“அதான் துணைக்கு என்னை கூப்பிடறீங்களோ? வேற வேலை இல்லையா?…”
“உனக்கும் எக்ஸர்சைஸ் பண்ணின மாதிரி இருக்கும். வாக்கிங் போறது உடம்புக்கு நல்லது யமுனா…” என்று விலாவரியாக அவர் விளக்கம் சொல்ல இரும்பு தாளிப்பு கரண்டியை பிடித்தபடி கணவனை முறைத்தார் அவர்.
“இவ்வளவு நாளா தெரியலையாக்கும் நல்லதுன்னு…”
“இவ்வளோ நாள் உனக்கு வீட்டுல வேலை…”
“இன்னைக்கு இல்லையாக்கும்? போயிருங்க அங்கிட்டு…” என்று ஒவ்வொன்றாய் அடுக்கி முடித்தார்.
“அதான் நாள் முச்சூடும் இங்கிட்டும் அங்கிட்டும் நடந்துக்கிட்டே இருக்கேனே? அப்பறம் என்ன தனியா நடக்க?…” என்று காலை பிடித்தபடி மூங்கில் சேரில் அமர்ந்தார் யமுனா.
“ஹ்ம்ம்…” என்ற பெருமூச்சுடன் இனி யமுனா நகர போவதில்லை என்று டிவியை போட்டுவிட்டு தானும் அதில் ஆழ்ந்துவிட்டார்.
பூங்காவனம் யமுனா தம்பதிகளுக்கு இரு ஆண் பிள்ளைகள். பூங்காவனம் தனியார் பேருந்தில் ட்ரைவராக வேலையில் இருந்து மக்களின் தலையெடுப்பிற்கு பின்னர் ஓய்வில் இருப்பவர்.
மூத்தவன் சொந்த பிஸ்னஸ், இரண்டாமவன் மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் இருக்க நிம்மதியான வாழ்க்கை.
சமீபமாக அவர்கள் குடும்பத்தில் திருமணம் பற்றிய பேச்சு எடுத்ததில் இருந்தே அவ்வப்போது சச்சரவுகளும், வாக்குவாதங்களும்.
அதற்கு காரணமானவன் ஓரிரு வார்த்தைகளோடு அமைதியாகிவிட யமுனா கணவனையும், இரண்டாம் மகனையும் போட்டு படுத்திவிடுவார்.
“உங்க சின்ன மகன் நல்லா கலகலன்னு பேசறான்…” என்று எப்போதும் மூத்தவனை விட்டு இரண்டாம் மகனை மட்டும் மற்றவர்கள் உயர்த்தி பேசும் பொழுது பூங்காவனத்திற்கு பொறுக்காது.
“பெரியவன் அமைதியான சுபாவம். அப்படியே வளர்ந்துட்டான்…” என்று தாங்கிக்கொண்டு பேச யமுனாவிற்கு தான் பற்றிக்கொண்டு வரும்.
பேசுபவர்கள் முன்னிலையில் எதையும் சொல்லிக்கொள்ளாமல் சிரித்து மழுப்பி விடுபவர் தனியே கணவனை போட்டு தாளித்துவிடுவார்.
“அவன் அமைதியா? மனசாட்சி வேண்டாமா உங்களுக்கு? அதட்டாம அழுத்தமா பிள்ளைய அப்படியே வளர்த்துட்டு அமைதியாம் அமைதி…” என புலம்பி தீர்த்துவிடுவார்.
‘நீ என்ன பண்ணுனியாம்?’ என்றெல்லாம் கேட்க முடியாது அவரால். இங்கே தந்தையின் செல்லம் அதிகம். அத்தனை கட்டுப்பாடுகள் எல்லாம் விதிக்கமாட்டார் பூங்காவானம்.
யமுனா கண்டித்தாலும் மகன்களை காப்பாற்றிவிடுவார். அது அவரின் தலையாய கடமை போல ஒரு சொல் சொல்லிவிட கூடாது மகன்களை. அப்படி பார்த்துக்கொள்வார்.
மனைவியிடம் பிள்ளைகளுக்கும் சேர்த்தே வாங்கிக்கட்டிக்கொள்வது மட்டும் பூங்காவனம் தான்.
யமுனா பேச ஆரம்பித்துவிட்டால் பூங்காவனம் அமைதியோ அமைதி, அமைதிக்கெல்லாம் அமைதி.
அது இன்னுமே வெறுப்பெற்றுவதை போல இருக்கும் யமுனாவிற்கு. அப்படி ஒரு முகபாவம் பூங்காவனத்தினுடையது.
இன்றும் பொழுது போகாமல் இடையிடையே மனைவியிடம் வாங்கிக்கட்டிக்கொண்டு தான் இருந்தார் மனிதன்.
“மணி எட்டாகிருச்சு. மகனுக்கு போனை போட்டு எப்ப வரான்னு கேளுங்க…” யமுனா சொல்ல போனை போட்டு பேசியவருக்கு மகனிடம் இருந்து ஒற்றை பதில் தான்.
போன் போட்ட வேகத்தில் இரண்டு வார்த்தைகளில் கட்டாகியும் விட திருதிருவென விழித்தார்.
“என்ன உங்க மகன் வச்சுட்டானா?…” என அவர் கேட்ட விதமே கலவரத்தை உண்டுபண்ண சிரித்து சமாளித்தவர்,
“இதென்ன புதுசா யமுனா? அதெல்லாம் வர நேரத்துல வந்துருவான். வேலை இருக்கும்ல?…” என்று மகனிற்கு பரிந்து பேச,
“உங்களை எல்லாம்…” என்று சொல்லி எழுந்து தங்களுக்கு இரவு உணவை எடுத்து வைத்தார்.
“தர்ஷன் கொண்டு போய்ட்டானா?…” என இளையமகனை கேட்க,
“நல்லா கொண்டுபோனான். அங்க ஆபீஸ்லையே பார்த்துக்கறானாம். பொங்கல் போட்டிருக்கீங்க. நைட்ல இதை யார் சாப்பிடுவான்னு சொல்லிட்டு போய்ட்டான்…” என கோபமாய் எடுத்துவைத்துக்கொண்டு இருந்தார்.
அவரின் கோபத்திற்கும் காரணமிருந்தது. மூத்தவனுக்கு இருபத்தி ஒன்பது வயதாகிறது.
இன்னும் இரு மாதத்தில் முப்பதை தொட்டுவிட இருக்க இப்போதே பெண் கிடைப்பது குதிரைகொம்பாக இருக்க முப்பதை தொட்டால் அதிலும் மோசம் என்று பயந்துகொண்டு இருந்தார்.
“சும்மாவே இது சொத்தை அது சொத்தைன்னு மறுத்து ஆட்டுன தலையை அசைப்பேனான்னு இருக்கான். முப்பது வயசுன்னா பொண்ணு குடுக்கவும்ல யோசிப்பாங்க…” என தன் தங்கையிடம் போனில் புலம்பிக்கொண்டிருந்ததை கேட்டிருந்தார் பூங்காவனம்.
“கதிருக்கு தனியா எடுத்து வச்சுட்டியா யமுனா?…” என கேட்க,
“ஹ்ம்ம், எல்லாம் வச்சாச்சு. நீங்க முதல்ல தொணதொணக்காம சாப்பிடுங்க…”
“சூடா தான இருக்கும்? ஆறிட்டா அரை சாப்பாடு தான் இறங்கும் அவனுக்கு…” என மகனை அறிந்தவராக அவர் சொல்ல ஆரம்பித்துவிட்டார் யமுனா.
“ஏன் சொல்லமாட்டீங்க? அவனுக்கு ஒரு பொண்ணை பாத்து கட்டிவச்சுட்டு இந்த வியாக்கியானம் எல்லாம் அவக்கிட்ட பேசுங்க. அவன் அர்த்த ராத்திரில வருவான், அந்நேரம் நான் அடுப்பெரிக்கிறேன்…”
“இல்ல அவன் சரியா சாப்பிடாம படுத்துருவானேன்னு தான்…”
“அம்புட்டு அக்கறை இருந்தா நீங்களே பொங்கி தட்டுங்க. என்னை ஆளை விடுங்க. நானே ஆத்தமாட்டாம கோளாறு உடம்பை வச்சு என்னவோ ஒப்பேத்திட்டு இருக்கேன். சும்மா உசுப்பி விட்டீங்க…”
கையில் கத்தியில்லாத குறையாக பூங்காவனத்தை கண் கொண்டே அவர் மிரட்ட பொங்கல் சட்னி சாம்பார் இல்லாமலே அவரின் வாயை அடைத்தது.
‘பேசினாத்தான? இனி வாய திறப்பேன்?’ என்றபடி பொங்கலை அள்ளி திணித்தார்.
அவரின் கோபம் நியாயமாக இருந்தாலும் மகனையும் கேட்கமுடியவில்லை அவரால். அவனின் ஆசையை மறுக்கமுடியவில்லை. இப்படி மகனுக்கும், மனைவிக்கும் இடையில் கிடந்து அல்லாடிக்கொண்டிருக்க,
“பேசாம ரெண்டுபேரையும் இந்த வீட்டுல விட்டு நாம தனிக்குடித்தனம் போய்ருவோம்ப்பா….” என தர்ஷன் விளையாட்டாய்ஒருநாள் சொல்லிவிட்டான்.
“அத தான்டா நானும் யோசிக்கிறேன் தர்ஷு…” என பாவனை செய்ய,
“ஆடி அடங்குன காலத்துல கிழவனுக்கு தனிக்குடித்தனம் ஒண்ணுதான் குறை. ஏன் மகனோட போறது? பேசாம உங்களுக்கு ஒரு பொண்ணை பார்த்துடட்டா?…” என்று அதற்கு யமுனா வைத்து செய்ததில் இருந்து வாயை திறப்பதில்லை.
இளையவன் ஏதேனும் துடுக்காக பேசினால் கூட சைகை தான். மனைவியாக இருந்தாலும் மனம் நோக பேசிவிடமாட்டார். பெயரை போலவே பூ போன்ற மனது கொண்டவர் பூங்காவனம்.
மகனை பற்றி புலம்பிக்கொண்டே சாப்பிட்டு முடித்து அந்த பாத்திரங்களை அள்ளி போட்டு தண்ணீர் தெளித்து வைத்தவர் நேரத்தை பார்த்துவிட்டு பெருமூச்சுடன் அமர்ந்தார் டிவி பார்க்க.
——————————————————
ஜாய் ட்ரிப் & வ்யூ ஏஜென்சி அடுத்த பேட்ஜ் ஆட்களுக்கு வண்டியை அனுப்புவதற்காக தயாராக இருந்தது.
“தீபக் நாளை மறுநாள் திருப்பதி போற டூரிஸ்ட் ஆட்களோட பிக்கப் பாயிண்ட்ஸ் டீடெய்ல்ஸ் இந்த பேப்பர்ல இருக்குது. எட்டாம் நம்பர் பஸ் சர்வீஸ் முடிஞ்சு வந்திருச்சு தானே?…” என்றான் செங்கதிரவன்.
“பிராப்பரா செக் பண்ணனும். எந்த பால்ட்டும் இருக்க கூடாது. ஏற்கனவே பெர்த் கவர் சரியில்லை, மாத்தனும்ன்னு கம்ப்ளைன்ட். இதை கூட பார்க்காம என்ன பன்றாங்கன்னு? இந்த தடவை ட்ரிப் ஸ்மூத்தா போய்ட்டு வரனும்…” என்றவன்,
“அங்க ரூம் சர்வீஸ்ல பேசியாச்சா? எல்லா ரூமும் க்ளியரா க்ளீனா இருக்கனும். ஸ்ட்ரிக்ட்டா சொல்லிரு தீபக்…” என கடுமையாக எச்சரித்துக்கொண்டு இருந்தான் கதிர்.
“அதுக்கு நாம தான் எல்லா இடத்துலையும் காட்டேஜ் கட்டனும்…” என தீபக் முணுமுணுத்தாலும் கதிரின் காதில் எட்டாமல் பார்த்துக்கொண்டான்.
இல்லை என்றால் அதற்கும் சேர்த்து கிழித்து தோரணம் கட்டிவிடுவானே என்ற பயம்.
“நாலாம் நம்பர் பஸ், ஏழாம் நம்பர் பஸ் ஓகே. சீரடிக்கு அனுப்பின பஸ் எப்போ இங்கே ரீச் ஆகுது? அதை பேசிட்டியா நீ? அடுத்து எந்தெந்த பஸ் எஃப்.ஸி போகுதுன்னு பார்த்தாச்சா? இல்லை அதையும் நான் தான் சொல்லனுமா?…” என்றான் அடுத்தடுத்ததாக.
தீபக்கிற்கு கண்ணை சுழற்றியது. பத்து மணி ஆகியும் இப்படி தன்னையும் விடாமல் இவனும் வீட்டிற்கு செல்லாமல் படுத்துகிறானே என்ற கடுப்பில் கதிரின் பேச்சை கவனிக்கவில்லை.
அவனின் கவனம் இங்கே இல்லை என்று கவனித்த செங்கதிருக்கு கோபம் வந்தாலும் வழக்கம் போல அதை முகத்தில் காட்டாமல்,
“தீபக், வீட்டுக்கு போகலாமா?…” என்று கதிர் கேட்டதும்,
“போலாமே…” என வேகமாய் பதில் வந்தது அவனிடத்தில்.
“இது மட்டும் உன் காதுல விழுந்துருச்சோ?…” என நக்கலாக கதிர் கேட்க தீபக் மாட்டிக்கொண்ட விதமாய் விழித்தான்.
“கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை உனக்கு…” என அதற்கும் சேர்த்தே திட்டியவன்,
“நைட் ஷிப்ட் பையன் வந்துட்டானா?…” என கேட்டபடி தனது இருக்கையில் இருந்து எழுந்துகொண்டான்.
ஆபீஸ் அறையில் இருந்த அத்தனையையும் பூட்டிக்கொண்டு அந்த அறையையும் பூட்டிவிட்டு தனது பேக்கையும், மேக்புக்கையும் கையில் எடுத்துக்கொண்டவன் முன்னால் ரிசப்ஷன் போல இருக்கும் அறைக்கு வந்தான்.
இன்னும் இரவு வேலைக்கு வரும் பையன் வராமல் இருக்க உடனே தீ பார்வை பார்த்தான் தீபக்கை.
“எனக்குன்னே வந்து சேர்றானுங்க. இவர் வேற இந்த பார்வை பாக்காரே?…” என தீபக் நொந்துகொள்ள,
“அவன் வர வரைக்கும் நீ அந்த சீட்ல இரு…” என்று சொல்லி பயணிகள் காத்திருக்கும் இருக்கையில் அமர்ந்துகொண்டான் கதிர்.
அந்த பையனை வேலைக்கு வைத்ததே தீபக் தான். தெரிந்தவன், வேலை வேண்டும் என்று இருக்க தீபக் தான் கதிரிடம் கேட்டு சேர்த்துவிட்டது.
“இன்னைக்கு அவன் வரலை இங்க விடிய விடிய நான் தான் உட்காரனும். அப்படி மட்டும் இருந்தேன், நான் தான் இந்த மனுஷனுக்கு அல்வா. அப்படியே வாய்க்குள்ள போட்டு மென்னு துப்பிருவாரு…” என நொந்துகொண்டு அமர்ந்திருந்தான்.
அமர்ந்த இருக்கையில் இங்குமங்குமாக அவன் நெளிந்துகொண்டிருக்க கதிர் அதை கண்டுகொண்டாலும் அசரவில்லை.
“போச்சு, இவர் நகரமாட்டாரே? இல்லைன்னா கூட பொண்டாட்டிட்ட கடலை போடலாம். இந்த மனுஷனும் முரட்டு சிங்கிளா இருந்துட்டு என்னையும் படுத்தறார்…” என பல்லை கடித்தபடி முணங்கிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
“சரியான மெஷின், ரோபோ. கொஞ்சமும் பீலிங்க்ஸ் புரியாத மனுஷன். அதான் இன்னும் கல்யாணம் கூட ஆகலை…” என சகட்டுமேனிக்கு தீபக்கின் வாய் அதன்போக்கில் கதிரை பேசிக்கொண்டிருந்தது.
எதிரே கதிர் இல்லை என்றால் கூட நிம்மதியாக இருந்திருப்பான். ஏற்கனவே அவனிடம் திட்டுவாங்கிவிட்டு இப்போது அவனின் அடுத்த பேச்சு என்னவாக இருக்குமோ என அமர்ந்திருந்தான்.
கதிரவன் அவனின் எண்ணங்களை பற்றிய கவலைகள் எதுவும் இல்லாது அந்த மாத வருமானத்தையும் அதிலிருந்து வங்கிக்கு செலுத்த வேண்டிய வட்டித்தொகையையும் கணக்கிட்டுக்கொண்டு இருந்தான்.
வைத்திருப்பது அகல கால் என்பதால் அதில் பயங்கர கவனமாக இருந்தான் கதிரவன்.
கொஞ்சம் பிசகினாலும் மரியாதை போய்விடும் என்பதனால் அவர்கள் கேட்பதற்குள் குறித்த காலத்திற்குள் இந்த கடனை அடைத்துவிடுவதில் அத்தனை முனைப்பு அவனுக்கு.
கடனை எப்பாடுபட்டாவது அடைத்துவிடலாம். நிச்சயம் அடைத்துவிடுவான். ஆனால் வாங்கிய கடனுக்கு அவகாசம் கேட்பதை கௌரவக்குறைச்சலாக நினைத்தான்.
அதனால் குறிப்பிட்டிருக்கும் தவணை தேதிக்கு முன்பாகவே செலுத்திவிடுவது அவனின் வழமை.
இப்போதும் அந்த கணக்குவழக்கில் இருந்தவன் கடையின் வாசலில் பைக் வந்து நிறுத்தும் சப்தம் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தான்.
“அண்ணே…” என தயங்கியபடி வந்தான் அறிவுமணி.
“டைம் என்ன அறிவு?…” என சற்று கடுமையுடன் கதிர் கேட்டதும் தீபக்கை கெஞ்சலாய் பார்த்தான் அறிவு.
அவனே ஏற்கனவே வெட்டுவதை போல அறிவை கொலைவெறியுடன் முறைத்திருக்க ஐயோ என்று பார்வையை திருப்பிக்கொண்டான்.
“உன்கிட்ட நான் கேட்டேன். நீ என்ன அங்க பார்க்கற?…” என்ற கதிர்,
“இல்லண்ணே, எனக்கு தெரியாது…” என்று பதறி வந்து சொல்லிய தீபக்,
“என்னை ஏன்டா பார்க்கற? அவர்க்கிட்ட பதில் சொல்லு…” என்று அறிவை திட்டினான் தீபக்.
இல்லை என்றால் அறிவுமணியை வேலையை விட்டு அனுப்பிவிட்டு தன்னை இரவு வேலைக்கு அமர்த்தினாலும் அமர்த்திவிடுவான் கதிர்.
செய்யக்கூடியவனாகிற்றே. அதனால் அத்தனை பயம் தீபக்கிற்கு. கதிரை என்ன சொல்வானோ என்று இருவரும் பார்த்திருந்தனர்.
“வர முடியலைன்னாலோ, இல்லை லேட் ஆனாலோ கால் பண்ணி சொல்ல முடியாதா உனக்கு? இப்படி பொறுப்பான வேலையில இருந்துட்டு பொறுப்பில்லாம நடந்துக்கிட்டா உன்னை நம்பி எப்படி இதை விட்டுட்டு போக?…”
தீபக்கிற்கு திக்கென்று ஆனது அவன் சொல்லியதும். அவன் நினைத்ததை போலவே கதிர் அதை பேச அறிவுமணியை முறைத்தான்.
‘போய் வெளில திரும்ப அலைஞ்சி திரிஞ்சு வேலையை தேடினா தான் உனக்கு புத்தி வரும்’ என்னும் விதமாய் பார்த்துவிட்டு கதிர் பக்கம் திரும்பினான்.
“தீபக்…” கதிர் அவனை அழைத்ததும்,
“சொல்லுங்கண்ணே…” என முன்னால் வந்தான்.
“நாளைக்கு வேலைக்கு இன்னொரு ஆள் வேணும்னு நம்ம முத்துசாமி அண்ணன்ட்ட சொல்லிவை. நல்ல தரமான ஆளா இருக்கனும்…” என்ற கதிர்,
“இந்த மாதிரி பொறுப்பில்லாத ஆளா இருக்க கூடாது…” என்று சொல்லும் பொழுதே,
“அண்ணே அண்ணே. இனிமே இப்படி நடக்காதுண்ணே. வீட்டுக்கு சொந்தக்காரங்க விருந்தாடி வந்துட்டாங்க. அத கவனிச்சுட்டு வர இவ்வளோ நேரமாகிடுச்சுண்ணே. இந்த ஒருவாட்டிண்ணே…” என அறிவுமணி கெஞ்ச கதிர் எழுந்துகொண்டான்.
“இங்க பாரு அறிவு, நம்ம தொழில்ல வாக்கு சுத்தமிருக்கனும். உன்னை நம்பி தான் பொறுப்பை ஒப்படைச்சுட்டு போறேன். அதுக்கு நீ எப்படி இருக்கனும் இங்க?…” என்றான் அறிவிடம்.
“தப்புதாண்ணே. போன் போட மறந்துட்டேன். இந்தா போயிறலாம்ன்னு…” என்று மன்னிப்பை இறைஞ்ச,
“ஒரு விஷயம் கத்துக்கோ. எந்த இடத்துலையும் நாம மன்னிப்பு கேட்க கூடாது. அதுக்கு கேட்கற மாதிரி நடந்துக்க கூடாது. இனி நீ என்கிட்டே மன்னிப்பு கேட்காம இருக்க எப்படி இருக்கனுமோ அதை நீ தான் முடிவு பண்ணனும்…”
“கண்டிப்பாண்ணே. அதுக்குன்னு இன்னொருத்தரை போடறது எல்லாம்…” என்று அறிவுக்கு கலக்கமாக இருந்தது.
“டேய் இன்னொரு ஆள்ன்னா நீ இல்லைன்னு அர்த்தமா? அவன் இங்க எடுபிடிக்கு தேவை. அதுக்கு தான். போய் வேலையை பாரு…” என்று சொல்லியவன் தனது பொருட்களை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தான்.
தீபக்கிற்கு ஆச்சர்யம். ‘இவனை புரிஞ்சுக்கவே முடியலையே?’ என கதிரையே பார்த்தபடி நின்றான்.
“என்ன தீபக், இன்னைக்கு அறிவுக்கு துணையா நீ இருக்கியா?…” என்று நக்கலாக கேட்டதும்,
“ஐயோ அண்ணே இந்தா கிளம்பிட்டேன்….” என அடித்துப்பிடித்து பைக் சாவியை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான்.
பின் அறிவிடம் எந்த பஸ் எப்போ, எங்கே என்று எல்லாம் விவரமாக சொல்லிய பின்னரே அங்கிருந்து கிளம்பினான்.
————————————————–
மகன் இன்னும் வரலையே என்று வாசலுக்கும் வீட்டிற்குள்ளுமாக பூங்காவனம் நடந்துகொண்டிருக்க சற்று நேரத்தில் எல்லாம் யமுனாவின் தலை தெரியாமல் போனதும் கதவை சாற்றிவிட்டு வந்தார் உள்ளே.
உள்ளே வந்து பார்க்க யமுனா நன்றாக இழுத்து போர்த்தி உறங்க முற்பட்டுக்கொண்டு இருந்தார்.
“என்ன யமுனா அதுக்குள்ளே வந்து படுத்துட்ட? இன்னும் கதிர் வரலையே?…” என்றார் பூங்காவனம்.
“உங்க மகன் ஆடி அசைஞ்சு வருவான். நான் அதுவரைக்கும் முழிச்சிருக்கனுமா? வந்தா வந்துட்டு போகட்டும்…” என கடுப்புடன் போர்வையை மூடிக்கொண்டார் யமுனா.
“ப்ச், இப்போ எதுக்கு இந்த கோவம்?…” என அருகே அமர்ந்தவர்,
“அவனுக்குன்னு என்ன புதுசாவா பிறக்க போறா நம்ம மருமக. நம்ம கண்ணுல பட தாமதம். அப்படி நினைச்சுக்கோ. நீயே நம்ம பிள்ளைட்ட முகத்தை காமிக்கலாமா? என்ன கோவம் இது?…” என்றார் பூங்காவனம்.
“கோவமா? சும்மா காட்டுற பொண்ணை எல்லாம் இது சொட்டை, அது நொட்டைன்னு கழிச்சு கட்டுறதுலையே தான் இருக்கான். இவனுக்கு பொண்ணு பார்க்கனும்னா நான் தான் உக்கார்ந்து என் கையால செய்யனும்…” என கடுப்பாகிவிட்டார் யமுனா.
அவ்வளவு தான் பூங்காவனம் வாயை மூடியாகிற்று. இனி ஒற்றை வார்த்தை பேசிவிடமுடியாது மகனுக்கு ஆதரவாக. தன்னையும் சேர்த்து தாளித்துவிடுவார்.
“முந்தாநாள் போய் பார்த்த பொண்ணுக்கு என்னங்க குறைச்சல்? இவன் கேட்ட மாதிரி உயரம், கலரு, லட்சணம்னு எல்லாம் இருக்குதுல. முடி குட்டையா விசுவிசுன்னு இருக்காம். இன்னும் நாலஞ்சு வருஷத்துல இதுவும் கொட்டிட்டா என்ன பன்றதுன்றான்…”
“வரும் முன் காப்பதுன்றதை உங்க மகன் கல்யாணத்துல பார்க்கறான். இப்படி இருந்தா இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆகாது இவனுக்கு. நாப்பது வயசானா எல்லாருக்கும் தான் வயசாகும். இவன் என்னமோ பேசறது எல்லாம் நமக்கு ஒன்னும் சரிப்பட்டு வராது…”
யமுனா சொல்ல பூங்காவனமும் ஆமோதிப்பாய் தலையாட்டினார். அவர் சொல்லியதை போலத்தானே மகனும் அழிசாட்டியம் செய்கிறான். ஆனாலும் விட்டுக்கொடுக்க மனதில்லை.
“எனக்கு மானமே போச்சு. இந்த காரணத்தை சொல்லியா பொண்ணை வேண்டாம்னு சொல்ல? மூஞ்சில முழுகிருவாங்க. இவனையும் சமாளிக்க முடியாம பொண்ணு வீட்டுக்கும் பதில் சொல்ல முடியாம எனக்கு பிபி ஏறினது தான் மிச்சம்…” என்று சொல்லும் பொழுதே வெளியே பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்க,
“அவன் வந்துட்டான்…” என்றார் பூங்காவனம்.
“போய் தாலாட்டி சோறு ஊட்டுங்க. நான் எதுவும் வந்து எடுத்துவைக்க மாட்டேன்…” என படுத்துவிட்டார்.
“ப்ச், என்ன நீ?…” என சொல்லியபடி தானே எழுந்து சென்றார்.
யமுனாவும் கதவை திறந்து வெளியே என்ன நடக்கிறது என பார்த்தபடி நின்றார் கதவருகே.
பூங்காவனம் மகன் வந்ததும் அடுக்களைக்கு சென்று எதையோ உருட்ட கடுப்புடன் விறுவிறுவென அங்கே சென்றார்.
“நகருங்க, பாத்திரத்தை போட்டு உருட்டிட்டு ஊரையே எழுப்பிடறது…” என தானே எல்லாம் எடுத்து கொண்டுவந்து டயனிங்கில் வைத்தார்.
அதற்குள் கதிர் உடை மாற்றி வந்துவிட முகத்தை திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தார் யமுனா.
தாயின் கோபம் புரிந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் கையோடு கொண்டுவந்திருந்த மேக்புக்கில் கணக்குவழக்கை மீண்டும் ஒருமுறை பார்த்தபடி சாப்பிட்டு முடித்தவன்,
“தர்ஷன் எங்க?…” என்றான்.
“அவனுக்கு இன்னைக்கு நைட்ஷிப்ட். ஆபீஸ் போயாச்சு…” என பூங்காவனம் சொல்லவும் தலையாட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டான் கதிர்.
“நான் ஒருத்தி இங்க குத்துக்கல்லாட்டம் நிக்கறேன். இவனுக்கு எம்புட்டு ஏத்தம்? என்னை இம்மிக்கும் மதிச்சானா?…” என்று அதற்கும் இருந்து புலம்ப ஆரம்பிக்க,
“ப்ச், அதை விடு. இன்னைக்கு மத்தியானம் ஒரு பொண்ணோட வரன் வந்துச்சே. அதை பத்தி ஒண்ணுமே சொல்லலை நீ?…” என பேச்சை திசை மாற்றினார்.