ஆசைகள் – 11
அந்த வார இறுதியில் சென்று மண்டபம் பார்த்துவிட்டு வந்தனர் கதிர் தாமரை குடும்பத்தினர்.
அன்றே இன்விடேஷன் கார்ட் செலெக்ட் செய்து ஆடர் குடுத்துவிட்டு வந்தும்விட்டார்கள்.
இன்னும் நான்கே வாரங்கள் இடையில் இருக்க இதற்குள் புடவை எடுக்கும் வேலைகள், அனைவருக்கும் புது துணிகள் என்று எடுக்கவேண்டும் என அன்றே மண்டபத்தில் வைத்து அமர்ந்து பேசிமுடிவு செய்தார்கள்.
மறுநாள் முகூர்த்த உடைகள் எடுக்க செல்ல வேண்டும். அன்றே திருமாங்கல்யமும் எடுக்கவேண்டும் என்பதால் மகனுக்கு முன்பே சொல்லவேண்டும் என விழித்திருந்தார் அவனுக்காக.
கதிர் வழக்கம் போல இரவு வீடு வந்து சேர்ந்தவன் சாப்பிட்டு முடிக்கும் பொழுது யமுனாவிடம்,
“என்னம்மா ஏதாவது சொல்லனுமா?…” என்றான்.
“ஆமாப்பா என்னவோ போன்ல பார்த்துட்டு இருந்தியா? அதான் முடிச்சுட்டு வரட்டும்னு இருந்தேன்…”
“இல்ல சொல்லுங்க. இத நான் அப்பறமா பார்த்துக்கறேன்…”
பேச்சு ஆரம்பிக்கும் பொழுது அவர்களோடு சேர்ந்து பூங்காவனமும் வந்து அமர்ந்துகொண்டார்.
“நாளைக்கு நாள் நல்லா இருக்குது. புடவை, தாலி வேலை எல்லாம் முடிக்கனும்…”
“நல்லா செய்யலாமே? எவ்வளவு தேவைப்படும்ன்னு சொல்லுங்க. அப்பா அக்கவுண்ட்ல அனுப்பிடறேன்…” என்றான் கதிர்.
“அதை எல்லாம் நாங்க பார்த்துக்கிடுவோம்…”
“ஓஹ், அப்பறம் என்ன?…”
“என்னவா? நீ வரவேண்டாமா? உனக்கும் சேர்த்து தான துணி எடுக்கனும்?…”
“ம்மா, பட்டுவேஷ்டி சட்டை எடுக்க போறீங்க? என்னோட ஷர்ட் சைஸ் தான் உங்களுக்கு தெரியுமே?…”
“அதுக்கு சரி நாங்க எடுத்துருவோம். முதநாள் மாப்பிள்ளை அழைப்புக்கு, நிச்சயதார்த்தத்துக்கு எல்லாத்துக்கும் உடுப்பு வேண்டாமா? கல்யாணத்தன்னைக்கு போடறதுக்கும் வேற உடுப்பு வேணும்ல…” என்ற யமுனா,
“என்ன இடிச்ச புளியாட்டம் உக்கார்ந்திருக்கீங்க? சொல்லுங்க. எப்ப பாரு வாய் பார்த்துட்டே இருக்கறது…” என்றார் யமுனா பூங்காவனத்தை.
மகன் தன் பேச்சை ஒரு வார்த்தையில் கேட்காமல் இத்தனை விளக்கம் சொல்ல வைக்கிறானே என்ற கோபத்தை எல்லாம் கணவரிடம் காண்பிக்க,
“ஆமாப்பா, நீயும் வரனும். அந்த பொண்ணும் எதிர்பார்க்கும் தானே? வந்துடு…” என்றார் பூங்காவனம் மகனிடம்.
“நாளைக்கு ஷெட்க்கு போகனும்மா. நான் போனா தான் வேலை ஒழுங்கா நடக்கும். இல்லைன்னா சரியா கிளீன் பண்ண மாட்டாங்க. மூணு பஸ் ஷெட்ல நிக்குது…”
கதிருக்கு வேலை வேறு தலைக்கு மேல் இருந்தது. இதை முடித்து திருமணத்திற்கான வேன், கார் எல்லாவற்றையும் வேறு சர்வீஸ் பார்த்து கிளீன் செய்து தயாராக வைத்திருக்கவேண்டும்.
அந்த தேதியில் ஏற்கனவே புக்காகி இருந்த ட்ரிப்ஸ் எல்லாவற்றுக்கும் மாற்று ஏற்பாடும் செய்யவேண்டும். இப்படி வேலைகள் இருக்க அவனுக்கு செல்வதே முடியாததாக தோன்றியது.
“தாலி எடுக்க கண்டிப்பா நீ இருக்கனும். புடவை கூட நாங்க சமாளிச்சுடுவோம். ஆனா உனக்கு மத்த ட்ரெஸ் எல்லாம் நீ தான் எடுக்கனும்…” என்ற யமுனா,
“அந்த பொண்ணுக்கும் ஒரு ஆசை இருக்கும்ல. ஒரே கலர்ல ட்ரெஸ் போடனும், இல்லை நீ இபடித்தான் போடனும்னு எதாச்சும் யோசனை வச்சிருந்தா? இந்த காலத்து பிள்ளைங்க அப்படித்தான இருக்கீங்க?…” என்றார்.
“ம்மா…” என்றவனுக்கு சிரிப்பு வர,
“இதெல்லாமா நான் சொல்லிட்டு இருக்க? ஒரு ஒருமணி நேரமாவது வந்துட்டு போ. அதுவும் கல்யாணத்துக்கு எடுத்து குடுக்கவேண்டியது நம்ம முறை. அத உருப்படியா செய்யனும்…” என சொல்லி எழுந்துகொண்டார் யமுனா.
“நாளைக்கு உன் மாமாக்கிட்ட வேற பேசனும். அவரை வர சொல்லனும். பத்திரிக்கை அடிச்சாச்சா? என்னன்னு கேட்டியா?….”
“இன்னும் இல்லைம்மா. ரெண்டு நாள் ஆகும். முடிஞ்சதும் இன்விடேஷன் வீட்டுக்கே வந்திரும். நான் சொல்லிட்டேன்…” கதிர் அவரிடம் சொல்லிவிட்டு போனை பார்த்துக்கொண்டு இருந்தான்.
“அப்பறம் அதுக்கு ஒருக்க கோவிலுக்கு போகனும்…”
“எதுக்கு?…”
“என்னது எதுக்கு? மொத பத்திரிக்கையை நம்ம குலதெய்வம் கோவில்ல போய் வச்சு பொங்கல் வச்சு சாமி கும்பிட்டு வந்த அப்பறம் தான எல்லாருக்கும் குடுக்க ஆரம்பிக்க முடியும்?…”
“அதுக்கு திருநெல்வேலி வரைக்கும் போகனுமா?…”
“குலதெய்வம் கோவில் அங்க இருந்தா அங்க தான் போகனும். திருநெல்வேலிக்கு போகாம திருத்தணிக்கா போக முடியும்?…” என ஒரு வேகத்தில் தர்ஷனிடம் பேசுவதை போல பேசிவிட்டு கதிரின் அமைதியில் அவனின் முகத்தை பாவம் போல பார்த்தார்.
“இல்ல, ஒரு வேகத்துல சொல்லிட்டேன். நீ இத்தனை கேள்வி கேட்டுட்டே இருந்தா? நாங்க என்ன உன்னையா கூப்பிட்டோம்?…” என சமாளித்தார் யமுனா.
“அப்போ போய்ட்டு வாங்க. என்னை இழுக்காதீங்க. அடுத்தடுத்து நமக்கு புக்கிங் ஆகிட்டே இருக்குது. பஸ் பத்தலை…” என்றான் கதிர்.
முகத்தில் சந்தோஷம் இருந்தாலும் வேலையின் அசதியும் அவனிடம் அதிகமாகவே இருந்தது.
“பஸ் பத்தலைன்னு இன்னும் வாங்கறதா இருக்கியா?…” யமுனா கேட்க,
“இன்னுமா? இல்லை. இருக்கற கடனை முடிப்போம். நம்ம பஸ்ன்னா நம்ம நீட்டா மெய்ண்டெய்ன் பண்ணலாம்ன்னு தான் யோசிக்காம பஸ்ல காசை போட்டேன். இதை முதல்ல முடிப்போம். அப்பறமா வாங்கறதா வேண்டாமான்னு யோசிப்போம்…”
ட்ராவல்ஸ் ஆரம்பித்தபொழுது இரண்டு பஸ்கள் பழையதை தான் வாங்கி அதை புதுப்பித்து ட்ரிப்களுக்கு விட்டுக்கொண்டு இருந்தான்.
புக்கிங் அதிகமாகும் நாட்களில் அவசரத்திற்கு என்று வெளியே பஸ்களை வாடகைக்கு எடுக்க அது கட்டுபடியாகாமலும், சரியான மெய்ண்டனன்ஸ் இல்லாமலும் இருக்க அழுத்தி சொல்லி பார்த்தும் அவர்களின் அலட்சியத்தில் தான் தானே பஸ்களை வாங்கியது.
முதலில் யோசனை தான். இப்பொது தான் கால் பதித்திருக்கிறோம், இந்த நேரத்தில் அகலக்கால் வைத்து இதை பெரிதாய் செய்ய வேண்டுமா என யோசனை.
ஆனால் அவன் தன் மீதான நம்பிக்கையில் எடுத்துவிட்டான். ஓன்று இரண்டாகி நான்காகி எட்டாகி என இப்போது பஸ் மட்டுமல்லாது கார், வேன், டெம்போ ட்ராவல்ஸ் என லோக்கல் சிட்டிக்குமே தங்களது ட்ராவல்ஸ் பெயரை அணுகும்படி நற்பெயரையும் சம்பாதித்திருந்தான்.
எந்த இடத்திலும் தொய்ந்துவிடாமல் இளைபாருதலும் இன்றி அடுத்தடுத்து அவன் ஓடிக்கொண்டே இருக்க இப்போது தான் தோன்றியிருந்தது இதை முடித்துவிட்டு ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டு இளைப்பாறலாம் என.
“ஹப்பா இப்பவாச்சும் உனக்கு இந்த யோசனை தோனுச்சே. அந்தமட்டும் நிம்மதி…” என்ற யமுனா,
“சரி நாளைக்கு எந்நேரம்ன்னு உனக்கு காலையில சொல்றேன். முடிஞ்சா ட்ரெஸ் எடுக்கவும் வந்தா நல்லா இருக்கும்…” என தன் ஆவலை வெளிப்படுத்த,
“பார்க்கலாம்மா. காலையிலையே ஷெட்க்கு போய்ட்டு வேணா வர ட்ரை பன்றேன்…” என்று சொல்லிவிட்டு சென்றதே யமுனாவிற்கு நம்பிக்கை வந்துவிட்டது.
“என்னவாம்? அப்படியே மூஞ்சிஇல லைட்டெரியுது?…” என கிண்டல் பேசினார் பூங்காவனம்.
“என்ன லைட்டு? அதையும் சொல்றது தானே?…” என்ற யமுனா மகன் உள்ளே சென்று கதவை அடைத்துவிட்டதை பார்த்தவர்,
“விட்டா நீங்களே எண்ணையை ஊத்தி எரிச்சிருவீங்க போல என் மூஞ்சில?…” என திரும்பினார் கணவரிடத்தில்.
“உன் முகம் பிரகாசமா இருக்குன்றதை தான் அப்படி சொன்னேன். நீ ஏன் இப்படி அர்த்தம் எடுத்துக்கற?…” என்ற பூங்காவனம், ‘பேசாம போயிருக்கலாம்.’ என காலம் கடந்து யோசித்தார்.
“பின்ன சொல்றதை உருப்படியா சொல்லனும். அதை விட்டு லைட்டு எரியுது. விளக்கு அணையுதுன்னுட்டு…”
“இப்ப என்னத்துக்கு நீ வெடுவெடுக்குற? அவன்கிட்ட ஒத்த வார்த்தை அதட்டி பேச முடியலை. அம்புட்டு ஏத்தமும் என்கிட்ட தான்…” என அவர் பொறுமை,
“ம்க்கும், புருஷன்னு நாலு வார்த்தை உங்கக்கித்தான் ஆத்தமாட்டாம பேசறேன். அது பொறுக்கலையா? சரி சாமி. நானும் வாயை மூடிக்கறேன். போதுமா? நிம்மதியா?…” என கோவித்துக்கொண்டு உள்ளே செல்லும் பொழுதே,
“இந்த வீட்டுல ஒத்த வார்த்த பேச இந்த மனுஷிக்கு உரிமை இல்லையா? வாயில்லா பூச்சியா போய்ட்டேன். வேற எவளாச்சும் இருந்தா அப்ப தெரிஞ்சிருக்கும் சேதி…” என திரும்பி திரும்பி பூங்காவனத்தை பேசிக்கொண்டே அவர் செல்ல,
“இப்ப போய் சமாதானம் செய்யலைன்னா விடிய விடிய பேசுவாளே?…” என நொந்துகொண்டே பின்னே சென்றார் பூங்காவனம்.
“இங்க பாரு இப்ப நான் என்ன கேட்டுட்டேன்? முகத்துல சந்தோஷத்துல பளீருன்னு மின்னலட்டிக்குதுன்னு தான சொல்ல வந்தேன். அதை முடிக்க விடலையே நீ?…” என்றார் கெஞ்சுதலாக.
கட்டிலில் சாய்ந்திருந்தவர் தனது கூந்தலை அள்ளி கொண்டையாக சுருட்டி முடிந்தவர்,
“அதுசரி, புள்ளையில்லாத வீட்டுல கிழவன் துள்ளி குதிச்சானாம்? அந்த கதையால இருக்குது? மின்னலாம், பளீராம். மகன்கிட்ட வாடா மகனேன்னு கூப்பிட வாய் வரலை. இங்க வந்து பக்கம் பக்கமா வசனம் பேசறது. போயிருங்க…”
“அதான் நீ கூப்பிட்டியே?…”
“நீங்க எங்க கூப்பிட்டீங்க? அதுவும் நான் சொன்னதும் தான் அகூப்பிட்டீங்க? இப்படி அவன் எல்லாத்துலையும் ஒட்டாம இருந்தா நாளைக்கு அந்த பொண்ணு வந்த பின்னலையும் இப்படித்தான இருப்பான்? அது நல்லாவா இருக்கும்?…”
“இப்ப என்னதான் சொல்ல வர?…”
“ஆமா வராங்க சொல்ல சோத்துப்பானையில சொம்பு விழுந்துருச்சுன்னு. உங்களுக்கே புரியவைக்க முடியல. அவனுக்கு என்னத்த சொல்ல? உங்களுக்கு இருக்கற புத்தி கொஞ்சமாச்சும் அவனுக்கு ஒட்டிக்க வேண்டாமா?…”
“என்ன செய்ய அவனை உன்னை மாதிரியே பெத்துட்ட?…” என்று வேகத்தில் அவர் வாய்தவறி சொல்லிவிட அவ்வளவு தான் யமுனா நெற்றி கண்ணை திறந்துவிட்டார்.
“இப்ப என்ன சொல்ல வரீங்க? அவன் என்ன மாதிரின்னா? அப்பா நான் என்ன மாதிரியாம்?…” என ஆரம்பிக்க பூங்காவனத்திற்கு கண்களின் கருமணிகள் மேவண்ணம் ஒட்டிக்கொண்டது.
“ஆத்தீ யம்மா இதுக்குமேல் தாங்கமாட்டேன். உன்ன மாதிரின்னா அது வேற சொல்ல வந்தேன். நீ எப்படி கட் அன்ட் ரைட்டா பொறுப்பா, எல்லாத்தையும் பார்த்துக்க இருக்க? அப்படி சொல்ல வந்தேன்…” என சொல்ல சொல்ல மூச்சு வாங்கும் போல ஆனது அவருக்கு.
“இப்ப என்ன கேட்டுட்டேன்னு இம்புட்டு படபடப்பு? அதை விடுங்க. இவன் அந்த புள்ளைட்ட பேசறானா இல்லையானே தெரியலை? அவன் முகத்தை வச்சு ஒன்னும் கண்டுக்க முடியலையே? தர்சனுக்கு தெரியுமா?…” என கேட்க,
“எனக்கென்ன தெரியும்? அதான் உன்ன மாதிரின்னு சொல்லிட்டேனே?…” என மறுபடியும் தலையில் கை வைத்தபடி அவர் சொல்ல,
“என்னது?…”
“அட இரும்மா, முடிச்சுக்கறேன். உன்னை மாதிரின்னா நீ என்ன நினைக்கிறன்னு முகத்துல காமிக்கிறியா? இல்லைல. அது மாதிரின்னு சொல்ல வந்தேன். எனக்கு தூக்கம் வருது. நீ தர்சனுக்கு போன் போட்டு விஹ்ச்யத்தை கேட்டுக்க…” என போனை எடுத்து அவரின் கையில் கொடுத்துவிட்டு படுத்துவிட்டார்.
“இந்நேரம் போனை போட்டு தூங்கற பையன் உறக்கத்தை கெடுக்கவா? ஆனாலும் உங்களுக்கும் இம்புட்டு ஆகாது?…” என போனை ஓரமாய் வைத்துவிட்டு தானும் படுத்துவிட்டார் யமுனா.
‘என் உறக்கத்தை தவிர மத்த எல்லாரை பத்தியும் கவலைப்படுவா என் பொண்டாட்டி. பூங்கா நீ குடுத்துவச்சது அம்புட்டு தான்டா’ என நினைத்தபடி தூங்கி போனார்.
இவர்கள் இங்கே வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரம் கதிர் தன்னறையில் ஒருபக்கம் வேலையும் இன்னொருபக்கம் போனில் தாமரையுடனும் இருந்தான்.
“இப்போ தான் சாப்பிட்டு வந்தேன். அம்மா சொல்லிட்டு இருந்தாங்க நாளைக்கு புடவை, மாங்கல்யம் எடுக்க போகனும்னு…” என அவளிடம் சொல்ல,
“ஆமா, என்னையும் லீவ் போட சொல்லிருக்காங்க…” என்றாள் அவளும்.
“ஓஹ், நாளைக்கு லீவா தாமரை?…”
“இல்லை இல்லை. ஆஃப் டே பர்மிஷன் தான் போடனும். இப்பவே நிறைய லீவ் எடுத்துட்டா கல்யாணத்தப்போ கிடைக்கிறது கஷ்டமாகிடும்…”
“ஹ்ம்ம், புரியுது…” என்றவனின் மெலிய சிரிப்பு அவளை அடைய பேச்சை மாற்றும் விதமாக,
“நாளைக்கு நீங்க வருவீங்களா?…” என்றாள் தாமரை.
“வரனுமா? நீ என்ன சொல்ற?…” என கேட்டதும் அதற்கு என்ன பதில் சொல்வது என ஒரு நொடி நிதானித்தவள்,
“இல்லை, வரனும்னு தான் நினைப்பேன். ஆனா உங்க வொர்க் நாளைக்கு எப்படின்னு தெரியலையே?…” என்றாள் தெளிவாக.
“ஓகே, நாளைக்கு டைம் எப்படின்னு பார்த்துட்டு வரேன்…”
“நிஜமாவா?…”
“ஹ்ம்ம், முடிஞ்சளவு வர ட்ரை பண்ணுவேன். ஆனா மாங்கல்யத்துக்கு தங்கம் எடுக்கறப்போ கண்டிப்பா இருக்கனும்னு சொல்லிட்டாங்க அம்மா. அதனால அந்த நேரம் கண்டிப்பா இருப்பேன்…” என்றான் உறுதியுடன்.
“அப்போ ட்ரெஸ் உங்களுக்கு?…” என கேட்டுவிட,
“இதை கேட்க ஏன் இத்தனை யோசனை தாமாரை?…” என்றான் அவளிடத்தில்.
இத்தனை நாட்களில் தினமும் சிறிது நேரமாவது பேசிவிடுவார்கள். அதில் அவன் உணர்ந்துகொண்டது அவளுக்கு பிடித்திருந்தாலும் தன்னிடம் பேச யோசித்து யோசித்து வார்த்தைகளை அவள் தேர்ந்தெடுப்பதை போலவே இருந்தது.
இன்றும் அப்படியே பேச கதிருக்கு அதை ஏற்கமுடியவில்லை. இப்போது நேரடியாகவும் கேட்டுவிட தாமரை தான் திணறினாள்.
“தாமரை, நான் வரனுமா வேண்டாமா?…” என்றான் கதிர்.
“வரனும் தான். ஏன்?…”
“ஏன்னு நான் ஏற்கனவே கேட்டுட்டேன்…” என்றவன்,
“நாம ஒன்னும் சின்ன பிள்ளைங்க இல்லை. இப்படி யோசிச்சு தயக்கமா பேசறது? எனக்கு ஏன்னு புரியலை. தி சேம் டைம் ஒரு பேச்சுக்கும் ஃப்லோவ்ல எதாச்சும் வந்தா சைலன்ட் ஆகிடற?…”
அவனின் குரலில் கோபம் தொனித்ததோ என்னவோ தாமரைக்கு படபடப்பானது.
“இல்லை, அப்படி இல்லை. எனக்கு இது எல்லாம் கொஞ்சம் புதுசா இருக்கு…”
“எனக்கு மட்டும் டெய்லி ரெண்டு மூணு கால் பேசி பழக்கமா?…” இப்பொழுது உண்மைக்கும் கடுப்பாகிவிட்டான்.
“ப்ளீஸ் கதிர்…” என்றவள்,
“இல்லை நிஜமா எனக்கு பேசனும்னு தோணுது. ஆனாலும் ஆட்டோமேட்டிக்கா ட்ரபிள் ஆகிடுது. நான் என்ன பன்றது?…” என்றாள் அவனிடமே மெல்லிய குரலில்.
“ஓகே, ஓகே. இப்போ சொல்லு. நான் வரனுமா? வேண்டாமா?…”
“இதென்ன திரும்பவும் இதே கேள்வி? அதான் சொன்னேனே வாங்கன்னு…” என்றாள் உடனே.
“ஹ்ம்ம், ஓகே. கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன். பர்ஸ்ட் டே என்கிட்டே பேசின தாமரை மாதிரி இல்லை. அதான்..”
“அப்போ சண்டை தான் போடனும் உங்க கூட…”
“கூடவே கல்யாணத்தை தள்ளி போடறதுன்னும் கேட்கனும்…” என இவனும் அவளை கலாய்க்க,
“உங்களுக்கு மறுக்க எதுவுமில்லைன்னும் நீங்க சொல்லவும். யோசிச்சு சொல்லுன்னு. இதை விட்டுட்டீங்க…” என்றாள் தாமரை.
மீண்டும் அந்த கலகலப்பு திரும்பி இருந்தது அவர்களிடத்தில். மறுநாள் எந்த நேரம் என்னவென்று அவன் கேட்டுக்கொண்டிருக்க,
“நிவி வந்துட்டா….” என்றாள் தாமரை.
“ஓகே, மெசேஜ் பன்றேன். இப்போ போனை கட் பன்றேன்…” என்று சொல்லி வைத்துவிட்டான்.
“இன்னுமாக்கா பேசிட்டு இருக்க? நீ தூங்கிருப்பன்னு வந்தேன் நான்…” என்று நிவி அறைக்குள் வந்து கதவை மூடிவிட்டு வந்து புக்கை ஷெல்பில் வைத்துவிட்டு வந்தாள்.
“என்ன மாம்ஸ் என்ன சொல்றார்? நாளைக்கு வராராமா?…” என கேட்டவள் டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூம் சென்றாள்.
அவளின் பேச்சு காதில் விழுந்தாலும் இங்கே கதிரிடம் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் செய்து பேசிக்கொண்டிருந்தாள் தாமரை.
“க்கா, நான் கேட்டா பதில் சொல்லமாட்டியா?…” என முகத்தை துடைத்தபடி மீண்டும் நிவி வர,
“எல்லாரும் போகும் போது அவர் மட்டும் வராமலா இருப்பாரு? வருவார்…” என்று தாமரை உறுதியுடன் சொல்ல,
“பார்ரா. ஹ்ம்ம். சரி நாளைக்கு எங்கு கண்டிப்பா லெஹேங்கா வேணும். நீதன அப்பாட்ட சொல்லனும்க்கா…” என்றாள் அவளிடம்.
“நான் சொல்லிட்டேன். அம்மா வேண்டவே வேண்டாம்ன்னு சொல்றாங்க. என்னை என்ன செய்ய சொல்ற?…”
“என்னக்கா நீயே இப்படி சொல்ற? நான் எவ்வளவு ஆசையா இருந்தேன். போக்கா…” என்றாள் நிவேதா.
“இன்னும் தூங்கலையா ரெண்டுபேரும்?…” என சரளா மகள்களுக்கு பால் கொண்டுவந்தார்.
“என்னம்ம்மா வெறும் பால் மட்டும்? வரும் போதே இன்னொன்னும் கொண்டு வந்ருவீங்களே? எங்க அது?…” என நிவேதா நக்கலாக கேக்க,
“ஏன்டி சொல்லமாட்ட? ஏற்கனவே ஊருப்பட்ட கண்ணு. நானே டெய்லி திருஷ்டி சுத்தி அதை குறைக்க பார்த்தா உனக்கு கிண்டலா? போய் எடுத்துட்டு வரேன். பாலை குடிச்சு முடிங்க…” என்று சொல்லிவிட்டு அவர் செல்ல,
“க்கா, இப்போ பேசு. இதான் சரியான நேரம். அம்மாக்கிட்ட நீயே சொல்லு…” என நிவேதா சொல்லிக்கொண்டிருக்க மீண்டும் சரளா வந்தார்.
“இன்னுமா குடிக்கலை.சரி அதை அப்படி வச்சுட்டு இங்கிட்டு வந்து நில்லுங்க…” என்றவர் அவர்களை திசையில் நிற்க வைத்து இருவருக்கும் திருஷ்டி சுற்றியவர்,
“நான் கையை கழுவிட்டு வரதுக்குள்ள குடிச்சு முடிங்க…” என சொல்லி வெளியேறினார்.
“அக்கா சொல்ல போறியா இல்லையா?…” என நிவேதா பாவமாய் கேட்க,
“இருடி வரட்டும்…” என்று தாய்க்காக காத்திருக்க பாத்து நிமிடத்தில் வந்துவிட்டார்.
“வர வர பால்ல தண்ணி ரொம்ப கலக்கறான். தயிருக்கு ஊத்தி வச்சா பாதிக்கு பாதி தண்ணி…” என புலம்பிக்கொண்டே வர,
“பாக்கெட் பால் வாங்கிருங்கம்மா…” என்றாள் நிவேதா.
“அது எனக்கு தெரியாதாக்கும்? பாக்கெட் இங்க யாருக்கு புடிக்குது? அதோட குடிக்கவும் உங்களுக்கு இறங்காது…” என்றார்.
“சரி அதை விடுங்கம்மா. அவ தான் ஆசைப்படறா இல்ல. எடுத்துக்கட்டுமே?…” என தாமரை தங்கைக்கு பரிந்துகொண்டு வந்தாள்.
“அது எனக்கு தெரியாதா?…”
“உங்களுக்கு எல்லாம் தெரியும். போங்கம்மா…” என படுத்துக்கொண்டாள் நிவேதா.
“என்னடி இது சின்னப்பிள்ளை மாதிரி. வேணும்னா பட்டுல சுடிதார் எடுத்துக்க. இப்ப அதுவும் தானே பேஷனா இருக்குது. லெஹெங்கா எடுத்து அதை நீ எத்தனைதடவை போட முடியும்? ஆசைக்கு அவ்வளவு காசு போட்டு எடுத்து சும்மா பெட்டிக்குள்ள அடைக்கறதுக்கா?…” என்றவர்,
“அதுவும் நாம இப்ப இருக்கற சூழ்நிலைக்கு. கல்யாணத்துக்கு அவங்க தான் எடுக்கறாங்க. நிச்சயத்துக்கு உனக்கு பிடிச்ச மாதிரி எடு. அந்த போச்சம்பள்ளி அனார்கலி கேட்டுட்டு இருந்தியே. எடுத்துக்கோ. துணிக்கு துநியுமாச்சு. அடிக்கடி போட்டமாதிரியும் ஆச்சு…”
சரளா சொல்லவும் நிவேதாவும் யோசித்தாள். ஆசையா இல்லை துணியின் பயனா என்று பார்க்கும் போது சரளா சொல்வது தான் சரி என பட்டது.
“ஓகே ம்மா. நீங்க சொல்ற மாதிரியே எடுத்துக்கறேன்…” என ஒப்புக்கொண்டாலும் மனதிற்கு கஷ்டமாக இருந்தது நிவேதாவிற்கு.
“சரி தூங்குங்க. நாளைக்கு கிளம்பனும். கொஞ்சம் முன்னாடி நாம போனா மாமாவுக்கு, அத்தைக்கு எல்லாம் எடுத்து வச்சிடலாம்…” என்று சொல்லிவிட்டு கதவை அடைத்துவிட்டு சென்றார் சரளா.
மறுநாள் பட்டெடுக்க சரியான நேரத்திற்கு கதிரும் வந்து சேர்ந்தான் அவர்களுடன். அதிலேயே தாமரை முகம் மலர்ந்துவிட்டது.