தாமரை கோபத்துடன் அமர்ந்திருந்தாள். குழந்தை துருவ் கட்டிலில் உறங்கிக்கொண்டு இருந்தான்.
கட்டிலை விட்டு சற்று தள்ளி இருந்த மேஜையில் கையை ஊன்றியபடி கதிர் இருக்க அவன் முகத்திலும் மிதமிஞ்சிய கோபமே வியாபித்து இருந்தது.
மேஜையை தட்டியபடி அவன் அமர்ந்திருந்தான். அந்த சத்தத்தில் கதிரின் கோபத்தை உணர்ந்துகொண்டவளோ அசைவதாய் இல்லை.
மனதுக்குள் ஆயிரம் சஞ்சலங்கள். ஆசைகளை அடக்கிக்கொண்டு அமர்ந்திருக்கும் அந்த வேதனையில் உழன்றுகொண்டு இருந்தாள் தாமரை.
அவளுக்கு மட்டும் என்ன ஆசையா? தன் தங்கைக்கு கிடைக்க இருக்கும் நல்வாழ்வை தட்டிவிட?
மனதிற்குள்ளே அழுதாலும் வெளியே தன்னை இறுக்கமாய் காட்டிக்கொண்டாள் தாமரை.
சிறிது நேரம் பார்த்திருந்துவிட்டு கதிர் எழுந்து வந்து மகனின் மறுபக்கம் படுத்துவிட்டான்.
அவளிடம் எதுவும் பேசாமல் அவன் கண்ணை மூடிவிட சிறிது நேரம் பார்த்தவள் மனது கேட்காமல் தானே பேசினாள்.
“கதிர், கதிர் பேசுங்க. நான் சொல்றதை புரிஞ்சுக்கோங்க. ப்ளீஸ் கதிர்…” அவனை எழுப்ப அவன் முதுகு காண்பித்து படுத்துக்கொண்டான்.
“என்னை புரிஞ்சுக்கோங்க. நான் சொல்றதுல இருக்கற நியாயத்தை…”
“அப்படியே போட்டேனா பாரு. என்ன நியாயம் நீ பேசறதுல இருக்குது? சுத்த நான்சன்ஸ் தான் நீ சொல்ற அந்த நியாயத்துல…” என எரிந்து விழுந்தான் வேகமாய் எழுந்தமர்ந்து.
அவன் அசைந்து எழுந்து கத்தியதில் மகன் பதறி விழிக்க தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்தியவனாக மகனை தூக்கி தோளில் போட்டுக்கொண்டான்.
“குடுங்க நான் தூங்க வைக்கறேன்…”
“ஒன்னும் தேவை இல்லை…” என அவளின் கையை தட்டிவிட கண்ணீர் முட்டி நின்றது தாமரைக்கு.
“எங்கம்மாவோட தப்பு. நாங்களா கேட்டிருக்கவே கூடாது. பெரிய தப்பு. நாளைக்கு அவங்களை பேசிக்கறேன்…” என்றான்.
“இப்போ ஏன் அத்தனை திட்டறீங்க?…” என தாமரைக்கு பொங்கியது.
“ஆமா, நீ தான் வேணும்னு நாங்க ஒத்தை கால்ல நின்னு முடிக்கும் போதும் ஆசை இருந்தும், விருப்பம் இருந்தும் கொஞ்சமும் இறங்கி வராம என்ன அடம் பண்ணின நீ? இப்போ தர்ஷனுக்கு நிவியை எடுக்கறதுல திரும்ப பிரச்சனை பன்ற…”
“நான் வேண்டாம்ன்னு சொன்ன காரணம் உங்களுக்கு தெரியாதா கதிர்? சும்மா பேசாதீங்க…”
“ஏன் தெரியாம? அப்போ வேற சுட்சுவேஷன். இப்போ வேற. அதான சொல்ல போற? ஒன்னும் பேச வேண்டாம்…”
“இது தப்பு கதிர்…”
“தப்பு தான். உங்க வீட்டு பொண்ணை என் தம்பிக்கு கேட்டது என்னோட இல்லை எங்களோட தப்பு தான். தெரியாம கேட்டுட்டோம்…” என அவன் சொல்லியவிததில் அடிபட்டு போனாள் தாமரை.
“கதிர் எனக்கு ரொம்ப ஹர்ட் ஆகுது. இது இப்படி பண்ணாதீங்க…” என்றவள் லேசாய் விசும்ப ஆரம்பித்தாள்.
“இந்த காயப்படறது, வேதனை, வலி, ஏமாற்றம் இதெல்லாம் உனக்கும், உன் வீட்டை சேர்ந்தவங்களுக்கு மட்டும் தான்னா நினைச்ச? எப்போ தாமரை நீ மத்தவங்க பேச்சுக்கு குடுக்கற மதிப்பை நிறுத்துவ?…”
கோபத்துடன் ஆரம்பித்தவனின் பேச்சு ஆற்றாமையில் வந்து நிற்க கதிரின் முகத்தில் தெரிந்த வருத்தத்தில் தாமரை கலங்கி போனாள்.
“என்ன கதிர் நீங்க? நான் சொல்ற காரணமே வேற? இப்படி பேசாதீங்க…”…”
“பேசலைன்னு தான் சொல்றேன். நீ தான் விடமாட்டேன்ற…”
எங்கே இதை கொண்டு இருவருக்குள்ளும் விரிசல் வந்துவிடுமோ என பயந்துகொண்டு அமர்ந்திருந்தாள் தாமரை.
செல்ல சண்டைகள் தவிர்த்து வேறு எந்தவித மனஸ்தாபங்களும் இன்றிய ஒரு அற்புத வாழ்க்கையை வாழ்வதாக இறுமாந்து இருந்தவள்.
இப்போது அதனை தானே குலைத்துவிடுவதை போல நடந்துகொண்டிருக்க வெறுத்து போனாள் தாமரை.
“நீங்க இத்தனை கோபப்பட்டு நான் பார்க்கலையே கதிர். ஏன் யாரோ போல பேசறீங்க?…”
“இல்லம்மா, நான் யாரு போலவும் பேசலை. எப்பவும் உனக்கு இதே தானா? நான் பேசறது கூட யாரோ மாதிரி இருக்குன்ற?…”
கதிரின் கோபம் கூடிக்கொண்டே தான் சென்றது. மனதில் அத்தனை ஆதங்கமும் கூட.
வேறு யாராவதாக இருந்தால் தூக்கி எறிந்துவிட்டு போய்விடுபவன் மனைவியாகிவிட்டதால் பொறுமையுடன் இருந்தான்.
முதல்நாள் தான் யமுனா தர்ஷனின் திருமண பேச்சை கதிரிடம் எடுத்திருந்தார். உடன் பூங்காவனமும் இருக்க இருவரின் முகத்தில் சந்தோஷம்.
“தர்ஷனுக்கு பொண்ணு பார்க்கலாம்ன்னு இருக்கோம் கதிர்…” என்றதும் அவனுமே மகிழ்ந்து தான் போனான்.
“நல்லதும்மா. பார்க்கலாமே?…” என மகனும் சொல்ல,
“அதான் உன்கிட்ட பேசலாம்ன்னு இருந்தேன்…”
“ம்மா, என்கிட்டே கேட்டு ஏன் செய்யனும்னு நினைக்கறீங்க? நீங்க ஒன்னு முடிவு பண்ணினா நல்லதா தான் இருக்கும்…” என்றான்.
எப்படி இருந்தவன் இப்பொழுது இத்தனை நம்பிக்கையுடன் பேசுவதை கேட்க யமுனாவின் மனது குளிர்ந்து போனது.
“பொண்ணு நானும் அப்பாவும் முடிவு பண்ணிருக்கோம். நீ என்ன சொல்றன்னு தெரியனும். அதுக்கப்பறம் தான் பொண்ணு வீட்டுல கேட்கனும்…” என்றார் யமுனா.
“பீடிகை பலமா இருக்கேம்மா? அப்படி என்ன பொண்ணு?…” கதிருக்கு சட்டென நிவியின் ஞாபகம் எல்லாம் வரவில்லை.
அதனால் அவன் நிவேதாவை எதிர்பார்க்கவும் இல்லை. இன்னும் படிப்பும் முடியாமல் செய்வார்கள் என்று அவன் நினைக்கவில்லை.
“எல்லாம் நமக்கு வேண்டிய பொண்ணு தான் கதிர். முதல்ல உன்கிட்ட பேசிட்டு தான் தாமரைட்ட சொல்லனும்…” என்றதுமே அவனுக்கு புரிந்து போனது.
“நிவியவா சொல்றிங்க?…” என்றான் யோசனையுடன்.
“ஆமாப்பா. நல்ல பொண்ணு நல்ல குடும்பம். இன்னொரு மருமகளும் ஒரே வீட்டுல இருந்து வந்தா குடும்பமும் ஒண்ணா இருக்கும்…”
“இதென்னமா லாஜிக்?…” என்றான் கதிர்.
“இல்லப்பா, நிவிக்கு சீக்கிரம் ஒரு கல்யாணத்தை பண்ணனும்னு யோசிக்கிறாங்க. அங்கைட்ட கூட பேச்சுவாக்குல சொல்லிருப்பாங்க போல தாமரை அம்மா…”
“என்னன்னு?…”
“கதிர் அங்கை தான்ப்பா இந்த மாப்பிள்ளை பார்க்கிறதை பத்தி பேசறப்போ நம்ம தர்ஷனுக்கே குடுக்கலாமேன்னு அங்கை சொன்னப்போ சம்பந்தியம்மா இல்லைன்னு சொல்லிட்டாங்களாம். இப்போவும் நாங்க அதே நிலமையில தான் இருக்கோம். இன்னொரு பொண்ணை எடுக்க அவங்க சம்மதிக்க மாட்டாங்கன்னு வருத்தமா சொல்லிருக்காங்க…”
பூங்காவனம் சொல்லவும் கதிரும் பலவித யோசனையுடன் அவர்களை பார்த்தான்.
“நீங்க என்னப்பா நினைக்கறீங்க?…”
“எங்களுக்கு முழு சம்மதம்ப்பா. இதுல நினைக்க என்ன இருக்குது?…” என்றார் அவர்.
“சரி நான் தாமரைட்ட பேசறேன். முதல்ல அவ என்ன சொல்றான்னு தெரிஞ்சுட்டு அவ மூலமாவே வீட்டுல பேச சொல்லுவோம்…”
“என் மருமகளை பத்தி தெரியாதா? அவ சரின்னு தான் சொல்லுவா. சொல்ல போனா அவ சந்தோஷப்படுவா பாரு. தர்ஷனுக்கு குடுக்க கசக்குமா. அவங்க ரெண்டுபேருமே நல்ல தோஸ்த்து…” என யமுனா பெருமிதமாய் சொல்லவும் சிரிப்புடன் தலையசைத்தான் கதிர்.
“ஓகே, நான் பேசறேன்…”என சொல்லிவிட்டு மாலை தாமரை வரவும் இரவு உணவை முடித்துக்கொண்டு கதிரும் அவளுக்காக காத்திருக்க ஒருமணி நேரமாய் வாக்குவாதம்.
இப்போதைக்கு தங்களிடம் எதுவும் இல்லை, ஊரில் அப்படி பேசுவார்கள், உன் சொந்தம் தானே ஏசியது, ஏமாற்றிவிட்டதாய் சொல்வார்கள் என அவள் அடுக்கிக்கொண்டே செல்ல கதிர் பொறுமை இழந்தான்.
“என்னவோ தர்ஷனுக்கு வம்படியா பிடிச்சு கட்டி வக்க நினைக்கிற மாதிரில பேசற நீ?…” என்று சீறிவிட அதன் பின்பு அமைதியாய் இருந்தாள். ஆனாலும் பிடிவாதம்.
“ஓகே, கடைசியா கேட்கறேன். நீயே சொல்லு. தர்ஷன் மேல ஏதாவது தப்பு இருந்து இதனால தான் குடுக்கலைன்னு சொல்லு. நான் உன் வழிக்கே வரேன்…” என்றான்.
“இல்லை. அப்படி எதுவும் இல்லை. தர்ஷன் மாதிரி ஒரு பையன் கிடைக்க எங்க நிவி தான் குடுத்து வச்சிருக்கனும்…”
“அப்பறம் என்னம்மா உனக்கு?…” என்றவன் பின் அமைதியாக,
“இன்னொருத்தவங்க வேலையில்லாம பேசிட்டு போனா அதை பிடிச்சுட்டு உன் தங்கச்சிக்கு அமையிற நல்ல வாழ்க்கையை நீயே தடுப்பியா?…”
“கதிர்…”
“இன்னைக்கு தர்ஷனுக்கு வேண்டாம்ன்னு சொல்ற, நாளைக்கே நீங்களே ஏதாவது மாப்பிள்ளையை பார்த்து அதுக்கும் யாராவது பேசினா கடைசி வரைக்கும் அவளுக்கு கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்லிருவியா?…” என்றான் ஆவேசத்துடன்.
“என்னவோ பண்ணு. நான் எதுலையும் தலையிட மாட்டேன். நீ அவங்க சொன்னதை கேட்டு இப்படியே இரு. இன்னும் பேசுவாங்க. என் கூட வாழறதை பத்தி கூட. பேசாம அதுக்கு காதுகொடுத்துட்டு கிளம்பிடு. நீ செஞ்சாலும் செய்வ…”
“இந்த பேச்செல்லாம் அனாவசியம் கதிர். நான் போவேன்னு நீங்க எப்படி நினைக்கலாம்?…”
“இன்னொருத்தவங்க விமர்சனத்தை பெருசா நினைக்கிற நீ அதை செய்ய மாட்டியா என்ன?…” என்றான்.
அவன் கேட்டதற்கு பதிலின்றி வாயடைத்து அமர்ந்திருந்தாள் தாமரை. தாங்கமுடியவில்லை இந்த வார்த்தைகளை.
எந்த இடத்திலும் அவன் அவளை விட்டுக்கொடுத்தோ, இல்லை மறுத்தோ பேசியதில்லை. அவளின் ஆசைகள் எல்லாம் அவனுடையதென எடுத்துக்கொண்டவன். இப்போது இப்படி பேச பேச கண்ணீர் தான் சுரந்தது.
“ச்சே, என்ன பேச்சு இது? அவங்க சொன்னா அப்படி ஆகிடுமா?…” என்றவன்,
“இதுதான் அவங்க தரம். அந்த தரத்துக்கான இடத்தை தான் நீ தரனும். அதை விட்டு தலைல வச்சு சுமந்துட்டு இருக்க…” என்று சொல்ல சுருக்கென்றது தாமரைக்கு.
“இனி இந்த பேச்சு வேண்டாம் தாமரை. முடிஞ்சது. இனி நாங்களும் இதை பேச மாட்டோம்…”
“இது பிரிச்சு பேசற மாதிரி இருக்கே கதிர். நான் வேற நீங்க எல்லாம் வேறையா?…” என்றாள் தாமரை.
“ஆமா, இது நீ சொன்னது தான். உன் அம்மாப்பாவை நான் அப்படி வேறையா பார்த்ததே இல்லை. ஆனா உன்னோட தாட் படி பார்த்தா நானும் அப்படித்தான் நினைக்கனும் போல?…” என்றான் கதிர். அதிர்ச்சியுடன் பார்த்தாள் தாமரை.
உண்மை தானே இத்தனை நாளில் அவன் எந்த வேறுபாடும் காட்டாது தானே கவனித்து வந்தான். ஒருவேளை தன் மனதில் ஆரம்பத்தில் இருந்தே அந்த எண்ணங்கள் பதியவில்லையோ என தன்னை குறித்தே வெட்கி போனாள் தாமரை.
ஆரம்பத்தில் இருந்து யோசனைகளை தான், தன் குடும்பத்தின் மான, அவமானங்கள், அவர்களின் கௌரவம், ஊராரின் முன்னிலையில் அவர்கள் மதிப்பு, கதிரை சேர்ந்தவர்களின் பார்வையில் தேவைப்பட்ட மரியாதை என தான், தன் தாய்வீடு என்ற நினைப்பு தானே என்றுமே.
இதுநாள் வரையில் நாங்களும் உங்கள் சொந்தமென்று உடன் நின்ற தன் புகுந்தவீட்டினரிடம் ஒன்றி உறவாடினாலும் மனதினோரம் ஏதோ ஒரு மூலையில் சிறு விலகல் இருந்துகொண்டே இருந்ததோ?
“கதிர்…” என அழைத்தாள்.
தன் எண்ணங்களின் வேறுபாட்டினை கண்டுகொண்டவள் தனக்குள் அரண்டிருந்தாள்.
அவன் என்னவென்றே கேட்கவில்லை. மௌனம் மட்டுமே அவனிடத்தில் இருக்க, பதிலுக்கு பேசினால் தானே பேச முடியும் என அவனை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.
வெகுநேரம் அவள் அப்படியே அமர்ந்திருந்ததை தாங்க முடியாதவன் மனது கேட்காமல் தலையை நிமிர்த்தி அவளை பார்த்தான்.
“நான் தான் இதை பத்தி பேசலைன்னு சொல்லிட்டேன்ல தாமரை. படு…” என்றான்.
“இல்லை கதிர்…” என்றவளை அதிகம் பேச விடாமல்,
“இல்லை, நிஜமாவே எனக்கு கோபம் இல்லை. கேட்கறதுக்கு எங்களுக்கு எப்படி தோணுச்சோ மறுக்க உனக்கும் உரிமை இருக்குது. உன்னை இங்க யாரும் எதுவும் நினைக்க மாட்டாங்க. அம்மாக்கிட்ட நான் பேசிக்கறேன். அதுக்காக நீ பயந்து தூங்காம இருக்க வேண்டாம்…”
அவன் சொல்லிவிட்டு படுத்ததும் ஸ்தம்பித்து போனாள் அவள். இது என்ன குரல்? என்ன விதமான உடல்மொழி? மனதிற்குள் குற்ற உணர்ச்சி பெருகியது.
‘இல்லை கதிர். நான் நினைக்கலை’ என சொல்ல கூட வாய்ப்பில்லை, வாய்வரவில்லை அவளுக்கு.
குழந்தையின் பக்கம் படுத்துக்கொண்டவளுக்கு உறங்கா இரவாகி போனது. விடிய விடிய விழித்தபடி தான் இருந்தாள் தாமரை.
காலை கண் விழிக்கும் பொழுது தாமரை அருகில் இல்லை. கதிரின் அருகே குழந்தை உறங்கிக்கொண்டு இருந்தான்.
அவன் எழுந்து குளித்து வரும் நேரம் குழந்தையும் சிணுங்க ஆரம்பிக்க தூக்கிக்கொண்டு கீழே இறங்கினான் கதிர்.
வீடு முழுவதும் நெய் வாசத்தில் நிறைந்திருக்க யமுனாவின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது.
“என்னம்மா, என்ன சர்க்கரை பொங்கல் எல்லாம்?…” என கேட்டுக்கொண்டிருந்தவன் பார்வை பட்டும் படாமலும் தாமரையை தீண்டியது.
அவளும் குளித்து புது புடவையில் கோவிலுக்கு செல்வதை போல கிளம்பி இருந்தாள்.
“இன்னைக்கு ஆபீஸ் போகலையா?…” என்றான் அவளிடத்தில்.
“இல்லை போகலை. லீவ் சொல்லிட்டேன். அம்மா வீட்டுக்கு போறேன்…” என்று அவளும் சொல்லவும் ஓரளவு நிலமையை யூகித்துவிட்டான்.
இரவிரவாக தொண்டைத்தண்ணீர் வற்ற அவளிடம் போராடியது தான். அவளானாள் இப்படி தன்னிடமும் சொல்லாமல் வந்துவிட்டாளே என முறைத்துக்கொண்டே பூஜை அறைக்கு சென்றான்.
“அவனை எங்கிட்ட குடுங்க. குளிக்க வச்சு தூக்கிட்டு வரேன்…” என்று தாமரை சொல்ல,
“நீ அவனுக்கு இதை பரிமாறு. நான் போய் என் பேரனை குளிப்பாட்டிட்டு வரேன்…” என யமுனா செல்ல அவரின் முகத்தில் ஆயிரம் விளக்குகளின் ஒளிர்வு.
தாய் தன் மகனுடன் கிளம்பவும் வீட்டில் வேறு யாரும் இல்லாமல் இருக்க தாமரையை தாண்டிக்கொண்டு தனக்கு தேவையானதை எடுத்து வைத்து வந்து டையனிங்கில் அமர்ந்தான்.
“ஏன் நான் இல்லையா? எதுக்கு இப்படி நீங்களே வச்சுக்கறீங்க?…” தாமரை கோபத்துடன் கேட்க,
“ஏன் நானும் தான் ரூம்ல இருந்தேன். என்கிட்டே சொல்லாம தானே நீ வந்த? நான் கேட்டேனா?…” என்றான்.
“ப்ச், கதிர். நைட் அத்தனை கோபமா மறுத்து பேசிட்டு என்னன்னு உங்ககிட்ட சம்மதம் சொல்ல? அதான் என்னவோ போல இருந்துச்சு. காலையில அத்தைட்ட வந்து சொன்னேன்…”
“ஓகே, அதனால என்ன இப்போ நான் தான் கேட்கலையே?…” என்றான்.
அவனின் இந்த அலட்டிக்கொள்ளாத பேச்சில் தாமரைக்கு தான் சுர்ரென்று ஏறியது.
“என்ன விளையாடறீங்களா? சந்தோஷப்படுவீங்கன்னு பார்த்தா இப்படி பேசறீங்க?…”
“எதுக்கு சந்தோஷப்படனும்? இப்போ தான் கவலையா இருக்கு. நீ எப்போ என்ன முடிவு பண்ணுவியோன்னு…”
“என்ன? நான் நல்ல முடிவு தானே எடுத்திருக்கேன்?…”
“நீ தான் மெச்சிக்கனும். நினைச்சா மாத்தி மாத்தி பேசுவ. திடீர்ன்னு என்னவோ நினைப்ப. யாராச்சும் சொன்னாங்கனு…” என்று அடுத்த வார்த்தை அவன் சொல்லும் முன் அவனின் இதழ்களை கை கொண்டு அடைத்தாள் தாமரை.
“வேண்டாம் கதிர். அந்த மாதிரி ஒரு கல்யாணம் என்னோட போகட்டும். என் தங்கச்சிக்கு வேண்டாம். நிச்சயம் எந்த மாற்றமும் இல்லை. மாத்தியும் நான் பேச மாட்டேன். உங்க வாயால எதுவும் சொல்லிடாதீங்க…” என்று கலங்கி போய் அவள் சொல்லவும்,
“ஹேய் ச்சே, என்ன இது? நான் ஏதோ கோவத்துல பேசினா நீ சீரியஸா எடுத்துப்பியா? சும்மா உன்னை வெறுப்பேத்தினேன்…” என்று அவளை நடு வீட்டில், அணைக்க முடியாமல் கையை பிடித்துக்கொண்டான்.
“ம்ஹூம், எல்லாருக்கு நான் சொல்றது தான் புரியுது. ஏன் எதுக்குன்னு யோசிக்கறதில்லை. கதிர் உங்களை எனக்கு எவ்வளோ புடிக்கும்ன்னு நான் சொன்னதே இல்லை. ஆனா நீங்க இல்லைன்னா நானும் இல்லை. இது நிஜம்…”
“தாமரை ரிலாக்ஸ். நீ சொன்னா தானா? கொஞ்சம் இதை விடு. கல்யாண வேலையை பார்ப்போம்…”
“என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதுதான் கிண்டலாவும் அந்த வார்த்தையை சொல்றீங்க. ஆனா நிவிக்கு ஒரு நல்ல லைஃப் கிடைக்கும் போது நான் எவ்வளவு துடிச்சிருப்பேன் அதை மறுக்க. அவளுக்கு என்னால சந்தோஷம் மட்டும் தான் கிடைக்கனும் கதிர்…”
“கண்டிப்பா தாமரை. நீ இதை நினைச்சு வொர்ரி பண்ணிக்காத. நேத்து நானுமே கொஞ்சம் அதிகமா பேசிட்டேன்…” என்றான் வருத்தத்துடன்.
“இல்லை, நீங்க அப்படி பேசலைன்னா இன்னும் நான் நினைக்கிறது தான் சரின்னு இருந்திருப்பேன்…” என்றவள்,
“இனிமே அப்படி பேச மாட்டேன். கண்டிப்பா. கண்டிப்பா…” என்றாள்.
“அப்போ அத்தை மாமாட்ட பேசனும். அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு தெரியனுமே? பொண்ணை சமாளிச்சா பெத்தவங்களை சமாளிக்க இன்னும் எவ்வளவு மெனக்கெடனுமோ?…” என்றான் கிண்டலாக.
“அதெல்லாம் ஒன்னும் நினைக்க வேண்டாம். அவங்களுக்கு இதுல கண்டிப்பா சம்மதமா தான் இருக்கும். எனக்கு தெரியும்…” என்றாள் அவள்.
“அப்போ ஸ்வீட் ந்யூஸ் தான்னு சொல்லு…” என்றவன் பொங்கலை எடுத்து அவளுக்கு ஊட்ட,
“என்னங்கடா நடக்குது இங்க? நான் வந்துட்டேன்…” என்றபடி வந்தான் தர்ஷன்.
“உன்னை தான்டா தேடிட்டு இருந்தோம்…” என்ற கதிர்,
“கங்க்ராட்ஸ் டா தர்ஷா…” என்றான்.
“தேங்க்ஸ் டா அண்ணா…” என அவனும் பதிலுக்கு சொல்லிவிட்டு,
“ஆமா எதுக்கு இந்த வாழ்த்து?…” என கேட்டான்.
“ரொம்ப விவரம் தர்ஷ். தேங்க்ஸ் சொல்லிட்டு கேள்வி கேட்கிற பாரேன்…” தாமரை சிரிக்க கதிரும் தம்பியை கேலியாய் பார்த்தான்.
“அதான் டேமேஜ் பண்ணியாச்சே? அப்பறம் என்ன?…” என இருவரையும் சொல்லியவன்,
“சர்க்கரை பொங்கலா? என்னடா நல்லது நடந்துச்சு நம்ம வீட்டுல? அண்ணா இன்னொரு ட்ராவல்ஸா?…” என கேட்டுக்கொண்டே தனக்கும் ஒரு தட்டில் போட்டு பொங்கலை அள்ளி சாப்பிட ஆரம்பித்தான்.
“உனக்கு கல்யாணம்டா…” என கதிர் சொல்லவும்,
“வாவ் வாட் எ சர்ப்ரைஸ்…” என்று தர்ஷனும் சொல்ல அதற்குள் மாடியில் இருந்து யமுனா குழந்தையுடன் வரும் சத்தம் கேட்க தாமரை எழுந்து சென்றாள்.
“வந்துட்டானா சின்னவன்…” என யமுனா வர,
“குட்டிப்பையன் எங்கம்மா?…” என்றான் தர்ஷன்.
“இப்பத்தான் உன் அண்ணி வாங்கிட்டு போனா. போய் துணி மாத்திட்டு பவுடர் போட்டுட்டு கூட்டிட்டு வரேன்னு…” என்ற யமுனா,
“கதிரு, பிள்ளை கையில மாட்டியிருந்த வசம்பு வளவி அந்துருச்சு. ஒரு எட்டு கடைக்கு போய் ஒன்னு வாங்கிட்டு வாயேன்…” என்றதும் கதிரும் கிளம்பி சென்றான்.
“என்னம்மா வீடே கல்யாண வீடு மாதிரி ஆகிடுச்சு…” என்று கேட்க,
“அதுக்குள்ளே சொல்லிட்டங்களா? உனக்கு சொல்ல என்ன அவசரம்?…” என்றவர் இளைய மகனுக்கு பரிமாறினார்.
“ம்மா, எனக்கு தான கல்யாணம். என்கிட்டே சொல்லாம பண்ணுவாங்கள?…” என்றவன்,
“ஆமா பொண்ணு யாரு?…” என்றான்.
“நம்ம நிவி தான். வேற யாரு? பொண்ணு சொந்தத்துக்குள்ள இருக்கும் போது வெளில போய் எடுக்க முடியுமா? சொந்தத்தை தள்ளிட்டா செய்யறது?…” என்று சொல்லிவிட்டு,
“இரு உனக்கு அடுத்த குஷ்புவை கொண்டாறேன்…” என எழுந்து சென்றவர் தர்ஷனின் முகம் போன போக்கை கவனிக்கவில்லை.
“நோ…”என்றவனின் அலறல் தொண்டையை விட்டு வெளியே வரவில்லை.
‘முடியாது இதுக்கு நான் ஒருகாலும் சம்மதிக்கவே மாட்டேன்’ என சூளுரைத்துக்கொண்டான் தர்ஷன்.