காதொலிப்பான் மூலம் இப்பாடலைக் கேட்டவாறு, புன்னகையே எந்தன் மதம் என்று தானும் இணைந்து உற்சாகமாய்ப் புன்னகையுடன் பாடியவள் அம்மம்மாஆஆ என்ற வார்த்தையில் அதில் ஒலித்த இனிமையில் கண்களை மூடி சித்ராவின் தேன் குரலைச் செவி மூலம் ரசித்து மனத்திற்குள் கடத்தியவளாய்,
“ப்பாஆஆ வாட் எ வாய்ஸ்ல இளா மச்சான்” அவனது புஜங்களைப் பற்றிக் கொண்டு தோளில் சாய்ந்தவளாய் உரைத்தாள்.
ஒரு காதொலிப்பான் அவள் செவியிலும் மற்றொரு காதொலிப்பான் இளங்குமரனின் செவியிலும் இருக்க, அவளின் ரசனையை ரசித்தவனாய் அவளுடன் இணைந்து பாடல்களைக் கேட்டு ரசித்தவண்ணம் கொடைக்கானலின் பேருந்தில் மனைவியுடன் பயணித்துக் கொண்டிருந்தான் இளங்குமரன்.
பேருந்தின் ஓட்டத்தில் ஜன்னல் வழியாக முகத்தை வருடிச்செல்லும் காற்றின் இதத்துடன் தன்னவனின் தோள் சாய்ந்தபடி அவளுக்கு மிகவும் பிடித்தமான பாடல்களை ரசித்துக் கேட்டவாறே ஒரு பேருந்து பயணம் என்பது அவளது நெடுநாளைய கனவு.
அடுத்தப் பாட்டு தொடங்கவும், நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற பூவல்லவா என்று இவளும் இணைந்து பாடிக் கொண்டிருந்த பொழுது, கொடைக்கானல் என்ற பெயர்ப்பலகையைக் கடந்து இவர்களின் பேருந்து செல்ல, பாட்டை நிறுத்தியவளாய்,
“இளா மச்சான், இந்த ஊருக்கு கொடைக்கானல்னு ஏன் பேரு வந்துச்சுனு தெரியுமா? சமீபத்துல வாட்ஸ்சப்ல வைரல் ஆகிட்டு இருக்கிற கவிஞர் மகுடேசுவரன் பதிவு பார்த்தியா நீ?” எனக் கேட்டாள்.
“வாட்ஸ்அப்ல வர்ற ஃபார்வேர்ட் மெசேஜ்லாம் படிக்க மாட்டேன் மயிலு! அந்த நேரத்துல மெடிசின் சம்பந்தமா ஏதாவது படிக்கலாம்னு தான் தோணும்” என்றான்.
“ஆமா நீ தான் செம்ம படிப்ஸ் ஆச்சே! சப்ஜக்ட்டை தவிர வேற யோசிப்பியா என்ன? அதை மறந்துட்டேன் பாரு?” என்று கேலிப் பார்வையுடன் சொன்னவளை இவன் முறைக்க,
“சரி சரி! நோ முறைப்பு! நான் சொல்றதை கேளு! இதுல செம்ம இன்ஃபர்மேஷன் இருக்கு” என்றவளாய் தொடர்ந்தாள்.
கிழக்கிலிருந்து வீசும் காற்றுக்குக் கொண்டல்னு பேரு. இது மழையைக்கொண்டு வரும்.
வடக்கிலிருந்து வீசும் காற்றுக்கு வாடைனு பேரு. இந்தக் காற்றினால் குளிர் ஏற்படும்.
தெற்கிலிருந்து வீசும் காற்றுக்குத் தென்றல்னு பேரு. உடலைத் தீண்டும் போது இன்பாய் உணரச் செய்யும் காற்று.
மேற்கிலிருந்து வீசும் காற்றுக்குக் கோடைனு பேரு” என்றதும்,
“ஓ நம்ம சம்மர் சீசன் இன் சென்னை. வெயில்ல நம்மளை வச்சி வெளுத்து வாங்குறது மேற்குலருந்து வர காத்தா?” எனக் கேட்டான் இளங்குமரன்.
“ஆமா.. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் மேற்கிலுள்ள நிலப்பகுதியிலிருந்து வெப்பமான காற்று வீசும். ஆகக் கொண்டல் ஈரம், தென்றல் இதம், வாடை குளிர், கோடை வெம்மை.
கோடைக் காற்றுத்தான் வெப்பமூட்டுவதுனு சொல்றோம்ல. ஆனா அதே கோடை காற்று வெப்பமூட்டாமல் இன்பமாகவும் இருந்தால் அதை என்னனு சொல்லலாம்?” என்றவள் கேட்கவும்,
“ஓ அப்ப கொடைக்கானல்ல கோடைக் காலத்துல இன்பமான காத்து தான் வரும். அதான் இங்கே சம்மர் சீசன்ல கூட்டம் அள்ளுது போல! அதை வச்சி தான் இந்த ஊருக்குப் பேரு வச்சிருக்காங்களா?” என்றான்.
“ஆமா.. காற்றுக்குக் ‘கால்’னு இன்னொரு சொல் உண்டு. அந்தக் காற்று நல்ல காற்றாக இருந்தால் நல் காற்று = நற்காற்று. இன்னொரு வடிவில் நல் கால் = நற்கால்னு சொல்லலாம்.
இல் வாய் அப்படிங்கிற சொல் வாயில்னு முன்பின்னாக மாறி இலக்கணப்போலி ஆகி பயன்படுத்துறோம்ல!
மேற்கிலிருந்து வீசும் கோடைக்காற்று வழக்கமான வெம்மையாக இல்லாமல், இதமான நல்ல காற்றாக, நற்காலாக, கானலாக இருக்குமிடம் ‘கோடைக்கானல்’”
“எவ்ளோ அழகா விளக்கிருக்காருல குமரா” என்றாள்.
“ஆமா அப்ப இதைக் கொடைக்கானல்னு சொல்லக் கூடாது கோடைக்கானல்னு தான் சொல்லனும்” என்றான் இளங்குமரன்.
ஆமாம் என்று ஆமோதித்தவளாய் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தவள், “மச்சான் இங்கே பாரேன்” என்று அவனின் கைப்பற்றி இழுத்தாள்.
“பாரேன் அப்படியே வெள்ளிக்கம்பி மாதிரி அழகா பாயுது அருவி” சிலுசிலுவெனச் சில்லென்ற நீரின் காற்றில் சிலிர்த்த உடலைப் போர்த்தியிருந்த சால்வையை இழுத்தவளாய் அவனிடம் காண்பித்தாள்.
பேருந்து அந்த நீர்வீழ்ச்சியைக் கடந்து செல்ல, அவளிடம் உரைத்திருந்தான் இளங்குமரன்.
பேருந்தில் இருந்து இறங்கி, அங்கிருந்து மகிழுந்தை வாடகைக்கு எடுத்துக் கிளம்பினர்.
ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த தங்கும் விடுதிக்கு சென்று செக் இன் செய்து தங்களது அறைக்குள் நுழைந்தனர்.
ஹப்பாடா என்று அறைக்குள் நுழைந்ததும் விட்டத்தைப் பார்த்தவாறு கட்டிலில் அவள் விழ, அவள் மேலேயே சாய்ந்திருந்தான் இவன்.
குளிரின் இதத்திற்கு அவனது அண்மை வெம்மையாய் உடலுக்குள் பரவினாலும், அவனைப் பிடித்துத் தள்ளி அருகில் படுக்க வைத்தவளாய், “கொஞ்சம் வெயிட்டா தான் இருக்க மச்சான் நீ” அவன் காதோடு உரைத்தாள்.
அவள் காதோடு உரசியவனாய், “இப்பவே இப்படிச் சொன்னா எப்படி?” என்று புருவம் உயர்த்த, “அதான் பயமாயிருக்கு மச்சான்” கூறியவளின் முகத்தில் அப்பட்டமாய்ப் பய ரேகைகள்!
“அட உன் இளா மச்சான் இருக்கப் பயமேன்! இன்னிக்கு உன்னோட பயம், படபடப்பு, தயக்கம் எல்லாத்தையும் கதம் கதம் செஞ்சிடலாம்” என்று கண் சிமிட்டியவன்,
“சரி சரி கிளம்பு! சுத்திப் பார்க்க நிறைய இடம் இருக்கு. இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும்” என்றவனாய் அவளை எழுப்பிக் குளியலறைக்குள் தள்ளினான்.
இருவருமாகக் கிளம்பி அவர்கள் தங்கியிருந்த விடுதியின் வரவேற்பறைக்கு வந்தனர்.
“நீ உட்காரு மயிலு! நான் போய் ரூம் சாவி கொடுத்துட்டு கேப் எதுவும் இங்க இருக்கா இல்ல தனியா புக் செய்யனுமானு கேட்டுட்டு வரேன்” என்றவனாய் வரவேற்பாளரிடம் சென்றான்.
அவளின் இதழ்கள் தன்னாலேயே அர்ஜூன் என்று முனக, அவளருகில் வந்திருந்தவனோ, “ஹாய் மயிலு! எப்படி இருக்க?” எனச் சிரித்த முகத்துடன் இயல்பாய்க் கேட்டிருந்தான்.
சற்று நிதானித்தவளாய் தன்னைச் சமன்படுத்திக் கொண்டவள் சிரித்த முகத்துடன், “ஹாய் அர்ஜூன்” எனும் போது அவர்களின் அருகே வந்திருந்தான் இளங்குமரன்.
“ஹாய் டாக்டர்! எப்படி இருக்கீங்க?” என்று கை நீட்டிக் குலுக்கியவனாய் அர்ஜூன் கேட்க, “ரொம்ப நல்லா இருக்கேன் அர்ஜூன்! நீங்க எங்கே இங்கே?” புன்சிரிப்புடன் கேட்டிருந்தான் இளங்குமரன்.
“இந்த ஹோட்டலும் எங்களோட பிரான்ச் தானே. இதுக்கு நான் தான் மேனேஜர். அப்ப அப்ப வந்து எட்டிப் பார்த்துட்டு போவேன்” என்றவனாய்,
“உங்க இரண்டு பேரையும் இப்படிப் பார்க்க ரொம்ப ரொம்பச் சந்தோஷமா இருக்கு டாக்டர்” மனம் நிறைந்த மகிழ்வுடன் அர்ஜூன் கூறியிருந்ததைக் கண்களில் கனிவுடன் கேட்டிருந்தாள் இளமயில்.
“சென்னை வந்தா நீங்க எங்க வீட்டுக்குக் கண்டிப்பாக வரனும் அர்ஜூன். உங்க ஃபேமிலியோட வாங்க” என்று வரவேற்றான் இளங்குமரன்.
இருவரின் உரையாடலையும் இன்முகத்துடன் பார்த்திருந்த இளமயிலின் மனத்தில் சொல்லொண்ணா நிம்மதிப் பரவியது.
சிறிது நேரம் அவரவரின் தொழில் மற்றும் பணிகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்கள் அதன் பின்பு அங்கிருக்கும் சுற்றுலாத் தளங்களைப் பற்றிப் பேசிவிட்டு விடைப்பெற்று நகர்ந்தனர்.
“தேங்க்ஸ் இளா மச்சான்” என்றவளாய் அவனது கையினைப் பற்றி இறுக்கிக் கொண்டாள் இளமயில்.
“ஏன்? எதுக்கு தேங்க்ஸ்?” புரியாது அவன் கேட்க,
“அர்ஜூனைப் பார்த்துட்டு நிஜமாவே பயந்துட்டேன். உங்க இரண்டு பேரையும் ஒன்னா ஃபேஸ் செய்ய ஒரு மாதிரி தயக்கம். எனக்கு ரொம்பப் படபடப்பா வந்துடுச்சு ஒரு நிமிஷம்” என்றாள்.
அவளின் தோளைச் சுற்றிக் கையைப் போட்டு வளைத்தவனாய் அந்த விடுதியை விட்டு வெளியே வந்தவன், “நீயும் நானும் புருஷன் பொண்டாட்டி! அவர் நாம நல்லா இருக்கனும்னு நினைக்கிற நம்மளோட ஃபேமிலி ஃப்ரண்ட்! அவ்ளோ தான் என் மைண்ட்ல இருக்கு. இதுக்கு ஏன் நீ இவ்ளோ சங்கடப்படுற! உன் மனசுலயும் அந்த எல்லையோடவே அவரை நிறுத்திடு! அதோட இளமயிலுக்கு இருக்கும் ஒரே புருஷன் இந்த இளங்குமரன் மட்டும் தான். முன்னே பின்னே சைடு குறுக்கனுலாம் யோசிக்காம என்னை மட்டும் நினைப்பியாம் மயிலம்மா” என்றவாறு அவளின் நெற்றியில் முட்டினான்.
நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது அவளுக்கு.
“எப்பவுமே நீ ரொம்பத் தெளிவுடா” என்று நெஞ்சுருக அவள் கூற,
“என்ன செய்ய? என் பொண்டாட்டியைத் தெளிய வைக்க நான் தெளிவா இருக்க வேண்டி இருக்கே” என்று கேலியாய்க் கூறினான்.
அவனது புஜத்தில் இடித்தவளாய், “ஹலோ டாக்டர் சார்! இந்தத் தெளிவெல்லாம் உங்களுக்கு எங்க தியாகு மாமாகிட்ட இருந்து வந்திருக்கு. அதனால ஆல் கிரெடிட்டஸ் டூ மாமா தான்” என்றவள் கூறிக் கொண்டிருந்த சமயம், குமரனின் கைப்பேசி அலறியது.
எடுத்துப் பார்த்தவனாய், “பார்ரா! மருமக மாமனாரைப் பத்தி பேசினதும் அவரே கால் செய்றாரு” என்று சிரித்தவாறு அழைப்பையேற்றுத் தாங்கள் கோடைக்கானலை வந்தடைந்து விட்டதாகக் கூறிப் பேசியவன், மயிலிடம் கைப்பேசியைக் கொடுத்தான்.
“மயிலு பாப்பா! அங்கே குளிரு எப்படி இருக்கு? தாங்குற அளவுக்கு இருக்கா! சளி பிடிச்சிக்காம பார்த்துக்கோங்க இரண்டு பேரும்” என்று தியாகராஜன் கூறிக் கொண்டிருக்கும் போதே, ஒலிபரப்பியில் இருந்த கைப்பேசியில் இடை புகுந்தவராய், “ஆமா மயிலு! தண்ணீலாம் சில்லுனு இருக்கும். சுடு தண்ணீல குளிங்க. தலைக்குக் குளிக்கிறேன்னு சரியா துவட்டாம விட்டுடாத நீ!” என்றார் அம்பிகா.
“சரிங்க மாமா! சரி அத்தை! நாங்க உடம்பைப் பார்த்துக்கிறோம். மாமா கடையிலேயே வேலை வேலைனு இருந்துடப் போறாரு. இரண்டு பேரும் வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிடுங்க” என்றவளாய் இணைப்பைத் துண்டித்தவள்,
“என் அப்பாகிட்ட உணர்ந்த அதே பாசத்தை நான் மாமாகிட்ட ஃபீல் செய்றேன் குமரா. அவர் மயிலு பாப்பானு கூப்பிடும் போதே மனசுல எந்தவித கவலை இருந்தாலும் எல்லாமே சட்டுனு மறந்து ஹேப்பி ஆகிடுறேன்! நமக்காக நம்மளை கேர் செய்ய ஒரு குடும்பம் இருக்குங்கிறது எவ்ளோ பெரிய வரம் தெரியுமா” என்றவளாய் அவனின் கைகளைப் பற்றிக் கொண்டு அவனுடன் நடந்தாள். மென்னகையுடன் அவள் கூறியதைக் கேட்டிருந்தான் இளங்குமரன்.
இருவருமாக அருகிலுள்ள உணவகத்தில் காலை உணவை உண்டு விட்டு, சுற்றுலாத் தளங்களுக்குச் செல்ல மகிழுந்து ஒன்றை ஏற்பாடுச் செய்தார்கள்.
வட்டகனல் நீர்வீழ்ச்சிக்குச் சென்றவர்கள் அங்கே நீர்வீழ்ச்சியின் அருகே பாறை மீது அமர்ந்து கால்களைத் தண்ணீரில் வைத்தவாறு அமர்ந்திருந்தனர்.
இருவருமாக இணைந்து பல சுயமிக்களை எடுத்துக் கொண்டனர்.
ஆசையாய் ரசனையாய் அந்த அருவியினை ரசித்திருந்தவளை ரசித்திருந்தான் இவன்.
அவளை அருவியினருகே நிற்க வைத்து நிறையப் படங்களை எடுத்தான்.
நீர்வீழ்ச்சியிலிருந்து வெளியே வந்து சாலையில் கால் வைக்கும் பொழுது, விரலில் ஏற்பட்ட விறுவிறு உணர்வில் ஆஆஆ என்று லேசாய் அலறியவாறு சட்டென மடிந்து அமர்ந்தவளாய் கால் விரல்களைப் பிடிக்க, “என்னாச்சு மயிலு?” என்றவனாய் அவளருகில் மண்டியிட்டு அமர்ந்தான் இளங்குமரன்.
“கால் விரல் இழுக்குது இளா மச்சான்” என்றவளின் முகம் வலியில் சுருங்கியது.
“என்னாச்சு! நான் பார்க்கிறேன்! நீ எழுந்து நில்லு” என்று அவளை எழுந்து நிற்க வைத்தவன்,
செருப்பில் இருந்து அவள் காலை உருவியவனாய் தனது தொடை மீது எடுத்து வைக்க, தரையில் முட்டியிட்டு அமர்ந்திருந்தவனின் தோளைக் குனிந்து பற்றியவளாய், “அய்யோ மச்சான் என்ன செய்ற? நடுரோட்டுல என் காலைப் பிடிச்சிட்டு இருக்க” அவன் தொடையில் இருந்து காலை எடுக்க முனைந்தாள்.
அவள் காலை அழுத்தமாய்ப் பிடித்து, ஒவ்வொரு விரலையும் இழுத்து நீவி விட்டவனாய், “இதுல என்ன இருக்கு! என் பொண்டாட்டி காலைத் தானே நான் பிடிச்சிட்டு இருக்கேன்” என்றவன் அவளின் வலியும் அந்த விறுவிறு உணர்வும் குறைந்ததும் காலினைத் தரையில் ஊன்றி நிற்கச் செய்தவனாய்,
“அதுவுமில்லாம நான் டாக்டர் மயிலு! யாருக்கு எந்த நேரத்துல எந்தச் சூழ்நிலைல ட்ரீட்மெண்ட் செய்யனும்னாலும் தயங்காம செய்யனும்! இடம் பொருள் பார்த்துட்டு இருந்தா டாக்டரா இருக்கத் தகுதி இல்லாதவன்னு அர்த்தம்” என்றான்.
அவளின் கைப்பற்றி மெல்ல நடக்க வைத்தவன், “இப்ப ஓகே வா?” எனக் கேட்டான்.
அவள் ஆமெனத் தலையசைக்க, “உடம்புல சத்தே இல்லடா உனக்கு. ஹீமோகுளோபின் குறைவா இருக்கு போல. நீர்ச்சத்துக் குறைஞ்சிருந்தாலும் இப்படி ஆகும். தினமும் பேரீச்சம்பழம் மாதுளைப் பழம் சாப்பிடுற தானே! உன்னோட ஃபுட் ஹேப்பிட்ட நிறையவே மாத்தனும் போலயே” என்று அவளுடன் பேசியவனாய் மகிழுந்தின் தரிப்பிடத்தை நோக்கி நடக்க,
“இளா மச்சான்! உன் டாக்டர் மூளையைக் கொஞ்சம் தூர வைக்கிறியா! அட்வைஸ் பொழிஞ்சே கொல்றடா” என்றவளின் பேச்சில் சிரித்தவனாய், அவளின் தோளைச் சுற்றி கையைப் போட்டவன் காதோடு மெல்லிய குரலில், “இப்ப நிஜமாவே எனக்குப் பயமா இருக்கு! நைட் எப்படி என்னைத் தாங்குவியோனு” என்றவன் கூறவும்,
சட்டென முகம் சிவந்து போகக் கூச்சத்தில் நெளிந்தவளாய், “அச்சோ! எங்க வந்து என்ன பேசுற நீ” கடிந்து கொண்டவளாய் பட்டெனத் தோளில் அடித்திருந்தாள்.
இவர்கள் இருவரையும் தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அக்மார்க் ஹனிமூன் ஜோடிகள் என்று தெரியுமளவிற்கு நாணமும் கூச்சமும் சிரிப்புமுமாய் முகத்தில் உணர்வுகள் தாண்டவமாட கைக்கோர்த்து நடந்து சென்றிருந்தனர் இருவரும்.
மகிழுந்தில் ஏறி அமர்ந்தவர்கள் அடுத்து மோயர் பாயிண்ட் எனும் இடத்திற்குச் சென்றனர். அங்குக் கோடைக்கானல் வியூ பாய்ண்ட் மிகவும் பிரசித்திப்பெற்றது.
இவர்கள் வார நாட்களில் சென்றிருந்ததால் பெரியதாகக் கூட்டம் இல்லை.
சுற்றிலும் புகைமூட்டத்துடன் கூடிய பாறைகளும், அதனைச் சுற்றி பச்சை பசேலென்ற புல்வெளிகளுமென அவ்விடத்தை அத்தனையாய் ரசித்துப் பார்த்திருந்தாள் இளமயில்.
சற்று உயரே சென்று அந்த வியூ பாய்ண்ட்டை பார்க்கவெனக் கோபுரம் போன்று அமைக்கப்பெற்றிருந்த டவரின் படிக்கட்டில் ஏறினர் இருவரும்.
வளைவு வளைவாய் சென்ற படிக்கட்டில் ஏறி மேல் தளத்தை அடைந்து ஓரமாய்க் கைப்பிடிச் சுவற்றின் அருகே நின்றனர் இருவரும்.
சிலு சிலுவெனக் காற்று ஊசியாய் உடலைத் துளைக்க, ‘ஸ்ஸ்ஸ்ஸ்’ என்றவளாய் இரு கைகளையும் கட்டிக் கொண்டு உடலைக் குறுக்கியவாறு சுற்றியிருந்த இயற்கை காட்சியினைப் பார்த்திருந்தவளின் இடையைச் சுற்றிக் கைப்போட்டு தன்னோடு இறுக்கியவனைப் பதறிப்போய்ப் பார்த்தவளாய், “அய்யோ! பப்ளிக்” என்றவாறு அவள் விலகப் போக,
“சுத்தி பாருங்க பொண்டாட்டி. டவர்ல நம்ம மட்டும் தான் இருக்கோம்” என்றதும் சுற்றிப் பார்த்தவளாய் ஆசுவாசமானவளின் பின்னோடு நின்று இடையைச் சுற்றி தனது இரு கரங்களையும் தவழ விட்டு தன்னோடு ஒட்டியவாறு அவளை இழுத்து நிறுத்தியவன் இயற்கை எழிலை ரசித்திருந்தான். அப்படியே தங்கள் இருவரையும் சேர்த்து ஒரு தற்படத்தையும் எடுத்திருந்தான்.
அவனது மார்பில் பின்னந்தலையைச் சாய்த்து நின்றிருந்தவளின் உடலுக்குள் அவனது உடலின் வெம்மைப் பரவிச் சில்லிப்பைக் குறைத்துச் சிலிர்ப்பைக் கூட்டியிருக்க, தலையைத் திருப்பி அவன் முகத்தைப் பார்த்தாள் அவள்.
சுற்றிலும் பார்வையைச் செலுத்தியவாறு இருந்தவன், மனைவியின் பார்வையில், என்ன என்று புருவத்தை உயர்த்தியவனாய் பார்த்தவன் சட்டெனக் குனிந்து கன்னத்தில் இதழொற்றி எடுத்தான்.
“அய்யோ இளா மச்சான்” என்று விலகி நின்றவள், “ஒரு மார்க்கமா தான் திரியுற நீ” என்று தள்ளி நிற்க, அவளின் கூற்றில் ஹா ஹா எனச் சிரித்தவனாய் அவள் தோள் மீது கைப்போட்டு நின்றவன், “உன் மனசு எவ்ளோ ரசிக்குது எவ்ளோ சந்தோஷமா ஃபீல் செய்யுதுனு இந்த மூஞ்சு சொல்லுது மயிலு” என்றவனாய் அவளை ஒட்டி நின்றான்.
“ஹ்ம்ம் ரசிக்கும் ரசிக்கும்! இதெல்லாம் நம்ம ரூம்குள்ள வச்சிக்கிட்டீனா இன்னும் நல்லாவே ரசிக்கும்” அவள் வாய்க்குள் முனகியது அப்படியே இவனது செவியில் விழவும், அட்டகாசமாய்ச் சிரித்திருந்தான் இளங்குமரன்.
மதிய உணவை அங்கேயே முடித்தவர்கள் அடுத்து பல சினிமாக்களில் வந்த இடமான பைன் பாரஸ்ட்டிற்குச் சென்றனர்.
சுற்றிலும் பைன் மரங்கள் நிறைந்த அந்த இடத்தினில் காலாற நடந்து சென்று சில மணி நேரங்கள் அமர்ந்து கதைப் பேசியவர்கள் தற்படங்கள் எடுத்துக் கொண்டவர்களாய் மாலையில் அங்கிருந்து கிளம்பினர்.
இரவுணவை வெளியவே முடித்து விட்டு தங்கும் விடுதிக்குள் நுழைந்து வரவேற்பறையில் அறையின் சாவியை அவன் வாங்கிய போது, “சார் உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு” என்று வரவேற்பாளினி அவனிடம் வழங்கினாள்.
“இங்கே யாரு உனக்கு கிஃப்ட் அனுப்பிருக்காங்க” என்று ஆச்சரியத்துடன் கேட்டவளாய் மரச்சட்டம் போன்ற வடிவில் அவளின் முட்டி வரை இருந்த அந்தப் பெரிய பார்சலை கையில் வாங்கினாள்.
“நான் போய் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வந்துடுறேன்” என்று ஓய்வறைக்குள் நுழைந்து கொண்டான் இளங்குமரன்.
‘என்ன பார்சலா இருக்கும்’ என்று சிந்தித்தவளாய்,
“குமரா! நான் இதைப் பிரிச்சி பார்க்கவா?” என்றவள் கேட்க, “ஹான் பிரிச்சி பாரு மயிலு! நான் வந்து பார்க்கிறேன்” என்றவாறு குளியலறையிலிருந்தவாறே சத்தம் கொடுத்தான் இளங்குமரன்.
அதைப் பிரிக்க ஆரம்பிக்கவுமே, அப்பரிசு மரச்சட்டமிடப்பட்ட புகைப்படம் என்று விளங்கியது அவளுக்கு.
சுற்றிலும் இருந்த வண்ணமயமான காகிதத் தாளைக் கிழித்து உள்ளே பார்த்தவளின் கண்கள் வியப்பில் விரிந்தன.
வண்ண ஓவியமாய் வரையப்பட்டிருந்த படம் அது!
அதிலும் அவளின் படமோ அவனின் படமோ மட்டுமாக அதில் இல்லை.
பருவ வயதில் இளமயிலும் இளங்குமரனும் சந்தித்த நாட்களில் இருந்து திருமணமாகும் வரை அவர்களது வாழ்வின் நிகழ்வுகளை அடுக்கடுக்காகக் குட்டிக் குட்டி ஓவியங்களாக வரைந்து, அந்த ஒவியப் படங்கள் எல்லாம் ஒன்றிணைந்து இவர்கள் இருவரும் சேர்ந்து நிற்கின்ற படம் போல் வரையப்பட்டிருந்த ஓவியத்தைப் பார்த்திருந்தவளின் கண்களில் இன்பச்சாரல்!
முதன் முதலாய் இருவரும் சந்தித்த அந்தத் தேன்மிட்டாய் நிகழ்வு, மிதிவண்டிச் சண்டை, வழக்கமாய்த் தேன்மிட்டாய் வாங்கும் கடை, நட்பாய் பழகிய நாள்கள், வயதிற்கு வருவது பற்றிக் கேட்டு அவனது தந்தையிடம் அவனை அவள் மாட்டிவிட்ட நிகழ்வு, அவள் வயதிற்கு வந்தப் பின் அவளுக்காக வகுப்பின் வெளியே அவனும் அவளுமாய் நின்ற நிகழ்வு, அவனின் முகத்தை ரசித்துப் பார்த்தவாறு கவிதைச் சொன்ன நிகழ்வு, அவனைக் காணும் சமயங்களில் அவள் கண்களில் இருக்கும் அந்த மையல், அவள் காதல் மொழிந்த நிகழ்வு, அவள் அறையில் உறங்கியிருந்த போது அவன் அவளிடம் பேசிய நிகழ்வு, அவனின் கைகளைப் பற்றிக்கொண்டு அழுதவாறு விடைக்கொடுத்து பிரிந்த நிகழ்வு எனப் பருவ வயது நிகழ்வுகள் அனைத்தும் வரையப்பட்டிருக்க நிறைவாக இவர்கள் இருவரும் மாலையும் கழுத்துமாகக் குன்றத்தூர் முருகன் முன்பு நின்றிருக்கும் படம் வரையப்பட்டிருந்தது.
அவனின் முகத்தினைப் கைகளில் ஏந்தியவளாய், “எதையுமே மறக்கலையா நீ?” எனக் கேட்டிருந்தாள்.
‘எப்படி இந்தளவிற்கு நினைவு வைத்திருக்கிறான்’ நெஞ்சம் பூரித்துக் கிடந்தது.
“இந்தளவுக்குத் தன்னைக் காதலிக்கிற, அணு அணுவாய் ரசிக்கிற ஒரு பொண்ணு தனக்கு இருக்கா அப்படிங்கிறது ஒரு ஆணுக்கு எவ்ளோ சந்தோஷத்தை கொடுக்கும் தெரியுமா! அப்படியான மகிழ்ச்சியை எனக்குக் கொடுத்தவ நீ மயிலம்மா. அதெல்லாம் எப்படி நான் மறக்க முடியும்.
நீ இவ்ளோ காதலைப் பொழியுற அளவுக்கு நான் உனக்கு எதையுமே செய்யலையேடா மயிலம்மா” நெகிழ்ந்த குரலில் அவன் கூறவும்,
“எனக்கு நீ-னாலே இஷ்டம் இளா மச்சான்! அப்பவே என் அப்பா அளவுக்கு உன்னைப் பிடிக்கும்! இப்ப எனக்காக எவ்ளோ செய்ற! லவ் யூ இளா மச்சான்” என்றவளாய் அவனை இறுக அணைத்திருந்தாள்.
அவளின் முகத்தினைக் கைகளில் ஏந்தியவனாய், “லவ் யூ டா மயிலம்மா” என்றவன் இதழில் மூழ்கினான்.
அவளின் முகம் முழுவதும் முத்தமிட்டவன் நெற்றியில் முட்டியவாறு அப்படியே நின்றான்.
“சரி நீ குளிச்சிட்டு வா” என்று அவளை அனுப்பி வைத்தவன் கட்டிலில் அமர்ந்து அந்தப் படத்தினைப் பார்த்திருந்தான்.
அவள் குளித்து முடித்து இலகுவான உடைக்கு மாறி அவனருகில் அமர்ந்து தோள் சாய்ந்தவளாய் அவனுடன் சேர்ந்து அந்தப் படத்தைப் பார்த்தவள், “யார் இதை வரைஞ்சது? இங்கே யார் கொண்டு வந்து கொடுத்தது?” எனக் கேட்டாள்.
“இங்கே இந்த ஏரியாலேயே ஆர்டிஸ்ட் ஒருத்தர்கிட்ட ஆன்லைன்ல ஆர்டர் கொடுத்திருந்தேன். நாம இங்கே வந்து சேர்ந்ததும் அட்ரஸ் அனுப்பி இங்கே வந்து ரிசப்ஷன்ல கொடுக்கச் சொல்லிட்டேன்” என்றான்.
“ஓ! ரொம்ப அழகா வரைஞ்சிருக்காங்க. நான் அவங்களைப் பாராட்டினேன்னு சொல்லு” என்றாள்.
அவருக்கு வாட்ஸ்சப்பில் குறுஞ்செய்தி அனுப்பியவன் படத்தை எடுத்து ஓரமாக வைத்தவனாய் மனைவியின் முகம் நோக்கி அமர்ந்தவன் புன்னகையுடன், “அப்புறம்” எனக் கேட்டான்.
அப்புறம் என்றவளுக்கு நாணம் வந்து ஒட்டிக் கொள்ளத் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
“நான் உன் மேல படுத்துக்கவா மயிலம்மா” அன்றாடச் செயலாய்க் கேட்டிருந்தான் இளங்குமரன்.
ஹ்ம்ம் என்று தலையாட்டியவள், கட்டிலில் படுத்துக் கொண்டு கைகளை விரிக்க, தனது டீ சர்ட்டை அவன் கழற்றவும் அவளது விழிகள் விரிய, “எப்பவும் டீசர்ட்டோட தானே…” உள்ளே போன குரலுடன் மெல்லியதாய் கூறியவளின் கரத்திற்குள் நுழைந்து அவள் மேல் படர்ந்தவன், “அப்ப கட்டிக்கிட்டு மட்டும் தான் இருந்தோம்.. இப்போ” என்றவனாய் அவளது வெற்றிடையில் வருட சிலிர்த்தடங்கியது அவளின் தேகம்.
இது வரை அவனது வெற்று மேனியை ஸ்பரிசித்திராதவளுக்கு அவனை அணைத்துக் கொள்ளக் கரங்கள் எழவே இல்லை.
தனது முகத்தைத் தூக்கி அவள் முகத்தைப் பார்த்தவன், “கட்டிக்கலையாடா?” எனக் கேட்டான்.
தயக்கத்துடன் அவனை அவள் ஏறிட, சற்றே மேலே ஏறியவனாய் அவளது முகத்தைத் தனது வெற்று மார்பு மீது அழுத்தி உச்சியில் முத்தமிட்டிருந்தான்.
தன்னை அரவணைத்துப் பாதுகாக்கும் செயலாய் அந்த முத்தமும் அணைப்பும் அவளுக்குப் புரிபட, மெல்ல கைகளைத் தூக்கி அவனைச் சுற்றிக் கொண்டு வந்தவளாய் அவனை அணைத்த மறுநொடி, இறுக அணைத்து அவள் இதழில் புதைத்திருந்தான் அவன்.
இளமயில் பட்டெனக் கண்களை மூட, இதழிலிருந்து விலகியவனாய், “கண்ணை மூடாதடா மயிலம்மா! ஜஸ்ட் லுக் அட் மீ (என்னைப் பாரு)” என்றான்.
சரியெனத் தலையசைத்தவளாய் அவனைப் பார்க்க, அவளின் முகத்தில் தெரிந்த கலக்கத்தில், எழுந்து அமர்ந்தவன்,
“மயிலம்மா உன் ஃபோன் எங்கே?” எனக் கேட்டான்.
அவள் மேஜையைக் கைக்காட்டவும், அவளின் கைப்பேசியைக் கையில் எடுத்தவன், “நீ நல்ல சாங் கலெக்ஷன் வச்சிருக்க” என்றவனாய் அப்பாடலை எடுத்தவன், தான் நிறுத்தும் வரை அதே பாடலே ஓடுமாறு லூப்பில் போட்டு விட்டான்.
நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற பூவல்லவா
இந்தப் பூவுக்குச் சேவகம் செய்பவன் நான் அல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா
இதழோடு இதழ் சேர்த்து என்ற வரிகளில் அவன் தனது இதழை நெருங்குவான் என்று இவள் எதிர்பார்த்திருக்க, அவளது கழுத்து வளைவில் புதைத்திருந்தான் அவன். காதோடு உரசி கன்னத்தில் முத்தமிட்டவன்,
கண்ணாளனே கண்ணாளனே
உன் கண்ணிலே என்னைக் கண்டேன்
என்ற வரிகளில் நிமிர்ந்து அவளைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டிச் சிரித்தான்.
கண் மூடினால் கண் மூடினால்
அந்நேரமும் உன்னைக் கண்டேன்
லேசாய் தலையைத் தூக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் அவள்.
மீண்டுமாய்க் கழுத்தில் புதைந்தவன், அவளின் தேகத்தைத் தனது கரங்களின் ஆளுகைக்குள் கொண்டு வந்தான்.
ஒரு விரல் என்னைத் தொடுகையில்
உயிர் நிறைகிறேன் அழகா
மறு விரல் வந்து தொடுகையில்
விட்டு விலகுதல் அழகா
மெல்ல மெல்ல அவளின் அங்கங்களைத் தீண்டி உணர்வுகளைத் தூண்டியவனாய் முன்னேறியவனின் முக உணர்வுகளைச் சிலிர்ப்பும் வெட்கமுமாய்ப் பார்த்திருந்தாள் இளமயில்.
உயிர் கொண்டு வாழும் நாள் வரை
இந்த உறவுகள் வேண்டும் மன்னவா
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்தப் பூவுக்குச் சேவகம் செய்பவன் நீ அல்லவா
இதே சுகம் இதே சுகம்… ம்ம்ம்…
எந்நாளுமே கண்டால் என்ன
இந்நேரமே இந்நேரமே…
என் ஜீவனும் போனால் என்ன
மீளமுடியா சுகத்தில் திளைத்திருந்தவள் அவனை இழுத்து அணைத்து இதழுடன் இணைந்திருந்தாள்.
முத்தத்திலே பலவகை உண்டு
இன்று சொல்லட்டுமா கணக்கு
இப்படியே என்னைக் கட்டி கொள்ளு
மெல்ல விடியட்டும் கிழக்கு
அவளது முத்தத்தின் எதிர்வினையாய் தானும் முத்தமிட்டு அவளை நெகிழச் செய்தவன் நெருக்கமாய் உருமாற முனைந்தவனாய், “ஆர் யூ ஓகே?” எனக் கேட்டான்.
கண்களில் திகில் பரவ, இல்லையெனத் தலையசைத்து இறுக்கமாய்க் கண்களை மூடியவாறு அவனை அணைத்தவள், “குமரா! குமரா” என்று முனகியது அவனது காதினுள் துல்லியமாக விழவும்,
அவள் மிரட்சியுடன் அவனைப் பார்க்க, “ஜஸ்ட் ஃபீல் மீ மயிலம்மா” அவள் மீது படுத்தவனாய் தனது உடலின் வெம்மையை அவளுக்குக் கடத்தி அணு அணுவாய் தனது அங்கங்களை அவளை உணர வைத்தவன், “ஆர் யூ ஓகே நௌ?” எனக் கேட்டான்.
சரியெனத் தலையசைக்க, தனது செயலில் ஈடுபட்டவனாக, “மயிலம்மா நீ அந்தப் போட்டோ பார்த்தல! அதுல ஒரு படத்துல, கட்டில்ல தூங்கிட்டு இருக்க உன் பக்கத்துல நான் உன் கைப்பிடிச்சிட்டு உட்கார்ந்து இருக்க மாதிரி இருந்துச்சு பார்த்தியா? அது எப்ப நடந்துச்சுனு உனக்குத் தெரியுமா?” அவளிடம் பேசியவாறு அவளின் கவனம் முழுவதும் தன்னிடம் இருக்குமாறு திசைத்திருப்பியவன் மெல்ல மெல்ல முன்னேறினான்.
“ஆமா இளா மச்சான்! நானே கேட்கனும்னு நினைச்சேன்! எப்ப நீ அப்படி வந்து உட்கார்ந்த?” என்று கேட்டவளின் உடல் முழுவதுமாய் அவனது ஆளுகைக்குள் சென்று எதிர்வினையாற்ற தொடங்க, அடுத்து அவன் கூறியவை எதுவும் அவளது செவியினில் சேரவேயில்லை. அவளின் நினைவுகள் முழுவதையும் ஆக்ரமித்துத் தன்னை நோக்கி இழுத்து நிறைத்திருந்தான் இளங்குமரன்.
இதே சுகம் இதே சுகம்… ம்ம்ம்…
எந்நாளுமே கண்டால் என்ன…
இந்நேரமே இந்நேரமே…
என் ஜீவனும் போனால் என்ன…
முத்தத்திலே பலவகை உண்டு…
இன்று சொல்லட்டுமா கணக்கு…
இப்படியே என்னைக் கட்டி கொள்ளு…
மெல்ல விடியட்டும் கிழக்கு…
அச்சம் பட வேண்டாம் பெண்மையே…
எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே
“அப்ப நிஜமாவே சொன்னியாடா” என்றவளுக்குக் கூச்சமும் வெட்கமும் பிடுங்கித் தள்ள, அவன் மார்பிலேயே முகத்தைப் புதைத்துக் கொண்டாள். சத்தமாய்ச் சிரித்தவாறு அவளை அணைத்துக் கொண்டவன்,
“சொல்லுடா மயிலம்மா! ஆர் யூ ஹேப்பி?” எனக் கேட்டான்.
நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் இரு கன்னங்களையும் பிடித்துக் கிள்ளி ஆட்டியவளாய், “நீ எவ்ளோ சாஃப்ட் தெரியுமா! மேன்லி சாஃப்ட் புருஷா” என்று நெற்றியில் முட்டியவள், “ரொம்ப ரொம்பச் சந்தோஷமா இருக்கேன் இளா மச்சான்” என்றாள்.
“அப்ப மேக் எ விஷ் பொண்டாட்டி! இந்த மாதிரி முழுமையா ஒருவரோடு ஒருவர் காதலோடு இணைந்த பிறகு மகிழ்வா இருக்கிற மனநிலைல நாம இந்தப் பிரபஞ்சத்துக்கிட்ட ஆசைப்பட்டுக் கேட்குறதுலாம் நடக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். நீ சொல்லு! உனக்கு என்ன வேணும்” என்றதும் எதுவும் யோசிக்காது மறுநிமிடம்,
“உன்னை மாதிரியே ஒரு பையன் வேணும் இளா மச்சான்! நம்ம காதலின் உருவாக, உன்னோட நல்லவைகள் அனைத்தின் உருவமாக ஒரு பையன் வேணும்” கண்களில் ஆசைப்பொங்க உரைத்தவளை கனிவுடன் பார்த்தவனாய், “கண்டிப்பாக நடக்கும் மயிலம்மா” என்றவன்,
“என் மனைவியின் ஆசையை நிறைவேற்றி வச்சிடு முருகா” என மனத்தோடு வேண்டிக் கொண்டான்.
காதலும் காமமும் ஊடுருவ நேசத்துடனான இவர்களின் இணைவு, அடுத்தடுத்த நாள்களில் அவர்களின் வாழ்வில் மென்மேலும் இனிமையைக் கூட்டி இன்புறச் செய்து இணைப்பிரியா தம்பதியராய் அவர்களை உருமாற்றியிருந்தது.
இளமயிலின் இதயத்தில் மட்டுமல்லாது அவளின் ஒவ்வொரு அணுவிற்கும் உயிரளித்து அவளுள் நிறைந்து யாவுமாகி இருந்தான் இளங்குமரன்.