அதிகாலை நான்கரை மணி போல ராமேஸ்வரத்தில் இருந்து வீடு திரும்பி இருந்தார்கள் தாமரையின் குடும்பத்தினர்.
வீட்டின் கதவில் சாவி துவாரத்தில் கையை வைக்கவும் கதவு அப்படியே பின்னால் சாய்ந்தது.
அந்த சத்தத்தில் பயந்து பின்னே நகர்ந்தவர்களுக்கு ஒரு நொடி என்ன நடந்தது என விழி பிதுங்கி நிற்க,
“ஐயோ நகைங்க…” என கதவின் மேலே ஏறி ஓடி சென்றார் சரளா.
சோமநாதனுக்கு நெஞ்சே நின்றுவிடும் போல ஆனது. அங்கேயே நின்றுவிட்டார் அவர்.
கதவு விழுந்த சத்தத்தில் அப்போதுதான் எழுந்திருந்த அக்கம்பக்கத்தினர் ஒருசிலர் வந்து பார்க்க அவர்கள் போட்ட கூச்சலில் அங்கையின் குடும்பமும் வந்துவிட்டது.
“ஐயோ போச்சே. என் பொண்ணு கல்யாணம்…” என்று சரளா உள்ளிருந்து அலறிய அலறலில் இங்கே சோமநாதன் அப்படியே தொப்பென்று அமர்ந்தார்.
“ஐயோ என்னாச்சு? அண்ணே எந்திங்க முதல்ல. அண்ணே…” என அங்கை சொல்ல அவரின் கணவர்,
“அங்கை நீ உள்ள போய் என்னன்னு பாரு…” என சொல்லி மனைவியை உள்ளே அனுப்ப உடன் இன்னும் இரண்டு பெண்கள் சேர்ந்து சென்றார்கள்.
வீடே கலைந்து கிடந்தது. பத்திரங்கள் எல்லாம் இறைந்து கிடக்க பீரோ உடைக்கப்பட்டு ஒன்று கீழே கவிழ்க்கப்பட்டு இருந்தது.
“எப்படி ஒரு சத்தமும் கேட்கலையே?…” என உடன் வந்த பெண்கள் பேசிக்கொள்ள,
“பார்த்தீங்களாக்கா. என் பொண்ணு கல்யாணத்தை நான் எப்படி நடத்துவேன். வாய கட்டி வயித்தை கட்டி கொஞ்சம் கொஞ்சமா என் பொண்ணுங்க பிறந்ததுல இருந்து சேர்த்துட்டு வர நகையும் பணமும். ஐயோ இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணத்தை வச்சுட்டு நாங்க என்ன பண்ணுவோம்?…”
வீட்டில் உண்டியலில் வைத்திருந்த பணம், அடுப்படியில் அவசரத்திற்கு என்று போட்டுவைத்திருந்த பணம் முதற்கொண்டு திருட்டு போயிருந்தது.
“எப்படி அக்கம்பக்கத்தில் சிறு சத்தம் கூட எழாமல் இப்படி களவாண்டு சென்றிருக்கிறார்கள்…” என பக்கத்தில் உள்ளவர்கள் வியந்து போக சிலர் உஷாராக இருந்தார்கள்.
இனி வீட்டில் எந்த பணமும், நகையும் வைத்துக்கொண்டு எங்கும் சென்றுவிட கூடாதென்று.
“யாரோ நல்லா நோட்டம் விட்டிருக்கான். இத்தனை வருஷம் இல்லாம இதென்ன புதுசா? எவனோ கைவரிசையை காட்டியிருக்கான்…” என அருகில் இருந்தவர்கள் பேசிகொண்டிருக்க அவர்களே போலீசுக்கும் தகவல் கொடுத்துவிட்டார்கள்.
அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் இருந்து போலீஸ் வந்துவிட அத்தனைபேரிடமும் விசாரித்துக்கொண்டு இருக்கும் பொழுதே மகள்களையும், மனைவியையும் பார்த்தபடி மூச்சுவிடவும் முடியாமல் தளர்ந்துபோய் இருந்த சோமநாதனுக்கு கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.
சரளா வாய்விட்டு கதறி அழுது புலம்பி தீர்க்க சோமநாதன் மனதிற்குள்ளேயே அந்த அழுத்தத்தை கடக்க முயன்றார்.
அதுவே அவரின் இதயத்தை தாக்க பலமான ஒரு வலி சுர்ரென்று சோமநாதனின் நெஞ்சில் எழ மனைவி, மக்களை பார்த்தபடியே சரிந்து பின்னால் சாய்ந்தார் அவர்.
“இல்ல இல்ல. நம்ம வேலு கார் எடுத்துருவோம். ஆம்புலன்ஸ் எப்ப வர?…” என இன்னொருவர் அடுத்த தெருவில் இருக்கும் வேலுவின் வீட்டிற்கு சென்றார்.
உடனே அவனை அழைத்துக்கொண்டு காருடன் வர தாமரை தான் அத்தனையையும் பார்க்கவேண்டிய இடத்தில் நின்றாள்.
“தாமரை நீ இங்க இரும்மா. நாங்க பக்கத்துல ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டு வந்திடறோம். அங்கை உனக்கு துணைக்கு இருப்பா…” என்று அங்கையின் கணவர் தவசி சொல்லவும் விம்மலை அடக்கியவளாக தலையாட்டினாள்.
சோமநாதனை காரில் ஏற்றி, சரளாவும், நிவியும் உடன் சென்றார்கள். சரளா அழுதுகொண்டே வர தவசி நிவேதாவை தைரியமாக பேச சொன்னார்.
“அப்பாவுக்கு ஒன்னும் இல்லை. நீயே ஒரு டாக்டர். நீ தான் அம்மாவை பார்த்துக்கனும். நீயே அழுதுட்டு இருந்தா எப்படி நிவி?…” என அவர் தைரியம் சொல்ல நிவியும் சற்றே தன்னை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவள் சோமநாதனை பரிசோதித்துக்கொண்டே தான் வந்தாள்.
“ம்மா, இப்ப போய்டலாம். ஒன்னு இல்லை. அப்பாவுக்கு சரியாகிடும்…” என செல்லும் வழியில் தன்னுடைய அழுகையை அடக்கியபடி சொல்லிக்கொண்டே தான் வந்தாள்.
ஹாஸ்பிட்டல் வந்து சேர்த்து சிகிச்சை ஆரம்பிக்கவும் சரளாவும், நிவேதாவும் வெளியே அமர்ந்திருந்தார்கள்.
தவசியும் சில நொடி யோசனைக்கு பிறகு அந்த நேரம் பூங்காவனத்திற்கு அழைத்துவிட்டார்.
“என்ன தவசி இந்த நேரம்?…” என்று பூங்காவனம் கேட்க,
“அண்ணே ஒரு விஷயம் நடந்து போச்சு…” என்று விவரத்தை விளக்க,
“என்ன தவசி? என்ன சொல்ற? நேத்து கூட கிளம்பிட்டோம்ன்னு சொல்லிட்டு இருந்தாரே? வந்து நாளைக்கு ரெண்டுபக்கமும் நெருங்கின சொந்தத்துக்கு சேர்ந்தே போய் பத்திரிக்கை வைப்போம்ன்னு…”
பூங்காவனத்திற்கு மிகுந்த வருத்தமாய் போய்விட்டது. இதை எப்படி யமுனாவிடம் சொல்ல என்று மெல்ல அவரை எழுப்பினார்.
“என்னங்க? நேரமாகிருச்சா? அதுக்குள்ளே ஆறாகிருச்சா?…” என்றார்.
அவர்களும் முதல் நாள் தான் தங்கள் குடும்பத்து குலதெய்வத்திற்கு பூஜை முடித்து சென்னை திரும்பி இருந்தார்கள்.
“தவசி நான் அப்பறமா பேசறேன். கூட இருந்து பார்த்துக்கோப்பா…” என லைனில் இருந்த தவசியிடம் சொல்லி போனை வைத்துவிட்டு மனைவியை பார்த்தார்.
“தவசியா? அங்கை வீட்டுக்காரரா?…”
“ஆமா யமுனா…”
“என்ன இந்த நேரத்துல அவரு போன்ல? யாருக்கும் ஒண்ணுமில்லையே?…” என்றார் பதட்டத்துடன்.
ஏனென்றால் பூங்காவனத்தின் முகம் அப்படி இருந்தது. அதிலேயே அந்த பதட்டமும் தொற்ற யமுனா பயந்து போனார்.
“ஆமா, இன்னைக்கு காலையில தான் வந்திருக்காங்க…” என்றவர் தவசி சொல்லியவற்றை சொல்ல அதிர்ந்து போனார்.
பெண் பார்த்துவிட்டு வந்த பின்னர் கோவிலில் வைத்து பேசியதை எல்லாம் நினைத்து பார்த்தவருக்கு தாளவே முடியவில்லை.
“முதல்ல நாம கிளம்புவோம். அங்க அந்த பொண்ணுங்க என்ன நிலமையில இருக்காங்களோ?…” என எழுந்தவர் கதிரின் அறையை வந்து தட்டினார்.
அவன் அப்போதுதான் எழுந்து குளித்து கொண்டிருந்தான். கதவு தட்டும் சத்தம் கேட்காமல் பாத்ரூமில் இருக்க இவர்கள் போட்ட சத்தத்தில் தர்ஷன் வந்துவிட்டான்.
“ம்மா என்னாச்சு? ஏன் காலையிலயே போட்டு அவனை டிஸ்டர்ப் பன்றீங்க? மாடில இருந்து நானே வந்துட்டேன் நீங்க பன்றதுல…” என கீழே இறங்கி வந்தான்.
“தர்சா, நம்ம தாமரை வீட்டுல எல்லாம் கொள்ளை போயிருச்சாம்டா. அண்ணனுக்கு மாரடைப்பாம். இப்பத்தான் அங்கை புருஷன் போன் பண்ணாரு…” என இளைய மகனிடம் சொல்ல மூத்தவனும் வந்துவிட்டன் தலையை துவட்டியபடி.
“என்னம்மா? என்னாச்சு? பதட்டமா இருக்கீங்க?…” என கதிர் வந்ததும் அவனிடம் விஷயத்தை சொல்லவும் ட்ராவல்ஸ்க்கு போன் செய்து கார் எடுத்து வரும்படி சொல்லியவன்,
“பதட்டப்படாதீங்க. அங்க என்னன்னு போய் விசாரிப்போம்…” என்றவன் தாமரைக்கு அழைத்தான்.
அவள் அங்கே போன் பேசும் நிலையிலேயே இல்லை. அவளின் தாய்மாமா வந்துவிட்டிருக்க இங்கே பார்த்துவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிட்டல் சென்றிருந்தார்.
அங்கை தான் தாமரையின் போனை எடுத்தது. கதிர் நடந்ததை கேட்க அங்கையும் அழுதுகொண்டே பேசினார்.
“பாவம் கோவிலுக்கு போய்ட்டு வந்து கதவ திறந்தா அது பொத்துன்னு விழுந்திருச்சு. நாங்க சத்தம் கேட்டு தான் வந்தோம். கதவை அப்படியே நிறுத்தி வச்சிட்டு போயிருந்திருக்கானுங்க. உள்ள ஒத்த குண்டுமணி தங்கமும் இல்லை…”
“சித்தி போலீஸ் என்ன சொன்னாங்க?…”
“ஆக்ஷன் எடுக்கறோம்ன்னு சொன்னாங்க. எழுதி வாங்கிட்டு போயிருக்காங்க. சாயங்காலமா ஸ்டேஷனுக்கு வர சொல்லிருக்காங்க. பாவம் இங்க இந்த பொண்ணு இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்குது. அங்க ஆஸ்பத்திரில அவங்க எப்படி இருக்காங்கன்னே தெரியலை…”
அங்கை சொல்லிக்கொண்டிருக்க அனைத்தையும் கேட்டுக்கொண்டவன் கார் வந்த சத்தத்தில் வீட்டில் இருந்தவர்களை கிளம்ப சொன்னான்.
“சித்தி நான் இப்போ அங்க வரேன். எல்லாரும் வரோம்…” என சொல்லி போனை வைத்தவன் விஷயத்தை சொல்லிவிட்டு,
“ம்மா, நீங்க கார்ல போங்க. நான் பைக்ல வரேன்…” என கதிர் சொல்ல,
“ஏன்ப்பா நீயும் கூடவே வாயேன்…” யமுனா மகனை அழைத்தார்.
“ம்மா, அங்க இருந்து நான் வேற யாரையும் இதுவிஷயமா பார்க்கனும்னா கார் எடுத்துட்டு இருக்க முடியாது. பைக் தான் வசதி. தர்ஷ் உங்க கூட இருப்பான்…” என்ற கதிர்,
“தர்ஷ் நீ கூடவே இரு. இன்னைக்கு லீவ் போடு. ஆபீஸ் போக வேண்டாம். அவங்களுக்கு உதவிக்கு நாம இருக்க வேண்டியதா இருக்கலாம்…”
“அண்ணா நீ?…”
“நான் நம்ம ஆடிட்டர்ட்ட ஏதாவது யாரை வச்சாவது பேச முடியுமான்னு கேட்டுட்டு வரேன். ஒருவேளை அவருக்கு தெரிஞ்சவங்களை வச்சு விசாரிக்க சொல்லலாம். எதுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை தான். கேட்டு வச்சுப்போம். தேவைப்பட்டா…”
கதிர் தன் தம்பியிடம் சொல்லிவிட்டு அவர்களை கிளப்பியவன் தானும் கதவை பூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான்.
தாமரையின் வீட்டை அடைய அங்கே அருகிருந்த மக்கள் எல்லாம் கூட்டம் கூடி நின்று பேசிக்கொண்டிருக்க தாமரை இலக்கில்லா பார்வையுடன் அமர்ந்திருந்தாள்.
வீட்டிலிருந்து செல்லவும் முடியவில்லை. அவளின் மாமா ஹாஸ்பிட்டலுக்கு இப்போதைக்கு வர வேண்டாம் என சொல்லியிருந்தார்.
ஏற்கனவே சரளா மகளை சொல்லி சொல்லி ஏங்கி அழுதுகொண்டிருக்க இப்போது அருகில் இருந்தால் இன்னுமே அழுவார் என்று மறுத்துவிட்டார்.
தந்தையை பார்க்கவும் முடியாமல், தாயின் அருகே இருக்கவும் முடியாமல் தவித்து போய் அமர்ந்திருந்தவளின் பார்வையில் யமுனா படவும் அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை எல்லாம் வெடித்து கிளம்பியது.
“அத்தை…” என அவரை எழுந்து சென்று கட்டிக்கொண்டவளின் கேவலில் தர்ஷனும், பூங்காவனமும் வருத்தத்துடன் பார்த்தார்கள்.
முதல்நாள் மாலை தான் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பும் பொழுது யமுனாவிடம் வீடியோ காலில் புன்னகையுடன் பேசியவள் இன்று இப்படி அழுததை பார்க்கமுடியவில்லை.
சற்று நேரத்தில் கதிரும் வந்து சேர அழுது வீங்கிய விழிகளுடன் அவனை பார்த்தாள்.
அத்தனை பேரின் மத்தியிலும் அருகே சென்று பேச முடியாமல் தள்ளியே நின்றவன் அழாதே என்பதை போல தலையசைத்தான்.
அவனை பார்த்ததும் இன்னும் அழுகை தான் வந்தது. அவனின் தோளில் சாய்ந்துகொண்டால் என்ன என்று தோன்றியது.
ஹாஸ்பிட்டல் சென்று சோமநாதனை பார்த்துவிட்டு வந்தார்கள். தாமரையின் மாமாவுடன் காவல் நிலையம் சென்று நகை, பணம் பற்றிய தகவல் கிடைத்ததா என கேட்டுவிட்டு வந்தனர்.
தேடிக்கொண்டு இருப்பதாகவும், கிடைத்ததும் அழைப்பதாகவும் அவர்கள் பதில் சொல்ல நம்பிக்கையே அற்று போனது அவ்விடத்தில்.
அத்தனை அலட்சியம் அவர்களின் பேச்சில். அவர்களுக்கு அது நூற்றில் ஒரு வழக்கு. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்படி அல்லவே.
நகையை அடகுவைத்த பணத்தை எடுத்து தந்தையின் மருத்துவ செலவுக்கு கட்டிவிட்டாள் தாமரை.
சரளாவுக்கு அத்தனை ஆறுதலாக இருந்தார் யமுனா. திருமண விஷயத்தில் எந்தவிதத்திலும் நம்பிக்கை இழக்காமல் பார்த்துக்கொண்டதில் யமுனாவின் பங்கும், கதிரின் பங்கும் அதிகம்.
“இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் மாமா. பணத்துக்காக, நகைக்காக நீங்க நினைச்சு உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க. கல்யாணம் நல்லபடியா நடக்கும். அதுக்கு நீங்க முதல்ல குணமாகி வரனும்…”என கதிர் நம்பிக்கை தந்திருந்தான் சோமநாதனிடம்.
அலங்கோலமாய் கிடந்த வீட்டை யமுனாவும், தாமரையும் அங்கையுடன் சேர்ந்து ஒழுங்குபடுத்தினார்கள்.
திருமண வேலைகள் ஒருபக்கம் இருக்க பூங்காவனத்தையும் தாமரையின் தாய்மாமா விநாயகத்தையும் வைத்து சொந்தங்களுக்கு பத்திரிக்கை வைக்கும் வேலையை பார்க்க சொல்லியிருந்தார்கள்.
அதனால் திருமணத்தின் வேலைகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை. அது ஒருபுறம் ஜோராக நடந்துகொண்டு இருந்தது.
அக்கம்பக்கத்தின் அநேகபேரின் நினைப்பு என்னவோ இந்த திருமணம் நடக்கவே நடக்காது என்பதை போலவும், இனி எங்கே இந்த குடும்பம் மீண்டு வர போகிறது என்பதை போலவும் உச்சு கொட்டி தங்களின் ஆதங்கத்தையும், ஒருவித காழ்ப்புணர்ச்சியையும் காட்டிக்கொண்டு இருந்தார்கள்.
இதை எல்லாம் காதில் வாங்கியும் யமுனா கண்டுகொள்ளவே இல்லை. அவர் எதையும் கவனிப்பதை போலவே காட்டிக்கொள்ளவில்லை.
பேசினால் பேசட்டும். இப்போதைக்கு அதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்தால் இருப்பவர்களை கவனிக்க முடியாது.
பதிலுக்கு பேசும் நேரத்தில் அவர்களும் தன் பேச்சு சரி என்பதை போல வாதிட என்ன வேண்டுமென்றாலும் பேசுவார்கள். எதற்கு பொல்லாப்பு என்று இருந்துகொண்டார்.
ஒரு வாரத்தில் சோமநாதன் வீட்டிற்கு வந்துவிட அன்று முழுவதும் உடன் இருந்தார் யமுனா.
ஹாலில் வைத்து தான் பேசிக்கொண்டு இருந்தார்கள். நிவேதா, தர்ஷன் கல்லூரிக்கும், ஆபீஸிற்கும் சென்றுவிட, பூங்காவனம் ட்ராவல்ஸில் இருந்தார்.
மாலை யமுனாவை அழைக்க கதிர் வந்திருந்தான். வந்ததும் அவன் பார்த்ததென்னவோ சோமநாதன் யமுனாவின் முன் கண்ணீருடன் இருந்ததை தான்.
“அட இதுக்கு போய் அழுவாங்களா? பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும். என்னைக்கா இருந்தாலும் கிடைக்காமலா போயிரும். நீங்க உழைச்ச காசு அடுத்தவனுக்கு ஒட்டுமா? அவனுக்கு கூலி கிடைச்சே தீரும். விடுங்கண்ணே. கல்யாண சோலி எவ்வளவு இருக்குது…”
யமுனா நடந்ததை எல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பதை போல பேசிக்கொண்டு இருந்தார் அங்கே.
“நீங்க என்னோட கூட பிறந்த பிறப்பா இருந்திருந்தா இதை எல்லாம் பார்த்துருக்க மாட்டேனா? அப்படி நினைச்சுக்கங்க. முதல்ல கண் நிறைய கல்யாணத்தை பார்க்க சரியாகி வாங்க. சும்மா கண்ணீரை சிந்திக்கிட்டு…”
யமுனா சொல்லவும் சோமநாதன் முகத்தில் ஒரு வெளிச்சம் பரவ, தாமரை வந்து கண்ணீருடன் அவரை அணைத்துக்கொண்டாள்.
அவரருகே நின்றிருந்த கதிரவனையே கண்ணிமைக்காமல் அவள் பார்க்க நீர் திரையிட்ட விழிகளின் தடையை மீறி இதுவரை அவன் மீதான ஆசை நேசமென உருவெடுத்தது.
மௌனமான பார்வை, மெல்லிய புன்னகை, விழிகளிலே காண்பிக்கும் அரவணைப்பு என கதிர்.
ஆம், கதிரவனும் தாமரையை அணைத்துக்கொண்டான் தன் விழி தொட்டு உயிரால்.
“சரி எல்லாரும் கண்ணை துடைங்க முதல்ல. வந்ததுல இருந்து ஒரே அழுகை. நான் கிளம்பும் போது எல்லாரும் சிரிச்ச முகமா தான் அனுப்பனும். வாங்க. ஒரு காபியை போட்டு குடிப்போம்…” என யமுனா அனைவரையும் உள்ளே நகர்த்தினார்.
“நீங்க உள்ள போய் படுங்கண்ணே. நல்லா ஓய்வெடுங்க. நாங்க பார்த்துக்குவோம்…” என்று சொல்லி சோமநாதனையும் கிளப்பினார்.
விநாயகம் சோமநாதனுடன் அறைக்கு செல்ல சரளாவும், யமுனாவும் அங்கையுடன் கிட்சனிற்கு செல்ல தாமரையும் கதிரும் தனித்து விடப்பட்டனர்.
“இப்போ நீ சரி ஆகியாச்சா? பீல் ப்ரீ?…” என கதிர் கேட்க,
“ஹ்ம்ம். ஓகே. கொஞ்சம் பயந்துட்டேன்…” என்றவள் கண்ணீருடன் புன்னகைக்க அதை துடைக்க நீண்ட கையை அப்படியே நிறுத்தியவன்,
“தாமரை உன் கையை பிடிச்சுக்கனும்னு தோணுது. ஒன்னும் சொல்லமாட்டியே…” என்றான் அவளிடம்.
அவன் முடிப்பதற்குள் தன் கையை நீட்டிவிட்டவள் அவனின் கையை பற்றிக்கொள்ள லேசாய் அழுத்திவிட்டு விலக்கிக்கொண்டான்.
“நான் கிளம்பறேன். தைரியமா இரு. ஸ்டேஷன் வர சொன்னா மறக்காம எனக்கு கால் பண்ணு. வீட்டுல டல்லா இருந்தாங்கன்னா நீ தான் தைரியம் சொல்லனும். இல்லைன்னா எனக்கு கால் பண்ணு. அம்மாவை அனுப்பி வைக்கறேன்…”
“ஏன் நீங்க வரமாட்டீங்களா?…”
“தாமரை கூப்பிட்டா கதிருக்கு வராம இருக்க மனசிருக்குமா? கூப்பிடு. வரேன். என்னை பார்க்கனும்னு கூப்பிட்டா வருவேன்….” என்றான் தெளிவாய்.
அவள் அறிந்திருந்தவரை அவனின் வார்த்தைகளில் மிக கவனமாய் இருப்பவன். அவனின் மனதை அந்த வார்த்தைகளிலேயே சொல்லிவிடுபவன். விளக்கியோ, விலாவரியாவோ அல்ல.
பொதுவாய் தான். ஆனால் புரிந்துகொண்டால் கதிரின் மனதை அறிந்துகொள்ளலாம். தாமரை அறிந்துகொண்டாள்.