ஆசைகள் – 14
இன்னும் ஏழே நாட்களில் திருமணம். ஆனால் அதை பற்றிய எந்த பயமும் சோமநாதனை பாதிக்காத அளவிற்கு நடந்திருந்தார்கள் கதிர் குடும்பத்தினர்.
வங்கியில் அடகு வைத்த நகையை தவிர மற்ற நகைகளும், தாமரையினுடையது, நிவேதாவினுடையது, விநாயகம் தந்த பணமும் போய் கடனுக்கு கடனும் என ஓய்ந்து போனாலும் சோமநாதன் அதை மகள்களிடமும், மனைவியிடமும் காட்டிக்கொள்ளவில்லை.
ஓரளவுக்கு தன்னையும் தேற்றிக்கொண்டார். தான் இல்லாவிட்டால் தன் குடும்பத்தின் நிலை என்னாகும் என்ற பயம் மட்டுமே எஞ்சி இருந்தது இப்பொது.
நகை பணம் போனால் திரும்ப வரும். முடிந்தளவு சம்பாதிக்க முயலலாம். ஆனால் தன் உயிர் போனால்?
நினைக்கவே நடுநடுங்கி போனார். அதனைக்கொண்டே தன்னை முயன்று தேற்றிக்கொண்டவர் முகத்தில் ஒரு சிரிப்புடனும், தைரியத்துடனுமே இருக்க வீட்டினருக்கு போதுமானதாக இருந்தது.
அன்று தான் உடைகளுக்கான ப்ளவுஸ் எல்லாம் தைக்கப்பெற்று வாங்கவேண்டிய நாள். எதுவும் தவறிருந்தால் முதலிலேயே சொல்லி திருத்திக்கொள்ளலாம்.
அதனால் அலுவலகத்தில் இருந்து வந்ததும் தாமரை தான் சென்று வாங்குவதாக இருந்தது.
வந்தவள் உடைமாற்றி காபியை குடித்துவிட்டு சோமநாதனிடம் பேசியிருந்துவிட்டு வேகமாய் கிளம்பினாள்.
“என்ன தாமரை இந்நேரம் வண்டி எடுத்துட்டு இருக்க?…” சரளா வந்து கேட்க,
“ம்மா சொல்லாம வந்துட்டேனா? அப்பாட்ட பேசிட்டு இருந்துட்டு அப்படியே வந்துட்டேன். போய் ப்ளவுஸ் எல்லாம் வாங்கிட்டு வரேன். நேத்தே சொன்னீங்க தானே நீங்க…” என்றதும்,
“அதெல்லாம் வேண்டாம் தாமரை. அங்கை அக்கா போய் வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டாங்க…”
“என்னம்மா நீங்க? அவங்களை எதுக்கு வேலை வாங்கறீங்க? சும்மாவே கேட்காம வந்து செய்யறாங்க. நீங்களுமா?…” என உள்ளே வந்து தாயை கடிந்தாள் தாமரை.
“அட நான் என்னமோ போய் வாங்கிட்டு தான் வரனும்னு சொன்ன மாதிரில இருக்குது? இன்னைக்கு அவங்களும் அங்க போறதா சொன்னாங்க. அப்படியே வாங்கிட்டு வரேன்னு. நான் என்ன செய்ய?…”
சரளா பாவமாய் சொல்ல அவரையும் ஒன்றும் சொல்லமுடியவில்லை. அங்கை முன்பை விட இன்னுமே அதிகமாய் தங்கள் குடும்பத்தில் மீது கவனம் எடுத்துக்கொள்வதை தாமரையும் பார்த்துக்கொண்டு தானே இருந்தாள்.
எத்தனை தான் அவர்களையும் வருத்துவது என தாமரைக்கு தர்மசங்கடமாய் போனது.
“நீ கொஞ்ச நேரம் பேசாம இரு. ஆமா லீவ் சொல்லிட்டியா? நீ என்ன இன்னும் ஆபீஸ் போய்ட்டே இருக்க?…” என சத்தம் போட்டார் சரளா.
“ஒரு வேலை இருக்குதும்மா. அதோட விஷயத்தை சொல்லி ஆபீஸ்ல லோன் கிடைக்குமான்னு கேட்டிருக்கேன். ரெண்டு நாள்ல முடிஞ்சிரும். அப்பறம் லீவ் போட்டுக்கலாம்….”
“என்னவோ சொல்ற போ. அதான் மாமா கொஞ்சம் பணம் ஏற்பாடு பண்ணிருக்காருல. போதாதா? இப்போதைக்கு அத வச்சு சமாளிப்போம் தாமரை…” என்றார் சரளா.
“ம்மா, இது ஒரு அவசரத்துக்கு தான். இருக்கட்டும். நம்மளும் எத்தனை பேரை தான் தாங்கிட்டு இருக்கறது? எனக்கும் கஷ்டமா இருக்கும்மா…” என்றாள் கசங்கிய முகத்துடன்.
ஏற்கனவே நகைகள் இருக்கும் பட்சத்திலேயே அத்தனை யோசித்தவள் தாமரை. இப்போது அதுவும் இல்லாமல் கடனும் கூடியிருக்க மனதிற்குள் ஒருவித தாழ்வு மனப்பான்மையும், அடுத்தவரின் மேல் சவாரி செய்வதை போலவும் தோன்றியது.
என்னதான் தங்கள் மேல் பாசம் வைத்தவர்களாக இருந்தாலும் கூட அதை ஏற்றுக்கொள்ளும் மனதினுள் சிறு குறுகல் அவளிடத்தில்.
எப்படியும் இதையும் சரி செய்துவிட வேண்டும் என முடிவெடுத்திருந்தாள் முன்பே.
இப்போது மனதை அரித்துக்கொண்டிருந்தது என்னவோ நிவேதாவின் படிப்பும், அவளின் எதிர்காலமும்.
அவளுக்கு படிப்பு முடிந்து ஒரு வேலை என்று கிடைத்துவிட்டால் போதும். அதன் பின் அவளுக்கான வாழ்க்கையை அமைத்துவிடலாம். அதுவரை அதையும் பார்க்கவேண்டுமே?
வீட்டின் கடனை அடைக்கவேண்டும். சோமநாதன் அலுவலகத்தில் வாங்கி இருக்கும் லோன் எல்லாம் போக ஓய்வு பெரும் நேரம் கைக்கு கிடைப்பது நிச்சயம் சொற்ப பணமே.
விநாயகம் கேட்கவில்லை என்றாலும் அதையும் சேர்த்து இப்போது கொடுத்திருக்கும் பணத்துடன் சேர்த்து திருப்பி கொடுக்கவேண்டும். ஆயிரகணக்காக இருந்தால் கூட அவரும் பெரிதுபடுத்தமாட்டார்.
இதுவோ லட்சத்தில். விநாயகம் வாய்விட்டு கேட்கவில்லை என்றாலும் திருப்பி செலுத்தவேண்டிய கடமை உள்ளதே. கண்ணை கட்டிக்கொண்டு வந்தது தாமரைக்கு.
தாமரை அதை எல்லாம் யோசித்தவளுக்கு மண்டை குடைச்சல் தாளமுடியாமல் எழுந்து பூஜையறைக்கு சென்று அமர்ந்துகொண்டாள்.
திக்கற்றவருக்கு தெய்வம் தான் துணை என்பதை போல அந்த தெய்வத்திடமே சராணகதி அடைந்தாள்.
எப்படியாவது திருட்டு போன நகையை மீட்டு தந்துவிடும்படி மனமுருக வேண்டிக்கொண்டாள்.
தன்னால் இப்போதைக்கு முடிந்தது அது ஒன்று தான். பணம் திரும்ப கிடைக்குமோ என்னவோ? அவளுக்கு நம்பிக்கையே இல்லை.
நகையாவது வந்துவிட்டால் கிடைப்பவற்றை வைத்து விற்று கடன்களை மொத்தமாய் அடைத்துவிட்டால் போதும் என்று அவள் மனது தவித்தது.
கிடைக்குமா என்பது தான் இங்கே கேள்விக்குறி. அவளுக்கு தெரிந்தவரை காவல் நிலையத்தில் நம்பிக்கையாக எந்த தகவலும் அவர்கள் தரவில்லை. சொல்லபோனால் அத்தனை அலட்சியம் அவர்கள் பக்கமிருந்து.
விநாயகம் வருத்தத்துடன் சரளாவிடமும், தவசியிடமும் சொல்லிக்கொண்டிருந்ததை கேட்டிருந்தாள்.
கதிரின் ஆடிட்டரை வைத்து மேலதிகாரியிடம் பேசி இப்போது வழக்கை கொஞ்சம் முடுக்கிவிட்டிருப்பதாக தகவல்.
கண்ணை மூடி அரைமணி நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் கொஞ்சம் நிதானமான பின்பு தான் எழுந்து வெளியே வந்தாள்.
மகளின் சோர்வு தட்டிய முகம் சரளாவை வருத்தியது. இத்தனை வருடத்தில் இப்படி எல்லாம் அவள் இருந்ததே இல்லை.
குடும்பத்தின் அளவுக்கதிகமான சந்தோஷமே இப்போது சுக்கல் சுக்கலாய் உடைந்துவிட்டிருந்தது.
திருமணம் என்பதற்கான அறிகுறியே இல்லாததை போல ஒருவர் முகத்திலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை.
“ம்மா அக்கா வந்தாச்சா?…” என நிவேதா கேட்க,
“இங்க தான் இருக்கேன் நிவி…” என்று வந்தாள் தாமரை.
“அக்கா என் கூட வாயேன்…” என கையை பிடித்து மாடிக்கு அழைத்து சென்ற நிவேதா ஒரு பேப்பரை அவளிடத்தில் காண்பித்தாள்.
“என்ன நிவி இது?…” என பிரித்து பார்க்க புடவை எடுத்த அன்று கதிருக்கு மோதிரம், செயின் ஆடர் கொடுத்த பில்.
“இது எப்படி உன்கிட்ட?…” என தாமரை கேட்க,
“இன்னைக்கு அப்பாவோட போன்க்கு கால் வந்தது. அப்பா தூங்கிட்டு இருந்தாங்க. நான் தான் அட்டன் பண்ணேன். செயினும் மோதிரமும் ரெடியாம். வந்து மிச்ச பணத்தை கட்டிட்டு வாங்கிட்டு போக சொல்லி சொன்னாங்க…”
தங்கை தாமரையின் முகத்தை பார்த்தபடி வாட்டத்துடன் நிற்க தாமரைக்கு தலை சுற்றாத குறை தான்.
வேண்டாம் என்று சொல்லி முன்பணத்தை வாங்க முடியுமா என யோசனைக்கு சென்றேவிட்டாள்.
இப்போது அதற்கான அவ்வளவு பணத்தை எப்படி புரட்ட என்று நினைக்க அழுகை வந்தது.
நிவேதாவிடம் காண்பித்துகொள்ளாமல் இருக்க முயன்று தன் கண்ணீரை கட்டுப்படுத்தினாள்.
ஆனால் உடன் பிறந்தவளுக்கு தெரியாமல் போகுமா? ஒருகணம் பார்த்தபடி இருந்தவள் வேகமாய் கீழே இறங்கி சென்றவள் கையில் மூன்று வளையல், தோடுகள் அடங்கிய பெட்டியுடன் வந்தாள்.
“அக்கா இப்படி இருக்காத. என்னால பார்க்க முடியலை. இப்ப என்னாகி போச்சு? ஒரு நிமிஷம் எனக்கு ஹெல்ப் பண்ணேன்…” என்று அந்த வளையல்கள் அடங்கிய பெட்டியை திறந்து வளையலை தனியாய் பிரிக்க ஆரம்பித்தாள்.
வளையல் மாட்டியிருந்த குழாயின் ஒருபக்கத்தின் மூடியை அகற்றியவள் மறுமுனையில் இருந்து ஒரு குச்சியால் இடிக்க குட்டி குட்டியாய் சுருட்டப்பட்ட காகிதங்கள் எல்லாம் வெளியே வந்து விழுந்தது.
அத்தனையும் நூறு ரூபாய், ஐம்பது ரூபாய் தாள்கள். எடுக்க எடுக்க வந்துகொண்டே இருந்தது.
தாமரைக்கு தன் கண்ணையே நம்பமுடியவில்லை. இத்தனை பணம் எப்படி நிவேதாவிடம் என்று பார்த்தாள்.
“எல்லாம் எனக்கு நீ, அப்பா, அம்மா குடுக்கறது தான். அவ்வளவா செலவு பண்ண தோணாது. என்ன பெரிய செலவு? புக்ஸ் நீயே வாங்கி குடுத்தடற. பீஸ் கட்டிடற. சாப்பாடு போக வேற என்ன தோணும்? அதான் சேர்த்து வச்சேன்…”
“இவ்வளவு எப்படி நிவி?…” என்ற தமாரைக்கு பேச்சே எழவில்லை.
“என்ன இவ்வளவு? நீ என்னை எப்படி உன் கல்யாணத்தை வேண்டாம்னு சொல்லி கஷ்டப்பட்டு படிக்க வைக்கிற? அப்போ இருந்தே கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சுட்டு வரேன். ஆனா நான் எதுவும் எனக்கு வாங்கற அளவுக்கு நீ வைக்கலை. எல்லாமே நீயே பண்ணிடற…”
“குடுக்கற காசுக்கு அவசியமில்லைன்னதும் உனக்கு பெரிய சர்ப்ரைஸ் பண்ணலாம்ன்னு அதை வச்சிருந்தேன். இப்ப அது ஏதோ கொஞ்சம் யூஸ் ஆகுது பாரு. ஆனா ரொம்ப சுருங்கி குட்டி குட்டியா போய்டுச்சு. இரு வரேன்…” என எழுந்து சென்றவள் அய்ர்ன் பாக்ஸை எடுத்து வந்தாள்.
ஒவ்வொன்றாய் கிழிந்துவிடாமல் மிக கவனமாக அதை பிரித்து தேய்த்து எடுத்து வைக்க மாடிக்கு சென்ற பெண்களை எங்கே என தேடி வந்த சரளாவுக்கு கட்டிலில் இருந்த பணத்தை பார்த்ததும் கண்கள் விரிந்துகொண்டது.
“என்னடி இத்தனை காசு?…” என உள்ளே வந்தவரிடம் நிவேதா விஷயத்தை சொல்லி,
“நல்லவேளை இதுல வச்சதால் அவனுங்களுக்கு தெரியலை. இல்லைன்னா இதையும் தூக்கிட்டு போய்ருப்பங்க…” என்று தோடுகள் இருந்த பெட்டியை திறந்தாள்.
ஒவ்வொரு தோடும் தொங்கவிடிருக்கும் அட்டைப்பெட்டிக்கு பின்னால் லேசாய் உந்தி தள்ள அதற்குள்ளும் மடித்திருந்த பணம்.
தாமரை உணர்வின்மிகுதியில் தங்கையை கட்டிக்கொண்டாள். தவித்திருந்த வாய்க்கு சொட்டு தண்ணீர் கிடைத்ததை போல கண்கள் கலங்கிவிட்டது.
“இப்படி பொண்ணுங்களை பெத்ததுக்கு நான் என்ன புண்ணியம் பண்ணினேனோ? ஆனா உங்களை நோகாம கட்டிக்குடுக்க எங்களுக்கு குடுப்பினை இல்லையே?…” என்று சரளா ஆதங்கமும், அழுகையுமாய் பெண்களை தாங்கிக்கொண்டார்.
“ம்மா, அழுது சத்தம் போட்டு அப்பா வந்திடாம. நீங்க கீழே போங்க. அப்பறம் அப்பாவுக்கு அந்த போன் வந்தா நீங்க அட்டன் பண்ணுங்க. இதுல எவ்வளவு இருக்குன்னு பார்த்துட்டு நாளைக்கு நகை வாங்க போகலாம்…” என நிவேதா சொல்லவும் கண்ணீரை துடைத்துக்கொண்டவர்,
“பார்த்து எடுத்து வைங்க. தாமரை அங்கை அக்கா வந்தாச்சு. நீ போய் வாங்கிட்டு வா. கூட யாரோ வந்திருக்காங்க. அதான் நான் போகலை. நீ போனதும் வந்திரு. நான் அப்பாவுக்கு சாப்பாடு ரெடி பன்றேன்…”
“மாமாவும், அத்தையும் எப்போ வராங்கம்மா?…” தாமரை கேட்க,
“ஆமா மறந்துட்டேன் பாரு. அவங்களுக்கும் ரெடி பண்ணனும். இன்னைக்கு நைட் இங்க தான் சாப்பிடுவாங்க. கிளம்பினதும் மாமா போன் பன்றேன்னு சொல்லிருக்காங்க…” என சொல்லி கீழே சென்றுவிட்டார் சரளா.
சொந்தங்களில் தாயின் உடன்பிறப்பான விநாயகம் மட்டுமே ஆறுதலாகவும், உதவியாகவும் இருந்துகொண்டிருக்கிறார்.
மற்ற சொந்தங்கள் விஷயம் அறிந்ததும் சிலர் வந்து பார்த்துவிட்டு சென்றதோடும், சில போன் மூலமாக விசாரித்ததோடும் சரி.
எங்கே இன்னும் ஒட்டி பழகினால் தங்களிடம் திருமணத்திற்கு செய் என்று நின்றுவிடுவார்களோ என பயந்தே விலகி இருந்தார்கள்.
தாமரையின் குடும்பத்தினரும் தங்கள் சொந்தங்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதால் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனாலும் சரளா தான் நினைத்து நினைத்து அவ்வப்போது புலம்பிக்கொண்டே இருப்பார்.
சோமநாதன் அத்தனை கணக்கு பார்க்கமாட்டார். செய்முறைகள் எல்லாம் யோசிக்காமல் அவ்வளவு செய்வார்.
அதற்கென்றே அவருக்கு தனி மரியாதை. அது போலியாக அவர் செய்வதற்காக இருந்தாலும் சோமநாதனுக்கும், சரளாவுக்கும் இது செய்முறைக்காக என்று தெரிந்தாலும் பெரிதாக காட்டிக்கொள்ளமாட்டார்கள்.
இப்போது என்ன செய்ய போகிறாய் என்று கேட்க கூட யோசித்து தள்ளி நின்று வேடிக்கை பார்க்கவென சிலரும், ஒன்றுமில்லாமல் இவர் எப்படி திருமணத்தை நடத்துவார் என சிலரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
சாராள சென்றதும் நிவியிடம் சொல்லிக்கொண்டு கீழே இறங்கியவள் அங்கையின் வீட்டிற்கு சென்றாள்.
உள்ளே நுழையும் முன்பே உள்ளிருந்த பெண்மணி அத்தனை சத்தத்துடன் அங்கையிடம் பேசிக்கொண்டு இருந்தார். அதை கேட்டதும் அப்படியே நின்றுவிட்டாள் தாமரை.
“இந்த கல்யாணம் நடந்தாலும் இதான் பேசுவாங்க அங்கை. ஒன்னு மாப்பிள்ளை வீட்டுல அப்படி என்ன குறையோன்னு. பொண்ணை வெரசா பேசி முடிச்சதோட இல்லாம இப்ப இந்த சமயத்துலயும் கூட விடாம கட்டி வச்சிடனும்னு முனைப்பா இருக்காங்கன்னா கதிருக்கு குறை இருக்குன்னு தான அர்த்தம்?…”
“மதினி இதென்ன பேச்சு? நம்ம புள்ளயை நம்மாலே சொல்லுவோமா? கதிர் யாரு உங்களுக்கு? இப்படி பேசறது யமுனாக்காவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான். தப்பு மதினி…” என அங்கை அவரிடம் சொல்லிக்கொண்டு இருந்தார்.
“என்னத்த தப்ப கண்டுட்ட? நல்ல யோசனை பண்ணி பாரு. இதுவே நானாங்காட்டி இருந்தா நகையும் இல்லாம கடனோட இருக்கற குடும்பத்துல இருந்து பொண்ண எடுப்பேனா? யாருக்கா இருந்தாலும் இதான? சும்மா ஒளிச்சு மறச்சு பேச கூடாது…”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. யமுனாக்கா தங்கம். கதிர் அப்படி ஒன்னும் விட்டுட மாட்டான். அவன் குணம் தான் தெரியுமே? பொண்ணை பிடிக்க போய்த்தான் கல்யாணம் வரை வந்திருக்கான்…”
“அட அங்கை. அங்கதான் விஷயமே? முப்பது வயசாக போகுது. இப்ப வரைக்கும் பொண்ணை அத்தனை அலசி தேடினவங்க இப்ப என்னத்துக்கு சட்டுப்புட்டுன்னு இந்த பொண்ணை பேசி முடிக்கனும்? கொஞ்சநஞ்ச பொண்ணா பார்த்தாங்க?…”
“தாமரையை பொண்ணா சொன்னதே நான் தான். நல்ல நேரத்துக்கு ரெண்டுபேருக்குமே பிடிச்சு சம்பந்தம் அமைஞ்சிருச்சு. இப்ப இதெல்லாம் பேசாதீங்க மதனி…”
“அட சும்மா இரு நீ. என் நாத்தனாருக்கு தெரிஞ்ச பொண்ணை சொன்னா என்னவோ இவங்க உலக அழகியை தேடற மாதிரில பொண்ணு வேண்டாம்னு முகத்தில அடிச்ச மாதிரி பேசிட்டாங்க…”
“மதினி எனக்கும் தெரியும். அந்த பொண்ணு ஏற்கனவே ஒரு பையனோட பழக்கமா இருக்குது. அப்பறம் எப்படி எடுப்பாங்க? சும்மா வாய்க்கு வந்ததை பேசாதீங்க….” அங்கைக்கும் டென்ஷன் ஏறிவிட்டது.
அங்கை கடைக்கு சென்றவர் அங்கே வழியில் தற்செயலாக இவரை பார்க்க ஒரு பேச்சிற்கு வீட்டுக்கு வரும்படி சொல்லவும் கூடவே வீடுவரைக்கும் அவர் வந்துவிட அங்கையால் தவிர்க்க முடியவில்லை.
“நீ பார்த்து வச்சன்றதால நீ சப்பைக்கட்டு கட்டாத அங்கை. நான் சொல்றேன். இப்படியே நீ விலகிக்கறது நல்லது. இல்லன்னா நீ தான் சிக்கல்ல மாட்டிக்குவ. ஒண்ணுமில்லாத இடத்துல சம்பந்த பண்ணி வச்சுட்டன்னு உன்னை தான் நாளைக்கு கதிர் வீட்டுல ஏசுவாங்க…”
“அப்படி எல்லாம் நடக்காது…” அங்கயும் விட்டுக்கொடுக்கவில்லை.
“இப்ப பொண்ணோட புதுமயக்கத்துலையும், ஊர்ல எல்லாரும் உங்களை போல உண்டான்னு சொல்ற மிதப்புலையும் நல்லாத்தான் இருக்கும். ஆனா உள்ள போக போக தான சாயம் வெளுக்கும். அவங்களுக்கு இது தேவை தான். எம்புட்டு பொண்ணை கழிச்சு கழிச்சு இப்ப ஓட்டாண்டி வீட்டுல சம்பந்தம்…” என்றவர்,
“ஆனாலும் இந்த பொண்ணு வீடும் சும்மா சொல்ல கூடாது. பத்து பைசா இல்லைனாலும் ஒரு இழிச்சவாய குடும்பம் கிடைக்கவும் மொத்தமா மிளகாய் அரைக்கத்தான பார்க்கறாங்க. நாளைப்பின்ன ரெண்டாவது மகளையும் சேர்த்து தள்ளி விடறாங்களா இல்லையான்னு பார்த்துட்டே இரு…”
“அதை நாங்க பாத்துக்கறோம். நீங்க என்ன ஜோசியமா சொல்ல வந்தீங்க?…” என்று உள்ளே நுழைந்தாள் தாமரை.
அவளை பார்த்ததுமே வெலவெலத்து போனார்கள் இருவரும். அங்கைக்கு வருத்தமாக இருக்க உடனிருந்த பெண்மணிக்கோ முகம் சுண்டியது.
“என்னை தான் இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தீங்க. எங்க நேரா சொல்லலாமே?…” என்றாள்.
“பார்த்தியா ஒட்டும் கேட்டுட்டு நின்னிட்டு இருந்ததை. இதை போய்…”
“ஓய், அது இதுன்னு பேசினீங்க. அவ்வளவு தான். என்னை பத்தியும் என் குடும்பத்தை பத்தியும் ரொம்ப பெருமையா பேசினீங்க பாருங்க. நின்னு காது குளிர நான் கேட்கறதுக்கு. நான் குடும்பம்ன்னு சொன்னது என் மாமியார் வீட்டையும் சேர்த்து தான்…”
“தாமரை அவங்க பேசினதை எதையும் மனசுல வச்சுக்காதம்மா…” அங்கை அவளின் கையை பிடித்துக்கொண்டார் சங்கடத்துடன்.
“என்ன ஆன்ட்டி நீங்க? இப்படி பட்டவங்களை எல்லாம் எதுக்கு வீட்டுக்குள்ள சேர்க்கறீங்க?…” என தாமரை சொல்ல,
“இந்தாம்மா, என் சொந்தக்கார பொண்ணு வீட்டுக்கு வர நீ என்ன சொல்றது? அவளை கேள்வி கேட்கிற நீ?…”
“அப்போ என்னை பத்தியும் நீங்க பேச கூடாது. நான் யாரோ தானே? ஏன் பேசறீங்க? அந்த அறிவு கூட இல்லையா என்ன? கொஞ்சமும் இங்கிதம் தெரியாத பொம்பளை நீங்க. உங்களை சேர்க்க கூடாதுன்னு தான் சொல்லுவேன்…” என்றவள்,
“யமுனாத்தை எனக்கு மாமியார்ன்னா, நீங்க எனக்கு சின்னமாமியார் தானே?…” என அங்கையிடம் திரும்பினாள்.
“ஆமா தாமரை. இப்ப நீ கோவிக்காத…” என அங்கை சமாதானப்படுத்த,
“பார்ரா. இந்த நிலமையில இருக்கும் போதே பேச்சு பேசுதே? யமுனா பாவம் தான். அங்கை இப்பவும் சொல்றேன் நல்லா யோசிச்சுக்கோ…”
“எதுக்கு அங்க சொல்றீங்க? என் மாமியாருக்கே போன் போட்டு தரேன். நேர பேசுங்களேன். அவங்கக்கிட்ட சொல்லுங்களேன். மருமக இப்படிலாம் பேசறான்னு…” என்றதுமே அப்பெண்மணி வாயை மூடிக்கொண்டார்.
பின்னே யமுனாவிடம் வாயை திறந்துவிட முடியுமா? ஒரு வார்த்தை பேசிவிட்டால் தனது குடும்பத்தில் நடப்பவற்ற அத்தனையையும் சிரித்துக்கொண்டே கடைபரப்பிவிடுபவர் ஆகிற்றே.
அத்தனை லேசில் விட்டுவிடவும் மாட்டார் யமுனா என்பதால் அவரிடத்தில் பேசவே யோசிப்பார்கள்.
“எனெக்கென்னத்துக்கு அந்த வம்பு? என்னவோ பண்ணுங்க? நீங்க கல்யாணம் பண்ணினா என்ன?கரு…”
“ஏய் அவ்வளவு தான் மரியாதை. வெளில போங்க முதல்ல…” என்று விரல் நீட்டிவிட்டாள் தாமரை.
“ஆன்ட்டி வெளில போக சொல்லுங்க, நீங்க சொல்றீங்களா இல்லை நான் பேசட்டுமா?…” என்று தாமரை இன்னும் சத்தம் போட எங்கே குடும்பத்தில் இது பிரச்சனையாகிவிடுமோ என அங்கை பயந்துபோனார்.
“நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம். நான் அத்தைக்கே கால் பன்றேன்…” என தாமரை சொல்லவும் அதுவரை அங்கையையும், தாமரையையும் ‘எங்கே என்னை அனுப்பி பார்’ என்ற தெனாவெட்டுடன் நின்ற பெண்மணி அரண்டுவிட்டார்.
“இதுக்குத்தான் மதிக்காதவங்க வீட்டுக்கு வர கூடாதுன்றது. அங்கை கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திட்ட இல்ல…” என அங்கையிடம் பாய,
“என்கிட்டே பேசுங்க. எங்க என்கிட்டே பேசுங்க…” என அங்கையை தனக்கு பின்னால் விட்டு முன்னே வந்து பேச சின்ன யமுனாவை போல இருந்தது அந்த பெண்மணிக்கு.
யமுனா சிரித்துக்கொண்டே சுருக்கென்று வாய்திறக்கவிடமாட்டார். தாமரையோ சிலிர்த்துக்கொண்டு சீற்றத்துடன் முன்னே நின்றாள்.
“ஆனா ரெண்டுபேத்துக்கும் இதுல ஒத்துமை தான்…” என புலம்பிக்கொண்டே அந்த பெண்மணி கிளம்பினார்.
அவர் சென்றதும் அங்கை தாமரையை அமர வைத்து தண்ணீர் கொண்டுவந்து தந்தார்.
“அம்மாக்கிட்ட, வீட்டுல இதை பத்தி எதுவும் சொல்ல வேண்டாம் தாமரை. ஏற்கனவே வருத்தத்துல இருக்கறவங்க. இதை கேட்டா இன்னும் சங்கடப்படுவாங்க…” என்றார்.
அதை எல்லாம் கேட்டுக்கொண்டே இரு கைகளாலும் தலையை தாங்கியபடி தாமரை அசையாமல் அமர்ந்திருந்தாள்.