ஆசைகள் – 10
வந்தவர்கள் விருந்து சாப்பிட்டு முடிந்து தேதிகள் குறிக்கப்பட்டு என பரபரவென்று நடந்துவிட்டது அன்றைய மாப்பிள்ளை வீடு பார்க்கும் வைபவம்.
தாமரையின் தாய்மாமனுக்கு அத்தனை நிறைவு. அவரின் மனைவிக்கு யமுனாவையும் அந்த குடும்பத்தையும் பிடித்துவிட்டது.
வங்கியில் மேனேஜராக இருப்பவர்கள். தொழில்துறை பற்றி அறிந்திருந்தவர். கதிர் உழைப்பு, அந்த ட்ராவல்ஸின் ஆரம்பத்தில் இருந்து தற்போதைய வளர்ச்சி வரை ஓரளவு கேள்விப்பட்டிருக்கிறார் தான்.
இப்போது தாமரைக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்றதும் அவர் பங்கிற்கு அவரும் கதிர், அவனின் குடும்பம் என அத்தனையையும் விசாரித்து பரிபூரண சம்மதம் சொல்லியிருந்தவருக்கு இப்போது இன்னுமே நிறைவு.
மதிவாணன் அந்த பேங்கில் அக்கவுன்ட் வைத்திருந்ததால் இப்போது இன்னும் மரியாதையுடன் தாமரை வீட்டினரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
ஜோஸியர் வந்து சென்ற பின்னர் அவர்கள் பேசிக்கொண்டிருக்க தாமரை தான் அனுப்பிய மெசேஜை பார்த்துவிட்டாளா என எடுத்து பார்த்தான் கதிர்.
இன்னும் பார்த்திருக்கவில்லை. அதற்கான அறிகுறி எதுவும் இன்றி அவளின் லாஸ்ட் ஸீன் தான் அனுப்பவதற்கு அரைமணி நேரம் முன்னிலே நின்றிருந்தது.
“என்னண்ணா, கிளம்பலை?…” என்றான் தர்ஷன்.
“ஹ்ம்ம், இப்ப கிளம்பனும்…” என்ற கதிர் சொல்லும் பொழுதே மதிவாணனும் வாசுகியும் கிளம்பி நின்றார்கள்.
யமுனா எடுத்து தந்த உணவை கூட மறுத்துவிட்டு கிளம்பிவிட்டனர். யமுனாவை ஒருமுறை சொன்னதோடு சரி. அமைதியாகிவிட்டார்.
பின் சோமநாதன் கதிர் கிளம்பும் முன் அவனிடத்தில் பேசிவிட வேண்டும் என்று வந்தார்.
“மாப்பிள்ளை ஒரு விஷயம்…” அவர் குரலை தழைத்து பேச தன்னிடம் தனியே எதுவும் சொல்ல கேட்க விரும்பிகிறாரோ என நினைத்தான்.
“தனியா பேசனுமா மாமா?…” என்று கேட்க,
“இல்லை, இல்லை. பரவாயில்லை. இங்கயே பேசலாம்…” என்றவர்,
“இன்னைக்கு ட்ரிப்க்கு தாமரை ஏற்பாடு செஞ்சிருந்தது…”
“ஹ்ம்ம், ஆமாம்…”
“இல்லை நீங்க தப்பா நினைக்கலைன்னா ஒன்னு சொல்லட்டா?…”
“தாராளமா, ஏன் தாமரை நிவேதா ரெண்டுபேரும் சேர்ந்து வராங்களா? பெர்த் பார்த்து பண்ணிக்கலாம் மாமா…” என்றான் அவர் அதற்கு தான் தயங்குகிறாரோ என்று.
“இல்லைங்க மாப்பிள்ளை. இப்ப அங்க எல்லாம் போக முடியாது. அடுத்த மாசம் கல்யாணம் முடியட்டும். அப்போ மாத்தி போட்டுக்க முடியும்ங்களா?…” என்றார்.
கதிருக்கும் தர்ஷனுக்கும் சிரிப்பு வர தர்ஷன் தன் அண்ணனிடம் கேட்டேவிட்டான் மெல்லிய குரலில் முணுமுணுப்பாக.
“அண்ணா நீ ஹனிமூன் அண்ணியோட போக போறதில்லை உன் மாமனாரோட தான் போவ போல? என்ஜாய்டா….” என்று கிண்டல் பேச,
“உதை வாங்குவ…” என்று அவனின் வயிற்றில் லேசாய் தட்டியவன் சோமநாதனை பார்த்து சிரித்தான்.
“தம்பி என்னமோ சொல்றாங்க…” என அவரும் வெள்ளந்தியாய் சிரித்துக்கொண்டே கேட்க,
“உங்க பெர்த்தை அவன் ப்ரெண்ட்ஸ் ரெண்டுபேருக்கு தரமுடியுமான்னு கேட்டான். அதான்…”
“ஓஹ், சரிங்க…” என்றவர் அவனின் பதிலை எதிர்பார்த்து முகத்தில் பார்வையை வைத்திருக்க,
“ஒன்னும் பிரச்சனை இல்லை மாமா. உங்களோடத்தை ரீ-ஷெட்யூல் பண்ணிக்கலாம். நீங்க எப்போ ப்ரீன்னு சொல்லுங்க. அந்த டேட்ல மாத்தி குடுத்திடறேன்…” என சொல்லவும் அவருக்கு நிம்மதியானது.
“நீங்க தப்பா நினைக்கலையே?…” என்றார் அவனின் கையை பிடித்து.
“இல்லை. இதுல என்ன இருக்கு நினைக்க?…” என்றவனின் புன்னகையில் சந்தோஷமாகிவிட்டது சோமநாதனுக்கு.
அதன் பின் மீண்டும் வழக்கம் போல பொது செலவில் திருமணம் என்பதை சொல்லி, மண்டபம் பார்த்துவிட்டதையும், இதர செலவுகளை கடைசியாக பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு பண்ணிக்கொண்டார்கள்.
ட்ராவல்ஸ் எல்லாம் தங்களிடமே எடுத்துக்கொள்ளலாம் என்றும் யமுனா சொல்லிவிட கதிருக்கு இன்னும் அதிர்ச்சியானது. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்தான்.
சற்று நேரத்தில் அவர்கள் முழுமனதுடன் விடைபெற்று கிளம்பிவிட தாயை அழைத்து கேட்டான் கதிர்.
“என்னம்ம்மா, ட்ராவல்ஸ் ப்ரோவைட் பன்றது எல்லாம் என்னை கேட்காம முடிவு பண்ணிட்டீங்க…” என்றான் தனியே.
தர்ஷன் இருக்கிறானா என பார்த்துவிட்டு கதிரிடம் மெல்லிய குரலில் முதல்நாள் கோவிலுக்கு சென்றுவந்த விவரத்தை சொன்னார் அவர்.
“அந்த பொண்ணு மருகுது போல கதிரு. பாவம்ல. நம்ம வீட்டுக்கு வரப்போ அப்பாவுக்கு செலவு வைக்காம பாரமேத்தாம வரனும்னு நினைக்குது. நம்மால முடிஞ்சதை தான அம்மா பண்ணேன்? நமக்கு முடியாதுன்னா செய்வேனா?…”
இப்படி கேட்பவரிடம் மறுக்கமுடியுமா அவனால். சிரித்துக்கொண்டே தலையசைத்தவன்,
“ஒரு வார்த்தை சொல்லிடுங்க. அந்த நேரம் டக்குனு ஷாக் ஆகிட்டேன். அதை அவங்க நோட் பண்ணிருந்தா தர்மசங்கடமா போயிருந்திருக்கும் ரெண்டுபேருக்கும்…” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான் கதிர்.
பைக்கில் செல்லும் பொழுதே தாமரையிடம் இருந்து போன் வந்துவிட்டது அவனுக்கு. பைக்கை ஓரம்கட்டிவிட்டு அப்படியே அமர்ந்து பேசினான்.
“நீங்க மெசேஜ் பண்ணும் போது கவனிக்கலை. வேலையா இருந்தேன் கதிர்…” என்றாள் ஆரம்பிக்கும் பொழுதே.
“நோ ப்ராப்ளம் தாமரை. மெசேஜ் பார்த்தீங்களா?…”
“ஆமா, பார்த்துட்டேன். அதான் கால் பண்ணேன்…”
“ஓஹ், ஓகே…” என சொல்லி கதிர் அடுத்து அவள் என்ன பேசுவாள் என எதிர்பார்த்து அமைதியாக கேட்க அவளோ மௌனம் சாதித்தாள்.
“தாமரை, இப்பவும் நீங்க அந்த முடிவுல தான் இருக்கீங்களா?…” என கதிரே ஆரம்பிக்க,
“இல்லை, இனி அந்த முடிவுக்கு அவசியமில்லை. நெக்ஸ்ட் என்னன்னு பார்க்கவும். ஐ மீன் கல்யாணத்துக்கு என்ன பண்ணனும்னு…” என்றாள் தெளிவுடன்.
ஒருவகையில் அந்த பதில் அவனுக்கு பிடித்திருந்தது. இப்போதும் திருமணம் என்று சொல்லி நாள் குறித்த பின்பு அடுத்து என்ன என்று பொறுப்புடன் பேசுபவளை மனது விரும்ப ஆரம்பித்தது.
ஆசைகள் எங்கணம் துவங்குமோ? இங்கே இவனிடத்தில் எப்பொழுது துவங்கியதோ இப்பொழுது, இந்த பொழுது அவன் உணர்ந்திருந்தான்.
சில்லென்ற பனித்துளியின் குளுமையை அக்கணம் அனுபவித்தான் கதிர். இத்தனை நிதானமாக எந்த உணர்வுகளையும் ரசித்ததில்லை.
உச்சி வெயிலில் சின்ன மரத்தினடியில், லேசான நிழலில் நின்றிந்தவனுக்கு அந்த இடம் கூட பிடித்திருந்தது.
“தாமரை…”
“சொல்லுங்க கதிர்…”
“நத்திங்…” என்று மறுத்துவிட்டான்.
ஏனோ அவளை சந்திக்கவேண்டும் என்ற ஆசை மனதில் எழுந்தாலும் அதை கேட்க தோன்றவில்லை.
திருமணம் முடியட்டும் இன்னும் ஒருமாதம் தானே? அதன் பின் தாமரை தன் நிறை.
“கதிர், என்னவோ கேட்க வந்தீங்க?…”
“இல்லை ஒண்ணுமில்லை. இந்த டிசிஷன் உங்களை அப்செட் பண்ணிருக்கும்னு நினைச்சேன்…”
“ச்சே, ச்சே. அப்படி இல்லை. நேத்து நீங்க சொல்லவும் நிறைய யோசிச்சேன். அதுக்கப்பறம் தான் நான் எவ்வளவு முட்டாள்தனம் பன்றேன்னு புரிஞ்சது. இப்போ நான் ரியலைஸ் பண்ணிட்டேன்…” என்றாள்.
“நைஸ்…”
“ஓகே, பை கதிர். நான் அப்பறமா பேசறேன்…” என்று சொல்லி வைத்துவிட்டாள். கதிரும் வேலை இருக்க கிளம்பிவிட்டான்.
மாலை வீடு வந்து சேர்ந்த தாமரை வரும் பொழுதே சோர்வுடன் இருந்தாள். கையில் இருந்த பைலை டேபிளில் வைத்துவிட்டு தண்ணீரை எடுத்து குடித்தவள் சோபாவில் அமர்ந்தாள்.
“ம்மா காபி. தலை வலிக்குதும்மா…” என அங்கிருந்தே குரல் கொடுக்க,
“போட்டுட்டேன்டி. உன் ஸ்கூட்டி சத்தம் கேட்டதுமே பாலை வச்சுட்டேன். வரேன் இரு…” என சத்தம் கொடுத்தபடி சரளா சொல்ல கண்ணை மூடி சாய்ந்துவிட்டாள்.
“என்னடி தூங்கிட்டியா?…” என மகளருகே வந்து பார்க்க,
“இல்லம்மா, குடுங்க…” என எழுந்துகொண்டாள்
“என்னடி முகமே வாடி கிடக்குது?…” என்றவர்,
“அப்பா போன் பண்ணினாரா?…” என்றார் சரளா.
“ஹ்ம்ம், பண்ணினாங்கம்மா. பேசிட்டேன். எங்க அப்பாவை? நிவியை கூட காணும்?…”
“நிவி மேல மாடில படிச்சுட்டு இருக்கா. அப்பா அவரோட ப்ரென்ட் கூட வெளில ஒருத்தரை பார்க்க போயிருக்கார்…” என்றதும் தாமரைக்கு புரிந்தது.
“என்னம்மா பணம் ஏற்பாடு செய்யவா?…” என்றதும் சரளா ஆமோதிப்பாக தலையசைத்தார்.
“இன்னும் ஒருமாசம் தானே இருக்குது? மண்டபம் எல்லாம் அவங்களே பார்த்துட்டாங்க. இந்த ஞாயித்துக்கிழமை நம்மளை வர சொல்லிருக்காங்க. நாமளும் போய் பார்த்து பிடிச்சிருக்குன்னு சொன்னதும் முடிச்சிடலாம்ன்னு…”
“இல்லன்னா வேற பார்க்கலாம்ன்னா இருக்கீங்க?…” என மகள் கேட்டதும் விழித்தார்.
“இல்ல, ஒரு மாசத்துலன்றதால அதுக்குள்ளே வேற நல்ல மண்டபம் கிடைக்கனுமே? இது அவங்களுக்கு தெரிஞ்சவரோட மண்டபம். அதனால செலவும் குறையுமில்லை…”
“ஹ்ம்ம் சரி…”
“மத்த செலவுகள் எல்லாம் அவங்க பொதுவுல செய்யலாம்ன்னு சொல்லிட்டாங்க. அதுவே பெரிய நிம்மதி தெரியுமா? இல்லன்னாநம்ம பக்க வழக்கப்படி மொத்தமும் நம்ம தான் செய்யனும்…”
“ம்மா, அவங்க வேற என்ன சொன்னாங்க? பொது செலவுன்னா எல்லாமேவா?…”
“ஆமா தாமரை…” என்றதும் வரும் போது கொண்டு வந்திருந்த பைலை கையில் எடுத்தவள் தனது பேக்கில் இருந்து ஒரு பேனாவை எடுத்துக்கொண்டாள்.
“ஒண்ணொண்ணா சொல்லுங்களேன். நான் எழுதிக்கறேன். அப்ராஸ்மெட்டா எவ்வளவு வரும் பார்க்கலாம்….” என்றாள் தாமரை வேகமாய்.
“ஏன் இதை அப்பா உன்கிட்ட சொல்லலையா?…”
“இல்லம்மா, டேட் பிக்ஸ் பண்ணியாச்சுன்னு சொன்னாங்க. அந்த தேதியை ஒட்டி லீவ்க்கு அப்ளை பண்ணிடுன்னு. ட்ரிப் இன்னைக்கு இல்லைன்னும். வேற இதை எல்லாம் சொல்லலை…”
“ஓஹ், வீட்டுக்கு வரவும் பேசிக்கலாம்ன்னு விட்டிருப்பாரு…”
“ஹ்ம்ம், சரி இருக்கட்டும் இப்போ நீங்க சொல்லுங்க…” என்றவள் மடமடவென்று செலவுகளை எழுத ஆரம்பித்தாள்.
“எதுக்கு தாமரை?…”
“ம்மா, இதை வச்சு என்ன பண்ணுவேன்? எவ்வளவுன்னு கணக்கு போட்டா நம்மளால எவ்வளவு பிரட்ட முடியும்ன்னு பார்க்கனும்…” என்றவள்,
“ஆபீஸ்ல லோன் கிடைக்குமான்னு பார்த்தேன். ஏற்கனவே எடுத்த லோனை இன்னும் முடிக்கலை. அதனால அதை க்ளோஸ் பண்ணாம அடுத்த லோன் எடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. நம்ம சேவிங்க்ஸ்ல இருக்கறது எவ்வளவு எல்லாம் தெரியனும்ல…”
மகள் இன்னும் திருமணத்தின் பூரிப்போ களையோ இன்றி பணத்தின் கவலையில் இருப்பதை பார்த்து சரளாவிற்கு மனது விம்மியது.
இந்த நேரத்தில் பெண் தலையில் சுமையை ஏற்றிக்கொள்வது மனதிற்கு ஒப்பவே இல்லை. வீட்டின் கடன் ஒருபக்கம் என்றால் இளையமகளின் மருத்துவ படிப்பு தங்கள் பணத்தை அத்தனை விழுங்கிக்கொண்டு இருந்தது.
“அதெல்லாம் அப்பா பார்த்துப்பார் தாமரை. நீ ஏன்டா இந்த டென்ஷன் எல்லாம் ஏத்திக்கற?…” மகளை தலையை வருடிக்கொடுத்து சொல்லியவர்,
“அவங்க வீட்டுல எல்லாமே பேசி ஏற்பாடு பண்ணிட்டாங்க. பத்திரிக்கை அடிச்சு அதை எல்லாருக்கும் குடுத்து, செலவுக்கணக்கை கடைசில சரி பார்த்து கையில குடுக்கறது மட்டும் தான் நம்ம வேலை. அதனால உன் தலையில போட்டுக்காத. கொஞ்சம் சந்தோஷமா இருடா…” என்றார்.