ஆசைகள் – 3
அன்று இரவு வீடு திரும்பிய கதிர் சாப்பிட்டு முடிக்கும் வரை யமுனா ஒன்றும் பேசவில்லை.
பூங்காவனம் மனைவி எப்போது இதை ஆரம்பிப்பார் என காத்திருக்க அவன் சாப்பிட்டு முடித்து கையை கழுவி எழுந்ததும்,
“ஒரு நிமிஷம் நில்லு கதிர்…” என்று யமுனா சொல்ல,
“என்னம்மா?…” என்றான்.
“ஒரு வரன் வந்திருக்குது. அதை பத்தி சொல்லத்தான் வெய்ட் பண்ணேன்…”
“சரி சொல்லுங்க…” என அமர்ந்துகொண்டான்.
“இன்னைக்கு தான் அங்கை பொண்ணோட போட்டோ கொண்டு வந்து குடுத்தா…”
“ஓஹ், தரகர் மூலமா இல்லையா?…”
‘இவன் பன்ற கூத்துக்கு தரகர் உடனே அடுத்த பொண்ணை பார்த்து குடுத்துட்டாலும்?’ என மனதிற்கு நினைத்துக்கொண்டார் யமுனா.
“இல்லை, பேச்சுவாக்குல அங்கை வீட்டுக்கு பக்கத்துலையே ஒரு இடம் இருக்கறது தெரிஞ்சது. சரின்னு உனக்கும் நாம பார்த்துட்டு இருக்கறத சொன்னதும் ஜாதகத்தை அனுப்பினா. உடனே நம்ம ஜோசியருக்கு அனுப்பி விவரம் கேட்டுட்டேன்…”
“ஏன் அங்கை சித்திக்கு இப்போ தான் நாம வரன் பார்த்துட்டு இருக்கோம்னு தெரியுமா என்ன?…” என்றான் கதிர்.
யமுனா சொல்லியதை எல்லாம் விட்டுவிட்டு அவன் கேட்ட கேள்வியை கேட்டதும் பூங்காவனத்திற்கு சிரிப்பு வர யமுனாவிற்கு கடுப்பானது.
“இப்ப அதுவா முக்கியம்? இந்த வரன் பத்தி சொல்லவும் எனக்கு திருப்தியா இருந்துச்சு…”
“ஓஓஹோ?…”
“அட ஆமா கதிர். பொண்ணும் பார்க்க நிறைவா இருக்கா. நீயும் பாரேன்…” என்று சொல்ல,
“ஜாதகம் அவ்வளவு வேகமா என்னன்னு பார்த்தீங்க? என்கிட்டே கூட சொல்லாம?…” என்றான் தாயிடம்.
“நான் போன்லயே அனுப்பி வச்சுட்டேன். அவரும் நேத்து சாயங்காலம் போன் போட்டு விவரத்தை சொல்லிட்டார். பொருத்தமும் நல்லா இருக்காம்…”
“ஹ்ம்ம், ஆனா நேத்து நீங்க எதுவும் சொல்லலை?…” என மீண்டும் விடாமல் கேட்க ஐயோவென்றானது யமுனாவிற்கு.
வீட்டில் புருஷன், பிள்ளை என்று அவர் ஆட்டிவைத்தார் என்றால் அவரையே ஆட்டி வைப்பான் கதிர். எரிச்சலாக அவனை பார்த்தவர்,
“பொருத்தம் இருந்தா போதுமா? நீ எதிர்பார்க்கிற மாதிரி பொண்ணும் இருக்கனும்ல. அதான் போட்டோவை பார்த்துட்டு உனக்கு சொல்லலாம்ன்னு இருந்தேன்…”
“பார்த்துட்டீங்களா?…”
“ஆச்சு, பார்த்துட்டு தான் உனக்கு சொல்றேன். நல்லா விசாரிச்சுட்டும் தான் சொல்றேன். இல்லன்னா அங்க போய் பார்த்துட்டு வந்து வேணாம்ன்னு சொல்லி அசிங்கப்படாம இருக்கலாம் பாரு…” என்றதும் கதிர் எழுந்துகொண்டான்.
“அப்படி ஒன்னும் அசிங்கப்பட்டு எனக்கு பொண்ணு தேட வேண்டாம். விட்டுடுங்க…” என முறுக்கிக்கொள்ள,
“அட அப்படி சொல்லலைப்பா…” என இறங்கி வந்தார் யமுனா.
“கதிர், என்ன இது? அதான் அம்மா சொல்லிட்டு இருக்காங்க தானே? முழுசா கேட்காம இப்படி பேச கூடாதுப்பா…” என்றார் பூங்காவனம் தன்மையாக.
“சரி சொல்லுங்கம்மா…” என்றான் சற்று இறுக்கம் தளர்த்தி.
“பொண்ணு பார்க்க நல்லா இருக்கா. புதன்கிழமை பார்க்க வரோம்ன்னு சொல்லிருக்கேன்…”
“புதன் கிழமையா? ம்மா அன்னைக்கு எனக்கு ஆர்டிஓ ஆபீஸ்ல முக்கியமான வேலை இருக்குது. என்னால வர முடியாது…” என்றான்.
“என்னடா இப்படி சொல்ற?…” என யமுனா திகைக்க,
“சாயங்காலம் தான பொண்ணு பார்க்க போறோம்? அந்நேரம் நீ ப்ரீ பண்ணிக்கோ…” என்றார் பூங்காவனம்.
“இல்லாப்பா, அன்னைக்கு வேலை இருக்குது. அதான் சொல்றேன்ல…”
“நமக்கு வேலை என்னைக்கு தான் இல்லை…” என்று யமுனா நொடித்துக்கொள்ள அவரை ஒரு பார்வை பார்த்தான்.
“சரி அப்ப என்னைக்கு முடியும்? அதையாவது சொல்லு…” என யமுனா கேட்க யோசிக்கும் பாவனையில் அவன் நின்றான்.
“யமுனா முதல்ல பொண்ணு போட்டோவை காமியேன். பார்க்கட்டும்…” என பூங்காவனம் சொல்ல யமுனா உள்ளே சென்று போட்டோவை எடுத்து வந்தார்.
“நானும் முதல்ல இதான் காமிக்கனும்னு நினச்சேன்…” என்று அவனிடம் நீட்ட உள்ளிருந்த போட்டோவை எடுத்து பார்த்தவன் ஒரு தலையசைப்புடன் போட்டோவை பார்த்துவிட்டு அவரிடம் தந்தவன்,
“வர சண்டே இல்லைன்னா மண்டே போலாம்…” என சொல்லிவிட்டு தனது அறை நோக்கி சென்றவன் மீண்டும் வந்தான்.
“அந்த போட்டோவை குடுங்க…” என கேட்கவும் யமுனாவிற்கு உள்ளுக்குள் திக்கென்றது.
என்னென்ன கவனித்து கேட்க போகிறானோ என பயந்துகொண்டே அவர் தரவும் வாங்கி பார்த்தான்.
“இந்த பொண்ணா?…” என்று வாயிலிருந்து வார்த்தையும் வந்துவிட,
“உனக்கு முன்னாடியே தெரியுமாப்பா?…” என முன்னே வந்தார் பூங்காவனம்.
“ஆமாப்பா, நம்ம ட்ராவல்ஸ்க்கு இன்னைக்கு தான் வந்திருந்துச்சு…” என்றான் மீண்டும் போட்டோவை பார்த்துக்கொண்டே.
அதுவே யமுனாவிற்கு குதூகலத்தை தர மகன் எந்த குறையும் சொல்லாமல் இருப்பதே பெரும் நிம்மதியாக இருந்தது.
“சரிப்பா நான் பேசிடறேன். நாளைக்கே பேசிடறேன். ஞாயித்துகிழமையே போவோம்…” என்று சொல்லவும் சரி என்றவன் உள்ளே சென்றுவிட்டான்.
“என்னங்க, இவனுக்கு பிடிச்சிருக்கு போலையே?…” என முகமெல்லாம் சிரிப்புடன் யமுனா கேட்கவும்,
“எனக்கும் ஆமான்னு சொல்ல ஆசை தான் யமுனா. ஆனா அவன் இன்னும் வாயை திறந்து சொல்லலையே? முதல்ல பொண்ணு பார்த்துட்டு வருவோம்….”
பூங்காவனம் சொல்லி செல்லவும் யமுனாவிற்கும் உற்சாகம் எல்லாம் வடிந்து கவலை தொற்றியது.
மறுநாள் அங்கையிடம் பேசவேண்டும் என நினைத்தபடியே உறங்கி போனார் யமுனா.
உறக்கத்திலும் மகனின் திருமணம் நல்லபடியாக முடிந்துவிட்டால் இதை செய்கிறேன், அதை செய்கிறேன் என்று அத்தனை வேண்டுதல்களை வழக்கம் போல வைத்துகொண்டே தான் இருந்தார் யமுனா.
———————————————————–
காலையில் இருந்தே அத்தனை சலசலப்பு வீட்டிற்குள். சரளாவின் காது தான் தீய்ந்தே போனது. முதல்நாள் ஆரம்பித்தது. இன்னும் முடியவில்லை.
அத்தனை வாக்குவாதம் அப்பாவிற்கும் பெண்ணிற்கும். மீண்டும் மீண்டும் தான் சொல்லியதே சரி என்று சொல்லிக்கொண்டே இருக்க இருவரையும் வேடிக்கை பார்ப்பதே மற்ற இருவருக்கும் வேலையாய் போனது.
“ம்மா, இப்படி பேசிட்டே இருந்தா இன்னைக்கு லஞ்ச் ஹோஹையா தான் போல? இன்னைக்கு நான் கேண்டீனா?…” என நிவி பாவமாய் சரளாவிடம் கேட்க,
“நீவேற சும்மா இருடி. எப்ப பாரு சாப்பாடு, சாப்பாடு, சாப்பாடு…” என்று அதற்கு மேல் பரிதாபமாய் சொன்னார் சரளா.
இவர்களின் கவலையை கண்டுகொள்ளாமல் தந்தையாய் பொருமிக்கொண்டிருந்தவரை கண்டுகொள்ளாமல் தாமரை வேலைக்கு கிளம்பிவிட்டாள்.
“தாமரை முடிவா நீ என்னதான்ம்மா சொல்ற?…” சோமநாதன் கேட்க,
“அப்பா ப்ளீஸ், ஒருதடவை தான் சொல்ல முடியும். திரும்ப திரும்ப வற்புறுத்தாதீங்க. நான் தான் செஞ்சுக்கோங்கன்னு சொல்லிட்டேனே? அப்பறமும் ஏன் திரும்ப திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க?…” என்று எரிந்துவிழுந்தாள் தகப்பனிடம்.
“உன்னை பெத்ததுக்கு இன்னும் என்னலாம் அனுபவிக்க போறோமோ?…” என்றவரின் பேச்சில் சரளா மௌனமாக இருக்க,
“அப்பா அக்காவை விடுங்களேன். அவ தான் நேத்தே சொல்லிட்டாளே? அப்பறமும் திரும்ப திரும்ப பேசிட்டே இருக்கீங்க?…” என்ற நிவேதாவை முறைப்புடன் பார்த்தார் அவர்.
“நிவி பேசாம இரு. அப்பா கோவமா இருக்கார்…” என சரளா இளைய மகளை அதட்டி அடக்கினார்.
“சரளா, நம்ம தலையெழுத்து இப்படி வந்து வாச்சிருக்குதுங்க…” என்று எரிச்சலுடன் அங்கிருந்து சென்றார் அவர்.
“ம்மா என்னைக்கு பொண்ணு பார்க்க வராங்க?…” என தாயிடம் திரும்பினாள் தாமரை.
“அடுத்த வாரம் புதன் கிழமை…”
“ஒஹ் சரி நான் கிளம்பறேன்…” என சொல்லிவிட்டு கிளம்பிவிட அதற்கும் சரளாவிடம் தான் எகிறிக்கொண்டு இருந்தார் அவர்.
“பார்த்தியா என்ன ஒரு ஏத்தம்? சொல்ல சொல்ல கேட்காம வரன் பார்த்தது நீங்க, நீங்களே பேசி முடிங்கன்னு சொல்றா. முடிஞ்சா தான் வருவேன்னு சொல்றா. அதுவும் அப்போ பார்க்க வர சொன்னவங்களை விட்டு நாம டூருன்னு கிளம்பினா நல்லாவா இருக்கும்?…”
“நானும் சொல்லி பார்த்துட்டேங்க. கேட்கனுமே? புக் பண்ணினதை திருப்பி விட்டுடுன்னு சொன்னா அந்த பஸ் கடையில அப்படி செய்ய முடியாதாமே?…” சரளா ஒருபக்கம் புலம்பினார்.
எப்படியும் இப்படி ஒரு பிரச்சனையை வைத்துக்கொண்டு டூர் செல்வது என்பது ஆகாத ஒன்று. ஆனால் பணமும் போய், இப்போது தேவையில்லாமல் பிரச்சனை வேறு. நினைக்கவே நெஞ்சு வலித்தது.
“ம்மா, டைம் ஆச்சு. நானும் காலேஜ் போகனும்…” என்று வந்து நின்றாள் நிவேதா.
இரண்டாம் வருடம் மருத்துவம் பயிலும் மாணவி. எக்கச்சக்க பணம் கட்டி அவளை அதற்கு தான் படிக்க வைப்பேன் என்று ஒற்றைக்காலில் நிற்கும் மூத்த மகள்.
நிவேதா ஆசைப்பட்டபடி மருத்துவத்தில் சேர்த்துவிட ஏற்கனவே இருந்த கடனுக்கு மேல் இதுவும் சேர்ந்துகொண்டது.
சோமநாதனுக்கு தனியா கம்பெனியல் வேலை. சொந்த வீட்டை எடுத்து கட்டியதில் கணிசமான தொகை அதற்கென்று போய்விட இருப்பும் குறைந்துவிட்டது.
மூத்த மகளின் படிப்பு தலைக்குமேல் நிற்க எதிலும் அவர் அவர்களின் தேவையை குறைத்துவிடவில்லை.
கையை கடிக்காதளவிற்கு வரவிற்கும், செலவிற்கும், கடனிற்கும் சென்றாலும் அதிலும் சிறுக சிறுக மிச்சம் பிடித்து மூத்தவளுக்கு நகையை சேர்த்திருந்தார்.
இளையவளுக்கு அதன் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்னும் தைரியத்தில் நகை சேர்த்துவைத்து மகள் படிப்பு முடிந்து அவள் ஆசைக்கென ஒருவருட வேலைக்கும் செல்லவிட்டு அதன் பின் திருமணம் என்று கனவுகண்டிருக்க தாமரை அதை தகர்த்துவிட்டாள்.
வரும் வரன்களை பேசி திருமணத்தை தள்ளி போட முதலில் பெரிதாய் நினைக்காதவர் மூன்றாவது முறையும் அதையே மகள் செய்ய பிடிபிடியென பிடித்துவிட்டார்.
அதிலும் நிவேதா மருத்துவப்படிப்பு தான் சேருவேன் என்றதற்கு சோமநாதன் மறுக்க தாமரை தங்கையின் ஆசைக்கு துணையாய் நின்றாள்.
“என்னை மட்டும் நான் ஆசைப்பட்டதுக்கு படிக்க வச்சுட்டு இவளை செய்யாதன்னு சொன்னா எப்படிப்பா?…” என்று தாமரை பேச தந்தையாய் சோமநாதனுக்கு வருத்தமாகிவிட்டது.
“என்னம்மா சின்ன பிள்ளையா நீ? கொஞ்சமாவது யோசிச்சு பாரு. அன்னைக்கு இருந்த சூழ்நிலையும் இன்னைக்கு இருக்கற சூழ்நிலையும் ஒண்ணா?…” என சோமநாதன் தன் பக்கத்தை பேச,
“நான் படிக்கலை. ஆர்ட்ஸ் சேர்ந்துக்கறேன். இல்லைன்னா வேறேதாவது படிக்கறேன்…” என நிவேதா தனது ஆசையை அடக்கிக்கொண்டு பேச பெற்றோருக்கும், உடன் பிறந்தவளுக்கும் அத்தனை வலி.
“பாருங்கப்பா, அவளுக்காக பார்க்கலாமே? இப்ப நானும் நல்லா சம்பாதிக்கறேன். ஒரு ரெண்டு வருஷம் போகட்டும். நிவி படிப்புக்கு ஓரளவு நாம சேவ் பண்ணிட்டு அப்பறமா நீங்க சொல்றதை நான் கேட்கறேன்…”
“ஏன் பெத்த எனக்கு படிக்க வைக்க தெரியாதா? என்னவோ என்னால முடியாதுன்ற மாதிரி நீ பேசற?…” என்றார் கோவமாக.
அப்படியாவது மகள் ரோஷப்பட்டு தன் ஆதங்கத்திற்கு சம்மதிப்பாள் என்று அவர் நினைத்திருக்க அவள் பிடிவாதமாய் இருந்தாள்.
“உங்களால முடியாதுன்னு நான் எப்ப சொன்னேன்? ஆனா நம்ம வீட்டு நிலைமை நமக்கு தெரியும் தானே? ஏற்கனவே வீடு கட்டின கடன் இருக்கு. எப்பவோ வரப்போற மாப்பிள்ளைங்க சங்கடமில்லாம புலங்கனும்னு மாடி எடுத்து ரூம் போட்டது எல்லாம் அனாவசியம் தானே?…”
“அதெல்லாம் உங்க கல்யாணம் ஆனதும் எவ்வளவு அவசியம்ன்னு புரியும். எடுத்த வேலையை ஓயாம செய்ய முடியுமா? கட்டும் போது சேர்த்து கட்டிவிட்டேன். இன்னைக்கு இல்லைன்னாலும் நாளைக்கு உதவும்…”
“நீங்க என்ன வேணா சொல்லிகோங்க. நிவிக்கானதை நான் பார்த்துப்பேன். அதை நீங்க வேண்டாம்ன்னு சொல்ல கூடாது…” என்று பிடிவாதமாய் தாமரை சொல்லிவிட சோமநாதனால் மகளிடம் அதற்கு மேலும் பேசமுடியவில்லை.
இளையமகள் வேறு கண்ணீருடன் நிற்க மூத்தவளின் இந்த பொறுப்பான அக்குணம் பெருமையை கொடுத்தாலும் அவளின் எதிர்காலத்தை பற்றிய பயமும் கொடுத்தது.
‘காலத்துல பொண்ணை கரையேத்தனுமே? ரெண்டு பொண்ணுங்க. ஒரு பொண்ணை கரையேத்தி நாலு வருஷத்துல அடுத்த பொண்ணுக்கும் பார்த்துடலாம்.’ இப்படித்தான் அவரின் எண்ணம் இருந்தது.
அவரின் பேச்சை யாரும் கேட்கவில்லை என்றதும் கோபத்துடன் அவர் உள்ளே சென்றுவிட்டார்.
“என்னம்மா தாமரை? அப்பாவை ஏன் இவ்வளவு கோவமா பேசற?…” என சரளா மகளிடம் சொல்ல அவரின் கண்ணீரை துடைத்துவிட்டாள்.
“இதுக்கு போய் அழுவாங்களா? நான் பேசாம யார் பேசுவா? நம்ம நிவி நமக்கு முக்கியமில்லையா?…” என்றதுமே அக்காவை கட்டிக்கொண்டாள் தங்கை.
“எல்லாம் சரிதான். ஆனா…” என்ற சரளாவின் பேச்சை கை நீட்டி நிறுத்தியவள்,
“எனக்கும் நம்ம குடும்ப நிலவரம் தெரியும்மா. இந்த வீட்டு மேல எவ்வளவு கடன் இருக்குது, அப்பா ஆபீஸ்ல லோனுக்கு எவ்வளவு போகுதுன்னு. நான் வேலைக்கு போய் இந்த கொஞ்ச நாள் அப்பாவோட முகத்துல டென்ஷன் குறைஞ்சதை பார்த்தேன்…”
“கடன் ஒரு பிரச்சனையே இல்லைன்னாலும் நானும், நிவியும் கல்யாணம் பண்ணிட்டு போன பின்னாடி நீங்க ஒரு நிம்மதியான, கடன் இல்லாத வாழ்க்கையை வாழனும்னு நினைக்கறேன். அது தப்பாம்மா? ஏன் இதுவே பையனா இருந்தா அவன் சம்பாத்தியம் இந்த வீட்டுக்கு தான்னு உரிமையா எடுத்துப்பீங்க தானே?…”
“தாமரை, அம்மாடி அப்படி சொல்லலைடி. ஆனா உனக்கு கல்யாணம்…”
“நான் என்ன மாட்டேன்னா சொல்றேன்? என் செல்லக்குட்டி முதல்ல டாக்டர் ஆகட்டும். இப்போ மாதிரியே நீங்க நிர்வாகத்தை பாருங்க. ஓரளவு சேவிங்க்ஸ் சேரட்டும். கண்டிப்பா பண்ணிக்கறேன். ஆனா அதுக்கு முன்னாடி பார்த்தீங்க அவ்வளோ தான்…”
மூத்தமகளின் மிரட்டலில் சரளா வாயை திறக்கவில்லை என்றாலும் அவள் வயது பெண்கள் குடும்பம், குழந்தை என்று அக்கம்பக்கத்தில் வந்து செல்லும் போது ஏக்கமாகவும், வருத்தமாகவும் இருக்கும்.
சில நேரங்களின் தாளமாட்டாமல் ஆற்றாமையுடன் சோமநாதனிடம் புலம்பவும் செய்வார்.
இத்தனை பிரச்சனைகள், கடன் என்று இருந்தாலும் வெளியில் ஒரு துளி யாருக்கும் தெரியாது. இரு சம்பாதனை, செழிம்பான கடனில்லாத வாழ்வு என்று தான் அக்கம்பக்கத்தினர் பார்க்க வாழ்ந்து வருகிறார்கள்.
உடுத்தும் உடையிலும், செல்லும் இடங்களிலும் என்று எந்தவிதத்திலும் குறையில்லாத வாழ்க்கை தான்.
இத்தனை வருடத்தில் தாமரைக்கு பதவி உயர்வும் வந்துவிட சம்பளமும் கூடிவிட வீட்டுக்கடன் ஒருபக்கம் அடபட்டுக்கொண்டே வந்துகொண்டிருந்தது. தாமரையின் சம்பளத்தில் பெரும்பாதி நிவேதாவிற்கு போய்விட மீதத்தை சேமிப்பாய் சேர்த்துக்கொண்டே இருந்தாள்.
அடுத்தடுத்த வருடங்களின் தந்தை சிரமமின்றி தங்கையின் மருத்தவப்படிப்பிற்கான செலவை செய்ய ஓரளவு சேர்த்தும் வைத்திருந்தாள்.
வழக்கம் போல குடும்ப செலவுகள் எல்லாம் சோமநாதனின் சம்பளத்திலேயே. அத்தனை கோபம் மகளின் சம்பளத்தில் செய்ய கூடாதென்று இருந்தாலும் அவள் அவ்வப்போது கொடுக்கும் பரிசுகளில் நெகிழ்ந்துதான் போவார்.
ஆனாலும் காட்டிக்கொண்டால் மகள் இன்னும் இரண்டுவருடம் திருமணத்தை தள்ளி போட்டாலும் போட்டுவிடுவாள் என்று.
குடும்பத்தின் சூழ்நிலை அறிந்து நிவேதாவும் பொறுப்பாய், சிறப்பாகவே தனது படிப்பில் கவனம் செலுத்தினாள்.
சொல்பேச்சு கேட்காத மகள்கள் என்றாலும் பாக்கியம் பெற்றவரே சோமநாதன். தோள்கொடுக்க மூத்தமகள் இருக்க தாங்கிக்கொள்ள இளையமகள். அதில் எல்லாம் பெருமிதத்தில் பூரித்துதான் போவார்.
ஆனால் சொந்தபந்தங்கள் யாரேனும் என்ன திருமணம் ஆகவில்லை இன்னும் என்று கேட்டுவிட்டால் அன்று ஒரு ஆட்டம் ஆடிவிடுவார்.
“எங்க போனாலும் கேலி பன்றானுங்க, இவளால இவளால…” என தாமரையை திட்டி தீர்க்க அவள் கண்டுகொள்ளவே மாட்டாள்.
இப்போதும் நிவேதா படிப்பு இரண்டாம் வருடம் முடிவுறும் தருவாயில் இருக்க அங்கை மூலமாக வந்த வரனை கேட்டதில் இருந்து அத்தனை சந்தோஷம்.
“இந்த இடம் தகைஞ்சுட்டா போதும். உன் மக இதுலயும் எந்த முட்டுக்கட்டையும் போடாம இருக்கனும்…” என்று பேசிக்கொண்டிருக்க அவர்களின் திருமண நாளின் டூர் பேக்கேஜ் கிப்ட்டுடன் வந்து நின்றவள் மேல் அத்தனை கோபம் பொங்கியது.
திருமணத்தை பற்றி சொல்ல அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தள்ளி போடலாம் என்று சொல்ல மனிதரை ஒரு நிலையில் பிடித்துவைக்கமுடியவில்லை.
“இவ சொன்ன மாதிரி ரெண்டுவருஷம் கம்முன்னு தான இருந்தேன்? இப்பவும் இவ இதே மாதிரி பண்ணினான்னா நான் என்ன செய்வேன்னே தெரியாது…” என சரளாவிடம் பாய,
“என்னவோ பண்ணுங்க. ஆனா என்னை இதுல இன்வால்வ் பண்ணாதீங்க…” என்றதும் நிவியும், சரளாவும் தலையில் அடித்துக்கொண்டனர்.
“இன்வால்வ் பண்ணாதீங்கன்னா? என்னையா பார்க்க வராங்க? உன்னை தான பார்க்க வராங்க…” என்றதும் நிவியும், தாமரையும் சிரித்துவிட,
“பல்லை காட்டாத, அப்படியே கழுத்தோட ஒன்னு வச்சேனா?…” என்று கையை ஓங்கியவருக்கு மகள்களை அடிக்க மனதில்லை.
வெறுப்புடன் கையை கீழே போட்டவர் தளர்ந்து போய் சோபாவில் அமர்ந்துவிட்டார்.
“என்னங்க நீங்க? அதான் சரின்னு சொல்லிட்டாள்ல…” என்ற சரளா மக்களை உள்ளே செல்லுமாறு கண்ணை காண்பித்துவிட்டு கணவனை சமாதானம் செய்தார்.
இத்தனை நடந்தும் மறுநாள் மீண்டும் காலையிலேயே மகளுக்கு அறிவுரைக்க ஆரம்பித்துவிட்டார்.
“அக்காவே சரி என்னவோ பண்ணுங்கன்னு சொல்லிட்டா. திரும்ப திரும்ப அப்பா பேச அவ வேண்டாம்னு சொல்ல போறா பாருங்க…” என நிவி சரளாவிடம் முணுமுணுக்க சோமநாதனுக்கு எங்கே புரிந்தது?
அவருக்கு மகள் வாயால் சந்தோஷமான திருப்தியான ஒரு பதில் வேண்டும் அதுவும் புன்னகையுடன்.
மகள் தான் அதற்கு மேல் இருந்தாளே? மீண்டும் மீண்டும் அவர் எழுந்ததில் இருந்து பேசிக்கொண்டிருக்க தாமரையும் எரிச்சலாகிவிட்டாள்.
“என்னதான்ப்பா வேணும்? ட்ரிப் எல்லாம் கேன்சல் பண்ண முடியாது…” என ஆயாசத்துடன் கேட்டவளிடம்,
“முடிவா நீ என்னதான் சொல்ற?…” என்று சோமநாதன் கேட்க சரளாவும், நிவியும் தலையில் கைவைக்காத குறை தான்.
அனைவருமே அலுவலகம், காலேஜ் என்று கிளம்பிவிட பதினோரு மணி போல சரளா வேலை செய்துகொண்டிருக்க அங்கை வந்துவிட்டார் மாப்பிள்ளை வீட்டு தகவலுடன்.
“என்ன ஞாயித்துக்கிழமையேவா?…” என்று மலைத்து போனார் சரளா.
“ஏன் அன்னைக்கு வேற வேலை எதுவும் இருக்கா சரளா?…” என அங்கை கேட்க,
“ஆமாக்கா, அன்னைக்கு தான் என் மச்சினர் வீட்டுல ஒரு விசேஷம்….” என யோசித்தவர்,
“சாயங்காலம் தானே வரேன்னாங்க?…” என்றார் அங்கையிடம்.
“ஆமா சரளா, சாயங்காலம் நல்ல நேரம் பார்த்து புறப்பட்டு வருவாங்க…” என சொல்ல படபடவென தங்கள் செல்லும் தூரங்களின் கணக்குகளை போட்டவர்,
“சரி, அப்ப நான் இவரை மட்டும் அனுப்பறேன். அதுதான் சரியா வரும். இல்லைன்னா அங்கயும் போய்ட்டு வரதுக்குள்ள படபடன்னு ஆகிரும்…” என்று சொல்லவும் அன்று என்னவெல்லாம் செய்யலாம் என்று திட்டம் தீட்டினார்கள்.
பெண் இவளென அறிந்திருந்த கதிரும், மாப்பிள்ளை யாரென்றே தெரியாமல் ஏனோதானோவென்று எதிர்பார்ப்பில்லாத தாமரையும் ஞாயிறன்று தாமரையின் வீட்டில் சந்தித்தனர்.