“இவ்வளோ நேரமும் உன்னை வச்சு தானே கேட்டேன்? அப்போ காதுல விழுந்திருக்கும் தானே?…” என அவரும் சொல்ல சரளா அவரின் கையை பிடித்தார்.
“பொறுமையா பேசுங்க. அவளே ஏதோ குழப்பத்துல இருக்கற மாதிரி இருக்கா…” என்றார் மகளின் முகத்தை பார்த்து.
“அப்படியா இருக்கு?…” என கேட்டபடி தாமரை கண்ணாடியின் பக்கம் செல்ல சோமநாதனுக்கு பிபி எகிறியது.
“இங்க என்ன பேசிட்டு இருக்கோம். அவ பன்ற வேலையை பார்த்தியா?…” என கேட்கும் பொழுதே டிஷ்யூவால் முகத்தை அழுத்தமாய் துடைத்துக்கொண்டாள் தாமரை.
“ஹ்ம்ம், டென்ஷன் தான். நல்ல மாப்பிளை. என்னன்னும் பொறுமையா கேட்காம, அவரா ஏதோ நினைச்சுட்டு பேசி, என்னையும் குழப்பி…” என முணுமுணுக்க,
“அக்கா, உன்கிட்ட தான் பேசறாங்க. நீ இங்க வா…” என நிவி அவளை அழைத்தாள்.
“என்ன நிவி நீயும்?…” என சலிப்புடன் வந்தவள்,
“ப்பா, எனக்கு என்ன சொல்லன்னே தெரியலை. ஏனா நான் எதுவுமே பேசலை. அவரா பேசினார், கிளம்பிட்டார்…” என சொல்ல சுத்தமாய் நம்பிக்கை இல்லை மகள் மீது.
“அவர் என்ன பேசினார்? அதை சொல்லு?…” என்றார் சோமநாதன்.
“அது என்னோட விருப்பம் என்னன்னு கேட்டாரு…”
“நீ என்னம்மா சொன்ன?…” இப்போது கொஞ்சம் தன்மையுடன் கேட்டார் மகளிடம்.
“நான் எதுவும் சொல்லலை. அதான் கிளம்பிட்டார்…” என்று மொட்டையாக சொல்ல வேதாளம் முருங்கைமரம் ஏறியது.
“உன்னை…” என்றவரின் கையை பிடித்த நிவேதா அவரை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
“அப்பா நான் பேசிட்டு சொல்றேன். கொஞ்சம் பொறுமையா இருங்க…” என சொல்ல,
“என்னத்த பொறுமையா இருக்க? பாரு என்ன பாடு படுத்தறான்னு பாரு?…” என நெஞ்சை பிடித்தபடி அமர அவருக்கு தண்ணீரை கொண்டுவந்து கொடுத்தாள் நிவேதா.
“இப்ப எதுவும் நடக்கலை. அவ முடியாதுன்னு சொல்லவே இல்லையே. எதுவும் பேசலைன்னு தானே சொன்னா…”
“பேசனும்னு கூட்டிட்டு போனதே இவ தான். அப்பறம் பேசவே இல்லைன்னு சொன்னா நம்பற மாதிரியா இருக்கு?…” என தலையில் கை வைத்து அமர்ந்திருந்தவரை பார்க்கவே பாவமாக இருந்தது.
“நிவி நீ போய் அக்கா கூட இரு. நான் பார்த்துக்கறேன் அப்பாவை…” சரளா மகளை அனுப்பிவிட்டு கணவனருகே அமர்ந்தார்.
“எதுக்குங்க இவ்வளவு கோவம்? அதான் பேசிட்டு சொல்றேன்னு சொல்லற வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருப்போமே?…”
“என்னம்மா நீயும்? பார்த்த தானே எத்தனை நல்ல இடம் அவங்க. இப்படி ஒரு குடும்பம். பதில் சொல்லாம கிளம்பறாங்கலேன்னு கலங்கி நின்னப்போ என்கிட்டே வந்து கையை பிடிச்சு சமாதானம் சொன்ன பையன். எப்பேர்ப்பட்ட மருமகனா இருப்பாரு…”
சோமநாதன் அந்த சம்பந்தத்தை விடவேண்டாம் என்று நினைத்தார். அவர் அறிந்திருந்தவரை, விசாரித்தவரை குடும்பமும் சரி, பையனின் ஒழுக்கம், பழக்கவழக்கம் எல்லாமே திருப்திக்கும் மேல்.
அதனாலேயே இது எங்கே தட்டி போய்விடுமோ என பதட்டமாகி போனார் சோமநாதன்.
பெண்ணை கொடுக்கும் இடம் நல்லதாக அமைத்துவிட்டால் அதைவிட வேறு நிம்மதி ஏது?
கொஞ்சம் நேரம் சென்றதும் சற்றே ஆசுவாசமானார். இளையமகள் பேசி வரட்டும், பார்க்கலாம் என கொஞ்சம் அமைதியாகி இருந்தார்.
“சொல்லுக்கா, என்ன பேசினார்?…” என நிவேதா கேட்டதும் நடந்ததை தாமரை சொல்ல முழுதாய் கவனமாய் கேட்டவள் முகத்தில் மெல்லிய புன்னகை.
“இதுல உனக்கு என்னக்கா டவுட்? என்ன குழப்பம்?…”
“நிவி, புரியாம பேசாத. நான் என்ன பேச வரேன்னு தெரியாம, கேட்கிற பொறுமை இல்லாம இப்படி பேசறார். எல்லாமே அவரா முடிவு பண்ணிக்கலாமா? என்னதான் ஓகே பர்சனாலிட்டியா இருந்தாலும் இது என்னவோ நெருடுது…”
“அச்சோ அக்கா, உனக்கு தான் புரியலை. பாய்ன்ட் நம்பர் ஒன். நீ அவரை பேச வர சொல்லிட்டு பேசாம அமைதியா இருந்திருக்க. கூடவே ஒரு ரெஸ்ட்லஸ், ஸ்மைல் கூட இல்லைன்னு சொல்லிருக்கார். அந்தளவுக்கு உன்னை கவனிச்சிருந்திருக்கார்…”
“ஹ்ம்ம், அப்படித்தான் போல?…”
“பாய்ன்ட் நம்பர் டூ. இன்னைக்கு பொண்ணு பார்க்க வந்துட்டு பொண்ணோட தனயா ஒரு ரூம்ல அதுவும் நீ பேசாம நேரத்தை காட்டத்தினது அவருக்கு டென்ஷன் ஆகியிருந்திருக்கும். அதனால பேச சொல்லி இப்படி கேட்ருப்பார்…”
“அதுக்குன்னு எனக்கு பிடிக்கலைன்னு அவரா எப்படி நினைக்கலாம்?…”
“ஏன் நினைக்காம? அவர் அப்படி நினைக்க கூடிய அத்தனை சாத்தியமும் இருக்கே. அவர்கிட்ட ஒரு ப்ரெண்ட்லி ஸ்மைல் கூட இல்லை உனக்கு. அப்போ அவர் அப்படித்தானே நினைப்பார். இதென்ன உன் ஆபீஸ் மீட்டிங்கா?…”
“ஓஹ், நீ அப்படி சொல்றியா?…”
“ஆமா, இது பொண்ணு பார்க்க வந்திருக்கிற பங்க்ஷன். உனக்கு பிடிச்சிருக்கா இல்லையான்றது தானே முக்கியம். ரெண்டே ஆப்ஷன். பிடிச்சிருக்குன்னு உன் முகத்தில எந்தவித அறிகுறியும் இல்லைன்றப்போ பிடிக்கலைன்னு தானே தோணும்…”
தாமரை அமைதியாகிவிட்டாள் இப்போது. கொஞ்சம் தெளிவாகவும் இருந்தது மனதிற்கு.
“ஆனா இதுல ஒரு விஷயம் புரிஞ்சிருச்சு. நேரா சொல்லாம சுத்தி வளைச்சா இருந்தாலும் அவருக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு மைல்டா டிக்ளர் பண்ணிட்டு போய்ட்டார்…” என சிரிப்போடு சொல்ல தாமரை மீண்டும் யோசனைக்குள் சென்றாள்.
“உனக்கு பிடிக்கலையா பளிச்சின்னு சொல்லிருக்கா. இப்படி முகத்தை வச்சுக்காத…”
“நான் அதை யோசிக்கலை நிவி. என்னவோ குழப்பம். ஆனா பிடிக்குமான்னு யோசிக்குதே தவிர பிடிக்கலைன்னு யோசிக்கலை…” என்றதுமே நிவியின் முகம் மலர்ந்துவிட்டது.
“வாவ்வ்வ், அப்போ சீக்கிரமே டும் டும் டும் தான். நான் இப்பவே என்னென்ன செய்யனும்னு லிஸ்ட் போட ஆரம்பிக்கறேன்…” என்ற வெளியே ஓட போக,
“நில்லு நிவி, நான் பொறுமையா சொல்றேன்…” என்று கையை பிடித்தாள்.
“க்கா, திரும்பவும் கேட்கறேன். உனக்கு பிடிக்கலையா?…”
“ச்சே, ச்சே. அப்படிலாம் இல்லை…” என்றவளின் மனகண்ணில் கதிரின் நொடிநேர புன்னகை முகம் தோன்றி மறைந்தது.
“ஆனாலும், பேசனும். பேசிட்டு தான் முடிவு பண்ணுவேன்…” என சொல்ல,
எதுவும் தெரியாமல் எப்படி சரி என்று சொல்வது? என யோசித்துக்கொண்டே இருந்தவள் நியாபகத்தில் சட்டென தர்ஷன் வந்தான்.
“ஹ்ம்ம், அவன்கிட்ட பேசுவோம்…” என சொல்லிக்கொண்டவள் எழுந்து வெளியே செல்லும் முன்பே சரளாவும், சோமநாதனும் உள்ளே வந்துவிட்டார்கள்.
வரும் பொழுதே சோமநாதனின் கண்கள் கலங்கி நெகிழ்ச்சியுடன் வந்து நின்றவர் மகளின் கையை பிடிப்பதா, அணைப்பதா, என்ன பேசுவது என்று தடுமாறி நின்றார்.
அதை பார்க்க மகள்களுக்கு சிரிப்பு பொங்கியது. என்னதான் செய்கிறார் என்று பார்க்கலாம் என குறும்புடன் தாமரை அமைதியாக நிற்க அவர் கடைசியாக தலையில் கைவைத்து,
“நல்லாருப்பம்மா. ரொம்ப சந்தோஷம்…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட பக்கென்று சிரித்துவிட்டாள் தாமரை.
பெண்பிள்ளைகள் வளர வளர தள்ளிநின்றே பார்த்து பூரித்து போனவருக்கு அருகே அரவணைத்து பார்க்க சட்டென வரவில்லை.
“என்னடி சிரிக்கிற? பாவம் அவரு…” என்று மகளின் முதுகில் லேசாய் அடித்தவர்,
“இன்னைக்கு தான் உன்னோட அப்பா நிம்மதியா தூங்குவார். புலம்பாம…” என்று சொல்லிய சரளா,
“இரு இப்படி சிரிப்போட உன்னை பார்க்க என் கண்ணே நிறைஞ்சு போச்சு…” என கைகொண்டு முகம் வழித்து திருஷ்டி எடுத்தவர்,
“ம்ஹூம், எனக்கு இன்னும் ஆறலை. இரு வரேன்…” என்று திருஷ்டி எடுக்க தேவையானவற்றை எடுத்து பேப்பரில் சுருட்டி கொண்டுவந்து திருஷ்டி கழித்துவிட்டு வந்தார்.
அவளின் சம்மதம் வீட்டின் அத்தனை சந்தோஷத்தையும் மீட்டு தந்துவிட்டதை போல ஒரு குதூகலம் குடிகொண்டது.
“பாரேன் அம்மாவையும், அப்பாவையும். அப்பா போகும் போதே நடையில ஒரு துள்ளல் இருந்துச்சுக்கா. நீ கவனிச்சியா?…” என நிவேதா கேட்க,
“ஹ்ம்ம், என்னை இங்க இருந்து அனுப்பற சந்தோஷம்…” என்றாள் தாமரை.
“நீ இருக்கியே. இதை கேட்டா இன்னும் பீல் பண்ணுவாங்க ரெண்டுபேரும். போக்கா…” என நிவி சோர்வுடன் சொல்ல தாமரைக்கு கஷ்டமாகிவிட்டது.
“அச்சோ, இப்ப என்ன சொல்லிட்டேன்னு நீ இப்படி பேசற? அதெல்லாம் சும்மா சொல்றது. இதெல்லாம் என்ஜாய் பண்ணனும்…” என்று தங்கையை அணைத்துக்கொண்டாள்.
அங்கையை வரவழைத்து உடனே விஷயத்தை சொல்லிய சரளா பூங்காவனத்திற்கு போன் செய்து சம்மதத்தை சொல்லும்படி கணவனுக்கு சொன்னார்.
“ஆமாண்ணே, நீங்களே சொல்லிருங்க. மேற்கொண்டு பேசறதை அடுத்து ரெண்டு குடும்பமும் சேர்ந்து கலந்துப்போம்…” என அங்கையும் சொல்ல பூங்காவனத்தின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தார் சோமநாதன்.
“வணக்கம் சம்பந்தி…” என எடுத்தெடுப்பில் சோமநாதன் சொல்ல அவரின் குரலிலும், சம்பந்தி என்ற விளிப்பிலும் பூங்காவனத்திற்கு புரிந்துபோனது.
“சொல்லுங்க சம்பந்தி, சந்தோஷமான விஷயம் தான் போல…” என்றார் அவரும் கலகலப்பாக.
“ஆமாங்க. மாப்பிள்ளை விவரமா தான் பேசிருக்காரு. பிள்ளைக்கு தான் கொஞ்சம் தயக்கமா போச்சு…” சோமநாதன் சொல்லவும் பூங்காவனத்திற்கு சிரிப்பு பீறிட்டது.
‘தயக்கமா? எவ்வளவு தைரியமா தனியா பேசனும்னு சொன்ன பொண்ணுக்கிட்ட தயக்கமா?’ என நினைக்க இன்னுமே சிரிப்பு தான்.
இரவு உணவை செய்துகொண்டிருந்த யமுனா யாரிடம் பேசுகிறார் இவர் என்று என்னவென்று பார்க்க வர,
“என்னன்னு சொல்லுங்க…” என யமுனா கேட்க கையில் போனை திணித்துவிட்டார்.
“உன் மருமக வீட்டுல இருந்து தான்…” என மெல்லிய குரலில் வேறு சொல்ல உடனே வாங்கியவர் பேச முகமெல்லாம் அப்படி ஒரு மகிழ்ச்சி.
ஏதோ திருமணமே நடந்துமுடிந்துவிட்டதை போல, எதையோ சாதித்ததை போல ஒரு ஆசுவாசம் மனதில்.
“எனக்கு ரொம்ப சந்தோசம்ண்ணே, இப்பதான் நிம்மதியா இருக்கு. சரிங்கண்ணே. அப்பறமா பேசுவோம்…” என சொல்லி சரளாவிடமும் மரியாதைக்கு பேசிவிட்டு போனை வைத்தார்.
“இப்பத்தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு…” என அப்படியே இருக்கையில் அமர்ந்தவர் பூங்காவனத்தை பார்க்க,
“இன்னும் உன் மகன்கிட்ட சொல்லலை. அவனும் அப்பறம் பேசிக்கலாம்ன்னு தான் சொல்லிருக்கான்…” என்று சொல்ல படக்கென்று எழுந்தார்.
“உங்களோட. கொஞ்சம் நிம்மதியா இருந்தா ஆகாது. இன்னைக்கு அவன்கிட்ட நீங்க தான் பேசனும். நான் கூட இருக்கேன்…” என சொல்ல,
“நான் பேசிடுவேன். ஆனா அவன் வரனுமே? நம்மளை வீட்டுல விட்டுட்டு கிளம்பும் போதே என்ன சொல்லிட்டு போனான். வர ரொம்ப லேட் ஆகும்ன்னு ஒரு சாவியை எடுத்துட்டு தானே போனான்….”
“ஆமா, சரி காலையில பேசிப்போம்…”
“போன்ல சொல்வோம் யமுனா…”
“இல்ல இல்ல. நேர்ல தான் சொல்லனும். இல்லன்னா எதாச்சும் பேசுவான். வரட்டும்…” என்று வேலையை பார்க்க போய்விட்டார்.
இரவு கதிர் எந்நேரம் வந்தான் என்றே தெரியவில்லை. நடு இரவை தாண்டி அத்தனை நேரம் சென்றிருந்தது.
அதனால் சற்று தாமதமாகவே அவன் எழுந்து வர தர்ஷன் அலுவலகம் கிளம்பி சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.
“தர்ஷா, டே ஷிப்ட்டா?…” என கேட்டுக்கொண்டே அவனருகே அமர்ந்தான்.
தனக்கும் சாப்பிட எடுத்து வைத்துக்கொண்டவன் தம்ளரில் தண்ணீரை ஊற்றியபடி தம்பியை பார்த்தான்.
“ஆமாண்ணா…” என்றான் தர்ஷன்.
ஆனால் பார்வையும், மனமும் இவன் ஏன் இதை எல்லாம் இன்றைக்கென்று கேட்கிறான் என்றே தோன்றிக்கொண்டு இருந்தது.
“ஆபீஸ்க்கு தான போற?…” கதிர் மீண்டும் கேட்டான் விடாமல்.
‘என்ன எலி அண்டர்வேரோட சுத்துது? இன்னைக்கு இவனுக்கு என்ன ஆச்சு?’ என யோசித்தபடியே கதிரை ஆராயும் பார்வை பார்த்தான்.
அண்ணன் தம்பிக்குள் என்னதான் கலகலப்பான பேச்சுக்கள் இருந்தாலும் இப்படி சம்பந்தமில்லாமல் எந்த பேச்சுவார்த்தையும் இருந்ததில்லை.
“என்னடா கேட்டா பதில் சொல்லாம முழிக்கிற? ஆபீஸ்க்கு மட்டமா?…”
“என்ன பதில் சொல்லண்ணா? டே ஷிப்ட்டான்னு கேட்ட ஆமான்னேன். அப்பவும் ஆபீஸான்னு கேட்கிற. அதான் என்னன்னு பார்த்தேன்…”
“சும்மா தான். நீ நேத்து சொன்னியே உன் டீம் லீடர் தான் அந்த பொண்ணுன்னு. இன்னைக்கு அவங்க ஆபீஸ்க்கு வருவாங்க தானே? சரி பார்த்துக்கோ….” என்றதிலே தர்ஷனுக்கு பீதியானது.
“அதுதான் என்ன பார்த்துக்கனும்? மம்மீ. ஆமா நீ என்ன பேசிட்டு வந்த? ஏடாகூடமா ஒன்னும் பேசலையே?…” என்று கேட்க,
“முதல்ல சாப்பிட்டு ஆபீஸ் கிளம்பற வழியை பாரு. எப்ப பார்த்தாலும் சாப்பிடும் போதும் லொடலொடன்னுட்டு…” என சொல்ல,
“எதே நான் லொட லொடன்னு பேசறேன்னா?…” என்ற தர்ஷனின் அதிர்ச்சியில் கதிருக்கு சிரிப்பு வந்தது.
“கதிரு வந்துட்டியா?…” என யமுனா வேகமாய் வந்தார்.
“இருப்பா ஸ்வீட் செஞ்சிருக்கேன். எடுத்துட்டு வரேன்…” என்று சொல்லி சர்க்கரை பொங்கலை கொண்டுவந்து மகனுக்கு வைக்க,
“ம்மா, இதை என்கிட்டே சொல்லவே இல்லை. நான் சாப்பிட்டே முடிக்க போறேன். இப்ப வந்து அவனுக்கு மட்டும் வச்சா?…” தர்ஷன் போர்கொடி பிடிக்க,
“அட இருடா. இப்பத்தான் சாமிக்கு பூஜை பண்ணிட்டு வரேன். அதுக்குள்ள உனக்கு வைக்க முடியுமா?…” என அவனுக்கும் வைத்தார்.
“என்னம்மா, பூஜை. பொங்கல். உங்க பாசம் சும்மா இந்த பொங்கல்ல இருக்கற நெய்யை மாதிரி வழுக்கிட்டு போகுதே?…” என்று கிண்டலுடன் தர்ஷன் பொங்கலை சாப்பிட கதிருக்கு புரிந்துபோனது.
தாயாகவே சொல்லட்டும் என்று அமைதியாக சாப்பிட்டுக்கொண்டு இருக்க மீண்டும் இனிப்பை அவனுக்கு வைக்க அவனும் மறுக்கவில்லை.
“எல்லாம் நல்ல விஷயம் தான். நேத்து பொண்ணு பார்க்க போனோமே உன்னோட முதலாளி. அந்த பொண்ணு வீட்டுல சம்மதம் சொல்லிட்டாங்க…” என்று சொல்ல கதிரின் முகத்தில் புன்னகை கீற்றாய் மின்னியது.
தர்ஷனுக்கு சம்மதம் சொல்லிவிட்டார்கள் என்பதை தாண்டி முதலாளி, என தன் அம்மா சொல்ல சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.
அதற்கும் மேல் இனி தாமரை அண்ணியாக தன் வீட்டிற்கு வந்தாலும் தன் நிலை. யமுனாவின் கேள்விகள்.
யமுனாவிடம் இருந்து சும்மாவே அப்படி என்ன வெட்டிமுறிக்கிற? என கேள்விகள் தொற்றிக்கொண்டே இருக்கும் அவனுக்கு.
இப்போது கேட்கவே வேண்டாம். தாமரையிடம் கேட்டு அலுவலகத்தில் என்னவெல்லாம் செய்கிறேன் என ஆராய்வது தான் வேலையாக இருக்கும். என நினைத்தவனுக்கு இப்போதே முகத்தில் கிலி படர்ந்தது.
“முதல்ல ஆபீசை மாத்திட்டு போகனும்டா தர்ஷா…” என சொல்லிக்கொண்டான் அவன்.
கதிருக்கு அது கேட்டாலும் சிரித்தபடி சாப்பிட யமுனா பிடித்துக்கொண்டார் இளையவனை.
“அதென்ன வேற ஆபீஸ் போக? அப்ப நீ என்ன பன்ற ஆபீஸ்ல? இந்த ஆபீஸ்க்கு என்ன குறைச்சல்? இத்தனை நாள் இங்க தான பார்த்துட்டு இருந்த? இனியும் இங்கயே இரு. அப்பத்தான் உன்னை கவனிக்க முடியும்…” என்றார் படபடவென்று அடுக்கியவராக.
“ம்மா, இப்ப நான் என்ன சொல்லிட்டேன்?…” என திணறி போனான் தர்ஷன்.
“அதான் சொன்னியே வேற வேலை பார்க்கனும்னு. இம்புட்டு நாள் மூத்தவன் மேல கவனமா இருந்ததுல உன்னை சூதானமா பாக்காம விட்டுட்டேன். இனி புடிச்சுக்கறேன்…” என்று கண்ணை உருட்ட,
“நீ அவங்க பிள்ளை தானே? அதான் உன்னை பிடிக்காங்கலாம்…” என சொல்லி கதிர் எழுந்துகொண்டவன் கிளம்பிவிட்டான்.
“டேய் அண்ணா இத்தனை நாள் இல்லாம இன்னைக்கு உன் பேச்சு ஓவரா போய்ட்டு இருக்கு…” என்று கதிரை தர்ஷன் பேச யமுனா அவனின் முதுகில் ஒன்று வைத்தார்.
“அம்மே…” என கத்தியவனிடம்,
“ஒழுங்கா சாப்பிட்டு கிளம்பு. இதுவரைக்கும் அது யாரோ ஆபீஸ். இனி அது உன் அண்ணியோட ஆபீஸ்…”
“சுத்தம். ம்மா, அது எங்க ஆபீஸ்ம்மா…”
“ஆமா, அண்ணியும் கொழுந்தனும் ஒரே ஆபீஸ். அப்ப நம்ம ஆபீஸ் தான்….”
“எதே நம்ம ஆபீசா?…” என்றவன் அதற்கு மேலும் அங்கே இருந்தால் அவ்வளவு தான் என்று கிளம்பிவிட்டான்.
“சர்க்கர பொங்கல டப்பால அடைச்சு தரேன். மருமகளுக்கு கொண்டு போய் குடுக்கலாம்ல. இரு வரேன்…” என உள்ளே சென்றவர் வெளியே வரும் முன்னே பைக்கை எடுத்துக்கொண்டு பரந்திருந்தான் தர்ஷன்.
வெளியே வந்து பார்த்த யமுனா மகன் போய்விட்டதை கண்டு ‘வரட்டும் வச்சுக்கறேன்’ என்ற முணுமுணுப்புடன் உள்ளே சென்றுவிட்டார்.
அலுவலகத்தில் தர்ஷன் தன்னிருக்கையில் அமர்ந்திருக்க இடைவேளை நேரத்தில் தாமரை அழைத்ததற்கிணங்க தர்ஷன் சென்றான்.
அவனிடம் கதிரை எந்த நேரம் தனியே சந்திக்கலாம் என கேட்டுவிட்டு நேரத்தையும் அறிந்துகொண்டு அவனின் ட்ராவல்ஸிற்கு சென்றாள் தாமரை.
தர்ஷனிடம் தன்னை பற்றி விசாரித்ததை அறிந்துகொண்ட கதிரும் அவள் வரும் நேரம் எதிர்பார்த்து தான் இருந்தான் பேசுவதற்காக, கேட்பதற்காக.