மறுநாள் காலை வழக்கம் போல கதிர் ட்ராவல்ஸ்க்கு கிளம்பிவிட தர்ஷன் உறங்கிக்கொண்டு இருந்தான்.
யமுனா யாரின் வரவையோ எதிர்பார்த்தபடி அங்குமிங்கும் சுற்றிக்கொண்டு இருந்தார்.
போனிலும் ஓயாமல் பார்வைகள் சென்று மீள பூங்காவனத்திற்கு தெரிந்தது ஏன் என்று. ஆனாலும் வாய திறப்பாரா?
“ஹ்ம்ம், என்ன மனுசியோ? ஒரு போனை போட்டாலும் எடுக்காளா இந்த மனுசி? எத்தனைதரம் தான் கூப்பிட?…” என்று புலம்பிக்கொண்டு இருக்க பூங்காவனம் சட்டையை போட்டுவிட்டு கிளம்ப ஆயத்தமானார்.
“நீங்க எங்க கிளம்பிட்டீங்க?…” என நகர்வதற்குள் பிடித்துவிட்டார் யமுனா.
“கதிர் டிப்போ வரைக்கும் போய்ட்டு வர சொன்னான். சர்வீஸுக்கு விட்ட பஸ் ரெடின்னு போன் வந்துச்சாம். அதான் போய் சரி பார்த்துட்டு அவனுக்கு கூப்பிட சொன்னான்…”
“ஏன் அந்த மொதலாளிக்கு போய் பாக்க முடியாதாமா? உங்களை போக சொல்லிட்டு இருக்கான்…” என்று கடுப்பாகி பேச,
“என்ன இது யமுனா? அவன் நம்ம புள்ளை. மொதலாளி அது இதுன்னு பேசற?…”
பூங்காவனத்திற்கு வருத்தமாகிவிட்டது யமுனா அப்படி பேசியது. என்னதான் கோபம் என்றாலும் மகனை அப்படி விட்டுவிட்டு பேசலாமா என ஆற்றாமையுடன் கேட்டுவிட்டார்.
“பின்ன அவன் நடந்துக்கறது அப்படித்தானே இருக்கு. என்னை யார் கேட்பான்னு எந்த நாட்டுக்கோ ராஜாவாட்டம்ல போக வர இருக்கான். வேற எப்படி பேச?…” என சொல்லும் பொழுதே யமுனாவின் விழிகள் கலங்கிவிட்டது.
“ச்சே, ச்சே அப்படி எல்லாம் நினைக்காத யமுனா. அவன் ஏதோ வேலை டென்ஷன்ல இருந்திருப்பான்…”
“ம்க்கும், உடனே உங்களுக்கு தாங்காதே? அவன பத்துமாசம் சுமந்து பெத்தவ நானு. நான் சொல்லக்கூடாதா? அப்படியே மூக்குக்கு மேல வந்துரும்….”
“நான் கூட தரகர் தான் சொன்னாருன்னு நினைச்சேன். அவர்க்கிட்ட தான் பேசறன்னு…”
“எல்லாத்தையும் அரைகுறையா கேட்டுக்கிட்டு நீங்க புரிஞ்சிக்கிட்டா நானா பொறுப்பு. பிள்ளைக்கு அப்பாவா லட்சணாமா என்ன ஏதுன்னு நீங்க தான விசாரிக்கனும். இதுல என் மகன் மகன்னு தூக்கிவச்சு ஆட மட்டும் தெரியும்…”
“தப்புத்தான், தப்புத்தான். சரி சொல்லு…”
“என்ன சொல்ல? இங்க என்ன கதையா சொல்றேன்? அங்கை வரேன்னு சொன்னா. அதான் நீங்களும் இருங்கன்னு சொல்ல வந்தா ஒரு வார்த்தை பேச முடியுதா உங்ககிட்ட?…” என்று யமுனா அமர்ந்துவிட வெளியே கேட் திறக்கும் சத்தம் கேட்டது.
“அவ தான் வந்துட்டா போல….” என்று தன் முகத்தை முந்தானையால் துடைத்தவர் எழுந்து வெளியே செல்ல பூங்காவனம் அமர்ந்துவிட்டார்.
இனி எங்கே செல்ல முடியும்? மகனுக்கு போனை போட்டு சொல்லிவிட்டு இருக்க வேண்டியது தான் என நினைத்து போனை எடுக்க அதற்குள் உள்ளே வந்துவிட்டார் யமுனா.
“வா அங்கை. உட்காரு. இப்ப வந்திடறேன்…” என சொல்லிவிட்டு அவருக்கு காபி எடுக்க உள்ளே சென்றார் யமுனா.
“என்ன மாமா, நல்லா இருக்கீங்களா?…” என பூங்காவனத்திடம் அங்கை கேட்க,
“எனக்கென்னம்மா, நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? உன் வீட்டுல எல்லாரும் சௌக்கியமா?…”
“எல்லாரும் சௌக்கியம் மாமா. அக்கா போட்டோ கேட்டுச்சு. போன்ல அனுப்பிருப்பேன். என்ன இருந்தாலும் போட்டோல பாத்த மாதிரி இருக்குமா? வீட்டுக்கு வந்தும் ரொம்ப நாள் ஆச்சு. அதான் அப்படியே பேசிட்டு போகலாம்ன்னு நானே கிளம்பி வந்துட்டேன்…”
“நல்லது நல்லது…” என்று பூங்காவனம் சிரிக்க யமுனா வந்துவிட்டார் காபியுடன்.
“எடுத்துக்க அங்கை. அப்பவே வருவன்னு நினச்சேன்…”
“காலையில வேலை முடிஞ்சதும் கிளம்பிட்டேன். ட்ராபிக்ல லேட் ஆகிடுச்சுக்கா…” என்றார் அங்கை.
“போன் பண்ணேன். எடுக்கவே இல்லை…” யமுனா அதை குறைபோல சொன்னாலும் சிரித்தபடியே சொல்ல,
“போன் பேக்ல இருந்துச்சு. கேட்கவே இல்லை. அதான் எடுக்காம விட்டுட்டேன்…” அங்கயும் பதில் பேசினார்.
“சரிதான், சரிதான்…” சிரித்துவைத்தார் யமுனா.
“மாமாவுக்கு காபி…” அங்கை தன் காபியை குடித்துக்கொண்டே கேட்க,
“அவர் இந்நேரம் குடிக்க மாட்டார் அங்கை. அதான் குடுக்கலை…” என்று யமுனா சொல்லவும்,
“ஆமாம்மா, கண்ட நேரத்தில காபி குடிச்சா உடம்பு என்னத்துக்காவறதுன்னு யமுனா குடுக்கமாட்டா…” பூங்காவனமும் போகிறபோக்கில் பேசிவிட அவரை முறைத்தார் யமுனா.
தன்னை தான் சொல்கிறாரோ என அங்கை நினைத்துக்கொண்டால் என சங்கடத்துடன் பார்த்தார் யமுனா.
“மாமா எப்பவும் அதே பேச்சு தான்…” என்று காபியை முழுவதுமாக குடித்து முடித்த பின்னரே பேச்சை ஆரம்பித்தார் அங்கை.
“பொண்ணு வீட்டை பத்தி நேர்ல பேசறேன்னு சொல்லிருந்தியே…” என நேரடியாக பேச்சை ஆரம்பித்தார் யமுனா.
இல்லை என்றால் பூங்காவனம் வேறு எதையாவது பேச ஆரம்பித்துவிடுவார் என்பதனால் யமுனாவே ஆரம்பித்துவிட,
“முதல்ல பொண்ணு போட்டோவை பாருங்கக்கா…” என்று தனது கைப்பையில் இருந்து போட்டோவை எடுத்து நீட்டினார்.
“இது அவங்கம்மா குடுத்த போட்டோ. பொண்ணுக்கு தெரியாம…” என்று ஒரு புள்ளியை வைத்ததை போல சொல்ல யோசனையுடனே யமுனா வாங்கினார்.
“பார்த்துட்டு சொல்லுங்க. மேல பேசுவோம்…” என அங்கை சொல்லவும்,
“என்ன பார்த்துட்டே இருக்கீங்க? நீங்க வாங்குங்க…” என்று பூங்காவனத்தின் கையை இடிக்கவும் அவர் வாங்கினார்.
அவரின் மனமோ ‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை’ என கேலியாய் சொல்லிக்கொண்டது.
“என்ன மாமா போட்டோவை எடுத்து பாருங்க…” என அங்கை சொல்ல போட்டோ கவரில் இருந்த அட்ரஸை கவனித்துக்கொண்டிருந்தவர் கவரின் உள் இருந்த போட்டோவை எடுத்தார்.
“நல்லா சாமியை வேண்டிக்கிட்டு எடுங்க…” என்று யமுனா சொல்லும் பொழுதே பீதியாகிவிட்டது பூங்காவனத்திற்கு.
“அப்ப நீயே எடேன்…” என கவரை மனைவி பக்கம் நீட்ட,
“என்ன விளையாடறீங்களா?…” என்று பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்பினார்.
“சரி சரி…” என போட்டோவை வெளியே எடுத்து பார்த்தவர் முழுதாய் நன்றாக பார்க்கும் முன்னர் ,
“எங்க கொண்டாங்க…” என வாங்கியிருந்தார் யமுனா.
“இதுக்கு வாங்க சொல்லாமலே இருந்திருக்கலாம்…” என யாருக்கும் கேட்காமல் முணுமுணுத்த பூங்காவனம்,
“ஒரு போன் பேசிட்டு வரேன். மகன் கூப்பிட சொன்னான்…” என்று எழுந்து செல்ல அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு போட்டோவில் இருக்கும் பெண்ணை ஆராயும் பார்வை பார்த்தார்.
விழிகள் மருமகளின் அழகை அளவெடுக்காமல் விரல்கள் மகனின் எதிர்பார்ப்பை தன்னை போல எண்ண துவங்கியது.
“ஓரளவு கலர் தான். ரொம்ப குண்டு இல்லை. போட்டோல எவ்வளவு உசரம்ன்னு தெரியலையே. முடி நீளம் என்ன?…” இப்படி லேசாய் தனக்குள் முணங்கியபடி பார்க்க,
“என்னக்கா பொண்ணு பிடிச்சிருக்கா? நல்ல பொண்ணு. பெத்தவங்க கஷ்டத்தை உணர்ந்து நடக்கற பொண்ணு…” என்று அங்கை பெண்ணின் பெருமையை பேச,
“எல்லாம் சரித்தான், ஆனா முடி நீளமா? கம்மியா?…” என்று கேட்க அங்கையின் முகம் போன போக்கில் உள்ளிருந்து வந்த பூங்காவனத்திற்கு சிரிப்பு பீறிட்டது.
அவர் சிரித்ததும் யமுனா திரும்பி அவரை பார்க்க மீண்டும் எதையோ தேடுவதை போல உள்ளே சென்றுவிட்டார் பூங்காவனம்.
“என்னது? என்னக்கா கேட்கற?…” என்றார் அங்கை.
“ப்ச், முடி நல்ல அடர்த்தியா? நீளமா குட்டையா? இந்த போட்டோவுல ஒன்னும் தெரியலையே?…” என்றார் குழப்பமாக.
“ஏம்க்கா இதெல்லாமா பார்ப்ப? ஆனாலும் உனக்கு இம்புட்டு ஆகாது. உன் மகன் கூட சரின்னுவான் போல. நீ இவ்வளவு நுணுக்கம் பார்க்கறியே?…” என்று அங்கை கிண்டலாய் தனது மனதில் தோன்றியதை சொல்லிவிட்டார்.
ஆனால் அவரிடம் சொல்லாவா முடியும் இதெல்லாம் மகனின் கேள்விகள் என்று. அசட்டு சிரிப்பு சிரித்து சமாளிக்க தர்ஷன் எழுந்து கீழே வந்தான்.
“என்னம்மா அடுத்த பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாச்சா?…” என்று கிண்டலாய் சொன்னவன்,
“சொல்ல வேண்டியது தானே? மகன் தான் இதெல்லாம் கேட்க சொல்லிருக்கான்னு. நீங்க அண்ணனுக்கு மௌத் பீஸா இருந்துட்டு பெருசா அப்பாவை சொல்ல வந்துட்டீங்க…” என யமுனாவின் காதில் சொல்லிவிட்டு எதிரே இருந்த அங்கையை பார்த்து புன்னகைத்தான்.