“அதுக்காக விவரத்தை சொல்லாம அப்பன்னு பார்த்து சொல்லும் போது இன்னும் அவளுக்கு கோவம் தானே வரும்?…”
“வரும் போது பார்த்துக்கலாம். நீ நான் சொல்றதை மட்டும் செய். சண்டே அவ எழுந்துக்கறதே லேட். அப்போ பேசிக்கலாம். அன்னைக்கு தான் கால் பண்ணினனகன்னு சொல்லிக்கலாம். இதுக்கு நீ இவ்வளவு யோசிக்க வேண்டாம்…”
சோமநாதன் என்னவோ சாதாரணமாய் சொல்லிவிட்டார். ஆனால் செயல்படுத்த தான் சரளா படாதபாடுபட்டுபோனார்.
ஒரு விஷயத்தை தெரியாமல் இருந்துகொள்வது வேறு. ஆனால் தெரிந்தும் தெரியாததை போல இருப்பது என்பது தான் கொடுமை.
சரளாவை போன்றோருக்கு இன்னும் சோதனை. சாதாரணமாக மகள்கள் பார்த்தாலோ, என்னம்மா? என கேள்வியாய் கேட்டாலோ இதை தெரியத்தான் கேட்கின்றனரோ என வியர்த்து போவார்.
“என்கிட்டே நீங்க சொல்லாம் இருந்திருக்கலாம்ல. பொண்ணுங்க பார்க்கும் போது எனக்கு இதை கேட்கத்தான் வராங்களோன்னு பதட்டமா இருக்குது…” என ஆகியை உதற,
“நீ என்ன லூஸா? உன்கிட்ட தான அந்த அங்கை சொல்லுச்சு. இப்ப வந்து சொல்லாம இருக்க வேண்டியதுதானன்னு கேட்கற?…” என கடுப்பாகிவிட்டார் சோமநாதன்.
“சரி சரி. சொல்லலை…” என சொன்னாலும் சரளா வாய் நிற்காது.
“அப்ப புதன்கிழமை டூர்?…”
“ரொம்ப முக்கியமா. முதல்ல இந்த சம்பந்தம் நல்லபடியா முடியட்டும். அப்பறமா பார்ப்போம். போகலைன்னாலும் எதாச்சும் சொல்லுவா உன் பொண்ணு…”
“அப்ப போறோமா…”
“சரளா…” என்றவர் பல்லை கடித்துக்கொண்டு பேச வாயை மூடிவிட்டார்.
ஞாயிறு அன்று காளையல் இருந்து பரபரப்பாக தாமரையும், நிவியும் எழும் முன்னரே வீட்டை சுத்தம் செய்து மாலை சிற்றுண்டிக்காக ஆவன ஏற்பாடும் செய்துவிட்டார்.
ஆனால் அது எதுவும் மகள்களின் கண்ணில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமே.
காலை இருவரும் எழுந்து குளித்து உணவு உண்ண வந்தமர மணி பதினொன்றரையை காண்பித்தது.
“இதான் சாப்பிட வர நேரமா?…” என இருவரையும் சோமநாதன் கடிந்துகொள்ள வாய் திறக்காமல் உணவை விழுங்கினார்கள் மகள்கள்.
சாப்பிட்டு முடித்து வந்து ஹாலில் அமர்ந்த தாமரையை நெருக்கிக்கொண்டு வந்த நிவி,
“அக்கா, இன்னைக்கு வெளில எங்கையாவது போவோமா? அப்பாட்ட கேளேன். மூவி போகலாம்…” என நிவி சொல்லும் பொழுது காதை இங்கே வைத்திருந்த சரளா வேகமாய் வந்தவர்,
“என்னங்க என்ன பேசறாங்க? என்னன்னு கேளுங்க…” என்றார் தோளில் லேசாய் தட்டி.
‘அட ஆர்வமே’ என மனைவியை முறைத்தவர் மூத்தவள் என்ன பேசுவாள் என்ற எதிர்பார்ப்புடன் பேப்பரில் கவனத்தை வைத்திருக்க தாமரை மறுத்துவிட்டாள் நிவியிடம்.
“இல்லடா நிவி. இன்னைக்கு எங்கயும் போறதா இல்லை. அடுத்த வாரம் பார்ப்போம். இல்லைன்னா வீக் டேய்ஸ்ல ஒருநாள் போகலாம்…” என்று சொல்லவும் சோமநாதனுக்கு நிம்மதி.
உடனே தனக்கு போன் வந்ததை போல எழுந்து வெளியே சென்றுவிட்டு ஐந்துநிமிடம் கழித்து வந்தவர்,
“சரளா மாப்பிள்ளை வீட்டுல இருந்து தான் போன். இன்னைக்கு வராங்களாம். திடீர்ன்னு சொல்றாங்க…” என்றதும் சாரளாவிற்கு சட்டென அதிர்ந்து பார்க்க கூட தெரியவில்லை.
முகத்தை மாற்றி மாற்றி மகள்களை பார்த்து கண்களை உருட்டி விழிப்பதும், அதிக சந்தோஷமாய் சிரிப்பதும், அளவாய் குறைப்பதும், பின் அதிர்ச்சி ஆவதை போல மாற்றுவதும் என சரளா செய்த பாவனைகளில் சோமநாதனின் பிபி கூடியது.
“என்ன இங்க கேட்டுட்டே நின்னுட்டு இருக்க? சாயங்காலம் அவங்க வரப்போ செய்ய எல்லாம் இருக்கு தானே? இல்லை எதுவும் வாங்கனுமா?…” என அவர் பேச்சை மாற்ற,
“அதெல்லாம் வாங்கியாச்சே?…” என சொல்லிய சரளா,
“இல்ல, வாங்கனும். ஆனா இருக்கறது போதும். வாங்கினதே இருக்கே. வேற வேண்டாம். வாங்கனும்னா பார்த்துட்டு சொல்லட்டா?…” என மாற்றி மாற்றி உளற மகள்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
“ம்மா, என்ன பேசறீங்க?…” என கேட்க,
“இருடி, உள்ள டீ கொதிக்குது. பால் ஊத்திட்டு வரேன்…” என்று சொல்லிவிட்டு அவர் சென்ற வேகத்தையே பார்த்திருந்த தாமரை சோமநாதன் பக்கம் திரும்பினாள்.
“நிவி, சாயங்காலம் கட்ட என்ன புடவை வேணும், என்ன மேக்கப்ன்னு பார்த்துக்கோங்க. எதாச்சும் வேணும்னா இப்பவே சொல்லிடு. நான் போய் வாங்கிட்டு வரேன்…” என சொல்ல,
“இல்லப்பா, ஒன்னும் வேண்டாம்…” என்றாள் அவரின் பேச்சிலேயே அடங்கியவளாக.
“உன் அக்காவுக்கு கேளு. அவ என்ன சொல்றான்னு…” என சொல்ல அதற்குள் அங்கை வந்துவிட்டார்.
“சரளா…” என்ற சத்தத்தில் அவர் வேகமாய் வெளியே வந்து,
“வாங்கக்கா, நான் வர சொல்லனும்னு இருந்தேன் நீங்களே வந்துட்டீங்க…”
“வடைக்கு அளவு கேட்டியே. இப்ப ஊற வச்சா தான் சரியாய் இருக்கும். அதான் வந்தேன்…” என சொல்லவும் தாமரை தாயை ஊடுருவும் பார்வை பார்க்க,
“ஆமா, ஆமா. இன்னைக்கு பிள்ளைங்களும் வெளில போகலையா. அதான் நேத்தே சொன்னேன். வாங்க…” என்று அவர் பதட்டத்திலேயே காண்பித்துக்கொடுக்க,
“ம்மா, ஓவரா நடிக்காதீங்கம்மா…” என்றாள் நிவி.
“என்னடி, என்ன நடிச்சேன்? நீ என்ன பார்த்த?…” என வேகமாய் இளைய மகளிடம் பாய்ந்தார்.
“கல்யாண வீடுனா இப்படித்தான் இல்ல?…” என சொல்லிக்கொண்டிருக்கும் போதே சோமநாதன் பெரிய கவர்களில் பூ வாங்கி வந்திருந்தார்.
“நிவி, இதை ப்ரிட்ஜ்ல வை…” என்று நீட்ட உள்ளிருந்து ஓடி வந்தார் சரளா.
“அவக்கிட்ட குடுக்காதீங்க. பூவை கவரோட அப்படியே ப்ரிட்ஜ்ல வச்சா ப்ரிட்ஜ் முழுக்க பூ வாசம் தான் இருக்கும்…” என்றவர்,
“நிவி, அதை எடுத்துட்டு உள்ள வா…” என அழைத்து உள்ளே செல்ல அங்கே வடைக்கு தட்டி போட்டுக்கொண்டு இருந்தார் அங்கை.
“அங்க என்ன பார்வை? இங்க வா…” என மகளை அதட்டி அழைத்தவர்,
“இந்த பாக்ஸை எடு. இந்த துணியை தண்ணில நனை…” என்று சொல்ல,
“ம்மா எனக்கு தெரியும்மா. நீங்க வேலையை பாருங்க…” என்றவள் அந்த காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து பிழிந்தவள் கவரின் இருந்த பூச்சரங்களை எடுத்து ஒன்றுபோல சுற்றி துணியை அதற்கு மேல் சுற்றி அந்த டப்பர்வேர் டப்பாவில் அடைத்து வைத்தாள்.
“ம்மா போதுமா? பார்த்துக்கோங்க…” என காண்பிக்கவும் சரளா ஒப்புதலாய் தலையசைத்ததும் ப்ரிட்ஜில் வைத்தாள்.
“இப்பவே என்ன வடை போட ஆரம்பிச்சுட்டீங்க?…” என அதில் இருந்து ஒன்றை பிய்த்து வாயில் போட்டாள்.
“இது நமக்கு கொஞ்சமா போட்டு வச்சுட்டு அவங்களுக்கு சூடா அந்நேரம் போட்டுக்கலாம்…” என்றவர் வேலைகள் முடிந்தது என்று அங்கைக்கும் அந்த பலகாரங்களை கொடுத்து அனுப்பியவர் நான்கு மணிக்கு கிளம்பி வரும்படி சொல்லி அனுப்பினார்.
“நிவி, அக்கா புடவை எடுத்து வச்சுட்டாளா?…”
“இன்னும் இல்லைம்மா…” என்றாள் நிவேதா.
தாய்க்கு ஒவ்வொன்றாய் எடுத்து வைக்க உதவியபடி பேச சரளாவிற்கு படபடப்பு கூடியது.
“இதை எல்லாம் எடுத்து வைக்கனும். அவங்களுக்கு குடுக்க இந்த ப்ளேட் போதும்ல. இல்லை வெளில அப்பாவை புதுசா ஸ்நாக்ஸ் ப்ளேட் வாங்கிட்டு வர சொல்லுவோமா?…”
“ம்மா, புதுசு வாங்கனும்னு சொல்றதுக்கு இது எவ்வளவோ மேல். இதென்ன டெய்லி யூஸா பண்ண போறோம்? இன்னைக்கு மட்டும் தானே? துடைச்சு திரும்ப புதுசு மாதிரி பேக் பண்ணிடலாம்…” என்று கண்ணடித்தாள்.
“சரி இதுவே போதும் தானே?…”
“ஹ்ம்ம், போதும். அல்வாவுக்கும், ஜாமூனுக்கும் வேற பார்க்கலாம். நீங்க போய் உங்க பொண்ணை கிளப்புங்க. நான் செட் பண்ணி வச்சட்டு வரேன். இப்பவே மணி ரெண்டாகுது…” என்றதும் குடுகுடுவென மகளின் அறைக்கு ஓடினார்.
“தாமரை…” என வந்து நின்ற தாயை லேப்டாப்பில் இருந்து எட்டி பார்த்தவள்,
“என்னம்மா விருந்து ரெடியா?…” என கிண்டலாக கேட்டாள்.
“விருந்தா? ரொம்ப எல்லாம் செய்யலடி…” என சரளா சமாளிக்க சிரிப்பு வந்தது தாமரைக்கு.
“கோச்சுக்காத தாமரை. அம்மாவுக்கு என்ன செய்யன்னு தெரியலை…” என்றதுமே தன்னருகே அழைத்தவள் அவரை கட்டிக்கொண்டாள்.
“நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம். நான் என்ன செய்யனும்? அதை சொல்லுங்கம்மா…” என்றாள் அவள்.
“நிசமாவா? உனக்கு கோவமில்லையா?…” என அதிசயமாய் கேட்க,
“இதை தானே எதிர்பார்த்தீங்க? கோவப்பட்டா நாலு அடி போடுங்க…”
“அப்பாடி, எனக்கு இப்பத்தான் நிம்மதியா இருக்கு…” என்றவர்,
“புடவை எதுவும் எடுத்து வைக்கலையா?…” என்றார்.
“நீங்களே சூஸ் பண்ணுங்க. எனக்கு தெரியலை…” என்றதுமே உடனே கப்போர்டை திறந்து ஆராய்ந்து புடவையை எடுத்தவர் மகள் மீது வைத்து பார்த்தார்.
“இது நல்லா இருக்கும் தாமரை. இதை கட்டு. அப்பறம்…” என நகை பெட்டியை திறந்து ஒரு ஆரத்தையும், கம்மலையும் மட்டும் எடுத்து தர,
“ம்மா பொண்ணுக்கு குடுக்கற மாதிரியா இருக்கு? நெக்லஸ், அதுக்கு கீழே ஷார்ட் செயின் எல்லாம் யாரு எடுத்து தருவா?…” என வந்து வம்பிழுத்தால் நிவேதா.
“நீவேற சும்மா இருடி. அவ அதெல்லாம் ஆசைப்பட மாட்டா. இது போதும். கழுத்து நிறைஞ்சு இருக்கும். அதான் கழுத்தை ஒட்டி ஒரு செயின் இருக்கே…” என்றார் சரளா.
“ம்மா, உண்மையை சொல்லுங்க. அக்காவை இதி ல்லாம் போட சொல்லனும்னு ஆசை. ஆனாலும் பயம். எங்க ஒன்னும் வேண்டாம்னு சொல்லிருவான்னு தானே?…” என கலாட்டா செய்ய சரளா திருதிருவென்று விழித்தார்.
“சூப்பர் இதை இப்படியே ஒரு போட்டோ எடுத்து அப்பா போன்ல வால்பேப்பரா வச்சிடனும். பார்த்து ரசிச்சுட்டே இருக்கட்டும்ன்னு….”
“போதும் நிவி. அம்மாவை போட்டு படுத்தாத…” என்ற தாமரை,
“ம்மா நீங்க உட்காருங்க…” என அமர வைத்தாள்.
“அக்கா, உனக்கு தெரியாது. அம்மாவுக்கு பயம் தான். இல்லைன்னா மாப்பிள்ளை போட்டோவை காமிச்சா எங்க நீ வேண்டாம்ன்னு சொல்ல பார்ப்பியோன்னு உன் கண்ணுலையே காமிக்கலை தெரியுமா?…” என நிவி வாயை விட தாமரைக்குமே அது புரிந்திருந்தது.
ஆனாலும் அதை பார்க்கும் ஆர்வம் எதுவும் இல்லை அவளுக்கு. அவளின் எண்ணமெல்லாம் இன்னும் ஒருவருடம் போனால் என்ன என்பதில் தான் இருந்தது.
ஆனாலும் பெற்றவர்கள் இத்தனை தூரம் அதில் முனைப்பாய் இருக்க இதற்கு மேலும் மறுப்பு சொல்லவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் ஏதோவென்று இருந்தாள்.
“தாமரை நான் வேணா அப்பாவை உன் போனுக்கு அனுப்ப சொல்லட்டா?…” என சரளா அகேட்க,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ம்மா. அதான் இன்னும் கொஞ்சம் நேரத்தில வந்துருவாங்க தானே? நேர்ல பார்த்துக்கலாம்…” என்றவள் எந்த விபரத்தையும் கேட்க நினைக்கவில்லை.
“தாமரை, நீ ஒன்னும் கவலைப்படாத. அப்பா ட்ரிப் போகலாம்ன்னு சொல்லிட்டார். கண்டிப்பா போவோம். நீ அதை நினைச்சு கவலைப்படறியா?…” என கேட்க,
“ஐயோ அம்மா அதெல்லாம் எதுவும் இல்லை. நீங்க ஏன் இப்படி நினைக்கறீங்க? நேர்ல பார்த்துக்கறேன். போட்டோல பார்த்தா மட்டும்…” என கடைசியாக முனங்கிவிட அதை கேட்டுவிட்ட சரளாவிற்கு மனதில் பாரம் கூடியது.
“சரிம்மா, நீ வந்து சாப்பிட்டு அவங்க வரதுக்குள்ள இன்னொருக்கா குளிச்சு கிளம்பி இரு…” என்று அவர் எழுந்துகொள்ள,
“கொஞ்சம் வேலை இருக்கும்மா. முடிச்சுட்டு குளிச்சுட்டே சாப்பிட வரேன். இப்ப பசிக்களை. வீடு நிறைய வாசம். அதுவே பசியை அடக்கிருச்சு…” என்றதும் நிவியை அழைத்துவிட்டு வெளியேறினார் சரளா.
“என்னடி? இவ என்ன நினைக்கான்னே தெரியலையே?…” என கன்னத்தில் கை வைக்க,
“ம்மா, அதான் சொல்லிட்டாள்ல. இவ்வளவு பேசறதுக்கே வெற்றி வெற்றின்னு வெற்றிக்குறி போட்டுக்கனும். அதெல்லாம் அவங்க வந்ததும் பார்த்து ஓகே பண்ணுவா…”
“ஹ்ம்ம், நல்ல பொருத்தம். நான் கூட முதல்ல நினைச்சேன். ரெண்டுபேரும் தலைச்சன் பிள்ளை ஒத்துவராதேன்னு. ஆனா மாப்பிள்ளை அவங்களுக்கு ரெண்டாவது தானாம்…”
“மாப்பிள்ளைன்னே முடிவு பண்ணிட்டீங்களா?…” என்று சிரித்தாள் நிவேதா.
“இங்க என்ன ரெண்டுபேரும் அரட்டை. சாப்பிட்டு வேலையை பாருங்க…” என வந்தார் சோமநாதன்.
“அப்பா வந்தாச்சு. வா வா…” என படபடவென்று உணவை முடித்துக்கொண்டு அதையும் சுத்தம் செய்துவிட்டு வீட்டை ஒருமுறை சுற்றி வந்தார் சரளா.
எல்லாம் திருப்தியாகவே இருந்தது. நிம்மதியுடன் தயாரானவர் மகள்கள் உடை மாற்றி இருக்கவும் தலைக்கு பூ வைத்து மகளை தயார் செய்தார்.
அங்கையும் வந்துவிட எப்போது வருவார்களோ என்று காத்திருப்பில் சொன்ன நேரத்திற்கு பத்துநிமிடம் தாமதமாகவே வந்து சேர்ந்தனர் செங்கதிரவன் குடும்பத்தினர்.
குடும்பமாய் அவர்களை பார்த்ததுமே பிடித்துவிட்டது சோமநாதனுக்கும், சரளாவுக்கும்.
அனைவருக்கும் வணக்கம் செய்து, அறிமுகம் முடிந்துவிட அமர்ந்திருந்தவர்களுக்கு தண்ணீரை கொடுத்து உபசரித்து பின் பெண்ணை வர சொல்லலாம் என்று பேசிவிட பேச்சுக்கள் கூட கிட்டத்தட்ட திருமணத்தை பற்றியே இருக்க அதுவே உறுதி என்பதை போல தோன்றியது கதிருக்கு.
“கதிர் என்னப்பா இங்க வச்சு?…” என்று சங்கடப்பட்டவர் உடனே சிரித்து சமாளித்து,
“பொண்ணை வர சொல்லுங்கண்ணே…” என்றார் சோமநாதனிடம் உரிமையுடன்.
“இதோ போய் அழைச்சுட்டு வந்துட்டா போச்சு…” என சொல்லி சரளாவை பார்க்க அவரும் எழுந்து செல்ல,
“நீ இரு சரளா. நானே போய் கூட்டிட்டு வரேன்…” என்று அங்கை எழுந்து சென்றார்.
மீண்டும் சில வினாடிகளில் தாமரையுடன் அங்கயும் மறுபக்கம் நிவேதாவும் வர வரும் பொழுதே தாமரையை அளவெடுக்கும் பார்வை பார்த்தான் கதிர்.
அவனுக்கு அவள் தான் பெண் என்பதால் என்ற அதிர்ச்சியும் இல்லை. ஆனால் தாமரை அவனை பார்த்ததும் இவனா என்பதை போல பார்த்தவள் அவனுக்கருகே அமர்ந்திருந்த தர்ஷனை பார்த்துவிட்டு புருவம் உயர்த்தினாள்.
“தாமரையா எனக்கு அண்ணி?…” என வாய்விட்டே தர்ஷன் கேட்டுவிட்டான் கதிரிடம்.
அவனின் சத்தம் எல்லோருக்குமே கேட்டுவிட தர்ஷன் அப்படி வெளிப்படையாய் சொன்னதில் கதிருக்கு தர்மசங்கடமாய் போனது.
“சும்மா இரு தர்ஷா…” என்றவன் மீண்டும் தாமரையை பார்த்தான் செங்கதிரவன்.