“எனக்கு சந்தோஷம் இல்லைன்னு யார் சொன்னா? அதெல்லாம் சந்தோஷம் தான். ஆனா அதுக்காக அப்பாவே எல்லாம் பார்க்கட்டும் விட்டுட்டு இருக்க முடியுமா? என்னதான் எல்லாம் அவங்க பார்க்கறதா இருந்தாலும் நம்ம கையில கணிசமா பணம் வச்சுக்கனும்மா….” என சொல்லியவள்,
“நம்மக்கிட்ட வர செலவு ஒன்னொண்ணுக்கும் அவங்களை கை காமிச்சா நமக்கு என்ன மரியாதை? அப்பாவை அப்படி இருக்க சொல்றீங்களா?…” என்றாள்.
“ச்சே ச்சே தாமரை அவங்க ரொம்ப நல்லவங்கடா. உன் மாமாவுக்கு கூட ரொம்ப திருப்தி. மண்டபம் பார்க்க போறன்னைக்கு கூட வரேன்னு சொல்லிருக்கார். நல்ல இடமா அமைஞ்சிருக்குன்னு அவ்வளவு சந்தோஷம்…”
“ஹ்ம்ம் ஆபீஸ் விட்டு நான் வரவும் நைட்ல மாமா என்னை பேச சொன்னாங்கம்மா. மெசேஜ் பண்ணிருந்தாங்க…” என தாமரை சொல்ல,
“நைட் சாப்பிட்டு பேசு…” என்றவர் காபி தம்ளரை எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல அங்கையும் வந்துவிட பேச்சு சுவாரசியத்தில் அவர் வெளியே சென்று அமர்ந்துகொண்டார்.
தாமரை தந்தையின் அறைக்கு வந்தவள் அங்கே இருந்த பீரோவில் இருந்த டாக்குமெண்ட்ஸ் அத்தனையையும் எடுத்துக்கொண்டாள்.
அங்கேயே கட்டிலில் எடுத்து வைத்து இன்னும் எத்தனை லட்சம் கடன், எத்தனை திருப்பி கட்டவேண்டும் என ஏற்கனவே தெரிந்திருந்தாலும் மீண்டும் மீண்டும் அவற்றை பார்வையிட்டுகொண்டு இருந்தாள்.
இரண்டு இலக்க எண்ணில் இன்னும் செலுத்த வேண்டிய பணம் லட்சத்தில் இருக்க அதற்கான வட்டியே பாதி பணத்தை விழுங்கும்.
மலைப்பாக இருந்தது அவளுக்கு. எப்படியும் ஓரளவு அடைத்துவிடலாம் என்று இருக்க கல்யாண கடன் வேறு. தந்தையை நினைத்து கண் கலங்கிபோய் அமர்ந்திருந்தாள்.
அவளுக்கு ஆறுதலான இரண்டே விஷயம் ஒன்று திருமண செலவுகள் பொதுவில் இருப்பது. இன்னொன்று திருமணத்தின் பின்பும் தன்னுடைய சம்பாத்தியம் தன் தந்தைக்கு உதவக்கூடியதாக இருக்க போவது.
இதனை நினைக்கும் போதே கதிரின் ஞாபகம் வர மெல்லிய உணர்வொன்று அவனின் பால் சுரந்தது.
அவன் மீதும், அவனின் குடும்பத்தின் மீதுமான அபிமானம் இன்னும் பெரிதாகியது.
அந்த அபிமானம் பிடித்தத்தை உருவாக்க உடனே தனது மொபைலை எடுத்தாள் பார்வை வாட்ஸ் ஆப்பில் பதிந்திருந்த அவனின் எண்ணில் கண்கள் ஊர்ந்தது.
டிஸ்ப்ளே பிக்சரில் அவனின் முகம் இருக்கும் என எதிர்பார்த்து வந்தவளுக்கு ஏமாற்றமே. அதில் இருந்த புகைப்படமோ ட்ராவல்ஸின் போர்டை தாங்கி இருந்தது.
‘இத கூட கவனிக்கலையே நாம?’ என்று தன் தலையில் தட்டிகொண்டவள் ஒரு சிரிப்புடன் அமர்ந்திருக்க அதற்குள் சோமநாதன் வந்துவிட்டார்.
“தாமரை இங்க என்னம்மா பன்ற?…” என்ற தந்தையின் குரலில் கலைந்தவள் நிதர்சனத்திற்கு வந்தாள்.
“இல்லப்பா, இந்த டாக்குமென்ட்ஸ் எல்லாம் பார்த்துட்டு இருந்தேன்…” என எழுந்து நிற்க,
“உட்காருப்பா…” என்று சொல்லி அவளுடன் தானும் அமர்ந்தார்.
தாமரையிடம் வெகு வருடங்களுக்கு பிறகான ஒரு அமைதியான பேச்சு அவரிடத்தில்.
மகள் மேல் இருந்த கோபத்தில் எரிந்துவிழுந்தபடி இருந்தவர் இன்னும் சில நாட்களில் மகள் பிறந்தகம் விட்டு செல்லவிருப்பதில் கலங்கி போய் இருந்தார்.
அதுவும் இப்போது சென்றுவந்த காரியமும் நடக்குமா என்பதில் சந்தேகமாக இருக்க ஓய்ந்து போன தோற்றம் அவரிடத்தில்.
“என்னாச்சுப்பா?…” அவரின் கை மீது கை வைத்து கேட்கவும் அதனை அழுத்தமாய் பற்றிக்கொண்டார்.
“அப்பா மேல உனக்கெதுவும் கோபமாடா?…”
“ப்பா, என்னாச்சு உங்களுக்கு? எனக்கென்ன கோபம்? அதெல்லாம் எதுவுமில்லை…”
“அதது காலாகாலத்துல நடந்தா தான்ப்பா பெத்தவங்களுக்கும் பெருமை, பெத்ததுக்கும் நிம்மதி. எங்களோட பெரிய பேராசை என்னன்னு நினைக்கிற? உனக்கும் நிவிக்கும் சரியான நேரத்துல நல்ல இடத்துல கல்யாணத்தை பண்ணி வைக்கிறது தான்…”
“இப்ப எதுக்குப்பா இத்தனை விளக்கம்? அதெல்லாம் விடுங்க. எனக்கு சந்தோஷம் தான். நான் ஒன்னும் சொல்லலையே?…” என அவரை சமாதானப்படுத்துவதை போல அவள்.
“இல்லப்பா, எனக்கு தெரியும். இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்னு நீ நினைச்சுட்டு இருந்தது. ஆனா அப்படி எங்களால விட முடியாதே?…” என்றவர்,
“உனக்கு என்ன கவலை, அப்பா கஷ்டப்படுவேன்னு தானே? அதெல்லாம் ரிட்டையர்ட் ஆகறதுக்குள்ள எல்லாத்தையும் செட்டில் பண்ணிடமாட்டேனா? முடிச்சிடுவேன்டா…” என்றார்.
“இத்தனை சொல்லனும்னு இல்லப்பா. நீங்க ஏன் என்னென்னவோ பேசறீங்க? உங்க ஆசை இந்த கல்யாணம். எனக்கு முழு சம்மதம்…” என்றாள் உண்மையாக.
“அப்பறம் ஏன்டா இதை எல்லாம் எடுத்து பார்த்துட்டு இருக்க?…” என்னும் பொழுதே மனதிற்குள் சஞ்சலமாக இருந்தது.
“இல்லை, இந்த கல்யாணத்துல நமக்கு எவ்வளவு செலவு இருக்குன்னு தெரியாது இல்லையா? கல்யாணத்துக்கான பணத்தோட இங்க வட்டிக்கும் நாம ஒதுக்கனும். கட்டாம விடமுடியாது. அதான் கால்குலேட் பண்ணலாம்ன்னு வந்தேன்…”
தன் மகள் சொல்வதை கேட்டவர் மனது நிறைந்துபோனது. இப்படி கஷ்டத்தை உணர்ந்து அதை நினைத்து தன் நல்லதை மறுக்கும் பெண்ணை பெற்றதற்கு அன்றும் பெருமையடைந்தார்.
“அதையெல்லாம் பார்த்தா நாம பொழைக்கவே முடியாதுடா…”
“சரிங்கப்பா, இப்ப நான் கேட்கறேன். மறைக்காம பதில் சொல்லனும். எங்க போய்ட்டு வந்தீங்க?…” என நேரடியாக கேட்க மௌனமாகிவிட்டார் அவர்.
“அப்பா ப்ளீஸ், இங்க இருக்கற இந்த ஒருமாசமாவது சுமூகமா நாம இருக்கலாம். போதும்ப்பா என் மேல நீங்களும், உங்க மேல நானும் மாத்தி மாத்தி கோவிச்சது. ப்ளீஸ்…” என்றவளின் இறைஞ்சுதலில் தலையசைத்தவர்,
“பணத்துக்கு தான் ஒருத்தர்ட்ட பேசலாம்னு போயிருந்தேன்டா. ஆபீஸ்ல லோன் கிடைக்காது. வீட்டுக்கு வாங்கின லோன் அங்க அடையனும். அது முடிஞ்சா தான் அடுத்து போடமுடியும்ன்னு சொல்லிட்டாங்க. அதான் வெளில வட்டிக்கு வாங்கலாம்ன்னு…”
“எவ்வளவுப்பா?…” என தாமரை கேட்டதுமே தயக்கத்துடன் பார்த்தார்.
“சொல்லுங்கப்பா, எவ்வளவுன்னு சொன்னா தானே தெரியும்?…” என தன்மையுடன் பெண் பேச,
“ஒரு ஆறுலட்சம் இப்போதைக்கு கேட்டிருந்தேன். வீட்டோட பத்திரம், இல்லைன்னா யாராச்சும் சூரிட்டி போடனும்னு சொல்றாங்க…”
சொல்லும் பொழுதே அவரின் தொண்டைக்குழி வறண்டு போயிருந்தது. பார்க்கவே கஷ்டமாக போனது.
மகளின் பார்வையை உணர்ந்தவர் அவளின் தலையில் கை வைத்து லேசாய் அழுத்தினார்.
“இதையெல்லாம் நீ நினைக்காம இரு. அப்பா பார்த்துப்பேன்…”
“எதுக்குப்பா இத்தனை கஷ்டப்பட்டு?…”
“எதுல தான் கஷ்டம் இல்லைடாம்மா? எல்லாரும் கை நிறைய பணத்தை வச்சுக்கிட்டா கல்யாணம் பண்ணுவாங்க? அதுவும் நம்மளை மாதிரி மிடில் க்ளாஸ்க்கு அது வாய்க்குமா? போகிற போக்குல தான நாமளும் அங்க இங்கன்னு உருட்டி பிரட்டி வாங்கி நடத்தனும்…”
“இதுக்கும் சேர்த்து ஓடனும்ப்பா நீங்க…”
“இருக்கட்டும் ஓடிட்டு போறேன். என் பொண்ணுங்களுக்காக தானே? ஆனா ஒரு விஷயத்தை கொஞ்சம் ஒத்துக்கனும். நீயும் அம்மாவும் சொன்னீங்க, கீழே எடுத்து கட்டினதோட போதும், இப்ப மாடியில் வேண்டாம்ன்னு. நான் தான் கேட்கலை. கையோட முடிச்சிடுவோம்னு நினைச்சேன். அது இங்க வரை இழுத்துடுச்சு…”
வருந்திய குரலில் அவர் சொல்ல தாமரைக்கு பாவமாக இருந்தது. தானும் கலங்கி போனாளோ, கண்ணீர் விட்டாலோ அவர் அலமலந்து போய்விடுவார்.
இப்போது தைரியம் தான் தேவை என்று தாமரை அவருக்கு ஆறுதலாய் இருந்தாள்.
“பணத்தை கொஞ்சமாச்சும் சேர்த்து வச்சுட்டு பண்ணலாம்ன்னு நினைச்சா நாம இருப்போம். ஆனா காலமும் நமக்காக நிக்குமா? நல்ல மாப்பிள்ளை. அமையும் போதே அதை ஏத்துக்கனும். தட்டிவிட தட்டிவிட கடைசில எஞ்சி மிஞ்சிறது தான் கிடைக்கும்ன்ற மாதிரி ஆகிட கூடது என் பொண்ணுங்களுக்கு…”
“உங்களோட எதிர்காலம் நல்லபடியா அமையனும். அது அமைஞ்சுட்டாளே எங்களுக்கு எதுவும் வேண்டாம். இருக்கற காலத்துல உங்க சந்தோஷத்தை பார்த்தே நாங்க நிறைஞ்சு போய்டுவோம்…”
சோமநாதன் இத்தனை உணர்ச்சிவயப்பட்டு பேசியதே இல்லை. இன்று அப்படி பேச பேச கதவருகே பார்த்துக்கொண்டிருந்த சரளாவிற்கு அழுகை முட்டியது.
பணத்திற்கு என்ன செய்ய என்ற யோசனை கணவனை வாட்டுவதை அறிந்துகொண்டவர் மகளை வைத்துக்கொண்டு பேச முடியாமல் அங்கேயே நின்றார்.
“ம்மா, ஏன் அங்கயே இருக்கீங்க? இங்க வாங்க…” என்றாள் தாமரை.
“இல்ல, அப்பாவுக்கு காபி எடுத்துட்டு வரேன்…” என திரும்பியவரிடம்,
“முதல்ல குடிக்க தண்ணி கொண்டுவாங்க…” என சொல்லியவள் மனதிற்குள் படபடவென சில கணக்குகள்.
தன்னுடைய முடிவிற்கு பெற்றோர்கள் ஒப்புக்கொள்வார்களா என்பதெல்லாம் யோசிக்கவில்லை.
இப்போதைக்கு கையில் இருக்கும் ஒரு சிறந்த யோசனை இது மட்டுமே என்பதால் தாமரை அந்த முடிவிற்கு வந்தாள்.
தண்ணீரை கொண்டுவந்தவர் கையோடு இருவருக்கும் காபியையும் கொண்டுவந்தார்.
“சொன்னா அதை கேட்கிறதே இல்லை. இப்பதான நான் குடிச்சேன். எனக்கு வேண்டாம். நீங்க குடிங்க…” என்று இருவரும் குடித்து முடிக்கும் வரை பிரித்து வைத்திருந்த அந்த காகிதங்களை எல்லாம் ஒன்றுபோல அடுக்கி ஓரமாய் வைக்கவும் அவர்களும் குடித்து முடித்தனர்.
“ம்மா, நம்மக்கிட்ட பேங்க்ல எவ்வளவு பணம் இருக்கு. அவசரத்துக்கு தேவைக்குன்னு எடுக்காம போட்டு வச்சிருக்கறது?…”
“இப்ப ஏன்ம்மா அதெல்லாம்? அது வச்சு ஒரு செலவுக்கு கூட பத்தாதே? பத்திரிக்கை அடிக்க கூட வராது…” என்றார் சோமநாதன்.
“ப்பா, நீங்க பொறுமையா நான் சொல்றதை கேளுங்க. இது ஒன்னு தான் நாம வெளில மேலும் கடன் வாங்காம இருக்கறதுக்கு ஒரே வழி…” என்றதும் சோமநாதன் ஆர்வமாய் பார்த்தார்.
“ஒரு ஒன்றரை லட்சம் கிட்ட இருக்கும்…” என சரளா சொல்லவும்,
“ஹ்ம்ம் ஆமா, இப்பதான் பாஸ்புக்ல பார்த்தேன். அதுக்குள்ளே மறந்துட்டேன் பாருங்க…” என்றவள்,
“நம்ம எவ்வளவு நகை போடறோம்ன்னு எதுவும் பேசியிருக்கீங்களா கதிர் வீட்டுல?…” என கேட்டதும் பெற்றோருக்கு குழப்பம்.
“இப்ப எதுக்கு அதெல்லாம் உனக்கு?…” என்றார் சோமநாதன்.
“அப்பா ப்ளீஸ், கொஞ்சம் அமைதியா இருங்க…” என்றவள்,
“ம்மா, நீங்க சொல்லுங்க அங்கை ஆன்ட்டிட்ட ஏதாவது சொல்லிருக்கீங்களா நாம இவ்வளவு நகை வச்சிருக்கோம், இவ்வளவு செய்வோம் அப்படின்னு ஏதாவது?…” என்றதும் சரளா யோசித்து,
“இல்லம்மா, அப்படி எதுவும் சொன்னதில்லை. பிள்ளைங்களுக்கு கல்யாணத்துக்கு தேவையானதை சேர்த்தாச்சுன்னு மட்டும் தான் சொன்னேன்…”
“இல்லை தெளிவா சொல்லுங்க…” தாமரை மீண்டும் கேட்க,
“இல்ல நிஜமா சொல்லலை. நகை விலை இப்படி ஏறிட்டே இருக்குன்னு ஒருநாள் புலம்பிட்டு இருந்தாங்க அங்கை. அப்பத்தான் நீங்க ரெண்டு பொண்ணுங்க வச்சிருக்கீங்க, கல்யாணத்தப்போ ரொம்ப கஷ்டம் நகை எடுக்கறதுன்னு சொன்னாங்க…”
“அதான் நான் சொன்னேன், இல்லை. நாங்க ரெண்டு பொண்ணுங்களுக்குமே சின்னதுல இருந்தே கொஞ்சம் கொஞ்சமா தேவையானதை செஞ்சுட்டுட்டே வந்ததால பெருசா எடுக்கற அளவுக்கு இல்லை. போதுமானது சேர்த்தாச்சுன்னு சொன்னேன். வேற எதுவும் சொல்லலை…” என்றார் சரளா.
“ஹ்ம்ம், அது போதும். சரி எவ்வளவு போடலாம்ன்னு நீங்க முடிவு பண்ணியிருக்கீங்க?…” என்றாள் அடுத்ததாக.
“தாமரை என்ன இதெல்லாம்?…” என்ற சரளா பின், மகளின் முறைப்பில் எவ்வளவு என்று சொன்னார்.