இன்று மதியமும் பயிற்சி ஆள்களுக்கான சமையலில் லட்சுமி ஈடுபட்டிருக்க, உடன் உதவுவதற்குப் பணியாட்கள் இருந்தாலும், லட்சுமியுடன் பேசியவாறு உதவியிருந்த இளமயில் இவ்வாறு கேட்டிருந்தாள்.
“ஏன் மயிலு! வெளிலயே வாங்கிச் சாப்பிடலாம்னு சொல்ற அளவுக்கு நேத்து என் சமையல் அவ்ளோ மோசமாவா இருந்துச்சு” சிரித்தவாறு கேட்டார் லட்சுமி.
“அய்யோ இல்ல ஆன்டி! செம்ம டேஸ்டியா இருந்துச்சு நேத்து சாப்பாடு! ஏன் இப்படிக் கஷ்டப்படுறீங்கனு தான் கேட்டேன்” தவறாகப் புரிந்து கொண்டாரோ எனப் பதட்டமானவளாய் தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.
“இல்லமா! இதுல எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. என் புருஷன் என்ன ஃப்ரீ கிளாஸா எடுக்கிறாரு? பணம் வாங்கித் தானே எடுக்கிறோம். வர்றவங்களுக்கு வயிறார சோறு போட்டா இன்னும் சந்தோஷமா மனசு வயிறும் நிறைஞ்சு போவாங்கலயா! அதுவுமில்லாம எனக்குச் சமைக்கிறது ரொம்பப் பிடிக்கும். ஐ லவ் குக்கிங். நான் ஒரு யூ டியூப் சேனல் கூட வச்சிருக்கேன். பார்க்கிறியா?” என்றவராய் தனது கைப்பேசியில் சேனலைத் திறந்து அவளிடம் காண்பித்தார்.
பெரும்பாலும் பாரம்பரியமான ஆரோக்கியமான உணவுகளையே அவர் செய்திருந்ததைப் பார்த்தவாறே வந்தவள், “ஆன்டி இது தேன்மிட்டாய் தானே! நிஜமாவே உங்களுக்குத் தேன்மிட்டாய்ச் செய்யத் தெரியுமா?” கண்கள் மின்ன ஆச்சரியம் பொங்கக் கேட்டவளைச் சிரிப்புடன் பார்த்தவராய், “பின்னே வேற யாரோ செஞ்சதை நான் செஞ்சா மாதிரி வீடியோ போட்டுட்டேன்னு நினைச்சியா” எனக் கேட்டார்.
“அய்யோ இல்லை ஆன்டி! தேன்மிட்டாய் வீட்டுல செஞ்சி இது வரை நான் பார்த்ததில்லை! அதான் கேட்டேன்” என்றவளாய் ஆர்வமுடன் அந்தக் காணொளியைப் பார்த்தவளை மென்னகையுடன் பார்த்தவர், “உன் புருஷனுக்குத் தேன்மிட்டாய்னா ரொம்பப் பிடிக்குமா?” கனிவுடன் கேட்டிருந்தார்.
அவளின் விழிகள் சட்டெனக் காணொளியில் இருந்து அவரது முகத்திற்குத் தாவ, “தேன் மிட்டாய் மூலமா தான் எங்க நட்பே தொடங்குச்சு ஆன்டி” அந்நாள்களின் நினைவில் செவ்வானமாய் மின்னியது அவளது முகம்.
“ஓஹோ அப்படி ஆரம்பிக்குதா கதை! புருஷனைப் பத்தி பேசினாலே ஆயிரம் வாட்ஸ் பல்ப் மாதிரி மினுமினுனு மாறிடுதே உன் முகம்!” எனக் கேலிச் செய்து சிரித்தவராய், “அப்படி ஆரம்பிச்ச கதைல எப்ப உங்க லவ்வை சொன்னீங்க?” என்று அவர்களின் காதல் கதையை ஆர்வமாய்க் கேட்க, பள்ளியில் அவனை முதன் முதலாய் சந்தித்ததை உரைத்து விட்டு அவர்கள் இரு குடும்பத்திற்கும் உண்டான நட்பை மட்டும் உரைத்தவள், மீண்டுமாய்த் தற்செயலாக இப்பொழுது சந்தித்த போது குடும்பத்தினர் பேசி மணம் செய்து வைத்ததாகக் கூறினாள்.
அதே நேரம் இங்கே ராமதாசருடன் அறையில் அமர்ந்திருந்த குமரனிடம், “சொல்லுடா புது மாப்ள! எப்டி போகுது லைஃப்” எனக் கேட்டிருந்தார் ராமதாசன்.
“சூப்பரா போகுது டாக்டர் சார். ஆனா” என்று தயங்கியவனாய் நிறுத்த,
“புரியுதுடா குமரா! அன்னிக்கு நீ பேசின விஷயத்தைப் பத்தி கேட்க தானே சீக்கிரமா வந்திருக்க” எனக் கேட்டார்.
“ஆமா டாக்டர்! இந்தத் தெரபி மட்டும் போதுமா இல்ல நாங்க வேற எதுவும் ட்ரீட்மெண்ட் எடுக்கனுமானு கேட்க நினைச்சேன்” என்றான் இளங்குமரன்.
“இதுவே போதும் இளா. இந்த உலகத்துல மோஸ்ட் அண்டர்ரேடட் (குறைவாக மதிப்பீடு செய்யப்பட்ட) விஷயம் என்ன தெரியுமா குமரா?” எனக் கேட்டார்.
“என்ன டாக்டர்?” என்றவனாய் அவன் முழிக்க,
“அன்பு!
அன்பு தான் மோஸ்ட் அண்டர் ரேட்டட் விஷயம்! அதோட வீரியத்தையும் அதன் தன்மையையும் பெரும்பாலும் நாம புரிஞ்சிக்கிறதே இல்லை” என்றார்.
“இந்தப் பயிற்சியோட உன்னோட அன்பும் சேரும் போது தான் உங்க தாம்பத்தியம் இனிமையானதாக அமையும் இளா. உன் மனைவிக்குப் பிடிக்கலைனு ஒதுங்கியே இருக்காதடா. எங்க எந்த இடத்துல பிடிக்கலை அதை எப்படி ஹேண்டில் செய்யலாம்னு யோசி. உன்னோட நெருக்கத்தை இயல்பாக அவங்களை ஏத்துக்க வை! சின்னச் சின்னதா அதுக்காக ஏதாவது முயற்சி செய்! அவங்க பயிற்சி மூலமா நார்மல் ஆகிட்டே வரும் போது உன்னோட இந்த முயற்சியும் சேர்ந்து அவங்க அறியாமலே இயல்பாக உன் நெருக்கத்தை ஏத்துக்க அவங்க மனசு பழகிடும். நீயும் ஒரு டாக்டர்ங்கிறனால நான் சொல்ல வர்றது உனக்குப் புரியும்னு நினைக்கிறேன்” என்றதும்,
“யெஸ் ஐ கேன் அண்டஸ்டாண்ட் டாக்டர் சார்” என்றவனாய் புன்னகைத்தான்.
பயிற்சி வகுப்புத் தொடங்கியதும், முந்தைய தினம் சொல்லிக் கொடுத்த பயிற்சியைப் பற்றி ஒரு முறை விளக்கியவராய் அன்றைய நாளுக்கான வகுப்பினை எடுக்க ஆரம்பித்தார்.
சிபிடி தெரபி அதாவது Cognitive Behaviour Therapy, ஒரு விதமான உளவியல் சிகிச்சைனு சொல்லலாம். மனிதர்களோட சிக்கலான நடத்தைகள் மற்றும் மன செயல்முறைகளை ஆய்வு செய்து சரி செய்ய இந்தத் தெரபியை கண்டுபிடிச்சாங்க.
இந்தச் சிகிச்சை மனநோய்க்கான அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும், மனநோய் திரும்ப வராம தடுக்கவும், மருந்துகள் நல்ல வாய்ப்பாக இல்லாதபோது மனநோய்க்குச் சிகிச்சை அளிக்கவும், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கைச் சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கான திறனையும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளையும், தூக்கப் பிரச்சனை, மனச்சோர்வு போன்றவைகளைச் சரி செய்யவும் உதவுது.
பொதுவாக இந்தச் சிகிச்சையைத் தனித் தனி நபர்களுடன் three to five sittings அதாவது மூன்றிலிருந்து ஐந்து அமர்வுகள் பயிற்சி வகுப்புகள் மாதிரி வைப்பாங்க.
என்னைப் பொறுத்தவரைக்கும் அப்படித் தனித்தனியாக வழங்கப்படும் சிகிச்சையே அவங்களைப் பெரிய நோயாளிகள் போல உணர வைக்கும்.
ரொம்ப ரொம்பக் காம்ப்ளிகேட் கேஸ்கு மட்டும் தான் அப்படித் தனியா கிளாஸ் எடுப்பேன்.
இப்ப இங்கே எல்லாருக்குமே அவங்களோட பிரச்சனை என்னனு தெரியும். அதனால இப்படிப் பொதுவாக எடுப்பதே போதுமானதாக இருக்கும்” என்றவராய் அந்தச் சிகிச்சையின் செயல்முறையைப் பற்றிக் கூறலானார்.
“முதல்ல அவரவரின் மனப் பிரச்சனைக்கான அடிவேரான காரணம் என்ன! அது எந்த நிகழ்வுனால எந்தெந்த சூழ்நிலைல வருதுனு தெரிஞ்சிக்கிறது தான் இந்தச் சிகிச்சையின் முதல் படிநிலை!
இங்கே எல்லாருக்குமே அது தெரியும்ங்கிறனால, அடுத்து இப்படி நம்மளை சூழ்ந்துட்டு இருக்கிற அந்த எதிர்மறை அல்லாது வேண்டாத சிந்தனைகள் எண்ணங்களில் இருந்து விடுபடுதல் எப்படிங்கிறது தான் இரண்டாவது படிநிலை!
இந்த இரண்டாவது படிநிலைல என்ன செய்யனும்னா உங்களுக்கு வரும் unproductive thoughts அதாவது வேண்டாத நினைவுகள், எதிர்மறை எண்ணங்கள், சிந்தனைகளைக் குறிச்சி வச்சிக்கனும். எந்த மாதிரி சூழ்நிலைல இது வருதுனும் நீங்க குறிச்சி வச்சிக்கனும்.
மூன்றாவது படிநிலை! இந்த ஸ்டெப் தான் ரொம்ப முக்கியமானது. உங்களுக்கு வரும் அந்தத் தேவையற்ற நினைவுகளை எண்ணங்களை வேறொரு நல்ல நிகழ்வுகள் கொண்டு நீங்க ரீப்லேஸ் (replace) செய்யனும். அந்தக் கெட்ட நிகழ்வுகள் இடத்துல வேற நல்ல நிகழ்வுகளை நினைச்சிக்கனும்.
உதாரணத்துக்கு இப்ப உங்களுக்குப் பேயை நினைச்சாலே பயம்னு வச்சிப்போம். பேய் பிசாசுனு ஏதாவது அதைப் பத்தி பேசினாலே உங்க மனசுக்குள்ள தானாக அது சம்பந்தப்பட்ட நெகட்டிவ் விஷயங்கள் வந்து உங்களைப் பயம் கொள்ள வச்சிடுதுனு வச்சிப்போம். இந்தச் சூழ்நிலைல இந்த ரீப்லேஸ் தெரபியை எப்படிப் பயன்படுத்தனும்னா பேய் பத்தி பேசும் போது பேய் உங்க பக்கத்துல நிக்கிற மாதிரி நினைப்பு வருதுனு வச்சிக்கோங்க, நீங்க உடனே அந்தப் பேயை நீங்களே அடிச்சி விரட்டுற மாதிரி மனசுல நினைச்சிக்கலாம் இல்லனா அது ஒரு பேயே இல்ல உங்க நண்பன் யாரோ உங்களைப் பிராங்க் செய்ற மாதிரி நினைச்சிக்கலாம். கடவுள் நம்பிக்கை இருக்கிறவங்க கடவுள் அந்தப் பேயை விரட்டு விடுற மாதிரி நினைச்சிக்கலாம். இப்படி நினைக்கும் போது அந்த நெகட்டிவ் உணர்வு தானாகவே படிப்படியாகக் குறைஞ்சி நல்ல நேர்மறை அதிர்வலையை உங்களுக்கு உண்டாக்கும். இப்படித் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது பின்னாடி எப்ப இந்தக் காட்சி மனசுல வந்தாலும் அந்தப் பயம் பதட்டம்லாம் போயி நார்மலா இருப்பீங்க. உண்மையான பேயை பார்த்தா கூடப் பயப்பட மாட்டீங்க.
ஒரு நாள்ல இது சரியாகாது. தினமும் காலைல மூச்சுப் பயிற்சி செய்யும் போது, உங்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குற தேவையற்ற நினைவுகள் சிந்தனைகளை மனக்கண்ணில் கொண்டு வந்து அதற்கு மாற்றாக நேர்மறையாக நீங்க நினைத்து வைத்திருக்கும் நினைவுகளைச் சிந்தனைகளைக் கொண்டு வந்து நினைச்சி பார்த்துப் பயிற்சி எடுக்கனும்.
இப்படித் தொடர்ந்து செய்யும் போது கண்டிப்பாக உங்களால அந்த நெகட்டிவ் தாட்ஸ் அண்ட் எனர்ஜில இருந்து வெளில வர முடியும்”
அவளின் உடலில் பூத்திருந்த வியர்வையும் அசௌகரியமான முக உணர்வுகளையும் பார்த்தவராய், அவளருகில் வந்த மருத்துவர், “டேக் எ டீப் பிரத் மயிலு (ஆழமா மூச்செடுத்து விடு) என்றார். முந்தைய நாள் சொல்லிக் கொடுத்தது போல் மூச்சுப் பயிற்சி செய்தாள்.
“இப்ப உங்க வாழ்க்கைல நடந்த உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச நிகழ்வை மனசுல நினைச்சிக்கோங்க. அது உங்க கணவர் சம்பந்தப்பட்டதாக இருந்தா இன்னும் நல்லது” என்றார்.
அவளது மனக்கண்ணின் முன் குமரன் குன்றம் கோயிலுக்கு இருவரும் கைக்கோர்த்து சிரித்தவாறு பேசிச் சென்ற காட்சி விரிய, அப்படியே இவள் குமரனை அணைத்து காதல் கூறி முத்தமிடுவது, அவனும் காதலை பொழிவது எனக் குமரன் குறித்தான நல்ல காட்சிகள் எல்லாம் ஒன்றென்பின் ஒன்றாகத் தானாகவே மனத்திற்குள் வந்து அவளின் முகத்தில் மென்முறுவலை உண்டு செய்தது.
பயிற்சி முடிந்ததும் இளங்குமரனை அழைத்த மருத்துவர் இளமயிலுக்கெனச் சில மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்.
“ஷீ இஸ் கோயிங் டு பீ ஆல்ரைட் சூன். (சீக்கிரம் அவங்க குணமாகிடுவாங்க). இன்னிக்கு பயிற்சிலேயே நல்ல முன்னேற்றம் தெரிஞ்சிது இளா. ஒரு மாசத்துக்கு மேலயும் இது சரியாகலைனா வீ கேன் கோ ஃபார் அனதர் ட்ரீட்மெண்ட். ஆனா இதுவே அவங்களைச் சரி செஞ்சிடும்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. பயிற்சியை மட்டும் விடாம செய்ய வச்சிடுடா” என்றார்.
அன்றிரவு படுக்கையில் விட்டத்தைப் பார்த்தவாறு படுத்திருந்த இளமயிலை நோக்கி அமர்ந்திருந்த இளங்குமரன், “மயிலு! நான் உன் மேல படுத்துக்கவா?” எனக் கேட்டான்.
மருத்துவர் கூறிய பயிற்சியினைப் பற்றிச் சிந்தித்தவளாய் படுத்திருந்தவள் திடீரென அவன் கேட்டக் கேள்வியில் கண்களை விரித்தவளாய், “என்ன? என்ன கேட்ட?” என்றாள்.
“உன் மேல படுத்துக்கவாஆஆனு கேட்டான்” ஒவ்வொரு வார்த்தையாக அழுத்திக் கேட்டான்.
சற்று அதிர்வாய் கண்கள் விரிய அவனைப் பார்த்தவள் பின்பு புன்னகையுடன் இரு கரங்களையும் விரித்து அழைத்தாள்.
அவளை நோக்கிச் சென்றவன் முழுவதுமாக அவள் மீது படுக்காது, தனது பாதி உடல் அவள் மீது இருக்குமாறு ஒரு கையால் அவளின் இடை வளைத்து மறுகையால் அவளது கழுத்தை வளைத்து மார்பில் தலை வைத்தவனாய் படுத்துக் கொண்டவன், “ரொம்ப வெயிட்டா தெரிஞ்சா சொல்லுடா மயிலம்மா” என்றான்.
இருகரங்கள் கொண்டு அவனை இறுக்கமாய் அணைத்தவளாய், தனது கண்களுக்குத் தெரிந்த அவனது தலையில் முத்தமிட்டாள்.
அவள் மார்பில் சாய்ந்திருந்தவாறே அவளின் இதயத்துடிப்பினைக் கேட்டவனாய், “தாய் பறவை தன்னோட குஞ்சை சிறகுக்குள்ள அடைக்காக்கிற மாதிரி என்னைக் கட்டிருக்க நீ” என்றான்.
ஹாஹாஹா என வாய்விட்டுச் சிரித்தவளாய், “நல்லா இருக்கு” என்றாள்.
அவனது காலை அவள் மீது போட்டவனாய் மேலும் அவளை அவன் இறுக்க, “மச்சான்ஆஆஆ” ஹஸ்கி வாய்ஸ்ஸில் அழைத்தாள்.
“என்னடா மயிலம்மா? வலிக்குதா?” என்றவன் கேட்க, “இல்ல இல்ல ஒன்னுமில்லை” என்றவள் தன்னோடு அவனை மேலும் இறுக்கினாள்.
அவனின் கவனமெல்லாம் தனது உடலின் எடை அவளை அழுத்திவிடக் கூடாதே என்பதிலேயே இருக்க, அவளின் உள்ளத்தில் இன்ப மழைச்சாரல். அந்நொடியை இன்பமாய் சுகித்திருந்தாள்.
சற்று மேலேறியவனாய் அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து முத்தமிட்டவனின் கழுத்து வளைவில் முகத்தை வைத்தவளாய் ஆழ மூச்செடுத்து அவனது வாசனையை உள்ளுக்குள் இழுத்தாள். மெல்ல மெல்ல அவளை முழுவதுமாக தனது உடலின் தொடுகைக்குள் கொண்டு வந்திருந்தான் அவன்.
பத்து நிமிடங்கள் வரையில் இருவரும் ஒருவரோடு ஒருவராய் ஒட்டியவாறு உடலின் ஒவ்வொரு அணுவிலும் தங்களது இணையரின் உடல் வெம்மையினை உணர்ந்தவாறு சிலிர்த்திருக்க, மெல்ல உறக்கத்திற்குள் அவள் ஆழ்ந்த சமயம் நெற்றியில் முத்தமிட்டவனாய் விலகிப் படுத்தான் அவன்.
அவனின் விலகலில் கண் விழித்தவள், “என்ன மச்சான்?” என்றவளாய் வழக்கம் போல் அவன் மார்போடு புதைந்து அவனை இறுக்கமாய் அணைத்தவளாய் உறங்கிப் போனாள்.
தன்னையும் தனது உடலின் அங்கங்களையும் இயல்பாக அவள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அன்றாடம் சில நிமிடங்கள் இவ்வாறு அவளுடன் ஒட்டிக்கொண்டு இருப்பதை வாடிக்கையாக்கி இருந்தான் இளங்குமரன். இருவருமே அன்றாடம் அந்நொடிக்காகக் காத்திருக்கத் தொடங்கினர். அந்நொடிகளில் ஒரு பரிபூரண நிம்மதியும் அமைதியும் இருவரின் மனத்தையும் ஆக்கிரமித்திருக்கும். இருவருக்குள்ளிருக்கும் சொல்லொண்ணாக் காதலை உணர்த்துவதாய் தோன்றும் இருவருக்கும்.
இவளும் காலை வேளையில் மூச்சு பயிற்சியும் சிபிடி பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாள். அந்தப் பயிற்சி மேற்கொள்ளும் பொழுது எதிர்மறையாய் ஏது தோன்றினாலும் உடனே குமரனுடனான இரவின் அந்நொடிகளையும் அவனுடனான மகிழ்வான வாழ்வின் நிகழ்வுகளையும் நினைத்துக் கொள்வாள்.
இவ்வாறாக ஒரு மாதம் கடந்திருந்த நிலையில் புதுமணத்தம்பதியினராய் தேனிலவுக்காகக் கொடைக்கானலுக்குப் பயணத்திருந்தனர் இருவரும்.