அதை எல்லாம் கண்டுகொள்ளாதவனின் கவனம் எல்லாம் திருமணத்தை தள்ளி வைப்பதில் இருந்து நகர்ந்து பெயர் போடுவதில் வந்து நின்றது.
“ம்மா, பத்திரிகைல தர்ஷன்னு தான் போடனும். இல்லன்னா இன்விடேஷனே அடிக்க வேண்டாம். நான் வாட்ஸ்ஆப்ல டிஸைன் பண்ணி எல்லாருக்கும் அனுப்பிப்பேன்…” என சொல்ல,
“அதுலையும் தண்டாயுதபாணின்னு போட்டு அடைப்புக்குறில தர்சான்னு போட்டுக்க…” என பிடிவாதமாய் யமுனா பேசினார்.
“எள்ளுவய பூக்களையே. பெத்த புள்ளையின்னும் கூட பார்க்கலையே?…”என்று அவன் புலம்ப,
“இதுக்குத்தான் நான் பேசறேன்னு சொன்னேன். இப்போ என்ன உன் ப்ரெண்ட்ஸ், கொலீக்ஸ் இவங்களுக்கு குடுக்க தனியா இன்விடேஷன் பிரிண்ட் பண்ணிக்கோடா. அவ்வளோ தானே?….” என கதிர் சொல்லவும் தர்ஷன் திகைத்தான்.
‘இப்ப நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்?’ என தன் அண்ணனை பார்க்க கதிர் உதட்டை பிதுக்கினான்.
“இனி நோ டிஸ்கஷன். ப்ளைட் டேக் ஆஃப் ஆகிடுச்சுடா தம்பி…” என கதிர் சிரிக்கவும்,
“நீ பேசாதடா, அடிச்சுட்டு அயோடெக்ஸ் பூச உன்னால தான் முடியும். கொஞ்சம் என்னை கன்ட்ரோல் பண்ணிருக்கலாம்ல. போடா…” என்று சொல்லி அவன் உறங்க சென்றுவிட்டான்.
“என்னவாம்? என்ன ரெண்டுபேரும் பூடகமா பேசிக்கறீங்க?…” என தாமரை கேட்க ஒன்றுமில்லை என்பதை போல சிரித்தபடி தலையசைத்தான் கதிர்.
தர்ஷன் சொல்லியதை தாமரையிடம் சொல்லலாம் தான். ஆனால் இப்போதுதான் தெளிவாய் இருக்கிறாள். எதற்கு இதையும் சொல்லி குழப்ப என விட்டுவிட்டான் கதிர்.
அறைக்குள் வந்த தர்ஷன் முதல் வேலையாக வாட்ஸ்ஆப்பில் பேமிலி க்ரூப்பில் இருந்த நிவேதாவின் எண்ணை எடுத்து அவளுக்கு அழைத்துவிட்டான்.
அந்த நேரத்தில் தர்ஷனின் எண்ணிலிருந்து கால் வரவும் நிவேதாவிற்கு படபடப்பாக இருந்தது.
இத்தனை நாளில் அவளிடம் ஒருமுறை கூட போனில் இப்படி பேசியிறாதவள் இன்று தனக்கு பேசப்பட்ட மாப்பிள்ளையாக அறிந்ததில் இருந்தே உள்ளுக்குள் ரகசிய சிலிர்ப்பு.
அவனாக பேசட்டும் என நிவேதா இருக்க இப்போது அவனே அழைத்துவிடவும் எடுத்து பேசவும் தயக்கமாகவும், வெட்கமாகவும் இருக்க மெதுவாய் அதனை அட்டன் செய்தாள்.
“ஒரு போன் அட்டன் பன்றதுக்கு உனக்கு இவ்வளவு நேரமா? தூங்கிட்டியா?…” என்றான் எடுத்த எடுப்பில்.
“ஹாங், இல்லையே தூங்கலை…” என நிவேதாவிற்கு கொஞ்சம் பதட்டமாக இருந்தது அவனின் அந்த கேள்வியில்.
“கோவமா இருக்கீங்களா?…” என்றாள் அவளாகவே.
“ம்ஹூம், இல்லை. உன்கிட்ட ஒண்ணு கேட்கனும். அதான் கால் பண்ணேன்…” என்றவன்,
“ஆமா நான் தான் மாப்பிள்ளைன்னதும் உனக்கு எப்படி இருந்துச்சு? ஐ மீன் என்னை பிடிச்சதா?…” என கேட்க நிவி திகைத்தாள்.
“ஓய், லைன்ல தான் இருக்கியா? நிவி?…” என கேட்க,
“ஹ்ம்ம், இருக்கேன்…”
“பிடிச்சதா இல்லையா? பதில் சொல்லு….” என்றான்.
“ஹ்ம்ம், ஆமா…” என்றவளுக்கு மேலும் பேச முடியாமல் திணற,
“நீ டாக்டர் தானே? தொண்டையில கிச்சு கிச்சா? பதில் சொல்ல இத்தனை யோசிக்கிற? என்னை எப்படி பிடிச்சது உனக்கு?…” என்றவனுக்கு என்ன பதில் சொல்ல? நிவிக்கு தலைசுற்றியது.
“நிவி…”
“எனக்கு தெரியலை. நீங்க எதுனாலும் வீட்டுல பேசுங்க…” என சொல்லியதும் தான் அவளின் பயத்தையும், தயக்கத்தையும் அவளின் குரலில் உணர்ந்தான் தர்ஷன்.
சற்று நேரம் மௌனமாக இருந்தவன் தான் அவளை மிரட்டுவதை போல தோன்ற மேலும் பயம் காட்டாமல்,
“ஓகே, தூங்கு…” என சொல்லி வைத்துவிட்டான்.
எதற்கு அழைத்தான், எதற்கு கேட்டான் என புரியாமல் நிவி தான் குழம்பி போனாள்.
அதன் பின் தர்ஷனிடம் எந்த மறுப்பும் இல்லை. ஆனாலும் பெரிதாய் நிவியிடம் பேசிக்கொள்ளவும் இல்லை. கதிர் கேட்ட போதும் கூட,
“என் வாய்ஸ் கேட்டதுமே பயந்து போற மாதிரி இருக்குடா. என்னவோ வீட்டுக்காக சம்மதிச்ச மாதிரி. கொஞ்சம் நாள் இப்படியே போகட்டும்…”
“ஏன் நீ கூட தான் வீட்டுல சொல்லவும் சம்மதிச்ச?..”. என்ற கதிரின் பேச்சில் தர்ஷனும் ஆமோதிப்பாய் தலையசைத்தான்.
அடுத்த பத்து நாளில் நிச்சயதார்த்தம், அங்கே திருமணத்திற்கான முகூர்த்த நாள் ஒன்றரை மாதம் கழித்து என குறிக்கப்பட்டது.
சோமநாதன் சொந்தங்கள், மற்றும் கதிர் இல்லத்தின் ஆட்கள் என அனைவரும் சூழ்ந்திருக்க சோமநாதனின் வீட்டின் மொட்டை மாடியில் பந்தல் போடப்பட்டு நிச்சயதார்த்த ஓலை வாசிக்க இருந்தார்கள்.
“படிச்சிடலாமா?…” என்றதுமே தர்ஷன் யமுனாவை பார்க்க அவர் அவனை கவனிக்காததை போல திரும்பிக்கொண்டார்.
“பூங்காவனம் யமுனா அவர்களின் தவ புதல்வனான தண்டாயுதபாணி என்கிற தர்ஷனுக்கும்…” என வாசிக்கும் பொழுதே ‘ஐயோ’ என கண்ணை மூடி திறந்தவன் பார்வை தன்னை போல நிவேதாவை தேட அவளும் இதை கவனித்துகொண்டு தான் இருந்தாள்.
‘இப்ப சந்தோஷமா?’ என தர்ஷன் யமுனாவை முறைக்க அவர் சிரத்தையாக அங்கே சொல்வதை கவனித்துக்கொண்டு இருந்தார்.
தட்டு மாற்றப்பட்டு முகூர்த்த நாள் குறிக்கப்பட்டது. திருமணத்திற்கு இன்னும் ஒன்றரை மாதம் இருக்க கதிர், தாமரை திருமணம் போல் அல்லாது பொறுமையாகவே எடுத்து செய்ய இருந்தார்கள்.
இன்னொரு பெண்ணையும் தாமரை வீட்டிலேயே எடுத்ததற்கு யமுனாவை, பூங்காவனத்தை சேர்ந்தவர்கள் ஒருபாடு பேசி தீர்க்க இப்போது எதையும் தாமரை கண்டுகொள்ளவில்லை.
மாப்பிள்ளை வீட்டு ஆளாகவும், பெண்ணை சேர்ந்தவளாகவும் இருபக்கமும் பார்த்து கவனித்து செய்தாள் தாமரை. அவளின் இந்த பொறுமையான குழப்பமற்ற நடவடிக்கை கதிரை மகிழ செய்தது.
தர்ஷனுமே பிகு செய்துகொள்ளாமல் அந்த ஒன்றரை மாத இடைவெளியில் சிறு தோழமையை உருவாக்கிக்கொண்டான் நிவேதாவுடன்.
முதலில் அவளே சின்ன சின்ன விஷயத்தை பற்றி சொல்லவும், பேசவும் என்று அழைக்க முதலில் ‘என்னதிது’ என யோசித்தவன் பின் தானாகவும் பேச ஆரம்பித்தான்.
காதல் பேச்சுக்கள் இல்லை என்றாலும் சாதாரண பேச்சுக்கள் அவர்களை அவர்களின் விருப்பு வெறுப்புகளை புரிந்துகொள்ளும் விதமாய் அமைந்தது.
இருவருமே ஒருவரை ஒருவர் ஓரளவு புரிந்தும் கொண்டனர். இப்போது தர்ஷனுக்கு எந்தவித குறையும் இல்லை. அவன் எதிர்பார்த்த அந்த பிடித்தமும் உருவாக ஆரம்பித்தது.
முதலில் மறுத்தவன் பின் நிவேதாவிற்கு தன் மீதான பிடித்தத்தை உணர்ந்து தானாகவே அவளுக்கு பேச ஆரம்பித்தான். அவளின் பேச்சுக்களை உள்வாங்கிக்கொண்டு இருந்தான் அவனறியாமல்.
திருமணமும் நல்லவிதமாகவே நடைபெற ஊரார் வாயை அடைக்கும் விதமாக திருமண மேடையில் வைத்து தங்கள் வீட்டின் பத்திரத்தை தனது இரு பெண்களையும் சேர்த்து நிற்க வைத்து சபையில் தந்துவிட்டார் சோமநாதன்.
இதை கதிரை சேர்ந்தவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. யமுனா மறுப்பு சொல்ல சோமநாதன், சரளா இருவரின் பிடிவாதத்தை மாற்ற முடியவில்லை.
தங்களை பேசிய அத்தனை பேச்சுக்களுக்கும் ஒரு பூட்டை போட்டுவிட்ட நிம்மதி அவர்களுக்கு.
தங்களின் காலம் வரை அங்கிருக்க பாத்தியப்பட்டவர்களாகவும், அதன் பின்னர் தான் மக்களுக்கு இவை சேரும் என்றும் எழுதி இருந்தார் சோமநாதன்.
மகள்களுக்கு அவரின் உணர்வு புரிந்திருக்க மறுக்காமல் பெற்றுக்கொண்டார்கள் அவர்கள் இருவரும்.
அது தன் தந்தையின் மகிழ்ச்சி, அவரின் கௌரவம். இதை மறுத்தால் அவர் உடைந்துவிட மாட்டாரா? வாங்கிகிக்கொண்டார்கள்.
நிவேதாவிற்கு கூட அந்த உணர்வுகள் எப்படியோ? ஆனால் தாமரைக்கு அது பெருமையை, கர்வத்தை கொடுத்தது.
சபையில் தங்களது சீரை வாங்கியவள் எதிரே அமர்ந்திருந்த உறவுகளை நிமிர்வுடன் பார்த்தாள் ‘இப்போது என்ன சொல்ல முடியும் உங்களால்? உங்கள் முகத்தை எங்கே கொண்டு வைத்துக்கொள்வீர்கள்?’ என்னும் விதமான கேள்வியே தொக்கி இருந்தது அவளின் பார்வையில்.
தொண்டை அடைக்க தனது மகிழ்ச்சியை விழுங்கிக்கொண்டவள் முகம் நிர்மலமாக இருக்க அவளை அணைத்தபடி நின்றான் கதிர்.
“எமோஷனல் ஆகாத தாமரை…” என்றவனின் கை அழுத்தம் அவளுக்கு ஆயிரம் பலத்தை தந்தது.
அவனின் கையை கோர்த்துக்கொண்டவள் கண்ணில் நீர் மின்ன அவனை பார்த்து புன்னகைத்தாள்.
“ம்மா, அப்ப நாங்க தனிக்குடித்தனம் போய்டறோம். என் மாமனார், மாமியாரை நீங்க வச்சு பார்த்துக்கோங்க. அந்த வீட்டுக்கு நாங்க போய்டறோம்…” என்ற தர்ஷன்,
“என் பொண்டாட்டி எனக்கு செஞ்சு தர மாட்டாளா என்ன? நான் ட்ரெயின் பண்ணுவேன்…” என்றவனின் பேச்சு கலகலக்க யமுனாவும், அவனும் வாயாடியபடி இருந்தார்கள் மேடையில்.
“இப்படி இருந்தா கண்ணு படும். முதல்ல வீட்டுக்கு கிளம்புவோம். அவ்வளவு பேரும் இங்க தான் பார்க்கறாங்க…” என்றார் அங்கை நிறைந்த மனதுடன்.
“அங்கை சித்தி எடுக்கற ஆராத்தியை கண்ணு வச்சவங்க கண்ணுல தான் ஊத்தனும். அப்போதான் அடுத்து யார் மேலையும் கண்ணு வைக்காமல் இருப்பாங்க…” அதற்கும் தர்ஷன் பதில் சொல்ல,
“உன்கிட்ட பேசி தப்பிக்க முடியுமா?…” என அங்கை சொல்லிவிட்டு மண்டபத்திலிருந்து வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமாக, எல்லாரும் எடுத்து வைத்து கிளம்பினார்கள்.
எப்போதுமே அவர்கள் குடும்பத்தின் மேல் ஒரு பிரமிப்பு தாமரைக்கு. இன்றும் அதனை பரிபூரணமாய் உணர்ந்தாள்.
“ஒரு பாஸிட்டிவ் வைப் இங்க என்னை சுத்தி…” என்றவளின் கை கதிரவனின் இடையை சேர்த்து அணைக்க,
“யாரும் பார்க்க போறாங்க தாமரை..” என நெளிந்தான் கதிர்.
“பார்க்கட்டும். இதையும் பார்த்துட்டு பேசட்டும்…”
“ரொம்ப தான் தைரியமாகிடுச்சு. நீ இவ்வளவு தெளிவாகி இருக்க வேண்டாம்…” என அவன் கிண்டல் பேச,
“உதை வாங்குவ. நகர்ந்து நில்லு…” என்றவனை கண்டுகொள்ளவே இல்லை.
“அதெல்லாம் முடியாது. இங்க தர்ஷ், நிவி உட்கார்ந்திருக்கற சோபாவுக்கு பின்னாடி தானே? யாருக்கும் ஒன்னும் தெரியாது…” என்று கண்ணடித்தாள்.
“உனக்கு என்னவோ ஆகிடிச்சு. வீட்டுக்கு வா பேசிக்கறேன்…”
“கோவமாவா?…” என அதற்கும் தாமரை கேலி பேச,
“உன்னை, ஆளை விடு…” என்று அவளின் கையை எடுத்துவிட்டவன் வேஷ்டியை மடித்தபடி மேடையை விட்டு கீழே இறங்கினான்.
கதிர் இறங்கும் நேரம் தாமரையும் அவனையே விடாமல் பார்க்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையால் தாங்கிக்கொள்ள அவர்களின் பந்தத்தை இந்த பார்வை சொந்தம் கொண்டாடியது.
செங்கதிரவனின் வரவில் தாமரை பெண்ணின் சங்கடங்களை களைந்து கொட்டும் மழையென இல்லாது சாரலின் குளுமையாய் பொழிந்தவன் அவளை மலர செய்தவன் தனது குடும்பத்தின் சூலில் அழைத்துக்கொண்டான்.
குடும்பத்தின் சூழ்நிலையில் தங்களின் சின்ன சின்ன ஆசைகளையும் கூட கூட்டுக்குள் அடைத்துவிட்டு அந்த ஆசைகளும் என்றேனும் நிறைவேறும் என்னும் ஆசையுடனே கழித்திருந்த இருவரின் இணைவில் ஆசைகளும் நிறைவேறி அதன் அனுபவங்களும் அழகாகியது.