அதாவது மகள்களுக்கு என்று செய்துள்ள நகையே பெருமதிப்பை தர சரளாவிற்கு ஓரளவுக்கு தனியேவும் வைத்திருந்தனர்.
“ரொம்ப நல்லது. நிவியோட ஜ்வேல்ஸ் அப்படியே இருக்கட்டும். என்னோட ஜெவேல்ஸ்ல எனக்கு போடறதா இருக்கற நகையில பாதி போட்டா போதும்…” என்றாள் தாமரை.
“என்ன விளையாடறியா நீ? எங்களை என்னன்னு நினைப்பாங்க மாப்பிள்ளை வீட்டுல. உன்னை மதிப்பா நாங்க குடுக்கனும்னு நினைக்கறோம். நீ என்னன்னா இப்படி பேசற?…”என கோபமாகிவிட்டார் சோமநாதன்.
“இப்பவும் அவங்களா எதுவும் கேட்கலையேப்பா. எனக்கு தெரிஞ்சு அவங்க அப்படி கேட்கிறவங்களும் இல்லை. அப்படித்தான் தோணுது. அவங்கக்கிட்ட இவ்வளவு போடறோம்ன்னு சொல்லிட்டு நாம போடாம விட்டா தான தப்பு?..”
“மிச்ச நகையை வச்சு நாங்க என்ன பண்ண? அது உனக்குன்னு சேர்த்தது. ஏதோ நாங்க பண்ணின ஒரே நல்லது நகையில கையை வைக்காம இருந்தது மட்டும் தான். இப்ப அதையும் செஞ்சிருந்தா இப்ப இருக்கற நிலவரத்துல நகை செஞ்சு போடறது எத்தனை கஷ்டமா இருந்திருக்கும்?…” என்றார் சோமநாதன்.
“அப்பா, நீங்க பேசறது எல்லாம் சரி. ஆனா நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க. இந்த நகையை ப்ளட்ஜ் பண்ணிடலாம். அதை வச்சு கல்யாண செலவுக்கு ஏற்பாடு பண்ணலாம். யார்க்கிட்டயும் கையேந்தி நிக்க வேண்டாம். வட்டிக்கு வாங்கி மேலும் மேலும் கடனை கூட்ட வேண்டாம்…”
மகள் சொல்லும் யோசனை நன்றாக இருந்தாலும் மனதிற்கு உவப்பானதாக இல்லை. தாய், தந்தை இருவரின் முகமும் அதிருப்தியை காண்பித்தது.
“நகை மட்டும் கடன் இல்லையா? அதையும் நாம தானே வட்டி கட்டி மீட்கனும்…” என சரளா சொல்ல,
“ஆமாம்மா, ஆனா ஒண்ணுமே இல்லாம கடன் கேட்கிறதுக்கு இப்படி நகையை பேங்க்ல வச்சு கடன் வாங்கலாம். ரொம்ப வட்டியும் இருக்காது. பாதுகாப்பும் கூட. சீக்கிரம் மீட்டுடலாம்…” என்றவள் பேசி பேசி அவர்களை சம்மதிக்கவைத்தாள்.
“இப்பதான் நிம்மதியா இருக்கு. இனிமே பணத்துக்கு எங்கையும் அலைய வேண்டாம் இல்லையா?…” என்று தங்கள் கஷ்டத்திற்கு ஒரு விடிவை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் தாமரையின் முகம் மலர்ந்துவிட பெற்றோர்களுக்கு அதைவிட என்ன வேண்டும்.
“கடைசில உன் முடிவுக்கே எங்களை வரவழைச்சுட்ட. இப்போவாச்சும் சந்தோஷமா இரு நீ…” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றார் சரளா.
சோமநாதனுக்கும் மகளின் முடிவில் இப்போது முழு திருப்தி. சற்று முன்னர் ஓரிடத்தில் பணத்திற்கு கைகட்டி தருவார்களா மாட்டார்களா என முகம் பார்த்து நின்றதை நினைக்கும் பொழுது அதற்கு இது எத்தனையோ மேல் என்றே தோன்றியது.
“ஹ்ம்ம், சந்தோஷமாடா…” என்றார் மகளிடம்.
“ரொம்ப ப்பா. இது சந்தோஷம்ன்றதை விட நீங்க இனி பணத்துக்கு அலைய வேண்டியதில்லைன்றதுல எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு…” என்றாள்.
“சரி நான் என் ப்ரென்ட் கிட்ட பேசிடறேன். பணத்துக்கு வேற எங்கயும் விசாரிக்க வேண்டாம்ன்னு சொல்லிடறேன்…” என்று போனுடன் எழுந்து வெளியே சென்றார்.
அவருக்கு இப்போது நிம்மதியும் கூட. பணத்திற்கு பத்திரத்தையோ, இல்லை உத்திரவாத கையெழுத்தையோ கேட்டதோடு வட்டியும் எக்குத்தப்பாக இருக்க பணம் கிடைத்தால் போதும் சாமாளித்துக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தார்.
அதற்கு தாமரையின் மாமாவிடம் தான் பேசுவதாக இருந்தவருக்கு இந்த யோசனை முதலில் பிடிக்கவில்லை என்றாலும் அதன் பின் மகளின் விவரமான பேச்சில் வெளியில் வாங்குவதை விட இது மேல் என்று ஒப்புக்கொண்டார்.
தனது நண்பனுக்கு அழைத்து விஷயத்தை சொல்லி பணம் தேவை இல்லை என்று விவரம் சொல்லிவிட்டு வைத்துவிட்டு உள்ளே வந்தவருக்கு பெரிய பாரம் குறைந்த உணர்வு.
படித்து முடித்து இரவு சாப்பிட கீழே இறங்கி வந்த நிவேதாவிற்கு வீட்டின் மாற்றம் புரிந்தது.
“என்ன இது? நான் மாடிக்கு போகும் போது இருந்த வீடு தலைகீழா மாறி இருக்கு?…” என்றாள் தந்தையும், அக்காவும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்து.
அத்தனை சந்தோஷம் அவளுக்கு. குதித்துக்கொண்டு வந்து இருவருக்குமிடையே அமர்ந்துகொண்டவள்,
“இன்னைக்கு பெரிய பஞ்சாயத்து இருக்கும்ன்னு நினைச்சேனே? ஒண்ணுமே இல்லையா?…” என்றாள் நிவி.
“எதுக்கு பஞ்சாயத்து? அவங்க ரெண்டுபேருக்கும் சண்டைன்னா உனக்கு கொண்டாட்டமா?…” என்று மகளின் தலையில் ஒரு கொட்டு வைத்தார் சரளா.
“பின்ன என்னம்மா? சும்மா டாம் அன்ட் ஜெர்ரி மாதிரி முட்டிக்கிட்டே இருந்தாங்க. இன்னைக்கு பெரும் பிரளயமே நடக்கும்ன்னு நினைச்சேன். பார்த்தா இப்படி சிரிச்சுட்டு பேசிட்டு இருக்காங்க…” என நிவி சொல்லவும்,
“அடிப்பாவி உன் கண்ணே பட்டிருக்கும் போல?…” என்றவரை கண்டுகொள்ளாமல்,
“அக்கா நீ எப்ப இருந்து இவ்வளவு நல்ல பிள்ளையா மாறின?…” என தாமரையிடம் வம்பிழுத்தாள்.
“இப்ப உனக்கு என்ன தெரியனும்?…” தாமரை சாப்பிட்டுக்கொண்டே அவளிடம் கேட்க,
“இன்னைக்கு நைட் ட்ரிப் கிளம்பலைன்னு நீ சண்டை போடுவன்னு நினைச்சேன். நீ என்னன்னா கூலா இருக்க?…” என்றாள் நிவேதா.
“கல்யாண வேலையை வச்சுட்டு எப்படி சண்டை போட சொல்ற? அதுவும் ஒருமாசத்துல கல்யாணம்? இப்ப ட்ரிப் போக மனசு வராதே? தலைக்கு மேல வேலை இருக்கு நிவி…” என தாமரை சொல்லவும்,
“எப்ப நடந்துச்சு இந்த மிராக்கிள்?…” நிவியின் கேலியில் சோமநாதனும், சரளாவும் சிரித்துக்கொண்டே எழுந்து உள்ளே சென்றுவிட்டனர்.
“ம்மா, எனக்கு இன்னும் சாப்பாடு தரலை. சந்தோஷத்துல என்னை மறந்திடாதீங்க…” என்று சத்தமாய் சொல்லிவிட்டு,
“நீ சொல்லுக்கா. என்ன முகம் எல்லாம் ப்ளஷிங்? என்ன நடந்துச்சு ஒரே நாள்ல?…” என ஆர்வமாய் கதை கேட்க,
“உனக்கு வேற வேலை இல்லை. போவியா. போய் படிக்கிற வேலையை பாரு…” என சிரிப்போடு சொல்லிக்கொண்டு டிவியின் பக்கம் திரும்பி அமர்ந்துகொண்டாள் தாமரை.
மனது லேசாகி இருந்தது இப்பொது. தலையை குறைந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்டதை போல ஒரு நிம்மதி.
திருமணம் முடியவும் வழக்கம் போல நிவியின் படிப்பு முடியும் வரை குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என முடிவெடுத்திருந்தாள்.
ஒரு தெளிவான பாதை கண்ணுக்கு புலப்பட இப்போது திருமணத்தின் கனவுகள் மெல்ல மெல்ல அவளை சூழ ஆரம்பித்தது.
முகத்தில் டென்ஷன் குறைந்து புன்னகை உறைந்திருந்தது. சாப்பிட்டு முடித்தவள் முதல் வேலையாக கதிருக்கு அழைக்கலாம் என்று மாடிக்கு வந்தாள் தனது மொபைலுடன்.
“நீ படிக்கிறதுன்னா கீழே நம்ம ரூம்ல படி…” என மேலே வரும் பொழுதே தங்கைக்கு சொல்லிவிட்டிருந்தாள்.
“நீ நடத்து, இதெல்லாம் உன் முகத்துல இத்தனை நாள் இல்லைன்னு தான் எனக்கு கவலையே. என்ஜாய்க்கா…” என்றாள் நிவேதா கண்ணடித்து.
பேசலாமா, வேண்டாமா என யோசனையுடன் பத்து நிமிடம் நடந்துகொண்டே இருந்தவள் பின் மெசேஜ் அனுப்பிவைத்தாள் அவனுக்கு.
“கதிர் ப்ரீயா இருக்கீங்களா?…” என கேட்டு மெசேஜ் அனுப்பிய ஐந்து நிமிடத்தில் பதில் வந்தது.
“யாஹ்ப், இப்போ ப்ரீ தான். சொல்லுங்க தாமரை…” என பதில் அனுப்பியிருக்க அவன் இன்னும் மரியாதையுடன் பேசுவதை மானசீகமாக திட்டிக்கொண்டாள்.
“கால் பன்றேன்…” என அனுப்பிவிட்டு அவள் அவனின் எண்ணிற்கு அழைக்கும் முன் அவனே அப்படியே வீடியோவில் அழைத்துவிட்டான்.
சட்டென அவனிடத்தில் இருந்து வீடியோ கால் வர திடுக்கிட்டவள் கதவை சாற்றிவிட்டு வந்து தன்னுடையை குனிந்து பார்த்துக்கொண்டாள்.
கண்ணாடியில் நொடிநேர ஒப்பனை ஒன்று அரங்கேற தலையை கையால் கோதி நெற்றி பொட்டை சரிபார்த்து பின் தான் காலை அட்டன் செய்தாள்.
“ஹாய்…” என்றவனின் முகம் வரவும் ஒருநொடி பரபரப்புடன் பதட்டமும் சேர்ந்துகொண்டது.
முதன்முதலில் அவன் தன்னை பெண் பார்க்கும் வந்த நேரம் கூட இத்தனை படபடப்பு இல்லை அவளிடத்தில். அப்போது அவன் அவள் மனதினுள் வரவே இல்லையே.
இப்போது எந்த தளைகளும் அற்றதை போல ஒரு ஆசுவாசம். முகத்தில் அது பிரதிபலித்ததோ என்னவோ சாதாரணமாக பார்த்தவன் இப்பொழுது இன்னும் தன்னை அழுத்தமாய் உற்று கவனிப்பதை போல தோன்ற,
“நான் வாய்ஸ் கால் பன்றேன்….” என்றாள் அவனுக்கு பதிலாக.
“ஏன்?…” என கேட்டவனின் கேள்வியை புறக்கணிக்கமுடியாமல்,
“அது, இந்த ரூம்ல லைட்டிங் எல்லாம் சரியில்லை. டல்லா இருக்கும். அதான்…” என்று சமாளிக்க,
“தாமரை நார்மலா பேசுங்க. எனக்கு நீங்கதானான்னு டவுட்டா இருக்கு…” என்றான் கதிர் கேலி சிரிப்புடன்.
“ஏன் நான் பேசமாட்டேனா?…” என தாமரையும் அவனின் கேலியில் வேகமாய் பதில் கேள்வி கேட்க,
“பேசுவீங்க. ஆனா இப்படி பேசமாட்டீங்களே?…” என்றவனின் குரல் அவளை ஏதோ செய்ய,
“ஓகே, நான் வச்சிடறேன்…” என்றாள்.
“ஓகே…” என அதற்கும் அவன் சரி என அதற்கு மேல் என்ன பேச என்று நினைத்தவள் கட் செய்துவிட்டாள்.
ஐந்து நிமிடத்தில் நார்மல் காலில் கதிரே அழைத்துவிட்டான் அவளுக்கு. தாமரை போனை வைக்கிறேன் என்றதும் கதிர் மறுக்காமல் சரி என சொல்லிய நொடி அவளின் முகத்தில் வந்துபோன ஏமாற்றத்தையும், திகைப்பையும் கண்டுகொண்டவன் அவனாகவே அழைப்பு விடுத்தான்.
“சொல்லுங்க கதிர்…” என எதிர்பார்ப்போடு வந்த அவளின் குரலை உள்வாங்கியவன்,
“நீங்க தான் சொல்லனும். பேசலாம்ன்னு கால் பண்ணிருந்தீங்க. பேசுங்க…” என சொல்ல என்ன பேசுவது என்று தெரியாமல் திகைப்புடன் இருந்தவளுக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது.
“இல்லை, இன்னைக்கு ட்ரிப்க்கு எந்த இன்பர்மேஷனும் ஜாய்ல இருந்து வரலை. அதான் என்னன்னு கேட்கலாம்ன்னு கால் பண்ணினேன்?…” என்னும் போதே அவளின் குரலில் தொனித்திருந்த புன்னகையின் சாயலை கண்டுகொண்டான்.
“ஆஹாங். கஸ்டமர் இவ்வளவு இர்ரெஸ்பான்ஸிபிளா இருப்பாங்கன்னு நான் நினைக்கலையே? அட்லீஸ்ட் ஈவ்னிங்காவது நீங்க ரிமைன்ட் பண்ணிருக்கலாமே?…” என்றான் அவளின் போக்கிலேயே.
“அது ஒன்னும் எங்க வேலை இல்லை. நீங்க தான் சொல்லனும்…”
“ஆனா இப்போ டூ லேட். பிக்ஸ் பண்ணிட்டாங்க. மாத்த முடியாது…” என்றான் இருபொருள்பட.
தாமரைக்கு அவன் திருமணத்தை பற்றிய முடிவை சொல்கிறான் என்று தெரிந்திருக்க,
“இங்க மாத்த சொல்லி யாரும் சொல்லலை…” என்றாள்.
“இதை கேட்க தான் போன் பண்ணுனீங்களா?…”
“இதையும் கேட்க தான்…” என்றாள் அவளும் விடாமல்.
“தாமரை, உங்களுக்கு இப்போ எந்த வருத்தமும் இல்லையே?…” என கதிர் கேட்டதும்,
“இல்லை. நான் தான் எதை எதையோ நினைச்சு குழப்பி உங்களையும் கஷ்டப்படுத்திட்டேன்…”
“இப்போ இத்தனை தெளிவு, இந்த பேச்சு மதியம் நான் உங்ககிட்ட பேசும் போது கூட இல்லை…”
“ஹ்ம்ம், சொல்யூஷன் கிடைச்சது. அதான் மைன்ட் ப்ரீ ஆகிடுச்சு…”
“ஓகே, டேக் கேர் தாமரை. எப்போ எந்த ஹெல்ப் வேணும்னாலும் சொல்லுங்க. என்கிட்டே தயக்கம் வேண்டாம்…”
“தயக்கமா தான் இருக்குது. கேட்கவும் தோணாதுன்னு நினைக்கிறேன்…”
“ஏன் ஏன்? என்னாச்சு?…”
“பின்ன இன்னும் வாங்க போங்கன்னு சொல்லிட்டு எனக்கு ஒரு டிஸ்டன்ஸ் பீல் குடுக்கறீங்க நீங்க…” என்றாள் அவள்.
தாமரையின் இந்த நேரடி பேச்சும், அவள் உடனே கேட்ட விதமும் கதிரை கவர்ந்தது.
“ஓகே, இனி எந்த டிஸ்டன்ஸும் இல்லாம பார்த்துக்கலாம்…” என்றான் ஆழ்ந்த குரலில்.
மேலும் பத்து நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு கதிருக்கு ஒரு அழைப்பு வரவும் தாமரை வைத்துவிட்டாள்.
இப்போதும் எந்த உதவியானாலும் கேள் என்பது அவனின் பெருந்தன்மையாக இருக்கலாம். ஆனால் கேட்டு வாங்க அவள் தயாராக இல்லை.
கதிரை எந்தளவிற்கு இந்த விஷயத்தில் பிடித்ததோ அந்தளவிற்கு அவர்களிடம் தங்கள் மரியாதையை காப்பாற்றிக்கொள்ளவே விரும்பினாள்.
அது தான் தங்களுக்கும், தன் குடும்பத்தினருக்கும் நல்லது. எந்தவிதத்திலும் இறங்கிவிட கூடாது என்பதில் தெளிவாய் இருந்தாள்.
அடுத்து அவளின் மாமாவின் எண்ணிற்கு அழைத்தவள் நகையை வைத்து பணம் வாங்குவதை பற்றி அவரிடம் விவரம் கேட்டு என்றைக்கு வங்கிக்கு வரலாம் என்பது வரை பேசி முடித்தவளுக்கு பெரும் கடமை ஒன்று நிறைவேறிய நிம்மதி.