இளமயிலை இளங்குமரன் தனது மிதிவண்டியிலேயே பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்திருந்தான்.
அன்றாடம் மாலை வேளையில் பள்ளியிலிருந்து வீட்டிற்குச் செல்லும் வழியிலுள்ள கடையில் தேன்மிட்டாய் வாங்கி உண்பதை வாடிக்கையாய் வைத்திருந்த இளங்குமரன், இவளுக்கும் வாங்கிக் கொடுக்க ஆரம்பித்திருந்தான்.
இளமயில் அரையாண்டு பரீட்சைக்குப் பிறகு அப்பள்ளியில் சேர்ந்ததினால் அவளுக்கு நிறையப் பாடங்களில் சந்தேகங்கள் இருந்தன. அதனால் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் இளங்குமரன் தனது மகளுக்குப் பாடங்களைக் கற்றுத் தர வேண்டுமென மரகதம் கேட்டுக் கொண்டதினால், தினமும் மாலையில் இளமயிலுக்கு இளங்குமரன் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியிருந்தான்.
இவ்வாறு இவர்களின் நட்பு நாளொரு கிண்டலும் கற்றலும் பொழுதொரு பாடமும் கேலியுமாய்க் கலகலவெனவே வளர்ந்து கொண்டிருந்தது.
இளமயில் எங்குத் தூயத் தமிழ்ப்பெயர்களைக் கேட்டாலும், அப்பெயரிலுள்ள இலக்கணம் என்னவென ஆராய்ந்து தியாகராஜனிடமோ அல்லது தமிழ் ஆசிரியரிடமோ, தான் அப்பெயரில் கண்டுபிடித்த இலக்கணக் குறிப்பு சரியா என்று கேட்பதை வாடிக்கையாக்கி இருந்தாள்.
நாட்கள் அதன் போக்கில் செல்ல ஒன்பதாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு நிறைவாகியிருந்த சமயம் அது.
விடுமுறை நாள்கள் தொடங்கிய மறுநாளே தனது முத்து மாமாவின் கடையினில் தான் முழு நாளும் இருந்தான் இளங்குமரன்.
அன்றிரவு அவன் வீட்டிற்கு வந்த பொழுது, “ஏன்டா அப்படி அங்கே என்ன தான் இருக்குனு அந்தக் கடையே கெதினு கெடக்குற?” என்று அவனது அன்னை அம்பிகா கடிந்து கொள்ள,
“ம்ப்ச் அதெல்லாம் சொன்னா உனக்குப் புரியாதுமா” என்றவாறு கடந்து சென்றான் அவன்.
அச்சமயம் வீட்டினுள் வந்த இளமயில், இளங்குமரனிடம் ஓடியவளாய் அவனது காதினருகில் மெல்லமாய், “அங்க யாரையோ சைட் அடிக்கத் தான் நீ தினமும் போறதா நான் கேள்விப்பட்டேன்! அதான் அத்தைகிட்ட இதெல்லாம் சொன்னா புரியாதுனு சொல்றியா இளா மச்சான்?” எனக் கிண்டலாய் உரைத்துப் புருவத்தை உயர்த்தியவாறு அவனைப் பார்த்திருந்தாள்.
இளமயிலின் இந்த இளா மச்சான் என்ற விளிப்பு வீட்டினில் மட்டும் தான். அதுவும் அவனை வம்பிழுக்கவே அவ்வாறு விளித்திடுவாள். பள்ளியில் அவனை குமரா என்று தான் விளிப்பாள். இளா என்று அவளது வாயினில் வந்தால் அது மச்சான் என்று தான் முற்றுப்பெறும்.
“அடிங்க! அம்மாகிட்ட இப்படிலாம் பேசி வச்ச அவ்ளோ தான் சொல்லிட்டேன்” அவளை முறைத்தவாறு உரைத்தான் அவன்.
“எனக்குத் தெரியும்! அந்தக் கடைக்கு வேலைக்கு வர அக்காவைத் தானே சைட் அடிக்கிற நீ? நானும் பார்த்தேன் அழகா தான் இருக்காங்க!” கண்ணடித்து அவள் கூற, அவளின் மண்டையில் நங்கெனக் குட்டியவனாய்,
“அக்கானா அக்கா தான்! அதென்ன சைட் அடிக்கிறதுனு சொல்ற! அந்தந்த உறவு முறைக்குனு ஒரு மரியாதை இருக்கு மயிலு! அந்த அக்கா பார்க்க அழகா இருக்காங்கனு தோணுச்சுனா, ‘நீங்க அழகா இருக்கீங்கக்கானு’ அவங்ககிட்டயே நேரடியாகச் சொல்லிடுவேன்” என்றவனைத் தலையைத் தேய்த்தவாறு குறும்புச் சிரிப்புடன் பார்த்தவள்,
“ஓஹோ சைட் அடிக்க மாட்ட! ஆனா கடலைப் போடுவ! நீ நடத்து இளா மச்சான்” என்றவள் மேலும் அவனைச் சீண்டி வம்பிழுத்தாள்.
“அடியேய்” என அவளை அடிக்கத் துரத்தினான் இவன். அச்சமயம் சமையலறையிலிருந்து வெளியே வந்த அம்பிகா, “ஆரம்பிச்சிட்டீங்களா உங்க அலப்பறையை!” என்று அலுத்துக் கொண்டவராய்,
“மயிலு பாப்பா! இங்கே வா” என்று அவளைச் சமையலறைக்கு அழைத்துச் சென்று வேலை வாங்க ஆரம்பித்து விட்டார்.
இளமயிலின் தாய் மரகதம் அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிவதால் இளமயிலின் இந்த விடுமுறை நாட்களில் அவருக்கு விடுப்பு இல்லாமல் இருக்க, இளமயில் இளங்குமரனின் இல்லத்தில் அம்பிகாவுடனேயே தனது பொழுதைக் கழித்திருந்தாள். மாலை தனது தாய் பணி முடிந்து வரும் வேளையினில் தான் தனது வீட்டிற்குச் சென்றிடுவாள்.
அடுத்து வந்த நாள்களில் ஒரு நாள் மாலை நான்கு மணியளவில் இளமயில் அவளின் அன்னை மரகதத்துடன் தனது முத்து மாமாவின் மருந்து கடைக்கு வருவதைப் பார்த்த இளங்குமரன், “என்ன அத்தை! உடம்புக்கு எதுவும் சுகமில்லையா?” எனக் கேட்டான்.
தனது கையில் வைத்திருந்த மருந்துச்சீட்டை கொடுத்தவராய், “இந்த மருந்துலாம் எடுத்து தாங்க முத்தண்ணா” என்றவர், “ஆமா குமரா! மயிலுக்குத் தான் கொஞ்சம் வயிறு வலி! அதான் டாக்டரைப் பார்த்துட்டு வரோம்” என்றார்.
எப்பொழுதும் துள்ளலும் துடிப்புமாய் இருக்கும் இளமயில் அமைதியாகச் சோர்வுடனும் கலங்கிய முகத்துடனும் இருப்பதைப் பார்த்த இளங்குமரனுக்கு மனது என்னவோ போல் ஆனது.
அந்த மருந்துச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த மருந்தையும் இளமயிலையும் மரகதத்தையும் மாறி மாறி பார்த்தார் முத்து மாமா. பின்பு குமரனிடம் அந்த மருந்து இருக்கும் அடுக்கினைக் கூறி அவனை எடுத்து வரப் பணித்தார்.
அவன் எடுத்து வர சற்று நகர்ந்து உள்ளே செல்லவும், “கவலைபடாதீங்க தங்கச்சி! இதெல்லாம் மரபணு சார்ந்த விஷயம் தான்” என்றவராய் மரகதத்திடம் இருந்த ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்தார்.
“பிளட் டெஸ்ட், ஸ்கேன்லாம் எடுத்திருக்கீங்க போலயே?” அதனைப் பார்வையிட்டவராய் கேட்டார்.
“ஆமாண்ணா! அதுக்குத் தான் இப்படி மூஞ்சை தூக்கி வச்சிக்கிட்டு இருக்கா! அவளுக்கு இந்த டெஸ்ட் எடுக்கிறதுலாம் பிடிக்கலை!” என்றவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கே வந்திருந்தான் இளங்குமரன்.
“மயிலு பாப்பா! இப்படி டெஸ்ட் எடுத்து என்ன பிரச்சனைனு கண்டுபிடிச்சா தானே டாக்டரால உனக்குச் சரியான மருந்தைத் தர முடியும். இதுக்காகலாம் அழுது முகத்தைத் தூக்கி வச்சிப்பாங்களா! நல்லா சத்தா சாப்பிட்டுக் கொடுத்திருக்க மாத்திரைலாம் நல்லா சாப்பிடனும் சரியா” என்று உரைத்து அங்கிருந்த சாக்லெட்டை அவள் கையினில் கொடுத்தார்.
இளமயிலின் அன்னையை நோக்கித் திரும்பியவராய், “தங்கச்சி! டாக்டர் கொடுத்திருக்கிறதுலாம் இரும்பு சத்து டானிக்கும் ஹார்மோன் டேப்லெட்டும் தான்மா. அந்தந்த ஹார்மோன் ஒழுங்கா வேலை செஞ்சா நடக்க வேண்டியது தன்னால நடக்கும். நீங்க வெசனப்படாம இருங்க. அப்ப தான் பாப்பாவும் சந்தோஷமா இருப்பா” என்று ஆறுதல் உரைத்து அந்த மருந்து மாத்திரைகளை அதற்குரிய பணத்தினைப் பெற்றுக் கொண்டு அவர்களிடம் அளித்தார்.
இருவரும் கிளம்ப எத்தனிக்க, “அத்தை! மயில நான் என் சைக்கிள்ல கூட்டிட்டு வரேன். வயிறு வலிக்குதுனு சொல்றவளை ஏன் நடத்தி கூட்டிட்டு போறீங்க” என்றான் இளங்குமரன்.
“ஆமாம்மா நான் இளா மச்சான் கூட வரேனே” என்று கண்களைச் சுருக்கிக் கெஞ்சும் பாவனையில் இளமயில் கேட்க,
மகளின் முகத்தினில் காலையில் இருந்து தெரிந்த கலக்கம் சற்றுக் காணாமல் போயிருக்க, அவளின் சந்தோஷத்திற்காக, சரியென அவளை அங்கேயே விட்டுவிட்டு நடந்து சென்றிருந்தார் மரகதம்.
“நீ ஏறு மயிலு” என்றவனாய் மிதிவண்டியில் ஏறிய இளங்குமரன், தங்களுக்கு மிகவும் பிடித்தமான தேன்மிட்டாய் கடைக்குச் சென்று இருவருக்குமாகத் தேன்மிட்டாய் வாங்கினான். கண்கள் மின்ன அதனை வாங்கிக் கொண்டவள் மகிழ்வுடன் சிரித்திருந்தாள்.
இருவருமாக அருகிலிருந்த பூங்காவில் அருகருகே அமர்ந்து அந்தத் தேன்மிட்டாய் பாக்கெட்டில் இருந்ததைப் பகிர்ந்து உண்டு கொண்டிருந்தனர்.
தேன்மிட்டாயைச் சாப்பிட்டவாறே எதையோ சிந்தித்தவனாய், “இது எந்த மாதிரி வயிறு வலினு எனக்குப் புரிஞ்சிடுச்சு மயிலு” என்றான்.
தேன்மிட்டாய் உண்ணும் ஆர்வத்தில் அவனின் பேச்சை அரைகுறையாகக் கேட்டவளாய், “என்ன புரிஞ்சிது?” எனக் கேட்டாள்.
“எங்க கிளாஸ்ல லாஸ்ட் த்ரீ இயர்ஸ்ஸா பொண்ணுங்களுக்கு அப்பப்ப வயிறு வலி வந்து அழுவாங்க மயிலு. அப்புறம் அந்தப் பொண்ணுங்களோட பேரண்ட்ஸ்ஸை வர வச்சி அவங்க கூட அனுப்பி வச்சிடுவாங்க. அந்தப் பொண்ணுங்க பத்து பதினைஞ்சு நாளுக்கு வரவே மாட்டாங்க. ஏன்னு கேட்டா பெரிய மனுஷி ஆகிட்டானு நம்ம பசங்கலாம் சொல்லுவாங்க. உனக்கு அந்த மாதிரி தான் இந்த வயிறு வலி வந்திருக்கும் மயிலு. அப்ப நீயும் பெரிய மனுஷி ஆகிட்டனு நினைக்கிறேன்” என்றவன் தீவிரமாக உரைக்க, அவனைத் தீவிரமாக முறைத்திருந்தாள் இவள்.
“அட நீ வேற ஏன்டா என்னைக் கடுப்பேத்திட்டு இருக்க” என்று எரிச்சலுடன் மொழிந்தவள், “நான் இன்னும் பெரிய மனுஷி ஆகலைனு தான் அம்மா என்னை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனாங்க” என்றாள்.
“ஓஹோ அப்ப பெரிய மனுஷி ஆகுறதுக்கு வர்ற வயிறு வலி உனக்கு வரலையா? அந்த வயிறு வலி வர வைக்கத் தான் உனக்கு டெஸ்ட்லாம் எடுத்துப் பார்த்து மருந்து கொடுத்தாங்களா?” அதி தீவிரமாகக் கேட்டிருந்தான் இப்பொழுது.
தனது நெற்றியிலேயே அடித்துக் கொண்டாள் இளமயில்.
“பொண்ணுங்க பெரிய மனுஷி ஆகுறதுனா என்னனு எனக்கும் தெரியாது இளா மச்சான். ஆனா நீ சொல்ற மாதிரி வயிறு வலி வச்சு மட்டும் பெரிய மனுஷியா ஆகிட்டதா சொல்ல மாட்டாங்க. அது என்னமோ ஹார்மோன் சேஞ்சஸ் நடக்குமாம். அதை வச்சி தான் வயசுக்கு வந்துட்டதா சொல்றாங்க போல! அந்த சேஞ்சஸ் எனக்கு நடக்கத்தான் மருந்து மாத்திரைலாம் கொடுத்திருக்கிறதா டாக்டர் சொன்னாங்க” என்றாள்.
அவனின் தீவிர யோசனைப் பாவனையை ஏறிட்டவளாய், “நான் இந்த மருந்து மாத்திரைலாம் சாப்பிட்டு பெரிய மனுஷி ஆனப்பிறகு பெரிய மனுஷி ஆகுறதுனா என்னனு உனக்குச் சொல்றேன்! எவ்வளவோ பாடம் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்க! இதை நான் உனக்குச் சொல்லித் தர மாட்டேனா இளா மச்சான். இதுக்கு ஏன் இவ்ளோ யோசிச்சிட்டு இருக்க நீ! இந்த மயிலு இருக்கக் கவலை ஏன்?” என்றவளாய் இருக்கையை விட்டு எழுந்தவள்,
அதன் பின்பு வந்த நாள்களில் இவள் வயதுக்கு வந்த பிறகு இவன் அவளிடம் இதனைப் பற்றிக் கேட்டதும், இதை எப்படி அவனிடம் கூறுவது எனத் தெரியாமல் முழித்து இவள் ஓடியதும் நினைவினில் வந்து இப்பொழுதும் அவளின் முகத்தினில் செம்மையைப் பூசியிருந்தது.
நினைவுகளின் தாக்கத்தில் சிரித்த முகமாய்த் தான் வகுப்பிற்குள் நுழைந்தாள் இளமயில்.
மருந்தியல் இளங்கலை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களின் வகுப்பிற்குள் நுழைந்த இளமயில் அன்று தான் எடுக்கத் திட்டமிட்டிருந்த இனப்பெருக்கத் தொகுதி (Reproductive system) பற்றிப் பேச ஆரம்பித்தாள்.
“இந்த டாபிக்கை நீங்க முதல் செமஸ்டருலேயே படிச்சிருப்பீங்க தானே” என்று அவள் கேட்டதும்,
“யெஸ் மேம்” என்று அனைவரும் கோரஸாக மொழிய, குறும்புக்கார மாணவர்கள் சிலர், “எங்கே மேம் பாடம் எடுத்தாங்க. ரீ பிரொடெக்டிவ் சிஸ்டம் பத்தி சொல்லி கொடுத்தா நாங்க புதுசா எதுவும் பிரொடியூஸ் (produce) செஞ்சிடுவோமோனு பயந்து அதெல்லாம் அசைண்மெண்ட்டா கொடுத்துட்டாங்க மேம்” என்று சோக ராகமாய்க் கூற, அனைவரின் சிரிப்பு சத்தமும் வகுப்பறையில் எதிரொலித்தன.
வாய்விட்டுச் சிரித்த இளமயில், “ரீ பிரொடெக்டிவ் ஆர்கன்னா செக்சுவல் ஆர்கன் மட்டும் தானா என்ன?” எனக் கேட்டவளாய்,
“பொண்ணுக்கு இருக்கக் கூடிய ரீபிரோடெக்டிவ் ஆர்கன்ல முக்கியமானது பெண்களின் கருப்பைனு சொல்ல கூடிய கர்பப்பை தான்! ஒரு பெண் ஆரோக்கியமாக இருக்கனும்னா அவங்களோட கர்ப்பப்பையும் ஆரோக்யமா இருக்கனும்” என்றாள்.
இப்பாடத்தை எடுக்கும் போதெல்லாம் மாணாக்கர்களிடம் தான் கேட்கும் அக்கேள்வியைக் கேட்டாள்.
“ஒரு பெண்ணோ ஆணோ வயதுக்கு வரதுனா என்னனு உங்களோட புரிதலைச் சொல்லுங்க” எனக் கேட்டாள்.
“ஆண்களுக்குக் குரல் மாறும் மேம்”
“பெண்களுக்கு மன்த்லி சைக்கிள் ஸ்டார்ட் ஆகும் மேம்”
“உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் மேம். அதனால பாய்ஸூக்கு மீசை தாடி வளரும், கேர்ள்ஸூக்கும் ஹார்மோன் சேஞ்சஸ்க்கு ஏத்த மாதிரி பாடில சேஞ்சஸ் நடக்கும்”
“சரி பெண்கள் வயசுக்கு வர்றதை அவளுக்கு வரும் முதல் உதிரப்போக்கு வச்சி கண்டுப்பிடிக்கிறோம் இல்லையா அந்த மாதிரி ஆண்கள் வயசுக்கு வர்றதை எப்டி கண்டுபிடிக்கிறதுனு தெரியுமா?” எனக் கேட்டாள்.
“பெண்கள் மாதிரி ஆண்களுக்கு அப்படி ஸ்பெசிபிக்கா (specific) எதுவும் இல்லை தானே மேம்” எனக் கேட்டனர் மாணாக்கர்கள்.
“ஹ்ம்ம் நாம இந்த ரீ பிரொடெக்டிவ் சிஸ்டம் பத்தி பத்தாவதுல படிக்கிறோம். சயின்ஸ் கிரூப் எடுத்தா பதினொன்னாவது பன்னிரண்டாவதுல படிக்கிறோம். இப்ப கூடப் பர்ஸ்ட் இயர் சப்ஜக்ட் படிச்சும் இதைப் பத்தி தெரியலை பாருங்க. பெரும்பாலான படிச்சவங்களே பெண்கள் வயசுக்கு வரது தான் வெளிப்படையா தெரியும். ஆண்கள் வயசுக்கு வரது தெரியாதுனு தான் நினைச்சிட்டு இருக்காங்க. ஆனா ஆண்களின் பருவ மாற்றங்களையும் அவங்களை உன்னிப்பாகக் கவனிச்சா கண்டுபிடிக்க முடியும்”
“பெண் குழந்தைகள் வயதுக்கு வருவதை மெனார்கேனு சொல்லுவாங்க. ஆண் குழந்தைகள் வயதுக்கு வருவது ஸ்பர்மெர்கேனு சொல்லுவாங்க. அதாவது பெண் குழந்தைகள் ரத்தப்போக்கு வந்தால் வயதுக்கு வந்ததாகச் சொல்வது போல, ஆண் குழந்தைகளுக்குத் தூக்கத்தில் விந்து வெளிப்படுவதை ஸ்பர்மெர்கே (spermarche)னு சொல்றாங்க”
“இது மட்டுமில்லாம ஆண் குழந்தைகள் பருவம் எய்தும்போது ஆரம்பக் கட்டத்தில் கொஞ்சமாக முடி வளரத் தொடங்கும். அக்குள் முடி, மீசை, தாடிலாம் வளரும். ஆணுறுப்பில் வளர்ச்சி இருக்கும். விதைப்பை அளவில் பெரியதாக மாற்றம் பெறும்”
“இந்த மாற்றங்கள் எல்லாம் பதினாலுல இருந்து பதினெட்டு வயசு வரைக்கும் ஒரு ஆண் பிள்ளைக்கு நடக்காம போச்சுனா அவங்களை உடனே டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போறது நல்லது” என்று கூறியவள் ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகள் அதன் செயல்பாடுகள் என அதனைப் பற்றிப் படங்களை வரைந்து விளக்கமாகக் கூறியிருந்தாள் இளமயில்.
“சரி பெண்களின் மென்சஸ் பிராசஸ் பத்தி யாராவது எக்ஸ்பிளைன் செய்ய முடியுமா? இந்தளவுக்கு டீடெயில்டா தெரியலைனாலும் ஜஸ்ட் மேலோட்டமாக ஓரளவுக்கு உங்களுக்குத் தெரிஞ்சதைச் சொல்லுங்க” எனக் கேட்டாள்.
“மேம் நான் ரீசன்ட்டா ஒரு கதைல இதைப் பத்தி க்யூட்டா படிச்சதை சொல்லவா?” எனக் கேட்டாள் ஒரு மாணவி.
இது நாள் வரை இவர்களின் வகுப்பில் இப்பாடத்தினை விரிவாக வெளிப்படையாக எவரும் விளக்கி இருக்கவில்லை என்பதாலும், இளமயிலின் கற்பிக்கும் வகை அங்கிருந்தவர்களை இயல்பாக இதனைப் பற்றி உரையாட வைத்திருந்ததாலும் அம்மாணவி இதைப் பற்றிப் பேச முன்வந்திருந்தாள்.
“அப்படியா?” ‘இதை எப்படி கியூட்டா சொல்ல முடியும்?’ என்கின்ற ஆச்சரியப் பாவனையுடனேயே அப்பெண்ணைக் கேள்வியாய்ப் பார்த்த இளமயில்,
“கம் ஆன் சுவாதி! இங்க வந்து சொல்லுங்க” என்று அப்பெண்ணைக் கரும்பலகை அருகே நிற்கச் சொல்லி விட்டு அப்பெண் அமர்ந்திருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள் இளமயில்.
அந்தப் பெண் கதை சொல்ல தொடங்கினாள்.
“ஒரு நாள் நாலாவது படிக்கிற ஒரு குட்டிப் பையன் தன்னோட அம்மாகிட்ட போய், ‘அம்மா அம்மா! பாப்பா எப்டி வரும்னு’ கேட்டானாம்”
“அதுக்கு அந்த அம்மா, ‘நேச்சர் மதர் நைட்டு ரவுண்ட்ஸ் வரும் போது யார் வீட்ல கிட்ஸ் இல்லையோ அந்த வீட்டுல இருக்க மம்மி டம்மில ஒரு குட்டிப் பாப்பாவை வச்சிட்டு போயிடுவாங்க. கொஞ்ச நாள் மம்மி டம்மில பாப்பா நல்லா வளர்ந்ததும், ஹாஸ்பிடல் போயி ஊசி போட்டு பாப்பாவை வெளியே எடுத்து கொடுத்துருவாங்க. அப்படின்னு சொன்னாங்களாம்”
அதே மாதிரி ஊசி போட்டாலும் சத்தம் வருமளவு அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த மாணாக்கர் அனைவரின் கைத்தட்டலும், சிரிப்பு சத்தமும், வாவ் என்ற ஆச்சரிய மொழியும் அந்த வகுப்பறையை நிறைத்தன.
“ஹ்ம்ம் அப்புறம் என்னாச்சு?” என ஆர்வத்துடன் கேட்டாள் இளமயில்.
“அப்புறம் அந்தக் குட்டிப் பையன் ஏழாவது எட்டாவது படிக்கும் போது அவங்க கிளாஸ்ல உள்ள பொண்ணுங்கலாம் பெரிய மனுஷி ஆகிட்டதா சொல்லி லீவ் எடுக்கிறதைப் பார்த்து, பெரிய பொண்ணாகுறதுனா என்னம்மானு கேட்டானாம்.
அதுக்கு அந்தப் பையனோட அம்மா, நேச்சர் மதர் டம்மில பாப்பா வைப்பாங்க சொன்னேன்ல… அதுக்குப் பொண்ணுங்க வளரணும். அந்த வளர்ச்சி தான் பெரிய பொண்ணா ஆகுறதுனு சொல்லிட்டு, பெண்களோட கருவறையையும், சினைப்பையையும் ஒரு பேப்பர்ல வரைஞ்சி அந்தக் குட்டிப்பையன்கிட்ட காண்பிச்சாங்களாம்” என்று அந்த மாணவி கூறியதும், “சுவாதி நீங்களும் பிளாக்போர்ட்ல அதை வரைஞ்சி காண்பிங்க” என்றாள் இளமயில்.
அதற்கு அந்த மாணவி, “பார்க்காம வரைய தெரியாதே மேம்” என்று தயக்கத்துடன் முழித்தவாறு கூற,
“இப்ப சொல்லுங்க சுவாதி” என்றவாறு மீண்டுமாய் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள் இளமயில்.
அந்த அம்மா சொன்னாங்களாம்,
“நீ சாப்பிடுற புட் எப்படி உன்னோட ஸ்டமக்குள்ள போகுதோ அப்படித் தான் பாப்பாவும் நேச்சர் மதர் வைக்கும் போது பொண்ணுங்களோட இந்த ஆர்கனுக்குப் போகும். இதோட பேர் யூட்ரஸ். இந்த யூட்ரஸ் பக்கத்துல ஒரு சின்ன நெல்லிக்கா மாதிரி வரைஞ்சி இருக்கேன் பாரு இது தான் ஓவரி. இது ஒவ்வொரு மாசமும், ஒரே ஒரு பூவை பூக்கும். அந்தப் பூ இந்த யூட்ரஸ்ல வந்து காத்திருக்கும். நேச்சர் மதர் உள்ள பூ இருந்தா தான் உள்ள பாப்பா வைக்க முடியும்.
ஆனா பாப்பா வைக்குறதுக்கு முக்கியமான ரெண்டு கண்டிசன் இருக்கு நம்ம உலகத்துல. ஒன்னு அந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் ஆகி இருக்கனும். அதோட அவங்களுக்கு அப்ப பாப்பா தேவையா இருக்கணும். அதனால நேச்சர் மதர் நிறையப் பேருக்குப் பாப்பா கொடுக்காம போயிருவாங்க. ஆனா பாவம் பூ பூத்து இருந்துச்சி இல்லையா?
‘நீ சொல்லு தம்பி நம்ம மல்லி கொடியில சாயங்காலம் பூத்தப் பூ நாம பறிக்காம விட்டா காலைல என்ன ஆகும்…?’ அப்படின்னு அந்தக் குட்டிப் பையன்கிட்ட கேள்வி கேட்டாங்க.
‘செடியில வாடி அப்புறம் கீழ உதிந்திரும் அம்மா’ அப்படின்னு அந்தக் குட்டிப்பையன் சொன்னானாம்.
அதுக்கு அந்த அம்மா, தன் மகனோட கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுத்துட்டு, ‘பிரிலியன்ட் பாய்’ அப்படின்னு சொல்லிட்டு, மறுபடி இந்தப் படத்தைக் காட்டி, இங்க மாசம் ஒரே ஒரு பூ பூக்கும்னு சொன்னேன் இல்லையா அந்தப் பூ நேச்சர் மதர் தனக்குப் பாப்பா கொடுக்கலையே அப்படிங்கிற சோகத்துல ரத்தக் கண்ணீர் விடும். முதல் முறை யூட்ரஸ் ப்ளட் டியர்ஸ் பண்றதை தான் பொண்ணுங்க பெரிய மனுசி ஆகுறாங்கன்னு சொல்றாங்க. சரியா… பாவம் யூட்ரஸ் அந்த ப்ளட் டியர்ஸ் ட்ரெஸ் எல்லாம் ஸ்பாயில் பண்ணிட கூடாதுன்னு நம்ம கீழ் வீட்டு அஸ்வின் பாப்பாவுக்கு அவங்க மம்மி பேம்ப்பர்ஸ் போடுற மாதிரி கேர்ள்ஸ் அந்த மாதிரி நேரத்துல பேட் யூஸ் பண்ணி அந்த டியர்சை கேச் பண்ணி அப்புறம் டிஸ்போஸ் பண்ணிடுவாங்க. எப்படியும் யூட்ரஸ் மாசம் ஒரு முறை, ஒரு நாலஞ்சி நாள் அழும். அப்ப எல்லாம் அந்தப் பொண்ணுங்களுக்கும் கஷ்டமா இருக்கும். அதனால நீ எந்தப் பொண்ணு ஸ்கர்ட்ல ப்ளட் ஸ்டெயின் பார்த்தாலும் பர்சனால அவங்ககிட்ட சொல்லி வாஷ் பண்ணிக்கச் சொல்லணுமே தவிர அந்த ஈவன்ட் வச்சி பொண்ணுங்களைக் கேலி கிண்டல் எல்லாம் பண்ணக் கூடாது சரியா..!’ அப்படின்னு சொன்னங்களாம்.
அந்தக் குட்டிப்பையனும் ‘சரிமான்னு’ சொன்னானாம்.
“வாவ் யாரந்த அம்மா? எனக்கே பார்க்கனும் போல இருக்கே!” இளமயில் எழுந்து நின்று கைத்தட்டியவாறு கூற, வகுப்பறையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.
“உங்களோட இந்த அப்லாஸ் அண்ட் கிரெடிட்ஸ் பாராட்டு எல்லாம் எழுத்தாளர் மேக்னா சுரேஷ்க்கு தான் போய்ச் சேரனும். அவங்களோட விழி வெப்ப சலனம் நாவல்ல ஹீரோவோட சின்ன வயசுல அவனுக்கு அவங்க அம்மா இப்படி விளக்கிச் சொல்லிருப்பதாக எழுதியிருப்பாங்க ரைட்டர்” என்றாள் சுவாதி.
“அவங்க நாவல்கள்லாம் வாசிக்கனும்னு ஆசை வருது! தேங்க்ஸ் சுவாதி” என்றவளாய் மேலும் விரிவாகப் பெண்களின் இனப்பெருக்க அமைப்பைப் பற்றி விளக்கியவாறு அந்த வகுப்பை நிறைவு செய்து விட்டு தனது பணியாளர் அறைக்கு (staff room) வந்தவளின் எண்ணங்கள் எல்லாம் இளங்குமரனையே சுற்றிச் சுழன்றது.
“இந்த மாதிரி தெளிவா நாங்க பத்தாவது படிக்கும்போது சொல்லிக் கொடுத்திருந்தா எனக்கு இளா மச்சான் மேல ஈர்ப்பும் ஆசையும் வந்திருக்காம இருந்திருக்கும்ல. அந்த ஆசை காதலாக மாறி இப்படி நான் தவிச்சிட்டு இருக்க வேண்டிய சூழ்நிலையும் வராம இருந்திருக்கும்ல” என்று சிந்தித்தவளாய் கண்களை மூடியவாறு நாற்காலியில் தலையைப் பின்னோக்கிச் சாய்த்திருந்தவளின் நினைவுகளும் பின்னோக்கி நகர்ந்தன.