெண்ட் லைஃப்ல கவலைப்பட எதுவும் இல்லைனா அடுத்து என்னாகும் வாழ்க்கைனு எதிர்காலத்தை நினைச்சி கவலைப்பட ஆரம்பிச்சிடும் மனசு. இதுவும் ஒரு விதமான மனநோய் தான்.
அப்புறம் சிலருக்கு எப்பவும் மனசு பயமும் பதட்டமாவே இருக்கும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா! கொடுத்த வேலையைச் சரியாகச் செய்யனும்னு நினைப்பாங்க ஆனா அந்த வேலையை எப்படிச் செய்யனும்னு தெரியாது, அதைக் கத்துக்கிட்டு செய்றதுக்குள்ள மனசு ஒரு நிலையில் இல்லாம பயந்துக்கிட்டே இருக்கும். அதுவும் மனநோய் தான்.
சிலருக்கு ஸ்டேஜ்னா பயம், இன்டர்வியூனா பயம், எதையும் ஃபேஸ் செய்யப் பயம்னு வீட்டு வேலை செஞ்சிட்டு வீட்டோடயே இருப்பாங்க. அதுவும் ஒரு விதமான மனநோய் தான்.
ஒரு சிலருக்கு எப்பவுமே நெகட்டிவ் தாட்ஸ் வந்துட்டே இருக்கும். அதாவது ஒரு முழுப் பாசிட்டிவ் படத்துல வர்ற சின்ன நெகட்டிவ் காட்சி அவங்களை ரெஸ்ட்லெஸ்ஸாகி பதட்டத்துக்கு உள்ளாக்கிடும். அதுவும் ஒரு விதமான மனநோய் தான்.
சிலர் அவங்க வாழ்க்கைல நடந்த கெட்ட விஷயத்தைக் கடக்க முடியாம, மறக்க முடியாம எப்பவும் சோகமாகவே இருப்பாங்க. இல்லனா சிலர் அதைக் கடந்துட்டதாக நினைச்சி சிரிச்சி சந்தோஷமா வாழ்ந்துட்டு தான் இருப்பாங்க. ஆனால் அவங்களுக்கு நடந்த கெட்ட சூழ்நிலை மாதிரி எங்கேயாவது பார்த்தாலோ கேள்விப் பட்டாலோ மனசொடஞ்சி போய்டுவாங்க. இதுவும் ஒரு விதமான மனநோய் தான்.
இப்படி நம்மளோட அன்றாட வாழ்க்கைலயே பலவகையான மனநோய்ல இருக்கோம்னே தெரியாம மனநோய்க்கு ஆளாகி அதிலிருந்து போராடி வெளில வந்து வாழ்ந்துட்டு இருக்கிறவங்க தான் பலர் இங்கே. .
இந்த மாதிரியான எல்லா வகையான மனநோய்க்கும் நான் சொல்லிக் கொடுக்குற இந்தப் பயிற்சி உங்களுக்கு ரொம்பவே உதவியாக இருக்கும்” என்றவர் அனைவரையும் பார்த்தவராய்,
“தினமும் காலைல எழுந்ததும் யார் யார் என்னென்ன செய்வீங்க?” என்று அனைவரிடமும் கேட்டார்.
அனைவரும் அவரவரது நாளின் தொடக்கத்தினைப் பற்றி உரைக்க, “பாருங்க பலரும் காலைல எழுந்திருக்கும் போதே பரபரப்பா இதைச் செய்யனும் அதைச் செய்யனும்னு பிளான் போட்டுட்டே எழுந்திருக்கிறீங்க. அப்படி எழுந்திருக்கிறதை தப்பு சொல்லலை. ஆனால் காலைல ஆரம்பிச்சி தூங்குற வரைக்கும் எதையாவது யோசிச்சுட்டே இருக்கிற மூளைக்குக் கொஞ்சமாச்சும் ரெஸ்ட் கொடுக்கனும் தானே” என்றார்.
“ஒரு இரண்டு நிமிஷம் அமைதியாக எதைப் பத்தியும் யோசிக்காம உங்களால உட்கார முடியுமா?” எனக் கேட்டார்.
“நாங்க சும்மா இருந்தாலும் இந்த மூளைக்குள்ளே ஏதாவது ஓடிட்டே இருக்கே” என்று ஒருவர் சொன்னதும், அனைவரும் சிரித்தவாறு ஆமோதித்தனர்.
அவரும் சிரித்தவராய், “பயிற்சியும் முயற்சியும் இருந்தால் முடியாதது எதுவும் இல்லை. இப்படி எதைப் பத்தியும் யோசிக்காம அமைதியாக அரை மணி நேரம் ஒரு நாளைக்கு உங்களால உட்கார முடிஞ்சா போதும். எந்த மனநோயும் உங்களைப் பாதிக்காது” என்றார்.
“முதல்ல உங்க கவனத்தை ஒரு விஷயத்தில் குவிச்சி அரை மணி நேரம் அதுலயே மனசை செலுத்துங்க. இதுக்குத் தான் அந்தக் காலத்துல ஒரு மனசாக இறைவனை வணங்கும் முறையை வச்சாங்க. அது ஒருவிதமான யோகா தான். இப்ப நீங்க அப்படி மனசை மூச்சை நோக்கி குவிச்சி வையுங்க. கண்ணை மூடிட்டு நீங்க விடும் மூச்சு காத்துல மட்டுமே உங்க கவனம் இருக்கிற மாதிரி அஞ்சு நிமிஷம் செய்யுங்க பார்க்கலாம்” என்றவராய் எப்படிச் செய்ய வேண்டும் என்று செய்முறை விளக்கமும் அளித்தார்.
“காலைல எழுந்ததும் நல்ல காற்றுள்ள இடத்துல அமர்ந்து கண்ணை மூடி எதைப் பத்தியும் யோசிக்காம உட்காருங்க. முதல்ல அஞ்சு நிமிஷம்னு ஆரம்பிச்சி கொஞ்சம் கொஞ்சமாகப் பத்து நிமிஷம்னு செய்ய ஆரம்பிச்சு ஒரு நாளைக்கு அரை மணி நேரம் இப்படி நீங்க மூளைக்குக் கொடுக்கிற ரெஸ்ட்! அன்றைய நாளைக்கு உங்களை இன்னும் புத்துணர்வோட இயங்க வைக்கும்” என்றவராய் அனைவரையும் செய்ய வைத்தார்.
மேலும் ஒரு மணி நேரம் சில மூச்சு பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்தவராய், “இந்தச் சிபிடி தெரபியோட பேசிக் (basic) தான் இந்த மூச்சுப் பயிற்சி. இது தொடர்ச்சியாகச் செய்வது மூலமாக உங்க மூளைக்குள்ள இருக்க நெகட்டிவ் தாட்ஸ் படிப்படியாகக் குறைஞ்சி முழுக்க நேர்மறை சிந்தனை மட்டுமே உங்களைச் சூழ்ந்திருக்க மாதிரி மாறிடுவீங்க! சோ இதை விடாம செய்யுங்க. மீதியை நாளைக்குப் பார்க்கலாம்” என்றார்.
ராமதாசன் லட்சுமி தம்பதியரின் இல்லத்திலேயே மதிய உணவை உண்டுவிட்டு மகிழுந்தில் கிளம்பினர் இருவரும்.
“உனக்குப் பிடிச்சிருக்கா இந்தக் கிளாஸ் மயிலு?” எனக் கேட்டான் இளங்குமரன்.
“ரொம்பப் பிடிச்சிது. இன்னும் நாளைக்கு ஒரு நாள் கிளாஸ் இருக்குல. நாளைக்கு என்ன சொல்லிக் கொடுக்கப் போறாருனு இன்னிக்கே ஆர்வமாக இருக்கு. அவ்ளோ நல்லா சொல்லித் தராரு” என்றவள், வீட்டிற்குச் செல்லும் பாதைக்கு எதிர் திசையில் வாகனம் செல்வதைப் பார்த்தவளாய், “எங்கே போறோம் குமரா?” எனக் கேட்டாள்.
“உனக்கு ரொம்பப் பிடிச்ச இடத்துக்கு” என்றவன் அடுத்த அரை மணி நேரத்தில் வண்டியை அங்கே நிறுத்தியிருந்தான்.
“ஹே குமரா! குமரன் குன்றம்” பூரிப்பாய் உரைத்தவள், “நானே உன்கிட்ட இங்கே கூட்டிட்டு வர சொல்லனும்னு நினைச்சிட்டு இருந்தேன். நீயே கூட்டிட்டு வந்துட்ட” என்றவளாய் மகிழுந்தை விட்டு இறங்கியவள் அவனின் முழுங்கையைப் பற்றியவளாய் படிக்கட்டில் ஏறினாள்.
“எப்பவும் இங்கே தனியா தான் வருவேன் இளா மச்சான். அப்பலாம் யாராவது கணவன் மனைவி ஜோடியா படிக்கட்டு ஏறுறதை பார்க்கும் போது நாமளும் இப்படிக் கல்யாணத்துக்குப் பிறகு வரனும்னு நினைச்சிருக்கேன். ஆனால் அது நடக்க வாய்ப்பே இல்லைனு தெரிஞ்ச பிறகு இங்கே வரதையே நிறுத்தியிருந்தேன். இன்னிக்கு பாரேன் அந்தக் குமரனே இந்தக் குமரனை எனக்குக் கட்டி வச்சி வரவச்சிருக்காரு” என்று கண்களில் நீர் பொங்கப் பூரிப்புடன் நெகிழ்வாக உரைத்தவளாய் அந்தக் கோயிலின் எண்பது படிக்கட்டிகளைக் கடந்து வந்திருந்தாள்.
“வாராவாரம் இப்படி நடந்து தான் உடம்பை ஸ்லிம்மா வச்சிருக்கியா மயிலு” என்று அவளின் இடையை அவன் வளைக்க,
“ஹே பப்ளிக்ல என்ன பண்ற?” என்றவளாய் பதறி விலகியவளைப் பார்த்துச் சிரித்தவன், “ஹா ஹா ஹா. சும்மா.. உன் இடுப்புச் சைஸ் என்னனு பிடிச்சிப் பார்த்தேன்” என்றான்.
“பார்ரா முருகன் கோவிலுக்கு வந்ததும் என் புருஷனுக்கும் ரொமேன்ஸ் வருது” என்று சிரித்தவள்,
“வேள்பாரி நூல் தான் ஞாபகம் வருது குமரா” என்றவளாய்,
“காதல் சம்பந்தப்பட்டவர்களின் சாமர்த்தியத்தால் தான் கைக்கூடும்னு முருகன் சொல்றது போல எழுதியிருப்பார் சு.வெ” என்று சொன்னவள்,
“இந்தப் புத்தகத்தைப் படிச்ச நேரத்துல இந்த வரியை வாசிச்சதும், வளர்மதி மாதிரி நான் சாமர்த்தியமாக இருந்திருந்தால் என் காதல் கைக்கூடியிருக்குமோனு நினைச்சு மேலும் தொடர்ந்து படிக்க முடியாம அப்படியே புக்கை மூடி வச்சிட்டு உட்கார்ந்த நினைவுலாம் வருது குமரா” என்று கூறிச் சிரித்தாள் இளமயில்.
இருவருமாக முருகனை வணங்கி மனமார நன்றி கூறிவிட்டு, “சீக்கிரம் எங்க பிரச்சனை எல்லாம் சரி செஞ்சு குழந்தை வரமளிக்கனும் முருகா” என வேண்டிக் கொண்டனர்.