கதிரின் இடம் வந்ததும் வாசலில் தனது வண்டியை பார்க் செய்தவள் அன்றைய நாள் போல இன்றும் முன்னால் அமர்ந்திருப்பானோ என கண்ணாடி கதவை தள்ளிக்கொண்டு செல்ல அங்கே அமர்ந்திருந்தது தீபக்.
“வாங்க மேடம்…” என வழக்கமாக கஸ்டமரை வரவேற்கும் விதமாகவே அவன் அழைக்க தலையசைப்புடன் பார்த்தவள்,
“மிஸ்டர் செங்கதிரவன் இல்லையா?…” என்றாள்.
எடுத்த எடுப்பிலேயே கதிரை பற்றி அவள் கேட்டதும் தீபக்கிற்கு ஆச்சர்யமாக இருக்க ‘மனுஷனுக்கு கேர்ள் ப்ரென்ட் எல்லாம் இருக்கா? வாய்ப்பில்லையே?’ என்று சிலை போலவே சிந்தனையில் நின்றான்.
“ஹலோ, உங்ககிட்டதான். கதிரவன் இருக்காரான்னு கேட்டேன். என்ன பகல்லயே கனவா?…” என தாமரை மீண்டும் கேட்கவும் தீபக் சுதாரித்தான்.
“அவங்களை உள்ள அனுப்பிவிடு தீபக்…” என சொல்லி கதிர் போனை வைத்துவிட, ‘எனக்கு தெரியாம என்னமோ நடக்குதே?’ என தாமரையை பார்த்தவன்,
“உள்ளே போங்க மேடம். அண்ணா உள்ள இருக்காங்க…” என்றதும் தீபக்கிற்கு தலையசைத்துவிட்டு உள்ளே சென்றாள் தாமரை.
“ஹாய்…” என சொல்லிக்கொண்டே தன்னறைக்குள் நுழைந்தவளை புன்னகையுடன் பார்த்தவன்,
“ஹாய், வாங்க…” என வரவேற்றான்.
“உட்காருங்க…” என எதிர் இருக்கையை காண்பித்தவன்,
“உங்க ட்ரிப் சம்பந்தமா ஏதாவது பேசனும்னா போன்லயே பேசியிருக்கலாமே? ஏன் இவ்வளோ தூரம் வரனும்?…” என மெல்லிய சிரிப்புடனே கேட்க நல்ல மனநிலையில் வந்திருந்த தாமரைக்கு கடுப்பாகிவிட்டது உடனே.
வேண்டுமென்றே கதிர் பேசுவது புரிந்தாலும் சற்று தன்னை கட்டுப்படுத்தியபடி அவனை பார்த்தாள்.
“என்னை கலாய்க்கறீங்கன்னு தெளிவாவே தெரியுது. ஆனா இப்போ பதிலுக்கு கவுன்ட்டர் குடுக்கற மைண்ட்ல நான் இல்லை…” என தாமரை சொல்லவும் கதிர் தலையசைத்தான்.
“ஏதாவது பிரச்சனையா?…” என்றவனுக்கு பதில் கூறாமல் தலையசைத்து ஆமோதித்தாள்.
ஒருவேளை வீட்டில் ஓகே சொல்லிவிட்டு இங்கே வந்து தன்னை வேண்டாம் என்று சொல்லத்தான் வந்திருக்கிறாளோ என பார்த்தான்.
ஆனால் எதையும் தானாக கேட்கவில்லை. இப்படி பேசவே யோசிக்கவேண்டி இருக்கிறதே என கதிர்க்கு அழுத்தமாக இருந்தது.
என்றைக்கும் மனதில் பட்டதை சரியோ தவறோ தயங்காமல் சொல்லும் குணம் அவனுடையது.
இப்படி ஒவ்வொன்றிருக்கும் யோசித்து யோசித்து பேசுவதும், அவள் என்ன நினைப்பாள் என்று மருகுவதும் ஒருவித அவஸ்தையை தந்தது.
தன்னுடைய இயல்பை தொலைப்பதை போல அவன் உணர அதுவே தான் அவளுக்கும் என்று உணராமல் போனான்.
“தாமரை…” என்றவனின் அழைப்பில் தான் இன்னும் தான் பேசமால் இருப்பதே புரிந்தது.
முதல் நாளே பேசாமல் நேரம் கடத்தியதற்கு தானே என்னென்னவோ பேசியவன் இன்றும் இப்படி அமர்ந்திருப்பதற்கு என்ன பேசுவானோ என ஒருநொடி கண்ணை சுருக்கி பார்த்தவள்,
“இல்லை ஏதோ ஆபீஸ் ஞாபகம்…” என்று சமாளித்தாள்.
“ஓகே…” என்றவன் ஒன்றும் பேசாமல் இருந்தான் அவளே ஆரம்பிக்கட்டும் என்று.
இருவருக்கும் குடிக்க ஜில்லென்று ஏதாவது வாங்கி வரும்படி தீபக்கிடம் சொல்ல அவன் அருகிருக்கும் ஜூஸ் கடை பையனிடம் அழைத்து மூன்று ப்ரெஷ் ஜூஸ் சொல்லி உள்ளே அனுப்பினான்.
“கொஞ்சம் நேரம் இருங்க. யோசிங்க. பேசுங்க…” என்ற கதிர் ஜூஸ் வரவும் அவளுக்கு குடிக்க தந்துவிட்டு தானும் எடுத்துக்கொண்டான்.
குடித்து முடிக்கவும் கொஞ்சம் புத்துணர்ச்சியாக இருக்க தாமரை இப்போது தெளிவாய் அவனை பார்த்தாள்.
“இந்த கல்யாணம் இதை சீக்கிரமே வைக்கனும்னு சொன்னதா காலையில கிளம்பும் போது அங்கை ஆன்ட்டி அம்மாக்கிட்ட பேசிட்டு இருந்தாங்க…”
“ஹ்ம்ம், அதனால?…”
“ஆனா இப்போ வேண்டாம். கொஞ்சம் நாள் ஆகட்டுமே…” என தாமாரை சொல்லவும் யோசனையுடன் அவளை பார்த்தவன்,
“கொஞ்ச நாள் மீன்ஸ்? ஒரு டூ த்ரீ டேய்ஸ்?…” என்றான் தனது வலதுகைய விரித்து கேள்வியாய் அவளிடம்.
“ரெண்டு மூணு நாளா?…” என தாமரையும் திகைக்க,
“பின்னே? நீங்க என்ன பேசறீங்கன்னு முதல்ல தெளிவா சொல்லுங்க. அதை விட்டு இப்படி முன்னும் இல்லாம, பின்னும் சொல்லாம வெறுமனே கொஞ்சம் நாள்ன்னு சொன்னா? எனக்கு அதுதான் கொஞ்சம் நாள்…” என்றவனை விழி பிதுங்க பார்த்தாள்.
“இல்லை, கொஞ்சநாள் அப்படின்னா இன்னும் ஒரு ஆறேழு மாசம்…”
“அது நாள் இல்லை. மாசம். கொஞ்ச மாசம். அரை வருஷம். அப்படின்னு சொல்லுங்க…” என சற்றே தூக்கலான கடுப்பில் சொல்லவும் தாமரையின் முகம் கன்றியது.
“ஓகே, என்னன்னு விவரமா சொல்லுங்க தாமரை. இப்படி பேசினா யாருக்கா இருந்தாலும் டென்ஷன் தான் ஆகும். இல்லை இப்போதைக்கு கல்யாணத்தை தள்ளி போட்டுட்டு மொத்தமா ஸ்டாப் பண்ணிடற ஐடியான்னா அதையும் இப்பவே சொல்லிருங்க…” என்றான்.
“நீங்க ஏன் இப்படியே பேசறீங்க? பிடிக்கலைன்னா நேரவே சொல்லிருப்பேன். சும்மா சுத்தி வளைச்சு சொல்லற அளவுக்கு நான் பயந்தாரி இல்லை…” என்றாள் வெடுவெடுப்புடன்.
“இங்க பாருங்க, இந்த தள்ளி போடற விஷயம்லாம் நீங்க உங்க வீட்டுல பேசனும். இதை என்கிட்டே சொல்லி நோ யூஸ். எங்கம்மா ஒத்துக்கமாட்டாங்க…” என்றான் கதிர்.
“எங்க வீட்லையா? அவங்களும் ஒத்துக்கமாட்டாங்க…” என்றவளின் முகம் மாற,
“அப்போ நான் மட்டும் பேசினா எங்க வீட்டுல சம்மதிப்பாங்களா? அவங்களும் என்னன்னு கேட்கமாட்டாங்களா? நீங்க வந்து இப்படி சொன்னீங்கன்னு சொல்லமுடியுமா?…”
கதிர் சொல்ல சொல்ல ஆஹா திரும்பவும் முதல்ல இருந்தா என்றிருந்தது தாமரைக்கு.
‘விட்டா எல்லாரையும் கூப்பிட்டு வச்சு நான் இதெல்லாம் பேசினேன்னு சொன்னாலும் சொல்லுவான்’ என அவனை சலிப்புடன் பார்த்தாள்.
இப்போது அவளின் பார்வை சற்று ஆராயும் விதமாய் அவனை வட்டமிட்டது. அதுவரை சாதாரணமாக பார்த்துக்கொண்டிருந்த கதிருக்கு அவளின் இந்த பார்வை கூச்சத்தை கொடுக்க,
‘இவ என்ன இப்படி பார்க்கிறா?’ என தோன்ற தொண்டையை செருமினான். அப்போதும் தாமரை அவனை ஆராய்ச்சியுடன் தான் பார்த்தாள்.
தன்னை பார்க்க வந்தபொழுதும் சரி, தனியே பேசும் பொழுதும் சரி, இப்போது இங்கே வந்து இத்தனை நேரம் பேசியபோதும் சரி. கொஞ்சமும் ஆசைகொண்ட பார்வை இல்லையே அவனிடத்தில்.
ஒரு ரசனை, ஆர்வம், ஆசை எதுவும் இன்றி வெகு சாதாரண பார்வை. யாரோ தூரத்தில் தெரிந்தவர்களை பார்க்கும் மிக மிக ஒழுக்கமான பார்வை. சப்பென்று இருந்தது தாமரைக்கு.
‘என்னை பிடிச்சு தான் ஓகே பண்ணினானா? இல்லை வீட்டுல சொன்னதால சரின்னானா?’ என்றளவிற்கு யோசனை சென்றது.
‘தனக்கு மட்டும் என்ன ஆசை இருக்கிறது இவனிடத்தில்?’ என்று யோசிக்கவில்லை அவள். ஆகமொத்தம் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று தெரியாமல் போனது.
“எவ்வளவு நேரம் இப்படியே பார்ப்பீங்க தாமரை?…” என்றான் கதிர்.
“இல்லை, சும்மா தான். ஏதோ யோசனை…” என சொல்லியவள்,
“உங்களுக்கு தெளிவாவே சொல்றேன். என் தங்கச்சி மெடிக்கல் படிக்கிற. அடுத்த வருஷம் தேர்ட் இயர்…”
“குட்…”
அதற்கு மேல் பேச அத்தனை சங்கடமாக இருந்தது தாமரைக்கு. தன்னுடைய குடும்பத்தின் பொருளாதார நிலவரங்களை பற்றி இவனிடத்தில் எப்படி சொல்வது என தயங்கினாள்.
இந்த திருமணம் உறுதியாக உறுதியாகிவிட்ட நிலையில் அவனிடத்தில் பேசித்தான் ஆகவேண்டும்.
“தாமரை எதுவா இருந்தாலும் சொல்லுங்க…” என்றான் அவளின் முகத்தில் படிந்திருந்த தயக்கத்தை பார்த்து.
“நான் கல்யாணத்துக்கு அப்பறமும் என்னோட சேலரியை என் பேமிலிக்கு தான் குடுப்பேன்…” என்று சட்டென சொல்லிவிட்டு அவனின் முகத்தில் என்ன உணர்வு வருகிறது படிக்க காத்திருந்தாள்.
கேட்டவன் எப்போதும் போல சாதாரணமாகவே முகத்தை வைத்திருக்க, ‘என்னடா இவன் எல்லாத்துக்கும் ஒரே மாதிரியே மூஞ்சியை வச்சிருக்கான்?’ என்று எரிச்சலானது.
“இதை ஏன் என்கிட்டே கேட்கறீங்க? நீங்க படிச்சிருக்கீங்க. நீங்க வேலை பார்க்கறீங்க. அந்த பணத்தை என்ன செய்யனும்னு நீங்க தான முடிவு பண்ணனும்…” என்று சொல்லவும் தாமரை வியந்து பார்த்தாள் அவனை.
இதற்கு முன்பு வந்த சம்பந்தகளில் இதை பேசித்தான் வேண்டாம் என்று மறுத்து சென்றார்கள். கதிர் அப்படி சொல்லவும் அத்தனை ஆச்சர்யம்.
“இங்க என்னோட உழைப்புல நான் முன்னேறி இருக்கேன். கல்யாணம் பண்ணிட்டு வர பொண்ணு குடுக்கறதை வச்சு வாழனும்ன்ற எந்த கட்டாயமோ, சூழ்நிலையோ எனக்கு இல்லை. அதனால உங்க சம்பாத்தியம். அதை என்ன செய்யனும்னு முடிவெடுக்கற ரைட்ஸ் உங்களுக்கு இருக்குது…”
“கிரேட்…” என்றாள் சில்லாகிப்புடன்.
“அப்படியெல்லாம் இல்லை. எனக்குமே கடன் இருக்குது. அதுக்கு ஓடிட்டு தான் இருக்கேன். சீக்கிரம் இந்த கடனை அடைச்சா தான் ஒரு நிம்மதி வரும். அதுவும் முடிஞ்சிரும். கொஞ்சம் அகலக்கால் வச்சுட்டேன். இப்ப பேக்கடிக்க முடியாது. ஆனா சீக்கிரமே சரியாகிடும்…”
கதிர் சொல்வதை கேட்டவளுக்கு புரிந்ததை போலவும் இருந்தது, இல்லாததை போலவும் இருந்தது.
ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. தொழில் செய்கிறவர்களிடம் கடன் இல்லை என்றால் தான் ஆச்சர்யம்.
குடுக்கல் வாங்கல் இருக்கத்தானே செய்யும். இது கூட இல்லை என்றால் எப்படி? என யோசித்தாள்.
“திரும்பவும் என்ன யோசனை?…” என கதிர் கேட்க இப்போது அவனிடம் தயக்கமின்றியே பேசினாள்.
“ஹ்ம்ம், இல்லை. நான் இதான் பேச வந்தேன். அதோட அப்பாவுக்கும் உதவியா இருக்கும். எல்லாம் தங்கச்சி படிப்பு முடியற வரைக்கும் தான்…”
“நான் எதுவுமே கேட்கலையே?…”
“அப்படியே இதுவும்…”
“எது?…”
“கல்யாணம்…”
“அதை பத்தி வீட்டுல பேசுவாங்க. நீங்க உங்க வீட்டுல பேசுங்க. என்னால என்ன செய்யமுடியுமோ அதான் நான் பேசினேன்…” என்று முடித்துக்கொள்ள தாமரையின் முகம் வாடிவிட்டது.
திருமணம் அதன் செலவுகள் என எக்கச்சக்கமாய் இழுக்கும். நகையை பொறுத்தவரை பிரச்சனை இல்லை என்றாலும் கையில் ரொக்கமாய் செலவுகள் இருக்கிறதே?
ஏற்கனவே லோன் வேறு எடுத்தாகிற்று. இப்போது கல்யாணத்திற்கு என்றால் நிச்சயம் வட்டிக்கு தான் வெளியில் வாங்க வேண்டும்.
நினைக்கும் போதே மாதாமாதம் வரும் வட்டித்தொகையின் அளவு மலைப்பாக தொண்டையை கவ்வியது.
சோமநாதனுக்கு இன்னுமே சிரமம். தங்கையின் படிப்பிற்கான அடுத்தவருட கட்டணம். கொஞ்சம் தொகையை எடுத்து வீட்டுக்கடனை அடைப்பது என்று திட்டமிட்டு இருக்க இப்படி தலைக்குமேல் திருமணம்.
சோர்ந்து போனாள். கொஞ்சம் நாள் குடுத்தால் நிச்சயம் அதற்கு வழி கிடைக்கும். இப்படி எதற்கும் இடமளிக்காமல் இருக்கிறானே என கதிரை பார்த்தாள்.
“வேற ஏதாவது பேசனுமா?…” என்றவனிடம்,
“நோ தேங்க்ஸ்…” என சொல்லி கிளம்பிவிட்டாள் தாமரை.
அவள் செல்வதையே பார்த்திருந்தவனுக்கு தாயின் பேச்சுக்களுடன் கூடிய அழுகையும் நினைவில் வந்தது.
“இவனுக்கு ஒரு கல்யானத்தை பண்ணட்டா நிம்மதியா இருப்பேன். இன்னும் ரெண்டுமாசத்துல முடிக்கனுமாமே. இல்லன்னா கல்யாணமே ஆகாதுன்னு வேற சொல்லிட்டாரு நம்ம ஜோசியரு. அவரு சொன்னா அப்படியே நடக்குமே…” என ஒருநாள் இரவு புலம்பி புலம்பி தவித்ததை கண்கூடாக கண்டிருந்தானே?
அவனுக்கு அவளின் பொருளாதார நிலை ஓரளவு புரியத்தான் செய்தது. ஆனாலும் இதில் தான் என்ன செய்யமுடியும் என யோசித்தவனுக்கு ஏதாவது செய்யலாமே என தோன்றியது.
அன்றிரவு வீட்டிற்கு கதிர் வரும் முன்னமே தர்ஷனின் மூலம் கதிரும், தாமரையும் சந்தித்துக்கொண்டதாக தர்ஷனின் மூலம் தகவல் வந்துவிட்டிருந்தது யமுனாவிற்கு.
“தனியா பேசற அளவுக்கு உன் அண்ணன் முன்னேறிட்டானாடா? என்னால நம்பவே முடியலையே?…” என ஓயாமல் கேட்டு கேட்டு தர்ஷனின் காதில் ரத்தம் தான் வந்தது.
“ம்மா, ஒரே பதிலை எத்தனைவாட்டி சொல்ல? படுத்தறீங்க நீங்க…” என அவசரமாக சாப்பிட்டு முடித்து படுக்க சென்றுவிட்டான் அவரிடமிருந்து தப்பித்தால் போதும் என்று.
அதையுமே சொல்லியிருக்கமாட்டான். ஆனால் ஏன் காலையில் தான் வரும் முன்னமே கிளம்பினாய் என்று காதை பிடித்து திருகாத குறையாய் அவனை வாட்டி எடுத்துவிட்டார் யமுனா.
“ம்மா, அதை விடுங்க. உங்களுக்கு சூப்பரா ஒரு குட்நியூஸ் சொல்றேன்…” என்று பேச்சை மாற்ற இருவரும் சந்திக்கவிருந்ததையும் தாமரை சென்று கதிரை பார்த்துவிட்டு வந்ததையும் சொல்ல அப்படியே மகிழ்ந்து போனார்.
“நிசமாவா? தர்சா நிசமாவாடா?…” என நிமிடத்திற்கு ஒருமுறை கேட்டு கேட்டு அவர் சிரிக்க,
“ம்மா, உங்களுக்கு என்னவோ ஆகிடுச்சு…” என கிண்டல் பேசியவனுக்கு அப்போது புரியவில்லை.
யமுனா சந்தோஷத்தில் இப்படி ஓயாமல் பேச பேச தான் ‘எப்படி போய் சிக்கிருக்கேன் நானு?’ என்று விளங்கியது தர்ஷனுக்கு.
“தெரியாம சொல்லிட்டேன். ஆளை விடுங்க. அம்புட்டும் என் கனவு…” என பதறிக்கொண்டு ஓடினான் இளையவன்.
“விடியட்டும், வா பேசிக்கறேன்….” என்ற யமுனா பூங்காவனத்தை பிடித்துக்கொண்டவர் பின் சரளாவுக்கு அழைத்து பேச அடுத்த வாரத்தில் ஒருநாள் மாப்பிள்ளை வீடு பார்க்க வருவதாக சொல்லியிருந்தார் அவர்.
அன்றைக்கு என்ன செய்யவேண்டும் என்று யோசித்து திட்டமிட துவங்க கதிர் வந்துவிட்டான்.
வந்தவனின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தவருக்கு அவனாக ஏதாவது சொல்வானா என்று எதிர்பார்ப்பு உண்டானது.
அவனுக்கு தெரியாதே தம்பி இப்படி வீட்டில் சொல்லியிருப்பான் என்று. கதிரும் சொல்லவில்லை.
சாப்பிட்டு முடித்தவன் யமுனா தன் முகம் பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்து இப்போதே பேசிவிடுவோம் என்று ஆரம்பித்தான்.
“ம்மா அவங்க வீட்டுல இருந்து எதாச்சும் பேசினாங்களா?…” என கேட்க,
“ஆமா கதிர், அடுத்த வாரம் மாப்பிள்ளை வீடு பார்க்க வராங்களாம்…” என்றார் பூரிப்புடன்.
“ஓஹ், சரி…”
“என்னப்பா ஏதாவது சொல்லனுமா?…” என மகனின் யோசனை சுமப்ந்த முகத்தை கண்டு கேட்க,
“ஹ்ம்ம் ம்மா, கல்யாணம் உடனே வைக்கிற மாதிரியா இருக்கு?..” என்றதும் யமுனாவிற்கு திக்கென்று ஆனது.
“கொஞ்சம் பொறுமையா பார்த்து பண்ணலாமே? ஏன் அவசரமா உடனே? சீக்கிரம் முடிக்கணும்னு ஏன் நினைக்கறீங்க? பொறுமையா பண்ணலாம்…” என்றான் கதிர்.
‘போச்சா, இந்தா போட்டுட்டானே குண்டை’ என நெஞ்சை பிடித்துக்கொண்டார் யமுனா.
“ஏன் என்னாச்சு திடீர்ன்னு இப்படி சொல்ற? கதிரு?…” என மகனை கலவரத்துடன் பார்த்தார் அவர்.
கதிருக்கு தாமரை வந்து சென்ற விஷயமோ, பேசி சென்றதையோ சொல்ல விருப்பமில்லை. அது அவளை குறைத்து பேசுவதை போல இருக்குமோ என்று நினைத்தவன் பேச்சை அப்படியே மாற்றி சொன்னான்.
“இல்லை, கல்யாணம்ன்னா ஏகப்பட்ட செலவு இருக்கும். இப்போ ட்ராவல்ஸ் மேல கடன் வேற இருக்குது. அதை எல்லாம் கொஞ்சம் பார்த்துட்டு பண்ணுவோமே…” என்றவனை நம்பமுடியாமல் பார்த்தார் யமுனா.
கடன் இருக்கிறது என்று தெரியும். ஆனால் என்றுமே அதைகொண்டு அவன் வீட்டை யோசித்ததில்லை. நேர்த்தியாக அதை கையாண்டுகொண்டிருப்பவன் கடனை சொல்லி திருமணத்தை தள்ளிவைப்பதென்றால்?
யமுனாவிற்கு சரியாகப்படவில்லை. ஒருவேளை பெண்ணை பிடிக்கவில்லையோ? அதனால் இப்படி சொல்கிறானா? என்றும் யோசித்தார்.
அப்படி பிடிக்கவில்லை என்றால் இந்த மாதிரி பேசுபவனும் அல்லவே? நேரடியாக சொல்லிவிடுபவன். இப்போதுமட்டும் என்ன? என தோன்றியது.
“ம்மா, நான் சொல்றது புரியுதா?…”
“தள்ளி போடறதுன்னா? எவ்வளோ நாள்?…” என கேட்கும் பொழுதே தாமரையின் முகம் தான் தோன்றியது.
“கொஞ்சநாள். ஒரு மூணு நாலு மாசம்…”
“இது கொஞ்ச நாளா?…” யமுனா கேட்கவும்,
“உங்களுக்காக வேணும்னா நிச்சயதார்த்தம் மாதிரி எதாச்சும் செஞ்சுக்கலாம். சரிதானே?…” என்றவனை என்ன பேசுவதென்று தெரியாமல் நின்றவருக்கு கோபம் பொங்கியது.
“நான் போய் தூங்கறேன். நீங்க யோசிங்க…” என சொல்லியவன் சென்றதும் யமுனாவிற்கு மண்டை காய்ந்தது.
மறுநாள் அங்கையிடம் இதை பற்றி சொல்ல கிட்டத்தட்ட இதே விசயத்தை சரளாவும் சொன்னதாக யமுனாவிடம் சொல்ல சரளாவை நேரடியாக தொடர்புகொண்டார் யமுனா.