அன்று சோமநாதனை பரிசோதனைக்கு வர சொல்லியிருந்தார்கள் மருத்துவமனைக்கு.
நிவேதாவிற்கு முக்கிய பரிட்சை என்பதால் அவள் செல்ல முடியாது தாமரையே உடன் சென்றிருந்தாள்.
ஒருவாரம் போல விடுமுறை எடுத்திருந்தவள் அதற்கு மேல் வீட்டில் எதற்கு இருக்கவேண்டும் என அலுவலகம் கிளம்பிவிட்டாள்.
அந்த ஒருவாரமும் நண்பர்கள், சொந்தங்கள் என சிலரின் வீட்டில் விருந்து. மறுவீடு என்று வேகமாய் சென்றுவிட்டது.
இதற்கிடையில் தான் காவல் நிலையத்தில் இருந்து மீண்டும் அழைப்பு வந்துவிட அங்கே சென்ற பொழுது தாமரையுமே உடன் சென்றாள்.
“வாங்க மிஸ்டர் கதிரவன்…” என்ற இன்ஸ்பெக்டர் தாமரையை பார்த்துவிட்டு,
“எங்க உங்க மாமனார் வரலையா?…” என்றார்.
“இல்லை ஸார், அவருக்கு கொஞ்சம் ஹெல்த் இஷூ. அதனால வரலை. என்கிட்டே சொல்லுங்க…” எனும் பொழுதே தாமரையின் மாமா விநாயகமும் தங்களின் வக்கீலுடன் வந்துவிட்டார்.
கதிரவன் மறுவீடென்று அன்று அங்கே தாமரையின் வீட்டில் தான் இருந்திருந்தான்.
அதனால் டிராவல்ஸிற்கு கிளம்பிக்கொண்டிருந்தவன் அப்படியே காவல் நிலையம் கிளம்பிவிட தாமரையும் தானும் வருவேன் என்றுவிட்டாள்.
வந்த நேரத்தில் அவளையும் சேர்த்து அழைத்து செல்ல சரளா விரும்பமாட்டார் என நினைத்தவன் வீட்டில் சொல்லாமல் தாமரையை வெளியே அழைத்து செல்வதாக சரளாவிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
செல்லும் முன்னர் விநாயகத்திற்கும் அழைத்து விஷயத்தை சொல்லியவன் அங்கே செல்லும் பொழுத அவரும் வந்துவிட்டார்.
“தாமரை அப்பா வரலையாம்மா?…” என விநாயகம் கேட்க,
“இல்ல மாமா வரலை…” என்றவளுக்கு அங்கே என்ன பதில் என்ற யோசனையில் மனது அடித்துக்கொண்டது.
“அவ டென்ஷனா இருக்கா சித்தப்பா. என்கிட்டே கேளுங்க. நான் தான் மாமாக்கிட்ட சொல்லலை. நேத்து நைட்ல இருந்தே மாமாவுக்கு கொஞ்சம் முடியலை. அதான் எதுக்கு அலைய வைக்கனும்னு நான் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டேன்…”
“ஹ்ம்ம், நல்லதுப்பா. என்னன்னு வேகமா சொல்லாம இப்படி காக்க வைக்கிறாங்களே?…” என்றார் சற்று அலுப்பு கூடிய குரலில்.
“வெய்ட் பண்ணுவோம். அதுக்கு தான் வந்திருக்கோம் சித்தப்பா…” என கதிர் சொல்லியவன் தாமரையை பார்த்தான்.
“அதான் கிடைச்சிடுச்சே, இன்னும் எதுக்கு முகத்தை இப்படியே வச்சிட்டு இருக்க?…” என அவளை தேற்றவே முயன்றான்.
“இன்னும் நகையை பார்க்கலையே?…” என தாமரையும் சுரத்தில்லாத குரலில் சொல்ல,
“கிடைச்சிரும் தாமரை. அதுக்கு தான வர சொல்லிருக்காங்க…” என அவளின் கையை பிடித்துக்கொண்டான்.
“ஓகே ஸார்…” என்று நேராய் அமர்ந்த இன்ஸ்பெக்டர்,
“நகை கிடைச்சிருச்சு. அதுல உங்க நகை எதுன்னு அடையாளம் காட்டுங்க…” என்றார்.
“உங்க நகைன்னா?…” என தாமரை குழம்ப,
“நிறைய நகை திருட்டு போயிருக்குது. அதுல உங்களோடது எதுன்னு உங்களுக்கு தானே தெரியும்? நிறைய பேர் நகை கலந்து இருக்குது….” என்றவர்,
“வாயே திறக்காம இருந்தவனை எங்க ட்ரீட்மென்ட் உண்மையை காக்க வச்சிருக்குது. இவனோட கூட்டாளிங்களும் சிக்கிட்டானுங்க. இடத்தையும் நகையோட இவனுங்களையும் வளைச்சு பிடிச்சாச்சு…” என்றார்.
“ரொம்ப நன்றி ஸார்…” என விநாயகம் சொல்ல,
“முதல்ல வந்து நகையை பாருங்க…” என எழுந்து இன்னொரு பெரிய அறைக்கு அழைத்து சென்றார்.
அங்கே அறையின் நீளத்திற்கு போடப்பட்டிருந்த நீளமான மேஜையில் விரிப்புக்கு மேல கண்டுபிடிக்கப்பட்டிருந்த நகைகள் எல்லாம் தனி தனியே காண்பிக்கப்பட்டு இருந்தது.
“இதுல உங்களோட நகை எதுக்கு பாரு தாமரை…” என்று அதிர்ச்சியில் நின்றவளை உலுக்கினான்.
“ஹாங்…” என்று கதிரை பார்த்தவள்,
“எனக்கு இதுல நிறைய ஒரே மாதிரி இருக்குதே கதிர்?…” என்றாள் பாவமாய்.
தலைசுற்றியது தாமரைக்கு. தங்களின் முக்கிய ஆபரணங்கள் அந்த அணிவகுப்பில் இல்லாததே காரணம்.
“இவ்வளவு தானா ஸார்?…” என்றாள் இன்ஸ்பெக்டரிடம்.
“அவனுங்க கைவசம் இருந்த நகைங்களை எல்லாமே எடுத்தாச்சும்மா. அதுங்க தான் இங்க டிஸ்ப்ளேல வச்சிருக்கறது…” என்றதும் தாமரைக்கு உயிரே போய்விட்டது.
பெரிய பெரிய ஆரங்கள், அட்டிகைகள் என காணாமல் போயிருந்தது. அதுவும் சமீபத்தில் செய்திருந்த நகைகள் அவை. அதனால் அவளுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது.
“என்னாச்சு தாமரை?…” என்று கதிர் கேட்க,
“இதுல சில நகைங்களை காணும் கதிர்…” என சொல்ல அவன் கேள்வியாய் இன்ஸ்பெக்டரை பார்த்தான்.
“ஸார் கொஞ்சம் அமைதியா பேசுங்க. நகையை களவு கொடுத்தவங்களோட வலி அனுபவிச்சா தான் தெரியும்…” என சுள்ளென்று கதிர் பேசிவிட்டான்.
“என்ன ஸார்? என்ன தெரியும்? இந்த நகை கூட கியடிக்காம எத்தனை பேர் இருக்காங்க. என்னவோ சூடா பேசறீங்க? இஷ்டம்ன்னா வாங்கிட்டு போங்க. இல்லைன்னா இருங்க…” என்றார் இன்ஸ்பெக்டர்.
“காப்பாத்தி குடுக்க வேண்டியது உங்க கடமை தான ஸார். அப்போ இந்த மாதிரியா நடந்துப்பீங்க? இத்தனைக்கும் நாங்க எதுவும் கேட்கலை. என்னாச்சுன்னு கேட்கிற உரிமை கூடவா எங்களுக்கு இல்லை?…” என்றான் கதிர்.
“கதிர் கதிர். கொஞ்சம் அமைதியா இருங்க…” என வக்கீல் பேச இன்ஸ்பெக்டர் உறுத்து விழித்தார்.
“உங்க சட்டத்தை எல்லாம் கோர்ட்ல பேசிக்கோங்க. உங்காளுக்கு இதை காமிக்கனும்னு வர சொன்னேன். பார்த்தாச்சுல. கிளம்புங்க…” என்றார் இன்ஸ்பெக்டர்.
கடமைக்கு காண்பித்துவிட்டு அவர்களை விரட்டுவதிலேயே குறியாய் இருப்பதை போலவே தோன்றியது கதிருக்கு.
“என்ன கதிர்?…” என தாமரை கலங்க,
“ஓகே, ஓகே பார்த்துக்கலாம்…” என அவளை தட்டிக்கொடுத்து சமாதானப்படுத்தினான்.
“என்ன பார்த்துக்கலாம்? இங்க…” என்றவளை எதுவும் பேசாதே என்பதை போல் தலையசைத்தான் அவன்.
“கோர்ட்ல அதை ப்ரட்யூஸ் பண்ணிடறோம். அங்க வந்து உங்க நகைன்றதுக்கான ஆதாரத்தோட வந்து வாங்கிக்கோங்க…” என்றார்.
“என்னைக்கு வரனும் ஸார்?…” என கதிர் கேட்க,
“அதை நாங்களே உங்களுக்கு இன்பார்ம் பண்ணுவோம். அக்யூஸ்ட்க்கிட்ட இன்னும் விசாரிக்க வேண்டியதிருக்குது…” என மேம்போக்காய் சொல்ல தாமரைக்கு திட்டி தீர்க்க வேண்டும் என்னும் அளவிற்கு ஆத்திரம் பொங்கியது.
ஆனால் இங்கே எதையும் பேச முடியாமல், பேச விடாமல் கதிர் தடுத்திருக்க அமைதியாய் இருந்தாள்.
“நாங்களே சொல்றோம். இப்போ பார்த்தாச்சு தானே கிளம்புங்க…” என இன்ஸ்பெக்டர் சொல்லவும் கதிரின் வக்கீல்,
“நாங்க அந்த அக்யூஸ்ட்டை பார்க்கலாமா?…” என கேட்க,
“அது உங்க வேலை இல்லை. இவனுங்க கொள்ளையடிக்கிற ஆளுங்க. எல்லா இடத்துலையும் கை வரிசை காட்டிருக்கானுங்க. இது முகூர்த்த மாசம்ன்றதால எங்கலாம் விசேஷம் நடக்குதுன்னு பார்த்து ஸ்கெட்ச் போட்டுருக்கானுங்க. ஏற்கனவே அவனுங்க மேல ஏகப்பட்ட கேஸ் இருக்கு…”
“அப்போ ஏன் ஸார் இந்த மாதிரி ஆளுங்களை வெளில நடமாட விடறீங்க?…” கதிர் கோபத்துடன் கேட்டான்.
“இங்க சட்டம் எல்லாருக்குமே தான் பொதுவா இருக்குது. இந்த மாதிரி ராபெரி கேஸ்க்கும் வாதாட வக்கீல்ங்க இருக்க தானே செய்யறாங்க. நாங்க பிடிச்சு குடுக்கறதும், அவனுங்க வெளில எங்க முன்னாடியே நடமாடறதும் எத்தனையோ கேஸ்ல பார்த்தாச்சு…” என்றார்.
“உண்மையா உழைச்சு வாழ்றவங்களுக்கு அந்த சட்டம் எதுவும் செய்யறதில்லை…” என கோபத்துடன் கதிர் சொல்ல,
“இப்போ இது தான் விஷயமா? கிளம்புங்க ஸார். எங்களுக்கு நிறைய வேலை இருக்குது. உங்க கோபத்தை எல்லாம் கோர்ட்ல வந்து கொட்டுங்க. உங்க நல்ல நேரம் இவ்வளவு சீக்கிரம் இவனுங்க மாட்டினானுங்க…” என இன்ஸ்பெக்டர் கூறவும் வக்கீலிடம் பேசியபடி வெளியே வந்தனர்.
வீடு வரும் வரை தாமரை முகத்தில் நிம்மதியில்லை. மனதில் ஏகப்பட்ட கவலை. இதை எப்படி தந்தை தாங்குவார் என்று நினைத்துக்கொண்டே வந்தாள்.
விநாயகமும் உடன் வந்ததால் கதிரால் தாமரையை தனியே எங்கும் அழைத்து சென்று பேச முடியவில்லை.
அன்றே தங்களின் வீடு திரும்புவதால் பேச அவகாசமும் கிடைக்கவில்லை. சரி வீட்டிற்கு சென்று பேசிக்கொள்ளலாம் என இருந்துகொண்டான்.
“என்னம்மா, என்ன சொன்னாங்க? நகை கிடைச்சதா?…” என சரளா ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புடனும் கேட்க பதில் கூறவே வாய் வரவில்லை தாமரைக்கு.
“சரளா என்ன இது? உள்ள போ முதல்ல. வாசல்ல வச்சே கேட்கனுமா?…” என விநாயகம் சொல்லவும் தான் இயல்புநிலைக்கே திரும்பினார் சரளா.
அதுவும் கதிரையும் வைத்துக்கொண்டு அவர் வாசலை அடைட்டஹ்தை போல நின்று மகளிடம் கேட்டதில் சங்கடத்துடன் உள்ளே நகர்ந்தார்.
“தண்ணி குடுங்க அத்தை…” என சோபாவில் அமர்ந்தவன் விநாயகத்துடன் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தான்.
“வரட்டும், எப்படியும் எல்லா நகைக்கும் ரிசிப்ட் இருக்கும். சரளா வச்சிருப்பா…” என விநாயகம் சொல்லிக்கொண்டிருக்க சோமநாதனும் தாமரையுடன் வந்துவிட்டார்.
மகள் வந்ததுமே தந்தையை தான் தேடி சென்றாள். மகளை பார்த்ததுமே சோமநாதன் நகை பற்றி கேட்க பொதுவாக ஆமாம் என மட்டும் சொல்லி எழுந்து அமரும் படி கூற,
“மாப்பிள்ளை வெளில இருக்காரா? வா அங்க வச்சு பேசிப்போம்…” என சொல்லவும் கை தாங்கலாக தாமரை அழைத்து வந்துவிட்டாள்.
“நீங்க எதுக்கு மாமா எழுந்து வந்துட்டு? ரெஸ்ட் எடுக்கலாமே?…”
“இல்லைங்க மாப்பிள்ளை. அப்ப இருந்து படுத்தே தான் இருந்தேன். அதனால ரொம்ப நேரம் படுக்க முடியலை…” எனவும் விநாயகம் கதிரை பார்த்து சொல்லும்படி தலையசைத்தார்.
“போய்ட்டு வந்துட்டோம் மாமா. நகைங்க சிலதை தாமரை ஐடென்டிஃபை பண்ணிருக்கா….”
“ஒரு சில நகைங்கன்னா…” என சோமநாதன் முகம் மாற சரளா விசும்ப ஆரம்பித்துவிட்டார்.
“முதல்ல அழாதீங்க. கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதை கேளுங்க…” என்ற கதிர்,
“நகைங்க இன்னும் எவ்வளவு கிடைச்சிருக்குன்னு தெரியலை. தாமரை சில நகைங்க அதுல இல்லைன்னு சொன்னா…” என்றான்.