கதிரின் அதட்டலில் தர்ஷன் வாயை மூடிக்கொள்ள அனைவரும் வந்து நின்ற தாமரையின் பக்கம் கவனம் வைத்தனர்.
“வாம்மா, வந்து வணக்கம் சொல்லிட்டு உட்காரு…” என அங்கை சொல்லவும் தலையசைத்தவள் பொதுவான வணக்கத்தை சமர்ப்பித்தவளாக எதிரே இருந்த தனி இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.
பின் அவள் என்ன படித்திருக்கிறாள் என்ன வேலை என்பதை எல்லாம் கேட்டு தெரிந்த பின்னர் ஏன் தர்ஷன் அதிர்ச்சியாக அப்படி சொன்னான் என்பது புரிந்தது.
பேச்சின் ஊடே ட்ராவல்ஸ் பற்றிய பேச்சும், அங்கே தான் ட்ரிப் ஏற்பாட்டை தாமரை செய்திருப்பதும் தெரியவந்தது.
சிறிது நேரம் திருமணம் பற்றி அடுத்து என்ன பேசுவதென்றே தெரியாததை போல பேச்சுக்கள் சம்பந்தமில்லாமல் இரு குடும்பங்களை பற்றி பேசிவிட்டு பின் அங்கை தான் அதையும் ஆரம்பித்தார்.
இப்படி சபையில் மகளின் இந்த தாடால் பேச்சில் சோமநாதனுக்கு கழுத்தில் வியர்த்தது.
“பேசும்மா, நல்லா பேசலாமே…” என்ற யமுனா கதிரிடம் திரும்ப,
“ஓகே…” என்று எழுந்து நின்றான் கதிர்.
யமுனாவிற்கு ஆச்சர்யம், ஆச்சர்யம். அத்தனை ஆச்சர்யம். தன் மகனா இவன்? எந்த பெண்ணையும் பார்த்ததும் இது சரியில்லை, அது சரியில்லை என்று தன்னிடம் பட்டியலிடுபவன் இப்போது அமைதியாய் இருக்க பெண்ணை பிடித்துவிட்டது என்பதை போல முடிவே செய்துவிட்டார்.
அதிலேயே அவரின் முகம் மலர்ந்துவிட்டது. அப்படி ஒரு சிரிப்பு அவரின் அகத்திலும், முகத்திலும்.
யமுனாவின் சிரித்த முகமும் பேச்சும் சம்பந்தம் செய்பவர்களுக்கும் திருப்தியை தந்தது.
கதிர் எழுந்ததுமே அதை மறுக்கவும் முடியாது சோமநாதனும் எழுந்து நிற்க தாமரை,
“நான் பேசிட்டு வரேன்ப்பா….” என சொல்லி முன்னே நடதாள்.
சரளா தன் பயத்தை வெளிகாட்டிக்கொள்ளாமல் இருக்க முகத்தை சிரித்தமுகமாய் வைத்தும் அவரின் அதிர்வு அப்பட்டமாய் தெரிந்தது.
“உட்காருங்க சம்பந்தி, பேசிட்டு வரட்டும். ஏன் இப்படி இருக்கீங்க?…” என்று சரளாவை தன்னருகே அமர வைத்துக்கொண்டார் யமுனா.
“ஒண்ணுமில்லையே. சும்மா தான். நீங்க ஸ்வீட் எடுத்துக்கோங்க…” என்று பேச்சை மாற்ற,
“இந்த அல்வா எப்படி செஞ்சீங்க? ரொம்ப நல்லா இருக்கு…” என யமுனாவும் அவரை இலகுவாக்க முயன்றார்.
“சுத்தம், இந்த அம்மா முன்ன இருந்தே இப்படித்தானாப்பா?…” என பூங்காவனத்திடம் கலாய்த்துக்கொண்டு இருந்தான் தர்ஷன்.
“அப்பறம் தம்பி, இப்பதான தெரியுது நீங்களும் நம்ம பொண்ணு வேலை பார்க்கற ஆபீஸ்ல வொர்க் பன்றீங்கன்னு…” என சோமநாதன் சொல்ல,
“எனக்கு பொண்ணா? அவங்க என் டீம் லீடர். இதை அவங்க முன்னாடி பொண்ணுன்னு சொன்னா நான் அவ்வளோ தான்…” என்று துடுக்காய் சொல்லிவிட,
“தர்ஷா…” என அவனை அதட்டினார் யமுனா.
“அவன் எப்பவுமே இப்படித்தான் கலகலன்னு இருப்பான்…” என்று சோமநாதனிடமும் சரளாவிடம் சொல்ல பூங்காவனமும், தர்ஷனும் கிண்டலுடன் பார்த்தனர்.
“பாருடா தர்ஷா, இதையே உங்கண்ணனுக்கு நான் சொன்னா மட்டும் உங்கம்மாவுக்கு கோபம் வந்துரும். இப்ப உனக்கு சப்போர்ட் பண்ணி சொல்றதை…” பூங்காவனம் தர்ஷனிடம் சொல்ல,
“எனக்கு தான் சப்போர்ட். ஆனாலும் உள்நோக்கம் அண்ணன் கல்யாணமாச்சே. அதனால இந்த சப்போர்ட் மறைமுகமா அண்ணனுக்கு தான். நான் இதை அக்சப்ட் பண்ணிக்க மாட்டேன்…” என்றான் தர்ஷன்.
“நீ ஏன்ம்மா நின்னுட்டே இருக்க? வா இப்படி வந்து உட்கார்…” என நிவேதாவை அழைத்து தனக்கருகே அமர வைத்தார் யமுனா.
“ப்பா, அம்மாவோட பாசம் ரொம்ப ஓவரா போகுதே? சும்மா இருக்கற புள்ளைய கூப்பிட்டு வந்து உட்கார வைக்கறாங்க…” என்று வேறு தர்ஷன் கேலி பேச,
“ஆனாலும் அவளுக்கு புத்தி சாதுர்யம் ஜாஸ்திடா. பார்த்தியா நம்ம என்ன பேசறோம்ன்னு அடுத்து உடனே நம்மளை தான் பார்க்கறா…” பூங்காவனம் சிரித்தார்.
பூங்காவனமும், தர்ஷனும் இன்னும் முணுமுணுத்துக்கொண்டே தான் இருந்தனர் யமுனாவை கிண்டல் பேசிக்கொண்டே.
கதிருடன் கெஸ்ட் ரூமிற்கு சென்றவள் அங்கே அவனுக்கு ஒரு சேரை எடுத்துபோட்டு தானும் தள்ளி அமர்ந்தாள்.
அவனிடம் பேச வந்ததை சட்டென்று பேசமுடியாது அவள் மௌனம் காத்துக்கொண்டே இருக்க கதிர் பேசினான்.
“சொல்லுங்க, பேசனும்னு வர சொல்லிட்டு சைலண்டா இருக்கீங்க?…” என கேட்டும் அவள் பார்த்தாளே தவிர இன்னும் யோசனை தான்.
“உங்களை நான் பிடிக்கலைன்னு சொல்லனுமா என்ன?…” என்றான் கதிர் நேரடியாக அவளின் முகத்தை பார்த்துவிட்டு.
அவன் அப்படி கேட்டதும் திடுக்கிட்டவள் உடனே தனது முகத்தை சீராக்கிக்கொண்டாள்.
“நான் அப்படி சொல்லவே இல்லையே?…” என அவனிடம் எதிர்கேள்வி கேட்ட வேகத்தில் லேசாய் புன்னகைத்தவன்,
“சரி சொல்லுங்க…” என்றான்.
“நான் இதுதான் பேச வந்திருக்கேன்னு நீங்களா எப்படி முடிவு பண்ணுனீங்க?…” என தாமரை அவனை விடுவதாய் இல்லை என்பதை போல அதை மீண்டும் கேட்க கதிரிடம் ஒரு அலட்சியபாவம்.
“இது என்ன பெரிய விஷயமா? பிடிச்சிருக்குன்னு சொல்றதா இருந்தா உங்க முகத்துல கொஞ்சமாவது சிரிப்பு இருந்திருக்கும். அது இல்லவே இல்லை….”
“ஆமா…” என தன்னைப்போல தாமரை முணுமுணுக்க,
“எங்கே இந்த கல்யாணத்தை உடனே கன்பார்ம் பண்ணிருவாங்களோன்னு பதட்டத்துல என்னை தனியா பேசனும்னு கூப்பிட்டீங்க…”
“ஹ்ம்ம், எனக்கென்ன பயம்?…”
“அப்போ அங்கேயே பிடிக்கலைன்னு சொல்ல வேண்டியது தானே?…” என்று அவன் சொல்லவும் முறைத்தாள்.
“நீங்க சொன்னா அது எல்லாமே சரின்னு எப்படி நினைக்கறீங்க? இதுவே வேற மாதிரி இருக்கலாம் இல்லையா?…”
“வேற எப்படி இருக்க முடியும்? பர்ஸ்ட் டைம் மீட் பன்றோம்…”
“இது செகென்ட் டைம்…” என திருத்தினாள்.
இப்போது கதிரின் பொறுமை எங்கோ சென்றுவிடும் போல இருந்தது. இதென்ன எதையும் ஒப்புக்கொள்ளாமல் பேசிக்கொண்டே இருக்கிறாள் என்று. அதை முகமும் பிரதிபலிக்க,
“பேச விடனும். இல்லை நீங்க பேசனும். இப்படி பதிலுக்கு பதில் டைவர்ட் பன்ற மாதிரியே பேசறீங்க…”
“நான் பேசனும்னு நினைக்கிறதுக்குள்ள நீங்க தான் மாத்தி பேசினீங்க…” என்றாள் தாமரை அவனின் முகமாற்றத்தில் எரிச்சல்பட்டவளாக.
“அப்படி நான் இதை தான் நினைச்சு சிரிக்காம, சரியா பேசாம, பதறி உங்களை தனியா கூட்டிட்டு வந்தேன்னு நீங்க நினைக்கறீங்க? ஒருவேளை எக்ஸ்பீரியன்ஸ் அதிகம் போல?…”
அவளறியாமலே சற்று ஏளனமாகவே அந்த குரல் வெளிப்பட்டுவிட கதிரின் முகம் இப்போது முழுவதுமாக கடுகடுத்த தன்மை.
“வாட் யூ மீன்?…” என்றான் கோபமாக.
இப்போது அவள் ஒன்றும் அவனின் கஸ்டமர் அல்லவே. அதனால் எந்த பொறுமையையும் கடை பிடிக்கும் அவசியமற்று அவளை முறைப்புடன் கேட்க,
“நான் சாதாரணமா சொன்னதே உங்களுக்கு இவ்வளவு கோபம் வருதே? இதே தான் எனக்கும். நான் என்ன நினைக்கிறேன்னு கூட தெரியாம, என்ன பேச வரேன்னு கேட்க பொறுமையும் இல்லை உங்ககிட்ட. அப்போ நான் கேட்கிறதுல என்ன தப்பு?…”
அவனிடம் சரிமல்லுக்கு நிற்பதை போல தாமரை எழுந்து நின்று அடக்கப்பட்ட கோபத்துடன் பேச கதிருக்கு என்னடா இது? என்றானது.
இருவரின் வாக்குவாதமும் ஏனோ பலவருடம் பழக்கமும், அதனை கொண்ட சச்சரவுகளும், சண்டைகளும் என்பதை போல ஒரு தோற்றம் அவர்களை சுற்றி எழும்பியதை போல தோன்ற கதிர் திகைத்து பார்த்தான் அவளை.
அவன் அப்படி நிற்பதை பார்த்தவள் லேசாய் தலையில் தட்டிக்கொண்டாள். இப்படி தன் வீடேறி வந்தவனிடம் அதுவும் தன்னை திருமணம் செய்துகொள்ள வந்தவனிடம் இப்படி முகத்திலடித்ததை போல மரியாதை இன்றி பேசிவிட்டோமே என்று அவனை பார்த்தாள்.
“தப்பா நினைக்காதீங்க. நீங்களா என்னை ஒன்னு நினைச்சு பேசினீங்க. பேசிட்டு என்னையே கம்ப்ளைன்ட் பண்ணுனீங்க. பதிலுக்கு நானும் பேசிட்டேன். ப்ளீஸ்…” என்று அவள் சொல்லவும் சற்று தணிந்தான்.
ஆனாலும் அவள் பேச்சும், செயலும் ஏனோ ஒட்டவில்லை. அமைதியாக நின்றவனுக்கு உடனே மறுத்து பேச முடியாமல் உள்ளுக்குள் சண்டித்தனம் செய்தது.
‘உன்னை பிடிக்கலை’ என நேரடியாக சொல்லி பழக்கப்பட்டவன் இப்படி சுற்றி வளைத்துக்கொண்டு நின்றான்.
“நான் பேச வந்தது அது இல்லை….” என்றவளை கை அமர்த்தி தடுத்தவன்,
“பிடிச்சிருக்கா? பிடிக்கலையா? அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க…” என்றான் கதிர்.
அவளின் பேச்சை கேட்கும் பொறுமையும், மனதும் இல்லை அவனுக்கு. முதலில் தெரியவேண்டியது பிடித்தம் பற்றியது.
அதன் பின்புதான் பேசவா வேண்டாமா என்றே அவன் யோசிக்க வேண்டும். அவனளவில் சரியே. எங்கோ லேசான பிடித்தம் ஒட்டிக்கொண்டிருக்க எவ்விதத்தில் அந்த ஈர்ப்பு என்றும் புரியாமல் நின்றான்.
இல்லை என்றால் முதலிலேயே மறுத்து சொல்லிவிடுவான் வேண்டாம் என்று. இத்தனை தூரம் வீடேறி வரும் அளவுக்கு அவன் போனதில்லை.
இப்போதும் அவளுக்கு விருப்பமா இல்லையா என தெரிந்துகொண்டு அதன் பின் அவளின் பேச்சை கேட்பது தான் உத்தமம் என நினைத்தான்.
பிடிக்கவில்லை என்றால் இப்படியே கிளம்பிவிட வேண்டும் என்று அவளை பேசவிடாமல் ரெண்டில் ஒன்று என நின்றான்.
“என்ன இப்படி கேட்கறீங்க? பிடிச்சதுன்னா என்ன பேசறதா இருக்கீங்க?…” என்றாள் தாமரை.
“அதை நம்ம வீட்டு பெரியவங்க முடிவு பண்ணுவாங்க. மத்தபடி வேற பேசறது கல்யாணத்துக்கு அப்பறம்…” என்றவனை விழிவிரிய பார்த்தாள்.
“ஓஹ், அப்போ நான் உங்களை பிடிக்கலைன்னா என்ன பண்ணுவீங்க?…”
தெரிந்துகொள்வதற்காக தான் அவளும் இதை கேட்டது கூட. அவனின் பதில் தான் எதிர்பாராத ஒன்று.
“சிம்பிள். பிடிக்கலைன்னும் போது உங்க கதையை கேட்க நான் யாரோ. எனக்கு அது அவசியமில்லாதது. நான் கிளம்பி போய்ட்டே இருப்பேன்…” என்றவனை என்ன மனிதன் இவன் என்று பார்த்தாள்.
“நீங்க எப்பவுமே இப்படித்தானா?…” என கேட்டவளின் மனக்கண்ணில் சற்று முன் புன்னகைத்த அவனின் முகம் மின்னி மறைய தன் முன் நின்றவனை ஆராயும் விதமாய் பார்த்தாள்.
“பொண்ணு பார்க்க வந்திருக்கீங்க, இப்படித்தான் பேசுவாங்களா?…” கேட்டேவிட்டாள்.
“எனக்கு பேச தெரியலைன்னு சொல்றீங்களா?…” என்றான் நிதானத்துடன்.
அவனை எப்படி அணுகுவது, எப்படி பதில் வாங்குவது என்றே தெரியாமல் தலைசுற்றி நின்றாள் தாமரை.
“நான் அப்படி சொல்லவே இல்லையே…”
“ஓகே, அப்போ சொல்லுங்க….” என்றான் மார்பின் குறுக்கே கையை கட்டிக்கொண்டு.
“என்ன சொல்ல?…” அவள் சுத்தமாக பேச வந்ததையே மறந்துவிட்டாள் இவன் சுற்றிவிட்டதில்.
கதிருக்குமே பாவமாய் போக மீண்டும் அந்த குறுஞ்சிரிப்பு அவனின் முகத்தில் வந்தமர்ந்தது.
“ஓகே, ரிலாக்ஸ்…” என அமர்ந்துகொண்டான்.
“உட்காருங்க…” என்றவன் அவள் அமர்ந்ததும் பேச ஆரம்பித்தான்.
“என்னை நீங்க தான் பேசனும்னு வர சொன்னீங்க. வந்துட்டு எதுவும் பேசாம இருந்தீங்க. அப்போ எனக்கு என்ன தோணும்? உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னு தான் தோணும்…” என்றவன் தானே அந்த வார்த்தையை சொல்லியிருந்தாலும் அவனின் ஈகோ அடிவாங்கியது.
எப்போதும் அவன் மறுத்தே பழக்கப்பட்டிருக்க இதுவரை அவனை மறுத்து யாரும் பேசியதில்லை.
தாமரையின் மலர்ச்சியற்ற முகமும், சிரிப்பற்ற விழிகளும் அவள் தன்னை மறுப்பாளோ என்று தான் தோன்றியது அவனுக்கு.
தனது ஆபிஸிற்கு ட்ரிப் புக் செய்ய வந்த பொழுதே அவளின் பேச்சை கேட்டான் தானே. அது தனக்கான பதில் என தனக்கு பார்த்திருக்கும் பெண்ணாய் போட்டோவில் அவளை பார்த்ததும் புரிந்துகொண்டான்.
தனது எதிர்பார்ப்பு எல்லாம் அவளிடத்தில் ஆங்காங்கே ஒத்து போகாமல் இருந்தும் பெரிதாய் மறுத்து அவன் சொல்ல தோன்றாமல் வீடு வரை வந்துவிட்டான்.
வந்ததில் இருந்தே தாமரையை கவனித்து பார்த்தவனுக்கு அவளுக்கு விருப்பமில்லை என்று அட்சுரசுத்தமாக விளங்கி போனது.
மனது ஏற்கவும் இல்லை. மறுக்கவும் மனமில்லை. தனியே பேசவேண்டும் என அழைத்து வந்தும் ஒன்றும் சொல்லாமல் இருக்க கோபம் வேறு வந்துவிட்டது. இன்னும் தாமரை அமைதியாகவே இருக்க,
“எனக்கு இதை மறுக்க எதுவும் இல்லைன்னு தோணுது. உங்களுக்கு எப்படின்னு தெரியலை…” என பட்டென்று அவன் சொல்ல இப்போது தாமரை இன்னும் திகைத்தாள்.
அவள் இப்போதைக்கு பேச போவதில்லை என கதிருக்கு புரிந்துபோனது. அதற்கு மேலும் அங்கிருக்க பிரியப்படாதவன்,
“ஓகே, நான் கிளம்பறேன். உங்க விருப்பம் எதுவோ உங்க வீட்டுல சொல்லுங்க. பை…” என்று சொல்லி அந்த அறையில் இருந்து சரேலென வெளியேறிவிட்டான்.
அவனின் செயலில் தாமரைக்கு தான் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. தான் பேச வந்தது என்ன இவன் நினைத்து பேசி செல்வது என்ன என அங்கேயே அமர்ந்துகொண்டாள்.
வெளியே வந்தவன் தன் தாயிடம் தலையசைக்க அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
அத்தனை நேரம் இரு குடும்பங்களும் திருமணம் எப்போது என்பது வரை பேசி கிட்டத்தட்ட முடிவே செய்துவிட்டிருக்க இப்படி வந்ததும் எதுவும் சொல்லாமல் கிளம்பு என்பதை போல நின்றவனை பார்த்து அவர் மட்டுமல்ல மற்றவர்களும் திகைத்து நின்றார்கள்.
“தம்பி கதிர். என்னப்பா இது திடுதிப்புன்னு?…” அங்கை அவனிடத்தில் கேட்கவும்,
“என்ன சித்தி சொல்றீங்க? பொண்ணு பார்த்தாச்சு. நான் பேசவேண்டியதை பேசிட்டேன். சொல்லிட்டேன். அவங்களுக்கு என்ன விருப்பம்ன்னு எதுவும் சொல்லலை. அதான் கிளம்பிட்டேன்…” என்றதும் சரளாவும் நிவியும் சோமநாதனை தான் படக்கென்று பார்த்தார்கள்.
அவர்கள் நினைத்ததை போல அவரின் முகம் வெளிறி போயிருந்தது. ‘ஐயோ கோர்த்துவிட்டுட்டாரே?’ என நிவி பதட்டத்துடன் தன் அக்காவை தேடி செல்ல முடியாமல் அங்கேயே தாயினருகே நின்றாள்.
“கதிர் நில்லுப்பா…” என்ற பூங்காவனம்,
“இப்படி எதுவுமே சொல்லாம கிளம்பறது எந்தவிதத்துல நியாயம்? தப்புப்பா…” என்றார்.
“அப்பா…” என்றவன் பின் சோமநாதனிடம் வந்தான்.
“நான் பேசவேண்டியதை உங்க பொண்ணுக்கிட்ட பேசிட்டேன் ஸார். அவங்க விருப்பம் என்னன்னு தெரிஞ்சிட்டு கால் பண்ணுங்க. மேற்கொண்டு பேசலாம். வெய்ட் பன்றோம்…” என்று சொல்லவும் அவனுக்கு பதில் சொல்ல முடியாமல் அவர் அப்படியே நின்றார்.
“ம்மா, என்ன இது? உங்க மகன் கிட்டத்தட்ட ஓகே சொல்லிட்ட மாதிரி பேசறான். சட்டுன்னு குதிங்க. பெர்பாமென்ஸ் இம்பார்ட்டென்ட்…” என அங்கேயே தர்ஷன் யமுனாவை தூண்டிவிட,
“எங்கடா சொன்னான்? புடிக்கும்ன்னு எங்கயுமே சொல்லையே?…” என்றார் அவரும் ஒன்றும் புரியாமல்.
“சுத்தம், எந்த உலகத்துல இருக்கீங்க? இதுதானா உங்க டக்கு? வெய்ட் பன்றோம்ன்னு ஸார் வாய்ல இருந்து முத்தை கொட்டினதை பார்க்கலையா நீங்க?…” என்றவன்,
“பேரு பெத்த பேரு. தேடி தேடி நான் தான் பொண்ணு பார்த்தேன் பார்த்தேன்னு. இப்பத்தான் தெரியுது எந்த லட்சணத்துல பார்த்தீங்கன்னு…” என தர்ஷன் சொல்லவும் அவனை முறைத்தார்.
“என்னடா குறைச்சலா பார்த்துட்டேன்…”
“குறைச்சல் இல்லாம இது என்னவாம்? அவன் என்ன பேசறான்னே புரியாம தான் ஆல் ரிஜக்ட்டட் சொன்னீங்களா? பாவம் அப்பாவி பையன் அவன். அம்மா சொல்லவும் சரின்னு இருந்திருக்கான்…” என இளைய மகன் சொல்லவும் அப்படித்தானோ என்றே தோன்றிவிட்டது யமுனாவிற்கு.
“ஏன்டா தர்ஷா அப்ப நான் தான் அவனுக்கு இவ்வளவு நாளும் கல்யாணம் ஆகாம இருந்ததுக்கு காரணமா?…” என்று கண்ணில் நீரை கட்ட,
“ம்மா, இந்த பர்பாமென்ஸ் வீட்டுல வச்சு செஞ்சுக்கலாம். இப்போ முதல்ல இங்க என்ன நடக்குதுன்னு கவனிங்க. பாவம் அண்ணியோட மமாவும், அப்பாவும்…”
“அண்ணி தானா?…”
“அதான் உங்க மூத்தவனே சொல்லிட்டானே. ஐம் வெய்ட்டிங்ன்னு ஸ்டெயிலா மாஸா சொல்லலை. அது மட்டும் தான் பாக்கி. ஆனா அவன் பாணில அழுத்தமா அந்த மூஞ்சை உர்ருன்னு வச்சுட்டு சொல்லிட்டான். இவனுக்குள்ள என்னவோ இருக்கும்மா…”
தர்ஷன் பேசிக்கொண்டே இருக்க யமுனாவிற்கு குழப்பம் கூடியது. இங்கே தான் என்ன பேச, என்ன நம்பிக்கை தர என்று பேந்த பேந்த விழித்தார்.
“அம்மா…” என கதிர் அழைத்ததும்,
“என்னப்பா? என்னப்பா…” என வந்தார் அவனருகே.
“என்ன என்னப்பா? சொல்லுங்க நீங்க? சொல்லிட்டு கிளம்புவோம். அவங்க பேசி முடிவுக்கு வரட்டும்…” என அவன் சொல்லவும் தலையை அசைத்தவர்,
“ஆமா, நீங்க பேசிட்டு எங்களுக்கு சொல்லுங்க…” என யமுனா சொல்லவும் கதிர் அனைவரிடமும் தலையசைத்துவிட்டு வெளியேறிவிட்டான்.
அவன் செல்லவும் தான் சற்று ஆசுவாசமானார் யமுனா. என்ன நடந்தது என மயக்கத்தில் இருந்து விழித்தவரை போல தண்ணீரை எடுத்து குடித்து முகத்தை துடைத்துக்கொண்டவர்,
இரு குடும்பங்களுக்குமே முதல் முறை அறிமுகம் போலவே இல்லாது இலகுவாக ஒட்டிக்கொண்டார்கள்.
பேச்சும் சம்பிரதாயமாக இல்லாமல், எந்த பாசாங்கும் காண்பிக்காமல், வெளிப்படையாகவே பேச மணமக்களை தவிர அவர்கள் குடும்பத்தினருக்கு மற்றவர்களை முழுமனதாக பிடித்து போனது.
சம்பந்தமே ஆகிவிட்டதை போல ஒரு உணர்வு வந்துவிட தள்ளிவைத்து பேச முடியாது இருதரப்பும் கலந்துபேசினார்கள்.
“அங்கை நீ கூட இருந்து என்னன்னு பாரு. நாங்க கிளம்பறோம்…” என்ற யமுனா சரளா, சோமநாதனின் போன் நம்பரை வாங்கிக்கொண்டு, தங்கள் எண்ணையும் கொடுத்துவிட்டே சென்றார்கள்.
அனைவரையும் வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தவர்கள் நேராக தாமரையை தேடி உள்ளே சென்றார்கள்.
அவள் கதிர் செல்லும் போது எவ்விடத்தில் அமர்ந்திருந்தாளோ அங்கேயே தான் இன்னும் அமர்ந்திருந்தாள்.
“என்ன முடிவு பண்ணிருக்கா உன் பொண்ணு? கேட்டு சொல்லு சரளா?…” என கோபமாக சோமநாதன் கேட்டதும் அவரை நிமிர்ந்து பார்த்தவள் வெளியே என்ன நடந்தது என்றே தெரியாதவளாக,
“என்னம்மா?…” என்று எழுந்தாள்.
“என்ன என்னம்மா? என்னடி பேசின? என்ன சொன்னார் உன்கிட்ட?…” என சரளா கேட்க,
“அவங்க எல்லாம் கிளம்பிட்டாங்களா?…” என்றாள் தாமரை.
“அக்கா அவங்க எல்லாரும் கிளம்பிட்டாங்க. நீ ஏன் இப்படி அது கூட தெரியாம உள்ளயே உட்கார்ந்திருக்க?…” என நிவி கேட்க,
“யோசிச்சுட்டு இருந்தேன்…” என்ற தாமரை தந்தையை பார்த்தாள்.
“சரளா இவக்கிட்ட என்ன கேட்க சொன்னா நீ என்ன பேசிட்டு இருக்க?…” என்று அவர் முறுக்கிக்கொண்டு நிற்க,
“அவங்க வீட்டுல என்னம்மா சொன்னாங்க? என்ன சொன்னார் நீங்க பார்த்த மாப்பிள்ளை பையன்…” என்றாள் சற்று நக்கல் தூக்கலாக.
“தாமரை, அவர் உன்கிட்ட கேட்டுக்க சொல்லிட்டு போய்ட்டாரு. உன்கிட்ட சொல்லவேண்டியதை சொல்லிட்டாராமே? உன் முடிவுதானாமே?…” என சரளா கேட்கவும் தாமரைக்கு ஐயோ என தோன்றியது.
‘போற போக்குல கோர்த்துவிட்டுட்டு போய்ருக்கானே.’ என நினைத்தபடி சோமநாதனை பார்த்தாள்.