அடுத்து வந்த நாள்களில் நிறையவே இளங்குமரனைக் கவனிக்கத் தொடங்கியிருந்தாள் இளமயில்.
அவன் மிதிவண்டியை ஓட்டும் லாவகத்திலிருந்து அணியும் உடை வரை, பள்ளியில் வகுப்புத் தலைவனாய் அவனின் செயல்கள் முதல் தனக்குப் பாடத்தினை அவன் பயிற்றுவிக்கும் முறைகள் வரை அணுஅணுவாய் அவனை உள்வாங்க தொடங்கியிருந்தாள் இளமயில்.
கொஞ்சம் கொஞ்சமாக அவன்பால் ஈர்க்கப்பட்டிருந்தாள் இளமயில். அவனுடன் செலவிடும் ஒவ்வொரு நொடியையும் பரவசமாய் உணரத் தொடங்கினாள் இளமயில்.
ஒரு நாள் மாலை வேளையில் அவனுடன் அமர்ந்து பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தவள் வழமைப் போல் கண் சிமிட்டாது அவனைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருக்க, சட்டென அவள் புறம் திரும்பியவனாய் புருவத்தை உயர்த்தியவாறு என்ன என்று கேட்டான் இளங்குமரன்.
“என்ன நக்கலா? என் மச்சத்தை வச்சி என்னைக் கிண்டல் செய்றியா?” என்று முறைப்பாய்க் கேட்டிருந்தான்.
“அய்யோ இல்ல மச்சான். நிஜமா தான் சொல்றேன். நீ நம்பலையா?” எனக் கேட்டவள் அவனின் கைப்பிடித்து எழுப்பியவளாய் ஆளுயரக் கண்ணாடியின் முன்னே அவனைத் தள்ளிக்கொண்டு நிற்க வைத்தவள் தானும் அவனருகில் நின்று கொண்டாள்.
‘ஹையா ஜோடி பொருத்தம் கூட நல்லா இருக்கே’ அவளின் உள்ளம் கூக்குரலிட, தனது குதூகலத்தை உள்ளுக்குள் அடக்கியவளாய் காலின் கட்டை விரலை ஊன்றி அவன் உயரத்திற்குச் சற்று எம்பி நின்று அவன் முகத்தைக் கண்ணாடியில் மச்சம் தெரியும் வண்ணம் திருப்பியவளாய், “பாரு” என்றாள்.
அவனுடன் இப்படி ஜோடியாய் நிற்பது சிலிர்ப்பை அளித்தது அவளுக்கு.
“இந்த மூஞ்சை தினமும் தான் நான் கண்ணாடியில பார்த்துட்டு இருக்கேன். ஏதோ புதுசா சொல்றா மாதிரி சொல்ல வந்துட்டா” என்று முகத்தைச் சுழித்தவாறு தனது இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான் அவன்.
“ம்ப்ச் பாராட்டினா கூட இப்படித் தான் நம்பாத பார்வை பார்த்து வைப்பியா நீ” என்று அவனை முறைத்தாள் இவள்.
“என்னை வச்சி என்னமோ பிளான் செய்றனு மட்டும் புரியுது. ஆனா என்னனு தான் தெரியலை” என்றவனாய் பாடத்தில் கவனம் செலுத்தலானான்.
அவளின் விளையாட்டுத்தனத்தை அறிந்தவனாய் இவ்வாறு கூறினான்.
இளங்குமரனுக்கு மயிலின் இந்தப் பார்வையும் பேச்சும் மனத்திற்குள் இனம்புரியாத பரவசத்தை உண்டாக்கத் தான் செய்தது. ஆயினும் இம்மாதிரியான அலைக்கழிப்பு தனது படிப்பின் மீதான கவனத்தைச் சிதறடிக்கும் என்பதனால் இந்த உணர்வுகளுக்கு மனத்தில் இடம் கொடுக்காது பத்தாம் வகுப்புத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற வேண்டுமென்ற தனது குறிக்கோளில் மட்டும் கவனத்தைச் செலுத்தினான்.
அன்று அவளிடம் வயதுக்கு வருவது பற்றிக் கேட்டவன், அதன் பிறகு அவ்வப்போது நினைவு வந்து கேட்கும் போதெல்லாம் ஏதேனும் சொல்லி மழுப்பியிருந்தவள் அதனைப் பற்றித் தெளிவாக ஏதும் அவனிடம் இது வரை உரைக்கவில்லை.
பத்தாம் வகுப்பில் இருவரின் பெயரும் அடுத்தடுத்து வருவதால் இருவரும் ஒரே பிரிவில் (ஏ செக்ஷனில்) அமர்த்தப்பட்டனர்.
இளமயிலும் இளங்குமரனும் உற்ற தோழமைகளென இருவரின் நட்பும் பிரசித்தம் பெற்றிருந்தது அவர்களின் வகுப்பில்.
காலாண்டு விடுப்பு முடிந்து பள்ளிக்கு சென்று மூன்று வாரங்கள் கடந்திருந்த நிலையில் ஒரு நாள் மாலையில் இருவருமாக மிதிவண்டியை மிதித்தப்படி பள்ளியில் இருந்து கிளம்பி வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்த போது,
“எனக்கு வளர்மதி சொல்லிட்டா” என்றான் இளங்குமரன்.
“என்னது வளர்மதி சொல்லிட்டா? நாளைக்கு கிளாஸ் டெஸ்ட் பத்தி சொன்னாளா?” என்று அசட்டையாக இளமயில் கேட்க,
“என்னனு கேட்ட அவகிட்ட?” அதிர்வுடன் அவனைப் பார்த்தவளாய் கேட்டிருந்தாள்.
“உன்கிட்ட கேட்ட மாதிரி தான் கேட்டேன். எதை வச்சி பொண்ணுங்க பெரிய மனுஷி ஆகிட்டதா சொல்றாங்கனு கேட்டேன்” என்று அவன் கூறிய நொடி படபடவென அவன் தோளில் அடித்திருந்தாள் இளமயில்.
அவளின் செயலில் கோபமுற்றவனாய், “ஹே ஏன்டி அடிச்ச?” என்று தனது சைக்கிளுக்கு ஸ்டான்ட் போட்டுவிட்டு அவளருகில் சென்று அவன் கேட்க, அவனின் முதுகு கை தோள் எனக் கைக்குக் கிடைத்த இடத்தில் எல்லாம் தனது கோபம் தீர மீண்டுமாய் அடித்தும் கிள்ளியும் வைத்தவள், “கண்டவகிட்டயும் போய் இதெல்லாம் கேட்பியா நீ?” என்று உக்கிரமாக முறைத்திருந்தாள்.
அவளின் அடியையெல்லாம் தடுத்துப் பிடித்து நிறுத்த முனைந்தவனாய், “ஹே வளர்மதி நம்ம கிளாஸ் பொண்ணு தானே. அதுவும் நானும் வளரும் தானே முதல் இரண்டு ரேங்க் எடுக்கிறோம். அவ எனக்கு நல்ல ஃப்ரண்ட். என்னமோ அவ எனக்கு யாருனே தெரியாத பொண்ணு மாதிரி பேசுற! உனக்கு முன்னாடியே அவளை எனக்குத் தெரியும். நாலு வருஷமா ஒன்னா தானே படிச்சிட்டு இருக்கோம். அதனால கேட்டேன் இதுல என்ன இருக்கு” என்றவனை ஆத்திரத்துடன் பார்த்தவள்,
“அப்படினா அவகிட்டயே முதல்ல கேட்டிருக்க வேண்டியது தானே. என்கிட்ட ஏன்டா கேட்ட? இந்தளவுக்குப் பேசுற ஒரு ஃப்ரண்ட் உனக்கு இருக்கும் போது நான் எதுக்கு உனக்கு! இனி ஒரு வார்த்தை என்கிட்ட நீ பேசின, அவ்ளோ தான் சொல்லிட்டேன்” ஆத்திரத்துடன் விரலை நீட்டி பேசிவளாய் விறுவிறுவெனத் தனது சைக்கிள் ஸ்டாண்ட்டை எடுத்து விட்டு தனது கோபம் மொத்தத்தையும் மிதித்தலில் காட்டி காற்றை விட வேகமாய் அந்தத் தெருவை கடந்து சென்றிருந்தாள் இளமயில்.
அவளின் கோபத்தைக் கண்டு சிரித்தவனாய் பின்னோடேயே வீட்டிற்குச் சென்றவன் தன்னிடம் பேசாது முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தவளை கண்டும் காணாதது போல் உலவிக் கொண்டிருந்தான்.
அன்று அவனுடன் படிக்கவும் செல்லாது அம்பிகாவுடனேயே உரசிக் கொண்டிருந்தவளை, “என்னடி என்னாச்சு? ஏன் மூஞ்சை தூக்கி வச்சிருக்க! படிக்கப் போகாம என் பின்னாடியே சுத்திட்டு இருக்க! என்கிட்ட எதுவும் சொல்லனுமா.. வயிறு எதுவும் வலிக்குதா” என்று கேட்டார்.
ஒன்னுமில்லை எனத் தலையசைத்தவள் அவரின் இடையோடு கட்டிக் கொண்டு வயிற்றில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
“என்னாச்சு என் மயிலு பாப்பாவுக்கு” என்று அவளின் தலை வருடியவாறு அம்பிகா கேட்க,
“ஒன்னுமில்லை அத்தை! சும்மா கட்டிக்கனும்னு தோணுச்சு” கண்களைச் சிமிட்டியவாறு சிரித்தபடி அவரைப் பார்த்தவள் தனது வீட்டிற்குச் செல்ல, “என்னாச்சு இவளுக்கு இன்னிக்கு” என்று புலம்பியவாறே இளங்குமரனின் அறைக்குச் சென்றவர், “உனக்கும் பாப்பாவுக்கும் எதுவும் சண்டையாடா” என் கேட்டார்.
“ஏன் அவ எதுவும் சொன்னாளா?” எனக் கேட்டான் இவன்.
“சொல்லாதனால தானே உன்னைக் கேட்கிறேன்” என்றார் அவர்.
“இல்லமா அப்படிலாம் எதுவுமில்லை” என்றவன் சொன்னதை நம்பாத பார்வைப் பார்த்தவராய் அங்கிருந்து அகன்றார்.
‘போட்டு வாங்கலாம்னு பார்த்தா.. என்ன செஞ்சாலும் சொல்ல மாட்டேங்கிறாளே’ மனத்தோடு புலம்பிக் கொண்டான் இளங்குமரன்.
பின் மாலை பொழுதில் வீட்டிற்குள் தியாகராஜன் வருவதைத் தனது வீட்டினில் இருந்து பார்த்த இளமயில், “மாமா.. மாமா” என்று அழைத்தவாறே வீட்டிற்குள் நுழைந்தவளாய், “மாமா வந்துட்டீங்களா! உங்ககிட்ட வளர்மதியைப் பத்தி பேசனும்” என்று சத்தமாய்க் கத்தினாள்.
மேலே தனதறையில் படித்துக் கொண்டிருந்த இளங்குமரன் திடுக்கிட்டவனாய், “அய்யோ அப்பாகிட்ட வளர்மதி பத்தி என்ன சொல்ல போறா இவ?” என்று அதிர்ந்து பதறியடித்து எழுந்தான்.
மீண்டுமாய் அவள், “மாமா.. மாமா” என்று கத்த, “எதுக்கு இப்படி எட்டூருக்கும் கேட்குற மாதிரி கத்துறா.. நாலு தெரு தாண்டி இருக்க வளர்மதி வீட்டுக்கே கேட்குற மாதிரி கத்துறாளே” வாய்விட்டே புலம்பியவனாய் தனது அறையை விட்டுப் படிக்கட்டின் வழியாக அவசர அவசரமாக இறங்கி வந்தான்.
கீழே அவளிடம், “யாருடி அது வளர்மதி?” என்று அம்பிகா கேட்டுக் கொண்டிருந்ததைக் கண்டவன்,
“அய்யய்யோ” மனத்திற்குள் அலறியவனாய்,
“அம்மா எனக்கு ரொம்பப் பசிக்குது. போ.. போய்த் தோசையை ஊத்து. அப்றமா வந்து இவகிட்ட கதைப் பேசு” என்று தாயைச் சமையலறைக்குள் அனுப்பி வைத்தவன்,
இவளிடம் வந்து, “வளர்மதி பத்தி அப்பாகிட்ட என்ன சொல்ல போற நீ” என்று கேட்டிருக்கும் போதே,
“யாருமா அது வளர்மதி?” என்று கேட்டவாறு குளியலறையில் இருந்து வந்து நின்றார் அவனின் தந்தை தியாகராஜன்.
‘சொல்லாதே’ என்று கண்களாலேயே அவன் அவளைப் பார்த்துச் சமிக்ஞை செய்ய, இவள் ‘சொல்ல தான் போறேன்’ என்று வாயசைக்க, இவர்களின் இந்தப் பரிபாஷையைக் கண்டும் காணாதவராய், “சொல்லு மா” என்றார்.
“அது வந்து.. அது வந்து மாமா, வளர்மதி எங்க கூடப் படிக்கிற பொண்ணு மாமா” என்று இவள் ஆரம்பிக்கவும், லொக் லொக்கு என்று இருமியவனாய்,
“தண்ணீ.. தண்ணீ குடிச்சிட்டு வரேன்ப்பா” என்று சமைலறைக்குள் ஓடிச் சென்றான்.
மகனை ஒரு பார்வைப் பார்த்தவராய், இளமயிலைப் பார்த்தவர் மேலும் சொல்லு என்பது போல் தலையசைக்க, இளங்குமரனின் செய்கையில் வாய்க்குள் சிரித்துக் கொண்டிருந்தவள், “வளர்மதி பெயருக்கான தமிழ் இலக்கணம் என்னனு கேட்க வந்தேன் மாமா” என்றாள்.
சமையலறையில் ஹப்பாடா என்று பெருமூச்சு விட்டவனாய் தாய் அளித்த தோசையை உண்டு கொண்டிருந்தான் இளங்குமரன்.
“வளர்மதி எவ்ளோ அழகான தமிழ்ப் பேரு தெரியுமா மயிலு? நம்ம தமிழ் இலக்கணத்தை வலுவா சொல்லும் பேரு அது” என்றவராய் அதனை அவளுக்கு விளக்க ஆரம்பித்தார்.
“வளர்ந்த மதி, வளர்கின்ற மதி, வளரும் மதி. முக்காலத்திற்கும் பொருந்தும் பொருளுடைய வினைத்தொகை மா இது” என்றார்.
“வினைத்தொகைனா என்னது மாமா?” எனக் கேட்டாள்.
“வினைத்தொகைங்கிறது ஒரு பெயர்ச்சொல். ஒரு வினைச்சொல்லும், ஒரு பெயர்ச்சொல்லும் இணைந்த கூட்டுச் சொல்லைத் தான் வினைத்தொகைனு சொல்லுவாங்க. முதல் சொல் வினைச்சொல்லாக இருக்கும், பின்வரும் சொல் பெயர்ச்சொல்லாக இருக்கும். முன்வரும் வினைச்சொல், மூன்று காலத்தையும் குறிப்பால் உணர்த்தும் சொல்லாக இருக்கும்.
வளர்மதில வளர் வினைச்சொல்! மதி பெயர்ச்சொல்! வளர் வினைச்சொல் வளர்ந்த வளர்கின்ற வளரும்னு மூன்று காலத்தையும் குறிக்குதுல. அதனால இது வினைத்தொகை”
அவளின் புத்தகத்தில் எழுதிக் காண்பித்தவாறு தெளிவாக விளக்கினார் தியாகராஜன்.
“சரிங்க மாமா! வாங்க சாப்பிடலாம்! பசிக்குது. அத்தையோட தோசை வாசனை மூக்கைத் துளைக்குது” என்றவளாய் இளமயில் உணவு மேஜையை நோக்கிச் செல்ல, சிரித்தவாறே பின் தொடர்ந்தார் அவர்.
இளமயில் உண்டு விட்டு தனது இல்லத்திற்குச் சென்றதும், சாப்பிட்டு விட்டு மாடியறைக்குச் செல்லவிருந்த இளங்குமரனை நோக்கி, “குமரா! கொஞ்சம் வாக்கிங் போய்ட்டு வருவோமா” எனக் கேட்டார்.
தியாகராஜன் இவ்வாறு அழைக்கிறார் என்றால் மகனிடம் தனியாக ஏதோ பேச விரும்புகிறார் என்று புரிந்து கொண்டவராய் தலையாட்டினார் அம்பிகா.
இளங்குமரனின் மனத்தினுள் கிலியூட்டியது தந்தையின் இந்த அழைப்பு.