ஆசைகள் – 8
யமுனா சரளாவிடம் பேசிவிட்டு கொஞ்சமும் தாமதிக்கவில்லை. உடனே அவரையும், அழைத்துக்கொண்டு கோவிலுக்கு வரும்படி அங்கையிடம் சொல்லியவர் தானும் உடனே கிளம்பினார்.
“யமுனா என்ன திடீர்னு வெளில கிளம்பிட்ட?…” என்று கேட்க,
“சம்பந்திய பார்க்க போறேன். கூட வரீங்களா?…” என்றார் யமுனா.
கேட்கும் கேள்வியே மிரட்டலாக இருக்க அதன்பின்னும் வர பூங்காவனத்திற்கு மனது வரவில்லை.
“ஒன்னும் வேணாம், நீயே போய் பார்த்துட்டு வா…” என்றவர்,
“ஆமா இப்ப எதுக்கு?…”
“பொம்பளைங்க எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். மனுஷனுக்கு கேள்வி வருது பாரு…” என்றவர் வாசல் வரை சென்றுவிட்டு,
“இல்ல எதுக்கும் கூட வாங்க. நான் போய் புடவை மாத்திட்டு வரேன். இப்படியேவா போக முடியும். கார் புக் பண்ணுங்க…” என்று சொல்லி உள்ளே சென்றுவிட்டார் யமுனா.
“பண்ணிட்டீங்களா?…” என கேட்டுக்கொண்டு வரும் பொழுதே புது புடவையும் தலை நிறைய பூவும் என வந்தவரை பார்த்த பூங்காவனம்,
“பேச்செல்லாம் சண்டைக்கு கிளம்பற மாதிரியே இருக்குது. ஆனா பார்க்கறப்ப சாந்தசொரூபினி தான் என் பொண்டாட்டி…” என்றதும் லேசாய் சிரித்த யமுனா,
“கார் என்னாச்சு?…” என்றார் வேகமாய்.
“மெதுவாத்தான் கேளேன். உன் பேச்சை நான் வேணா தலையால நின்னு கேட்பேன். ட்ராவல்ஸ் வச்சிருக்கறவன் கேட்கனுமே?…” என்றதுமே யமுனா பதரிபோனார்.
“உங்களுக்கு எதாச்சும் இது இருக்கா? அவனுக்கு தெரியாம போகலாம்ன்னு பார்த்தா, கூடவே கூட்டிட்டு போற மாதிரி செய்யறீங்களே? உங்கட்ட போய் சொன்னேன் பாருங்க. ஒளிய தெரியாதவன் தலையாரி வீட்டுக்குள்ள ஒளிஞ்சானாம்ன்ற மாதிரில இருக்கு…” என திட்டி தீர்க்க,
“இந்தா இரு இரு. இப்ப என்ன ஆகிடுச்சுன்னு நீ டென்ஷன் ஆகற? ட்ராவல்ஸ்காரன்னா இந்த ஊர்லையே உன் மவன் மட்டும் தானா?…” என்றதும் தான் சற்று ஆசுவாசமானார் யமுனா.
“கால்டாக்சிக்காரன் கேட்கனுமேன்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ளே என்னா குதி?…” என்றதுமே யமுனா முகத்தை துடைத்துவிட்டு சிரிக்க,
“அய்ய, வா வா…” என்றவர் வெளியே கார் வந்து நிற்கும் சத்தத்தில் வெளியே சென்றார்.
வேகமாய் கதவை பூட்டிவிட்டு கிளம்பி போகும் கிளம்பியதை சரளாவுக்கும், அங்கைக்கும் தெரிவிக்க பூங்காவனம் வருவதை கேள்விப்பட்டு சோமநாதனும் கிளம்பிவிட்டார்.
கோவிலுக்கு செல்ல அங்கே ஏற்கனவே தயாராக இருந்தார்கள் தாமரை குடும்பத்தினர்.
“வாங்க வாங்க சம்பந்தி…” என்று சோமநாதன் அழைக்க சரளா யமுனாவை பார்த்ததுமே கண் கலங்கி போனார்.
“இப்ப என்னத்துக்கு கண்ண கசக்கறீங்க மதினி? வாங்க முதல்ல சாமியை கும்பிட்டு வருவோம். பொறுமையா வந்து பேசிக்குவோம். வாங்க…” என கையை பிடித்துக்கொண்டு உள்ளே அழைத்து செல்ல யமுனாவை பார்த்ததுமே அங்கைக்கு கவலை தீர்ந்தது.
“இனிமே எல்லாம் அக்கா பார்த்துக்குவாங்க…” என சோமநாதனிடம் அங்கை சொல்ல,
“இவ என்னத்தை பார்த்துக்குவா? என்ன நடக்குது இங்க?’ என நினைத்தவர் எதற்கு இந்த திடீர் கூட்டம் என புரியாமல் விழித்தார்.
பூங்காவனத்தை தவிர மற்றவர்களுக்கு விஷயம் தெரிந்திருக்க தனக்கு தெரியவில்லை என்று காட்டிக்கொள்ளமுடியாமல் தெரிந்ததை போலவே நடந்துகொண்டார்.
“அதான் அங்கை சொன்னா தானே சம்பந்தி. வாங்க யமுனா பார்த்துக்குவா…” என சொல்லி சோமநாதனுடன் நடந்தார்.
‘இருந்தாலும் இவ வர வழிலையாச்சும் என்கிட்டே சொல்லிருக்கலாம். என்னன்னு தெரியலையே?’ என நினைத்தபடி பிரகாரத்தினுள் நுழைந்தார்.
சாமி கும்பிட்டு சுற்றி வந்துவிட்டு ஓரிடத்தில் வந்து அமர்ந்தனர். சற்று தள்ளி சோமநாதனும், பூங்காவனமும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.
“இன்னைக்கு நீங்க வருவீங்கன்னு நான் நினைக்கலை சம்பந்தி…” என பூங்காவனம் சொல்ல,
“இப்படி ஒரு விஷயத்தை கேட்டுட்டு எங்க ஆபீஸ் போக சம்பந்தி? அதான் இன்னைக்கு லீவ் போட்டுட்டேன். பார்த்தா தங்கச்சி பேசனும்னு கோவிலுக்கு வர சொல்லிட்டாங்க…” என்றதும் பூங்காவனம் பொதுவாக தலையை அசைத்து வைத்தார்.
அவர் என்னவென்று பேசுவது? விஷயம் தெரியாமல் தானாக பேசி மாட்டிக்கொண்டால்? அதற்கென்றே வாயை திறக்காமல் தலையை மட்டும் ஆட்டினார்.
“சரி விடுங்க. கவலைப்படாதீங்க…” என்று மட்டும் அவரை தேற்றுவதை போல பூங்காவனம் சொல்ல,
“எப்படிங்க கவலைப்படாம இருக்கமுடியும்? பெண்ணை போட்துட்டேனே? இப்போ போய் இவ இப்படி சொல்லுவான்னு நான் நினைக்கலையே…”
சோமநாதன் இன்னும் தலையுமில்லாமல் வாலுமில்லாமல் பேச பூங்காவனத்திற்கு அருகில் உள்ள தூணில் அவரை முட்ட வைத்து ‘என்னன்னு சொல்லுய்யா?’ என கேட்கவேண்டும் போல வெறிவெறியாக வந்தது.
“சரி சரி…” என்று சொல்லிவிட்டு மௌனமாகிவிட்டார்.
“நீங்க வந்துட்டு போன அன்னைக்கு தான் சந்தோஷமா இருந்தேன். அதுக்குள்ளே இப்படி சொல்லிட்டாளே?…” என்று மீண்டும் சோமநாதன் புலம்ப,
“நீங்க இருங்க. எல்லாருக்கும் குடிக்க ஏதாவது வாங்கிட்டு வரேன். வெயில் அதிகமா இருக்குது…” என சொல்லி வெளியேறிவிட்டார் பூங்காவனம்.
மேலும் அங்கே இருந்தால் தானே என்ன ஆச்சு என கேட்டுவிடுவோமோ என்று மண்டை காய்ந்ததில் கிளம்பிவிட்டார்.
“வீட்டுக்கு வரட்டும் இவ. பேசிக்கறேன்…” என மனைவியையும் திட்டியபடி கோவிலுக்கு வெளியே வந்து அமர்ந்துகொண்டவர் பத்து நிமிடத்திற்கு பிறகு தண்ணீர் பாட்டிலுடன் உள்ளே சென்றார்.
அதற்குள் என்னவோ முடிவெடுத்திருப்பதை போல அனைவரின் முகமும் தெளிவாய் இருக்க பூங்காவனம் ஒன்றும் கேட்கவில்லை.
மற்ற நேரமாக இருந்திருந்தால் யமுனா சரியாய் கவனித்திருப்பார். அன்றென்னவோ சுத்தமாய் கணவனை கவனிக்கும் நினைப்பு இல்லவே இல்லை.
மனம் முழுவதுமே நடக்கவிருக்கும் திருமணமும், மகனும், மருமகளுமே ஆட்கொண்டு இருந்தார்கள்.
“வாங்க மாமா, உட்காருங்க. இப்பத்தான் ஒரு நல்ல முடிவுக்கு வந்திருக்கோம்…” என அங்கை சொல்லவும் தலையை மட்டும் அசைத்தார் பூங்காவனம்.
“நான் சொல்லுற மாதிரி பேசுங்க. இல்லன்னா நானே பேசறேன் மருமகட்ட. சரிதான? இதுக்கு போய் கவலைப்பட்டுட்டு உடம்பு என்னத்துக்காவும்? போயி சந்தோஷமா கல்யாண வேலையை ஆரம்பிக்கறத விட்டு….” என யமுனா சரளாவிடம் தைரியம் சொல்லிக்கொண்டிருந்தார்.
“நல்லா சொல்லும்மா. இவ எதுக்கெடுத்தாலும் கண்ணை கசக்கறா…” என சோமநாதனும் கிண்டல் போல சொல்ல,
“அதான் பேசிட்டோமே? இப்ப தெளிவா இருக்கீங்க தானே? குடும்பம்னா எல்லாம் தான் இருக்கும். சும்மா தொட்டதுக்கெல்லாம் மூலையில உக்காந்தா ஆச்சா? நாம வளத்ததுங்க நம்ம பேச்சை கேட்கட்டும். அதுங்க போக்குக்கு விட்டா ஆட்டி வைக்குதுங்க…” என்றவர்,
“அண்ணே, ரெண்டுபேரும் சேர்ந்து தான் திட்டம் போட்டிருக்காங்க. தள்ளி போடனும்னு. பார்த்துக்குவோம்…” என்று யமுனா சொல்ல பூங்காவனத்திற்கு அப்படியே யமுனாவின் உருவம் பெரிய கொள்ளைக்கூட்ட தலைவியை போல தோன்றியது.
‘பரவாயில்லை, என்னம்மா திட்டம் போடறா என் பொண்டாட்டி. கெத்து’ என நினைத்துக்கொண்டே அவர் நிற்க,
“என்னங்க, நான் சொல்றது சரிதானே?…” என்ற யமுனாவை அப்படியே குனியவைத்து முதுகில் நாலு போட்டால் என்ன என்று உல்டாவாக தோன்றியது.
என்னவென்றே தெரியாமல் எதை சரி என சொல்வது? என யோசனையுடன் தலையை ஆட்டி,
“நீ சொன்னா எல்லாம் சரிதான். என்கிட்டே என்னத்த கேட்டுட்டு?…” என்றவரின் குரலில் வித்தியாசத்தை கண்டுகொண்டார் யமுனா.
அப்போதுதான் யமுனாவிற்கே நியாபகம் வந்தது அவரிடத்தில் இன்னும் எதுவும் சொல்லியிருக்கவில்லை என்று.
அங்கே வைத்து இதை பேசினால் இன்னும் தர்மசங்கடம் ஆகிவிடுமே என்று கணவனை கெஞ்சல் பார்வை பார்க்க அதை கண்டுகொள்ளாத பூங்காவனம் சோமநாதனிடம் பேச ஆரம்பித்தார்.
“தங்கச்சி சொல்லவும் தான் எங்களுக்கு கொஞ்சம் நிம்மதியா தைரியமா இருக்குது. இன்னும் எங்க சொந்தங்கட்ட கூட கலந்துக்கலை. தெரிஞ்சா ஆளாளுக்கு யோசனை சொல்றேன்னு குழப்பி விடுவாங்க. போதாததுக்கு நம்மக்கிட்ட பாவமா பேசிட்டு வெளில போய் இவனுக்கு இது தேவை தானும் இளக்காரம் பேசுவாங்க…”
“எல்லாம் தெரிஞ்சது தானே சம்பந்தி? சொந்தங்கன்னா அப்படித்தான். நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். எல்லாம் நாம எப்படி கையாளறோமோ அதுல தான் இருக்குது. யார் எப்படியும் இருந்துட்டு போகட்டும், நாம நாமளா இருப்போம்….” என்றார் பெருந்தன்மையுடன் பூங்காவனம்.
‘ச்சே, என்னமா பேசறார் இந்த மனுஷன்?’ என யமுனா பார்க்க பூங்காவனம் திரும்பவே இல்லை. கோபம் தான் அவருக்கும்.
இப்படி ஒன்றும் தெரியாமல் நிற்க வைத்துவிட்டாளே மனைவி என்று உள்ளுக்குள் ஆதங்கம் பெருகியது.
“சரி கிளம்புவோமா? நேரமாகிடுச்சு. போய் வேலையை பார்ப்போம்…” என்ற அங்கை,
“நாளைக்கு புதன் கிழமை மாப்பிள்ளை வீடு பார்க்க வந்திடறோம் அக்கா…” என்றார் யமுனாவிடம்.
“இப்பத்தான முடிவு பண்ணினோம் அங்கை. நல்லா ஞாபகம் இருக்குது. இதுக்கு மேல காலத்தை கடத்தாம சுளுவா வேலையை பார்ப்போம்…” என்ற யமுனா,
“அண்ணே, தயங்காம எதுவானாலும் சொல்லுங்க. கூட பொறந்த பொறப்பா நினைச்சுக்கங்க. அவ்வளவு தானே?…” என்று சொல்ல,
“இல்ல புதன்கிழமை எங்களை ட்ரிப்புக்கு அனுப்ப பொண்ணு ஏற்பாடு பண்ணிருக்கா. நம்ம மாப்பிள்ளை கடையில தான்…” என ஞாபகமாக சரளா சொல்ல,
“அதுக்கென்ன பேஷா கிளம்புங்க. நம்ம வீட்டுல இருந்தே கிளம்புங்க. நைட்டுக்கு தான பஸ்?…” என யமுனா சொல்ல,
“ஆமா. நைட்டுக்கு தான். ஆனா போகனுமான்னு யோசனையா இருக்கு…” என சங்கடத்துடன் சரளா சொல்லவும் யமுனாவிற்கு சிரிப்பு வந்தது.
“அதெல்லாம் சரிப்பட்டு வராது சரளா. இப்ப இருக்கற நிலமையில நாம போக முடியாது. சம்பந்தி தங்கச்சி சொல்ற மாதிரி எப்படியும் அடுத்த ரெண்டு மூணு முகூர்த்தத்துல கல்யாணம்ன்ற மாதிரி தான் இருக்கும். நாம போய்ட்டு இருக்க முடியாது…” என கறாராக சோமநாதன் சொல்லவும் சரளா முகம் வாடிவிட்டது.
“அட இப்ப என்ன நீங்க போற அந்த மூணு நாளையிலையா கல்யாண ஏற்பாடு முழுசா பண்ணிட போறோம். நீங்க போய்ட்டு வாங்க. பொண்ணுங்க ஏற்பாடு….” என்ற யமுனா,
“பேசாம அவங்களையும் கூட்டிட்டே போகலாமே? நான் கதிருட்ட சொல்றேன். இன்னும் ரெண்டு சீட்டை புடிச்சு போட சொல்லி…” எனவும் சரளாவுக்கும் சந்தோஷம்.
ஆனால் சோமநாதன் முகம் தெளிவில்லாமல் யோசனையுடனே இருந்தது. அதிலேயே சம்மதமில்லாததை தெரிய,
“என்னண்ணே?…” என்றார்.
“இல்லை. பொண்ணு லீவ் இல்லைன்னு சொல்லி கண்டிப்பா வரமாட்டாங்க. அதான் யோசிக்கறேன். இப்ப கல்யாணத்தையும் வச்சுட்டு வயசு பொண்ணுங்களை தனியா விட்டுட்டு போக சங்கடமா இருக்கு…” என்றார் சோமநாதன்.
“அட இதுல என்ன இருக்கு? அதான் அங்கை இருக்காளே? பார்த்துக்க மாட்டாளா?…” என்ற யமுனா,
“என்ன அங்கை?…” என கேட்டதும்.
“அதுக்கென்ன? நான் கூட இருக்கேன்ல?…” என்று சம்மதம் தெரிவித்தார்.
“நீங்க எதையும் நினைக்காம போய்ட்டு வாங்க. முடிஞ்சா பொண்ணுங்க லீவ் போட முடியுமான்னு பாருங்க. சரின்னா உடனே கதிருட்ட சொல்லி சீட்டை புடிச்சுடலாம்…” என்று யமுனா சொல்லவும் தலையசைத்தார்கள்.
“சரிண்ணே கிளம்புவோம்…” என்று யமுனா எழுந்துகொள்ள அதுவரையிலும் அனைத்தையும் பார்வையாளரை போலவே கவனித்துக்கொண்டிருந்த பூங்காவனமும் சொல்லிக்கொண்டு வெளியே வந்துவிட்டார்.
காரில் ஏறியதும் யமுனா சமாதானமாய் என்னவோ சொல்ல ஆரம்பிக்க அதை தடுத்து மறுத்துவிட்டார் பூங்காவனம்.
“வீட்டுல போய் பேசிப்போம்…” என்று சொல்லிவிட்டு நிறுத்த யமுனாவும் ஒன்றும் பேசவில்லை.
வீட்டிற்கு வரும் நேரம் வேலைக்கு வந்த பெண் சீதா வெளியே அமர்ந்திருந்தார் இவர்களுக்காக.
“என்னம்மா எங்க போய்ட்ட?…” என யமுனாவை பார்த்ததும் கேட்க,
“கோவில்ல ஒரு விசேஷம், அதான். நீ வந்து ரொம்ப நேரம் ஆச்சா?…” என்றபடி கதவை திறந்தார்.
“இப்ப தான் ஒரு பத்து நிமிஷம் இருக்கும்…” என புடவையை இழுத்து கட்டிக்கொண்டு யமுனாவிற்கு முன்னால் உள்ளே நுழைந்தார் சீதா.
“போன் போட்டிருக்கலாம்ல…” என்றபடி சீதாவின் பின்னால் சென்றவர் வேலையை ஆரம்பிக்க ஏதுவாய் அத்தனையையும் எடுத்து போட்டார் யமுனா.
“நீ வெளியூருக்கு போறதா இருந்தா எனக்கு சொல்லாம போவமாட்டியே? அதான் பக்கத்துல எங்கனயாச்சும் போயிருப்பன்னு இங்க இருந்தேன். இப்ப என்னத்துக்கு அதெல்லாம்?…” என்ற சீதா,
“இந்தா முதல்ல போய் இந்த நல்ல உடுப்ப மாத்திட்டு வா. கரையாக போவுது. இங்க தான் இருக்கேன். நான் என்ன பாத்துக்க மாட்டேனா?..” என சொல்லி யமுனாவை அனுப்பிவிட்டார் சீதா.
மாற்றிவிட்டு வெளியே வந்த யமுனா பூங்காவனத்தை தேட அவர் வெளியே அமர்ந்திருந்தார். சரி சீதா சென்றதும் பேசிக்கொள்வோம் என யமுனாவும் உள்ளே வந்துவிட்டார்.
பேசிக்கொண்டே வேலையும் முடிய மதிய சாப்பாடும் தயாராக கதிருக்கு கொடுத்தனுப்பிவிட்டவர் தானும் பூங்காவனமும் சேர்த்து உண்டு முடித்து வந்து ஹாலில் அமர்ந்தார்.
“கோவமாங்க?…” என யமுனா கேட்க,