ஜாய் ட்ரிப் & வ்யூ ஏஜென்சி அடுத்த பேட்ஜ் ஆட்களுக்கு வண்டியை அனுப்புவதற்காக தயாராக இருந்தது.
“தீபக் நாளை மறுநாள் திருப்பதி போற டூரிஸ்ட் ஆட்களோட பிக்கப் பாயிண்ட்ஸ் டீடெய்ல்ஸ் இந்த பேப்பர்ல இருக்குது. எட்டாம் நம்பர் பஸ் சர்வீஸ் முடிஞ்சு வந்திருச்சு தானே?…” என்றான் செங்கதிரவன்.
“வந்திருச்சு கதிரண்ணா. பண்ணிடலாம்…” என்றான் தீபக்.
“பிராப்பரா செக் பண்ணனும். எந்த பால்ட்டும் இருக்க கூடாது. ஏற்கனவே பெர்த் கவர் சரியில்லை, மாத்தனும்ன்னு கம்ப்ளைன்ட். இதை கூட பார்க்காம என்ன பன்றாங்கன்னு? இந்த தடவை ட்ரிப் ஸ்மூத்தா போய்ட்டு வரனும்…” என்றவன்,
“அங்க ரூம் சர்வீஸ்ல பேசியாச்சா? எல்லா ரூமும் க்ளியரா இருக்கனும். ஸ்ட்ரிக்ட்டா சொல்லிரு தீபக்…” என கடுமையாக எச்சரித்துக்கொண்டு இருந்தான் கதிர்.
“அதுக்கு நாம தான் எல்லா இடத்துலையும் காட்டேஜ் கட்டனும்…” என தீபக் முணுமுணுத்தாலும் கதிரின் காதில் எட்டாமல் பார்த்துக்கொண்டான்.
இல்லை என்றால் அதற்கும் சேர்த்து கிழித்து தோரணம் கட்டிவிடுவானே என்ற பயம்.
“இன்னும் அடுத்து எந்தெந்த பஸ் எஃப்.ஸி போகுதுன்னு பார்த்தாச்சா? இல்லை அதையும் நான் தான் சொல்லனுமா?…” என்றான் அடுத்ததாக.
தீபக்கிற்கு கண்ணை சுழற்றியது. பத்து மணி ஆகியும் இப்படி தன்னையும் விடாமல் இவனும் வீட்டிற்கு செல்லாமல் படுத்துகிறானே என்ற கடுப்பில் கதிரின் பேச்சை கவனிக்கவில்லை.
“தீபக், வீட்டுக்கு போகலாமா?…” என்று கதிர் கேட்டதும்,
“போலாமே…” என வேகமாய் பதில் வர,
“இது மட்டும் உன் காதுல விழுந்துருச்சோ?…” என நக்கலாக கதிர் கேட்க தீபக் மாட்டிக்கொண்ட விதமாய் விழித்தான்.
“கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை உனக்கு…” என அதற்கும் சேர்த்தே திட்டியவன்,
“நைட் ஷிப்ட் பையன் வந்துட்டானா?…” என கேட்டபடி தனது இருக்கையில் இருந்து எழுந்துகொண்டான்.
ஆபீஸ் அறையில் இருந்து அத்தனையையும் பூட்டிக்கொண்டு தனது பேக்கையும் மேக்புக்கையும் எடுத்துக்கொண்டவன் முன்னால் ரிசப்ஷன் போல இருக்கும் அறைக்கு வந்தான்.
இன்னும் இரவு வேலைக்கு வரும் பையன் வராமல் இருக்க உடனே தீ பார்வை பார்த்தான் தீபக்கை.
“எனக்குன்னே வந்து சேர்றானுங்க. இவர் வேற இந்த பார்வை பாக்காரே?…” என நொந்துகொள்ள,
“அவன் வர வரைக்கும் நீ அந்த சீட்ல இரு…” என்று சொல்லி பயணிகள் காத்திருக்கும் இருக்கையில் அமர்ந்துகொண்டான் கதிர்.
“போச்சு, இவர் நகரமாட்டாரே? இல்லைன்னா கூட பொண்டாட்டிட்ட கடலை போடலாம். இந்த மனுஷனும் முரட்டு சிங்கிளா இருந்துட்டு என்னையும் படுத்தறார்…” என பல்லை கடித்தபடி முணங்கிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
“சரியான மெஷின், ரோபோ. கொஞ்சமும் பீலிங்க்ஸ் புரியாத மனுஷன். அதான் இன்னும் கல்யாணம் ஆகலை…” என சகட்டுமேனிக்கு வாய் அதன்போக்கில் கதிரை பேசிக்கொண்டிருந்தது.
எதிரே கதிர் இல்லை என்றால் கூட நிம்மதியாக இருந்திருப்பான். ஏற்கனவே அவனிடம் திட்டுவாங்கிவிட்டு இப்போது அவனின் அடுத்த பேச்சு என்னவாக இருக்குமோ என அமர்ந்திருந்தான்.
கதிரவன் அவனின் எண்ணங்களை பற்றிய கவலைகள் எதுவும் இல்லாது அந்த மாத வருமானத்தையும் அதிலிருந்து வங்கிக்கு செலுத்த வேண்டிய வட்டித்தொகையையும் கணக்கிட்டுக்கொண்டு இருந்தான்.
வைத்திருப்பது அகல கால் என்பதால் அதில் பயங்கர கவனமாக இருந்தான் கதிரவன்.
கொஞ்சம் பிசகினாலும் மரியாதை போய்விடும் என்பதனால் அவர்கள் கேட்பதற்குள் குறித்த காலத்திற்குள் இந்த கடனை அடைத்துவிடுவதில் அத்தனை முனைப்பு அவனுக்கு.
கடனை எப்பாடுபட்டாலும் அடைத்துவிடலாம். ஆனால் வாங்கிய கடனுக்கு அவகாசம் கேட்பதை கௌரவக்குறைச்சலாக நினைத்தான்.
அதனால் குறிப்பிட்டிருக்கும் தவணை தேதிக்கு முன்பாகவே செலுத்திவிடுவது அவனின் வழமை.
—————————————-
“என்ன யமுனா அதுக்குள்ளே வந்து படுத்துட்ட? இன்னும் கதிர் வரலையே?…” என்றார் பூங்காவனம்.
“உங்க மகன் ஆடி அசைஞ்சு வருவான். நான் அதுவரைக்கும் முழிச்சிருக்கனுமா? வந்தா வந்துட்டு போகட்டும்…” என கடுப்புடன் போர்வையை மூடிக்கொண்டார் யமுனா.
“ப்ச், இப்போ எதுக்கு இந்த கோவம்?…”
“கோவமா? சும்மா காட்டுற பொண்ணை எல்லாம் இது சொட்டை, அது நொட்டைன்னு கழிச்சு கட்டுறதுலையே தான் இருக்கான். இவனுக்கு பொண்ணு பார்க்கனும்னா நான் தான் உக்கார்ந்து என் கையால செய்யனும்…” என கடுப்பாகிவிட்டார் யமுனா.
அவ்வளவு தான் பூங்காவனம் வாயை மூடியாகிற்று. இனி ஒற்றை வார்த்தை பேசிவிடமுடியாது மகனுக்கு ஆதரவாக. தன்னையும் சேர்த்து தாளித்துவிடுவார்.
“முந்தாநாள் போய் பார்த்த பொண்ணுக்கு என்னங்க குறைச்சல்? இவன் கேட்ட மாதிரி உயரம், கலரு, லட்சணம்னு எல்லாம் இருக்குதுல. முடி குட்டையா விசுவிசுன்னு இருக்காம். இன்னும் நாலஞ்சு வருஷத்துல இதுவும் கொட்டிட்டா என்ன பன்றதுன்றான்…”
“வரும் முன் காப்பதுன்றதை உங்க மகன் கல்யாணத்துல பார்க்கறான். இப்படி இருந்தா இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆகாது இவனுக்கு. நாப்பது வயசானா எல்லாருக்கும் தான் வயசாகும். இவன் என்னமோ பேசறது எல்லாம் ஒன்னும் சரிப்பட்டு வராது…”
யமுனா சொல்ல பூங்காவனமும் ஆமோதிப்பாய் தலையாட்டினார். அவர் சொல்லியதை போலத்தானே மகனும் அழிசாட்டியம் செய்கிறான்.
“எனக்கு மானமே போச்சு. இந்த காரணத்தை சொல்லியா பொண்ணை வேண்டாம்னு சொல்ல? மூஞ்சில முழுகிருவாங்க. இவனையும் சமாளிக்க முடியாம பொண்ணு வீட்டுக்கும் பதில் சொல்ல முடியாம எனக்கு பிபி ஏறினது தான் மிச்சம்…” என்று சொல்லும் பொழுதே வெளியே பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்க,
“அவன் வந்துட்டான்…” என்றார் பூங்காவனம்.
“போய் தாலாட்டி சோறு ஊட்டுங்க. நான் எதுவும் வந்து எடுத்துவைக்க மாட்டேன்…” என படுத்துவிட்டார்.
“ப்ச், என்ன நீ?…” என சொல்லியபடி தானே எழுந்து சென்றார்.
யமுனாவும் கதவை திறந்து வெளியே என்ன நடக்கிறது என பார்த்தபடி நின்றார் கதவருகே.
பூங்காவனம் மகன் வந்ததும் அடுக்களைக்கு சென்று எதையோ உருட்ட கடுப்புடன் விறுவிறுவென அங்கே சென்றார்.
“நகருங்க, பாத்திரத்தை போட்டு உருட்டிட்டு ஊரையே எழுப்பிடறது…” என தானே எல்லாம் எடுத்து கொண்டுவந்து டயனிங்கில் வைத்தார்.
அதற்குள் கதிர் உடை மாற்றி வந்துவிட முகத்தை திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தார் யமுனா.
தாயின் கோபம் புரிந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் கையோடு கொண்டுவந்திருந்த மேக்புக்கில் கணக்குவழக்கை மீண்டும் ஒருமுறை பார்த்தபடி சாப்பிட்டு முடித்தவன்,
“தர்ஷன் எங்க?…” என்றான்.
“அவனுக்கு இன்னைக்கு நைட்ஷிப்ட். ஆபீஸ் போயாச்சு…” என பூங்காவனம் சொல்லவும் தலையாட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டான் கதிர்.
———————————————
“தாமரை முடிவா நீ என்னதான்ம்மா சொல்ற?…” சோமநாதன் கேட்க,
“அப்பா ப்ளீஸ், ஒருதடவை தான் சொல்ல முடியும். திரும்ப திரும்ப வற்புறுத்தாதீங்க. நான் தான் செஞ்சுக்கோங்கன்னு சொல்லிட்டேனே? அப்பறமும் ஏன் திரும்ப திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க?…” என்று எரிந்துவிழுந்தாள் தகப்பனிடம்.
“உன்னை பெத்ததுக்கு இன்னும் என்னலாம் அனுபவிக்க போறோமோ?…” என்றவரின் பேச்சில் சரளா மௌனமாக இருக்க,
“அப்பா அக்காவை விடுங்களேன். அவ தான் நேத்தே சொல்லிட்டாளே? அப்பறமும் திரும்ப திரும்ப பேசிட்டே இருக்கீங்க?…” என்ற நிவேதாவை முறைப்புடன் பார்த்தார் அவர்.
“நிவி பேசாம இரு. அப்பா கோவமா இருக்கார்…” என சரளா இளைய மகளை அதட்டி அடக்கினார்.
“சரளா, நம்ம தலையெழுத்து இப்படி வந்து வாச்சிருக்குதுங்க…” என்று எரிச்சலுடன் அங்கிருந்து சென்றார் அவர்.
“ம்மா என்னைக்கு பொண்ணு பார்க்க வராங்க?…” என தாயிடம் திரும்பினாள் தாமரை.
“அடுத்த வாரம் புதன் கிழமை…”
“ஒஹ் சரி நான் கிளம்பறேன்…” என சொல்லிவிட்டு கிளம்பிவிட அதற்கும் சரளாவிடம் தான் எகிறிக்கொண்டு இருந்தார் அவர்.